Friday, August 26, 2016

ஓலம்!!!


Share/Bookmark
மணி இரவு பதினொன்னரையைக் கடக்கும் பொழுது, அந்த வீட்டில் முகுந்தன் மட்டுமே விழித்திருந்தான். அருகில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி வசுந்தராவையும் 4 வயது மகன் தினேஷையும் பார்த்தான். அந்த  ஹாலில் ஒளிர்ந்து கொண்டிருந்த ஜீரோ வாட்ஸ் பல்பின் வெளிச்சத்தில் அம்மாவைக் கட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கும் மகனின் அழகை முகுந்தன் ரசித்துக்கொண்டே இருக்க, மனதில் பல எண்ணங்கள் வட்டமிடத் தொடங்கின.

காதலித்து பல எதிர்ப்பிற்கிடையே வசுந்தராவைக் கரம் பிடித்து, இருவர் குடும்பத்திலும் எந்த உதவியையும் எதிர்பார்க்காமல், தரம்தாழ்த்தி பேசியவர்கள் முன் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்யத்தில் நான்காண்டுகள், செலவைக் குறைத்து, வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி என்னென்ன லோன்களெல்லாம் வாங்க முடியுமோ அத்தனையும் வாங்கி இப்போது உறங்கிக்கொண்டிருக்கும் அந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

என்றாலும் வீட்டின் கிரகப்ப்ரவேசத்திற்கு வந்த உறவினர்களில் முக்கால்வாசிப்பேர் “என்னப்பா இப்படி ஊர்க் கோடில வீடு கட்டியிருக்கியே.. ஆத்திர அவசரத்துக்கு கூட பக்கத்துல ஒரு வீடு இல்லையே” என்பதைத் தான் கேட்டு விட்டுச் சென்றனர். முகுந்தன் காதில் இதெல்லாம் பெரிதாக விழவில்லை. ”நானும் என் மனைவியும் வாழ எங்களுக்கென ஒரு வீடு. அது எங்கிருந்தால் என்ன?” என மனதில் நினைத்துக் கொள்வான்.

முதலில் எதுவும் பெரிதாகத் தெரியவில்லை என்றாலும் நாட்கள் போகப் போக அதன் தாக்கம் சற்று இருக்கத்தான் செய்தது. வேலையில் சில நாட்கள் தாமதமாகும்போது எப்படி வீட்டில் வசுந்தராவும், தினேஷும் இருக்கப்போகிறார்களோ என்ற ஒரு சிறு பதைபதைப்பு அவ்வப்போது வந்து வந்து சென்றது.  

பகலைப் பொறுத்தவரை எந்தக் கவலையும் இல்லை. இருட்டும்வரை வயல்காட்டிற்கு செல்வோரெல்லாம் முகுந்தன் வீட்டைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். ஆள் நடமாட்டம் எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கும். இரவில் தான் கொஞ்சம் அச்சம் எட்டிப்பார்க்கும். முதுந்தன் வீட்டிற்கு அடுத்த வீடு எனப் பார்த்தால் அவன் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு ஓட்டு வீடுதான். அதில் வசிக்கும் ஒரு வயதான கிழவனும் கிழவியும் 8 மணிக்கே விளக்குகளை அணைத்து உறங்கச் சென்று விடுவார்கள். அதனால் இருட்டிவிட்டாலே முகுந்தன் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்ட ஒரு சூழலே.

இதையெல்லவற்றை விட முகுந்தனுக்கு மிகவும் சிரமத்தையும் அசவுரியத்தையும் ஏற்படுத்துவது. நள்ளிரவில் நாய்கள் எழுப்பும் ஓலம். நாய்கள் அழுவது போன்ற அந்த வித்யானமான ஒலியைக் கேட்கும்போது உள்ளிருந்து எழும் பய உணர்வைத் தவிர்க்கமுடிவதில்லை. முகுந்தன் வீட்டைத்தாண்டி கொஞ்ச தூரம் வயக்காடுகள். அதன் பின்னர் வெறும் கருவேல மரங்கள் அடந்த காடுபோன்ற பகுதிகளே. அதனால் நரிகள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். அதுவும் இரவில் ஆள் நடமாட்டம் இல்லாததால் இரை தேடி வயல் வெளிகளிலெல்லாம் சுற்றித் திரிந்துக்கொண்டிருக்கும்.

முகுந்தனுக்கு ஆச்சர்யமூட்டிய ஒரு விஷயம் என்னவென்றால் எப்பொழுதெல்லாம் நாய்களின் ஓலம் கேட்கிறதோ அப்பொழுதெல்லாம் கடிகாரத்தைப் பார்த்தால் மணி பன்னிரண்டுக்கு ஒரு ஐந்து நிமிடம் முன்னே அல்லது பின்னேயாக மட்டுமே இருந்திருக்கிறது. இது ஆச்சர்யத்தை மட்டுமல்லாமல் ஒரு வித பயத்தையுமே மனதில் விதைத்திருந்தது.

நிறைய நாட்களில் நள்ளிரவில் இந்த நாய்கள் ஓலமிடும்போது மகன் தினேஷ் விழித்துக்கொண்டு அதைப் பற்றி அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிடுவான். ”அப்பா.. அதுங்கல்லாம் எதுக்குப்பா கத்துது?” “ராத்திரில மட்டும் ஏன்ப்பா கத்துது?” என கேட்டுக்கொண்டிருந்தவனிடம் பள்ளியில் யாரோ ஒருவன் நாய்கள் கண்களுக்கு மட்டுமே பேய்கள் தெரியும் எனவும், பேய்களைப் பார்த்தால் நாய்கள் அவ்வாறுதான் ஓலமிடும் எனவும் சொல்லி வைக்க அன்று முதல் தினேஷின் கேள்விகளில் “உண்மையிலயே பேயெல்லாம் இருக்குதாப்பா?” “நாயிங்க கண்ணுக்கு பேய் தெரியுமாப்பா?” “அப்ப நம்ம வீட்ட சுத்தியும் பேய் இருக்குதாப்பா? அதனாலதான் நாயிங்கல்லாம் கத்துதாப்பா?” என்பன போன்ற கேள்விகளும் சேர்ந்து கொண்டன.

தினேஷின் பெரும்பாலான கேள்விகளுக்கு முகுந்தன் அவனைப்போல குழந்தைத் தனமான பதில்களைக் கூறி சமாளித்திருந்தாலும், உண்மையில் அவனுக்குள்ளும் அதே கேள்விகள் விடை தெரியாமல் உலவிக்கொண்டிருந்தன. நிச்சயம் ஒருநாள் நள்ளிரவில் வெளியில் சென்று நாய்கள் அந்நேரத்தில் ஏன் ஓலமிடுகின்றன என்பதை அறிந்து வந்து தினேஷிற்கு உண்மையைக் கூறவேண்டும் என்ற எண்ணம் முகுந்தன் மனதிற்குள் இல்லாமல் இல்லை. இருந்தாலும் தனியே செல்வதற்கு மனதைரியம் போதுமானதாக இல்லை.

ஆனால் அன்று கண்விழித்த போது ஏதோ ஒரு அசாத்திய தைரியம் இருப்பதைப் போல உணர்ந்தான். தினேஷூம் அம்மாவுடந்தான் உறங்கிக் கொண்டிருக்கிறான். மணியும் பதினொன்று நாற்பதைக் கடக்க, இன்று கண்டிப்பா வெளியில் சென்று நாய்கள் ஓலமிடும் காரணத்தை கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, சட்டென எழுந்தான். சத்தம் கேட்டு வசுந்தரா எழுந்துவிட்டால் இந்நேரத்தில் நிச்சயம் வெளியில் செல்ல விடமாட்டாள் என்பதால் ஒலி எழும்பாத வண்ணம் மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வாசற்கதவை அடைந்தான். மெதுவாகக் கதவைத் திறந்து வெளியில் சென்று மூடினான்.
சுற்றிலும் கும்மிருட்டு. எங்கோ ஒரிடத்தில் எரிந்த மின் விளக்கு தூரத்து நட்சத்திரம்போல் காட்சியளித்தது. இந்த இருட்டில் எப்படிச் செல்வது என சற்று குழம்பும்போது நிலவை முடியிருந்த மேகம் மெல்ல விலகிச் செல்ல, ஓரளவு வெளிச்சம் பரவியது. வயல்வெளியை நோக்கி நடந்தான். கருதருக்கப்பட்ட உலர்ந்த நிலம் நீரில்லாமல் வெடித்து கரடுமுரடாக கால்களைக் குத்தியது.

குத்துமதிப்பாக வயல்வெளிகளில் எதோ ஒரு திசையை நோக்கி நடந்தான். வீட்டை விட்டு கனிசமான தொலைவு வந்தாயிற்று. அந்த நாய்கள் எங்கே சுற்றுகின்றன என  சுற்றும் முற்றும் தேடிக்கொண்டே நடந்தான். சட்டென இரண்டு பலிங்கு வடிவில் தூரத்தில் எதோ மின்ன, முகுந்தன் நடப்பதை நிறுத்தினான். உருவம் தெரிவதற்கு முன்னர் அதன் கண்களே அதனை காட்டிக்கொடுத்தது. கண்களைச் சுருக்கி கூர்மையாக்க, முழு உருவத்தையும் கணிக்க முடிந்தது. இதோ நிற்கிறது ஒரு நாய். வயல்வெளிகளில் கட்டவிழ்த்து சுற்றிக்கொண்டிருக்கும் நாய்கள் பெரும்பாலும் ஆபத்தானவை. அப்படியே நின்றான். இதயம் வேகமாகத் துடித்தது. லேசாக வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்த நிலவினை இன்னொரு பெரிய மேகக்கூட்டம் அப்படியே மூடிவிட மறுபடியும் முற்றிலும் இருள். வானை ஒரு முறை பார்த்து பின் கீழே பார்த்த முகுந்தனுக்கு தூக்கி வாரிப்போட்டது. இப்போது ஒரு ஜோடி பலிங்குகள் அல்ல. அருகருகே பல ஜோடி..

இரண்டு நிமிடம் அதே இடத்தில் நிற்க, அத்தனை ஜோலி பலிங்குக் கண்களும் முகுந்தனையே வெறித்தன. முகுந்தன் மனதைத் திடப்படுத்திக்கொண்டு ஒரு அடியை முன்னே எடுத்து வைக்க,

”ஊஊஊஓஓஓஓஒங்ங்ங்ங்” என ஒரு நீண்ட ஓலத்தை எழுப்பியது கூட்டத்திலிருந்த ஒரு நாய். தொடரந்து மேலும் இரண்டு நாய்கள் அதற்கு ஸ்வரம் பிடிப்பது போல் ஊலையில, முகுந்தன் மனதை கல்லாக்கிக் கொண்டு மேலும் ஒரு அடி எடுத்து வைக்க இன்னும் நான்கு நாய்களும் இன்னிசையில் சேர்ந்து கொண்டன. முகுந்தன் வீட்டிலிருந்தபடி நள்ளிரவில் கேட்கும் அதே இன்னிசை.

முகுந்தன் முகத்தில் லேசான புன் முறுவல். இத்தனை நாள் கேள்விக்கு விடை தெரிந்து விட்ட ஒரு நிம்மதி. நள்ளிரவில் இந்தப் பகுதியில் கடந்து செல்லும் மனிதர்களைப் பார்த்தே இவை இப்படிக் கத்துகின்றன. இதற்கு நாம்தான் என்னென்னவோ கதைகளைக் கட்டிவைத்து நம் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் என  எண்ணி நகைத்துக் கொண்டான்.

நாளை ஒரு முறை தினேஷையும் அழைத்து வந்து அவன் நண்பர்கள் அவனுக்கு சொல்லியதெல்லாம் தவறு என நிரூபிக்க வேண்டும் என மனதில் மறுபடியும் வீட்டை நோக்கி நடந்தான். சத்தம் கேட்காதபடி மெல்ல கதவை திறந்து மூடி உள்ளே சென்று சத்தமில்லாமல் நடந்து படுக்கச் செல்லும்போது ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. தினேஷின் குரல்.

”அம்மா… இந்த நாயெல்லாம் பேயப் பாத்துதான் கத்தும்னு என் ஃப்ரண்டு சொன்னாம்மா. பேயெல்லாம் இருக்காம்மா? நம்ம வீட்ட சுத்தியும் பேய் இருக்குமாம்மா?”

”பேயெல்லாம் இல்லைப்பா.. அப்படியே பேய் இருந்தாலும் அதெல்லாம் சாமி பாத்துக்குவாருப்பா” என்றாள் வசுந்தரா.

”எந்த சாமிம்மா?”

”அதோ அந்த சாமிதாம்ப்பா” என சுவற்றை நோக்கி வசுந்தரா கை காட்ட, அதில் மங்கிய வெளிச்சத்தில் நெற்றியில் பொட்டுனனும், சந்தன மாலையுடனும் புகைப்படமாகத் தொங்கிக் கொண்டிருந்தான் சென்ற வாரம் இறந்துபோன முகுந்தன்.



Tuesday, August 23, 2016

நா ஆல் பேங்க் மேனேஜர் பேசுறேன்!!!


Share/Bookmark
”சார் ICICI பேங்குலருந்து பேசுறேன்… கிரெடிட் கார்டு எதாவது யூஸ் பன்றீங்களா? “
“ஏற்கனவே நாலு கார்டு இருக்கு”

“இதுல புது ஆஃபர் இருக்கு சார்”

“டேய் நாலு கார்டுக்கே நாக்கு தள்ள வேலை பாக்க வேண்டியிருக்கு விட்ருங்கடா”
------------
“சார்.. பர்சனல் லோன் எடுக்குற ஐடியா எதாவது இருக்கா?”

“லோன் எடுக்குற ஐடியா இருக்கு… ஆனா திருப்பி கட்டுறதுக்கு தான் ஐடியா இல்லை…”

“டொய்ங்ங்ங்ங்”
----------
“சார்.. நாங்க sun Shine க்ளப்புலருந்து பேசுறோம்.. குறைஞ்ச விலையில லைஃப் டைம் மெம்பர்ஷிப் கார்டு தர்றோம்…”

”அடுத்த வேளை சோத்துக்கே சிங்கி அடிச்சிட்டு இருக்கோம்.. இதுல லைஃப் டைம் மெம்பர்ஷிப் கார்டு.. அதுவும் கிளப்புல… “

----------------

“சார் நாங்க Save the Children organization லருந்து பேசுறோம்… ஒரு பத்து வயசு குழந்தைக்கு ஹார்ட் ஆப்ரேசனுக்காக உங்களால முடிஞ்சத குடுத்தா கொஞ்சம் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும் சார்…”

“ஃபேஸ்புக்குல 1like = 100 prayers ன்னு போட்டு அந்த குழந்தைக்காக ஒரு 50 லைக் வேணா வாங்கித்தர்றேம்மா… இப்பதைக்கு வேற எதுவும் முடியாது”

இப்டி ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு வகையில கொடச்சல் குடுத்துக்கிட்டு தான் இருக்காய்ங்க. அவங்களுக்கு பதில் சொல்றதுக்குன்னே நமக்கு கொஞ்சம் தனி பொறுமை தேவைப்படுது. அதுவும் எனக்கெல்லாம் ரொம்ப மோசம். டெய்லி ஆக்ஸிஸ் பேங்குலருந்து கால் பன்னி கார்டு வேணுமான்னு கேப்பானுங்க. தினமும் அட்டெண்ட் பன்னி “நேத்து  தான் ஃபோன் பன்னீங்க.. நா வேணாம்னு சொன்னேன். ஏன் திரும்ப திரும்ப கால் பன்றீங்க… தயவு செஞ்சி நம்பர உங்க data base லருந்து delete பன்னிருங்க” ம்பேன். ப்ரபா ஒயின்ஸாப் வடிவேலு மாதிரி “சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்” ன்னு சொல்லி நல்லவய்ங்க மாதிரி வைப்பாய்ங்க. ஆன மறுநாள் மறக்காம கால் பன்னுவாய்ங்க.

”டேய் நேத்து தானடா கால் பன்னீங்க” 

“அது வேற ப்ராஞ்ச்லருந்து பன்னிருப்பாங்க சார்”

“நீங்க எங்கருந்து பேசுறீங்க ?”

“டி நகர்”

”நேத்து ஃபோன் பன்னவனும் டி நகர் ப்ராஞ்சுன்னு தான் சொன்னான்”

“இல்ல சார்… இது டி நகர்ல இருக்க வடபழனி ப்ராஞ்ச்”

அடேய்.. ஒவ்வொரு ப்ராஞ்ச்லருந்து ஒவ்வொரு நாளுக்கு கால்பன்னீங்கன்னா நாங்க என்னடா பன்றது?

True caller வந்ததுலருந்து பெரும்பாலான நம்பர்களை அவனே காட்டிக்குடுத்துருவான். அதனால நம்பர பாத்த உடனே கட் பன்னி வச்சிருவேன். ஆனாலும் சில சமயம் அவனே  யார் நம்பருன்னு கண்டுபுடிக்க திணரும்போது அட்டண்ட் பன்னி பேச வேண்டியதாயிடும். பெரும்பாலான சமயங்களில் அவய்ங்ககிட்ட பொறுமையாதான் பேசுவேன். ஆனாலும் சில சமயம் நம்ம கடுப்புல இருக்கும்போது இந்த மாதிரி கால் வர்றப்போ என்னையும் அறியாம அவனுங்களுக்கு கண்ட மேனிக்கு திட்டு விழுறதுண்டு.


மேல சொன்னதெல்லாம் இல்லாம இப்ப புதுசா ஒரு டிசைன்ல கெளம்பிருக்காய்ங்க. கால் வரும். அட்டெண்ட் பன்னோம்னா

“ சார்…. உங்களோட ATM கார்டு ப்ளாக் ஆயிருக்கு. வெரிஃபிகேஷனுக்காக உங்க கார்டு நம்மர சொன்னீங்கன்னா ப்ளாக்க ரிலீஸ் பன்னி விட்டுறலாம்” ம்பானுங்க.

”என்னடா சாக்கடையில அடைப்பெடுத்து விடுறேங்குற மாதிரி சொல்றீங்க. என் கார்டு தான் ப்ளாக்கே ஆகலயே நல்லா ஒர்க் ஆயிட்டு இருக்கே..”

“இல்ல சார் ப்ளாக் ஆயிருக்கு”

“சரி நீ எந்த பேங்க்லருந்து பேசுறீங்க?”

“நா HDFC லருந்து பேசுறேன்”

”நா HDFC கார்டே வச்சில்லையே.. AXIS கார்டு தான் வச்சிருக்கேன். இல்லாத கார்டு எப்டி ப்ளாக் ஆகும்”

“இல்லை சார்… உங்க AXIS  கார்டு தான் ப்ளாக் ஆயிருக்கு… நம்பர் சொன்னீங்கான்னா ப்ளாக் ரிலீஸ் பன்னிரலாம்”

“சார் நீங்க HDFC லருந்து பேசுறேன்னு சொன்னீங்க… AXIS கார்டு ப்ளாக் ஆனா நீங்க எப்டி எடுப்பீங்க…”


“இல்லை சார்.. ஆல் பேங்குக்கும் நா தான் மேனேஜர். இந்த மாதிரி கார்டு ப்ளாக் ஆகுற கம்ளைண்டெல்லாம் நாங்கதான் டீல் பன்னிகிட்டு இருக்கும்”
அடிங்கொய்யால டப்ஸா கன்னா… ஆல் பேங்கு மேனேஜரா நீயி ஓடிரு.. கொஞ்சம் விட்டா ரிசர்வ் பேங்குக்கு கூட நீதான் மேனேஜர்னு சொன்னாலும் சொல்லுவ.. ஓடிரு…

இந்த மாதிரி ஆல் பேங்க் மேனஜர்கள் நம்ம கார்டு நம்பர நம்மக்கிட்டயே கேட்ட சம்பவங்கள் கடந்த ஒரு மாசத்துல ரெண்டு தடவ நடந்துருக்கு.
இன்னிக்கு காலையில அதே மாதிரி ஒரு ஃபோன். பேசுனது ஒரு பொண்ணு

“வணக்கம் சார்… …”

“சொல்லுங்க மேடம்..”

“நீங்க SBI credit கார்டு வச்சிருக்கீங்கல்லியா? அதுல உங்களுக்கு ஒரு upgradation package வந்துருக்கு ”

“நா SBI கார்டே வச்சில்லயே மேடம். அப்புறம் எப்புடி upgradation  வரும்”

அந்த பொண்ணு பேசுன முதல் வார்த்தையிலயே இது ஒரு டுபாகூர் கால்ன்னு என்னோட மைண்டுல ஃபிக்ஸ் ஆகி, அதுக்கப்புறம் அந்த பொண்ணு கேட்ட எல்லா கேள்விக்குமே என்கிட்டருந்து ஒரு மாதிரி எகத்தாளமான பதில்தான் வந்துச்சி.

“இல்ல சார் நீங்க HDFC கார்டு தான் வச்சிருக்கீங்க… இதுவரைக்கும் நீங்க purchase பன்னதுக்கு உங்களுக்கு கிரெடிட் பாய்ண்ட்ஸ் இருந்துச்சி. அத நீங்க யூஸே பன்னாதாதால இனிமே நீங்க பன்ற ஒவ்வொரு பர்ச்சேஸூக்கும் 20% cash back தர்ற மாதிரி upgradation வந்துருக்கு” ன்னு சொல்லுச்சி.

இந்த மாதிரி upgradation , offer ன்னு எது ஆரம்பிச்சாய்ங்கன்னாலும் கடைசில நம்மகிட்டருந்து இன்னும் கொஞ்சம் extra பணம் புடுங்குற ஐடியாவாத்தான் இருக்கும். எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசில இந்த offer ah avail பன்னனும்னா நீங்க ஒரு 2000 ரூபா கட்டுற மாதிரி இருக்கும்சார்னு சொல்லுவாய்ங்க. அதனாலயே அந்த பொண்ணு சொன்ன ஆஃபர்ங்குறது என்னோட காதுலயே ஏறல. திரும்ப திரும்ப என்னோட மைண்டுல இது ஒரு ஃபேக் கால்ங்குற நினைப்பு தான் ஓடிக்கிட்டு இருந்துச்சி.

“மேடம் நீங்க யாரு மேடம்… நீங்க ஏன் இதெல்லாம் சொல்றீங்க.. சரி நீங்க என்னோட கார்டு நம்பர சொல்லுங்க” ன்னேன்.

”சார் நா எப்டி சார் கார்டு நம்பர சொல்ல  முடியும். அது சீக்ரெட் information. நீங்க யார்னு தெரியாம கார்டு நம்பரல்லாம் நாங்க சொல்லக்கூடாது சார்”

“ஏங்க என்கிட்ட நீங்க என்னோட கார்டு நம்பர் சொல்ல மாட்டீங்க.. ஆனா நா மட்டும் நீங்க சொல்றத நம்பனும்… சரி நா என்ன கார்டு வச்சிருக்கேன்னாவது சொல்லுங்க..” ன்னேன்.

பேரயும் நா எந்த பேங்க்ல கார்டு வச்சிருக்கேங்குறதயும் கரெக்ட்டா சொன்னுச்சி. அப்பவே அந்த பொண்ணு வாய்ஸ்ல கோவமும் ஏண்டா இவனுக்கு கால் பன்னோம்ங்குற நினைப்பும் தெரிஞ்சிது. நா ஃப்ரண்ட்ஸோட பேசிகிட்டு இருந்த சமயத்துல அந்த ஃபோன் வந்ததாலயும் ஏற்கனவே இந்த மாதிரி ரெண்டு பேரு ஏமாத்த முயற்சி செஞ்சதாலயும் அந்த பொண்ணுக்கு நா ஒழுங்கான response உம் குடுக்கல. அந்த பொண்ணு சொல்ல வந்ததயும் முழுசா சொல்ல விடல. இன்னும் கொஞ்ச எடக்கு முடக்கு பதில்களுக்கு அப்புறம்

“ஹலோ மேடம்… உங்களுக்கு இப்ப என்ன ப்ரச்சனை.. என்ன வேணும்?”

“ஒண்ணும் இல்லை சார்… தயவு செஞ்சி லைன கட் பன்னுங்க” ன்னு கொஞ்சம் தளுதளுத்த குரல்ல சொல்லுச்சி. அப்பதான் எனக்கு செருப்புல அடிச்ச மாதிரி இருந்துது.. அந்த பொண்ணு ஃபோன கட் பன்னுச்சான்னு தெரியல. ஆன நா கட் பன்னிட்டேன்.

நான் நிறைய பேரோட நிறைய தடவ சண்டை போட்டுருக்கேன். சண்டை போடும்போது ரொம்ப hurt பன்ற மாதிரி பேசிருவேன். ஆனா அதுக்கப்புறம் அவங்க எப்டி ஃபீல் பன்றாங்களோ.. எனக்கு நினைச்சி ரொம்ப மனசு கஷ்டமா இருக்கும். அவங்களுக்காக இல்லைன்னாலும் என்னோட மனசு திருப்திக்காகவாது, யாரா இருந்தாலும் மன்னிப்பு கேட்டுருவேன். மன்னிப்பு கேக்குறதுக்கு நா வெக்கப்பட்டதே இல்லை.

ஃபோன் பேசி வச்ச அடுத்த ஒரு மணி நேரம் ரொம்ப சங்கடமா போச்சு. ஏன் அப்டி பேசுனோம்னு ரொம்ப அசிங்கமா இருந்துச்சி. பேச புடிக்கலன்னா எப்பவும்போல கட் பன்னிட்டு பேசாம இருந்துருக்கலாம். ஆனா அப்டி இல்லாம அந்த புள்ளைய ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோன்னு உறுத்திக்கிட்டே இருந்துச்சி.

ஒரு நாள் காலையில ஆஃபீஸ்ல யாராவது ஒருத்தன் நம்மள டென்ஷன் ஆக்கி விட்டுட்டாலும் அன்னிக்கு பூராவுமே கடுப்பா இருக்கும். அப்டி இருக்கும்போது இந்த மாதிரி க்ரெடிட் கார்டுகளுக்காகவும் பர்சனல் லோன்களுக்காகவும் கால் பன்ற பொண்ணுங்களையும் பசங்களையும் நினைச்சி பாத்தா, ஒரு நாளைக்கு எத்தனை பேரு அவங்களுக்கு ஒழுங்க respond பன்னுவாங்க? இன்னிக்கு நா பன்ன மாதிரி ஒரு நாளுக்கு எத்தனை பேர அவங்க பாப்பாங்க. எத்தனை பேர் கிட்ட திட்டு வாங்குவாங்க.

யாரோ ஒரு பாஸ் குடுக்குற டார்கெட்ட achieve பன்றதுக்காகவும், குடும்பத்த காப்பாத்த கிடைச்ச வேலைய விட்டுட முடியாமலும் என்னை மாதிரி எத்தனை பேர் என்ன சொன்னாலும் சகிச்சிக்கிட்டு திரும்ப திரும்ப எல்லாருக்கும் கால் பன்னித்தான ஆகனும். நம்ம பாக்குற வேலைதான் கஷ்டம்னு ஒவ்வொருத்தரும் நினைச்சிட்டு இருப்போம். ஆனா இவங்கள நினைச்சி பாக்கும்போது  கண்டிப்பா இல்லை.

ஒரு மணி நேரமாகியும் எனக்கு இன்னும் மனசு உறுத்திக்கிட்டேதான் இருந்துச்சி. சரி வழக்கம்போல நம்மளே மன்னிப்பு கேட்டுடலாம்னு முடிவு பன்னி அந்த நம்பருக்கு ஃபோன் பன்னேன். கிட்டத்தட்ட அரை மணி நேரம் பிஸி. அதுக்கப்புறம் அந்த நம்பர்லருந்து திரும்ப கால் வந்துச்சி.

“சொல்லுங்க சார்”

“மேடம் கொஞ்ச நேரத்துக்கு முன்னால எனக்கு ஃபோன் பன்னீங்கல்ல… நா கொஞ்சம் கோவமா பேசிட்டேன் மேடம் மன்னிச்சிருங்க” ன்னேன்

“உங்க பேர் என்ன சார்” ன்னு. கேட்டதும் பேர சொன்னேன். 

“உங்களுக்கு நா கால் பன்னல சார்… வேற representative பன்னிருப்பாங்கன்னு நினைக்கிறேன்” ன்னுச்சி.

பரவால்ல மேடம் அவங்ககிட்ட நா மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிருங்கன்னு சொன்னதும் “சார் நா அவங்களையே உங்களுக்கு கால் பன்ன சொல்றேன்” ன்னு சொல்லிட்டு வச்சிருச்சி..

திரும்ப அடுத்த ரெண்டு நிமிஷத்துல அதே நம்பர்லருந்து கால். அட்டெண்ட் பன்னதும் “சொல்லுங்க சார்… ”

என்னோட பேர சொல்லி “மேடம் கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீங்க எனக்கு கால் பன்னிருந்தீங்க.. அப்ப நா கொஞ்சம் கோவமா பேசிட்டேன். மன்னிச்சிருங்க மேடம். கொஞ்சம் டென்ஷனா இருந்ததால அப்டி பேசிட்டேன்” ன்னு சொன்னேன்.

“பரவால்ல சார்… நானும் கொஞ்சம் ஒரு மாதிரி பேசிட்டேன் சாரி” ன்னு சொன்னுச்சி. திரும்பவும் இன்னொரு தடவ மன்னிச்சிருங்க மேடம்னு சொல்லிட்டு அதுக்கு மேல எதுவும் பேசுனா தப்பான எண்ணதுல எதுவும் கால் பன்னிருக்கமோன்னு அந்த சகோதரி  தப்பா நினைச்சிருவாங்கன்னு அதோட கட் பன்னிட்டேன்.

அதுக்கப்புறம்தான் ஓரளவு மனசுக்கு ஓக்கே.. ஆனாலும் மொத தடவ பேசும்போது  அது சொல்ல வந்த கிரெடிட் கார்டு ஆஃபர பத்தி திரும்ப முழுசா சொல்ல சொல்லி அத கவனமா கேக்குற மாதிரி நடிச்சிருந்தாலாவது அந்த பொண்ணுக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்திருக்க வாய்ப்பு இருந்துருக்கும். அது சொன்ன “பரவால்லை” க்கு அர்த்தம் ”மன்னிச்சிட்டேன்” ங்குறது இல்லைன்னு மட்டும் எனக்கு நல்லா தெரிஞ்சிது.

பல சமயங்களில் இந்த மாதிரி ஃபோன் கால்கள் உச்சக்கட்ட கடுப்புகளையும், கோபங்களையும் தான்  வரவழைக்கிது. ஆனா நம்ம கோவத்த அவங்க மேல கொட்டுறதுக்கு முன்னால அவங்க நிலமையிலயும் கொஞ்சம் இருந்து பாத்தா அவங்களுக்கும் வேற வழி இல்லைன்னு தான் தோணும். 




Monday, August 22, 2016

EYE IN THE SKY!!!


Share/Bookmark
ஒரு உயிரோட மதிப்பு என்ன? சிட்டி சொல்றது மாதிரி கண்டிப்பா அது எந்த உயிருங்குறதப் பொறுத்தது தான். ஒரு ஊரையே கொன்னதுக்காக பழிவாங்குறது, குடும்பத்தை கொன்ன வில்லன்களை பழிவாங்குறது. தங்கச்சியைக் கொன்னவங்களைப் பழிவாங்குறது காதலியைக் கொன்ன வில்லன்களை பழிவாங்குறதுன்னு பல பழிவாங்குற படங்களைப் பாத்துருக்கோம். .செத்துப்போன ஒரே ஒரு காதலிக்காக ஹீரோ நாற்பது ஐம்பது வில்லன்களை ஹீரோக்கள் கொல்லுவாங்க. ஆனா அதெல்லாம் நமக்கு தப்பா படாது. ஏன்னா செத்துப்போனது எந்தத் தப்பும் செய்யாத ஒரு அப்பாவி ஜீவன். அதற்காக எத்தனை கெட்டவனுங்களையும் கொல்றதுல தப்பில்லைன்னு நம்ம மனசு சொல்லும்.  

எப்பவுமே ஒரு படம் பாக்கும்போது அந்த ஹீரோ கேரக்டர்லதான் ஆடியன்ஸ் இருப்பாங்க. அவருக்கு வர்ற சுக துக்கங்கள் ஆடியன்ஸூக்கும் வர்ற மாதிரி தான். ரிவெஞ்ஜ் படங்கள்ல ஹீரோ பழிவாங்குறத justify பன்றதுக்காக கண்டிப்பா ஒரு ஃப்ளாஷ்பேக் இருந்தே ஆகும். 

ஃப்ளாஷ்பேக்ல அம்மாவோ, தங்கச்சியோ, காதலியோ ஹீரோமேல ரொம்ப அன்பா இருப்பாங்க. ஹீரோ எந்த சண்டைக்கும் போகாத நல்ல புள்ளையா இருப்பார். அப்ப வர்ற வில்லன்கள் ஹீரோவுக்கு பிரியமானவங்களை கொன்னுட ஹீரோ ரிவெஞ்ஜ் நாகேஸ்வராவா மாறி எல்லாரையும் பழி வாங்குவாரு. எல்லா ஃப்ளாஷ்பேக்லயும் அவங்க சொல்ல வர்றது அந்த உயிர் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியம் அப்டிங்குறதாத்தான் இருக்கும்.

ஹீரோவுக்கு படத்துல வில்லன்களை பழிவாங்குறதுக்காக வர்ற அதே கோவம் ஆடியன்ஸூக்கும் வந்துச்சின்னா படம் ஹிட்டு. இல்லைன்னா மட்டை. அந்த ஃபீல கொண்டு வர்றதுக்கு நிறைய மெனக்கெடுவாங்க. எத்தனை பேர் கொல்லப்பட்டாங்கங்குறத விட யார் கொல்லப்பட்டாங்கங்குறது தான் அந்த இம்பேக்ட்ட அதிகப்படுத்தும்.

சிட்டிசன் படத்துல கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டவங்களை வில்லன்கள் கொன்னுருப்பாங்க. ஆனாலும் நமக்கு அஜித் சொல்ற ஃப்ளாஷ்பேக்க கேட்டு வர்ற ஃபீல விட கஜினில ஒரே ஒரு கல்பனாவ வில்லன்கள் அடிச்சி கொல்லும் போது வர்ற ஃபீல் அதிகம்.

மனித உயிர்களைக் கொன்னா மட்டும்தான் கோவம் வருமா? ஒரு படத்துல ஒரு சின்ன நாய் குட்டிய கொன்னதுக்காக குறைந்த பட்சம் இருநூறு பேர ஒருத்தர்  கொல்லுவாறு. ஆனா படம் பாக்குற நமக்கு கொஞ்சம் கூட அது உறுத்தாது. அவர் செய்றது சரிதான்னு தோணும்.

ஒரு ரிட்டயர்டு ரவுடி உயிருக்கு உயிரா நேசிச்ச காதலி இறந்து போயிடுறா. அவ நினைவா காதலன்கிட்ட இருக்க ஒரே ஒரு விஷயம் அவளோட நாய் குட்டி ஒண்ணு தான். அதப் பாக்கும்போதெல்லாம் அவ நினைப்புல வாழ்ந்துகிட்டு இருக்காரு ஹீரோ. அந்த சமயத்துல ஊடால வந்த வில்லனுங்க அந்த நாய்குட்டிய சுட்டு கொன்னுடுறானுங்க. அவவளவு தான். மொத்த வில்லன் கூட்டத்தையும் சுட்டே கொன்னுருவாரு ஹீரோ. 

உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் என்ன படம்னு. John Wick . பெரும்பாலானவங்க இந்த படத்தை பாத்துருப்பீங்க. மாஸ்னா என்னனு இந்தப் படத்த பாத்து தான் கத்துக்கனும். பிரிச்சிருப்பானுங்க. John Wick ங்குறவன் யாரு.. அவனால என்ன பன்ன முடியும்னு பில்டப் சீன் எதுவும் இல்லாம வில்லன்கள் வாயாலயே பில்ட் அப் ஏத்திருப்பானுங்க. அதுக்கேத்த மாதிரி அத்தனை பேரயும் தொம்சம் பன்னுவாறு.  எல்லாம் ஒரு நாய் குட்டிய கொன்னதுக்காக. அந்த நாய் குட்டியோட உயிரோட மதிப்பு 200 மனித உயிர்களுக்கும் மேல.





இப்ப நம்ம படத்துக்கு வருவோம். தீவிரவாதிகளைப் புடிக்கிறதுக்கான ஒரு சீக்ரெட் மிஷன்.  அதுக்கு ஹெட்டா இருக்கது ஒரு லேடி ஆஃபீசர். ரொம்ப நாளா அவனுங்கள வலை போட்டு தேடிக்கிட்டு இருக்கு. நிறைய சர்வேலன்ஸ் கேமரா வச்சி, நிறைய Spy ங்கள வச்சி அவனுங்கள வாட்ச் பன்னிக்கிட்டு இருக்கு. அப்ப தான் அந்த தீவிரவாதிங்க கென்யால ஒரு வீட்டுல ஒண்ணு கூடப்போறதா இம்ரேசன் (information) கிடைக்கிது.

இந்த மிஷன்ல நிறைய பேர் வேலை செய்றாங்க. அதுல ரெண்டு பைலட்டும். அவங்களோட வேலை மிக உயரத்துல பறந்துகிட்டு இருக்க ஆளிள்ளா விமானத்த இங்கருந்து கண்ட்ரோல் பன்றதுதான். ஆளில்லாம அதுமட்டும் ஏன் தனியா பறக்குதுன்னு கேப்பீங்க. அந்த ஃப்ளைட்டுல உள்ள hi definition கேமராவ வச்சி தான் அந்த தீவிரவாதிகளோட எல்லா மூவ்மெண்டையும் watch பன்றாங்க. அந்த விமானத்த வச்சி மொத்த ஏரியாவையும் surveillance ல வைக்க முடியும்  ஒரு கார் போகுதுன்னா அதுக்கேத்த மாதிரி ஃப்ளைட்ட முன்ன பின்ன நகர்த்தி ஃப்ளைட்டுல உள்ள கேமரா மூலமா அந்த கார தொடர்ந்து ஃபாலோ பன்ன முடியும். அதுமட்டும் இல்லாம மிஸைல்களை தாங்கி நிக்கிற ஒரு போர் விமானமும் கூட. தேவைப்பட்டா அதன் மூலமா ஏவுகனைத் தாக்குதலும் நடத்த முடியும்.

அந்த ஒரு விமானம் மட்டும் இல்லாம குருவி மாதிரி பறக்குற ஒரு கேமரா. சின்ன வண்டு சைஸ்ல ஒரு கேமரான்னு அங்கங்க ஒரு கேமராவ வச்சி தீவரவாதிகள் பக்கத்துல நெருங்காமையே அவங்களோட ஒவ்வொரு மூவ்மெண்டயும் வாட்ச் பன்னிட்டு இருக்காங்க.

நாலு தீவிரவாதிகளும் (ஒரு பெண் உட்பட) கென்யால உள்ள ஒரு வீட்டுல ஒண்ணு கூடி ஒரு தற்கொலைப் படை தாக்குதலுக்கு ப்ளான் பன்றாங்க. இதை நடக்க விடக்கூடாது. இவ்வளவு  க்ளோஸா அந்த தீவிரவாதிகளை நெருங்குனதும் இந்த நேரத்துலதான். அதனால இங்கயே வச்சி அவனுங்க கதைய முடிச்சிடலாம்னு முடிவு பன்னுது மிலிட்டரி.

தீவிரவாதிகள் தங்கியிருக்க வீட்டுக்கு பக்கத்து தெருவுல ஆறு ஏழு வயசு மதிக்கத்தக்க ஒரு குழந்தை இருக்கு. தினமும் அவங்க அம்மா ரொட்டி சுட்டு தர, இந்த அஞ்சு வயசு குழந்தை அதை தெருவுல வச்சி வித்துட்டு வீட்டுக்கு போகும். அது ரொட்டி விக்கிற இடம் கரெக்டா தீவிரவாதிகள் தங்கியிருக்க விட்டுக்கு ரொம்ப பக்கத்துல.

இப்படி இருக்க, மிஷன் இன்ச்சார்ஜ் லேடி தீவிரவாதிகளப் போட்டுத் தள்ளிடலாம்னு முடிவு பன்னி , எல்லார்கிட்டயும் பர்மிஷனும் வாங்கி, மிஸைல் மூலமா அந்த வீட்ட தாக்குறதுன்னு முடிவு பன்றாங்க. எல்லாம் செட் பன்னி மிஸைல் லாஞ்ச் பன்னப்போகும்போது அந்த சின்னக் குழுந்தை ரொட்டி விக்க வந்து அந்த வீட்டுக்கு பக்கத்துல உக்கார்ந்துருது.
ஃப்ளைட் இன்சார்ஜா இருக்கவன் குழந்தை உயிருக்கு ஆபத்து வரும்னு சொல்லி missile ah  லாஞ்ச் பன்ன முடியாதுன்னு சொல்லிடுறான். அந்த வீட்டோட எந்த பகுதில தாக்குனாலும் அந்த குழந்தை அதனால பாதிக்கப்படும்னு அனுமானிக்கிறாங்க. டெலிகேட் பொசிஷன்.

அதனால குழந்தை அந்த ரொட்டியெல்லாம் விக்கிற வரைக்கும் வெய்ட் பன்னிட்டு இருக்காங்க. இந்த பக்கம் தீவிரவாதிகள் உடம்புல பாம் எல்லாம் கட்டிக்கிட்டு தற்கொலைப்படை தாக்குதலுக்கு ரெடி ஆயிட்டாங்க. இன்னொரு பக்கம் குழந்தை இருக்கதால ஏவுகணை விட பர்மிஷன் இல்லை. இன்னிக்கு தீவிரவாதிகளை விட்டுட்டா இனிமே என்னிக்கு கண்ணுல படுவானுங்கன்னே சொல்ல முடியாது. கடைசி வாய்ப்பு. 

அந்த ஒரு குழந்த உயிரப் பத்தி கவலைப்பட்டா தீவிர வாதிகளோட தற்கொலைப் படை தாக்குதல்ல பல பேர இழக்க வேண்டியிருக்கும். அதுனால யோசிக்காம தாக்கிடலாம்னு சொல்லுது மிஷன் இன்சார்ஜ் லேடி. ஆனா குழந்தையோட உயிருக்கு ஆபத்து வர்ற மாதிரி இருந்தா பர்மிஷன் குடுக்கு முடியாதுன்னு சொல்றாங்க மேலிடம். ஒவ்வொரு நிமிஷமும் திக் திக்னு போகுது. Missile வச்சி தீவிரவாதிகளை கொன்னானுங்களா இல்லையாங்குறத செம த்ரில்லிங்க்கா காமிச்சிருக்க படம் தான் EYE IN THE SKY.

கிட்டத்தட்ட பின்லேடனைப் பிடிக்கிற ZERO DARK THIRTY மாதிரியான படம். நேரமிருந்தா கண்டிப்பா பாருங்க. ZERO DARK THIRTY யை பாக்கலன்னா அதயும் ஒருக்கா பாருங்க. 





Friday, August 12, 2016

சிங்கம் 3 & சாமி 2 ஸ்டோரி டிஸ்கஷன் !!!


Share/Bookmark
இயக்குனர் ஹரி சிங்கம் 3 ஐ தொடர்ந்து சாமி-2 இயக்கப்போவதாக கொஞ்ச நாள் முன்னால அறிவிச்சிருக்காரு. இந்த சூழ்நிலையில சிங்கம் 3 மற்றும் சாமி 2 படங்களோட கதை டிஸ்கஷன அந்த படத்துல ஏற்கனவே நடிச்ச ஒருசில நடிகர்களோட ஒரே அறையில வச்சிருக்காரு. இப்ப என்ன நடக்குதுன்னு பாப்போம். அந்தந்த கேரக்டர்கள் பேசுற ஸ்லாங்குல படிங்க.

(தொடர்ந்து வெறும் போலீஸ் படமா இயக்கி இயக்கி ஹரி ஒரு மாதிரி மெண்டல் டிஸ்ஸாடர் ஆகுற கண்டிஷன்ல இருக்காரு)

டிஸ்கஷன் ரூமுக்குள்ள வந்து பாக்குறாரு. சந்தானம், ஹாரிஸ் ஹெயராஜ், DSP எல்லாம் வந்து உக்கார்ந்துருக்காங்க.

ஹரி : யோவ்… என்னய்யா எல்லாரும் வந்துருக்காங்க.. வர வேண்டிய ஹீரோ ரெண்டு பேரயும்  காணும்

Asst 1: சொல்லியாச்சு சார்… இப்ப வந்துருவாங்க

ஹரி : ஆமா நீ ஏன் காக்கி கலர்ல சட்டை போட்டுருக்க?

Asst 1: சார் நல்லா பாருங்க… இது காக்கி இல்லை. பச்சை கலர்

ஹரி : (மனதிற்குள்: அய்ய்யயோ… வர வர எதப்பாத்தாலும் காக்கி கலர்லயே தெரியிதே… ) சரி சரி சும்மா தமாசுக்கு கேட்டேன் உக்காரு
எல்லாரும் உக்கார

ஹரி : சரி என்ன சீன் எழுதிருக்கீங்க.. குடுங்க பாக்கலாம்.

Asst 2 : சார்.. சிங்கம் 3 படத்துக்கு ஒரு சூப்பர் இண்ட்ரோ எழுதிருக்கோம் படிச்சி பாருங்க

ஹரி அந்த சீன வாங்கி படிச்சி மெரண்டு போய்

ஹரி : ”யோவ் இந்த சீனெல்லாம் எடுக்குறது ரொம்ப கஷ்டம்யா… டூப் போட்டு தான் எடுக்க முடியும்” ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே வெளில சூர்யா குரல் கேக்குது

சூர்யா : ஹாய் ஹலோ எல்லாருக்கும் வணக்கம். சாரி கொஞ்சம் லேட் ஆயிருச்சி..

சந்தானம் : யார்ரா அது?

சூர்யா : ஆத்ரேயாடா

சந்தானம் : கொஞ்சம் சாத்துருயாடா?

சூர்யா : என்னது?

சந்தானம் : இல்லை கதவ சாத்துருயாடான்னு கேட்டேன். வந்து உள்ள உக்காருங்க லில்லிபுட் அங்கிள்

(சூர்யா உள்ள வந்து உக்கார்ந்தப்புறம்)

சூர்யா: என்ன… என்ன போயிட்டு இருக்கு?….

ஹரி : உங்க இண்ட்ரோ சீனப் பத்தி தான் சார் பேசிக்கிட்டு இருந்தோம். ரொம்ப tough ah இருக்கு. அதான் டூப் போட்டு எடுக்கலாமான்னு நினைக்கிறோம்

சூர்யா : என்ன சார்… Six பேக்லாம் வச்சி எப்டி இருக்கேன். எனக்கு போய் டூப் போடனும்ங்குறீங்க… என்ன பன்னனும் சொல்லுங்க… 30 அடி உயரத்துலருந்து குதிக்கனுமா? ட்ரெயின் மேல 200 கிலொ மீட்டர் வேகத்துல ஓடனுமா? இல்லை பாம் வெடிக்கும்போது பக்கத்துல நின்னு ஸ்டைல திரும்பனுமா? எதா இருந்தாலும் சொல்லுங்க. பின்னிடுவோம்
ஹரி : கிரிக்கெட் விளையாடனும்…

சூர்யா : க்..க்…கி.கி.கி.கிரிக்கெட்டா…. பரவால்ல…  நீங்க அதுக்கு டூப்பே போட்டு எடுத்துருங்க.  

ஹரி : பரவால்ல சார்.. டூப்பு வேணாம் நீங்களே நடிங்க. ஃபுல் ஸ்பீடுல வர்ற பந்தை நீங்க மடக்கி சிக்ஸர் அடிக்கிறீங்க. அதன் இண்ட்ரோ சீன்

சூர்யா : நோ நோ.. நா கோடி ரூவா குடுத்தா கூட இனிமே கிரிக்கெட் விளையாட மாட்டேன்னு ஜோ மேல சத்தியம் பன்னிருக்கேன்.

சந்தானம் : (சைடுல திரும்பி) நீயே கோடி ரூவா குடுத்தா கூட இனிமே உன்னயும் உன் தம்பியையும் எங்கயும் விளையாட சேத்துக்க மாட்டாங்க

சூர்யா : கலாய்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். பரவால்ல… அடுத்த சீன சொல்லுங்க.

ஹரி : இண்ட்ரோ சீன் முடிஞ்ச உடனே அந்த கிரிக்கெட் ஸ்டம்பைய புடுங்கி அங்கருக்க ஒரு 10 ரவுடிய வெளுத்து கட்டுறீங்க. ஃபைட்டு முடிஞ்ச உடனே அதே கிரிக்கட் கிரவுண்டுல ஆடிக்கிட்டு இருந்த ச்சியர் கேர்ள்ஸோட ஒரு குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடுறீங்க.

சூர்யா : வாவ்.. வாவ்…வாவ்.. சூப்பர் சூப்பர்

Asst 2 : (ஹரியின் காதுக்குள்) சார் நீங்க எடுத்த பத்து படத்துலயும் இதே சீனத்தான் மாத்தி மாத்தி வச்சிருக்கீங்க. இவர் என்ன சூப்பர் சூப்பர்ங்குறாரு?

ஹரி : கிரிக்கெட் சீன கேட்டதுல பதட்டமாயி வாவ் வாவ் ன்னு உளரிக்கிட்டு இருக்கான். அப்டியே ஓக்கே வாங்கி சீன ஃபிக்ஸ் பன்னிக்குவோம். ஆமா நீ ஏன் கையில லாட்டிய வச்சிருக்க?

Asst 2 : சார்…  லாட்டி இல்ல சார் இது.. பேனா…

ஹரி : எனக்கு தெரியாதா? சும்மா தமாசு (அவ்வ்வ்)

சூர்யா : என்ன DSP… இண்ட்ரோ சாங்குக்கு ட்யூன் ரெடியா?

சந்தானம் : இவந்தான் பத்துவருசமா நாலு  ட்யூன் போட்டு ரெடியா வச்சிருக்கானே. எந்த பாட்டு வேணும்னு கேட்டா உடனே போட்டுக்குடுத்துருவான்

சூர்யா : என்ன சொல்றீங்க..

சந்தானம் : இஹ்ஹ்.. இல்லை என்ன மாதிரி பாட்டு வேணும்னு கேட்டா சார் போட்டு குடுத்துருவாருன்னு சொன்னேன்.

ஹரி : DSP அந்த இண்ட்ரோ சாங் ட்யூன போடுங்க

DSP : எப்பவோ ரெடி… போடுறேன் கேளுங்க..  “Yo… yo… This is Dsp………………”

சந்தானம் : டேய் வான் கோழி வாயா…  சூர்யாவுக்கு இண்ட்ரோ சாங் போட சொன்னா நீ உனக்கு இண்ட்ரோ சாங் போட்டுக்குறியா

DSP : இல்ல சார்.. எனக்கு இப்புடி ஆரம்பிச்சாதான் ட்யூன் வரும்

சந்தானம் : எனக்கு வாயில நல்லா வரும்… நீ ட்யூனே போட வேணாம் பேசாம உக்காரு.

(ஹாரிஸ் உடனே இடையில பூந்து)

ஹாரிஸ் : சார் எங்கிட்ட ரெண்டு புது ட்யூன்  இருக்கு. கேக்குறீங்களா?

சந்தானம் : எங்கருந்து போட்டது?  (சுட்டது)

ஹாரிஸ் : என்ன சார்?

சந்தானம் : இ..இது எங்க இருந்துகிட்டு ட்யூன போட்டீங்கன்னு கேட்டேன் பாப் கட்டிங் அங்கிள்

ஹாரிஸ்: நானே சொந்தமா என் ஸ்டூடியோவுல போட்டேன்

சந்தானம் : அப்ப சத்தியமா நல்லாருக்காது.   



சூர்யா : சார்.. அப்புறம் இந்தப் படத்துலயும் அனுஷ்காதானே?

ஹரி : அனுஷ்கா கொஞ்சம் கஷ்டம் சார்… 5 கோடி ரூவா சம்பளம் கேக்குறாங்க

சூர்யா : என்னது அஞ்சு கோடியா? ரெண்டு பாட்டுக்கும் நாலு சீனுக்கும் வர்றதுக்கு அஞ்சு கோடியா?

ஹரி : அதுக்கில்ல சார்.. ”உங்க கூட நடிக்கும்போது அபூர்வ சகோதரர்கள்ல கமல் நடிச்ச மாதிரி காலை மடக்கியெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்க வேண்டியிருக்காம். போன ரெண்டு பார்ட்ல நடிச்சதுக்கே முட்டி வலி வந்துருச்சி” ன்னு சொல்லி 5 கோடி குடுத்தாதான் நடிக்க வருவேன்னுட்டாங்க.

சூர்யா : 5 கோடி இல்லை… 50 கோடி குடுத்தாவது அனுஷ்காவ உள்ள கூப்டுங்க

(அப்ப திடீர்னு கதவுக்கு பக்கத்துலருந்து விஜய குமார் குரல்)

”சரியாச் சொன்னீங்க துரை சிங்கம்”

சந்தானம் : (கடுப்பாகி) யோவ் அரை போதையில இந்தாள யாருய்யா எழுப்பி விட்டது..

Asst 1: நாங்க யாரும் கூப்டல சார்… அவரே வந்துட்டாரு

விஜயகுமார் : (ஹரிய பாத்து) மாப்ள… எனக்கு இந்த படத்துல எத்தனை சீன்? என்ன வசனம்?

ஹரி : போன ரெண்டு படத்துல என்ன வசனம் பேசுனீங்க?

விஜயகுமார் : “சரியா சொன்னீங்க துரை சிங்கம்” “கலக்கிட்டீங்க துரை சிங்கம்” “ஆமா துரை சிங்கம்” “அப்புடி போடுங்க துரை சிங்கம்” “உங்கள ப்ரமோட் பன்றேன் துரை சிங்கம்” “சார்ஜ் எடுத்துக்குங்க துரை சிங்கம்”

ஹரி : அதே வசனம் தான் இந்த படத்துலயும். போய் சரக்கடிச்சிட்டு தூங்குங்க மாமா.. சும்மா சும்மா வந்து தொல்லை பன்னாதீங்க.

விஜயகுமார் : கோவப் படாதீங்க மாப்ள.. நா அப்டியே ஒரு ஓரமா உக்காந்து வேடிக்க பாத்துக்குறேன் ன்னு விஜய குமார் ஒரு ஓரமா உக்காருறாரு.

சூர்யா : சார்… போன படத்துல சவுத் ஆஃப்ரிக்கா வரைக்கும் போனோம். இந்த தடவ எதாவது புது இடத்துக்கு போகனும்

சந்தானம் : செவ்வாய் கிரகத்துக்கு வேணா போறியா?

சூர்யா : சந்தானம் நீங்க இப்டியே காலாய்ச்சீங்கன்னா உங்கள படத்துலருந்தே தூக்கிருவேன்

சந்தானம் : டேய்.. நானே இந்த படத்துலருந்து விலகுறதுக்காகத்தான் வந்ததுலருந்து உன்ன கலாய்ச்சிட்டு இருக்கேன்.. அது புரியாம நீ மண்ணு மாதிரி உக்காந்துருக்க

சூர்யா : ஹரி சார்… இவர படத்துலருந்து தூக்கிருங்க

விஜயகுமார் : சரியாச் சொன்னீங்க துரை சிங்கம்

சந்தானம் : வக்காளி நா கொலை கேஸுல உள்ள போனாலும் பரவால்ல மொதல்ல இவனப் போட்டுத்தள்ளுறேன்னு விஜய குமார் மேல பாயிறாரு.

(தொடரும்)



Tuesday, August 9, 2016

STRANGER THINGS!!!


Share/Bookmark
முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும். போன பதிவுல சொன்னது மாதிரி இந்த pschokenisis ஒவ்வொருவரப் பொறுத்தும் எப்படி மாறுபடுதுன்னு விளக்க ஒரு எக்ஸ்பெரிமெண்ட் பன்னாங்க. அதுல பங்கெடுதவங்கள ரெண்டு குழுவா பிரிச்சி, ரெண்டு பேருக்கும் தனித்தனியா ஒரு வீடியோ க்ளிப்பிங்க போட்டு காமிச்சாங்க. முதல் குழுவுக்கு மட்டும் “இப்ப நீங்க பாக்கப் போற வீடியோவுல ஒருத்தர் ஒரு சாவிய தொடாமலேயே வளைக்கப் போறார் பாருங்க. நேரம் ஆக ஆக அந்த சாவி கொஞ்சம் கொஞ்சமா வளைய ஆரம்பிக்கும் பாருங்க” ன்னு சொல்லி வீடியோவ போட்டு காமிச்சிருக்கானுங்க. ஆனா ரெண்டாவது குழுவுக்கு அந்த மாதிரி எந்த ஹிண்ட்டுமே குடுக்காம வீடியோவ போட்டு காமிச்சி ரெண்டு குழுவையும் தனித்தனியா கேட்டதுல முதல் குழுவுல இருக்கவனுங்கள்ள பெரும்பாலான பேரு “ஆமா சார்…. சாவி நல்லாவே வளைஞ்சிது” ன்னு சொல்லிருக்கானுங்க. ஆனா ரெண்டாவது குழுவுல பெரும்பாலானவங்க “என்னது சாவி வளைஞ்சிதா? அப்டி ஒண்ணும் எங்களுக்கு தெரியலையே” ன்னு சொல்லிருக்கானுங்க.

அதாவது முதல் குழுவுல இருக்கவனுங்க சாவி வளையும், சாவி வளையும்ங்குற ஒரு எதிர்பார்ப்பிலே பார்த்ததால சாவி உண்மையிலே வளைவது போல ஒரு illusion அவங்களுக்கு உண்டாகியிருக்கலாம் அப்டிங்குறதத்தான் இந்த experiment லருந்து சொல்ல வர்றானுங்க.  

2000 மாவது வருஷத்துல ஒரு பெரிய பொதுமக்கள் கூட்டத்துக்கு முன்னால  PC Sorkar junior ங்குறவரு தாஜ்மஹாலயே ரெண்டு நிமிஷம் மறைய வச்ச சம்பவம் நிறைய பேரு கேள்விப்பட்டுருப்பீங்க. ஒருத்தர் ரெண்டு பேருக்குன்னா பரவால்லை. ஒரு கூட்டமே இருக்கும்போது எப்படி அத்தனை பேருக்கும் அந்த illusion ah கொண்டு வர முடிஞ்சிது? ஒரு பொருளை நாம எப்படி பார்க்கிறோம்? ஒரு பொருள் இருப்பது எப்படி நமக்கு தெரியிது? ஒரு பொருள் மேல படுகிற வெளிச்சக் கதிர்கள் அந்தப் பொருளால எதிரொளிக்கப்பட்டு நம்ம கண்களை அடையும் போது அந்த பொருள் அந்த இடத்தில் இருப்பது நமக்கு தெரியிது. எப்படி தாஜ்மஹால மறைய வச்சீங்கன்னு Sorkar கிட்ட கேட்டப்ப அவர் சொன்னது “தாஜ்மஹால்லருந்து வர்ற Light Rays பார்வையாளர்கள் கண்ணுக்கு சென்றடையாம தடுத்தேன். அதனாலதான் தாஜ்மஹால் மறைஞ்சது மாதிரியான ஒரு optical illusion create ஆனதுன்னு சொல்லிருக்காரு. எப்படி தடுத்தார் என்பதெல்லாம் advanced science ஆம். நிறைய லேசர் லைட், அது இதுன்னு என்னென்னவோ வச்சி அத பன்னிருக்காங்க. நேரமிருப்பவர்கள் தேடி படிச்சிக்குங்க.

சரி ஏன் இந்த டாபிக்ல நாம இப்ப மொக்கை போட்டுக்கிட்டு இருக்கோம்னு நிறைய பேருக்கு சந்தேகம் வரும். நான் இந்த மாதிரி சம்பவங்களை தேடித்தேடி படிக்கிற ஆளெல்லாம் கிடையாது. எதாவது படம் பாக்கும்போது அதிலுள்ள கேரக்டர்கள பத்தி  படிக்கும்போது விஜயகாந்த் பேசிக்கிட்டு இருக்கும்போது மைக் ஒயர் கையில மாட்டுற மாதிரி எனக்கும் இந்த மாதிரி எதாவது மாட்டும். அப்டி மாட்டுற விஷயம் கொஞ்சம் interesting ah இருந்தா எழுதுறது. அவ்வளவுதான்.

சரி இப்ப 2016 ல வந்த Stranger Things அப்டிங்குற ஒரு மினி சீரிஸ பத்தி தான் பாக்கப்போறோம். 1983 ல அமெரிக்காவின் Hawkins நகர்ல நடக்குற மாதிரியான கதை. அந்த Hawkins la ஒரு பகுதிய restricted area வா அறிவிச்சி அதுல US Department of Energy oru Lab வச்சிருக்காங்க. முதல் காட்சிலயே அந்த Lab லருந்து தெறிச்சி ஓடுற ஒரு சயிண்டிஸ்ட்ட எதோ ஒண்ணு துரத்தி துரத்தி கொல்லுது.

அதே ஊர்ல நாலு ஸ்கூல் பசங்க ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட்ஸா இருக்கானுங்க. ஒரே  adventures படங்களையும், கதைகளையும் பாத்து, படிச்சி   எப்ப பாத்தாலும் ஒரு தனி உலகத்துல இருக்க பசங்க. அவனுங்க நாலு பேரு காண்டாக்ட் பன்னிகிறதுக்கு மட்டும் தனி வாக்கி டாக்கி வச்சிக்கிட்டு படங்கள்ல பேசிக்கிட்டு திரியிறவனுங்க.

இந்த சீரியல்ல பெரும்பாலான கேரக்டர்ஸ் இந்த நாலு பசங்களும் அவங்க ஃபேமிலி மெம்பர்ஸூம்தான். ஒரு நாள் ராத்திரி  நாலு பேரும் விளையாடி முடிச்சிட்டு, ஒவ்வொருத்தனும் வீட்டுக்கு போக, அந்த நாலு பேர்ல ஒருத்தனான Will buyers போற வழியில எதையோ பாத்து மிரண்டு ஓடுறான். அது துரத்தி வந்து அவனப் புடிச்சிருது.

அவ்வளவுதான். அன்னிக்கு ராத்திரி முழுக்க வீட்டுக்கு வரலன்னதும் Will buyers ஸோட அம்மா பதட்டமாகி ஒவ்வொரு ஃப்ரண்ட் வீட்டுக்கா ஃபோன் பன்னி கேக்குறாங்க. ஆனா யாருக்குமே எதுவும் தெரியல. கடைசில வேற வழியில்லாம போலீஸுக்கு போக, போலீஸ் கோதாவுல இறங்குறாய்ங்க. கொஞ்சம் மந்தமான இன்வெஸ்டிகேஷனயே மொதல்ல ஸ்டார்ட் பன்றானுங்க. ஒரு நாளாகுது ரெண்டு நாளாகுது.. பையனப் பத்தின எந்த க்ளூவும் கிடைக்காததால பையனோட அம்மா ரொம்ப Frustrated  ஆன Stage க்கு தள்ளப்படுறாங்க. அடிக்கடி அவங்க வீட்டுல power fluxuation ஆகி லைட்டெல்லாம் டிம்மாகி டிம்மாகி எரியிது. முதல்ல சாதாரணமா எடுத்துக்கிட்டவங்க போகப்போக அவங்க பையன் தான் லைட் மூலமா எதோ சிக்னல் குடுக்குறான்னு நம்புறாங்க.

அத மத்தவங்ககிட்ட சொல்ல, எல்லாரும் அந்தம்மா சொல்றத காதுகுடுத்து கூட கேக்க மாட்டேங்குறானுங்க. ஆனா அந்தம்மா காசு குடுத்து கடையில உள்ள அனைத்து சீரியல் பல்பையும் வீட்டுல வாங்கிட்டு வந்து வீட்டுக்குள்ள கட்டி வச்சிக்கிட்டு பையனோட சிக்னலுக்காக காத்திருக்குது.

அந்த சமயத்துல ஒரு டெலிஃபோன் வருது. எடுத்து அந்தம்மா காதுல வைக்க முதல்ல யாரோ ஒருத்தர் மூச்சு விடுற சவுண்ட் மட்டும் கேக்குது. அதத் தொடர்ந்து எதொ ஒரு வித்யாசமான சத்தம். உடனே அந்தம்மா போலீஸூக்கு ஃபோன் பன்னி என் ஃபோன்ல மூச்சு விட்டது என் பையந்தான்னு சொல்லுது. ஆனா அவனுங்க நம்பாம இந்தம்மாவ ஒரு லூசுமாதியே நினைச்சிட்டு இருக்கானுங்க.

முதல் காட்சில அந்த லேப்ல ஒருத்தர் செத்தாரே… அவனுங்க வேற லேப் லருந்து யாரோ ஒரு பொண்ணு எஸ்கேப் ஆயிட்டதா யாருக்கும் தெரியாதமாதிரி சீக்ரெட்டா தேடிக்கிட்டு இருக்கானுங்க. அந்த பொண்ணை கண்டு புடிக்கிறதுக்காக பாக்குறவனுங்களையெல்லாம் சுட்டு கொல்லவும் தயங்க மாட்டானுங்க. அவ்வளவு முக்கியம் அந்த பொண்ணு.

நண்பன் (Will Buyers) காணாம போன உடனே மத்த மூணு பசங்க நாமளே அவன தேடி கண்டுபுடிப்போம்னு அவய்ங்களுக்கு தெரிஞ்ச இடத்துலயெல்லாம் தேடுறானுங்க. ராத்திரி நேரத்துல காட்டுல அவன தேடிக்கிட்டு இருக்கும்போது “ஆஹா.. தேளத் தேடி வந்த இடத்துல தேனா..” ங்குற மாதிரி ஒரு பொண்ணு இவனுங்க கிட்ட வந்து சிக்குது
.  
அந்த பொண்ணுதான் நாம போன பதிவுல மொக்க போட காரணமா இருந்த Psychokinesis பொண்ணு. எந்தப் பொருளையும் தொடாம கண்பார்வையாலேயே அந்தப் புள்ளையால கண்ட்ரோல் பன்ன முடியும். அந்தப் பொண்ணுக்கு நம்ம X-Men மெக்னீடோவோட பவர் மட்டும் இல்லாம Charles Xavier ரோட பவரும் சேர்ந்து இருக்கு. அது என்னன்னு நீங்களே பாத்து தெரிஞ்சிக்குங்க. அந்தப் பொண்ணுக்கு ஒழுங்கா பேசக்கூட வரமாட்டேங்குது. பயந்து நடுங்குற அந்த பொண்ணை யாருக்கும் தெரியாம பத்தரமா வீட்டுல தங்க வச்சி பாத்துக்குறாங்க அந்த பசங்க.

ஒரு கட்டத்துல அந்த பொண்ணுக்கு Will Byers  பற்றிய information தெரியும்னு பசங்களுக்கு தெரிய வர, அந்த பொண்ணை வச்சே நண்பனை கண்டுபுடிக்க முயற்சி பன்றாங்க. இந்த நிலையில் போலீஸ் ஒரு சின்ன பையனோட பாடிய ரெகவர் பன்னி, அது Will byers ரோடதுன்னு identify பன்றாங்க. எல்லாரும் அது Will byers தான்னு ஒத்துக்கிட்டாலும் அவங்க அம்மா மட்டும் அது என்னோட பையன் இல்லைன்னு ஆணித்தனமா நம்புறாங்க. 

உண்மையிலயே அது யார்? Will byers உயிரோட இருக்கானா இல்லையா? இருக்கான்னா அவன யார் தூக்குனதுங்குறத செம இன்ட்ரஸ்டிங்கா கொஞ்சம் fantasy கலந்து சொல்லியிருக்கது தான் இந்த Stranger things. மொத்தமே 8 எபிசோட் தான். அதிகபட்சம் ரெண்டு படம் பாக்குற டைம் தான். 

Mystery, Thriller விரும்பிகளுக்கு இந்த சீரிஸ் கண்டிப்பா புடிக்கும். தவறாம பாருங்க. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...