Friday, October 20, 2017

மெர்சல் - ஜில் ஜங் ஜக்!!!


Share/Bookmark
இத்தனை வருஷ தமிழ் சினிமா எத்தனையோ பரிணாம வளர்ச்சிகள அடைஞ்சிருக்கு. ஆனா என்ன வளர்ச்சி அடைஞ்சாலும் மாறாம இருக்கது இந்த மாஸ் ஹீரோக்களோட பழி வாங்குற கதைகள். இந்தக் கதைக்கான டெம்ளேட் ரொம்ப சிம்பிள். மூணு அல்லது நாலு வில்லன்கள். பெரும்பாலும் கவர்மெண்ட் ஆஃபீசர்களா இருப்பாங்க. ஒரு டாக்டர், ஒரு வக்கீல், ஒரு போலீஸ் மற்றும் இதுல ஒரு அரசியல்வாதியையும் சேர்த்துக்கொள்ளுதல் உசிதம்.  முதல் பாதி முழுக்க ஹீரோ போலீஸூக்கு தண்ணி காட்டி ஒவ்வொருத்தரா கடத்திக் கொல்லுவாறு. இந்த கேப்புல ஒரு நல்ல புள்ளையா பாத்து லவ்வுவாறு.  ரெண்டாவது பாதிலயோ இல்ல இண்டர்வல்லயோ ஹீரோயினுக்கு இவன் ஒரு கொலைகாரன்னு தெரிஞ்ச உடனே “ச்சீ…ரேஸ்கல்.. நீ ஒரு கொலைகாரனா”ன்னு காரித் துப்பிட்டு விலகிப் போகும்போது, ஹீரோ கூடவே சுத்துற ஒரு அள்ளக்கை அந்தப் புள்ளைய நிறுத்தி “அவன் ஏன் அவனுங்களயெல்லாம் கொல்றான் தெரியுமாம்மா?”ன்னு ஆரம்பிச்சி வலுக்கட்டாயமா அந்த புள்ளைக்கிட்ட ஒரு மொக்கை ஃப்ளாஷ்பேக்க சொல்லுவானுங்க.

ஃப்ளாஷ்பேக்குல ஹீரோவுக்கு நெருக்கமான ஒருத்தர் இறந்துருப்பாங்க. ஃப்ளாஷ் பேக் முடிஞ்ச உடனே கொல்றதுக்கு இன்னும் ஒரே ஒருத்தன் மட்டும் பாக்கியிருப்பான். அது யாருன்னு பாத்தா ஹீரோயினோட அப்பாவா இருக்கும். பத்து நிமிஷ ஃப்ளாஷ்பேக்க கேட்டுட்டு இத்தனை வருஷம் வளர்த்த அப்பாவ கொல்றதுக்கு ”நா உதவி பன்றேன்”னு வாய் கூசாம சொல்லும். அத்தோட விட மாட்டானுங்க.  அந்த இடத்துல கட் பண்ணி ஒரு குத்து சாங்க போட்டு விடுவானுங்க. இதான் காலங் காலமா பாக்குற நமக்கு சலிச்சிப் போனாலும் எடுக்குற அவங்களுக்கு சலிக்காம எடுத்து நமக்கு போட்டுக்காட்டுற பழிவாங்குற கதைகள். 

அட்லி விஜய்ய வச்சி அடுத்த படம் எடுக்க போறாருங்குற நியூஸ் வந்த உடனே எல்லார் மனசுலயும் தோணுன ஒரே கேள்வி ”இந்த தடவ எந்த படத்துலருந்து எடுக்கப் போறாரு”ன்னு தான். ஏன்னா நம்மாளு ட்ராக் ரெக்கார்டு அப்டி. அதுவும் மூணு விஜய்ன்ன உடனே தமிழ்ல ஏற்கனவே அந்த காம்பினேஷன்ல வந்தது மூன்று முகம், அபூர்வ சகோதரர்கள்ன்னு ஒரு சில படங்கள் தான். அதுலயும் ஒருத்தர் மேஜிஷியன்ங்குற செய்தி வந்த உடனே அந்த காம்பினேஷன்ல வந்துருக்க படம் ப்ரஸ்டீஜ். சரி இதையெல்லாம் கலந்து விட்டு ஒரு மாதிரியான படமா எடுக்கப்போறாருன்னு நாமல்லாம் ஒரு யூகமா வச்சிருந்தா, இந்த அட்லீ பாருங்க நம்ம மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு நம்ம நினைச்ச மாதிரியே எடுத்து வச்சிருக்காப்ள.  

ரெண்டு நாளுக்கு முன்னால நண்பர் ஒருத்தர்கிட்ட மெர்சல் பத்தி பேசிக்கிட்டு இருந்தேன்.  ”படம் எப்டி இருக்கப்போவுதுன்னு தெரியலஜி “ ன்னு நான் சொன்னதுக்கு அவரு சிம்பிளா ஒரு பதில் சொன்னாரு. ”ஜி.. விஜய் படத்துல ரெண்டே வகை தான். ஒண்ணு விஜய் ஃபேன்ஸ்க்கு எண்டர்டெய்ண்மெண்ட்டா இருக்கும். இல்லைன்னா நமக்கு எண்டர்டெய்ண்ட்மெண்ட்டா இருக்கும். ஆனா கண்டிப்பா எண்டர்டெய்ண்ட்மெண்ட் மட்டும் உறுதி”ன்னு. பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சி.

பொதுவா விஜய் படங்கள்ல மேல சொன்ன மாதிரி எதாவது ஒரு பக்க எண்டர்டெய்ண்மெண்ட் தான் படம் முழுசுமே இருக்கும். ஆனா அட்லி கொஞ்சம் வித்யாசமா எல்லா ஆடியன்ஸையும் கவர் பன்ற மாதிரி ஒரு பாதி விஜய் ஃபேன்ஸூக்கும் இன்னொரு பாதிய நமக்கும் இருக்க மாதிரி சரிபாதியா பிரிச்சி வச்சி செஞ்சிருக்காரு.  

தேணாண்டாள் பிலிம்ஸ் லெட்டர் பேட்ல ப்ரிண்ட் செய்யப்பட்ட மெர்சல் படத்தோட கதைச் சுருக்கம் லீக் ஆனத நிறைய பேர் பாத்துருப்பீங்க. அச்சு பிசிறாம அதே தான் கதை. மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒருசிலர் முதல் பாதில கொல்லப்பட, அவங்க ஏன் கொல்லப்பட்டாங்கங்குறதுக்கான காரணத்த விளக்குறதுதான் ரெண்டாவது பாதி. 

டாக்டர் மாறனா நடிச்சிருக்க விஜய்யோட கெட்டபும், உடல்மொழியும், வசன உச்சரிப்புகளும் சூப்பர். இந்த மாதிரி அமைதியான, அலட்டல் இல்லாத விஜய்யப் பாத்தே ரொம்ப நாளாச்சி. சுருக்கமா சொன்னா நம்ம விஜய் ஆண்டனி சலீம், பிச்சைக்காரன் படங்கள்ல பேசுற மாதிரி விஜய் பேசிருக்காரு..

வேஷ்டி சட்டையோட ஏர்போர்ட்டுக்குள்ள நுழையும்போது கெத்தா இருக்காரு. கூடவே வைகைப்புயல் வடிவேலு. காமெடி பிரிக்கப் போறாங்கன்னு எதிர்பாத்தா, காமெடிங்குறதுக்கான அறிகுறியே படத்துல தென்படல. மெஜீஷியனா வர்ற விஜய் மெஜீஷியனா இல்ல மந்திரவாதியான்னு ஒரே கன்பீசனா இருக்கு. சண்டை நடந்துகிட்டு இருக்கும்போது காஜலோட Bag ல என்ன இருக்குன்னு கேக்குறாரு. அது எதோ முப்பாத்தம்மன் ஃபோட்டோன்னு சொல்லுது. உடனே நம்மாளு அது போதுமேன்னு சொல்லிட்டு அந்த சின்ன ஹேண்ட் Bag லருந்து ஆளுயர சூளாயுதம் ஒண்ண வெளிய எடுத்து சண்டை போடுறாரு.  ஏண்ணே… மேஜிக்னாலும் ஒரு நாயம் வேணாமாண்ணே.. 

முதல்பாதி முழுக்க ரொம்ப அழகாவும், சுவாரஸ்யமாவும் போகுது. ரெண்டாவது பாதி ஆரம்பிச்ச உடனே நம்ம ஆளப்போற தமிழன் உள்ள வர்றாரு. படம் படுத்துருது. சுவாரஸ்யமே இல்லாம ஏனோதானோன்னு கதை நகருது. ”மண்ண அள்ளாதீங்க, தண்ணிய உரியாதீங்க”ன்னு சும்மா வந்ததுக்கு எதயாவது பேசனுமேன்னு பேசிக்கிட்டு இருக்காரு. வில்லனால அவரும் அவரோட மனைவியும் கொல்லப்பட அந்த நீ……ண்ட ஃப்ளாஷ்பேக் முடியிது. 

மத்த பழிவாங்குற படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் ரெண்டு மிகப்பெரிய வித்யாசத்த இயக்குனர் அட்லி உருவாக்கிருக்காரு. என்னன்னா வழக்கமா மூணு வில்லன்கள் இருப்பானுங்க. ஆனா இந்தப் படத்துல ரெண்டு தான். அடுத்து ஃப்ளாஷ்பேக் முடிஞ்ச உடனே வர்ற குத்துப்பாட்டு இந்தப் படத்துல இல்லை. 

மூணு ஹீரோயின்கள்லயும் நித்யா மேன்ன் மட்டும்தான் கொஞ்ச நேரம் ஸ்கீரின்ல வருது. ஆனா அத ஏன் பஞ்சாபியா காமிச்சாங்க, ஏன் விஜய் பஞ்சாப்லருந்து ஆளப்போறான் தமிழன்னு பாடுனாருங்குற கேள்வியெல்லாம் நிறைய இருக்கு. (தமிழ்நாட்டுல பாடுனாதான் கழுத்தாம்பட்டையிலயே போடுறாய்ங்களே) காஜலும், சமந்தாவும் மின்னல் மாதிரி வந்துட்டு ஜொய்ங்குன்னு போயிடுறாங்க. பிரதர், சிஸ்டர்னு சொல்லிட்டு அப்புறம் அவங்கள லவ் பன்ன வைக்கிற அருவருப்பான சீக்குவன்ஸ அட்லி விடமாட்டாப்ள போல.எஸ்.ஜே.சூர்யா அவரோட கேரக்டர அசால்ட்டா பண்ணிருக்காரு. வழக்கமான வில்லன். பெரிய அளவுல ஸ்பெஷலா சொல்றதுக்கு எதுவும் இல்லை. 

சமூகக் கருத்துக்கள மசாலா கலந்து ஜனரஞ்சகமா சொல்றது ஷங்கரோட பாணி. அதே பாணிய அவரோட சிஷ்யன் அட்லியும் ஃபாலோ பன்னிருக்காரு.. பாணிய மட்டும் ஃபாலோ பன்னா பரவால்ல. ஷங்கர் படத்துல வந்த காட்சிகளையுமா அப்படியே ஃபாலோ பன்னிருக்காரு. மெர்சல் படத்துல வர்ற ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு படங்கள்ல ஏற்கனவே பார்த்தது. அதுக்காகவே தனியா ஒரு பதிவு கூட எழுதலாம். அடுத்தடுத்து வரப்போற காட்சிகளையும் ரொம்ப ஈஸியா யூகிக்க முடியுது.

லாஜிக்ல ஓட்டை இருக்கும்னு பாத்தா சத்யமா இல்லை. ஓட்டையிலதான் லாஜிக்கே இருக்கு. உதாரணமா எஸ்.ஜே.சூர்யா முதல் முதலா விஜய் முகத்த டிவில பாத்ததுமே ரமணா படத்து விஜயன் மாதிரி “நோ”ன்னு கத்துறாரு. ஆனா முதல்ல கொல்லப்படும் வில்லன் விஜய் கூட சகஜமா பேசிகிட்டு இருக்காரு. அவருக்கு எந்த ஞாபகமும் வரல. விஜய் முகத்த அடையாளமும் தெரியல. என்ன மிஸ்டர் பிள்ளைவாள்?

கடைசி வில்லனையும் கொண்ணதுக்கு அப்புறம் கத்தி படத்துல பேசுன மாதிரி, உ.பில ஆக்ஸிசன் இல்லாம இறந்த குழந்தைகள், மனைவியின் சடலத்த கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காத பரிதாபம்னு சமீபத்துல நடந்த சம்பவங்களையெல்லாம் நினைவுபடுத்தி ஒரு நீண்ட வசனம் பேசுறாரு. சினிமாவுல இந்த மாதிரி current affairs பத்தியெல்லாம் பேசுனா மக்கள்ட நல்லா ரீச் ஆகலாம்னு யாரும் நம்மாளுக்கு ஐடியா சொல்லிக்குடுத்துருப்பாங்க போல. இதப் பத்தியெல்லாம் பேசனும்னு ஆசைப்பட்டா அவர் நேரடியாவே பேசலாம். சினிமாவப் பொறுத்த அளவுல ஒரு நடிகர் அவர் எடுத்துக்கிட்ட கதைக்கும், கதைக்களத்துக்கும் நியாயம் செஞ்சா போதும். 

அதுலயும் இப்ப இருக்க நடிகர்கள் பெரும்பாலானோர் மக்களோட உணர்சிகளை காசாக்க முயற்சி செஞ்சிட்டு இருக்காங்க. ஜல்லிக்கட்ட காப்பாத்துறேன், விவசாயத்த காப்பாத்துறேன்னு சமீபத்துல வந்த நிறைய படங்கள்ல கதைக்கும் வசனத்துக்கும் சம்பந்தமே இல்லாம இடைச்சொருகலா வசனங்களையும் காட்சிகளையும் உள்ள சொருகிட்டு இருக்காங்க. மக்கள் எப்போதுமே ரொம்ப தெளிவுங்க சார்.

மெர்சலுக்கு ஏ.ஆர். ரஹ்மான்னு இசைன்னு சொல்றாங்க. ஆனா  பிண்ணனி இசையிலயெல்லாம் எங்கடா ரஹ்மானக் காணாம்னு கரண்டி போட்டு தொழாவ வேண்டியிருக்கு. ஒண்ணும் சிறப்பா இல்லை. ஆனா ஏற்கனவே இருந்த விஜய்-ரஹ்மான் செண்டிமெண்ட்ட இந்தப் படம் கண்டிப்பா உடைக்கும். உதயா, அழகிய தமிழ்மகன் மாதிரி இந்தப் படம் கொடூர ஃப்ளாப் ஆக வாய்ப்பே இல்லை.

மொத்தத்தில் மெர்சல் முதல் பாதி அருமை. ரெண்டாவது பாதி பார்க்க தேவை நிறைய பொறுமை. விஜய் ஒருவருக்காக கட்டாயம் பார்க்கலாம். 

Monday, October 2, 2017

கருப்பன் என்கிற கடுப்பன்!!!


Share/Bookmark
நாட்டுல ரொம்ப முக்கியமான சம்பங்கள் எதாவது நடந்து முடியிறப்போ அடுத்த ஒருவாரம் பத்துநாள்ல அந்த சம்பவத்தை மையமாக வச்சி ஒரு படம் வரப்போகுதுன்னு கண்டிப்பா ஒரு அறிவிப்பு வந்தே தீரும். அப்படி இந்த வருஷம் ஜனவரில நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட பூஜைதான் இந்த கருப்பன் போல.

ட்ரெயிலரப் பாக்குறப்போ எதோ ஜல்லிக்கட்ட மையமா வச்சி எடுக்கப்பட்ட ஒரு கிராமத்து ஆக்‌ஷன் படம் மாதிரி தோணுச்சி. ஆனா படத்தோட ஆரம்பத்துலயும் க்ளைமாக்ஸ்லயும் வர்ற வாடிவாசல் காட்சிகளத் தவற  படத்துக்கும் ஜல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் இல்ல.


படம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆகியும் படத்தோட கதை என்ன , எதை நோக்கிப் போயிட்டு இருக்கு அப்டிங்குறதயே புரிஞ்சிக்க முடியல. ”புரிஞ்சி போச்சு சார்… இண்டர்வல் ப்ளாக்குல வச்சிருக்கீங்க ட்விஸ்ட்ட” அப்டின்னு பயணம் படத்துல பிரித்திவிராஜ் ரசிகன் வெய்ட்  பன்றமாதிரி வெய்ட் பன்னா இண்டர்வலும் வந்துருச்சி. ஆனா கதைக்கான எந்த அறிகுறியும் இல்லை. “செகண்ட் ஹாஃப்ல மொத்தக் கதையும் சொல்லலாம்னு தானே வெய்ட் பன்றீங்க… தெரியும் சார்”ன்னு மறுபடியும் செகண்ட் ஹாஃப் பாத்தா படமே முடிஞ்சி போச்சு. கடைசிலதான் படத்தோட கதையே நமக்கு வெளங்குச்சி. ”கதையே இல்லாம படம் எடுக்குறது எப்படி?” அப்டிங்குறத்த்தான் இந்தப் படத்தோட கதையே.

மாடுபிடி வீரனான கருப்பனுக்கு, தன்னோட மாட்டை அடக்குனா தங்கச்சிய கல்யாணம் பன்னித்தர்றேன்னு வாக்கு குடுக்குறாரு ஊர்ல பெரிய கையான பசுபதி. கருப்பனும் மாட்ட அடக்கிட, அழகான தங்கச்சிய கருப்பனுக்கு கட்டி வச்சிடுறாங்க. ஆனா பாருங்க பசுபதியோட மச்சான் பாபி சிம்ஹா இளவு காத்த கிளி மாதிரி அந்தப் புள்ளைய கல்யாணம் பன்னிக்க மாமா வீட்டுலயே குத்த வச்சி உக்கார்ந்துருக்க, நேத்து வந்த கருப்பன் லபக்குன்னு கவ்விக்கிட்டுப் போயிட பாபி சிம்ஹாவுக்கு கோவம் வருது பாருங்க… ”அவளுக்கு எத்தனை கல்யாணம் பன்னாலும், தாலிய அறுத்துட்டு அவ கூட வாழாம விடமாட்டேண்டா”ன்னு ஒரு சபதம் போடுறாரு. வரே…வா.. இதுவல்லவா சபதம். 

அதுக்கு பல ஜால்ரா வேலைகள்லாம் பாத்து கருப்பன் ஜோடிய பிரிக்க முயற்சி செய்ய, கடைசில பிரிச்சாரா இல்லையாங்குறது தான் கதை. அவரு பிரிச்சாரோ இல்லையோ தியேட்டருக்குள்ள விட்டுக்கிட்டு நம்மள நல்லா பிரிக்கிறாங்க.

விஜய் சேதுபதி காது வரைக்கும் மீசை வச்சிக்கிட்டு கெத்தா வந்து மாட்ட அடக்கும்போது, இன்னிக்கு செம ஆக்‌ஷன் ப்ளாக் காத்துக்கிட்டு இருக்குன்னு நினைச்சேன். கடைசில சார்லி சொல்ற மாதிரி “அவரும் ஆசைப்பட்டார்”ங்குற நிலமையாயிருச்சி. அந்த மீசைக்கு ஒரு மதிப்பு குடுத்தாவது இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்துருக்கலாம்.

காமெடிக்கு ஒரு ஜோடி சிங்கம் புலி. சிங்கம் புலிய காமெடிக்கு சேத்துக்கிட்ட படம் எதாவது வெளங்கிருக்கா? கொடுமை என்னன்னா விஜய் சேதுபதியும், சிங்கம் புலியும் பாடி கண்டிஷன்ல ஒரே மாதிரி இருக்காங்க. ஒரே மாதிரி சட்டை வேற போட்டுருக்காங்க. மூஞ்ச மூடிட்டு பாத்தா யாரு சேதுபதி யாரு சிங்கம்புலின்னே கண்டுபுடிக்க முடியாது போல. ஒரு ஹீரோவுக்கு ரொம்ப முக்கியமே உடம்புதான். சேதுபதி சார் அதப் பத்தி கண்டுக்கிறதே இல்ல போல. டி.ஆர் மாதிரி ஆகிட்டு இருக்காரு.  

பசுபதிக்கு நல்ல கேரக்டர். ஆனா நடிக்கிறதுக்கு தான் எந்த நல்ல சீனும் இல்ல. இந்த மசாலா படங்கள்லயெல்லாம் “விஷயத்த பெருசு பன்ன வேணாம்”, “இப்ப வேணாம்… ஆறு மாசம் கழிச்சி செய்வோம்”, “எலெக்‌ஷன் வர்றதால இப்ப கை வச்சா நம்ம பேர்தான் கெட்டுப்போகும்” “அடுத்து நம்ம அடிக்கிற அடி தலையிலயா இருக்கனும்” இப்டிப்பட்ட வசனங்கள சொல்றதுக்குன்னே   வில்லனுக்கு அள்ளக்கையா பக்கத்துலயே ஒரு கேரக்டர்  வரும். அந்த மாதிரி ஒரு சூப்பர் கேரக்டர்தான் பாபி சிம்ஹா இந்தப் படத்துல பன்னிருக்காரு. பாடி சோடா ஆறு மாசமா பில்ட் அப் மட்டுமே குடுத்துக்கிட்டு இருக்க மாதிரி கடைசி வரைக்கும் அள்ளக்கையாவே நடிச்சிருக்காரு கருப்பன் படத்தோட மெயின் வில்லன் பாபி சிம்ஹா.

படத்துல ஒரே ஆறுதல் ஹீரோயின். தங்கம் மாதிரி செம அழகு. இந்த நாய்க்கு ஒரு முழு எழும்புத்துண்டு கிடைச்சிதுன்னா அது ஒரு இடத்துல இருக்காது. அத வச்சிக்கிட்டு ரோட்டுல சுத்தும், கொஞ்ச நேரத்துல எதாவது சந்துல நிக்கும், அப்புறம் அதக் கொண்டு போய் எதாவது ஒரு இடத்துல வச்சிட்டு அது பக்கத்துலயே உக்காந்துக்கும். படத்துல விஜய் சேதுபதிக்கு அந்தப் புள்ளைய கல்யாணம் பன்னிக்குடுத்த அப்புறம் நடக்குறது அதுதான். கொஞ்சுறாரு.. கொஞ்சுறாரு.. கொஞ்சிக்கிட்டே இருக்காரு. வீட்டுல ரோட்டுல, கோவில்ல, ஹாஸ்பிட்டல்லன்னு இதே தான். எடுக்குறதுக்கு சீன் இல்லாம எடுத்த சீனையே எத்தனை தடவய்யா எடுப்பீங்க. படத்துல முக்கால்வாசிக் காட்சிகள் சேதுபதியும் ஹீரோயினும் பேசிக்கிற காட்சிகள்தான்.

ஒருகட்டத்துல விஜய்சேதுபதி குரலே நமக்கு அலர்ஜியாகுற அளவுக்கு நான் ஸ்டாப்பா பேசிக்கிட்டு இருக்காரு.  ஒருசில இடங்கள்ல விஜய்சேதுபதியோட ட்ரேட் மார்க் நக்கல் ரசிக்க வைக்கிது. ஆனா ஓவராலா விஜய் சேதுபதி அலுக்கிறாரு.

படத்துல எது நடக்குதோ இல்லையோ , கால் மணி நேரத்துக்கு ஒரு பாட்டு மட்டும் கரெக்ட்டா வந்து நிக்கிது. கருவா கருவா பயலே பாட்டு மட்டும் சுமார் ரகம். மத்ததெல்லாம் கடினம். பாடல்களப் படமாக்குன விதம் அதுக்கும் மேல.  சும்மா ஹீரோ ஹீரோயின் மூஞ்ச மூஞ்ச காமிச்சா மட்டும் பாடல்களுக்கு பத்தாது. எதாவது ஒரு தீம் எடுத்துக்கிட்டு அதுல பன்னாதான்  சுவாரஸ்யமா இருக்கும்.

தொண்டன் படத்துல தோழர் சமுத்திரக்கனி சம்பந்தமே இல்லாம காளைகள் பேரெல்லாம் நாலு பக்கம் எழுதிவச்சி மனப்பாடம் பண்ணி ஒப்பிச்ச மாதிரி இங்க சம்பந்தமே இல்லாம தீடீர்னு விஜய் சேதுபதி விவசாயம் பன்றாரு. விவசாயிகளப் பத்தி பெருமையா ரெண்டு வசனம் பேசுறாரு. தியேட்டர்ல விசில். ஏன் இதெல்லாம்?

படத்தோட முக்கால்வாசி இடங்கள்ல கொம்பன், குட்டிப்புலி, மருது போன்ற படங்கள்தான் கண்ணுமுன்னால தெரியிது. முத்தையா ஒரே மாதிரி படம் எடுத்தாலும், ஒரே படத்த திரும்பத் திரும்ப எடுத்தாலும் இந்த அளவுக்கு ஜவ்விழுப்பா இழுக்க மாட்டாரு. படம் மொத்தம் ரெண்டே கால் மணி நேரம்தான் ஓடுது. ஆனா எதோ ரெண்டு நாளா படம் பாக்குற மாதிரியே ஒரு ஃபீலிங்கி. இயக்குனர் ஆர்.பன்னீர்செல்வம் இன்னும் சுவாரஸ்யமா திரைக்கதை எழுதுனா மட்டும்தான் ஜெயிக்க முடியும்.

முதல் காட்சிக்கு விஜய் சேதுபதியோட ரசிகர்கள் செம சவுண்டு. டைட்டிலுக்கெல்லம் ஒரே ஆர்ப்பாட்டம். இண்ட்ரோ சீன் முடிஞ்சோன ஆஃப் ஆனவங்கதான். அதுக்கப்புறம் படம் முடிஞ்சப்புறம் ரெண்டு மூணு பேர நாந்தான் எழுப்பி விட்டேன். அதுவும் படம் முடிஞ்சி போகும்போது அவங்கள்ள ஒருத்தர் சிங்கம்புலி வாய்ஸ்ல “நீங்கல்லாம் மாடுமுடித்தாண்டி சாகப்போறீங்க”ன்னு படம் எடுத்தவங்களத் திட்டிட்டுப் போனது ஹைலைட்.

மொத்தத்துல வந்த தடமே தெரியாமா இப்டி வந்துட்டு அப்டிப் போற விஜய் சேதுபதியின் படங்கள்ல கருப்பனும் ஒண்ணு. 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...