Showing posts with label . Show all posts
Showing posts with label . Show all posts

Tuesday, January 20, 2015

அரசியலால் தரம் தாழும் கலைஞர்கள்!!!


Share/Bookmark
ரசிகர்கள் கூட்டம் கொண்ட ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கு. அந்த தனித்தன்மைய இழக்குறப்போதான் ரசிகர்கள்கிட்டயும், பொது மக்கள் கிட்டயும் அவர்களோட மதிப்பு குறைய ஆரம்பிக்குது. இப்போ பெரும்பாலன கலைஞர்கள் தங்களோட திறமைகளை அரசியல் சார்ந்த பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துறது தான் ரொம்ப வேதனையான விஷயம்.

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு நகைச்சுவையாளர்கள்ல ஒருத்தர். திண்டுக்கல் ஐ லியோனி. எதை மிஸ் பண்ணாலும் பண்ணுவேனே தவிற பண்டிகை நாட்கள்ல டிவில வர்ற இவரோட பட்டிமன்றங்களை மிஸ் பண்றதே இல்லை. எங்கள் வாழ்வும் எங்கள் வழமும் மங்காத தமிழென்று சங்கே முழங்குன்னு இவரு ஆரம்பிக்கிறதே செமையா இருக்கும். இப்போதைக்கு டிவில நா பாக்குற ஒரு சில ப்ரோகிராம்ல இவரோடதும் ஒண்ணு. இன்னும் எப்போ டிவிடி வாங்கப் போனாலும் இவரோட பட்டிமன்ற DVD இருந்தா கண்டிப்பா வாங்கிடுவேன்.

உங்கள்ல எத்தனை பேருக்கு லியோனிய புடிக்கும்னு தெரியல. ஆனா அவர மாதிரி நான்ஸ்டாப் காமெடி யாராலயும் பண்ண முடியாது. மூணு மணி நேரம் கூட அசால்ட்டா தொடர்ந்து பேசி மக்கள சிரிக்க வைக்கிற திறமையுடையவர். எங்க ஊருக்கு அவர் ஒருதடவை வந்து நடத்துன பட்டிமன்றத்துல, சிரிச்சி சிரிச்சி கிட்டத்தட்ட எனக்கு வயித்து வலியே வந்துருச்சி.

அன்றாட வாழ்க்கையில நடக்குற விஷயங்களயே, அவரோட பாணில நமக்கு சொல்லும்போது, செம்ம காமெடியா இருக்கும். அதுமட்டும் இல்லாம பலகுரல் மன்னனான இவர் பட்டிமன்றங்கள பாத்துத்தான் இப்படி கூட சில பழைய பாட்டுங்க இருக்கான்னு தெரிஞ்சிது. குறிப்பா “சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே.. சுப்ரமண்யா சுவாமி… உனை மறந்தேனோ… “ பாட்டு. இத அவர் பாடி கேட்டா அந்த சுகமே தனி.

சரிப்பா… இதெல்லாம் தான் எங்களுக்கே தெரியுமே.. உனக்கென்ன ப்ரச்சனை இப்போ?ன்னு வெறிக்காதீங்க. லியோனி ஒரு தீவிர திமுக ஆதரவாளர்ன்னு எல்லாருக்கும் தெரிந்ததே. இப்போ ஒரு ரெண்டு வருஷமாவே, கலைஞர் டிவில ஒளிபரப்பாகும் அவரோட பட்டிமன்றங்கள்ல காமெடின்னு அவர் பண்றதுன்னு பாத்தா அதிமுகவ வச்சோ இல்லை ஜெயலலிதாவ வச்சோ தான். அந்த பட்டிமன்றத்துக்கும், அதுக்கும் சம்பந்தம் இருக்கோ இல்லியோ, வலுக்கட்டாயமா அதிமுகவையும், ஜெயலலிதாவையும் தாக்குற மாதிரியான வசனங்கள் நிச்சயம் இல்லாம இருக்காது.

உதாரணமா போன வாரம் நடந்த பொங்கல் சிறப்பு பட்டிமன்றத்துல,..ச்ச சாரி தமிழ்த்தாண்டு சிறப்பு பட்டிமன்றத்துல, லியோனியும் மதுக்கூர் ராமலிங்கமும் ஜெயலலிதா கேஸ் ரிசல்ட்டுல ஒருத்தர் லட்டு சாப்பிட்டு, உடனடியா தீர்ப்பு மாறிய உடனே அவர் ரியாக்‌ஷன் மாறியதப் பத்தியும், பதவியேற்பு விழாவுல ஓ.பி அழுததப் பத்தியும் தான் அதிகமா பேசி காமெடி பண்ணிட்டு இருந்தாங்க. அத அவங்க ஓட்டும் போது சிரிப்பு வந்தாலும், ஒரு விஷயம் யோசிக்க வச்சிது. ஓ.பி பதவியேற்பு விழாவுல அழுதத லியோனி மட்டும் இல்லை, ரொம்ப பேரு அத ஒரு மிகப் பெரிய காமெடியப் போலவும், நாடகம் என்பது போலவும் சித்தரிச்சிருக்காங்க. சரி இப்போ அரசியல்ங்குற விஷயத்த ஒதுக்கி வச்சிட்டு, அவர ஒரு மனுஷனா பாப்போம்.


ஒரு மனுஷனுக்கு கண்ணீர் வர்றதுங்குறது சாதாரண விஷயம் இல்லை. Just like that ஒருத்தருக்கு கண்ணீர் வராது. உதாரணமா ஒரு கோரமான விபத்தோ, இல்லை ஒரு கோரமான மரணமோ நடந்தா கூட “அய்யயோ என்ன இப்டி ஆயிடுச்சி” ன்னு ஒரு உதட்டளவு ஃபீலிங் தான் நம்மிடத்துல வருமே தவிற கண்ணீர் வராது. ஈழத்துல ஆயிரக்கணக்குல செத்து மடிஞ்சாங்களே? அதப்பாத்து கூட எத்தனை பேருக்கு கண்ணீர் வந்துச்சி? ஒரு கையில தட்டுல தோசைய வச்சிக்கிட்டு “என்ன கொடுமை இது? என் தமிழினம் அழிகிறதே.. இந்த ராஜபக்சேவ கொல்லனும்னு” வாயால வசனம் பேசுனவங்க தானே அதிகம். இவ்வளவு ஏன்? தேர்ந்த நடிகர்கள்ல கூட ஒருசிலரத் தவிற, க்ளிசரின் இல்லாம யாருக்கும் கண்ணீர் வர்றதில்லை.

அப்படி இருக்கும்போது, ஓ.பி அழுது நாடகம், ஓ.பி அழுது நாடகம்னு சொல்றது எந்த விதத்துல நியாயமா இருக்க முடியும்? சரி இப்போ ஓ.பி யோட பார்வையில கொஞ்சம் பாப்போம்.

ஒரு வேள சோத்துக்கு வழியில்லாம ரோட்டுல பிச்சை கேக்குற ஒருத்தன்கிட்ட போய் நீங்க ஒரு பத்துரூவா காச போட்டீங்கன்னா, உங்க பேரக்குழந்தைங்க வரைக்கும் நல்லாருக்கனும்னு வாழ்த்துவாங்க. பயங்கர பணக்கஷ்டத்துல இருக்க ஒருத்தனுக்கு, அவன் கேக்காமலேயே நீங்க வேணும்ங்குற பணத்த குடுத்து அவன் கஷ்டத்துலருந்து காப்பாத்துனீங்கன்னு வைங்களேன்.. அவனுக்கு அப்புறம் நீங்கதான் சாமியே. இப்போ ஓ.பி பொசிசனுக்கு வருவோம். 

கட்சில எத்தனையோ பேர் இருந்தாலும், ஓ.பிய செலக்ட் பண்ணி, ஒரு மாநிலத்தோட மிக உயர்ந்த ஒரு பதவிய குடுத்து ஒரு அம்மா வச்சிக்க சொன்னா, அந்த அம்மாவ ஓ.பி எந்த லெவல்ல வச்சிருப்பாரு? கடவுள் மாதிரி தெரியாதாய்யா? அந்தம்மா ஜெயில்ல இருக்கும்போது பதவியேத்துக்குறப்போ அவருக்கு அழுகை வர்றதுல என்ன காமெடி இருக்கு? அந்தம்மா எதுக்காக ஓ.பிகிட்ட குடுத்துட்டு போச்சிங்குறது வேற விஷயம். இருந்தாலும் ஓ.பிய பொறுத்த அளவு அது எவ்வளவு பெரிய விசயம்.

 இத பெரிய நகைச்சுவையா build up பண்ற திமுக ஆட்கள் கொஞ்சம் யோசிச்சி பாருங்க. 50 வருசமா கேங்கும் நம்ம தான் லீடரும் நம்மதான். 90 வயதிலும் ஓய்வில்லாம உழைக்கிறோம். யாரு உழைக்க சொன்னது? ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே.. பையனுக்கு 60 வயசாயிருச்சி. இன்னும் அந்தப் பதவிய பையனுக்கு குடுக்கனும்ங்குற மனசு கூட இல்லைங்கும் போது சுத்தி நிக்கிறவனுக்கு நம்மள பாத்த எப்படி அழுகை வரும்? அண்ணேன் எப்ப கிளம்புவாறு திண்ணை எப்ப காலியாகும்னு தான் பாத்துக்கிட்டு இருப்பாய்ங்க. 11வது தடவையும் ஒருமனதா நம்ம தான் தலைவரு. அந்த "ஒரு மனது" தலைவரோட மனதா மட்டும் தான் இருக்கும்.

எல்லாம் நம்ம லியோனியால வந்தது. இப்போ வர வர அவரோட பட்டிமன்றங்கள்ல அவரோட அந்த இயல்பான நகைச்சுவை காணாம போயி, artificial லான அரசியல் நகைச்சுவைகளை புகுத்திக்கிட்டிருக்காரு. அரசியல்லயே ஊரிப்போனவங்க, இத வச்சித்தான் பொழப்பு நடத்தனும். அவங்களுக்கு இப்படி பேசுறத தவிற வேற வழி இல்லை. ஆனா ஒரு தனித்திறமையுள்ள சிறந்த நகைச்சுவையாளர், ஒரு குறிப்பிட்ட கட்சியோட விளம்பரங்களுக்காக அந்தத் பயன்படுத்துறது ரொம்ப வேதனையா இருக்கு.


குறிப்பு : இந்தப்பதிவு நிச்சயம் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்து எழுதப்பட்டதல்ல. ஊடகங்களில் சித்தரிக்கப்படும் ஒரு விஷயம் தவறென மனதிற்கு பட்டதால் எழுதப்பட்ட பதிவு. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...