Wednesday, November 25, 2015

சென்னை வெள்ளத்தில் கவுண்டர் – பகுதி 2!!!


Share/Bookmark
சென்றபதிவின் தொடர்ச்சி: கவுண்டரும் செந்திலும் சென்னை மழை தண்ணில சிக்கிக்கிட்டு இருக்கும்போது ஒவ்வொருத்தரா வர்றாங்க. அப்போ ஒரு போட்ல “சேதாரத்த அடிச்சி நொறுக்கிட்டோம்ல” ன்னு டான்ஸ் ஆடிக்கிட்டே வெள்ளை வேஷ்டி சட்டையில ஒருத்தர் அவங்கள நோக்கி வர்றாரு.

கவுண்டர் : (செந்திலப் பாத்து) டேய்… அவன் அவன் வீடு வாசலெல்லாம் சேதாரமாயிருச்சின்னு அழுதுகிட்டு இருக்கான். இவன் யாருடா சேதாரத்த அடிச்சி நொறுக்கிட்டோம்னு டான்ஸ் ஆடிக்கிட்டு வர்றான்.

செந்தில் : அண்ணேன்… இவரத் தெரியல.. நம்ம சின்னத் தம்பி

கவுண்டர் : என்னது சின்னத்தம்பியா.. பாத்தா பெரிய தம்பியோட பெரிப்பா மாதிரி இருக்கான்.

செந்தில் : (சைலண்டாக கவுண்டர் காதுக்குள்) அண்ணேன்.. இவர பத்தி எதாவது சொன்னீங்கன்னா “உருவத்த வச்சி கிண்டல் பன்றீங்க” ன்னு நாளைக்கு நாலு பேரு உங்களக் கேக்க கெளம்பி வருவாய்ங்க.. அதனால இவர விட்ருங்க..

கவுண்டர் : ஏண்டா அவனுக்கு மட்டும் தான் உருவமா? ஏன் உனக்கெல்லாம் இல்லையா.. 20 வருசமா உன்னைநான் அவன விட கேவலமா திட்டிருக்கேன்… கோவம் வந்தா தூக்கி போட்டு மிதிச்சிருக்கேன்.. உனக்கெல்லாம் கேக்க ஆளே இல்லையா..

செந்தில் : (அழுதுகிட்டே) எனக்குன்னு யாரு இருக்கா…

கவுண்டர் : டேய்.. தென்னதுக்கு இப்ப நீ அழுகுற.. இப்ப உனக்கு என்ன.. இவன எதுவும் சொல்லக்கூடாது அவ்வளவு தானே.. இப்ப பாரு… சின்னத் தம்பியா இவரு? தம்பிக்கு தம்பி கடைசி தம்பி மாதிரில்ல இருக்காரு… போதுமா..

செந்தில் : இப்ப ஓக்கே..

கவுண்டர் : ஆமா அவன் பக்கத்துல வர்றது யாரு… மூக்குல ஏன் துணி காயப்போடுற க்ளிப்ப மாட்டிக்கிட்டு நிக்கிறான்?

செந்தில் : அண்ணேன்.. அவரு மூக்கே அப்டித்தான். சின்ன தம்பியோட மகர்…

கவுண்டர் : என்னது மகரா?

செந்தில் : ஆமாண்ணேன்.. மரியாதையா சொன்னேன்.

போட் பக்கத்துல வருது. கவுண்டர் பக்கத்துல வந்து சின்னத்தம்பி ஹைபிட்ல, அடித்தொண்டையிலருந்து

சின்னத்தம்பி : போராடுவோம்.. போராடுவோம்… இது கல்யான் ஜூவல்லர்ஸ் நடத்தும் புரட்சிப் போராட்டம்..

கவுண்டர் : ஆஆஆங்… சுத்தி எங்க பாத்தாலும் ஒரே நீரோட்டமா இருக்கு. இதுல எங்கருந்து போராட்டம்

சின்னத்தம்பி : வேற கடைக்கு போயிடாதீங்க… செய்கூலி சேதாரம்னு உங்கள ஏமாத்திருவாங்க….

செந்தில் : அண்ணேன்… என்ன சொல்றாரு ஒண்ணுமே புரியலையே

கவுண்டர் : அதாவது நாம தங்கம் வாங்க வேற கடைக்கு போயிருவோமா… போனா ஏமாத்திருவாங்களாம்.. அதனால அவுரு கடைக்கே வரச்சொல்றாரு. (அழுகுற தொணில சின்னத்தம்பிய பாத்து) டேய்.. முப்பது ரூவாடா… முழுசா முப்பது ரூவாய்க்காக மூணு நாள் கண்ணு முழிச்சி பஞ்சர் ஒட்டுவோம்டா.. நீ என்னன்னா செய்கூலிங்குற சேதாரம்குற…

சின்னத்தம்பி : நம்பிக்கை…. அதானே எல்லாம்

கவுண்டர்  : தும்பிக்கை மட்டும் தான் உனக்கு இல்லை… மத்தபடி எல்லாமே கரெக்டா இருக்கு

செந்தில் : அண்ணேன் நா சொல்லிக்கிட்டே இருக்கேன் திரும்ப திரும்ப உடல் ரீதியா தாக்குறீங்க


கவுண்டர் : சரிடா சொல்லை… வாய் தவறி வந்துருச்சி விடு.. ஆமா அந்த கரண்டி மூக்கன் ஏன் அமைதியாவே இருக்கான்

சி.த.மகன் : (செந்திலப் பாத்து) உங்களப் பாத்தா எங்க சிவாஜி தாத்தா மாதிரியே இருக்கு

(செந்தில் வெக்கப்பட்டு சிரிக்க)

கவுண்டர் : ஈஈஈஈஈஈஈஈஈஈஈய்ய்ய்ய்… இந்த நாய் சிவாஜிய பாத்துருக்கானா இல்லையா… சிலோன் குரங்கு மாதிரி இருக்கான் இவனப் போய் சிவாஜிங்குறான்.

செந்தில் : (கோவமாக) போங்கன்னே… இப்புடித்தான் நா மண்டைய ப்ளிச்சு பன்னாலும் புடிக்காது. என்னை யாராவது அழகா இருக்கான்னு சொன்னாலும் புடிக்காது.

கவுண்டர் : (முறைச்சிக்கிட்டு) தம்பி.. நா தண்ணிக்குள்ள இருக்கதால கொலை பன்ன மாட்டேன்னு நினைக்காத.. மரியாதையா அவனுங்கள கெளம்பச் சொல்லு..

புரட்சிப்போராட்ட boat வேற பக்கம் போயிடுது.




கொஞ்ச நேரத்துல இன்னொரு boat la ஒரு மூணூ நாலு பசங்க வந்துகிட்டு இருக்காங்க.

கவுண்டர் : டேய் அழகேசா.. இதுவரைக்கும் தனித்தனியா வந்தானுக.. இப்ப என்னடா கும்பலா வந்துகிட்டு இருக்கானுக

செந்தில் : அதாண்ணே எனக்கும் டவுட்டா இருக்கு… அதுவும் ஏண்ணே எல்லாரும் ஆளுக்கு ஒரு டிவிய கையில கொண்டு வர்றானுங்க

கவுண்டர் : டேய் வால்ட்யூப் வாயா.. அதெல்லாம் டிவி இல்லடா.. டிவி சைஸுல லேட்டஸ்ட்டா வந்துருக்க ஃபோனு..

அந்த boat பக்கத்துல வருது. பக்கத்துல வந்தோன எல்லாரும் அந்த ஃபோன்ல சராமாரியா கவுண்டரையும் செந்திலையும் ஃபோட்டோ எடுத்துக்கிட்டே இருக்காங்க.

கவுண்டர் : டேய் அழகேசா.. இவங்க ப்ரஸ்லருந்து வந்துருப்பாங்க போலருக்கு.. நாளைக்கு நம்ம ரெண்டு பேரு ஃபோட்டோவும் பேப்பர்ல வரும். அத எடுத்து நான் ஏன் செகப்பிகிட்ட காமிக்கனும். ஹைய்ய்யோ…  (பசங்களப் பாத்து) ஆமா தம்பிங்களா நீங்க எந்த பத்திரிக்கையிலருந்து வர்றீங்க

பசங்க : பத்திரிக்கையா… ச்ச.. ச்ச… நாங்கல்லாம் சமூக ஆர்வலர்கள்

கவுண்டர் : (கடுப்பாகி) அடடடா… நாட்டுல இந்த சமூக ஆர்வலர்கள் தொல்லை தாங்க முடியலப்பா… கஞ்சா அடிக்கிறவன் கள்ள ஓட்டு போடுறவன்லாம் சமூக ஆர்வலரு..

செந்தில் : அப்டின்னா நீங்க எங்கள காப்பாத்த வந்துருக்கீங்களா..

சமூக ஆர்வலர்கள்: அதெல்லாம் நாங்க பன்ன மாட்டோம். உங்கள ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்குல போட்டு உங்களுக்கு லைக் வாங்கி குடுப்போம்.

கவுண்டர் : என்னது லைக்கு வாங்கி குடுப்பீங்களா? என்னடா எதோ பைக்கு வாங்கி குடுக்குற மாதிரி சொல்றீங்க. அத வச்சி ஒரு சிங்கிள் டீ வாங்க முடியுமா நாயே… சரி இதத் தவற வேற என்னென்ன பண்ணுவீங்க..


சமூக ஆர்வலர் 1 : அயல்நாட்டுல எதாவது அசம்பாவிதம் நடந்தா அவங்களுக்காக ப்ரே பண்ணுவோம் 

சமூக ஆர்வலர் 2 : ஏழைக்குழந்தைகளுக்கும் சாப்பாடு இல்லாம கஷ்டப்படுறவங்களுக்கும் ஃபோட்டோவ ஷேர் பன்னி ஃபேஸ்புக்குலருந்து காசு வாங்கி குடுப்போம்

சமூக ஆர்வலர் 1 : ஆளுங்கட்சியையும் எதிர் கட்சியையும் மாத்தி மாத்தி குறை சொல்லுவோம்

சமூக ஆர்வலர் 2 : வெள்ள நிவாரண நிதி குடுக்காத நடிகர்கள அசிங்க அசிங்கமா திட்டுவோம்


கவுண்டர் : இய்ய்… ஆமா அவனுங்க எதுக்கு வெள்ள நிவாரண நிதி குடுக்கனும்? ஏண்டா நாட்டுல நடிகர்கள் மட்டும்தான் சம்பாரிக்கிறாங்களா? மத்தவன்லாம் என்னடா பிச்சையெடுத்தா சாப்புடுறீங்க? ஊருக்குள்ள தண்ணி வந்தா நடிகண்ட்டதான் காசு கேக்குறீங்க.. ஆத்துல தண்ணி வரலன்னாலும் நடிகன்கிட்டதான் காசு கேக்குறீங்க. நம்ம அரசாங்கத்துக்கிட்டயெல்லாம் பணமே இல்லையா?

சமூக ஆர்வலர் 2 : அதெல்லாம் எங்களுக்கு தெரியாது.. நாங்க திட்டுவோம்

கவுண்டர் : சரி நடிகன் குடுக்குறது இருக்கட்டும்.. நீ எவ்வளவு குடுத்துருக்க?

சமூக ஆர்வலர் 2 : நா எதுக்கு குடுக்கனும்? நா என்ன அவங்கள மாதிரியா சம்பாதிக்கிறேன்.

உடனே கவுண்டர் தாவி அவன் பொடனிய புடிச்சி

கவுண்டர் : ஏண்டா நாயே.. ஸ்ரீலங்கா மேப்பு மாதிரி மண்டைய வச்சிக்கிட்டு நீயெல்லாம் சமூக ஆர்வலரு… இன்னொருக்கா இந்தப்பக்கம் உன்னப் பாத்தேன் மண்டையில நாலே முடி விட்டு வெட்டுப்போடுவேன்

இவங்க இங்க சீரியஸா பேசிக்கிட்டு இருக்கையில படகுல இருந்த மூணாவது பையன் ரொம்ப சீரியஸா எதோ ஃபோன்ல நோண்டிக்கிட்டு இருக்க

கவுண்டர் : ஃபோன உத்து பாக்குறேன்னு உள்ள போயிராத நாயே.. அப்புடி என்ன பன்னிட்டு இருக்க (ன்னு அவன் ஃபோன புடுங்கி பாக்குறாரு

அவன் ஃபோன்ல அவனோட ஃபேஸ்புக் அக்கவுண்டுல செந்தில் ஃபோட்டோவ போட்டு

“இவர் கருப்பு.. அதனால் இவருக்கு லைக் வராது” ன்னு போஸ்ட் போட்டுருக்கான்

கவுண்டர் : ஆமா... இந்த நாய் கருப்புன்னு யாருக்கும் தெரியாது பாரு. இவரு அத உலகத்து வெளக்குறாரு. படுவா… கட்டிங் ப்ளேயர எடுத்து முன்னாடி நீட்டிக்கிட்டு இருக்க ரெண்டு பல்லையும் வெடுக்கு வெடுக்குன்னு புடுங்கிப்புடுவேன். ஓடிப்போயிர்….

செந்தில் : அண்ணேன்.. இப்புடி வர்றவனுங்களையெல்லாம் திட்டி திட்டி அனுப்புனா நாம எப்பதான் தண்ணிக்குள்ளருந்து வெளில போறது
.
கவுண்டர்: டேய்… நா என்ன வேணும்னாடா பன்றேன்.. வர்றவனுங்கல்லாம் அப்டி இருக்கானுக.. (கவுண்டர் வானத்த பாக்குறாரு)

கவுண்டர் : டேய்… அழகேசா.. என்னாடா வானம் திரும்ப இருளோன்னு இருக்கு… மழை வரும் போலருக்கேடா

செந்தில் : இல்லைண்ணே.. அய்ங்க பாருங்க சனி மூலை வெளிச்சமா இருக்கு.. அதுனால மழை வராது

கவுண்டர் : அது சனி மூலைன்னா இது என்ன ஞாயிறு மூலையா.. கண்டிப்பா வரும்டா…

செந்தில் : அட…ங்க.. வராதுண்ணே ன்னு ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கும்ப்போது தூரத்துலருந்து இன்னொரு boat ல கோட் சூட் போட்ட ஒருத்தர் பேசிக்கிட்டே வர்றாரு

(நீயா நானா கோபிநாத் ஸ்லாங்குல தூய தமிழ்ல படிங்க)

கோபிநாத் : வானம் கருத்திருப்பதால் மழை கண்டிப்பாக வந்தே தீரும் என்கின்றனர் ஒரு தரப்பு. ஒரு புறம் வெளிச்சமாக இருப்பதால் மழை வர வாய்ப்பே இல்லை என்கிறது மறு தரப்பு. இதில் எது உண்மை… தொடர்ந்து பேசுவோம்.. stay tuned… இது லயன் டேட்ஸ் சிரப் வழங்கும் நீயா நானா.

செந்தில் : அய்யோ… அண்ணேன்.. அஜித்து…

கவுண்டர் : டேய்.. டபுள் ஆம்லேட் மண்டையா… கோட் சூட் போட்டு யாரு வந்தாலும் உடனே அஜித்துன்னுடுவியா..




(கோபிநாத் போட் பக்கத்துல வருது. கோபிநாத் அவங்க பக்கத்துல வந்து, கவுண்டரப் பாத்து)

கோபிநாத் : நான் கொஞ்சம் நாகரீகமானவன்

கவுண்டர் : அப்ப நாங்கல்லாம்  என்ன நாத்தம் புடிச்சவங்களா?

கோபிநாத் : இல்லை… இல்லை… நான் அப்படிச் சொல்லவில்லை.

(கவுண்டர் முகம் டக்குன்னு மாறுது.. எதையோ மோப்பம் புடிச்சி மூக்கால ரெண்டு தடவ உறுஞ்சுறாரு)

கவுண்டர் : என்ன திடீர்னு எலி செத்த நாத்தம் அடிக்கிது

ன்னு சொல்லிட்டு டக்குன்னு ஸ்லோமோஷன்ல திரும்பி செந்தில முறைக்கிறாரு

செந்தில் : (பதறியபடி) அய்யோ அண்ணேன்.. நா போன வாரம் தான் குளிச்சேன். என்மேல நாத்தம் அடிக்கல

கவுண்டர் : இங்க நம்ம மூணூ பேர்தான் இருக்கோம். என் மேலயும் அடிக்கல உன் மேலயும் அடிக்கல.. (கோபிநாத்த பாத்து) ராஜா இப்புடி கொஞ்சம் கிட்டக்க வா

ன்னு சொல்ல கோபிநாத் கவுண்டருக்கு நல்லா பக்கத்துல வர கோபிநாத் கோட் கவுண்டர் முகத்துல படுது. குபீர்ன்னு வாடை.

கவுண்டர் : அடங்கப்பா… நாத்தம் கொடலைப் புடுங்குதுடா சாமி… ஏண்டா வாங்குன அன்னியிலருந்து இன்னும் இந்த கோட்ட நீ துவைக்கவே இல்லியா

கோபிநாத் : நான் கொஞ்சம் நாகரீகமானவன்

கவுண்டர் : ஆஆங்…. பாத்தாலே தெரியிது.

கோபிநாத் : நீங்கள் எப்போதெல்லாம் மழையை ரசித்திருக்கிறீர்கள்? மழைக்கும் உங்களுக்கும் உண்டான தொடர்ப்பு என்னென்ன? மழை நமது ஊருக்கு நல்லதா கெட்டதா?

கவுண்டர் : தம்பி.. இதெல்லாம் நல்லதில்லை.. ஸ்டூடியோன்னு நினைச்சி வாய்க்கு வந்ததெல்லாம் பேசுனா வாய்க்குள்ள கம்பிய எடுத்து சொருகி விட்டுருவேன். எனக்கு வெறி வர்றதுக்குள்ள போயிறு..

கோபிநாத்: நான் கொஞ்சம் நாகரீகமானவன். தொடர்ந்து பேசுவோம். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் கோபிநாத் ன்னு சொல்லிட்டு

(போட் திரும்பி போகுது. கவுண்டர் பின்னால நின்னு)

கவுண்டர் : டேய்…. வீட்டுக்கு போனோன அந்த கோட்ட அடுப்புல வச்சி கருக்கிறனும்.

அப்போ தூரத்துல இன்னொரு போட்டு வருது. செந்தில் சந்தோஷத்துல கவுண்டரப் பாத்து

செந்தில் : அண்ணேன் இன்னொரு நடிகரு நம்மளத்தேடி வர்றாருன்னே…

கவுண்டர் : எங்கடா…

செந்தில் : அய்ங்க பாருங்க… டி.ஆரு நம்மளப் பாக்கத்தான் வர்றாருன்னு நினைக்கிறேன்.

கவுண்டர் : (ஷாக்காகி) அடப்பாவி… அது டிஆர் இல்லைடா. காட்டுக்குள்ளருந்து தப்பிச்சி வந்த நிஜக்கரடிடா.. வா ஓடிரலாம்.

செந்தில் : ஆமாண்ணே.. அந்தக் கரடி பக்கத்துல யாரோ ராஜா கெட்டப்புல இருக்காங்கண்ணே.. யாரு அது?

கவுண்டர் : அதுவா.. காட்டுக்கு வேட்டைக்கு போன ராஜாவ புடிச்சி வச்சிக்கிட்டு அந்தக் கரடி ரொம்ப நாளா விட மாட்டேங்குதுடா.. மழைத்தண்ணி காட்டுக்குள்ள போனதும் அது ஊருக்குள்ள வந்துருச்சி போல…வா அந்தப் பக்கம் எதோ கூட்டமா தெரியிது. அங்க நீந்தி போயிடலாம்


(ரொம்ப லென்த்தா பொய்ட்டதால இதோட முடிச்சிக்குவோம்)



Thursday, November 19, 2015

சென்னை வெள்ளத்தில் கவுண்டர்!!!


Share/Bookmark
சென்னையில கவுண்டர் ஆரம்பிச்ச புது சைக்கிள் கடைக்குள்ள மழைத் தண்ணி புகுந்துருது. கழுத்தளவு தண்ணில கவுண்டரும் செந்திலும் நீச்சல் அடிச்சா மாதிரியே பேசிட்டு இருக்காங்க.

கவுண்டர் : (லேசா அழுகுற தொணியில்) டேய் மண்டையா.. உன் பேச்சை கேட்டு ஊர்ல இருந்த சைக்கிள் கடைய காலி பன்னிட்டு சென்னையில வந்து கடை வச்சேன். ஊர்ல இருந்தாலாவது டெய்லி எட்டனாவுக்கு எவனாச்சும் சைக்கிள் வாடகைக்கு எடுப்பான். இங்க அதுவும் இல்லாம முழுக்கடையும் தண்ணிக்குள்ள போச்சேடா.. இப்ப சோத்துக்கு என்னடா பன்றது?

செந்தில் : (தண்ணில மிதந்துகிட்டே ஜாலியா) அட விடுங்கண்ணே.. டைட்டானிக் கப்பல் முழுசும் தண்ணிக்குள்ள போனதுக்கே அவன் அவன் கவலப்படாம இருந்தான். நாலு ஓட்டை சைக்கிள் போனதுக்கு இவ்வளவு ஃபீல் பன்றீங்களே?

கவுண்டர் : எங்க மூஞ்சிய இந்தப்பக்கம் திருப்பு. த்த்துபூ.. நாயே.. கப்பல் முழுந்துனதுக்கு அப்புறம் கப்பலுக்கு சொந்தக்காரன் எத்தனை நாள் ரூம் போட்டு அழுதுருப்பான் தெரியுமாடா? டயருக்கு காத்தடிக்கிற நாயிக்கு டாடா கம்பெனி ஓனர் மாதிரி பேச்சப்பாரு.

கவுண்டர் கஷ்டப்பட்டு தண்ணில நீச்சல் அடிக்க செந்தில் பலூன் மாதிரி மிதக்குறாரு.

செந்தில்: ஹை அண்ணேன் பாத்தீங்களா.. நா எப்புடி மிதக்குறேன்னு

கவுண்டர் : டேய் கிரிணி மண்டையா.. இதுக்குத்தான் மொச்சைப் பயறுகள அதிகம் திங்காத திங்காதன்னு சொன்னேன். இப்ப பாரு. மொத்த கேஸூம் சேந்து உன்னையே அலேக்கா தூக்கிருச்சி. குட்டிமா… பாம் எதுவும் போட்டுறாதம்மா… ஒரே நேரத்துல ரெண்டு தாக்குதல மக்களால சமாளிக்க முடியாது.

செந்தில் :  (கோவமாக) கிண்டல் பன்னாதீங்கண்ணே.. அப்புறம் நாளைக்கு நா வேலைக்கு வர மாட்டேன்.

கவுண்டர் : (ஹை பிட்ச்ல) ஆமா.. நா ஹூண்டாய் கம்பெனி வச்சிருக்கேன். நீ என்கிட்ட ப்ரொடக்‌ஷன் மேனேஜரா வேலை செய்யிற. நீ வரலைன்னா நாளைக்கு 500 கார்களோட உற்பத்தி பாதிக்கப்பட்டுரும். நாயே எனக்கே இன்னும் பத்து நாளைக்கு வேலையில்லை. இதுல நீ வந்தா என்ன வராட்டி என்ன.

செந்தில் : (சுதாரித்துக்கொண்டு) இல்லைன்ணே.. சும்மா உங்கள டெஸ்ட் பன்னி பாத்தேன்.

கவுண்டர் : என்ன… டெஸ்டு பன்னியா? அப்புடியே கொஞ்சம் பக்கத்துல வா…

செந்தில் : ம்ஹூம்.. வந்தா நீங்க அடிப்பீங்க.

கவுண்டர் : இல்லை..  மிதிச்சே கொன்னுருவேன். கழுத்தளவு தண்ணில என்னடா உனக்கு டெஸ்டு வேண்டி கெடக்கு. இப்ப இங்கருந்து எப்புடி எஸ்கேப் ஆகுறதுன்னு எதாவது வழி இருந்தா பாருடா..

செந்தில் : அண்ணே அய்ங்க பாருங்க. மேல ஹெலிகாப்டரு.. நம்மள காப்பாத்த அரசாங்கமே ஏற்பாடு பன்னிருக்கு…

கவுண்டர் : ஹெலிகாப்டரா.. ஆனா எறுமை மாடெல்லாம் ஹெலிகாப்டர்ல ஏத்த மாட்டாங்களேடா

ஹெலிகாப்டர் கொஞ்சம் கீழ பறக்க, அதிலருந்து ரெண்டு பேரு தண்ணிக்குள்ள தொப்புன்னு குதிக்கிறானுங்க.

குதிச்ச உடனே ஒருத்தன் வீடியோ கேமராவ எடுக்க இன்னொருத்தன் கேமராவ பாத்து பேச ஆரம்பிக்கிறான்.

(Man Vs Wild Bear Grylls ஸ்லாங்ல படிங்க)

BG : எனக்கு இன்னிக்கு இருக்குற சவால் என்னன்னா இந்த ஏரியக் கடந்து அடுத்தப் பக்கத்துக்கு போகனும். இது ரொம்ப ஆபத்தான ஒரு விஷயம்தான்  இருந்தாலும் நாம இத செஞ்சி தான் ஆகனும்.

கவுண்டர் : (செந்திலப் பாத்து) டேய் கம்ரான் அக்மல் வாயா.. இவன் நம்மள காப்பாத்த வரலடா.. டிவில ப்ரோகிராம் பன்னறவன். இந்த நாயி தினம் எதாவது ஒரு காட்டுக்குள்ள போய் அங்க இருக்க மிருகங்களையெல்லாம் பச்சையாவே பிச்சி திண்ணுறுவான். இவனால காட்டு விலங்குகளோட எண்ணிக்கை குறைஞ்சி போச்சுன்னு இவன எந்த காட்டுக்குள்ளயுமே விடமாட்டேங்குறானுக.

செந்தில் : இவன் எதுக்குண்ணே இங்க வந்துருக்கான்?

கவுண்டர்: மேலருந்து பாத்துருப்பான். நீ நீந்துறத பாக்க நீர்யானை மாதிரி இருந்துருக்கும். அதான் தொப்புன்னு குதிச்சிட்டான். சரி வா என்ன பன்றான்னு பாப்போம்

கவுண்டரும் செந்திலும் தண்ணில மிதந்துக்கிட்டே பியர் க்ரில்ஸ நோக்கி போறாங்க.

BG: எனக்கு இப்ப ரொம்ப பசிக்கிது. உடனே எதாவது உணவு சேகரிச்சி ஆகனும். (மிதந்து வர்ற செந்திலப் பாத்து) அங்க பாருங்க.. அங்க பாருங்க.. எதோ ஒண்ணு மிதந்து வருது. அதப் புடிச்சா இன்னிக்கு இரவு உணவ அத வச்சே ஓட்டிறலாம்.

(கவுண்டர் பக்கத்துல போய்)

கவுண்டர் : டேய்.. இவனப் புடிச்சா இரவு உணவு மட்டும் இல்லடா…. இன்னும் இருவது நாளுக்கு வச்சி திங்கலாம். ஆனா என்ன ஒரு வேளை சாப்டா அடுத்த வேளை சாப்ட நீ உயிரோட இருக்க மாட்ட. அவ்வளவும் பாய்சன்.

BG : (செந்திலப் பாத்து) இதுல புரதச் சத்து நிறைய இருக்கும்னு நினைக்கிறேன்.

கவுண்டர் : ஆமா புரதச் சத்து புண்ணாக்கு சத்து எல்லாமே இதுல இருக்கு.

BG : இதோட வயிற்றுப் பகுதிய வெட்டி எடுத்துட்டா எடை கொஞ்சம் கம்மியா இருக்கும். வேறு பகுதிக்கு எடுத்துட்டு போகவும் ஈஸியா இருக்கும்.

செந்தில் : அய்யோ அண்ணேன் பயமா இருக்கு.

BG: இங்க இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிடும்னு நினைக்கிறேன். நா உடனே தங்குறதுக்கு ஒரு நல்ல இடமா ஏற்பாடு செய்யனும்

கவுண்டர் : அந்த தெரு முக்குல ஒரு ஃப்வ் ஸ்டார் ஓட்டல் இருக்கு அதுல தங்கிக்கிறியா

BG : உடனே சில காஞ்ச மூங்கில் குச்சிகளையும், சில மரக் கிளைகளையும் கொண்டுவாங்க.. நா உடனே ஒரு படுக்கை செய்யனும்
கவுண்டர் : (காடுப்பாகி) ஒக்கா மவனே.. அவன் அவன் கிட்னிலருந்து சட்னி வரைக்கும் நனைஞ்சி போய் உக்கார்ந்திருக்கான். இவனுக்கு காஞ்ஜ மூங்கி குச்சி வேணுமாம். டேய் மண்டையா இவன க்ளியர் பண்ணு

செந்தில் பியர் கிரில்ஸ பாத்து  “வவ் வவ்”ன்னு குறைக்கிறாரு

CG : இது ரொம்ப விசித்திரமான மிருகமா இருக்கு. இதுகிட்ட மாட்டினா என்னோட உயிருக்கு கூட ஆபத்து வரலாம். அதானல இந்த இடத்த விட்டு நா உடனே கிளம்பியாகனும்.

ன்னு சொல்லிட்டு அவர் நீந்தி வேற பக்கம் போயிடுறாரு.
அப்ப ஒல்லியா பாப் கட்டிங் வச்ச பொண்ணு ஒண்ணு போட்ல (boat) இவங்கள நோக்கி வருது



கவுண்டர் : டேய். அழகேசா.. அங்க பாருடா.. ஆல் யங்க் கேர்ள்ஸ்.. அந்த தவளை திங்கிறவன நம்பிதான் நாம ஏமாந்துட்டோம். ஆனா இப்ப பாத்தியா தாய்க்குலம். இவங்க கண்டிப்பா நமக்கு உதவி செய்வாங்க..
(அந்தப் பொண்ணு பக்கத்துல வருது)

கவுண்டர் : (வெக்கத்தோட) ஹேய்… ஹெஹேய்… எங்களையும் படகுல ஏத்தி காப்பாத்த தானே வந்துருக்கீங்க..

பெண் : காப்பாத்துறதுக்கு முன்னால நீங்க ஒரு சேலஞ்ச் எடுக்கனும்

கவுண்டர் ; என்னது சேலஞ்ச்சா?

பெண் : ஆமா… இது ஏர்டெல் 4G சேலஞ்ச். இத விட ஃபாஸ்டான நெட்வொர்க்க நீங்க காமிச்சீங்கன்னா வாழ்நாள் முழுக்க உங்க மொபைல் பில் ஃப்ரீ.

செந்தில் : அண்ணேன் அண்ணேன் ஃப்ரீயா தர்றாங்களாம்னே.. வாங்குவோம்னே…

கவுண்டர் : என்னது வாங்குவோமா? ஃபோர்ஜி ன்னா என்னன்னு தெரியுமாடா?

செந்தில் : எண்ணன்ணே இதுகூடவா தெரியாது. இந்த முட்டையில செய்வாங்களே அதானே..

கவுண்டர் : என்னது முட்டையிலயா? அடேய்ய்ய்ய்…. அது புர்ஜிடா.. இது 4G…

செந்தில் : ஏதோ ஒண்ணு… இப்ப நீங்க வாங்கி தருவீங்களா மாட்டீங்களா?

கவுண்டர் : (4G புள்ளைய பாத்து) இத பாருங்க பாப் கட்டிங் மேடம்… நாங்களே எந்த வழியா கரையேறுறதுன்னு தெரியாம  முழிச்சிட்டு இருக்கோம். தயவு செஞ்சி போயிருங்க..

பெண்: இத விட ஃபாஸ்டான நெட்வொர்க்க காமிச்சீங்கன்னா……. (ன்னு பேச ஆரம்பிக்க)

கவுண்டர் : (ஹை பிட்ச்ல) வக்காளி அவன் அவனுக்கு ஒண்ணுக்கு வரலன்னு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கான் இவளுக்கு இளநில தண்ணி வரலயாம். ஓடிப்போயிர்ர்ர்ர் ந்னதும் அந்தப் பொண்ணு வேற ஒருத்தர பாத்து ”4G சேலஞ்ச் எடுக்குறீங்களா”ன்னு சொல்லிக்கிட்டே போயிருது.

கவுண்டர் : டேய் மண்டையா என்னடா குளு குளுன்னு இருந்த தண்ணி திடீர்னு சுடுது…

செந்தில் : ஆனது ஆயிருச்சி இன்னொரு அஞ்சி நிமிஷம்ணே. நானும் எவ்வளவு நேரம் தான் அடக்குறது

கவுண்டர் : அட அசிங்கத்துக்கு பொறந்தவனே… எதுக்கும் நீ ஒரு டூ ஸ்டெப் பேக்குலயே வா..

அப்போ ஒரு போட் தனியா இவங்கள நோக்கி வருது.

செந்தில் : அண்ணே ஆளு இல்லாத போட் ஒண்ணு நம்மள நோக்கி வருது

கவுண்டர் : டேய்… ஆள் இல்லாம எப்புடிடா போட் மட்டும் வரும். நல்லா பாரு

செந்தில் : ஆமாண்ணே.. உள்ள யாரோ இருக்காங்க…

கவுண்டர் : யார்ரா இவன் டைனிங்  டேபிள் ஹைட்டுல உள்ள நிக்கிறான்.
போட் பக்கத்துல வருது

செந்தில் :  அண்ணேன் நம்ம சூர்யாண்ணேன்

இவங்க பக்கத்துல வந்ததும், உடனே சூர்யா படக்குன்னு சட்டைய கழட்டுறாரு

கவுண்டர் : டேய் இப்ப எதுக்கு நீ சட்டையக் கழட்டுற
(சூர்யா ஸ்லாங்குல படிங்க)

சூர்யா : அது என்னமோ தெரியல.. தண்ணியப் பாத்தாலே உடனே சட்டையக் கழட்டனும்னு தான் தோணுது.

கவுண்டர் : எனக்கும் உன்ன பாத்ததும் செருப்ப கழட்டனுனுதான் தோணுது…



சூர்யா : நீங்கல்லாம் பெருமையா சொல்லிக்கலாம்

கவுண்டர் : ஆங்ங்ங்.. தண்ணிக்குள்ள நிக்கிறது எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருக்கு

சூர்யா : எங்கப்பா அடிக்கடி சொல்லிருக்காரு

கவுண்டர் : என்ன நாங்கல்லாம் தண்ணிக்குள்ள நிப்போம்னா

சூர்யா : இல்லைங்க சின்ன வயசுலருந்தே…..

கவுண்டர் : சின்ன வயசுலருந்து உன்னயெல்லாம் அடிச்சி வளர்த்துருந்தா நீ இப்டியெல்லாம் பேசமாட்ட நாயே

சூர்யா : எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு… நா உங்களை காப்பாத்த வந்துருக்கேன்.. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

கவுண்டர் : டேய் கேடி… நீ எங்கள காப்பத்த வந்துருக்கியா

சூர்யா : ஆமாம்.

கவுண்டர் ; முட்டிக்கால் அளவு தண்ணிலயே நீ முழுந்தி போயிருவ. முதல்ல உன்ன நீ காப்பாத்திக்க.. எங்கள காப்பாத்திக்க எங்களுக்குத் தெரியிங்

சூர்யா : (கோவமாக) ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு

கவுண்டர் : (செந்திலப் பாத்து) டேய் உனக்கு பசிக்குதுன்னு சொன்னியல்லோ… இந்த லில்லிபுட்ட கடிச்சி திண்ணுறு… இதயெல்லாம் ஊருக்குள்ள நடமாடவிடவே கூடாது.

சூர்யா பதறியடிச்சிக்கிட்டு ஓடுறாரு.

கவுண்டர் : என்னடா நம்மளக் காப்பத்த உருப்படியா எவனுமே வர மாட்டேங்குறாங்க

(டக்குன்னு தண்ணி லெவல் ஒரு அடி ஏறுது)

தூரத்துல ஒரு பெரிய போட்ல பெரிய சைஸ்ல ஒருத்தர்
“சேதாரத்த அடிச்சி நொறுக்கிட்டோம்ல” ன்னு டான்ஸ் ஆடிக்கிட்டே கவுண்டர் நோக்கி வர்றாரு.

(தொடரும்)

நன்றி : நண்பன் பாலவிக்னேஷ்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...