சென்னைக்கு
வேலைக்கு கிட்டத்தட்ட எட்டு வருஷத்துக்கும் மேல ஆச்சு. சர்வீஸ் எஞ்ஜினியர் வேலை. எங்க டீம்ல ஒரு பதினாறு. எங்களுக்கு பயமே கிடையாது
அப்டின்னெல்லாம் தப்பா நினைச்சிடாதீங்க. நல்லாவே பயப்படுவோம். டயர் செய்யிற மிஷின இங்க
உள்ள ஃபாக்டரில டெஸ்ட் பன்னி, அத சைட்டுல போய் இன்ஸ்டால் பன்னி ரன் பன்னி குடுத்துட்டு
வர்றதுதான் எங்க வேலை. நடுச்சாமத்துல கஸ்டமர் எவனாவது ஃபோன் பண்ணி “டேய் உங்க மிஷின்
ஓடலடா.. நின்னு போச்சு” ம்பாய்ங்க. “லேட் பிக்கப்புடா நீயி.. எங்ககிட்ட மிஷின் வாங்குனா
எப்புடிடா ஓடும்” ன்னு மனசுல நினைச்சிக்கிட்டு, சும்மா ஒரு ஃபார்மாலிட்டிக்காச்சும்
“அந்த பட்டன அமுக்குங்க சார்.. இந்த ஒயர டைட் பன்னுங்க சார்”ன்னு எதாவது சொல்வோம்.
சத்தியமா அவனுக்கு புரியாது. வெறியாயி மறுநாள் நம்ம பாஸூக்கெல்லாம் மெயில் அனுப்பிருவான்.
கஸ்டமர்
எவனாவது கடுப்புல இருந்தாய்ங்கன்னாலே அவங்க அடிச்சி கோவத்த தணிச்சிக்கிறதுக்கு எங்கள்ல
ரெண்டு பேர உடனே சைட்டுக்கு அனுப்பி வைச்சிருவாய்ங்க. அவனுங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அடிச்சி வெறிய தீத்துக்கிட்டதுக்கு அப்புறம் தான் திரும்ப ஊருக்கு அனுப்பி
வைப்பாய்ங்க. போற சைட்டுல வேலை ஒழுங்கா பாக்குறமோ
இல்லியோ, போற ஊர்க்கு பக்கத்துல உள்ள நல்ல நல்ல சைட்டுகளையெல்லாம் (அந்த சைட்டு இல்லைப்பா)
நல்லா சுத்திப்பாத்துட்டு வந்துருவோம்.
ஒரு
தடவ அந்த மாதிரி ஹரித்வார் சைட்டுல உள்ள ஒரு ப்ராஜெக்ட்டுக்காக கிளம்பி போயிட்டு இருந்தோம்.
மொதல்ல ஹரித்வார் கிளம்பி போறதே மிகப்பெரிய ப்ராஜெக்ட் தான். மொதநாள் சாய்ங்கலாம் க்ராண்ட்
ட்ரங்க் எக்ஸ்ப்ரஸையோ இல்லை தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ்ஸையோ புடிக்கனும். அவன் ஒரு ஒண்ணறை
நாள் மூச்சு தெணற தெணற ஓட்டி ரெண்டாவது நாள் காலையில நியூ டில்லில கொண்டு போய் விடுவாய்ங்க.
அங்கணக்குள்ளயே ஒரு ரூம போட்டு குளிச்சி ஃபேஸ ப்ரஷ் ஆக்கிக்கிட்டு ஹரித்வார் பஸ் ஏற
கஷ்மீரி கேட்டுங்குற இடத்துக்கு ஆட்டோ புடிச்சி போகனும்.
டில்லில
ஆட்டோக்காரய்ங்கல்லாம் ஒரு திணுசானவியிங்க. நம்மூர் ஆட்டோக்காரங்களாச்சும் நமக்கு நெஞ்சு
வெடிக்கிற மாதிரி அமவுண்ட்டா இருந்தாலும் டைரக்டா கேப்பாய்ங்க. ஒரு தடவ க்ரோம்பேட்டையிலருந்து
பெருங்களத்தூருக்கு ஒரு LED டிவிய ஆட்டோல எடுத்துட்டு போனேன்.. அந்த ஆட்டோக்காரன் என்கிட்ட
300 ரூவா வாங்குனான். அடப்பாவிகளா மூணு குலோ மீட்டருக்கு 300 ரூவாயா. நல்லாருக்குடா
உங்க டீலிங்கு. மேல இன்னொரு 300 ரூவா போட்டு குடுடா.. இந்த டிவிய உன்கிட்டயே குடுத்துட்டு
போயிடுறேன்னே நினைச்சேன். ஆனாலும் நேரடியா கேட்ட அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்துச்சி.
ஆனா
டில்லி ஆட்டோக்காரய்ங்க வேற மாதிரி ஒரு டீலிங்க் பன்னுவானுங்க. நா மொத மொதல்ல போனப்போ
என் ஃப்ரண்டு ஒருத்தரு அவய்ங்களப் பத்தியும் அவய்ங்க நம்மகிட்ட சொல்ற ஒரு கதையப் பத்தியும்
சொல்லித்தான் அனுப்சாரு. ஆனா எனக்கு அவ்வளவா நம்பிக்கை இல்லை. ”ச்ச எப்பவாச்சும் ஒருத்தன்
அப்டி பன்னிருப்பான். எல்லாருமா அப்டி இருப்பாய்ங்க” ன்னு நினைச்சிட்டு ஆட்டோ ஸ்டாண்டுக்கு
போனோம். ஒரு ஆட்டோக்காரன்கிட்ட போய் “கஷ்மீரி கேட் ஜானாஹே… கித்னா ஹே” ன்னு எனக்குத்
தெரிஞ்ச இங்கிலீஷ்ல கேட்டேன். “சோ ருபய்ய்” ன்னு நம்ம கந்தசாமி காமெடில வர்ற “ஆர் ருபய்”
ஸ்லாங்குல சொன்னான். அட நூறுரூவா தானா. பரவால்லையேப்பா.. அதுக்கு குறைஞ்சி யாரு வரப்போறான்னு
படக்குன்னு ஏறி உக்காந்துட்டோம். வண்டி கிளம்பிருச்சி.
நா
கூட என்கிட்ட ஆட்டோக்காரனுங்களப் பத்தி warn பன்ன பையன மனசுக்குள்ளயே திட்டிக்கிட்டு
வந்தேன். இவ்வளவு நல்லவனுங்களா இருக்கானுங்களே.. இவனுங்கள எப்புடி குறை சொன்னான்னு
நினைச்சிட்டு இருக்கும்போதே சடார்ன்னு ஆட்டோக்காரரு ப்ரேக்க போட்டு எங்க பக்கம் திரும்புனாரு.
ஆட்டோகாருக்கு அர்ஜெண்ட்டா எதுவும் வந்துருச்சோன்னு நாங்க நினைக்க அவரு எங்க கிட்ட “சார்.. இந்தப் பக்கம்
போகமுடியாது.. நேத்து ராத்திரி இந்த ரூட்டுல உள்ள ஒரு ஹோட்டல்ல ரெண்டு டெரரிஸ்ட அரஸ்ட்
பன்னிட்டாங்களாம். அதனால இந்த ரூட்ட ப்ளாக் பன்னிட்டாங்க. அதுனால சுத்தி தான் போகனும்”
னான். “சரி போ” அப்டின்னோம். “போறதப் பத்தி ஒண்ணும் இல்லை.. ஆனா அந்த ரூட்டு கொஞ்சம்
தூரம்.. ஒரு 250 ரூவா ஆகும் அப்டின்னான்”
“ங்கொய்யால.. இதே கதைய சொல்வாய்ன்னுதாண்டா
என்கிட்ட ஒருத்தன் சொல்லி அனுப்சான். கொஞ்ச நேரத்துல அவனத் தப்பா நெனைச்சிட்டேனேடா.
எவ்வளவு நல்லவன் மாதிரி ஆக்ட் குடுத்துட்டான்யா” ன்னு நமக்கு தெரிஞ்ச “இதர் ஆவோ” ஹிந்திய
வச்சி சண்டை போட்டு ஆட்டோ விட்டு இறங்குனப்புறம் ஒரு வழியா கொண்டு போய் விட்டான். இதுவும்
ஒரு தடவ இல்லை. அதுக்கப்புறம் நா ஒரு நாலஞ்சி தடவ போயிருப்பேன். அத்தனை தடவையும் “அதே டெயலர் அதே
வாடகை” கதை தான். கொஞ்சம் கூட மாத்தாம.
சரி
ஹரித்வார்ல லேண்ட் ஆயாச்சு. ஒவ்வொரு ஞாயித்து கிழமையும் ஹரித்வார், ரிஷிகேஷ்னு எல்லா
சுத்தி பாக்க வேண்டிய இடமெல்லாம் காலியாருச்சி. ஆனா ஞாயித்து கிழமை மட்டும் இன்னும்
நிறைய வந்துட்டே இருக்கு. எங்க… ஊருக்கு வர விட்டாதானே.. அங்கயே ஊரவச்சி அடிச்சா இப்டித்தான்.
அப்ப நாங்க ஒரு மூணு பேர் இருந்தோம். சரி இந்த வாரம் பக்கத்துல உள்ள தாஜ்மஹாலுக்கு
பொய்ட்டு வந்துட்டா என்னன்னு ஒருத்தன் சொன்னான்? என்னது பக்கத்துலயா.. அடப்பாவிகளா..
தாஜூமஹாலுக்கும் ஹரித்துவாருக்கும் 500 குலோ மீட்டருடா.. அதுவும் உத்தர்காண்டு பஸ்ஸுல
ஏறுனா ரெண்டு நாள் ஓட்டுவாய்ங்களேடா.. ”இது ஆவுறதில்லை” ன்னு தோணுனாலும் “சரி இப்ப
போகலன்னா வேற எப்ப போகப்போறோம்னு ப்ளான போட்டு கிளம்பியாச்சு.
மொத
நாள் நடு ராத்திரில ஹரித்வார்ல பஸ் ஏறி டில்லிக்கு வந்தாச்சு. டில்லிலருந்து ஆக்ராவுக்கு
போற ட்ரெய்ன் டைமிங்க் எதுவும் நமக்கு செட் ஆகல. அதனால பஸ்லயே ஆக்ரா போக முடிவு பண்ணியாச்சு.
அந்த டைம்ல ஒரு ப்ரைவேட் பஸ்ஸு ”தாஜ்மஹால் தாஜ்மஹால்”னு கூவிகிட்டு இருந்தாய்ங்க. தமிழ்நாட்ட
தாண்டுனா, online la புக் பண்ணி போற private பஸ்ஸூங்களத் தவற, பஸ் ஸ்டாண்டுல கூவி கூவி
கூப்டுற ப்ரைவேட் பஸ்ஸூங்களப் பாத்தாலே எனக்கு ஒரு அலர்ஜி. ஒருதடவ இதே மாதிரி, டில்லிலருந்து
ஹரித்வாருக்கு கவர்மண்ட் பஸ்ஸூல ஏறாம “இப்ப எடுத்துருவோம் சார். பஸ்ஸூ ரெடியா இருக்கு”
ன்னு ஒருத்தன் சொன்னத நம்பி ஒரு ப்ரைவேட் பஸ்ஸூல ஏறுனேன். காலையில ஏழே முக்காலுக்கு
என்ன ஏத்திட்டு, மதியம் பன்னண்டே முக்காலுக்கு தான் டில்லிலருந்தே பஸ்ஸ எடுத்தாய்ங்க.
அன்னிக்கு வெறியானவந்தான். அதுக்கப்புறம் எந்த ஊருக்கு போனாலும் உள்ள வச்சி நசுக்குனாலும்
பரவால்லன்னு கவர்மண்ட் பஸ்ஸுல மட்டும்தான் ஏறுவேன்.
இப்ப
வேற வழியில்லை. வண்டி ஸ்டார்ட் பண்ணி ரெடியா இருக்காய்ங்க. மூணு பேரும் ஓடிப்போய் ஏறிட்டோம்.
கொஞ்ச நேரத்துலயே வண்டி ஸ்டாண்டுலருந்து கிளம்பிருச்சி. பஸ்ஸுல போனா ஆக்ராவுக்கு ஒரு
அஞ்சி மணி நேரத்துல போயிடலாம்னு யாரோ சொல்லிருந்தாய்ங்க. நாங்க ஏறுனது காலையில ஒன்பது
மணி. “சரி அப்டின்னா வண்டி ரெண்டு மணிக்கு ஆக்ரா போயிரும். ரெண்டு மணி நேரம் தாஜ்மஹால
சுத்துறோம். என்ஜாய் பன்றோம். அஞ்சி மணிக்கு ரிட்டன் பஸ் ஏறுறோம். பத்து மணிக்கு டெல்லிலருந்து
ஹரித்வாருக்கு பஸ் ஏறுறோம். விடியகாலமெல்லாம் ஹரித்வார் ஹோட்டலுக்கு போய் கொஞ்ச நேரம்
தூங்கிட்டு கம்பெனிக்கு போறோம். பக்கா ப்ளான்” ன்னு நினைச்சிக்கிட்டு ட்ராவல ஸ்டார்
பன்னோம்.
அது
வாங்கி பத்து வருஷமான, கடைசி கால கட்டங்கள்ல இருந்த ஒரு பழைய ப்ரைவெட் பஸ்ஸு. சில புஷ்
பேக் ஒர்க் ஆகுது. சில பேரு புஷ் பன்னி பேக்குல போன சீட்டு திரும்ப வர மட்டேங்குது.
சில புஷ் பேக் ஹேண்டில் கையோட வந்துடுது. ஆனா வண்டி ஃபுல்லு. டில்லிய தாண்டுனது தான்
போதும். எங்க மூணு பேருக்கும் நடுவுல சீட் கிடைச்சிருந்துச்சி. ட்ரைவர் ஃபுல் ஃபோர்ஸூ.
ஆக்ஸிலேட்டர்ல ஏறி நிக்கிறாரு. ப்ரேக்குன்னு ஒண்ணு இருக்கதையே மறந்துட்டாரு. செம ஸ்பீடு.
“ஆஹா.. இந்த வேகத்துல போனா பன்னண்டு மணிக்கெல்லாம் போய் சேந்துடலாமே” ன்னு எங்களுக்கு
ஒரே ஜாலி.
ரோட்டுல
குண்டு, குழி, பள்ளம், மேடுன்னு எதையுமே கண்டுக்காகம NFS ல நாம கார் ஓட்டுற மாதிரி
மின்னல் வேகத்துல வண்டி போயிட்டு இருக்கு. போயிட்டே இருக்கப்போ அதே ஸ்பீடுல ஒரு ஸ்பீடு
பிரேக்கர் விட்டு ஏத்துனாறு பாருங்க… எல்லாரும் உக்காந்தவனத்துக்கே கிட்டத்தட்ட பஸ்ஸோட
ரூஃப போய் தொட்டுட்டு வந்தோம். நல்லவேளை சேஃப் லேண்டிங்க் தான். அப்பாடா.. ஒண்ணும்
ஆகலன்னு நினைக்கும் போது தான் பின் சீட்டுலருந்து எவனோ சத்தம் போட்டான்.
திரும்பி
பாத்தா… ஒருத்தன் தலையிலருந்து தக்காளிச்சட்னி ஒழுகி கழுத்து வரைக்கும் ஊத்திருந்துச்சி.
”இய்ங்க பாருய்யா.. இட்லிய வாங்கி வண்டிலயா திம்பாய்ங்க.. கடையிலயே திண்ணுட்டு வர வேண்டியது
தானே.. இப்ப பாரு சட்னி தெறிச்சி மூஞ்செல்லாம் எப்டி ஆயிருச்சின்னு” நினைச்சா சட்னி
பம்பு செட்டுமாதிரி ஊத்திக்கிட்டே இருக்கு. அடப்பாவிகளா.. மண்டை பொளந்துருச்சா.. ஸ்பீடு
ப்ரேக்கர்ல விட்டப்போ இவன் ரொம்ப ஸ்பீடா போய் மேல உள்ள கம்பில இடிச்சிக்கிட்டான் போல.
மேல ஓப்பன் ஆயிருச்சி. தலையில கைய வச்சிக்கிட்டே எழுந்து வந்து ட்ரைவரையும் கண்டக்டரையும்
நம்ம சீமான் மாதிரி “த்தா.. ம்மா” ன்னு ஹிந்தில திட்டுறான். மதிக்கவே இல்லையே.. ட்ரைவரும்
ஆக்ஸிலேட்டர்ல வச்ச கால் வச்சபடியே இருக்கு. வண்டி அதே ஸ்பீடுல போயிட்டு இருக்கு. கண்டக்டர்
அப்டி ஒரு சம்பவம் நடந்த மாதிரியே ரியாக்சன் குடுக்காம ரெகுலராப் போ ரெகுலராப் போன்னு
போய்ட்டே இருக்கான்.
இவனும்
சத்தம் போட்டு பாத்துட்டு மண்டையப் புடிச்சிக்கிட்டே உக்காந்துட்டான். ஒரு ரெண்டரை
மணி நேரம் போனப்புறம் ஒரு கடையில ஒதுக்குப் புறமா நிறுத்துனாய்ங்க. என்னய்யா இன்னும்
அரை மணி நேரத்துல தாஜ் மஹாலே வந்துரப்போகுது இப்ப எதுக்கு ஹால்ட்டுன்னு எங்களுக்கு
ஒரே கடுப்பு. சரின்னு இறங்கி அங்க ரெண்டு மூணு ஃபோட்டோவ எடுத்துகிட்டு வெய்ட் பண்ணோம்.
அப்பவே வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு இருபது நிமிஷம்
அங்கயே நிறுத்தி போட்டாய்ங்க. இந்த கேப்புல மண்டை ஓப்பன் ஆனவன் பக்கத்துல எதோ ஒரு ஆஸ்பிட்டல்
போய் கட்டு போட்டுகிட்டு வந்துட்டான்.
மறுக்கா
பஸ்ஸ எடுத்து ஓட்ட ஆரம்பிச்சாய்ங்க. பாரபட்சம் பாக்காம அதே ஓட்டு. எங்களுக்கு சைடுல
உள்ள ரெண்டு சீட்டுல ஒரு அம்மா ரெண்டு குழந்தைங்கள வச்சிட்டு உக்காந்துருந்துச்சி.
பொண்ணுக்கு 5 வயசு இருக்கும் பையனுக்கு ரெண்டு வயசு கூட இருக்காது. அந்த பொண்ணு பஸ்ஸுலயே
முன்னாடி சீட்டுல உக்கார்ந்திருந்த அவங்க அப்பாட்ட போறது திரும்பி வாராததுன்னு விளையாண்டுகிட்டு
இருந்துச்சி. இந்தம்மா அந்த ரெண்டு வயசு குழந்தையை மடில வச்சிக்காம அது ஒரு சீட்டுல
உக்கார்ந்துகிட்டு அந்த சின்னக் குழந்தைய இன்னொரு சீட்டுல உக்கார வச்சிருந்துச்சி.
கையை அணைச்சி புடிச்சிக கூட இல்லை.
பத்து
நிமிஷம் இருக்கும். நம்ம ஓட்டுனர் அடுத்த ஸ்பீடு ப்ரேக்கர்ல விட்டு ஏத்த, தனியா உக்கார்ந்திருந்த
குழந்தை சீட்டுலருந்து தவறி குப்புற கீழ விழுந்துச்சி. தூக்குனா மூக்குலருந்து கொட
கொடன்னு ரத்தம் கொட்டுது. குப்புற விழுந்துல மூக்கு எழும்பு உடைஞ்சிருச்சி போல. ஆத்தாடி என்னய்யா ஒரே ரத்தக்காவலா வாங்குது. முழுசா
தாஜ்மஹால் போகமுடியாது போலயேன்னு அப்பத்தான் அடிவயிற்றில எங்களுக்கு சிறிய மாற்றம்
ஏற்பட்டுச்சி. அடுத்த ஸ்டாப் வந்தவுடனே அந்த குழந்தைய இறக்கிட்டு அவங்க இறங்கிட்டாங்க.
மழை
புடிச்சிது. சாதாரணமா பெய்யல. பேய் மழைன்னு சொல்லுவாய்ங்களே.. அப்பிடி பெய்யிது. எதுக்க
என்ன வருதுன்னு தெரியாத அளவு. வைப்பர வச்சி கண்ணாடிய தொடச்சா, வைப்பர் ரெண்டாவது ரவுண்ட்டு
வர்றதுக்குள்ள தண்ணி ரொம்பிடுது. ஆனாலும் எங்காளு நிறுத்தலையே… அதே ஸ்பீட மெய்ண்டெய்ண்
பண்ணான். ரைட்டு இன்னிக்கு நமக்கு “தாத்தா தெரிஞ்சிருவாரு போல” ன்னு உட்கார்ந்திருந்தோம்.
வண்டி போகுது போகுது போகுது போய்ட்டே இருக்கு. டேய் எங்கடா போறீங்க. இன்னும் ரெண்டு
குலோ மீட்டர்ல எங்க ஊரே வந்துருமேடா. இன்னும் தாஜ்மஹால காணுமே. அந்த அஞ்சி மணி நேரத்துல
தாஜ்மஹால் போயிடலாம்னு சொன்னவன் அப்ப கெடைச்சிருந்தான்னா கும்மிருப்பேன்.
காலையில
ஒன்பது மணிக்கு ஏறுன எங்கள சாயங்காலம் அஞ்சி மணிக்கு ஆக்ராவுல கொண்டு போய் இறக்கி விட்டாய்ங்க.
வேக வேகமா உள்ள போனோம். ஆ..ஆ தாஜ்மஹாலு.. தாஜ்மஹாலு… நம்மளும் வந்துட்டோம். நாம தாஜ்மஹால
பாத்தோம்ங்குறத விட நம்ம தாஜ்மஹால பாத்துட்டோம்னு அடுத்தவன நம்ம வைக்கிறது தான நமக்கு
முக்கியம். வரலாறுல அத பதிக்கனுங்குறதுக்காக அங்கனையே நின்ன ஒரு ஃபோட்டோ கிராஃபர வச்சி
ஆளுக்கு ஒரு தனி ஃபோட்டோ எடுத்துக்கிட்டு, அத ப்ரிண்ட் போட்டு வாங்கிக்கிட்டு ஒன்பது
மணிக்கு தான் அங்கருந்து கிளம்புனோம்.
விடியக்காலம்
திரும்ப ஹரித்துவாருக்கு வந்துடலாம்ன்னு நாங்க போட்ட ப்ளானு சிறப்பா வேலை செஞ்சதால,
மறுநாள் மதியம் பதினொரு மணிக்கு தான் திரும்பி வர முடிஞ்சிது.

