Tuesday, August 2, 2022

D Block (2022)



அருள்நிதி ஏன் அனைத்துப் படங்களிலும் ஒரு மாதிரி சைக்கோ கேரக்டர்களில் சிரிக்காமலேயே நடிக்கிறார் என்கிற கேள்வி அடிக்கடி எனக்கு எழுவதுண்டு. அதற்கான விடை  D block இல் கிடைத்தது. முதல் பாதியில் முதலாமாண்டு கல்லூரி மாணவராக அடிக்கடி சிரிப்பவராக நடித்திருந்தார். அவர் சிரிக்காமல் நடிப்பது தான் படம் பார்க்கும் நமக்கு நல்லது என்பதை அதன் பின்னர் புரிந்து கொண்டேன். 


சிறுபிள்ளைத் தனமான கதை. அமெச்சூரான மேக்கிங்.  காட்டுக்குள் கட்டப்பட்டிருக்கும் காலேஜ். ஒன்பது மணிக்கு மேல் யாரும் வெளியே வரக்கூடாது, மொட்டை மாடிக்கு போகக்கூடாது என என்னென்னவோ சொல்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கூட லாஜிக்கிற்கு மெனக்கெடவில்லை. எதயாவது எடுத்து வைப்போம் என்பதைப் போல எடுத்திருக்கிறார்கள்.


மொட்டை மாடிக்கு போகக் கூடாது என்றால் கண்டிப்பாக அங்கே ஒரு பெண் போக வேண்டும் என்பது தானே உலக வழக்கம். அப்படி ஹாஸ்டல் மொட்டை மாடிக்கு செல்லும் ஒரு பெண் மறு நாள் வேறு ஒரு இடத்தில் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடக்கிறாள். சிறுத்தை அடித்துவிட்டது என்கிறார்கள்.


பிரின்சிபாலிடம் பெண் மரணத்திற்கு நியாயம் கேட்கச் செல்கிறார்கள் அருள்நிதி குழுவினர். அதற்கு பிரின்சிபால்


“மொட்டை மாடிக்கு போகக்கூடாதுன்னு நாங்க எவ்வளவு சொல்லியும் அந்தப் பொண்ணு அங்க போச்சுல்ல. அதான் சிறுத்தை அடிச்சிருச்சி” என்கிறார்.


”ஏண்டா கொன்னப்பயலே மொட்டை மாடிய என்ன சிறுத்தைக்கு வாடகைக்காடா விட்டுருக்கீங்க? மொட்டை மாடிக்கு எப்டிடா சிறுத்தை வரும்?” என படம் பார்க்கும் நமக்கே கேட்கத் தோன்றும். ஆனால் துப்பறியும் புலி அருள்நிதிக்கோ அல்லது அந்த கல்லூரியில் படிக்கும் எந்த மாணவ மாணவியருக்கோ இந்த சந்தேகம் வரவே இல்லை. இதைப்போல இன்னும் பலப் பல அபத்தங்கள்.


பெரியார் பேரன் கரு பழனியப்பன் படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை கல்லூரியில் படமாகத் தொங்குகிறார். பின் ஒரே ஒரு காட்சியில் எண்ட்ரி கொடுத்து சந்திரமுகி பாம்பை ஒரு கோல் வித்யாசத்தில் வெற்றி பெறுகிறார். 


மொத்ததில் எருமைச்சாணி விஜய்யின் இயக்கத்தில் உருவான இப்படமும் அவர்கள் சேனலின் பெயரைப் போலத்தான் இருக்கிறது.


-அதிரடிக்காரன்


#Dblock #Athiradikkaran

Wednesday, July 27, 2022

ராக்கெட்ரி - நம்பி விளைவு:


ஷங்கரின் சிவாஜி திரைப்படத்தில் ரஜினி கருப்புப் பணத்தைப் பற்றி தகவல் கேட்டுக் கொண்டிருக்கும் போது கூட்டத்திலிருக்கும் முத்துக்காளை எழுந்து “அய்யா கருப்புப் பணம்னா என்னங்க? கருப்பா இருக்கும்ங்களா?” என்றதும் அத்தனை பேரும் சிரிப்பார்கள். ரஜினி பிறகு கருப்புப் பணம் என்றால் என்ன எனக் கூறுவார்.  படம் பார்க்கும் பலருக்கும் அது ஒரு மொக்கைக் காமெடியாகவும், கொஞ்சம் எரிச்சலூட்டும் படியும் இருக்கும். ஆனால் உண்மையில் கருப்புப்பணம் என்றால் என்ன எனத் தெரியாத சிலருக்கு சிறு விளக்கம் கொடுத்து அவர்களையும் படத்துடன் ஒன்ற வைப்பதற்கான ஒரு காட்சி அது. 


ராக்கெட்டரிக்கு வருவோம். இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் ராக்கெட் சயின்ஸைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் பொழுது நாம் இடையில் மாட்டிக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது படத்தின் பெரும்பான்மையான பகுதி. Solid Fuel, Liquid fuel, cryogenic engines என்று மக்கள் அதிகம் பழக்கப்பட்டிராத  விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அவை என்னென்ன, அவற்றை ஏன் பயன்படுத்துகிறோம் என ஒரு குறைந்தபட்ச விளக்கம் கூட பார்வையாளர்களுக்கு கொடுக்கப்படவில்லை.  கொஞ்சம் கூட ஈவு இரக்கம்  இல்லாமல் நாடு முழுவதும் சயிண்டிஸ்டுகள் மட்டுமே பார்க்கப்போவது போல ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். 


நம்பியை நேர்காணல் செய்பவராக வருகிறார் சூர்யா. நேர்காணலிலேயே சூர்யா, நம்பியிடம் அவர்கள் பயன்படுத்தும் அறிவியல் வார்த்தைகளை விளக்கச் சொல்லிக் கேட்டு, எளிய பதில்கள் மூலம் பார்வையாளர்களுக்கு புரியும்படி செய்திருந்தால் நிறையவே கனெக்ட் ஆகியிருக்கும். ஆனால் தற்போது எதோ ஒரு தனி உலகத்தில் கதை நடந்து கொண்டிருப்பது போல எட்ட நின்று நாம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. 


நம்பியின் கதையை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது தான் படத்தின் நோக்கமென்றால் அதைச் செய்திருக்க வேண்டும். அல்லது படம் ISRO வில் பணி செய்பவர்கள் பார்ப்பதற்க்கு மட்டும் எடுக்கப்பட்டது என்றால் இது ஓக்கே. 


சூர்யாவைக் கவுரவ வேடத்தில் நடிக்கக் கூப்பிட்டதற்காக, நம்பியுடைய நேர்காணலில் நம்பியைப் பற்றிய பல விஷயங்களை நம்பி வாயால் கூற விடாமல் சூர்யாவே ஒப்புவிக்கிறார். 


மற்றபடி மாதவன் சிறப்பாக நடித்திருக்கிறார். நிறைய காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது. க்ளைமாக்ஸில் மாதவன் கதை சொல்லி முடிக்கும்போது ஸ்டூடியோவில் இருக்கும் அனைவரும் அழுகிறார்கள். ஆனால் அது நமக்கு அந்த அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவற்றை இன்னும் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும். ஒரு இயக்குனராக மாதவனுக்கு இன்னும்  நிறைய பயிற்சி வேண்டும். 


மோசமில்லை. ஆனால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். 


-அதிரடிக்காரன்


#RocketryTheNambiEffect #Athiradikkaran

Monday, June 27, 2022

30 Year Of Annamalai!!!

 


மற்ற நடிகர்களிலிருந்து ரஜினியை வேறுபடுத்திக்காட்டுவது  மற்றவர்களைக் காட்டிலும் ரஜினி மக்களிடத்தில் எவ்வாறு சென்று சேர்ந்திருக்கிறார் என்பதே. அவர் உடலின் ஒவ்வொரு பகுதியுமே ஒரு டெம்ப்ளேட். ரஜினிக்கான அடையாளம் அவரது முகம் மட்டுமல்ல. தலைமுடி முதல் பாதம் வரை ஒவ்வொரு பகுதியிலும் ரஜினியைக் கண்டறிய முடியும்.


முகத்தைக் காட்டாமல், யார் என்று சொல்லாமல் ஒருசில கோடுகளில் அது ரஜினி என்பதை உணர்த்த முடியும்.


சாதாரணமாக முகத்தின் நெற்றிப்பகுதியை நேராக வரையாமல் ஒரு Sine wave வைப் போல வரைந்தால் அது ரஜினி.


அதே நெற்றிப்பகுதியில் இரண்டு கற்றை முடி தொங்குவதைப் போல வரைந்தால் அதுவும் ரஜினி.


வாயில் சிகரெட்டை நேராக வைக்காமல் பக்கவாட்டில் வைத்திருந்தால் அது ரஜினி.


வெறும் கழுத்தில் ருத்ராட்சத்தைக் மட்டும் காண்பித்தால் அது ரஜினி.


கையில் ஒரு செப்புக் காப்பைக் காண்பித்தால் அது ரஜினி.


நான்கு விரல்களை மடக்கி "ஒரு தடவ சொன்னா" என ஒரு விரலைக் காட்டினாலும் ரஜினி. 


மூன்று விரல்களை மடக்கி பாபா முத்திரையைக் காட்டினாலும் ரஜினி. 


ஷூவிற்குள் Pant இன் செய்யப்பட்டிருந்தால் அது ரஜினி. 


ஒரு காலை மடக்கி மற்றொறு காலின் பின்னே வைத்து நின்றால் அது ரஜினி. 


இரண்டு காலயும் லேசாக அகட்டி பாக்கெட்டுக்குள் கை விட்டு நிற்பதைப் போல வரைந்தால் அதுவும் ரஜினி.


தலையை சீப்பால் சீவாமல் கையால் கோதிவிட்டால் அதுவும் ரஜினி. 


அன்றாடம் ரஜினியை மக்களுக்கு ஞாபகப்படுத்த இப்படி ஏராளமான விஷயங்கள் உள்ளன. அதுதான் அவருக்கான மார்க்கெட். மக்களிடத்தில் அவரிடைய ரீச். வேறு எந்த நடிகரையும் இப்படி அடையாளப்படுத்த முடியாது.


அதுமட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தில் கதை, திரைக்கதையெல்லாம் தாண்டி கதாநாயகனின் அறிமுகக் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்ததும் ரஜினியின் டெம்ப்ளேட் தான். 


திரையரங்கத்தில் உள்ள பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகத்தில் கூச்சலிடவைக்க அவரவர் என்னென்னவோ செய்தும் வேலைக்காகல் போகிறது. ஆனால் ரஜினியைப் பொறுத்தவரை அவர் எதுவுமே செய்யத் தேவையில்லை.  அவரின் கை மட்டுமோ அல்லது கால் மட்டுமோ திரையில் காண்பிக்கப்பட்டால் போதும். 


அப்படிப்பட்ட ரஜினியின் டெம்ப்ளேட்டுகளால் உருவான, டெம்ளேட்டுகளை உருவாக்கிய அண்ணாமலையின் 30 ஆண்டு!!! 



Sunday, June 26, 2022

மாயோன் - Maayon !!


 

மாயோன் மலையை ஒட்டி இருக்கும் ஒரு பள்ளி கொண்ட பெருமாள் கோவில். அக்கோவிலில் இருக்கும் ஒரு ரகசிய அறை. ஆறு மணிக்கு மேல் கோவிலுக்குள் சென்றால் சித்தபிரம்மை பிடிக்கும் அல்லது மரணம் நேரிடும் என்ற மர்மதேசப் பாணி நம்பிக்கை. இந்நிலையில் ரகசிய அறையின் செல்வங்களை கொள்ளையடிக்க முயலும் ஒரு கும்பல். இதைச் சுற்றி பிண்ணப்பட்டிருக்கும் கதை தான் இந்த மாயோன். 

இந்தப் படத்தின் ட்ரெயிலரே ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும் வண்ணம் இருந்தது. ஓரளவிற்கு அதை படத்திலும் தக்க வைக்க முயன்றிருக்கிறார்கள். இது போன்ற Mythological thriller, treasure hunt திரைப்படங்கள் தமிழில் மிகக் குறைவு. அப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து படமாக்கியதற்கு முதலில் வாழ்த்துக்களைக் கூறலாம். 

முதல் பாதி உண்மையிலேயே ஒரு நல்ல உணர்வைக் கொடுத்தது. அதற்கு இரண்டு காரணங்கள். முதலில் அந்த கதைக் களத்திற்கு ஏற்ற மாதிரியான அருமையான visuals.  நிறைய அனிமேஷன்கள். தேவையில்லாமல் நிறைய அனிமேஷன்கள் இருக்கிறது என்றாலும் அது படத்தின் மதிப்பை கொஞ்சம் கூட்டிக் கொடுக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. 

அடுத்தது பள்ளி கொண்ட பெருமாள் ஆலயமும், அதிலிருக்கும் பிரம்மாண்ட பெருமாள் சிலையும் அதற்கு இளையராஜாவின் இரண்டு பாடல்களும். நிஜத்தில் தரிசித்த ஒரு உணர்வைத் தருகிறது. பள்ளி கொண்ட பெருமாள் ஆலயத்திற்கான முன் கதை, அதற்கான அனிமேஷன், கந்தர்வ இசை என அனைத்து விஷயங்களும் சேர்ந்து ஒரு நல்ல படத்திற்கான முதல் பாதியை உருவாக்கியிருந்தது.

ஆனால் அது அப்படியே இரண்டாவது பாதியில் சறுக்கிவிட்டது. அதற்கு முக்கியக் காரணம் திரைக்கதை. ஆயிரம் வருடங்களாக இருக்கும் ஒரு மர்மத்தை துப்பறிய வேண்டும். அதற்கு சரியான கால அவகாசம் கொடுத்து மெதுவாக எடுத்துச் செல்லும் போதுதான் அந்த ஆயிரம் வருட மர்மத்திற்கே ஒரு மரியாதை இருக்கும். ஆனால் அப்படியில்லாமல் உள்ளே என்ன இருக்கிறது எப்படி இருக்கப்போகிறது என்றெல்லாம் தெரியாமலேயே ஒரே இரவில் அனைத்து வேலைகளையும் முடித்து விட வேண்டும் என ப்ளான் போட்டு உள்ளே செல்வதெல்லாம் அபத்தத்தின் உச்சமாக இருந்தது. 

முதல் பாதியில் சுமாராக இருந்த கிராஃபிக்ஸ் இரண்டாவது பாதியில் படுசுமாராகிவிட்டது. இரண்டாவது பாதியில் ஒரு கால் மணி நேரம் மாயோன் படம் பார்க்கிறோமா இல்லை அனகோண்டா பார்க்கிறோமா என்கிற குழப்பம் வந்துவிட்டது. 

சிபிராஜ் மற்ற எல்லா படங்களையும் விட இதில் ஆள் பார்க்க நன்றாக இருந்தார்.  அவரால் படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ரொமான்ஸே வராத முகத்தை வைத்து ரொமான்ஸ் காட்சிகளையெல்லாம் வைத்து நம்மை சோதிக்கிறார்கள். ரவிக்குமாரெல்லாம் இருக்கிறார். ஆனால் பெரிய வேலையில்லை. ஒரு சண்டை வைக்க வேண்டுமே என்பதற்காக வலுக்கட்டாயமாக ஒரு ஃபாரின் வில்லன் திணிக்கப்பட்டிருக்கிறார். 

கதையாக ஒரு நல்ல ஒன்லைன். ஆனால் அதன் திரைக்கதை வடிவம் இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம். மொத்தத்தில் வித்யாசமான கதைக்களத்தில் வந்த, நன்றாக வந்திருக்க வேண்டிய ஒரு சுமாரான திரைப்படம். 


Thursday, June 16, 2022

சிவாஜி நினைவலைகள் - 15 Years of Sivaji




பொறியியல் மூன்றாமாண்டு விடுதி. இரவு எட்டு மணி. மாலை ஏழு மணி முதல் பத்து மணி வரை காமன் ஹாலில் டிவி ஓடிக்கொண்டிருக்கும். பெரும்பாலும் 8 to a8:30 தான் எங்களுடைய இரவு உணவுக்கான நேரம். ஏனென்றால் அப்பொழுதுதான் நியூஸ் ஓடிக்கொண்டிருக்கும். “அத யாருப்பா அசிங்கமா பாத்துகிட்டு” என கும்பலாக எழுந்து சென்றுவிடுவோம். நியூஸ் பார்ப்பதற்காக மட்டுமே காமன் ஹாலிற்கு வருபவர்களும் உண்டு. 


அப்படி சிலர் மட்டும்காமன் ஹாலில் நியூஸ் பார்த்துக் கொண்டிருக்க, நாங்கள் ஹாஸ்டல் மெஸ்ஸில் உணவிற்காக உட்கார்ந்திருந்தோம்.


ஒரு வாய் எடுத்து வைக்கவில்லை.. ”ஹோஓஓஓஓ” என காமன் ஹாலிலிருந்து பயங்கர சத்தம் பின்னாலிருந்த

மெஸ்ஸில் கேட்டது. “வழக்கமா சச்சின் அடிக்கும் போது தான் இந்த மாதிரில்லாம் கத்துவாய்ங்க. இன்னிக்கு மேட்ச் கூட இல்லையே..என்னாச்சு?” என சாப்பிட்டத்தை அப்படியே வைத்துவிட்டு அனைவரும் காமல் ஹாலை நோக்கி ஓடினோம்.


”என்னாச்சு.. என்னாச்சு” என பதற்றமாக உள்ளே நுழைய, உள்ளே இருந்தவர்கள் அத்தனை உற்சாகத்துடன் “டேய் ஷங்கர் ரஜினிய வச்சி படம் எடுக்குறாரம்டா.. ஷங்கர் ரஜினிய வச்சி படம் எடுக்குறாராம்டா” உள்ளே

சென்றவர்களும் ”ஹோஓ”வென கூச்சல் போட காமன் ஹாலே திருவிழாக் கோலமானது. அப்படியே உட்கார்ந்து

விளம்பரத்திற்குப் பிறகு வந்த ஷங்கர்-ரஜினி கூட்டணியைப் பற்றிய முழு செய்தியைப் பார்த்துவிட்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் சாப்பிடச் சென்றோம்.  செய்தியில் படத்தின் பெயர் என்ன என்பதயெல்லாம் யாரும் குறிப்பிடவில்லை. நாங்களே டைட்டில் எப்படி இருக்கப்போகிறது என பல யூகங்களை உருவாக்கியிருந்தோம்.


அடுத்த இரண்டாவது நாளில் கல்லூரி டீக்கடையில் ஒரு பேப்பர் செய்தி. ”ஷங்கர்-ரஜினி இணையும் திரைப்படத்திற்கு சிவாஜி என பெயரிடப்பட உள்ளதாகத் தகவல்” என இருந்தது.


“எலே என்னது? சிவாஜியா? என்னலே இத எப்டிப் படிச்சாலும் மாஸா இல்லையேலே” என மிகப்பெரிய ஏமாற்றம். ஆனால் எல்லாம் சில நாட்கள் தான்.


“அருணாச்சலம் டைட்டில மொதல்ல கேக்கும்போது என்னடா இது அருணாச்சலம், வேதாச்சலம்னு ரொம்ப சுமாரான டைட்டிலா இருக்கேன்னு நினைச்சேன். ஆனா அதயே ரஜினிசார் “அருணாச்சலம்”ன்னு கணீர்னு சொன்னப்போ அந்த டைட்டிலே பயங்கர பவர்ஃபுல்லா தெரிஞ்சிது.. அப்டியே ஒத்துக்கிட்டேன்” என சுந்தர்.சி கூறியிருப்பார். அதேபோல சில நாட்களிலேயே சுமாரான சிவாஜி, சூப்பரான டைட்டிலாக மாறிப்போனது.


இரண்டு மூன்று வாரம் கழித்து ஒருநாள் காலை ஆறுமணிக்கெல்லாம் ரூம் மேட் பிரபு ஆழ்ந்த நித்திரையில் இருந்த என்னை “யோவ்.. எந்திரிய்யா..  யோவ் எந்திரிய்யா” என வேக வேகமாக எழுப்பினான்.


என்ன இவன் விடியக்காலமே எழுப்பி விடுறான் என அலுத்துக்கொண்டே எழுந்தால் மடியில் அந்த ஹிந்து பேப்பரைப் வீசினான். பேப்பரில் சிவாஜியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். அதுவரை பார்த்திராத வித்யாசமான, சந்திரமுகியைக் காட்டிலும் இளமையான ரஜினி. ச்ச.. செம்மடா... அன்று மட்டும் கிட்டத்தட்ட பத்து பேராவது என்னிடம் பேப்பரைக் கொண்டு வந்து கொடுத்திருப்பார்கள், அந்தப் போஸ்டரை வெட்டி வைத்துக்கொள்வதற்காக. அந்த போஸ்டர்தான் ஃபைனர் இயர் முடியும் வரை என்னுடைய ரூம் சுவற்றில்   முருகனுக்கு அருகில்  ஒட்டப்பட்டிருந்தது. இன்னும் பத்திரமாக உள்ளது.


நான்காமாண்டு முடியும் தருவாயில் கல்சுரல்ஸிற்கு நான்கு நாட்களே இருந்த சமயம். சிவாஜியின் மூன்று பாடல்கள் லீக் ஆனது. அதில் ஒன்றை கல்லூரி ஆர்கெஸ்ட்ராவில் சேர்ந்து விடுவோமா என்று கூட யோசித்தோம். ஆனால் ஏற்கனவே பாடல்களெல்லாம் முடிவு செய்யப்பட்டு விட்டதால், மீண்டும் கேட்டால்  orchestra co-ordinator ரவிக்குமார் கடித்து வைத்து விடுவார் என அதை அப்படியே விட்டுவிட்டோம்.


மற்ற பாடல்கள் ரிலீஸான பொழுது ஊருக்குச் சென்றதால் உடனடியாகக் கேட்க முடியவில்லை. ஆனால் SPB பாடிய பாடல் எப்படி இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள அவ்வளவு ஆர்வம். நண்பர் Karthick Chandrasekar  ற்கு கால் செய்ய, ஹாஸ்டலில் இருந்த அவருடைய டேப்பில் முழு சத்தத்துடன் அந்தப் பாட்டை ஒலிக்க விட்டு ஃபோனில் கேட்க வைத்தார்.


கல்லூரி முடிவதற்குள் படம் வந்துவிட்டும், ஒன்றாகப் பார்த்துவிட்டு ஊருக்குச் செல்லலாம் என்றிருந்தோம். ஆனால் ரீலீஸ் தள்ளிப் போய், அது நிறைவேறாமல் போனது. ஊருக்குச் சென்றோம்.


கம்பெனியில் சேர்வதற்கான தேதியைக் கொடுத்துவிட்டார்கள். சிவாஜியின் ரிலீஸ் தேதியும் வந்தது. ஜூன் பதினைந்து. பட்டுக்கோட்டை அருண் திரையரங்கில் காலை ஏழு மணிக்காட்சி. அதற்குள் முதல் நாள் இரவு படம் பார்த்த சென்னை நண்பர்கள் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்க அன்றைய இரவு ரொம்பவே மெதுவாகக் கடந்துகொண்டிருந்தது.


காலை ஏழுமணிக்கு காட்சி ஆரம்பம்.  One of the best thalaivar movies. மன நிறைவுடன் மறுநாள் இரவு சென்னைக்கு கிளம்பினேன் முதன் முதலாக வேலையில்  சேர்வதற்காக.

நேற்று நடந்தது போல இருக்கிறது.  பதினைந்து ஆண்டுகள் ஒடிவிட்டது. சிவாஜி வந்தும், நான் வேலைக்கு சேர்ந்தும். நாளை மறுநாளுடன் L&T யில் பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்கிறேன்.


-

Wednesday, April 20, 2022

KGF - Chapter 2

 

KGF இன் பலமே அவர்கள் கதை சொல்லும் விதம் தான். படத்தில் பல டைம்லைன்களில் காட்சிகள் காட்டப்படும். ராக்கி பிறக்கும் பொழுது, ராக்கி சிறுவனாக அம்மாவுடன் இருந்த பொழுது, ராக்கி சிறுவனாக மும்பையில் இருந்த பொழுது, ராக்கி KGF ற்குள் நுழையும் பொழுது, ஆனந்த் இளவழகன் வயதான காலத்தில் கதை சொல்லும் பொழுது, ஆனந்த் இளவழகன் வாலிபப் பருவத்தில் ராக்கியைப் பற்றி விசாரிக்கும் பொழுது, ராக்கி எப்படிப்பட்டவன் என ஒரு பெரியவர் ஆனந்த் இளவழகனிடம் கூறும் இரு குட்டி ஃப்ளாஷ்பேக்குகள், கேஜிஎஃபில் நுழைவதற்கு முன்னர் மக்களின் வாழ்க்கை என படம் பல டைம் லைனில் பயணிக்கும்.


ஆனால் இவை அனைத்தையும் முறைப்படுத்தி ஒரு கோர்வையாக நமக்குக் கொடுத்ததுதான் KGF இன் வெற்றி. வேறு எந்தத் திரைப்படத்திலும் பார்த்திராத ஒரு புதிய அனுபவம்.


உதாரணத்திற்கு KGF இன் இரண்டாவது பாதியில் வீரனுடைய கதை ஒன்று சொல்லப்படும். அந்த ஒரு காட்சியில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்தாரு டைம் லைனில் நடக்கும் காட்சிகள் ஒன்றாக காட்டப்பட்டிருக்கும். 


மகிழ்ச்சியாக நடக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி, தொடர்ந்து அந்த பெண்ணும் அவரது கணவனும் KGF ற்குள் இழுத்து வரப்படுவது, ராக்கி பிறப்பது, ராக்கியின் தாய் பாடும் பாடல், வண்டியில் அரிசியை வைத்துவிட்டு யாரும் அருகில் வராதபடி ஆட்கள் சுடுவது, பின் ராக்கி மட்டும் அந்த வண்டியை துப்பாக்கி குண்டுகளுக்கு தனியே இழுத்து வருவது என மூன்று நிமிடங்களுக்குள் அவ்வளவு விஷயங்களைக் காட்டியிருப்பார்கள். 


KGF இன் பெரும்பாலான காட்சிகள் இப்படித்தான். குறைந்தது மூன்று நான்கு ஓவர்லேப்புகள் இருக்கும். எந்த ஒரு காட்சியையும் just like that எடுக்காமல் ஒரு  மெனக்கெடலை உணர முடியும்.


நான் நண்பர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு.  ஷங்கர் படத்தில் ஒரு பத்து நிமிடத்தையும், வேறு ஒரு  இயக்குனரின் படத்தில் ஒரு பத்து நிமிடத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தெரியும் ஷங்கரின் படங்கள் ஏன் பெரிதாகப் பேசப்படுகின்றன என்று. அந்தப் பத்து நிமிடத்தில் திரையில் அவர் காட்டும் விஷயங்கள், கொடுக்கும் தகவல்கள் மற்ற சாதாரணப் படங்களில் அரை மணி நேரத்தில் கூட இருக்காது.


KGF உம் கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு படம் தான். ஏனோதானோவென்று ஒரு காட்சி கூட இருக்காது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவர்களின் மெனக்கெடல் நன்றாகவே தெரியும்.


சரி KGF 2 விற்கு வரலாம். சகுனி திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். "முடிச்சை அழிப்பது ஒரு சுவாரஸ்யம் என்றால் அவிழ்க்க முடியாதபடி முடிச்சு போடுவது இன்னும் சுவாரஸ்யம்" என்று. அதைத்தான் ப்ரஷாந்த் நீலும் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட படத்தை நன்றாக இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாதபடியான ஒரு மேக்கிங்.


கதையைப் பொறுத்த வரை KGF முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாவது பாகம் சற்று சுமார் தான். முதல் பாகத்தில் ஒரு எமோஷனல் கனெக்ட் இருக்கும். மேலும் கருடனைக் கொல்ல வேண்டும் என்கிற தெளிவான இலக்குடன் படம் பயணிக்கும்.


இரண்டாவது பாகத்தில் இரண்டுமே மிஸ்ஸிங். நிறைய கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கவில்லை. ஈஸ்வரி ராவ் மற்றும் அவரது மகன் கதாப்பாத்திரங்கள் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. அம்மா செண்டிமெண்டும் முதல் பாகம் அளவிற்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. மூன்று அருமையான பாடல்களை ரொம்பவே சுமாராகப் படமாக்கியிருக்கிறார்கள். 


சஞ்சய் தத்தைப் பார்த்து அனைவரும் பயந்ததாகக் கூறுகிறார்கள். உண்மையில் வயதான தோற்றத்தில், அந்த கெட்டப்பில் அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. 


சார்பட்டா பரம்பரையில் இடைவேளைக்கு முன்னரே வேம்புலியுடம் ஒன் டூ ஒன் சண்டை வைத்ததால் க்ளைமாக்ஸில் எப்படி அது பெரிய தாக்கத்தைக் கொடுக்கவில்லையோ அதே போல ஆதிராவும் ராக்கி பாயும் ஆரம்பத்திலேயே சந்தித்துக்கொண்டு மாறி மாறி உயிர்ப்பிச்சை கொடுத்துக்கொள்கிறார்கள். 


ஒரு சில goosebumps காட்சிகளைத் தவிற படம் ரொம்பவே ஃப்ளாட்டாகச் செல்கிறது. 

ஆனால் எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை. விஷூவலி நம்மைக் கட்டிப்போடுகிறார்கள்.


ராக்கி பாய் படத்தில் சிங்கம் போல உலவுகிறார். அறிமுகக் காட்சி, போலீஸ் ஸ்டேஷன் காட்சி, ரெமிகாவை அவரது அலுவலகத்தில் சந்திக்கும் காட்சி, பார்லிமெண்டில் துப்பாக்கியுடன் நுழையும் காட்சிகளெல்லாம் அதகளம். 


என்னதான் படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு சில குறைகள் தெரிந்தாலும் படம் முடிந்து வெளியே வந்த பின்னரும் நீண்ட நேரம் ராக்கி பாய் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறார். அதுதான் படத்தின் வெற்றி. 


-அதிரடிக்காரன்


Saturday, April 9, 2022

டாணாக்காரன்!!



ஒரு ஃப்ரெஷ்ஷான, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் ஒரு கதைக்களம். பயிற்சிப்பள்ளியில் காவலர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைத் திரைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். நேர்த்தியான உருவாக்கம்.

இரண்டு மூன்று கட்டிடங்கள், ஒரு மைதானம் இதை மட்டுமே வைத்து முழுப்படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார்கள். லொக்கேஷன்கள் அதிகம் இல்லை என்றாலும் படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் குறைந்தபட்சம் ஐம்பது பேர் இருக்கிறார்கள். அத்தனை பேரைச் சமாளித்து எடுத்ததற்கே பாராட்டவேண்டும்.

புதுமுகங்களாக இருந்தாலும் சில சிலர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். லால் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் தூண்கள் எனலாம். நன்றாக நடித்திருக்கிறார்கள்.

இந்த டாணாக்காரன் பேசுவது காவலர் பயிற்சிப்பள்ளியில் நடைபெறும் அரசியல் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள். ஆனால் அதில் பேசப்பட்டிருப்பது துறை பாகுபாடின்றி அனைத்து இடங்களிலும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு சவால். அத்தனை பேரும் தங்களை கனெக்ட் செய்துகொள்ள முடியும்.

நிச்சயம் பார்க்கலாம்.

 

Spoiler Alert:

ஒரு சில விஷயங்களை இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் என எனக்குத் தோன்றியவை.

படத்தின் ஆரம்பத்தில் ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்து இந்த பயிற்சிப்பள்ளிகள் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை விளக்கி நிறைய போட்டிகள் நடத்தப்படுவதாகக் கூறுகின்றனர். அதே போல கதை ஆரம்பிக்கும்போதும் எதோ போட்டி, மெடல் என்றெல்லாம் பேச, பயங்கரமான போட்டிகளெல்லாம் இருக்கப்போகிறது என்று ஒரு ஆர்வத்துடன் இருந்தால் கடைசியில் பெரேடு எடுப்பதுதான் போட்டி என்கிறார்கள். புஸ் என்று ஆகிவிட்டது.

அதுமட்டுமல்லாமல் படத்தில் அதற்கு முன் பெரேடு எடுப்பதைப் பற்றிய பயிற்சியோ அல்லது அதன் நுணுக்கங்களையோ பயிற்சியாளர்கள் சொல்லிக்கொடுப்பது போன்ற காட்சியமைப்புகள் கூட இல்லை. நேரடியாகத் திடீரென நாளைக்கு பெரேடு செலெக்‌ஷன் என்கிறார்கள்.

விக்ரம் பிரபுவின் உடல் வாகும், உடல் மொழியும் சுத்தமாக ஒட்டாதது போல் இருந்தது. நிஜத்தில் அப்படித்தான் இருப்பார்கள் என வைத்துக்கொண்டாலும் ஒரு கதையின் நாயகனாக உடலைப் பாராமரிப்பது அவசியம். எனக்கென்னவோ விக்ரம் பிரபுவைவிட விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு கச்சிதமாக பொறுந்தியிருப்பார் எனத் தோன்றுகிறது.

க்ளைமாக்ஸ் கொஞ்சம் ட்ரமாட்டிக்காக இருந்திருக்கலாம். அவர்கள் காட்டியிருப்பது தான் நிஜம். மறுப்பதற்கில்லை. நிஜத்தில் யாரும் ஓவர் நைட்டிலோ, சில நிமிடங்களிலோ நல்லவர்களாக மாறப்போவதில்லை. ஆனால் அப்படி எடுத்திருந்தால் ஒரு சினிமா என்கிற கோணத்தில் பார்வையாளர்களுக்கு ஒரு நிறைவைத் தந்திருக்கும்.

 

-அதிரடிக்காரன்

Friday, April 1, 2022

ஆடியன்ஸ திட்டாதீங்க ப்ரோ!!

 


RRR புகழ்ச்சிப்பதிவுகள் ஒரு புறம் சென்றுக்கொண்டிருக்க, “அந்தப் படத்த ஏன் கொண்டாடல? இந்தப் படத்த ஏன் ஃப்ளாப் ஆக்குனீங்க?” என சில படங்களைத் தூக்கிக் கொண்டு ஒரு கும்பல் குறுக்கயும் மறுக்கையும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் குறிப்பாக அவர்கள் கையில் வைத்திருக்கும் படம் 2.0 அதைக் கொண்டாடாமல் ஒழித்துவிட்ட பாவம் தான் நமக்கு நல்ல படமே கிடைக்கவில்லையாம். ஏம்பா.. கொஞ்சம் மனதைத் தொட்டு சொல்லுங்கள்.. 2.0 அதற்குத் தகுதியான படமா? எந்திரனின் தரத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாத 2.0, ரஜினி படமாகவும் இல்லாமல் ஷங்கர் படமாகவும் இல்லாமல் ஹீரோ யார் வில்லன் யார் என்கிற தெளிவும் இல்லாமல் ஒரு மாதிரி எடுக்கப்பட்டது. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், 3D படம் என்பது மட்டும் வெற்றி பெற வைப்பதற்குப் போதுமானதா?

காலாவ ஏன் ஓட விடல? ஊடகங்கள் திட்டமிட்டு சதி செஞ்சிருச்சி. ஆமா… அது அவர் அரசியலில் ஈடுபடுவதாகச் சொன்னதற்கான எதிர்வினை. ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அதுதான் அரசியல். சொல்லப்போனால் திராவிடக் கூட்டங்கள் மாய்ந்து மாய்ந்து படத்தைப் பற்றி புகந்து தான் எழுதின. உண்மையில் படத்திற்கு பெரிய ஓப்பனிங் இல்லாததற்குக் காரணம் கபாலி எஃபெக்ட் தான்.

ஸ்டாலின் திரைப்படத்தில் சிரஞ்சீவி அனைவருக்கும் உதவுவார். அவர்கள் நன்றி சொல்லும்போது நன்றி வேண்டாம் மூன்று பேருக்கு உதவுங்கள் என்று சொல்லுவார். உடனே அவரது நண்பன் சுனில் ஒருவருக்கு உதவி செய்ய அவர் பதிலுக்கு நன்றி கூறமாட்டார். சுனில் ஏன் எனக்கு நன்றி சொல்லவில்லை என அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட  ”அவங்க உனக்கு நன்றி சொல்லலைன்னா, அவங்க நன்றி சொல்ற அளவுக்கு நீ இன்னும் உதவி செய்யலன்னு அர்த்தம்” என்பார்.

அதேபோலத்தான் ரசிகர்கள் ஒரு திரைப்படத்தைக் கொண்டாட வில்லையென்றால், அவர்கள் கொண்டாடும் அளவுக்கு நம்ம படம் இல்லை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஒரு ரசிகன் எதைக் கொண்டாட வேண்டும், எதை நிராகரிக்க வேண்டும் என்பது அவனுடைய ரசனை மற்றும் சூழல் தீர்மானிக்கும். இயக்குனர்கள் என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் ரசிகர்களுக்கு பிடித்தால் மட்டுமே அவர்கள் கொண்டாடுவார்கள்.

”புதுப்பேட்டையெல்லாம் எப்டி ஃப்ளாப் ஆச்சு.. இதெல்லாம் தியேட்டர்ல பாக்க எப்டி இருந்துருக்கும்?” என சிலாகிப்பவர்களைப் பார்க்க முடிகிறது. புதுப்பேட்டை முதல் காட்சி பார்த்துவிட்டு நொந்து போய் வந்த நண்பர்களின் முகம் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

ஆயிரத்தில் ஒருவன் எப்டி ஃப்ளாப் ஆச்சின்னு இன்னும் ஆர்டின் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். “என்ன நடந்துச்சி.. ஏன் இப்ப படம் முடிஞ்சிது” என கமலா திரையரங்கில் புலம்பிக்கொண்டே எழுந்து சென்றவர்களை இன்னும் ஞாபகம் இருக்கிறது. சில விஷயங்கள் அப்படித்தான். வீட்டில் சாவுகாசமாக உட்கார்ந்து கொண்டு தேவைப்பட்டால் பாஸ் செய்து விட்டு கொஞ்சம் ப்ரேக் எடுத்து பார்க்கும் பொழுது நிறைய திராபையான திரைப்படங்கள் கூட நன்றாகத்தான் இருக்கும்.  திரையரங்க அனுபவம் முற்றிலும் வேறு.

ஒரு திரைப்படம் வெற்றிபெற முதலில் நல்ல கதை எழுத வேண்டும். பின் அதை நல்ல தரத்தில் படமாக்க வேண்டும். பின் அதை முறையாக விளம்பரப்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் வெளியிட வேண்டும். இதில் எந்த இடத்தில் தவறு நடந்தாலும் ரிசல்ட் வேறு மாதிரி ஆகிவிடும். இதையெல்லாம் தாண்டி ஒரு திரைப்படம் வெற்றி பெற ஒரு மேஜிக் நடக்க வேண்டும் என ரஜினியே கூறியிருப்பார். அந்த மேஜிக் ஒரு சில படங்களுக்குத் தான் நடக்கும்.

ஒருவர் மாததிற்கு ஒரு படம் தான் பார்ப்பார். அதற்குத்தான் அவரிடம் காசு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நீங்கள் அதே மாதத்தில் இரண்டு “கொண்டாட வேண்டிய” படங்களை ரிலீஸ் செய்கிறீர்கள் என்றால் இரண்டு படங்களில் ஒன்றைத்தான் அவர் தெரிவு செய்து பார்ப்பார். அதற்காக அவரிடம் சண்டைக்கு போகக்கூடாது அல்லவா?

மழை காலத்திலும், குழந்தைகளுக்கு பரிட்சை இருக்கும் நேரத்திலும் படத்தை ரிலீஸ் செய்து விட்டு ஏன் நீங்க தியேட்டருக்கு கொண்டாட வரவில்லை என்றால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்.

நல்ல திரைப்படங்களை எப்பொழுதுமே மக்கள் ஆதரிக்கத் தவறுவதில்லை. ஆனால் அந்த ஆதரவு திரையரங்கிற்கு வந்து, வசூலாகத் தரவேண்டுமென்றால் அதற்கு நிறைய விஷயங்கள் ஒத்துவரவேண்டும்.

ஆடியன்ஸ திட்டாதீங்க ப்ரோ!!

OLD (2021)



ஆறு வயதில் ஒரு மகன், பதினொரு வயதில் ஒரு மகள் என இரண்டு குழந்தைகளுடைய கணவன் மனைவி இருவரும் விவாகரத்து செய்யலாம் என முடிவெடுக்கிறார்கள். இந்த முடிவைக் குழந்தைகளிடம் சொல்வதற்கு முன் அவர்களை சில நாட்கள் மகிழ்ச்சியாக வைத்திருந்து, தாங்களும் விவாகரத்திற்கான முடிவுகளை எடுக்கலாம் என இருவரும் குழந்தைகள் சகிதம் ஒரு பீச் ரெசார்ட்டிற்குச் செல்கிறார்கள்.

அந்த இடம், அங்கு அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை, பணியாட்கள் நடந்துகொள்ளும் விதம் என அத்தனையும் வெகுவாகக் கவர்கிறது. மறுநாள் காலை வேளை உணவருந்திக் கொண்டிருக்கும் போது அந்த ரெசார்ட்டின் மேலாளர்  இவர்களிடம் லேசாகப் பேச்சுக்கொடுத்து,

“எனக்கு உங்கள் குடும்பத்தை மிகவும் பிடித்திருக்கிறது. எங்களுக்குச் சொந்தமான ப்ரைவேட் பீச் ஒன்று இருக்கிறது. அது பாறைகள் சூழ மிக அருமையாகவும், அதிக கூட்டமில்லாமல் பொழுதை இனிமையாகக் கழிப்பதற்கும் சிறந்த இடம். அந்தக் கடற்கரைக்கு நாங்கள் அனைவரையும் அனுப்புவதில்லை. எங்களுக்குப் பிடித்த வெகு சிலரை மட்டுமே அனுப்புவோம். உங்களுக்கு ஓக்கே என்றால் நீங்கள் அங்கு சென்று பொழுதைக் கழிப்பதற்கு வாகனம் ஏற்பாடு செய்கிறேன்” என்கிறார்.

அவர்களும் சரி என்கிறார்கள்.

“நீங்கள் அந்த ப்ரைவேட் பீச்சிற்கு செல்வதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்” எனவும் வேண்டுகோள் விடுத்து அந்தக் குடும்பம் அங்கு செல்ல ஒரு வாகனம் ஏற்பாடு செய்கிறார்.

வாகனத்தில் அவர்கள் குடும்பம் மட்டுமல்லாமல் மேலும் இரண்டு குடும்பங்களும் இருக்கின்றன.  அனைவரும் கடற்கரையை அடைகின்றனர்.

சுற்றிலும் பாறைகளால் சூழ்ந்து, அவ்வளவு சுத்தமாக, பார்ப்பதற்கு இனிமையாக இருக்கிறது அந்தக் கடற்கரை. அனைவருக்கும் மகிழ்ச்சி. குழந்தைகள் விளையாட ஆரம்பிக்கின்றனர். பெரியவர்கள் கரையில் படுத்து ஒய்வெடுக்க, ஒரு மணிநேரம் கழிகிறது.

அப்பொழுது தான், நம்ப முடியாத, எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கடற்கரையில் எதோ மர்மம் இருப்பதை அனைவரும் உணர்கின்றனர்.

அந்த மர்மத்தைக் கண்டறிந்து, அவர்களால் அந்தக் கடற்கரையிலிருந்து மீண்டு வர முடிந்ததா இல்லையா என்பதுதான் இந்த OLD.

மிஸ்ட்ரி, த்ரில்லர் நாயகன் மனோஜ் நைட் ஷாமலனின் அடுத்த படைப்பு. ஏற்கனவே நாவலாக வந்த இக்கதையை திரைவடியில் எழுதி இயக்கியிருக்கிறார் ஷாமலன். இவர் ஒரு ஹாலிவுட் கே.எஸ் ரவிக்குமார். அவருடைய அனைத்துப் படங்களிலும் ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸைக் கொடுத்துவிடுவார். இதிலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட முழுப்படமுமே கடற்கரையில் தான் நடக்கிறது. ஆனால் போரடிக்காமல் சுவாரஸ்யமாக எடுத்துச் சென்றிருக்கிறார்.

நிச்சயம் பார்க்கலாம்.

 

Saturday, March 26, 2022

PAN INDIA MOVIES!!

 


RRR இந்த வாரம் வெளியாகவிருக்கிறது. தமிழ்த்திரையுலகின் ஒரு முன்னணி நாயகரின் நேரடித் தமிழ்ப்படம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகுமோ அதை ஒத்த அளவிலான திரையரங்குகளை தமிழகத்தில் RRR ஆக்கிரமித்திருக்கிறது.

அடுத்த இரண்டு வாரங்களில் பீஸ்டிற்குப் போட்டியாக களமிறங்குகிறது கன்னடத்து சூராவளி KGF. தமிழ்நாட்டில் பீஸ்டிற்கு KGF ஆல் பெரிதாக எந்த ஆபத்தும் இருக்கப் போவதில்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் பீஸ்ட் KGF இன் அருகில் கூட நிற்க முடியாது.

KGF ஐயும் சேர்த்தால் கடந்த நான்கு மாதங்களில் தென்னிந்தியாவிலிருந்து புஷ்பா, ராதே ஷியாம், RRR என தமிழ்நாட்டில் வெளியாகும் பான் இந்தியத் திரைப்படங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு.

எங்கோ இருந்த கன்னட திரைத்துரையிலிருந்து ஒரு திரைப்படம், இன்று தமிழ்நாட்டின் முன்னணி நடிகரின் படத்திற்குப் போட்டியாகக் களமிறக்கப்படுகிறது. தெலுங்கின் இரண்டாம் நிலை ஹீரோவான அல்லு அர்ஜூனின் படம் தமிழகத்தில் பட்டையைக் கிளப்புகிறது.

தென்னிந்தியாவிலேயே ஹீரோக்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் தமிழ்த் திரைத்துரையிலிருந்து எத்தனை PAN இந்தியப் படங்கள் வெளியாகியிருக்கின்றன? ரஜினியின் ஒரு சில படங்கள் அப்படிப்பட்ட அந்தஸ்தைப் பெற்றன. ஆனால் அவற்றையும் சரியன தரத்தில் கொடுக்காததால் சமீபத்தில் வெளியான அண்ணாத்தே மற்ற மொழிகளில் வெளியானது கூடத் தெரியாமல் காணாமல் போனது.

PAN இந்தியத் திரைப்படங்கள் என்பவை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒத்துபோகும்படி எடுக்கப்படும் படங்கள் அல்ல. அத்தனை மக்களையும் கவர்ந்திழுக்கும் தரத்தில் எடுக்கப்படும் படங்கள். அதற்கு ஒரு சிறந்த இயக்குனரும், அதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு பிரபலமான நடிகரும் கட்டாயம் தேவை.

தமிழில் இருக்கும் பிரபல நடிகர்கள் தற்பொழுது ”சின்ன கல்லூ பெத்த லாபம்” என்கிற ஃபார்முலாவிற்கு அடிமையாகிவிட்டனர் அதாவது அவர்களின் சம்பளம் மட்டும் அதிகம். ஆனால் படம் ஒரு அம்பது அறுபது நாள் கால்ஷீட்டில் விரைவாக எடுத்து முடிக்கப்பட வேண்டும். படத்தில் ப்ரொடக்‌ஷன் வேல்யூ இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. ஹீரோவின் முகத்துக்குத்தான் இங்கு மதிப்பு. அப்படியே விற்றுவிட்டு ஒன்றுக்கு இரண்டாக கல்லா கட்டிவிட்டு அடுத்த சின்ன கல்லூ பெத்த லாபத்திற்கு அடி போடச் சென்று விடுகிறார்கள்.

அடுத்து தமிழ் இயக்குனர்கள். திரையில் பிரம்மாண்டத்தைக் காட்டவும், அடுத்த கட்டத்தில் யோசிக்கவும் இருந்த ஷங்கர் போன்ற ஒருசில இயக்குனர்கள் காலாவதி ஆகிவிட, புதிதாக வந்தவர்களும் புரட்சி போராட்டம் என குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்க நல்ல வணிகத் திரைப்படத்திற்கான இயக்குனர்களுக்கு தற்பொழுது தமிழ் சினிமாவில் பஞ்சம் என்றே சொல்லலாம்.

இருநூறு கோடி பட்ஜெட்டில் உருவாவதக் கூறப்படும் தமிழ் திரைப்படத்தின் Production Value  வெறும் ஐம்பது கோடி பட்ஜெட்டில் உருவாகும் தெலுங்குத் திரைப்படத்தின் Production Value  விற்கு அருகில் கூட வருவதில்லை.

ஒரு காலத்தில் தமிழ்த்திரைப்படங்கள் ஆந்திராவில் பட்டையைக் கிளப்பிய காலங்கள் போய் கடைசியாக அண்டை மாநிலங்களில் நன்றாக ஓடிய தமிழ்ப் படம் என்ன என்பதே இப்பொழுது மறந்து விட்டது.

காரணம் சினிமாவின் அடுத்த கட்டம் என நம் இயக்குனர்கள் கொரியன் படங்களை நகலெடுத்துக் கொண்டிருந்த அதே காலத்தில் அவர்கள், அவர்கள் மொழிப்படங்களின் technical aspects இல் கவனம் செலுத்தி அதை மேம்படுத்திக் கொண்டிருந்தனர். தமிழ் சினிமாவில் அதைத் தவறவிட்டுவிட்டனர்.

ஒருசிலர் மட்டுமே இதைக் கூறிவந்த நிலையில், OTT க்களின் அசுர வளர்ச்சியால் இன்று இது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.  பெரும்பாலானோர் இப்பொழுது  ”நம்ம படத்த விட இவங்க படம் நல்லாருக்கேப்பா” என்கிற கருத்தைக் கூற ஆரம்பித்துவிட்டனர்.  

தமிழில் குறைந்த பட்ஜெட்டில் படு நேர்த்தியான கலைப்படங்களைக் கொடுக்க நிறைய திறமையான இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வணிக ரீதியிலான தரமான படங்களைக் கொடுப்பதற்கு நிச்சயம் நம்மிடம் தரமான இயக்குனர்களை இல்லை அல்லது அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கபடவில்லை.

சில வருடங்களுக்கு முன், தமிழ்ப்படங்கள் வெளியாவதால் கன்னடப் படங்களின் வசூல் பாதிக்கப்படுகிறது என கர்நாடகாவில்  ஒரு போராட்டம் நடந்தது. இதே நிலை தொடர்ந்தால் கூடிய விரைவில் தமிழ்நாட்டில் கூட இதே போல ஒரு போராட்டம் நடக்கலாம். அது நடைபெறாமல் இருக்க முன்னணி நடிகர்களிடமும், இயக்குனர்களிடமும் நிச்சயம் ஒரு பெரிய மாற்றமும் ஒரு பரந்த மனப்பான்மையும் தேவை.



Thursday, March 17, 2022

கடைசி விவசாயி!!

 



எதார்த்தத்தை, நடைமுறையை எந்த ஒரு வெளிப்பூச்சும் இல்லாமல் இவ்வளவு சுவாரஸ்யப்படுத்த முடியும் என்றால் உண்மையில் அது இயக்குனர் மணிகண்டனுக்கு  மட்டுமே சாத்தியம். எந்த ஒரு வட்டத்திற்குள்ளும் தன்னை அடைத்துக் கொள்ளாமல், வாய்ப்பு கிடைக்கிறதே என்பதற்காக போராளியாகவும் மாறாமல் இயல்பான, அதே சமயம் டாக்குமெண்டரி மாதிரியான சலிப்பையும் ஏற்படுத்தாமல், ஒரு திரைப்படத்திற்கான மரியாதையும், பார்வையாளர்களுக்குண்டான மரியாதையும் கொடுக்கும் மணிகண்டன் ஒவ்வொரு படத்திலும் வியக்கவைக்கிறார்.

காக்கா முட்டை கொடுத்த உணர்வு அதற்கு முன் எந்தத் தமிழ்த்திரைப்படமும் கொடுக்காத ஒரு உணர்வு. அதன்பிறகு வந்த குற்றமே தண்டனையில் Tunnel Vision பிரச்சனையால் விதார்த் பாதிக்கப்பட்டிருப்பார். அதாவது ஒரு சிறிய வட்டத்திற்குள் மட்டுமே அவருக்கு பார்வை தெரியும். சுற்றி இருட்டாக இருக்கும். ஒரு காட்சியில் விதார்த்  மருத்தவரிம் சென்றிருப்பார்.

“சின்ன வயசுலருந்து இந்தப் பிரச்சனை இருக்குன்னு சொல்றீங்க… ஏன் இவ்வளவு நாளா இத கவனிக்காம இருந்தீங்க” என்று கேட்பதற்கு விதார்த்

“எல்லாருக்குமே இப்படித்தான் தெரியும்னு நினைச்சிகிட்டு இருந்தேன் டாக்டர் “ என்பார். ஆச்சர்யமாக இருந்தது எப்படி இப்படி எழுதமுடிகிறதென்று.

நாம் பார்க்கும் உலகம் நமக்கு எப்படித் தெரிகிறதோ அப்படித்தானே மற்றவர்களுக்கும் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். பிறப்பிலிருந்து ஒரு பிரச்சனை இருக்கும்போது அவனால் அதை உணர முடியாது என்பதை அதற்குப் பிறகுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இப்பொழுது கடைசி விவசாயி. கார்ப்பரேட் கம்பெனிகளைத் திட்டி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வில்லன்களாக அவர்களைச் சித்தரிக்காமல் எடுத்த முதல் விவசாயப் படம் என்பதற்காகவே இந்தப் படத்தைப் பாராட்டலாம்.

எந்தக் கருத்தையும் வலிய திணிக்கவில்லை. ”இந்த மண்ணிலேயே அத்தனையும் இருக்கிறது. அதை நீரூற்றி பாதுகாத்தால் மட்டுமே போதும். நமக்குத் தேவையானவை அனைத்தையும் அது தரும்” என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் திரைப்படம்.

விஜய் சேதுபதி, யோகிபாவுவைத் தவிற அனைவருமே புதுமுகங்கள். அப்படியே அந்த கிராமத்தில் இரண்டு மணிநேரம் இருந்துவிட்டு வந்ததைப் போன்றதொரு உணர்வைத் தருகிறார் மணிகண்டன். எதிர்மறையான பாத்திரங்கள் என யாருமே இல்லை. போலீஸ்காரர்கள்  கொஞ்சம் அப்படிக் காட்டப்பட்டாலும், வயலில் தண்ணி பாய்ச்சி விட்டு “இந்த ரெண்டு மணிநேரம் தான்யா கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்” என அந்த அதிகாரி சொல்லும்போது அவர்கள் மீது இருந்த மொத்தக் கோபமும் மறைந்து பரிதாபத்தை வரவழைக்கிறது.

மாயாண்டியாக வாழ்ந்திருக்கும் தாத்தாவின் யதார்த்தமான வசன உச்சரிப்புகளும், அவரின் வெகுளித்தனமான நடிப்பும் அட்டகாசம்.

கோர்ட்டில் வழக்கில் நடந்துகொண்டிருக்கும் போதே ”இருங்க நா தோட்டம் வரைக்கும் பொய்ட்டு வந்துடுறேன்” எனக் கிளம்புவது விவசாயத்தின் மீதான அவர்களின் பிடிப்பை ஆழமாகச் சொல்லும் ஒரு காட்சி. உண்மையில் ஆடு மாடு வைத்திருப்பவர்கள், விவசாயம் செய்பவர்களால் அவற்றை விட்டுவிட்டு ஒரு நாள் கூட இருக்கமுடியாது. எந்த ஊருக்குச் சென்றாலும் ”ஆடு  மாடு தனியா இருக்கும்.. வயலுக்கு தண்ணி கட்டனும்” என எப்படியாவது வீடு வந்து சேர்ந்து விடுவார்கள்.  அந்த பஞ்சாப் விவசாயிகள் எல்லாம் எப்படி மாசக்கணக்குல விட்டு விட்டு  இருந்தார்கள் என்று தெரியவ்ல்லை

கடைசியில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மாயாண்டி வயலுக்குள் இறங்கும் காட்சி, மாஸ் ஹீரோக்களின் அறிமுகக் காட்சியைத் தாண்டிய மாஸ்.

இளையராஜா ஏன் விலகினார் என்று தெரியவில்லை. ஒருவேளை இளையாராஜா இசையமைத்திருக்கும் பட்சத்தில் இரண்டு மூன்று இடங்களில் நம்மை அழவிட்டுருப்பார்.

படம் முடிந்த பிறகு எண்டு கார்டில் நடிகர்கள் பெயரைப் பார்க்கும்போது படத்தில் நடித்த நிறைய பேர் ஏற்கனவே இறைவனடி சேர்ந்துவிட்டனர். நல்லாண்டி தாத்தாவே இறந்துவிட்டார் என்பது வருத்தமாக இருந்தது.

படத்தில் ஆங்காங்கு பெரியாரையும், அம்பேத்காரையும் காட்டியிருந்தால் படம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கும். ஆனால் பாவம் முருகனும், மயிலும் வந்து செல்வதால் நிறைய பேர் கண்களில் படம் இன்னும் படவில்லை.

இதுவரை பார்க்காதவர்கள் கட்டாயம் பார்க்கவும்!!

சோனி லைவில் இருக்கிறது.

Thursday, March 3, 2022

BANGARRAJU (2022)



மனைவிக்கு அதிக முக்கியதுவம் கொடுக்காமல் வேலை வேலை என்றிருக்கும் மகனின் உடம்பிற்குள் ரொமாண்டிக் ஹீரோவான அப்பாவின் ஆவி புகுந்து மகனை ரொமான்ஸ் வேலைகளில் ஈடுபடச் செய்து, அவர்களின் இல்லற வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றி வைக்கும் அற்புதமான ஒரு கதைக்களத்தைக் கொண்ட Soggade Chinni Nayana திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கிறது இந்த பங்கார் ராஜூ.

SOGGADE CHINNI NAYANA விமர்சனத்திற்கு க்ளிக்கவும்

மகன் மருமகள் இடையே அன்யொன்யத்தைப் பெருக்க மகனின் உடம்பிற்குள் ஒரு நிமிடம் புகுந்து மருமகள் இடுப்பைக் கிள்ளி விட்டு மீண்டும் வெளியே வந்து விடுவது போல ஒருசில சல்லித்தனமான காட்சிகள் இருந்தாலும் அருமையான பாடல்களுடன், கலர்ஃபுல்லான, ஜாலியான கிராமத்துக்கு கதைக்களத்தில் பயணிக்கும் soggade chinni nayana வெற்றியும் பெற்றது.

அந்த வெற்றிதான் இந்த இரண்டாம் பாகத்திற்கு வித்திட்டிருக்கிறது. முதல் பாகத்தில் மகனின் உடம்பிற்குள் புகுந்து அவருக்கு உதவிய பங்கார்ராஜூவின் ஆவி இந்த முறை பேரனைக் காதல் வலையில் விழவைக்க அவர் உடம்பிற்குள் புகுந்து… நீங்க நினைக்கிற மாதிரில்லாம் ஒண்ணும் இல்ல. சும்மா உதவி செய்கிறார்.

பங்கார்ராஜூவின் பேரனாக சிரிப்பழகன் நாக சைதன்யா. நாயகியாக பேபம்மா க்ரித்தி ஷெட்டி. பூமியில் ப்ளேபாயான பங்கார்ராஜூ இறந்த பின்னரும் மேலே சென்று ரம்பா, மேனகா ஊர்வசியையெல்லாம் கரெக்ட் செய்து டூயர் ஆடிக்கொண்டிருக்கிறார்.

சென்ற முறை நாகர்ஜூனா மட்டும் பூமிக்கு ஆவியாக வந்தார். இந்த முறை ரம்யா கிருஷ்ணனும் இறந்து, அவருடைய ஆவியும் சேர்ந்து குடும்ப சகிதமாக வந்து பேரனுக்கு உதவி செய்கிறார்கள்.

ஆஹா ஓஹோ என்றெல்லாம் இல்லையென்றாலும் பெரிய அளவில் அருக்காமல் நீட்டாகச் செல்கிறது. விஷூவல்ஸ் அருமை. அதுவும் சொர்க்கத்தில் நடப்பது போன்ற காட்சிகள் கண்ணுக்கு விருந்து . அவ்வளவு அழகு. அனூப் ரூபன்ஸ் இசையில் பாடல்கள் அனைத்துமே ஒக்கே ரகம்.

நாகர்ஜூனா, ரம்யா க்ருஷ்ண்ன் ஜோடி கொள்ளை அழகு. அதுவும் நாகர்ஜூனாவிற்கு வயதே ஆகாது போல. என்னதான் சொன்னாலும், தாத்தா, பாட்டியின் ஆத்மாக்கள் அருகிலேயே இருந்து பேரனுக்கு உதவி செய்யும் காட்சிகளில் ”ச்சா உண்மைலயே இப்டில்லாம் இருந்தா நல்லாருக்கும்ல” என நினைக்க வைக்கின்றன.

ZEE5 இல் இருக்கிறது.

ரொம்பவும் எதிர்பார்க்காமல், ஜாலியாக பொழுதைப் போக்க நினைப்பவர்கள் பார்க்கலாம்.