Tuesday, April 14, 2015

பாலிருக்கீ.. பழமிருக்கீ!!!

வழக்கம்போல அன்னிக்கும் நாலு தடவ அலாரத்த மாத்தி மாத்தி வச்சி புரண்டு புரண்டு படுத்து அப்பிடி இப்புடின்னு ஏழு மணிக்கு கண்ணத்தொறந்து தமன்னா முகத்துல முழிச்சி எழுந்தேன். என்னாடா வாழ்க்கை இது டெய்லி பல்லு வெளக்கனும் குளிக்கனும்னு, ஆபீஸ் போகனும்ன் சலிச்சிக்கிட்டே பல்ல வெளக்கிட்டு பாத்ரூம் பக்கம் போனேன். ஃபாரின் போகும்போது லைட்டா கலர் கொஞ்சம் தூக்கலா இருந்துச்சி. “சென்னை சரியான சூடு” ன்னு நினைச்சிகிட்டே குளிச்சேன். சரி ஆபீஸ் போறதுக்கு முன்னால சூட்டை கொஞ்சம் குறைச்சிட்டு போவோம்னு ஒரு கை வெந்தையத்த எடுத்து கையில வச்சி, ”சரிக்க் கமப்ப் பதந்நீசே… கபக் கபக் கப ஜலசே” ன்னு DSP பாட்ட பாடிக்கிட்டே கபக்குன்னு வாயில போட்டு தண்ணிய குடிச்சிட்டு கிளம்புனேன்.

டூவிலர எடுத்துகிட்டு கரெக்டா ”ஏழரை” மணிக்கு வீட்டுலருந்து ஃஆபீஸூக்கு கிளம்புனேன். (நோட் த டைம் யுவர் ஹானர்). திருவொற்றியூர்லருந்து ஆஃபீஸ் கரெக்டா 18 கிலோமீட்டர். அதிகபட்சம் அரை மணி நேரத்துல போயிடலாம். அதுவும் பர்மா நகர்லருந்து எண்ணூர் வரை போற பீச் ரோட்டுல வண்டி ஓட்டுற சுகமே தனி. Roadrash ல கடல் ஓரத்துல போற  மாதிரி ஒரு track இருக்கும். எனக்கு ஒவ்வொரு தடவ பீச் ரோட்டுல எண்ணூர் போகும் அதே ஞாபகம் தான் வரும். அதுவும் சாயங்காலம் வரும் போது, கடல் அலை அடிச்சி அந்த சாரல் பைக் ஓட்டிக்கிட்டு போற நம்ம மேல படுறதும், கடல் view வும் செம்ம சூப்பரா இருக்கும். 

“வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை” ன்னு பாட்ட பாடிக்கிட்டே வண்டில போய்கிட்டு இருக்க, லேசா இடுப்ப பின்னாலருந்து யாரோ புடிச்சி கிள்ளுற மாதிரி இருந்துச்சி. எவண்டா பையன் இடுப்ப புடிச்சி கிள்ளுறதுன்னு திரும்பி பாத்தா யாரையும் காணும். என்ன இது அடி வயிற்றிலே சிறிய மாற்றம்? காலைக்கடனெல்லாம் சிறப்பா செலுத்திட்டோமே அப்புறம் என்னன்னு யோசிக்கும் போதே கிள்ளுறது அதிகமாயிருச்சி. மொத நாள் கண்டதுகடியத திண்ணுட்டா மறு நாள் லேசா வயித்த வலிக்கும். ஆனா கொஞ்ச நேரத்துல சரியாப் போயிறும். 

அதுமாதிரி தான் இதுவும்னு நினைச்சி வண்டிய நிறுத்தாம ஓட்டிக்கிட்டே இருக்க, ஒரு கிலோமீட்டர் கூட தாண்ட முடியல. தாழக்குப்பம் ஓரமா வண்டிய நிறுத்திட்டு, வயித்த புடிச்சிக்கிட்டே ஒரு பெட்டிக்கடை ஓரமா உக்காந்துட்டேன். நிமிர்ந்து கூட நிக்க முடியல. ஒரு வார்த்தை பேச கூட முடியல. அவ்வளவு வலி. ஒரு மாதிரி கஷ்டப்பட்டு அந்த பெட்டிக்கடை அண்ணன்கிட்ட “அண்ணேன் இங்க பக்கத்துல ஹாஸ்பிட்டல் எதாவது இருக்கா” ன்னு கேட்க, “அடுத்த பில்டிங்கே ஹாஸ்பிட்டல்தான்பா” ன்னாரு.

வெறும் இருபது அடி நடந்தா ஹாஸ்பிட்டலுக்குள்ள போயிடலாம். ஆனா என்னால ரெண்டு அடி கூட எடுத்து வைக்க முடியல. ரோடு ஓரமா உள்ள அந்த கடை திண்டுலயே உக்காந்துகிட்டு, என்னோட ரூம்மேட்டுக்கு கால் பண்ணேன். கால அவன் எடுக்கல. ஆனா ஆண்டவன் புன்னியத்துல அவன் எனக்கு பின்னாலதான் பைக்குல வந்துருக்கான். நா ஓரமா உக்காந்துருக்கத பாத்து வண்டிய நிறுத்திட்டு “என்னாச்சி சிவா” ன்னு கேக்க என்னால “வயித்து வலி” ன்னு முழுசாக் கூட சொல்ல முடியல. கைத்தாங்கலா அந்த ஹாஸ்பிட்டல் உள்ள அழைச்சிட்டு போனான்.

ஹாஸ்பிட்டல் உள்ள போனதும் ரெண்டு நர்ஸ் இருந்தாங்க. அவங்ககிட்ட வயித்து வலின்னு சொன்னதும், “முன்னால மட்டும் வலிக்குதா இல்லை வலி பின்னால வரைக்கும் போகுதா?” னாங்க. பின்னால வரைக்கும் போகுதுங்கன்னேன். சரி படுங்கன்னு சொல்லிட்டு டாக்டர கூப்பிட பொய்ட்டாங்க. அதுக்குள்ள வலி எக்கச்சக்கமாகி என்னை அறியாமையே “அய்யோ அம்மா” ன்னு கத்த ஆரம்பிச்சிட்டேன். டாக்டரம்மா வந்து பாத்துட்டு, ஸ்டோன் மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன்னு நர்ஸுங்கள பாத்து எதோ ரெண்டு பேர் சொல்ல, ரெண்டு நிமிஷத்துல ரெண்டு ஊசிய போட்டாங்க. ட்ரிப்ஸ் போட்டா கொஞ்சம் பெட்டரா இருக்கும்னு டாக்டரம்மா சொல்ல, ட்ரிப்சையும் மாட்டி ஏத்த ஆரம்பிச்சாங்க.

வலி கொஞ்சமும் குறைஞ்சபாடில்ல. போதாக்குறைக்கு ட்ரிப்ஸ் ஏறிக்கிட்டு இருக்கும்போதே அதுல ரெண்டு ஊசிய சேத்து வேற போட்டாங்க. ஒண்ணும் வேலைக்கு ஆகல. 8 மணிக்கு ஹாஸ்பிட்டல் உள்ள வந்த எனக்கு, 9 மணி ஆகியும் வலி கொஞ்சமும் குறையல. “அய்யயோ.. எதாவது மயக்க ஊசி இருந்தா போடுங்களேன்.. அய்யயோ தூக்க ஊசி இருந்தா அதையாச்சும் போடுங்களேன்” ன்னு என்னென்னவோ கத்துனேன். வானத்துல செல்லாத்தாவும், நாரதரும் கைகுலுக்கிட்டு போறது கண்ணுல தெரிய ஆரம்பிச்சிருச்சி. இன்னிக்கு உனக்கு க்ளைமாக்ஸ்தாண்டின்னு உள்ளுக்குள்ள நினைச்சிக்கிட்டேன்.

“சார்.. எங்ககிட்ட இருக்க எல்லா pain கில்லரும் போட்டாச்சி. இதுக்கு மேலயும் வலி நிக்கலன்னா நீங்க ஸ்கேன் பன்னி தான் பாக்கனும்னு ஸ்கேனுக்கு எழுதிக்குடுத்தாங்க. அதுவும் பக்கத்துலயெல்லாம் ஸ்கேன் பண்ணக்கூடாதாம். அவங்க செட்டிங்க் போட்டு வச்சிருக்க ராயபுரம் ibeam ல தான் ஸ்கேன் பன்னனும்னு வேற சொல்லிட்டாங்க. அப்புறம் ஹாஸ்பிட்டல் வெளியவே  இருந்த ஆட்டோ எடுத்துகிட்டு ஆட்டோவுலயே படுத்துக்கிட்டு ராயபுரம் போய் சேர மணி பதினொன்னு. போனா 12 மணிக்கு தான் ஸ்கேன் பன்ன முடியும்னு சொல்லி ஓரமா படுக்க வச்சிட்டாய்ங்க. வலி ஒரு இம்மி கூட குறையல. என்னோட பயமெல்லாம் ஒரு வேளை அப்பண்டிக்ஸா இருக்குமோ? வலி தாங்கமுடியலையே ஒரு வேளை அப்பண்டிக்ஸ் வால்வு பெருசாகி வெடிச்சிருக்குமோன்னு தான்.

ஒரு மணிக்கு ஸ்கேன் பண்ணி முடிச்சி, அந்த ரிப்போர்ட்ட எடுத்துகிட்டு திரும்ப பேங்ளூருக்கு நேர் எதிர இருக்க எண்ணூருக்கு போனா விடிஞ்சிரும்னு நினைச்சிகிட்டு, பக்கத்துலயே அவங்க சொன்ன இன்னொரு யூராலஜி டாக்டர்கிட்ட போனோம். ரிப்போர்ட்ட பாத்த உடனே “இது ஸ்டோனுங்க.. 5mm. சின்னதா தான் இருக்கு. கரைச்சிடலாம்” ன்னாரு. “ஐ சின்ன கல்லு பெத்த லாபம்”. அப்புரம்தான் அப்பாடா சேகர் பொழைச்சிருவாண்டா ன்னு எனக்கு ஓரளவு நம்பிக்கையே வந்துச்சி. அந்த ஹாஸ்பிட்டல்ல திரும்ப 2 ட்ரிப்ஸும், 5 இன்ஞ்ஜெக்‌ஷனும் போட்டப்புறம் லேசா வலிய மறந்து தூங்குனேன். காலையில 7.45 க்கு வந்த வலி கிட்டத்தட்ட மதியம் 3 மணிக்கு தான் நின்னுச்சி.

அப்புறம் ரெண்டு வாரத்துக்கு மருந்து மாத்திரைங்கள வாங்கிக்கிட்டு ஒரு வாரம் வீட்டுல ரெஸ்ட போட்டுட்டு இப்பதான் ஆஃபீஸ் வந்துருக்கேன். கல்லு கரைஞ்சிதா இல்லை கல்லு மாதிரி அசையாம அங்கயே இருக்கான்னு அடுத்த ஸ்கேன் எடுத்து பாத்தாதான் தெரியும்.
இந்த கல்லு பெரும்பாலும் ஆண்களுக்கு தான் அதிகம் வருதாம். ஒழுங்கான உணவு முறை இல்லாததாலயும், தண்ணி கொஞ்சமா குடிக்கிறதாலயும் வர்ற எஃபெக்ட்டு தான் இது. வலது பக்க முன் வயிற்று பக்கத்துலருந்து பின் பக்கம் வரைக்கும் வலிச்சா கண்டிப்பா அது இந்த கல்லோட வேலையாத்தான் இருக்கும். இல்லை அடிக்கடி இடுப்ப ஒட்டி முதுகு பக்கமா லேசா வலிக்கிற மாதிரி இருந்தா, அதுவும் இந்த கல்லோட அறிகுறிதான். உடனே செக் பண்ணிக்கிறது உசிதம்.

அதுவும் இந்த சம்மர் சீசன் தான் இந்த கல்லுக்கு சீசன் போல. நிறைய பேருக்கு வருதாம். அதனால நிறையா தண்ணியடிங்க ச்சீ தண்ணிகுடிங்க. வாழைத்தண்டு, முள்ளங்கிய அதிக அளவுல சாப்பாட்டுல சேர்த்துகுங்க. இல்லைன்னா நீங்களும் “பாலிருக்கீ.. பழமிருக்கீ.. என் கிட்னீல கல் இருக்கீ” ன்னு பாட்டுப் பாட வேண்டிய நிலமை வந்தாலும் வந்துடும்.

ஒரு வேளை வந்துட்டா, ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. சின்னதா இருந்தா மாத்திரை, பெருசா இருந்தா லேசர்ன்னு ட்ரீட்மெண்ட் நிறைய இருக்கு. ஆனா மொத மொதல்ல வலி வர்றப்போ நரகத்த கண்ணு முன்னால கொண்டு வந்து நிறுத்திடும். இந்த பதிவ இவ்வளவு லென்த்தா சொன்னது கொஞ்சம் அருக்குற மாதிரி இருந்துருக்கும். ஆனா அந்த வலி வந்தா எவ்வளவு கடியா இருக்கும்னு சொல்லத்தான் எல்லாத்தையும் வெளாவாரியா எழுதுனேன். யாருக்காவது ரத்தம் வந்திருந்தா மன்னிச்சிடுங்க.


அதனால நா இன்னா சொல்ல வந்தேன்னா, “கொஞ்சம் உசாரா இருங்க நண்பர்களே!!!”. 


7 comments:

  1. விரைவில் நல்மபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அண்ணா ! போனமாசம் எனக்கும் இதே பிரச்சனைதான் . பல டாக்டர பாத்து , சித்தாவுல இருந்து ெல்லா ட்ரீட்மென்டும் பார்த்து , வலியில அலுத்துப்போய் என்னக்கருணைக்கொலை செஞ்சிடுங்க டாக்டர்னே கதறிட்டேன் . அப்றமா இன்னொரு டாக்டர்கிட போய் , வலியில u fucking bitch னு கத்தி , அந்நேரம் அந்த டாக்டரோட வைஃப் வர , என்கிட்ட சண்டைபோட , அதைத்தொடர்ந்து வயிற்றுவலிய முதல்ல சரிசெஞ்சி அப்றமா அவங்க கிட்ட என் நிலைமையை புரியவச்சி ..... அப்பப்பா ... வலியா அது .. மரணபயத்த காட்டிட்டாங்க பரமா !!!

    ReplyDelete
  3. annae andha mayavalai balance story ennaachi????

    ReplyDelete
  4. Get Well Soon Muthusiva! BTW did you watch Suhasini Manirathnam comments on 'O kanmani' Audio Launch? She Said "anyone who can handle the Mouse are giving Movie reviews. It should be banned, you Press reporters should stop them." This topic is heated up in FB & Twitter, Check it out..

    ReplyDelete
  5. அனுபவம் சரியாகவே பேசியிருக்கிறது.
    இப்படிக்கு அனுபவித்தவன்.

    ReplyDelete
  6. naanum intha valiya face panni irukkenunga...

    ReplyDelete