Wednesday, November 23, 2016

அரசியல் வியாதிகள்!!!


Share/Bookmark
ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்தே நாட்டைப் பத்தி யாராவது பேசும்பொழுது, ”மாற்றம் வேணும்னா இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்”, ”நாடு முன்னேறனும்னா இளைஞர்கள் நாட்டை ஆள வேண்டும்”, ”படித்தவர்கள் வரவேண்டும்” இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இப்பவரைக்கும் சொல்லிக்கிட்டு இருக்காங்க. முன்னால அரசியல் பற்றிய ஆர்வம் வெகுசிலருக்கே இருந்ததாலும், அரசியல் பற்றிய தனிமனித நிலைபாடுகள் டீக்கடை பெஞ்சுகளோடு போய்விட்டதாலும் அதுமாதிரி சொல்லியிருக்கலாம். ஆனா இன்னிக்கு கிட்டத்தட்ட இளைஞர்கள் நேரடியாக அரசியலுக்கு உள்ள இறங்கலன்னாலும், சமூகவலைத்தளங்கள் மூலம் அவங்களுடைய அரசியல் பற்றிய நிலைபாடு என்னங்குறத தெளிவா சொல்லிக்கிட்டு தான் இருக்காங்க. இந்த நிலைபாடுகளைப்  பாக்கும்போது, ”இளைஞர்கள் வந்தா மாற்றம் வரும்” ங்குற நம்பிக்கை சுத்தமா போயிருச்சி.

பெரும்பாலும் இணையதளங்கள்ல அரசியல் பேசுறவியிங்க, 1925 லருந்து மொத்த இந்திய அரசியல் வரலாற்றையும் கரைச்சி குடிச்சா மாதிரிதான் பேசுவாய்ங்க. “காந்தி ஏன் நேருவ பிரதமரா போட்டாரு தெரியுமா?” “இந்திரா காந்திய ஏன் சுட்டாங்க தெரியுமா?” “பெரியார் இன்னா சொல்லிருக்காரு தெரியுமா?” “1975ல டில்லில என்ன நடந்துச்சின்னு தெரியுமா?” ன்னு ஒட்டுமொத்த இந்திய அரசியலும் அவிய்ங்க கைக்குள்ள இருக்க மாதிரிதான் நினைச்சிக்கிட்டு சுத்துறாய்ங்க. உண்மை என்னன்னு பாத்தா நாயி மொத்தமாவே ஒரு நாலு புத்தகத்த அங்கங்க மேஞ்சிட்டு வந்து இங்க பீலா விட்டுக்கிட்டு இருக்கும்.

ஒரு கட்சி எலெக்‌ஷன்ல ஜெயிச்சி ஆட்சியப் புடிச்சிட்டா, மற்ற கட்சிகளோட பார்வையில அடுத்த அஞ்சி வருஷத்துக்கு அவங்க செய்யிற அனைத்துமே தப்பாகத் தெரியிது. எதிர்கட்சியா இருந்தாலுமே நல்ல திட்டங்களைச் செயல்படுத்தும்போது பாராட்டவும், சரியில்லாத திட்டங்களை விமர்சிக்கவும் செய்யனும். ஆனா இங்க ஆளுங்கட்சி எதுசெஞ்சாலும் மற்றவர்கள் பார்வையில அது தவறு. சுருக்கமா சொல்லனுமா “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.. வார்டன்னா அடிப்போம்” கதைதான்.

எது நல்லது கெட்டதுங்குறதத் தாண்டி இது எங்களால நடந்துச்சா இல்லை உங்களால நடந்துச்சாங்குறதுலான் எல்லாரும் குறியா இருக்காய்ங்க. ஒவ்வொரு கட்சிக்கும் அவியிங்க பன்றத நியாயப்படுத்தவும் அடுத்தவன கிழிச்சி தொங்கவிடவும் சொந்தமா ஒரு டிவியும் ஒரு நியூஸ் பேப்பரும்.

எந்தக்கட்சியா இருந்தா என்ன? தப்புன்னா தப்புன்னு சொல்றதும், ரைட்டுன்னா ரைட்டுன்னு ஒத்துக்கிற மனப்பான்மையும் எப்ப வளருதோ அப்பதான் எதாவது முன்னேற்றத்துக்கான வழி தெரியும். இப்ப இருக்க எல்லா இணையதள அரசியல் பீரங்கிகளுமே, அதே சாக்கடையில் ஏற்கனவே இருக்கும் பன்றிகளுக்கு இடையில தங்களையும் நுழைச்சிக்கிட்டு அதே நாற்றத்தில் வாழ்ந்துகிட்டு அடுத்தவன் மேல அதே சாக்கடையை வாரி இறைக்கும் பணியைத்தான் செஞ்சிக்கிட்டு இருக்காய்ங்க. அவர்களால் எந்த வித பயனும் இருக்கப்போவதில்லை

இப்ப கடந்த ரெண்டு வாரங்களா ”வரிசையை பார்த்தீர்களா?” “சாமானியரை பார்த்தீர்களா?” ந்ன்னு தம் கட்டி demonetization ஐ எதிர்ப்பவர்கள்  யார் யாருன்னு அவனுங்க வரலாற கொஞ்சம் பாத்தா, மோடி என்பவரை, அவரது கட்சி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள். நானும் அப்படி எதிர்ப்பவர்கள், இந்த திட்டத்தில் எதேனும் நல்லது இருக்கிறது என கூறுவார்களா என ஒவ்வொரு முறையும்  பாத்துக்கிட்டே இருக்கிறேன். பாதமான விஷயங்கள் இருப்பவற்றை ஊதி ஊதி பெரியதாக்கிக் காட்டுக்கிறார்களே தவிற, திட்டத்தின் பலன்களை ஒப்புக்கொள்ள யாருக்கும் மனது வரவில்லை.

”எல்லையில் ராணுவ வீரர்கள்” ன்னு எவனோ ஒருத்தன் ஆரம்பிச்சி விட்டத கிண்டல் பன்றவனுங்க யாருன்னு பாத்தா “2002 ல குஜராத் கலவரத்துல என்ன நடந்துச்சி தெரியுமா?” ன்னு கேக்குற குரூப்பா இருக்கானுங்க. இங்க இருக்க ஒவ்வொரு அரசியல்வாதியோட  வரலாறயும் அதே மாதிரி பின்னோக்கிப் பாத்தா, இன்னிக்கு ஐயான்னும் எவனும் சொல்லமாட்டான், அம்மான்னும் எவனும் சொல்லமாட்டான். ஒவ்வொருத்தன் ஃப்ளாஷ்பேக்கும் அவ்வளவு நாத்தம்

இதுல எல்லா கட்சியும் ஒண்ணு சேந்து ஆளும்கட்சியோட முடிவ எதிர்த்து போராட்டம். “நல்ல திட்டம் தான்… ஆனா கொஞ்சம் கஷ்டம்”ன்னு முதல் நாள் பூசி மொழுகிய கட்சிகள் இப்ப முழு எதிர்ப்பு. ஈழத்தில் மக்கள் செத்துக்கிட்டு இருந்தப்ப, காங்கிரஸ கழுவி கழுவி ஊத்துனவியிங்க இன்னிக்கு பல்ல காட்டிக்கிட்டு சொம்பு தூக்கிட்டு இருக்காய்ங்க. இதுல இன்னொரு மெண்டலு நாட்டோட ப்ரச்சனை தீரனும்னா “ராகுல் காந்தி ப்ரதமர் ஆக வேண்டும்”ன்னு சொல்லுது. அந்தக் கொழந்தைக்கு என்னய்யா தெரியும்?

இவனுங்க சமாளிக்கிறதுக்காக வச்சிருந்த சாமானியர்கள் அத்தனை பேரும் கையில இருந்த பணத்த பேங்குல டெபாசிட் பன்னிட்டாங்க. இப்ப நீங்க சொன்ன சாமானியர்கள் வங்கிகளிலும், ATM களில் வரிசையில் நிற்பது, டெபாசிட் பன்னத எடுப்பதற்கு தானே தவிற கட்டுக்கட்டாக பழைய நோட்டுகளை வைத்துக்கொண்டு அல்ல. அப்படி இருக்க இப்ப இவய்ங்க யாருக்காக திட்டத்த திரும்ப பெற சொல்லி கேக்குறானுங்க?

தெலுங்குல Rana Daggubati நடிச்ச  ”Leader” ன்னு ஒரு படத்துலருந்து ஒரு காட்சி ஞாபகம் வருது. எதிர்பாராத சூழல்ல ராணா முதலமைச்சர் ஆயிருவாரு. மக்களுக்கு எதாவது நல்லது செய்யனும்னு Anti-Corruption Force ன்னு ஒரு டீம் உருவாக்கி எல்லா மக்களையும்,  MLA, MP ன்னு கூட  பாக்காம அவங்க கண்ட்ரோல்ல கொண்டு வந்து கருப்பு பணம் வச்சிருக்கவங்கள உடனடியா தண்டிக்கிறதுன்னு ஒரு திட்டத்த propose பன்னுவாரு. உடனே Assembly ல எல்லாரும் கத்த ஆரம்பிச்சிருவாங்க. “இது வேலைக்காது”ம்பான் ஒருத்தன். இதுல ஓட்டை இருக்கும்பான் இன்னொருத்தன். மொத்தத்துல இந்த திட்டம் வரவே கூடாதுன்னு கோரஸா சொல்லுவானுங்க. Assembly கொஞ்ச நேரம் ஒத்தி வச்சிருவாங்க.

வெளில வர்ற ராணா, கட்சியோட மூத்த தலைவர் ஒருத்தர்கிட்ட “என்ன சார்… கருப்பு பணம், லஞ்சத்த ஒழிக்கிறதுக்கு சட்டத்த கொஞ்சம் strict பன்ன விடமாட்டேங்குறாங்களே?” ம்பாரு

உடனே அந்த மூத்த தலைவர் “அதெல்லாம் பன்னக்கூடாதுப்பா.. அப்புறம் நம்ம எப்புடி அரசியல் பன்றது? நம்ம எப்படி ஊழல் பன்றது?” ன்னு கூலா சொல்லுவாரு
“ஏன் சார்…மக்கள் எப்பவுமே இப்படித்தான் இருப்பாங்களா? அவங்க திடீருனு ஒருநாள் திருந்தி இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்டா அவங்களுக்கு என்ன பதில் சொல்றது?”

அதுக்கு அந்த மூத்த தலைவர் “ தம்பி… கேள்வி கேக்குறதுக்கு நேரமெல்லாம் மக்கள் கிட்ட இல்லைப்பா… இப்ப கஷ்டப்பட்டு வேலை செஞ்சி சிக்கன் பிரியாணி சாப்புடுற ஒருத்தன்கிட்டருந்து சிக்கன நாம புடுங்கிட்டோம்னா அவன் அப்புறம் பருப்பு சாதம் சாப்புட பழகிக்குவான். அப்புறம் பருப்பையும் புடுங்கிட்டோம்னா வெறும் சாதத்த சாப்புட பழகிக்குவான். கொஞ்ச நாள்ல அந்த வெறும் சாதம் கூட அவனுக்கு கிடைக்காம செஞ்சிட்டோம்னா அவன் என்ன செய்யிறதுன்னு தெரியாம பதட்டத்துல சுத்திக்கிட்டு இருப்பான். அப்ப நாம “அரிசி இலவசம்”ன்னு ஒரு அறிவிப்ப விட்டோம்னா அப்ப நாம தான் அவனுக்கு கடவுள்.. நமக்கே ஓட்டு போட்டுருவாங்க.. இதான் நம்ம அரசியல் பன்ற முறை.. இப்டி செஞ்சாதான் அவன் நமக்கு ஓட்டு போடுவான் ”ன்னு சிரிச்சிக்கிட்டே பெருமையா சொல்லுவாரு.

அப்ப ராணா அந்த மூத்தவரு கைய புடிச்சி “நீங்க எப்ப சார் சாவீங்க? உங்களுக்கு ஒரு 85 வயசு இருக்கும். இந்த கையால நீங்க காந்திய தொட்டுருப்பீங்க.. உங்க கண்ணால நேருவ பாத்துருப்பீங்க.. இவ்வளவு தெளிவு, இவ்வளவு அனுபவம்லாம் எதுக்கு சார்? அதானல மக்களுக்கு நயா பைசா ப்ரயோஜனம் இருக்கா சார்? அப்டி இருக்கப்ப நீங்க இருந்தா என்ன செத்தா என்ன?” ம்பாறு.  அந்தாளுக்கு செருப்புல அடிச்சா மாதிரி இருக்கும். (ஆனா நிஜத்துல செருப்பால அடிச்சா கூட திருந்தாத ஜென்மங்கள் எத்தனையோ இருக்கு)

கொஞ்ச நேரம் ஃபீல் பன்னிட்டு ராணாவோட திட்டத்த எல்லாரயும் ஒத்துக்க வைக்க ஒரு சின்ன ஐடியா சொல்லி குடுப்பாரு. திரும்ப assembly கூடுன உடனே ராணா அதே திட்டத்த கொஞ்சம் மாத்தி சொல்லுவாப்ள. என்னன்னா அதே Anti Corruption Force செயல்பாடுகள்ல MLA, MP க்களுக்கு மட்டும் விலக்கு. அவங்க வீட்டுல வருமான வரி சோதனை செய்ய மாட்டாங்கன்னு மட்டும் சொல்லுவாரு. அவ்வளவு தான். மொத்த அசம்ப்ளியும் கைதட்டி திட்டத்த ஒத்துக்குவானுங்க.




இப்ப நம்மூர்ல நடக்குறதும் அதே கதைதான். அங்க கொடி புடிச்சிக்கிட்டு எதிர்ப்பு தெரிவிக்கிறவன் சாமானியர்களுக்காக நிக்கிறான், அவங்களுக்காகத்தான் எதிர்க்கிறான்னு நினைச்சோம்னா நம்மள விட முட்டாள் வேற யாரும் இருக்க முடியாது.

நம்ம அரசியல்வாதிகள் பிணத்தை வைத்து கூட அரசியல் செய்துகொண்டிருப்பவர்கள். ஊடங்கள் அதற்கும் மேல். விவசாயிகள் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மறுப்பதற்கில்லை. அவர்கள் உணமையில் எத்தனை விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாததால் மரணித்தார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஒரு சிறிய உதாரணம். எங்கள் ஊரில் நண்பர் ஒருவரின் தந்தை குடும்ப ப்ரச்சனைகளால் தற்கொலைக்கு முயன்று விஷம் அருந்தி அரசு மருத்துவமனையில் இறந்து விட்டார்.


மறுநாள் காலை செய்தித்தாளில் ”விவசாயி தற்கொலை” என வந்தது. உண்மையில் அவர் விவசாயியோ அல்லது விவசாயம் செய்யத்தெரிந்தவரோ அல்ல. ஆனால் விவசாயிகளின் தற்கொலைக் கணக்கில் இப்போது அதுவும் ஒன்று . அதே போலத்தான் தற்பொழுது கணக்கில் கொள்ளப்படும் மரணங்களின் எண்ணிக்கைகளும் இருக்கக்கூடும். வரிசையில் நிற்பது மட்டும் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்துமா என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 


(இந்தப் பதிவில் முதலில் வரும் சில பத்திகள் ஏற்கனவே நமது தளத்தில் ஒரு பதிவில் வெளியிடப்பட்டது)

Thursday, November 17, 2016

பணம் பிறந்த கதை - பகுதி 2


Share/Bookmark
முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும். 1700 கள் ல போன பதிவுல சொன்ன மாதிரி  இன்னொரு நகை வியாபாரியும், மக்களோட தங்கத்த வச்சிக்கிட்டு ரசீது கொடுத்து, வட்டிக்கும் கொடுக்கும் தொழில் பன்னிக்கிட்டு இருந்தாரு. அவர் வீட்டு கதவுல ஒரு ஷீல்டு மேல ரோமானியக் கழுகு உட்கார்ந்து இருப்பது மாதிரி வச்சிருப்பாராம். அதுக்க்கு ஜெர்மன்ல Rothschild ன்னு பேராம். அதனால அவர எல்லாரும் Rothschild ன்னு கூப்பிடுவாங்களாம். காலப்போக்குல அந்த நகைவியாபாரியோட பையன் தன்னோட பேரயே Rothschild ன்னு மாத்தி வச்சிக்கிட்டான். ஒரு கட்டத்துல மக்களுக்கு கடன் குடுக்குறத  விட அரசாங்கத்துக்கு கடன் குடுக்குறதுதான் நல்ல வருமானம்னு கண்டுபுடிச்சிருக்கானுங்க. ஏன்னா, மக்களுக்கு கொஞ்ச கொஞ்சமா குடுக்குறத விட ஒரு பெத்த அமவுண்ட்டா அரசாங்கத்துக்கு குடுத்துடலாம். மக்கள் வரிப்பணம் மூலமாத்தான் அத திருப்பி குடுப்பானுங்கங்குறாதால அந்தப் பணத்துக்கு செக்யூரிட்ட்யும் இருந்ததால அரசாங்கங்களுக்கு கடன் குடுக்குறதயே இந்த Rothschild விரும்புனானுங்க. 

அந்த Rothschild  க்கு மொத்தம் அஞ்சு பசங்க. அஞ்சு பேரயும் art of finance ல நல்லா ட்ரெயின் பன்னி அஞ்சு வெவ்வேற பகுதிகளுக்கு அனுப்பி வச்சான். அவனுங்க மூலமாத்தான் உலகத்தோட பெரும்பான்மையான பகுதிகளோட பேங்கிங்க அவனுங்க கண்ட்ரோல்ல கொண்டு வந்தானுங்க. பல டகால்ட்டி வேலைகளும் பாத்துதான் இவனுங்க உலக மார்க்கெட்ட புடிச்சிருக்கானுங்க. என்ன பன்னான்னு பாக்குறதுக்கு முன்னால…

அதே காலகட்டத்துலதான் Bank of England உருவானத பாத்தோம். தொடர்ந்து நாலு போர்களால, இங்கிலாந்து அவனுங்க கிட்ட சுமார் 14 கோடி பவுண்ட் கடன் வாங்கியிருந்தானுங்க. அந்த காலத்துல இது மிகப் பெரிய தொகை. அதனால அந்தக் கடன கட்டுறதுக்கு இங்கிலாந்தோட அமெரிக்க காலனிகள்லருந்து வரி வசூல பன்னலாம்னு ஒரு ஐடியா பன்னிருந்துருக்கானுங்க.

இப்ப அந்த அமெரிக்க காலனிகள்ல காசு (coin) அடிக்கிறதுக்கு போதுமான தங்கமோ வெள்ளியோ இல்லாததால, Colonial Script எனப்படுகிற பேப்பர் பணத்த அச்சடிக்க ஆரம்பிச்சாங்க. இந்த பேப்பர் பணம் நாம போன பதிவுல சொன்ன மாதிரி எந்த தங்கத்தோட மதிப்பையோ, வெள்ளியோட மதிப்பையோ சார்ந்து இல்லாம அவங்களே அச்சடிச்சிக்கிற மாதிரி இருந்துச்சி. மார்க்கெட்டுல அந்த பணம் நல்ல ரீச்சும் ஆச்சு. 

ஒரு தடவ Bank of England ப்ரதிநிதி, அமெரிக்க போனப்போ, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்கிட்ட இது எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னு கேட்டதுக்கு, அவர் “இந்தப் பணத்த சந்தை பரிவர்த்தனைகளைப் பொறுத்து அச்சடிச்சி வெளியிடுறோம். இந்தப் பணத்தை பெறுபவர்கள் அதற்காக வட்டின்னு எதுவும் செலுத்த தேவையில்லை. அதுமட்டும் இல்லாம ஒவ்வொரு பேப்பர் பணத்தோட மதிப்பையும், அதாவது அதோட purchase value ah நாங்களே நிர்ணயிச்சி அத எங்களோட கட்டுக்குள் வச்சிருக்கோம். அதனாலதான் இது சாத்தியப்படுகிறது” என பதிலளித்திருக்கிறார்.

இந்த Colonial script  பாத்த பேங்க்காரய்ங்க, சந்தோஷமா இருக்க புருஷன் பொண்டாட்டிய பாத்து செந்தில் “சந்தோசமா இருக்கியா… இனிமே இருக்கக்கூடாதே” ன்னு பிரிச்சி விடுற மாதிரி ஊருக்கு போய் நல்லா சோலி பாத்து விட்டுட்டாய்ங்க. என்னன்னா  ஆளாளுக்கு சொந்தமால்லாம் இனிமே பணம் அடிச்சிக்கல்லாம் கூடாது. இனிமே இங்கிலாந்துக்கு குடுக்க வேண்டிய வரி அனைத்தையும் தங்கமாவோ வெள்ளியாவோ மட்டும்தான் குடுக்கனும்னு சட்டம் போட்டுட்டானுங்க.

அமெரிக்க காலனிகள்ல புலக்கத்தில் இருந்த அந்த பணம், செல்லாம பொய்ட்டதால பல ப்ரச்சனைகளுக்கு ஆளானாங்க. தங்கம் இல்லைன்னுதான் இப்டி காசு அடிச்சாய்ங்க. இப்ப தங்கமாதான் குடுக்கனும்னா எங்க போவானுங்க. இந்த சட்டத்தால ஒருவருஷ காலத்தில் எல்லாமே மாறி ஊருக்குள்ள வேலையில்லா திண்டாட்டம் அதிகமாயிட்டதா ஃப்ராங்க்ளின் அவரோட Auto Biography ல தெரிவிச்சிருக்காராம்.



இப்படியே மாறி மாறி மாறி ஒவ்வொன்னா  நடக்க , இந்த Rothschild குரூப்பு ஒரு பக்கம் பேங்கிங்ல பெரிய லெவல்ல டெவலப் ஆகிட்டு வந்தானுங்க. முன்னாலயே சொன்ன மாதிரி ஒரு நாட்டுக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருந்தானுங்க. அதுமட்டும் இல்லாம சண்டைகள் (War ) நடக்கும் போது போரிடும் ரெண்டு நாடுகளுமே கடன் வாங்கிதான் செலவு பன்னும்.  பெரிய காமெடி என்னன்னா ரெண்டு பேருமே ஒரே ஆளுகிட்டருந்து தான் கடன் வாங்குவானுங்க. அதுல ஒரு டீலிங் என்னன்னா, போர்ல தோக்குற நாடு வாங்குன கடன, போர்ல ஜெயிக்கிற நாடுதான் குடுக்கனும்னு ஒரு கண்டிஷன். அதனால எப்டிப்பாத்தாலும் பணம் குடுக்குறவன் சேஃப் தான். 

இதனால பாதிக்கப்பட்ட ஒரு ஆள்ல நெப்போலியனும் ஒருத்தர். அட நம்ம “மாடசாமி” நெப்போலியன் இல்லப்பா. மாவீரன் நெப்போலியன். மொதல்ல நெப்போலியனும் இந்த மாதிரியான பேங்க்குகள்ல கடன் வாங்குறது நல்லதில்லைன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தாப்ள. அதாவது ”ஒரு நாடு ஒருவரிடம் கடன் வாங்கும்போது , கொடுப்பவர் சூப்பர் பவராகவும், வாங்குபவர் அவருக்கு பணிந்து நடப்பவராகவும் மாற நேரிடும். இது ஒரு நாட்டுக்கு உகந்ததல்ல” ன்னு பில்ட் அப்பெல்லாம் குடுத்துக்கிட்டு, பேங்குல கடன் வாங்குறத அசிங்கமா நினைச்சி தன்கிட்ட இருந்த ஒரு மிகப்பெரிய நிலப்பரப்ப (Mississippi) அமெரிக்கக்காரம் ஒருத்தன்கிட்ட 3 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்துக்கு வித்துட்டு அதுல வந்த காச வச்சி, மிகப்பெரிய படைய திரட்டி பல நிலப்பரப்புக்க்களை புடிச்சான்.

இப்படி கெத்தா போயிட்டு இருந்த நெப்போலியன வெல்லிங்க்டன்ல நடந்த ஒரு போர்ல ஊமை குத்தா குத்தி அனுப்பி விட்டாய்ங்க. உசுறு பொழைச்சா போதும்னு தப்பிச்சி போயி ஒரு தீவுல பதுங்கியிருந்தான். மொதல்ல யார்கிட்டயும் கடன் வாங்க மாட்டேன்னு வீராப்பா திரிஞ்சவன் “அய்யா… கப்பல்ல வேலைன்னு ஒரு பன்னி சொன்னத நம்பி உங்கள தப்பா பேசிட்டேன்யா.. கப்பல்ல வேலை இல்லைன்னு தெரிஞ்சப்புறம் அந்த நாயி திரும்ப உங்ககிட்டயே வந்துருச்சிங்கய்யா” ன்னு கவுண்டர் சொன்ன மாதிரி யூரோப்புல ஒரு பேங்குல லம்ப்பா ஒரு அமவுண்ட்ட கடனா வாங்கி ஒரு 74000 வீரர்கள திரட்டி திரும்ப திரும்ப பாரிஸ்ல அட்டாக் பன்ன ப்ளான் பன்னிருக்கான். அவனுக்கு எதிரா அதே பலத்தோட சுமார் 67000 ப்ரிட்டீஷ் படை வீரர்களும், சொச்ச ஐரோப்பிய படைகளும் சண்டையிட தயாரா இருந்தாங்க.

இங்கதான் Rothschild நிக்கிறான். அந்த சமயத்துலயே இங்கிலாந்துல இருந்த பெரும்பாலான கம்பெனிகள் ஷேர் மார்கெட் முறை இருந்துச்சி. அதாவது கம்பெனியோட பங்குகள்ல அதிக பங்குகள் வச்சிருக்கவர் முதலாளியாக இருப்பார். மத்த எல்லாம் பங்குதாரராக இருப்பாங்க.

இப்ப நெப்போலியனுக்கும் வெல்லிங்டன் படைகளுக்கும் இடையே போர் நடக்குல இடத்துக்கு பக்கத்துல நம்ம Rothschild ஒரு Spy  ah வச்சிருந்தான். அதாங்க ஒட்டுக்கேட்டு வந்து போட்டுக்குடுக்குறவன். போன தடவ ஊமை குத்தா வாங்கிட்டுப் போன நெப்போலியன் இந்த தடவ இன்னும் நல்லா வகையா வந்து மாட்டுன உடனே மூத்தர சந்துக்குள்ள வச்சி கும்முற மாதிரி கும்மி எடுத்துட்டாய்ங்க.

இந்த Spy என்ன பன்னான்னா நெப்போலியன் தோத்துப் போறது லைட்டா தெரிஞ்ச உடனேயே வேக வேகமா வந்து இங்கிலாந்துல இருந்த நம்ம Rothschild கிட்ட சொல்லிட்டான். அதாவது official news இங்கிலாந்துக்கு ரீச் ஆகுறதுக்கு முன்னாலயே. இந்த இடந்தான் த்ரிலிங்கான இடம். மனச திடப்படுத்திக்குங்க… பயந்துடாதீங்க. என்ன புலி குட்டி போட்டுருச்சா?” இல்லை இல்லை.

மேட்டர் தெரிஞ்ச உடனே நம்ம Rothschild என்ன பன்னான், மூஞ்ச சோகமா வச்சிக்கிட்டு, தலைய தொங்க போட்டுக்கிட்டு ப்ரிட்டீஷ் அரசாங்கத்தோட Bonds ah எல்லாம் மொத்த மொத்தமா விக்க ஆரம்பிச்சான். இதப் பாத்தவனுங்களுக்கு அய்யய்யோ போர்ல இங்கிலாந்து படைகள் தோத்துருச்சி போலருக்குன்னு ஷேர் வச்சிருந்த எல்லாருமே மிகக் குறைவான விலையில எல்லா ஷேரயும்  விக்க ஆரம்பிச்சிட்டானுங்க.. ஏன்னா நெப்போலியன் ஜெயிச்சிட்டான்னா இப்ப இருக்க financial சிஸ்டத்தயே காலி பன்னாலும் பன்னிடுவான்னு கெடைச்ச வரைக்கும் லாபம்னு கையில இருந்த எல்லா ஷேரயும் விக்க ஆரம்பிச்சிட்டானுங்க.

அப்ப காட்டுனான் நம்மாளு பர்ஃபார்மன்ஸ…. அழுகுற மூஞ்ச கொஞ்சம் கொஞ்சமா சிரிச்ச மூஞ்சாக்கி வேதாளம் அஜித் மாதிரி பல்ல காட்டிக்கிட்டே, அவனுங்க வித்த எல்லா ஷேரயும் இவன் ஒருத்தனே பல மடங்கு கம்மியான விலையில வாங்குனான். மறுநாள்தான் எல்லாருக்கும் தெரிஞ்சிது போர்ல ஜெயிச்சது நெப்போலியன் இல்லை இங்கிலாந்து படைகள்தான்னு. இப்ப இங்கிலாந்துல இருந்த அனைத்து ஷேர்களும் நம்மாளூ கையில. அல்டிமேட்டா மொத்த இங்கிலாந்துமே அவன் கையில வந்த மாதிரி.

நெப்போலியன் வாழ்நாள் முழுசும் பிடிச்ச ஏரியாவ விட, இந்த Rothschild சில மணி நேரங்கள்ல பிடிச்ச பகுதிகள் அதிகம்னு சொல்றாங்க. எல்லாம் வெசம் வெசம் வெசம் வெசம். அப்பலருந்து இப்ப வரைக்கும் உலகத்தோட முக்கால்வாசி பேங்கிங் மற்றும் பண பரிவர்த்தனைகள் இந்த Rothschild குருப்போட கண்ட்ரோல்லதான் இருக்கு.

தனக்கு லாபம் வரனும்ங்குறதுக்காகவும், தன்னோட கண்ட்ரோல்ல இருக்கனும்ங்குறதுக்காகவும் எந்த அளவு வேணாலும் இறங்கக் கூடியவனுங்க. அதுக்கு சிறந்த உதாரணம் சென்ற வருடம் காணாமல் போன மலேசிய விமானம். அதற்கும் இந்த குருப்புக்கும் மிகப்பெரிய சம்பந்தம் இருப்பதாக சில கருத்துக்கள் உலவுது. அது நம்பும்படியும் இருக்கு. அதைப் பற்றி மற்றுமொரு பதிவில் பார்ப்போம்.






நன்றி : தோழர் பாலவிக்னேஷ்


Tuesday, November 15, 2016

அம்பானி வரிசையில் நின்னாதான் கருப்பு பணம் ஒழியுமா?!!!


Share/Bookmark
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒருவாரம் ஆன நிலையில், வங்கிகளில் இன்னும் கூட்டம் குறைந்தபாடில்லை. மக்கள் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றர். ஒரு சில உயிரிழப்புகள். பழைய நிலமை திரும்ப இன்னும் ஒரிரு வாரங்கள் ஆகும் என்கிறனர். வெறும் 6% கறுப்பு பணத்தை ஒழிக்க அனைத்து மக்களையும் அவதிப்படுத்துவதா? என ஆளாளுக்கு அரசைத் சரமாரியாகத் தாக்கி வருகிறார்கள். கள்ளப்பண ஒழிப்பு மற்றும் கருப்புப் பண ஒழிப்பு ஆகியவை இந்தத் திட்டத்தோட நோக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது.

வெறும் 400 கோடி கள்ளப்  பணத்தை ஒழிக்க, 17 லட்சம் கோடி பணத்தை முடக்குவதான்னு ப.சிதம்பரம் கொதிச்சிருக்காரு.  வங்கிகள்ல இதுவரைக்கும் சுமார் 56000 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கு. இந்த 56000 கோடியுமே நேர்மையான வழியில சம்பாதிச்சி, சரியா வரி கட்டிக்கிட்டு இருக்கவங்களோட பணம்னு வச்சிக்குவோம்.

இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிற பலருடைய குமுறல் என்னன்னா, பேங்குல அம்பானியோ அதானியோ நிக்கல. ஏழை மக்கள்தான் நிக்கிறாங்க. பின்ன எப்படி இதால கருப்புப் பணம் ஒழியும்னு சொல்றீங்கன்னு தான். அவர்களுக்கும் சரி அவர்களைப் போல சந்தேகம் இருக்கும் பலருக்கும் சரி என்னுடைய புரிதலில் ஒரு சின்ன விளக்கம்.

உண்மை என்னன்னா கருப்பு பணம் வச்சிருக்கவங்க  பேங்குல வந்து நின்னு, அவங்க கையில இருக்க பணத்த வரி கட்டி பேங்குல டெபாசிட் பன்னாதான் கருப்புப் பணம் ஒழியும்னு இல்லை. அவங்க பேசாம இருந்தாலே போதும் அரசாங்கத்துக்கு எல்லாம் லாபம் தான். இந்தப் பதிவில் சொல்லப்போகும் சில அடிப்படை விவரங்கள் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாத சிலருக்காக.

ஒரு அரசாங்கம் அதுக்கு வேணும்ங்குற அளவு பணத்தை அச்சடிக்க முடியாதுன்னு எல்லாருக்குமே தெரியும். ஏன் அப்படி? வேணும்ங்குற பணத்த அடிச்சி கடனெல்லாம் குடுத்துடலாமே? ஏழைகளுக்கு குடுத்து பணக்காரனாக்கிடலாமே? அதான் முடியாது. ஒரு சின்ன உதாரணம்.

ஒருத்தர்கிட்ட 100 தங்கக் காசு இருக்குன்னு வச்சிக்குவோம். அவருக்கு 5 குழந்தைங்க. அந்த 5 பேருக்கும் இருபது இருபது தங்கக்காசா பிரிச்சி  குடுக்குறாரு. தங்கக் காச கையில குடுக்குறதுக்கு பதிலா 5 ரசீது அடிச்சி அதுல 20 ன்னு ப்ரிண்ட் பன்னி குடுக்குறாரு. அதாவது ஒரு ரசீதோட மதிப்பு 20 தங்கக் காசு. இப்ப 5 குழந்தைகள்கிட்டயும் உள்ள மொத்த தங்கக் காசோட மதிப்பு 100. கொஞ்ச நாள்ல அந்த 5 பேரும் கல்யாணம் பன்னிக்கிரானுங்க.  இப்ப 5 பேரா இருந்த குடும்பம் 10 பேர் ஆயிருச்சி. புதுசா வந்த 5 பேருக்கும் செலவுக்கு காசு வேணும்.

இப்ப புதுசா வந்தவங்க செலவுக்காக அதே மாதிரி இன்னொரு 5 ரசீத அடிச்சி குடுத்திட முடியாது. ஏன்னா நம்மாளுக்கிட்ட இருக்கதே 100 தங்கக் காசுதான். ஏற்கனவே அந்த நூறுக்கான ரசீத அச்சடிச்சிட்டோம். இப்ப புதுசா வந்த 5 பேருக்கும் காசு குடுக்கனும்னா இன்னொரு 5 ரசீத அடிச்சி குடுக்கலாம். ஆனா முன்னால 20 தங்கக்காசா இருந்த ஒரு ரசீதோட மதிப்பு இப்போ வெறும் 10 தங்கக் காசாத்தான் இருக்கும். ஆக அவர்கிட்ட இருக்க தங்கக் காசுக்கு ஏத்த மாதிரியான ரசீதத் தான் அடிக்க முடியுமே தவிற, அவர் அடிக்கிற ரசீதுக்கு ஏத்த மாதிரி தங்கக் காசு அதிகமாயிடாது.

அதே மாதிரிதான் ஒரு நாட்டோட மதிப்பை பொறுத்துதான் அந்த நாட்டுக்கு எவ்வளவு ரூவா நோட்டு அடிக்கலாம்ங்குற வரைமுறை. ஒரு நாட்டோட மதிப்புங்கறது அந்த நாட்டுல உள்ள தங்கம் அல்லது பெட்ரோல் போன்ற வளங்களைப் பொறுத்து அமையும். இத யார் decide பன்றது, நோட்டு அடிக்க யார்கிட்ட பர்மிஷன் வாங்கனும்ங்குறதெல்லாம் வேற கதை. பேசிக் மேட்டர் இது தான்.

இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம். மொதல்ல கருப்பு பணத்தால என்ன பாதிப்பு? ஒரு நாட்டுல பணப் புழக்கம்ங்குறது ரொம்ப முக்கியம். விலைவாசி ஏற்றம் வரி ஏற்றம் போன்ற பல காரணிகளைப் பாதிப்பது இந்தப் பணப் புலக்கம் தான்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு இருக்கு. அதன்படி தான் வியாபாரம் செய்யனும். அப்படி வியாபாரம் செஞ்ச பொருளுக்கு வரி கட்டனும். இதுதான் சட்டம். உதாரணமா அரசாங்கம் ஒரு பத்து ”ஒரு ரூபா” நாணயங்களை அடிச்சி புழக்கத்துல விடுதுன்னு வச்சிக்குவோம். எல்லாரும் வியாபாரம் பன்றாங்க ஒவ்வொருத்தர்கிட்டயா அந்த ஒரு ரூபா சுத்திக்கிட்டு இருக்கு. இப்ப இந்த பத்து பேர்ல ஒருத்தன் எதோ ஒரு பொருளுக்கு விலை ஏத்தி வித்து, ஒரு ரூபா வரவேண்டிய இடத்துல அவனுக்கு ரெண்டு ரூபா கிடைச்சிருது. இப்ப எக்ஸ்ட்ராவா வந்த ஒரு ரூபாய்க்கு அவன் வரி கட்டனும் அல்லது எப்படி அந்த ஒரு ரூபா வந்துச்சின்னு சொல்லனும். வரி கட்டி அந்த ஒரு ரூபாயில கால்வாசிய இழக்க விரும்பல.  அதனால என்ன பன்றான் எக்ஸ்ட்ராவா வந்த ஒரு ரூபாய முழுசா எடுத்து பத்தரமா பீரோவுல வச்சிடுறான்.

இப்ப என்னாகுது மார்க்கெட்டுல 10 ரூபா சுத்திக்கிட்டு இருந்த இடத்துல இப்ப 9 ரூபாதான் சுத்துது. இதே மாதிரி இன்னும் ரெண்டு பேர் ஒவ்வொரு ரூபா பதுக்குறான்னு வச்சிக்குவோம். 10 ரூபா புழங்க வேண்டிய இடத்துல வெறும் 7 ரூபாதான் புழங்கும். 3 ரூபா யாருக்கும் பயன்படாம பீரோக்குள்ள தூங்கும். அந்த மூணு ரூபாய எந்தக் காலத்துக்கும் லீகலான விஷயத்துக்கு அவன் பயன்படுத்த மாட்டான். அவன்கிட்டருந்து இன்னொருத்தனுக்கு போகும் போது, அவன்கிட்டயும் அது கணக்குல வராத பணமாதான் இருக்கும். அப்படி கணக்குல வர்ற சமயத்துல அது கருப்பு பணமா இருக்காது.

இப்ப என்னாகுது அரசாங்கத்தோட மதிப்பு 10 ரூபா. ஆனா மார்க்கெட்டுல புழக்கத்துல இருக்கது வெறும் 7 ரூபா. 3 ரூபா எங்க போச்சுன்னே தெரியல. அதுக்கான வரியும் வரல. வர வேண்டிய வரி வரததால அரசாங்கத்துக்கு நிதி பத்தாம வரி விகிதங்கள அதிகப்படுத்தினாதான் நிலமைய சமாளிக்க முடியும்ங்குற நிலை வருது. பொருட்களோட விலைவாசியும் ஏறுது.

சரி இப்ப இந்த  500/1000 ரூபா நோட்டுகள் செல்லாதுன்னு அறிவிச்சதால கருப்பு பணம் எப்படி அரசாங்கத்துக்கு முழுமையா சேரும்? உதாரணமா நம்ம நாட்டுல புலங்குற 500 மற்றும் 1000 ரூபாயோட மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடி வச்சிக்குவோம். அதுல ஒரு பத்தாயிரம் கோடி கருப்புப் பணமா பதுக்கப்பட்டிருக்குன்னு வச்சிக்குவோம்.

இப்போ அரசாங்கம் பழைய  ஒரு லட்சம் கோடி ரூபாயையும் செல்லாதுன்னு அறிவிச்சாசிட்டு அதே ஒரு லட்சம் கோடிக்கு புதிய 2000 மற்றும் 500 ரூபா நோட்டுக்கள் அடிக்கிறாங்க. மேல சொன்னபடி நம்ம மார்க்கெட்டுல பழைய ஒருலட்சம் கோடில 90,000 கோடிதான் புழக்கத்துல இருக்கு. அதயெல்லாம் நேரடியா பேங்குல குடுத்து புது நோட்டா வாங்கிருவாங்க. இப்ப பதுக்கப்பட்ட கருப்புப் பணம் பத்தாயிரம் கோடிய என்ன செய்யனும்? ஒண்ணு பதுக்கியிருக்கவங்க அத வங்கியில குடுத்து அதற்காக வரியை அரசாங்கத்துக்கு  செலுத்திட்டு, வெள்ளையாக்கலாம். அப்படி செஞ்சா ஒருலட்சம் கோடியும் மறுபடி மார்க்கெட்டுல புலக்கத்துக்கு வந்துடும்.

அப்படி இல்லாம அந்த பத்தாயிரம் கோடிய வெளில கொண்டு வந்து ஏன் மாட்டிக்கனும். நாம இருக்க இடம் தெரியாம இருந்துடுவோம்னு நினைச்சா கூ ஒண்ணும் ப்ரச்சனை இல்லை. அரசாங்கத்தால அச்சடிக்கப்பட்ட ஒரு லட்சம் கோடியில, 90 ஆயிரம் கோடி பணம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு மிச்சம் இருக்க பத்தாயிரம் கோடி அரசாங்கத்திடமே இருக்கும். நேரடியாக அரசாங்க நிதியில அது சேர்ந்துடும். அம்பானியோ அதானியோ வரிசையில வந்து நிக்க வச்சிதான் கருப்பு பணத்த வெளில கொண்டு வரனும்னு இல்லை. அவனுங்க வந்தாலும் சரி வராட்டியும் சரி. அரசாங்கத்துக்கு லாபம் தான்.


அப்படி  அரசுக்கு கிடைக்கும் கருப்பு பணங்களை முறையா பயன்படுத்துதா, இல்ல அடுத்தவன் ஆட்டைய போடுறானாங்குறது அடுத்த விஷயம். ஆனா இப்ப கொண்டு வந்த இந்தத் திட்டம் சிலர் கிளப்புவதைப் போல பயனற்ற திட்டமாக வாய்ப்புகளே இல்லை. மக்களுக்கு சில நாட்களுக்கு இடையூறே தவிற, திட்டத்திற்கான பலன் நிச்சயம் உண்டு. 


Friday, November 11, 2016

வாங்க ஏழைகளா!!!


Share/Bookmark
திடீரென்று சமூக வலைத்தளங்கள் முழுக்க ஒரே ஏழைப்பங்காளர்களாக இருக்கிறார்கள். அய்யயோ ஏழை சாப்பாட்டுக்கு எங்க போவான்? அய்யய்யோ அவன் குடும்பம் நடுத்தெருவுல நிக்கப்போதே.. அவனோட சேமிப்பெல்லாம் போகப்போகுதேன்னு இவனுங்க.. கண்ணீர்… கண்ணீர்… போடு… என்கய்யா வச்சிருந்தீங்க இவ்வளவு ஸ்டாக்க… இப்ப இவங்க கவலையெல்லாம் ஏழைகள் வச்சிருக்க மொத்த பணத்தையும் அரசாங்கம் புடுங்கிக்கிட்டு அவங்கள நடுத்தெருவுல விட்டுருச்சின்னு தான். சரி யாரு கதறுறான்னு பாத்தா வெளிநாட்டுல செட்டில் ஆகி ரெண்டு வருசத்துக்கு ஒருதடவயோ மூணு வருஷத்துக்கு ஒருதடவையோ இங்க வந்து எட்டிப்பாத்துட்டு திரும்ப அங்க ஓடிப்போயிடுறவனுங்களா இருக்குது. 

இவரகளோட கணிப்புப் படி ஏழைகள் என்பவர்கள் வருடம் சுமார் ரெண்டு லட்சம் சம்பாதிப்பவர்கள். அந்த சம்பத்தியத்தையே கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து ஒரு ஐந்து, பத்து வருடத்தில் சில லட்சங்களை சேமிப்பாக வைத்திருப்பவர்கள் அதுவும் அந்த சேமிப்பை வீட்டில் இருக்கும் ட்ரங்க் பொட்டியிலோ இல்லை பாட்டியோட சுருக்கு பையிலோ வெறும் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக மட்டுமே வைத்திருப்பவர்கள். அரசாங்கம் ஐநூறு ஆயிரம் செல்லாதுன்னு அறிவிச்ச உடனேயே அந்த சில லட்சங்களைக் கொண்டு பேங்கிற்கு போகும்போது அரசாங்கம் வரி என்ற பெயரில் அந்தக் காசுல முக்கால்வாசியப் புடுங்கிக்கிட்டு அனுப்ப போகுது. 

இவர்களோட புலம்பல்லருந்து ஒரு விஷயம் மட்டும் நல்லா தெரியிது. இவர்கள் ஏழைகளாக மட்டும் இல்லை நடுத்தர குடும்பமாகக் கூட இருந்து பார்த்ததில்லை. வழக்கமா குடிகாரர்களைப் பாத்து எல்லாரும் சொல்ற ஒரு விஷயம் “இத்தனை வருஷமா நீ குடிக்கிறத சேமிச்சி வச்சிருந்தியன்னா இந்நேரம் ஒரு வீடே வாங்கிருக்கலாம்” . சரி சார்தான் குடிக்கலையே சேத்து வச்சிருக்க காசெல்லாம் எங்கன்னு கேட்டா கேள்வி கேட்டவன் தெறிச்சி ஓடிருவான். ஏன்னா வெறும் வாயில வடை சுடுற கதைதான் அது. உதாரணத்துக்கு சொல்ல நல்லா இருக்கும். ஆனா நடைமுறையில் நிச்சயமாக அது நடக்காது. 

ஒரு ஏழை அல்லது நடுத்தரக் குடும்பத்தோட சேமிப்புங்குறது பெரும்பாலும் வாரச்சீட்டு, மாதச்சீட்டுகளாகவும், சிறு சிறு வட்டிக்கடன்களாக மட்டுமே இருக்குமே தவிற ஒவ்வொரு மாதமும் ரூபாய் நோட்டுகளை வீட்டில் இருக்கும் பீரோவில் அடுக்கி வைத்து சேமிக்க மாட்டார்கள். அதிலும் பெரும்பாலானவை  முன்னரே வார வட்டி, மாதவட்டிக்காரர்களிடம் பணத்தை முன்னரே வாங்கி, அதை சிறுக சிறுக கட்டுவதிலேயே அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

அப்படியே அவங்க சேமிப்ப வட்டிக்கு நாலுபேர்கிட்ட குடுத்து வச்சிருந்தா கூட அத்தனை பேரும், அரசாங்க அறிவிப்ப கேட்ட உடனே கொண்டு வந்து”இந்தாப்பா உன் பணம்னு இவங்கிட்ட குடுத்துட போறாய்ங்களா? அவன் அவன் கஷ்டத்துக்கு தான் பணம் வாங்கிருப்பானுங்க.இல்லை சிறு தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் சிலப்பல லட்சங்களை தொழில்ல போடுறதுக்காக வச்சிருப்பாங்க. அதெல்லாம் வீணா போயிரும். சரி சிலப்பல லட்சங்கள கையில வச்சி ரொட்டேட் பன்ற சிறுதொழில் வியாபாரி வரி கட்டனும்ல. அவன் வருமானமா காட்டியிருக்குற அமவுண்டுக்கு அதிகமா போனாதானே வரி கட்ட சொல்றானுங்க. அப்ப ஒழுங்கா கணக்கு காமிக்காதவனுக்கு தானே பயம் வரனும்?

இப்ப அரசாங்கம் என்ன சொல்லிருக்கு? கையில் இருக்குற பணத்தை பேங்குல டெபாசிட் பன்னிட்டு எடுத்துக்குங்க.  இப்ப இதுல ப்ரச்சனை ரெண்டு நாளுக்கு செலவுக்கு காசு இருக்காது. இருக்குற ஒண்ணு ரெண்டு ஐநூறு ஆயிரங்களை வச்சி ஒண்ணும் பன்ன முடியாது. இந்த ரெண்டு நாள் கஷ்டத்த மட்டும் தாங்கிக்கனும். வரிசையில் நிக்கனும். ஏழைகளுக்கோ,  நடுத்தர மக்களுக்கோ வரிசையில் காத்திருப்பதுங்கறது அவர்களோட அன்றாட வாழ்க்கையோட ஒரு பகுதியாவே ஆயிருச்சி. இலவச மிக்ஸி , கிரைண்டர்கள் வாங்க காலையிலருந்து காத்திருந்து வந்தவன் போறவன் ஆத்து ஆத்துன்னு ஆத்துறதயெல்லாம் கேட்டுட்டு, இதய தெய்வம் அம்மா, அய்யான்னு கோஷம்போட்டுட்டு வாங்கிட்டு வர சாயங்கலாம் ஆகும்.

சில வருடங்கள் முன்னால பாஸ்போர்ட் எடுக்குறது எவ்வளவு கஷ்டம்னு நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். காசிருக்கவன் எதாவது ஒரு ட்ராவல் ஏஜென்சில 1500 ரூவாய குடுத்துட்டு ரெண்டு கையெழுத்தையும் ஃபோட்டோவயும் போட்டுட்டு வீட்டுலயே உக்கார்ந்திருந்தா ஒரு மாசத்துல பாஸ்போட்ர்ட் வந்துரும். ஆனா அந்த 1500ah மிச்சப்படுத்த விடிய காலத்துலருந்து பாஸ்போர்ட் ஆஃபீஸ் முன்னால உக்காந்து சாயங்காலம் வரைக்கும் வரிசையில நின்னு பாஸ்போர்ட் எடுத்த காலங்களும் உண்டு. வரிசையில் நின்றவர்கள் நிற்பவர்கள் அதற்கு வருத்தப்படல. லாப்டாப்லருந்தே எல்லாத்தையும் பன்னிட்டு இருக்கவனுங்கதான் இப்ப என்ன பன்றதுன்ன் தெரியாம கத்திட்டு இருக்கானுங்க.

நம்மாளுங்க கிட்ட இருக்க கெட்ட பழக்கம் என்னன்னா ஒரு விஷயத்த செய்யலன்னா ஏன் செய்யலம்பானுங்க. செஞ்சிட்டா அத செய்யாம இத ஏன் செஞ்சம்பானுங்க. சினிமாவுல பாக்கும்போது நல்லாருந்துச்சி. இது நிஜத்துல நடந்தா நல்லாருக்குமேன்னும் தோணுச்சி. ஆனா நிஜத்துல நடந்தா, அத ஒத்துக்கமாட்டோம். அவிய்ங்கள சொல்லி குத்தமில்லை. நம்ம ஊரு அரசியல்வாதிகள் பன்ற அரசியல் எல்லாரையும் இப்டி மாத்திருச்சி. உதாரணத்துக்கு இந்த proposal ah அமல்படுத்துரதுக்கு முன்னால எல்லோர கருத்துக்காகவும் முன்வைக்கிறானுங்கன்னு வைங்க… செய்ய விட்டுருப்பானுங்க? நாலு பேர் கேஸ் போடுவான்.. நாலாயிரம் பேர் மறியல் பன்னுவான். கடைசி வரைக்கும் நடக்கவே விடமாட்டானுங்க. அப்டியே நடக்க விட்டாலும் அதுக்குள்ள எல்லாத்தையும் உசாரா வெள்ளையாக்கிருப்பானுங்க.

இல்லை இல்லை. முதல்ல Swizz bank ல இருக்க கருப்பு பணத்த எடுத்துட்டு வந்து இங்க எல்லாருக்கும் குடுங்க. அப்டித்தானே சொன்னீங்க. சரி ஸ்விஸ் பேங்குல கருப்பு பணத்த பதுக்கி வச்சிருக்கான். அது மட்டும்தான் கருப்பு பணமா? நம்ம எல்லாரும் சரியா இருக்கோமா? அதே சட்டம்தானே நமக்கும். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்து மேல இருந்தா 10% வரி கட்டுனும். இல்ல அதுக்கு ஏத்தமாதிரி சேமிப்ப காட்டனும். அது எல்லாருக்கும் பொது தானே. நம்ம சம்பாதிக்கிற 5 லட்சத்துக்கு வரியா ஒரு இருபதாயிரம் ரூவா அரசாங்கத்துக்கு குடுக்க நமக்கு இவ்வளவு வலிக்கும்போது நூறு கோடி சம்பாதிக்கிறவன் 34 கோடிய அரசாங்கத்துக்கிட்ட குடுக்குறதுக்கு எவ்வளவு வலிக்கும்? அவன் லெவலுக்கு அவன் பதுக்குறான். நம்ம லெவலுக்கு நம்ம பதுக்குறோம். அவ்வளவுதான்.

எத்தனை பேர் படிக்கிறப்போகல்விக்கடன் வாங்கிட்டு அதுல திரும்ப ஒத்த பைசா கூட கட்டாம இருக்கான் தெரியுமா? இதனால அடுத்தடுத்து உண்மையிலயே கஷ்டப்படுற சிலர் போய் லோன் கேட்டா கூட பேங்க் காரன் கடிச்சி துப்பி அனுப்பிடுறான். ஏண்டா கட்டலன்னு கேட்டா, அடுத்த ஆட்சி வந்தா இந்தக் கடன தள்ளுபடி பன்னிருவாங்கன்னு காத்திருக்கோம்ங்குறாங்க. இல்லைன்னா வேலை இல்லைம்பானுங்க.  

இன்னும் ஊருக்குள்ள நிறைய குரூப்பு பிஸினஸ் மேனுக்கு மட்டும் கோடி கோடியா லோன் குடுக்குறீங்க.  அவனுங்ககிட்ட போய் திரும்ப கேக்காம ஏழைகள்கிட்ட திரும்ப கேக்குறீங்கன்னு வியாக்யானம். சரி மேல வேலையில்லாததால கடன் கட்டலன்னு சொன்னீங்களே. அரசாங்கம் எப்டி வேலை வாய்ப்ப உருவாக்கும்? இந்தமாதிரி ஆளுங்களுக்கு பல ஆயிரம் கோடிகள கடனாக் குடுத்து, அவன தொழில் செய்ய சொல்லும். அதன் மூலமா சில ஆயிரம் வேலை வாய்ப்புகள உருவாக்குவான். கடனையும் கொஞ்சம் கொஞ்சமா கட்டுனா அரசாங்கத்துக்கும்  லாபம் வரும்னுதான். அவன ஃபோர்ஸ் பன்னி, அவன் கம்பெனிய மூடிட்டு போனான்னா, பாதிப்பு அவனுக்கு இல்லை. அவனால பலனடைஞ்ச பல ஆயிரம் குடும்பங்கள்தான்.

இதத்தான் கலகலப்பு படத்துல சுந்தர்.சி ஒரு எளிமையான காமெடில சொல்லிருப்பாரு. வீட்டுல இருக்க மூட்டைய மண்டை கசாயம், பேயி, திமிங்கலம் மூணு பேர்டயும் சொல்லி மூணு இடத்துக்கு மாத்தி திரும்ப வீட்டுக்கே கொண்டு வர சொல்லுவாரு. மூட்டை இருந்த இடத்துலயே இருக்கலாம்தான். ஆனா இவனுங்களுக்கு யாரு வேலை குடுக்குறது? அதே தான். அரசாங்கம் பணத்த சும்மாவே வச்சிருக்கலாம். பத்தரமா இருக்கும். ஆனா அத ஒருத்தன்கிட்ட கடனா குடுத்து தொழில் பன்ன சொன்னா கொஞ்ச பேருக்கு வேலை கெடைக்கும்.

ஸ்விஸ் கருப்பு பணத்த எடுக்க ஏன் நடவடிக்க எடுக்கலைன்னு கேள்வி கேக்குறதுல நியாயம் இருக்கு. ஆனா அத பன்னாம ஏன் இதப் பன்னீங்கன்னு கேக்குறதுல எந்த நியாயமும் இல்லை.

இன்னொரு மிகப்பெரிய காமெடி அந்த 2000 ரூவாயில நானோ சிப். நாலு நாளுக்கு முன்னால அந்த ரெண்டாயிரம் ரூவாய முதல் முதல்ல காமிக்கும்போதே அந்த ரூமர் கெளம்புனுச்சி. உள்ள chip இருக்கு. அதன் மூலமா ட்ராக் பன்னலாம்னு. அப்ப ஒரு பய வாயத் தொறக்கல. அப்புறம் ரிசர்வ் பேங்க்கே அதுல அப்டி எதுவும் இல்லன்னு சொன்னப்புறம் , நம்ம அறிவாளிகள் முழிச்சிக்கிட்டாங்க. சிப் வைக்கனும்னா அதுக்கு ரிப்பீட்டர் வைக்கனும்ங்க. பேட்டரி வைக்கனும்ங்க. அதெல்லாம் இல்லாம எப்படி முடியும்னு அறிவாளிக்கேள்வி. ஏண்டா இத ரெண்டு நாளுக்கு முன்னாலயே கேக்க வேண்டியதானடா?

இப்ப இவங்க சுத்துற கம்புல பெரிய பயிண்டு என்னன்னா ஏழைகளோட சேமிப்பு போச்சாம். சாப்பாட்ட தவற அவன் சம்பாதிக்கிற எல்லாமே சேமிப்புன்னு நினைச்சிட்டு இருப்பாய்ங்க போல. நம்ம சமுதாய பழக்க வழக்கத்துல, சொந்த பந்தங்களோட குடும்பமா வாழுற ஒருத்தன், நீங்க சொல்ற 2.5 லட்சம் வருஷத்துக்கு சம்பாதிச்சான்னா சாப்பாட்ட தவற ஆஸ்பத்திரி செல்வு, கல்யாணம், காதுகுத்து நல்லது கெட்டதுன்னு அவனுக்கு ஆகுற செலவு அத விட அதிகமாத்தான் இருக்கும். அப்படி சேமிச்சாலும் சில ஆயிரங்கள். நூற்றில் ஒரிருவரைத் தவிற மற்ற எந்த ஏழையும் அந்த சேமிப்பையெல்லாம் பொட்டிக்குள்ள வச்சிக்கிட்டு தேவுடு காத்துக்கிட்டு இல்லை.

அதுமட்டும் இல்லாம, தனியா பிஸினஸ் பன்றவங்களுக்கோ, அயல்நாட்டுல சம்பதிச்சிட்டு வர்றவங்களுக்கோ எந்த வரியும் இல்லை. அதுக்கு கணக்கும் இல்லை. ஒழுங்கா வரிகட்டுறவங்க யாருன்னா, அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள்ல வேலை பாக்குற நடுத்தர வர்க்கத்தினர் தான். 500 பேர் வரி கட்ட வேண்டிய இடத்துல 50 பேர் மட்டும் கட்டும்போது, வரி விகித்தத்தை அதிகப்படுத்தி மேலும் மேலும் அந்த 50 பேருக்கு தான் சுமையைக் கூட்டுறாங்க. இப்ப யாருகிட்டயும் வலுக்கட்டாயமா பணத்த புடுங்கல. சட்டப்படி கணக்க காமிக்கதான் சொல்றாய்ங்க. ஒரு சிலருக்கு உண்மையா இதன் மூலமா கஷ்டங்கள் இருக்கலாம். அவங்க பொறுத்துக்கிட்டுதான் ஆகனும்.


அல்லு இருக்கவய்ங்கதான் அலப்பிக்கிட்டு இருக்கானுங்க. 

பணம் பிறந்த கதை!!!


Share/Bookmark
”கோவிலில் இருக்கும் வரை சாமி என்கிறார்கள். திருடு போன பிறகு சிலை என்கிறார்கள்” அப்டிங்குற வரிகளை சிலர் சொல்லி கேள்விப்பட்டுருப்பீங்க. அதை கல்லா நினைக்கிறதும், சாமியா நினைக்கிறதும் மனுஷங்க மனசுலதான் இருக்கு. அத நூறு  சதவீதம் நிருபிச்சிருக்கது இப்ப அரசாங்கத்தோட அறிவிப்பும் அதை தொடர்ந்த சம்பவங்களும். ”ஒத்த ரூவா விழுந்தா கூட ஓடிப்போய் எடுப்பாண்டா இந்த ஸ்டைல் ச்சின்னா”ங்குற மாதிரி இருந்த பயலுக இப்ப 500 ரூவா நோட்டுல மிச்சர் திங்கிறானுங்க ஆயிரம் ரூவா நோட்டுல கப்பல் செய்யிறானுங்க. பொட்டில வச்ச காசு வச்சபடி தான் இருக்கு. யாரும் எதுவும் பன்னல. மொதநாள் ராத்திரி சாமியா தெரிஞ்ச காசு, அரசாங்கத்தோட ஒரு அறிவுப்புல மறுநாள் காலையில வெறும் காகிதமா தெரியிது. அப்ப அந்த பணத்துக்கு மதிப்பு இல்லை. அதுக்கு மதிப்பு இருக்க மாதிரி எல்லாரும் நினைச்சி புலங்கிக்கிறோம்.

சமீபத்துல எனக்கு பிடிச்ச ஒரு வாசகம். “Time doesn’t exist Only clocks exist”. உண்மையில பாக்கப்போனா நேரம் என்கிற ஒரு விஷயமே இல்லை. நாமதான் கடிகாரத்த கண்டுபுடிச்சி, அத மணி, நிமிடம், நொடின்னு பிரிச்சி வச்சிருக்கோம். அதுமாதிரி தான் இதுவும். பணம்ங்குற ஒரு பேப்பருக்கு சுய மதிப்புன்னு எதுவுமே இல்லை. பண்ட மாற்றுக்கான ஒரு ரசீதுதான் பணம். சரி தங்கக் காசு, வெள்ளிக்காசுன்னு பரிமாற்றத்துக்கு உபயோகிச்சிக்கிட்டு இருந்த மக்களுக்கு இந்த பணம்ங்குற கான்செப்ட் எப்படி வந்துச்சி. யாரு உருவாக்குனது? இதைப் பற்றி பார்க்கவேண்டுமானால் நாம் கி.பி முதலாம் நூற்றாண்டு வரையாவது செல்ல வேண்டும். எது வாடகை சைக்கிள்லயா? பின்னாடி டயர் பஞ்சருங்க. வாங்க நடந்தே போவோம்.

கி.பி 32 இல் யூதர்கள் அவங்க கோவிலுக்கு Shekilshekil ங்குற சுத்தமான வெள்ளியால் ஆன ஒரு காசத்தான் வரியா கொடுக்கனுமாம். கடவுள் அந்த சுத்த வெள்ளியாலான காசதான் காணிக்கையாக ஏற்றுக்கொள்வார்ங்குற நம்பிக்கை அவர்களிடத்தில் விதைக்கப்பட்டிருந்தது. அந்தக் காசும் ரொம்ப கம்மியான எண்ணிக்கையிலதான் புலக்கத்தில் இருந்தது.  கோவிலுக்கு வரி கொடுக்குறதுக்காக  மக்கள் கையிலிருக்கும் வேறு நாணயங்களை கொடுத்து அந்த சுத்த வெள்ளியாலான காச சந்தையில வாங்கனும். அந்தக் வெள்ளிக்காசு ரொம்ப குறைவான எண்ணிக்கையில இருந்ததாலும், அந்தக் காசை அச்சடிப்பவர்கள் மோனோபாலி என்பதாலயும் ஒரு வரைமுறையே இல்லாம அவனுங்க இஷ்டத்துக்கு விலை வச்சி வித்துருக்கானுங்க.

மக்கள்கிட்டருந்து நடக்குற அநியாயக் கொள்ளைய பார்த்த ஜீஸஸ் கோபப்பட்டு, அந்தக் கோவிலுக்குள்ள புகுந்து “இது கொள்ளையர்களோட குகை” ன்னு சொல்லி, அங்க இருக்கவனுங்களையெல்லாம் சவுக்கால அடிச்சி விரட்டி, அதுக்கப்புறம் அந்த சிஸ்டத்தையே மாத்துனாராம். அவர் வாழ்க்கையில அடுத்தவங்க மேல கடுமையா நடந்துக்கிட்டதும் அந்த ஒரு சம்பவம்தானாம். அதன்பிறகு அங்க ஒரு பொரூளை உருவாக்குறவந்தான் அந்தப் பொருளோட மதிப்பை நிர்ணயிக்க ஆரம்பிச்சான்.

சில நூற்றாண்டுகள் கழிச்சி, நகை வியாபாரிகள் உள்ள புகுந்தாங்க. ”உங்க கிட்ட இருக்க தங்கக் காசுகளையும், வெள்ளிக்காசுகளையும் நாங்க பத்தரமா வச்சிக்கிறோம். வேணுங்குறப்ப வந்து வாங்கிக்குங்க”ன்னு மக்கள்கிட்ட சொல்ல, மக்களும் வீட்டுல தங்கம் வெள்ளிக்காசுககளை வச்சிக்கிறது பாதுக்காப்பில்லைங்குறத உணர்ந்து அந்த நகை வியாபாரிகள்கிட்ட கொண்டுபோய் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அவன் அந்த தங்கக் காச வாங்கிட்டதுக்கு அடையாளமா ஒரு சின்ன ரசீது ஒண்ணு குடுத்தான்.



இப்ப அந்த ரசீது தங்கக் காசுகளுக்கு இணையா மதிக்கப்பட்டுச்சி. 50 தங்க காசுகளை கையில எடுத்துட்டு போய் வணிகம் பன்றதுக்கு, 50 தங்கக் காசுகள் மதிப்புடைய இந்த சின்ன ரசீத கொண்டு போறது மக்களுக்கும் ரொம்ப ஈஸியா இருந்துச்சி.

கொஞ்சம் கொஞ்சமா  ஊருக்குள்ள எல்லா பரிமாற்றங்களும் அந்த ரசீதுகள் மூலமாவே நடக்க ஆரம்பிச்சிது. தங்கக் காச  குடுத்து ரசீது வாங்கிட்டு போனவனுங்கள்ள ஒருசில பேருதான் அதுவும் ரொம்ப நாள் கழிச்சி வந்து திரும்ப காச வாங்குனானுங்க. மத்தவனுங்க ரசீதோட போனவனுங்க திரும்ப வரவே இல்ல.  அப்பதான் தங்கக் காச வச்சிருக்க நகைவியாபாரிகளுக்கு கிரிமினல் புத்தி வேலை பாக்க ஆரம்பிச்சிது.

இது வரைக்கும் தங்கத்த வாங்கிக்கிட்டு ரசீது அடிச்சி குடுத்தவனுங்க, இப்ப தங்கம் இல்லாமலேயே ரசீது அடிச்சி, அத வட்டிக்கு விட ஆரம்பிச்சானுங்க. அதாவது கெணறு வெட்டாமலேயே கெணறு வெட்டுன ரசீது. இப்பதான் ஊருக்குள்ள ரசீதக் காட்டுனாலே பொருள் வாங்கிக்கலாம்ல. அதனால தங்கமே இல்லாம ரசீத மட்டும் அடிச்சி அதுக்கு வட்டிங்குற பேர்ல பணம் சம்பாதிச்சிக்கிட்டு இருந்தானுங்க.

கொஞ்சம் கொஞ்சமா அதயே பெருசாக்கி, வட்டி கம்பெனிக்கு தனிப் பேரு, தனி முத்திரைன்னு பேங்காகவே நடத்த ஆரம்பிச்சிட்டானுங்க. இல்லாத ஒண்ண இருக்கதா சொல்லி, அதன் மூலமா ஊருக்குள்ள பரிவர்த்தனைகளை நடக்க வச்சி, அதன் மூலமா இவனுங்களும் சம்பாதிக்கிறது. அதாவது வெறும் வாய மட்டும் எடுத்துட்டு போய் எல்லார் சரக்குலயும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கிக் குடிச்சிட்டு வர்ற மாதிரி.


இந்த ரசீது கலாச்சாரம் கொஞ்சம் நாள் ஓடிக்கிட்டு இருக்க, கி,பி.1100 ல ஹென்ரிங்குற அரசர் Tally Sticks எனப்படுகிற மரத்தால் ஆன சிறிய கம்புகள் மூலமா பரிவர்த்தனைகளை நடக்க வச்சாரு. அதாவது ஒரு மரத்துண்ட நல்லா பாலிஷ் பன்னி, முனைகள்லாம் சரியா செதுக்கி அதுல எண்கள் பொறிக்கப்பட்டு, அந்த மரத்துண்ட ரெண்டு பாதியா வெட்டி, (ஒரு துண்டு மற்றொன்றோட mating part மாதிரி இருக்கும்படி) ஒரு மரத்துண்டை அரசர் இடத்துல வச்சிக்கிட்டு மற்ற மரத்துண்டை பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்திக்க வைச்சார்.

சரி சும்மா மரத்துண்டை கொண்டு போய் குடுத்தா அதுக்கு மதிப்பிருக்குன்னு மத்தவங்க நம்பனும்ல. அதுக்காக அரசரவைக்கு கொடுக்கப்படும் வரிகள் எல்லாம் அந்த மரத்துண்டுகளாத்தான் (tally sticks) தரனும்னு சொல்லவும், மக்களும் அந்த மரத்துண்டுகள பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்திக்கிட்டாங்க. கிட்டத்தட்ட 700 வருஷங்கள் இந்த tally sticks முறைதான் பயன்படுத்தப்பட்டிருக்கு. வரலாற்றில் மிக நீண்ட காலம் பயன்படுத்தப்பட்ட முறையும் இந்த tally sticks முறை தான்.


எல்லாத்தையும் அரசாங்கம் கண்ட்ரோல்ல வச்சிருந்தவரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சி. கி.பி.1500 ல எட்டாம் ஹென்றி என்ன பன்னிட்டாப்ள , இந்த கந்துவட்டி தொடர்பான சட்டங்களையெல்லாம் தளர்த்திட்டாரு. அதனால தங்கம் வெள்ளிக்காசு நிறைய வச்சிருந்த பல பேரு மார்க்கெட்ட இறங்கி அவன் அவன் வட்டிக்கு விட ஆரம்பிச்சிட்டானுங்க. அதுல முக்கால்வாசி மேல சொன்ன மாதிரி கெணறே இல்லாம கிணறு வெட்டுற மாதிரி தான். ஒரு கட்டத்துல அரசாங்கத்த விட இந்த பண மாற்றிகள் (money changers) பவர்ஃபுல்லா மாற ஆரம்பிச்சிட்டானுங்க.

1642 ல இந்த பண மாற்றிகளோட சப்போர்ட்டுல, அந்த ஆட்சில மிலிட்டரி ஆஃபீசரா இருந்த ஆலிவர் க்ரோம்வெல்ங்குறவன நல்லா உசுப்பேத்தி உசுப்பேத்தி அவனுக்கு காசும் கடனா குடுக்க, அவன் ஒரு படைய திரட்டிக்கிட்டு அப்ப இங்கிலாந்த ஆண்ட மன்னர் சார்லஸ்ஸ மட்டை பன்னிட்டானுங்க. இதனால பெரிய கலவரம் வெடிச்சி, கிட்டத்தட்ட 50 வருஷம் சண்டை நடந்துக்கிட்டு இருந்துச்சி.

எல்லாத்துக்கும் பின்னால இருந்து காசு குடுத்து உதவுனவனுங்க இந்த பண மாற்றிகள்தான். அவனுங்க சண்டை போடுறதுக்குண்டான செலவுக்கெல்லாம் கடன் குடுத்தது இந்த பண மாற்றிகள் குரூப்பு. வட்டி ஏறிக்கிட்டே போக, ஒரு கட்டத்துல மன்னர்கிட்டருந்து வட்டிக்காக ஒரு ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள ஒரு இடத்த வாங்கி ஆக்கிரமிச்சிக்கிட்டானுங்க. அதுதான் இப்ப City of London ன்னு அழைக்கப்படுது.

50 வருட போர்னால, அரசு அதிகாரிகள்லாம் அதற்கான செலவுக்கு இவனுங்ககிட்ட கடன் கேட்டு போய் நின்னாங்க. மிகப்பெரிய நிதிநெருக்கடி வர ஆரம்பிச்சிது. அப்ப இந்த குள்ளநரிங்கல்லாம் அரசாங்கத்தோட நிலைய புரிஞ்சிக்கிட்டு, ஒரு டீல் போட்டுக்கிட்டாய்ங்க. அதாவது தனியாரால் நடத்தப்படும் ஒரு பேங்க் ஆரம்பிக்கிறது. அதுல எந்த தங்கமோ வெள்ளியோ இருப்பு இல்லாம கூட கரன்ஸி அடிச்சி சர்குலேஷன்ல விட்டுக்கலாம். இதுதான் அந்த டீல். அந்த டீலிங்குல  உருவானதுதான் Bank of England.

அவனுங்க எதுவுமே இல்லாம  சும்மா அடிச்ச கரண்ஸிய அரசாங்கம் கடனா வாங்கி, அத மக்கள் வரி மூலமா திரும்ப கட்டிக்கிட்டு இருக்கானுங்க. இந்த டீலிங் நல்லா இருந்ததால, இத ரோல் மாடலா வச்சி ஒவ்வொரு நாட்டுலயும் இந்த மாதிரி ஒரு செண்ட்ரல் பேங்க் ஆரம்பிச்சானுங்க. அந்த நாட்டையே கைப்பற்றி கண்ட்ரோல் பன்ற அளவு பவர் அந்த செண்ட்ரல் பேங்குகள்கிட்ட இருந்துச்சி.


இந்த சம்பவங்களுக்கெல்லாம் பிறகுதான் மெயின் ஹீரோவே எண்ட்ரி ஆகுறாரு. ஹீரோ பேரா? Child… Rothschild…..  (Bond.. JamesBond style ல் படிக்கவும்). பேருதான் child ன்னு சின்னப்புள்ள மாதிரி வச்சிருக்கான். ஆனா எமத்திருடன்… அவனோட லீலைகளைப் பத்தி அடுத்த பதில் தொடர்வோம். 

Monday, November 7, 2016

ஜாதகக் கணிப்புகள்!!!


Share/Bookmark
என்னதான்  ஆண்ட்ராய்டு மொபைல் , ஜியோ சிம், 4G என்று வாழ்க்கை போய்க்கொண்டே  இருந்தாலும் ஒரு சில பழக்க வழக்கங்கள் அன்றிலிருந்து இன்றுவரை நம் மக்களுடன் ஒன்றியே இருந்துவிட்டது. அவற்றில் ஒன்றுதான் ஜாதகம் பார்ப்பது. நல்லது கெட்டது என எது நடந்தாலும் “சனி பார்க்கிறான்... குரு சிரிக்கிறான்... சூரியன் முறைக்கிறான்”  என ஒவ்வொரு கோள்களின் மேல் பழியைப் போட்டு விட்டு, நல்ல நேரத்திற்காக காத்திருக்கிறார்கள். அந்தக் காலம் இந்தக் காலம், படித்தவர்கள் , பாமரர்கள் என்ற வித்யாசம் இல்லாமல் ஒரு  பகுதி  மக்கள் இந்த ஜாதகக் கணிப்புகளை நம்பிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

அது பற்றி ஒரு சில பதிவுகள் எழுதலாம் என நினைக்கிறேன். ஏற்கனவே பலர் இது தொடர்பாக எழுதிய பதிவுகள் கொட்டிக்கிடந்தாலும் நமது பார்வையில் ஒரு முறை எழுதலாம் என்ற யோசனை . அதற்கு முன் நமது இணைய மக்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்து கொள்வதற்காக ஒரு சிறிய சர்வே. 

“ ஜாதகக் கணிப்புகளை நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா என்பதே எனது கேள்வி. நம்பலாமா வேண்டாமா என்பதல்ல. மேலும் கிளி ஜோதிடம், நாடி ஜோதிடம், கைரேகை ஓலைச் சுவடி ஜோதிடம் போன்றவற்றையும் அவை தொடர்பான உங்கள் அனுபவங்களையும் இதில்  கருத்தில் கொள்ளவேண்டாம்.




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...