Saturday, February 28, 2015

காக்கி சட்டை - மட்டை!!!


Share/Bookmark
சில பெரிய ஹீரோக்கள் ரொம்ப ரொம்ப மோசமான, சில கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் போது, சில சமயம் என் நண்பர்கிட்ட ஒண்ணு சொல்றதுண்டு. “மச்சி இவனுங்களுக்கு கீழ இருக்கவனுங்க, இவனுக்கு ஜால்ரா அடிச்சே வெளில என்ன நடக்குது, ஆடியன்ஸ் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியாம செஞ்சிருவானுங்க போலருக்கு. அதான் இப்டி updated ah இல்லாம, மோசமான ஒரு ஸ்டோரிய செலெக்ட் பண்ணிருக்காங்க போலருக்குன்னு” பேசிப்போம். ஆனா என்னதான் ஒருத்தன் updated ah இருந்தாலும், ரொம்ப தெளிவானவனா இருந்தாலும், ஒவ்வொரு படத்தோட ரிசல்ட்டயும் அவனால கண்டிப்பா கணிச்சி கதை செலெக்ட் பன்ன முடியாதுன்னு இந்த காக்கி சட்டை படம் பாக்கும் போதுதான் புரிஞ்சிது.

சிவகார்த்திகேயன் யாரு, அவரு எப்படிப்பட்டவருன்னு எல்லாருக்கும் தெரியும். அவரு கலாய்க்காத ஆள் இல்லை. அவரு கிண்டல் பண்ணாத படங்கள் இல்லை. அவர் எந்த தயாரிப்பாளரோட வாரிசும் இல்லை. நடிச்சா ஹீரோ சார் நா வெய்ட் பண்றேன் சார்ன்னு நேரடியா ஹீரோவா களம் இறங்குனவரும் இல்லை. இன்னிக்கு இருக்க ட்ரெண்ட்ல ஊறிப்போன மக்கள்ல ஒருத்தரா, படிப்படியா சினிமாவுக்கு போனவரு. அந்த நம்பிக்கைய எதிர் நீச்சல் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட மிகப்பெரிய வெற்றில காப்பத்துனவரு. ஆனா, யார் எப்படியிருந்தாலும் ஒரு டைரக்டர் வேலைய ஒழுங்கா செஞ்சா தான் ஒரு படத்தை காப்பத்த முடியும். இல்லன்னா எல்லாம் அம்பேல்தான்னு திரும்ப நிரூபிச்சிருக்க ஒரு படம்.

எதிர்நீச்சல்ன்னு ஒரு சூப்பர்ஹிட்ட குடுத்த டீம், தொடர்ந்து நீச்சலடிக்க முடியாம முங்கிப்போன ஒரு கதை தான் இந்த காக்கி சட்டை. சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை, ஏற்கனவே பாத்து பழக்கப்பட்ட பழைய காட்சிகள், சிவகார்த்திகேயனுக்கு பொறுந்தாத கேரக்டர்ன்னு படத்துல பல ஓட்டைகள்.

சாதாரண கான்ஸ்டபிளா இருக்கும் சிவகார்த்திகேயன், அநியாத்த கண்டு கொதிக்கிறாரு. குற்றவாளிகள் தண்டிக்கப்படாம சுதந்திரமா சுத்துரத பாத்து ஆத்திரப்படுறாரு. போலீஸா இருந்தும், மேலதிகாரிகளோட குறுக்கீட்டால ஒண்ணும் பன்ன முடியாம தவிக்கிறாரு. ஒரு காட்சில ரொம்ப எமோஷனா சக ஏட்டு இமாம் அண்ணாச்சிக்கிட்ட சிவா புலம்ப, அதக் ஒட்டுக்கேக்கும் ப்ரபு ”தொட்டா ஷாக் அடிக்கிற மாதிரி ஒரு கேஸ புடி.. அப்புறம் பாக்கலாம்” ன்னு சிவா அசிங்கப்படுத்தி நோஸ்கட் பன்னிடுறாரு. நா கூட சிவா போய் எதாவது கரண்ட் கம்பிய எதுவும் புடிச்சிடப் போறாரோன்னு பயந்துட்டேன்.

அப்போ மாட்டுது ஒரு கேஸ். தப்பும் என்னன்னு தெரியும். யார் பன்னதுன்னும் தெரியும். எவிடென்ஸ் எங்க இருக்குன்னும் தெரியும். ஆனா அரெஸ்ட் பன்ன முடியல. எப்படி கஷ்டப்பட்டு, மொக்கையைப் போட்டு வில்லன புடிக்கிறாருங்குறதுதான் ரெண்டாவது பாதி கதை

முதல்ல இந்த படத்துல சிவாவ ஒரு போலீஸா ஏத்துக்குறதே பெரிய விஷயமா இருக்கு. க்ரைம் ப்ரான்ச்ல வேலை செய்யிறதால இவர யூனிஃபார்ம் வேற போட சொல்லமாட்டாய்ங்க. அதாவது இன்வெஸ்டிகேஷனுக்கு போகும்போது யாருக்கும் டவுட் வரக்கூடாதாம். அதுக்குன்னு நம்மாளு கோர்ட்ல கூட கேஷுவல்ல இருக்காப்ள. படம் ஃபுல்லாவே சன் மியூசிக்ல காம்பயரிங்க பண்றவிங்க மாதிரியே திரியிறாரு. ஆனா அப்பபோ “நாமெல்லாம் போலீஸா இருந்து” “”நா போலீஸுங்குறதால” “போலீஸ் வேலை பாக்கும்போது” ன்னு அவரு போலீஸூன்னு அப்பப்போ அவரே சொல்லிக்கிறாரு. நமக்கு தான் அந்த ஃபீலே வர மாட்டுது.

முதல்பாதில அப்பப்போ சில காமெடிக்கு மட்டும் சிரிப்பு வருது. மத்தபடி இமாம் அண்ணாச்சிகூட சேந்து காட்டுமொக்கைய போட்டுருக்காய்ங்க. அந்தாளு குரலைக் கேக்கும்போதெல்லாம் “எலே டேபிள் மேட் மேல் வீட்டுல இருக்கு.. கீழ் வீட்டுல இருக்கு.. பக்கத்துவீட்டுல இருக்கு”ங்குற விளம்பரம் ஞாபகம் வந்து செம்ம கடுப்பா வருது.

கொஞ்ச நாள்லயே நிறைய ரசிகர்கள சேர்த்துருக்கிற சிவகார்த்திகேயன் படத்துக்கு எந்த அளவுக்கு ப்ளஸ்ஸோ, அதே அளவுக்கு மைனஸூம் அவரு தான். படம் முழுக்க “முக்கோணம் SVS சன் ஆயில் வழங்கும் அது இது எது” ல பேசுற மாதிரியே தொணத் தொணன்னு பேசிக்கிட்டே இருக்காரு. ஒருசில இடங்கள்ல சிரிப்பு வந்தாலும் பெரும்பாலான இடங்கள்ல “யப்பா டேய்.. என்ன வாயிடா இது என்ன வாயி”ன்னு நினைக்க வச்சிருது. இன்னொரு விஷயம் மிமிக்ரி பன்னி பன்னி, இவருக்கு இவரோட சொந்த ஆட்டிங் மறந்து போச்சி போல. படத்துல பெரும்பாலான இடங்கள்ல ஜில்லா விஜய்ய பாக்குற மாதிரியே இருக்கு.

சிவகார்த்திகேயன் நிறைய இடத்துல முகத்த சீரியஸா வச்சிக்கிட்டு வசனம் பேசுறாரு. ஆனா நமக்கு அதெல்லாம் சீரியஸாவே தெரியல. ”அட இவரு இப்டித்தாம்பா எப்பவுமே மிமிக்ரி பன்னிட்டு இருப்பாரு.. கடைசில பாருங்களேன் இதெல்லாம் காமெடின்னு சொல்லுவாரு” ன்னு நம்ம மைண்டுல ஓடிக்கிட்டு இருக்கு.

சில பெரிய நடிகர்கள் பெரும்பாலும் விளம்பரங்கள்ல நடிக்க மாட்டாங்க. மைக்க பாத்த இடத்துலயெல்லாம் பேச மாட்டாங்க. டிவி நிகழ்ச்சிகள் எல்லாத்துலயும் கலந்துக்க மாட்டாங்க. எப்போதாவது சில விழாக்கள்ல மட்டும் தான் கலந்துக்குவாங்க. “அவரு எப்பவுமே இப்டித்தான்பா.. ரொம்ப reserved ah இருப்பாரு” ன்னு மத்தவங்க குறை சொன்னாலும், ஒரு நடிகருக்கு அப்டி இருக்கது தான் நல்லது. அப்போதான் அவர ஸ்க்ரீன்ல பாக்கும்போது ஆடியன்ஸுக்கு அது ஸ்பெஷலா தெரியும்.

அப்டி இல்லாம நம்ம கூடவே சுத்திக்கிட்டு இருக்க ஒருத்தன் திடீர்னு ஒரு படம் நடிச்சி, அதுல ரொம்ப சீரியஸா வேற வசனமெல்லாம் பேசுனா, படக்குன்னு நமக்கு சிரிப்பு வருமா இல்லையா? உதாரணத்துக்கு இந்த சூர்யாவ எடுத்துக்குங்க. ”சரவணா ஸ்டோர்ஸ்.. க்ரோம்பேட்டையில் பபப பபப பம்” “ப்ரூ காஃபி சாப்டுங்க” ”பாரதி சிமெண்ட் வாங்குங்க” ன்னு எதத்தொறந்தாலும் அவன் மொகரையா தான் இருக்கு. அவன திரும்ப படத்துல பாக்கும்போது ஒரு surprise eh இல்லாம “அட டெய்லி காப்பித்தூள் விக்கிற தம்பிதானப்பா நீ” ன்னு தான் இப்பல்லாம் தோணுது.

அதே மாதிரி தான் இந்த சிவகார்த்திக்கேயனும். வாரா வாரம் விஜய் டிவில வந்து ஸ்டாண்ட் அப் காமெடி பன்னவரு. ஜோடி நம்பர் ஒன்ல ஆடுனவரு. அதுமட்டும் இல்லாம விஜய் டிவி நடத்துற எல்லா ப்ரோக்ராமுக்கும்  chief guest வேற. விஜய் டிவியப் பத்தி நம்ம எல்லாருக்கும் தெரியும். ஒரே ஒரு ஷோ எடுத்து அத ஒரு முப்பது தடவ டெலெகாஸ்ட் பன்னி, நாம வெறியாவுற வரைக்கும் விடமாட்டாய்ங்க. அப்படி ஒரு சமயத்துல வாரத்துல அட்லீஸ்ட் அஞ்சி நாள் மக்கள் சிவகார்த்திகேயனப் பாத்துக்கிட்டு இருந்தாங்க. இப்போ திடீர்னு, நா போலீஸ்பா.. நா இன்ஸ்வெஸ்டிகேஷன்லாம் பண்றேன்பாங்கும் போது அத டக்குன்னு ஏத்துக்க முடியல. 

படத்தோட முதல் பாதிலயே பெரும்பாலும் தலைவலி வந்துரும். ரெண்டாவது பாதி அதுக்கு மேல. யாருமே இல்லாத கடையில யாருக்குய்யா டீ ஆத்துறங்குற மாதிரி, இவரு ரெண்டு அள்ளக்கைகள வச்சிக்கிட்டு போலீஸ் ஸ்டேஷன்லயே ப்ளான் போட்டுக்கிட்டு இருப்பாரு. அதுக்குதான் வில்லன் ஒரு சூப்பரான ஒரு வசனம் சொல்வான். “தம்பி இந்த சின்ன குழந்தைங்க சோறாக்கி குழம்பு வச்சி விளையாடும்ங்க.. அது பாக்க அழகா இருக்கும். ஆனா அத சாப்டமுடியாது” ன்னு. உண்மையிலயே சிவகார்த்திகேயன் second half மொக்கை மொக்கையா பன்றத பாத்தா நமக்கே அப்டித்தான் தோணும்.

படத்துல ஒரே ஒரு உருப்படியான விஷயம் வில்லன் விஜய் ராஸ். அசால்ட்டா நடிச்சிருக்காரு. ஆளு பாக்கவும் கெத்தா இருக்காரு. அனிரூத் மீசிக்ல ரெண்டு பாட்டு ஓக்கே. BGM la ஒரு தீம் சூப்பரா இருந்துச்சி. 1st half ல ஒரு குத்துப்பாடு போட்டுருந்தாரு. ஸ்பாட்லயே வாந்தி வந்துருச்சி.  முதல்பாதில வர்ற போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் எல்லாத்துலயும் கேமரா செம்ம மொக்கை. ஆனா இண்டர்வல்ல மழையில நடக்குற ஒரு ஃபைட்டுல கேமரா செம்ம. ஸ்ரீதிவ்யா அழகு. சிவா, ஸ்ரீதிவ்யா லவ் சீனெல்லாம் செம்ம கப்பி.  

படம் எடுத்து ரிலீஸ் பன்னவிங்க கூட அமைதியா இருப்பாய்ங்க போலருக்கு. நம்ம இணையவாதிகள் இருக்காய்ங்களே.. ஒருத்தன் இவன அடுத்த விஜய்ங்குறான். ஒருத்தன் அடுத்த சூப்பர் ஸ்டாருங்குறான். ஏண்டா ஷூவுக்குள்ள pant ah போட்டு, சட்டைய தொறந்துவிட்டா எவன்னாலும் ரஜினியாடா.  அதாவது ஒருத்தனை அவனாவே இருக்க விடமாட்டீங்க. ”அடுத்த இவுர்.. அடுத்த அவுர்” ன்னு எதாவது பட்டம் குடுத்தாதான் இவிங்களுக்கு தூக்கம் வரும் போல.

சிவகார்த்திகேயன் ஆளு செம ஸ்மார்ட்டா இருக்காரு. டான்ஸூம் செம இம்ப்ரூவ்மெண்ட். ஆனா, வழக்கமான ஆக்‌ஷன் மசாலா படங்கள் சார் மூஞ்சிக்கு இன்னும் செட் ஆகல. அதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி ட்ரை பன்னாலாம்.

ஸ்க்ரீன்ப்ளே செம சொதப்பல். ரெண்டாவது பாதி எந்த சீனுமே நல்லா இல்லை. ஒண்ணு ப்ரில்லியண்டான மூவ்ஸ் வச்சிருக்கலாம். இல்லை கொஞ்சம் சஸ்பென்ஸா இருக்க மாதிரியாவது எழுதிருக்கலாம். ரெண்டும் இல்லாம, அறு அறுன்னு அறுக்குது.

மொத்ததுல காக்கி சட்டை, நம்மோட பணத்தையும் நேரத்தையும் வீணாக்குற இன்னொரு ரெண்டே முக்கால் மணி நேர சீரியல்


Wednesday, February 25, 2015

நம்ம வீட்டுக் கல்யாணம்!!!


Share/Bookmark
குறிப்பு: இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்ககவே. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலயும் ஒரு குறிப்பிடத்தகுந்த ஏற்படுத்துற ஒரு முக்கியமான விஷயம்தான் இந்தக் கல்யாணம். ஆனா அந்த மாற்றம் எப்படி வேணாலும் இருக்கலாம். ”பாரு மச்சி.. கல்யாணத்துக்கு முன்னால கிருக்கன் மாதிரி திரிஞ்சிக்கிட்டு இருந்தான். இப்போ எவ்ளோ டீசண்டா ஆயிட்டான்.. எல்லாம் பொண்டாட்டி வந்த நேரம்” ம்ன்னு சில பேரப் பாத்து சொல்லுவோம். அதே இன்னும் சில பேரப் பாத்து “ச்ச.. கேக்க ஆளே இல்லாம, எப்புடி சிங்கம் மாதிரி இருந்த மனுசன்.. இப்புடி சீக்கு வந்த கோழி மாதிரி ஆயிட்டாரே.. ”ன்னு கூட சில பேர பாத்து சொல்லுவோம். எப்புடியோ மாற்றம் உறுதி.

அந்தக் கல்யாணத்துக்கு முன்னால நம்மாளுககிட்ட இருக்கும் பாருங்க மாற்றம். திண்டுக்கல் லியோனி சொல்ற மாதிரி, மொத வாரம்தான் அரைகிலோ மிச்சர யாருக்கும் குடுக்காம இவன் மட்டும் திண்டுகிட்டு இருந்துருப்பான். ஆனா பொன்னு பாக்கப்போறப்போ ஒரு சின்ன ப்ளேட்ல கொஞ்சம் மிச்சர வச்சா, அப்டியே பட்டும் படாம நுனி விரலால ரெண்டே ரெண்டு மிச்சர மட்டும் எடுத்து வாயில போட்டுகிட்டு போதும்னு சொல்லிருவாய்ங்க. அதாவது அவரு ஆய்லி ஐட்டமெல்லாம் அதிகம் எடுத்துக்கமாட்டாரம். அதோட அவரு எதையுமே ரொம்ப சாப்ட மாட்டாராம். ரொம்ப டிடர்ஜண்டு .. ச்ச. டீசண்டானவராம்.

இவிங்க ஒருவித அலும்புன்னா, இந்த புள்ளைங்க இன்னொரு விதமான அலும்பு. சும்மா நேரத்துல சனியன் யாரையுமே அண்ட விடாது. பக்கத்து வீட்டு சின்ன புள்ளை பூ கேட்டா கூட, மூஞ்சை காட்டி, தலையில கொட்டி அனுப்பி விட்டுடும்ங்க. ஆனா, அந்த கல்யாண நேரத்துல பாக்கனுமே, ”சின்னக் குழந்தைங்களைப் பாத்தா இந்தப் புள்ளைக்கு உசுரு போல” ன்னு எல்லாரும் ஆச்சர்யப்படுற மாதிரி, கொழந்தைங்க எங்க இங்க இருந்தாலும் கூப்டு ”ஹே இங்க வாடி.. என்னடா செல்லம் பன்ற… பூ வேணுமா.. “ அப்டின்னு அந்தக் கொழந்தையாவே மாறிருவாங்க.

சரி இப்போ நம்ம என்ன பண்ணப்போறோம்னா, திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, மத்த எல்லாரையும் யார்  யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத் தான் இப்போ  பாக்கப் போறோம்.

1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி.

2. கல்யான வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் பொண்ணும் மாப்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்த படியா, எல்லா ஃப்ரேம்லயும் ரெண்டு மூணு தங்க சங்கிலிகள் தெரியிறமாதிரி நிக்கிற ஒரு பொண்ணு இருக்கும். அது வேற யாரும் இல்லை. பையனோட அக்கா.

3. ஆளுக்கும் போட்டுருக்க ட்ரஸ்ஸுக்கும் சம்பந்தமே இல்லாம, ஆனா மாப்ளைக்கு ஈக்குவலா ஒருத்தன் கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு டம்மியா, ஸ்டேஜ்ல நின்னுகிட்டு இருப்பான். அது வேற யாரும் இல்லை. மாப்ளையோட அக்கா புருஷன். அந்தக் கோட்ட, அவர் கல்யாண ரிஷப்ஷனுக்கு அப்புறம் இப்பதான் போட்டுருப்பாரு.

4. இன்னொருத்தன் மாப்ள மாதிரியே வேஷ்டி சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு, ஸ்டேஜ்ல நிக்காம, டான் மாதிரி அங்க இங்க ஓடுறது உடியாருறது வர்றவங்கள கவனிக்கிறது, ஸ்டேஜ்ல ஏறுறது இறங்குறதுன்னு ரொம்ப ஆக்டிவா ரொம்ப சந்தோஷமா திரிஞ்சிட்டு இருப்பான். அவந்தான் மாப்ளையோட தம்பி. ரூட்டு கிளியரான சந்தோஷத்துல தலைகால் புரியாம சுத்திக்கிட்டு இருப்பான்.

5மாப்ளைக்கு லைட்டா வேர்த்தாலோ, வாழ்த்த வர்றவங்க கூட்டத்துல பொட்டுவைக்கும் போது லைட்டா அங்க இங்க அப்பிட்டாலோ, மின்னல் மாதிரி ஒருத்தன் ஒரு கர்ச்சீப்ப வச்சிக்கிட்டு மாப்ள மூஞ்ச தொடைச்சிட்டே இருப்பான். அவன் மாப்ளையோட ஸ்கூல் ஃப்ரண்டா இருக்கும். மொதநாள் நைட்டு பேச்சிலர் பார்ட்டில மூச்சுத் தெணறத் தெணறக் குடிச்சவனும் அவனாத்தான் இருக்கும்

6. கல்யாணம்5 முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் கழிச்சி, “இய்ய்ய்யாய்…எவண்டா அவன் நா வர்றதுக்கு முன்னால தாலியக் கட்டுனது..” ன்னு மண்டபத்தோட வாசல்ல ஒருத்தன் ஃபுல் போதையில கத்திக்கிட்டு இருப்பான். அவனை யாருமே மதிக்காம, ஆனா ஒரே ஒரு அம்மா மட்டும் போய் அவன உள்ள கூப்டாங்கன்னா அவன் தான் மாப்ளையோட தாய் மாமன். பத்து மணி கல்யானத்துக்கு பதினொன்னே முக்காலுக்கு வருவாரு. ஆனா கல்யாணம் அவர் வந்ததுக்கப்புறம் தான் நடக்கனும்னு வேற எதிர்பாப்பாறு. அப்போ அவனப் போய் கூப்டுறது யாருன்னு உங்களுக்கே தெரியும்.

7. கூட்டத்துல உக்காந்துருக்க எல்லாரும் “எப்பப்பா… கல்யாணம் முடியும்.. எப்பப்பா சோறு போடுவாய்ங்க” ன்னு ஒரே ஆவலோட உக்கார்ந்திருக்கும்போது, ஒரே ஒரு அம்மா மட்டும் வச்ச கண்ணு வாங்காம கல்யாணப் பொண்ணையே மொறைச்சி பாத்துகிட்டு இருக்கும். அப்டி இருந்தா. அது பொண்ணோட அப்பா வழி அத்தைன்னும், அவங்க பையனுக்கு இந்தப் பொண்ணை கேட்டு, பொண்ணு வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னும் நீங்களே கண்டுபுடிச்சிடலாம்.



8. மேமாசம், பீக் அவர்ல சென்னை சிட்டி பஸ்ல ட்ராவல் பண்ண மாதிரி ஒரு களைப்போட, ஒரு நிமிஷம் கூட உக்காராம, ஸ்டேஜ்ல கல்யாணம் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூட கவனிக்காம எல்லாரையும் போய், “வாங்க வாங்க.. சாப்டு போங்க” ன்னு ஒருத்தர் கூப்டுட்டு இருந்தா அவர்தான் பொண்ணோட அப்பா.


9. பொண்ணுக்கு எத்தனை சவரன் நகை போட்டுருக்காய்ங்க, யார் யார் என்ன செய்றாங்கங்குற விஷயத்த, பையனோட அம்மா அப்பாவ விட, இன்னொரு முக்கியமான கேரக்டர் ரொம்ப கூர்மையா, திருட்டுப்பய நகைய கவ்வ போறப்போ பாக்குற மாதிரி ஒண்ணு பாத்துக்கிட்டு இருக்கும். அதுவேற யாரும் இல்லை. பையனோட அண்ணி.. எங்க நம்மள விட அதிகமாகிதிகமா நகையப் போட்டுவிட்டு நம்மள டம்மி ஆக்கிறப்போறாய்ங்களோங்குற பீதியிலயே இருக்கும்.

10. அந்த கல்யாணக் கூட்டத்துலயே, ஒரே ஒரு குரூப்பு மட்டும், அந்த கல்யணத்துக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத மாதிரி, தனியா ஒரு மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கும். அதுதான் பொண்ணோட அப்பாவோட சொந்தக்காரய்ங்க.

11.கல்யாணமெல்லாம் முடிஞ்ச உடனே அரக்க பரக்க ஒரு கும்பல், வீங்கிப்போண மூஞ்சோட, ஒழுங்கா சீவாத தலையோட வேக வேகமா வந்து மாப்ளைக்கும் பொண்ணுக்கும் வெறும் கைய மட்டும் குடுப்பாய்ங்க. அவிங்க வேற யாரும் இல்லை. மாப்ளையோட ஆஃபீஸ் மேட்ஸோ இல்லை காலேஜ் மேட்ஸோ. ரூம்போட்டு விடியகாலம் வரைக்கும் குடிச்சிட்டு இப்பதான் எழுந்து வர்றாய்ங்கன்னு அர்த்தம். 

12. அதே கல்யாணத்துல, யாரு கூடவும் பேசாம, ஒரு young,  Husband & wife, அவங்க குழந்தைய விளையாட விட்டுட்டு, அதுக்கு ஐஸ்கிரீம் வாங்கி சாப்ட குடுத்துகிட்டு, கையில் ஒரு கேமராவ வச்சிகிட்டு சீட்டுல உக்காந்த படியே ஸூம் பண்ணி மாப்ளைய ஃபோட்டோ எடுக்குறதும், அப்பப்போ மாப்ளைய பாத்து கைகாட்டுறதுமா இருப்பாய்ங்க. அவனும் வேற யாரும் இல்லை. மாப்ளையோட காலேஜ் ஃப்ரண்டாத்தான் இருப்பான். அவசரப்பட்டு அவிய்ங்க பேட்ச்லயே மொதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை குட்டின்னு ஆயிட்டதால இப்டி பேச்சிலர் பார்ட்டில கலந்துக்க முடியாம சோகத்துல இருக்கவன்.

14. கடைசியா கல்யாணம் முடிஞ்சி, எல்லாரும் ஃபோட்டோ எடுக்க வரும்போது, பொண்ணோட ஃப்ரண்ட்ஸ பாத்து “இவ்வளவு நாளா நீங்கல்லாம் எங்கம்மா இருந்தீங்கன்னு” மைண்டுல நினைக்கிறான் பாருங்க. அவந்தான் நம்ம மாப்ள.




நன்றி : நண்பன் கார்த்தி & புயல் ரஹ்மான்

Friday, February 20, 2015

முருகப்பா ஹாலில் ஒரு கெஸ்டு பெர்ஃபார்மன்ஸ்!!!


Share/Bookmark
ஒருத்தனுக்கு நிறைய சந்தோஷத்தையும் நிறைய கவலையும் ஒரே நேரத்துல குடுக்குறது காலேஜ் ஃபைனல் இயரோட கடைசி ரெண்டு மாதங்கள் தான். காலேஜ விட்டு வரும்போது நமக்கு கண்ணுல ஒரு சொட்டு கண்ணீராவது வரும். அடுத்தவங்க பாத்தா அண்ணனோட கெத்து போயிரும்டா” ன்னு பேக்சாட்ல திரும்பி நின்னு “உனக்கு எதோ ட்ரான்ஸராம்லம்மா..” ங்குற மாதிரியாவது கண்டிப்பா எல்லாரும் அழுதுருப்பாய்ங்க. அப்டி இல்லைன்னா  நிச்சயம் நாம எதையோ மிஸ் பண்ணிட்டோம்னு தான் அர்த்தம். அப்படிப்பட்ட கல்லூரி வாழ்க்கையோட கடைசி சில பக்கங்கள்ள எழுதப்பட்ட வரலாறத்தான் இன்னிக்கு கொஞ்சம் திருப்பி பாக்கப்போறோம்.

”மச்சி, காலேஜ் முடிய இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு செம்மையா எஞ்ஜாய் பண்றோம்.. எஞ்ஜாய் பண்றோம்.. வாங்கஜி.. வாங்கஜீ” ன்னு ஒருபக்கம் ஒருத்தன் சொல்லிட்டு இருக்கும் போதே இன்னொருத்தன் சைடுல “மச்சி இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கா?” ம்பான். மொத்த கூட்டமும் சைலண்ட் ஆயிரும். திடீர்ன்னு இன்னொருத்தன் சொல்லுவான். “மச்சி.. காலேஜ் முடிஞ்சா என்ன மச்சி. நாம சென்னையில வார வாரம் மீட் பண்றோம். ஊர் சுத்துரோம்… படத்துக்கு போறோம்.. ஜாலி பண்றோம்” ம்பான். அதாவது அவரு நம்மள சோகத்துலருந்து மீட்டு சமாதானப்படுத்தி ஜாலியாக்குறாராம்.

அப்புடி வார வாரம் மீட் பண்றோம்னு சொன்ன பல பேர நாம கடைசியா காலேஜ் முடியிற அன்னிக்கு தான் பாக்கமுடியும். அதுக்கப்புறம் கொஞ்ச நாள் அவன் ஆள் அட்ரஸே இருக்காது. அப்பப்போ ஃபேஸ்புக்குல மட்டும் அமெரிக்காவுல ஸ்நோவ கையில அள்ளிக்கிட்டு நிக்கிற மாதிரி சிலப்பல ஃபோட்டோக்களை பாக்கலாம்.  

சில வருஷங்களுக்கு அப்புறம் திடீர்னு அவன்கிட்டருந்து நமக்கு ஒரு ஃபோன் வரும். உடனே “அடேய் நண்பா.. எங்கேயடா இருந்தாய் என் செல்வமே.. பாசத்துல என்னை மிஞ்சினவனா இருக்கியே” அப்டின்னு நாம பாசத்துல பொங்கிரக்கூடாது. ரொம்ப நாளுக்கு அப்புறம் நம்ம கல்லூரி நண்பன் ஃபோன் பன்னான்னா, அவனுக்கு வீட்டுல ஒரு நல்ல பொண்ணா பாத்துருக்காய்ங்க. அதுக்கு கல்யாணத்துக்கு நம்மள கூப்டத்தான் ஃபோன் பண்ணிருப்பான்னு நாமளா மேட்டர கவ்விக்கனும். அப்டி நடந்தா டக்குன்னு ஃபோன எடுத்து “எப்ப மச்சி கல்யாணம்?”ன்னு தைரியமா கேக்கலாம்.

இவய்ங்க கூட பராவால்ல. இன்னும் ஒரு கேட்டகிரி இருக்காய்ங்க. திடீர்னு ஒரு நாள் ஆஃபீஸ் வாழ்க்கையை வெறுத்து, மல்லாக்க படுத்துக்கிட்டு விட்டத்த பாத்து ”காலேஜ்ல நாம எப்டியெல்லாம் இருந்தோம். இங்க நம்மள இப்டி வேலை பாக்க சொல்றாய்ங்களே”ன்னு பழைய நினைவுகளை கரண்டிய வச்சி கிண்டும்போது, திடீர்ன்னு நம்ம பழைய நண்பனோட நினைப்பு வந்து கால் பண்ணுவோம்.

அப்போ அவன் கேப்பான் பாருங்க ஒரு கேள்வி. “என்ன மச்சி காலேஜ் முடிச்சப்புறம் கண்டுக்கவே மாட்டேங்குற. இப்பதான் எங்க நினைப்பெல்லாம் வருதா?” ம்பான். “இப்ப கூட அந்த நாயிக்கு நாம தான் கால் பண்ணிருப்போம். ஆனா அது நம்மள என்ன மச்சி காலே பண்ணலன்னு கேக்கும். அதாவது அவரு நம்ம நினைப்பாவே இருந்தா மாதிரியும் நம்ம கால் பண்ணாததால தான் அவரு இவ்வளவு நாளா பேசாத மாதிரியும் தான் ஒரு சீனப் போடுவய்ங்க. சரி.. நண்பர்கள் பலவிதம்.

கல்லூரியோட கடைசி நாட்களை எண்ணிக்கிட்டு இருக்கும்போது தான் வந்துச்சி அந்த கல்ச்சுரல்ஸ். வழக்கமா அடுத்தவய்ங்க நடத்துவாய்ங்க. நாம போய் உரண்டை இழுப்போம். இப்போ நாமதான் சீனியராமே.. நம்மதான் நடத்தனுமாமே. இதுல கொடுமை என்னன்னா காலேஜோட கல்சுரல் co-ordinator நம்ம அபிநய சரஸ்வதி சம்பந்தம். எங்க சீனியருங்களுக்கே பர்மிஷன் குடுக்க மாட்டேன்னு அடம்புடிச்சி, அதுக்கப்புறம் அவனுங்க ரெண்டரை நாள் கெஞ்சி வாங்கி கல்ச்சுரல்ஸ நடத்துனாய்ங்க.

அவங்களுக்கே இந்த கதின்னா, நம்ம பயலுக போன வாரம் நடந்த sports meet la தான் ”சூடான பருத்திப்பால்.. சூப்பரான ஆட்டுப்பால்”னு ரைமிங்கா அவர அசிங்க அசிங்கமா திட்டிக்கிட்டு வந்தாய்ங்க. அதுமட்டும் அந்தாளுக்கு கேட்டிருந்தா, பர்மிஷன் கேட்டு போறவிங்கள செருப்புலஅடிச்சி பத்தி விட்டுருவாரே. என்ன செய்யலாம்? ”saar… want money saar… saar help saar” ன்னு மரியான் தனுஷ் பாணியில “சார் last year saar.. கடைசி 20 days saar.. இதுக்கப்புறம் வாழ்க்கையில no fun saar… pls help saar” ன்னு ஏதேதோ சொல்லி பசங்க பர்மிஷன் வாங்கிட்டாய்ங்க.

பர்மிஷன் வாங்கியாச்சு. இனிமேதான் மெயின் ஆப்பே இருக்கு. நம்ம வேற ஃபைனல் இயரு. இதுக்கு முன்னால ஃபைனல் இயர் டீமோட கல்சுரல் பர்மார்மன்ஸ பாத்தவிய்ங்க, நம்மக்கிட்ட பெர்பார்மன்ஸ் வேற ஹெவியா எதிர்பார்ப்பாய்ங்க. நம்ம சோ தான் நல்லாருக்காதேடா.. அய்யயோ… அமைச்சரே நன்றாக மாட்டிக் கொண்டோமைய்யா… ஜூனியர் பசங்க ஆடுறதையும் பாடுறதையும் பாக்கும்போது அவய்ங்க எதோ நல்ல மாஸ்டர்கிட்ட டான்ஸ் கத்துக்கிட்டு இருப்பாய்ங்க போலருக்கு.

ஆனா நம்ம இயர்ல எப்புடித்தேடுனாலும் கடைசில நம்ம லியோபால் மாஸ்டரோ இல்லை ACP பரத் குமார் மாஸ்டரோதான்  நம்ம பசங்களுக்கு கொரியோகிராஃப் பன்னுவாய்ங்க. இவய்ங்கள நம்பி காம்பெடிஷன்ல இறங்குனா அடி பின்னிருவாய்ங்களே. இந்த மாதிரி ஃபைனல் இயரோட கெளரவத்தை பாதிக்கிற சில காரணிகளை ஆரய்ஞ்சி  பாத்தப்புறம் சங்கம் ஒரு முடிவெடுத்துச்சி. அந்த முடிவுப்படி “ஃபைனல் இயர் பசங்க எல்லா பர்மார்மென்ஸூம் குடுப்பாங்க. ஆனா எங்களுக்கு பரிசுகள் மேல் ஆசை இல்லை.  அந்தப் பரிசுகளையெல்லாம் எங்களோட தம்பிகளான எங்கள் ஜுனியர் பசங்களுக்கே பிரிச்சி குடுத்துருங்க. நாங்க குடுக்குறது எல்லாமே கெஸ்ட் அப்பியரன்ஸ் மட்டும்தான்” அப்டின்னு ஒரு அறிக்கைய விட்டோம்.

எதாவது ஒண்ணு ரெண்டு கெஸ்ட் அப்பியரன்ஸ்னா பசங்க நம்புவாய்ங்க. ஆனா பண்ற எல்லாமே கெஸ்ட் அப்பியரன்ஸ்னா எவனாச்சும் நம்புவானா.. சரி சமாளிப்போம். கல்சுரல்ஸூம் ஆரம்பிச்சிச்சி. சம்பந்தம் ஏற்கனவே ஒரு எச்சரிக்கை விட்டுருந்தாரு. (பின்வரும் வாக்கியத்தை காட்ஃபாதர் அஜித் ஸ்டைலில் படிக்க) ”இதோ பாருங்கையா… கல்சுரல்ஸ் எந்த ப்ரச்சனையும் இல்லாம நடக்கனும். எதாவது ப்ரச்சனை நடந்தா உடனே நிறுத்திருவோம்” ன்னு. கல்ச்சுரல்ஸ நிறுத்துறது இருக்கட்டும் முதல்ல நீ இந்த அபிநயம் புடிக்கிறத நிறுத்துய்யா.

வழக்கமா கல்ச்சுரல் நடக்கும்போது கலவரம் பன்றது, பாதியில எதாவது ப்ரச்சனைய கெளப்பி மொத்தமா எந்திரிச்சி போறதுன்னு நம்மதான இந்த மாதிரி காவாளித்தனத்த இதுவரைக்கும் பன்னிட்டு இருந்தோம். இப்போ நம்மளே ஃபங்ஷன நடத்தும்போது யார் ப்ரச்சனை பன்னப்போறதுன்னு எல்லாரும் அத ஒரு பொருட்டாவே மதிக்கல. ஆனா ஆண்டவன் எங்கெங்க ஆப்பு வப்பான்னு நமக்குத் தெரியாது.



நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சி ஒண்ணரை நாள். நம்ம பயலுக ஜட்ஜ்மெண்டுக்கு அப்பாற்பட்ட பல கெஸ்ட் அப்பியரன்ஸ்கள குடுத்து கொன்னுக்கிட்டு இருந்தாய்ங்க. ரெண்டாவது நாள் மதியானம். ஒரு மூணுமணி இருக்கும். முருகப்பா ஹால் நிரம்பி வழியிது. நிறைய பேருக்கு உக்காரவே இடம் இல்லை. நம்ம வேற ஃபைனல் இயரு. நம்ம நடத்துற ஃபங்ஷன்ல நம்மளே உக்காரலாமான்னு மத்தவங்களை சீட்டுல உக்கார வச்சிட்டு ஃபைனல் இயர்ல பாதி பசங்க ஹாலுக்கு நடுவுல இருக்க  walk way ல ஒருத்தன் மடியில ஒருத்தன் சாஞ்சா மாதிரி படுத்துக்கிட்டு,  நிகழ்ச்சிகள ரசிச்சிட்டு இருந்தோம்னு நினைக்காதீங்க. எந்த இயர் புள்ளைங்க நல்லா இருக்குன்னு பாத்துக்கிட்டு இருந்தோம். அதுவும் ஒருவித ரசனை தானே… அவ்வ்..

எப்பவுமே காலேஜ்ல immediate சீனியருங்க மட்டும் பசங்களுக்கு ஆகாது. ஏன்னா அவிங்க தான் வாங்குன மொத்த அடிய திருப்பி குடுக்கனும்னு புதுசா வர்றவிங்கள ragging அது இதுன்னு கொடுமைப் படுத்துவாய்ங்க. ஆனா double seniors கூட எப்பவுமே பசங்களுக்கு ஒரு நல்ல rapport இருக்கும். அதே மாதிரி தான் நாங்க ஃபைனல் இயர் படிக்கும்போது இருந்த 2nd year பசங்க கூட ஒரு understanding இருந்துச்சி. எங்க இயர் பேரு VVS 007 (வருத்தப்படாத வாலிபர் சங்கம் 007) அவிங்க, அவனுங்க ”நாங்க VVS juniors” ன்னு சொல்லுவாய்ங்க

அன்னிக்கு பசங்க வரிசையில முதல் ரெண்டு மூணு வரிசையில professorங்க உட்காந்திருந்தாங்க. அப்புறம் First year பசங்க, அதுக்கு பின்னால செகண்ட் இயர் பசங்க அதுக்கு பின்னால 3rd year பசங்க. கடைசில ஃபைனல் இயர் பசங்க. திடீர்னு அந்த 3rd year பசங்களும் 2nd year பசங்களும் உக்கார்ந்துருக்க இடத்துல, நல்லா இருந்த தேன்கூட கலைச்சி விட்டா மாதிரி எதோ கலைய ஆரம்பிச்சாய்ங்க.

எண்டான்னு பாத்தா 3rd year குரூப்புலருந்து ஒருத்தன் ஒரு ப்ளாஸ்டிக் chair ah எடுத்து, 2nd year பசங்க மேல வீசுனான். கொஞ்சம் கூட தாமதிக்காம அதுக்கு பதிலுக்கு 2nd year சைடுலருந்து ரெண்டு இரும்பு சேர இவிங்க மேல தூக்கி வீசுனாய்ங்க. அடாப் பாவிகளா.. ஆரம்பிச்சிட்டீங்களாடா.. அய்யய்யோ.. இத்தாண்டா அந்தாளு அன்னிக்கே சொன்னாரு. Walk way la உக்காந்துருந்த மொத்த ஃபைனல் இயர் பசங்களும் அவிங்கள நோக்கி போய் கையில கிடைக்கிறவன சமாதானப்படுத்தி உக்கார வைக்க முயற்சி பன்னோம்.

நா என்கிட்ட சிக்குன ஒரு 3rd இயர் பையன புடிச்சி “டேய் தம்பி.. கொஞ்ச நேரம் உக்காருங்கடா.. வெளில போய் விளையாடலாம்.. சும்மாவே அந்தாளுக்கு எங்களக்கண்டா ஆவாது. இதுல நீங்க வேறயாடா?” ன்னதுக்கு, உடனே அவன் கைய மடக்கி நடுவிரலை எங்கிட்ட காட்டி “அண்ணேன் எங்களப் பாத்து அவன் இப்புடி கைகாமிக்கிறான்னே” ன்னு வெறித்தனமா கத்துனான். “அதுக்கு ஏண்டா நீ என்கிட்ட அந்த மாதிரி காமிக்கிற… இதெல்லாம் ஒரு மேட்டராடா.. இங்கிலீஷ் படத்த பாருங்கடா.. எல்லாரும் எல்லாரையும் பாத்து இப்டித்தாண்டா ஜாலியா கை காமிப்பாங்க… அவன் சும்மா ஒண்ணுக்கு போறதுக்கு தெரியாம விரல மாத்தி காமிச்சிருப்பாய்ங்கடா” ன்னு தம்கட்டி சொல்லியும் அவன் “விடுங்கன்னே.. நாங்க கிளம்புறோம்” ன்னு கிளம்பி வெளிய பொய்ட்டான். 

(நா கேட்ட அந்த 3rd year பையனோட FB profile name Kannan Maadhu. இந்த சம்பவம் அவனுக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல. ஆனா எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு)

“நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே. இன்னும் பயிற்சி வேண்டுமோ” ன்னு யோசிக்கும் போதுதான் நம்ம பசங்க பிரம்மாஸ்திரத்த உபயோகிச்சாய்ங்க. கால் மணி நேரம் கழிச்சி குடுக்க வேண்டிய ஸ்நாக்ஸ அப்பவே ஓப்பன் பண்ணி வச்சிட்டாய்ங்க. சண்டை போட்டு வெளில போன பசங்கல்லாம் சரி போறது போறோம் அப்டியே ஸ்நாக்ஸ போட்டுக்கிட்டே போவோம்னு ஸ்நாக்ஸ்ல கைவைக்க, “Five star சாப்டுங்க… டேஸ்ட்ல மறந்து போயிருங்க” ங்குற மாதிரி வெளில சண்டை போட்டுக்கிட்டு போன பாதி பேரு ஸ்நாக்ஸ் டைம் முடிஞ்சி வரும்போது “டேய் ரமேஷ்.. டேய் சுரேஷ்” ன்னு பேசிக்கிட்டே திரும்ப உள்ள வந்து உக்காந்துட்டாய்ங்க. 

ஆனா மெயின் கலவரத்துல ஈடுபட்ட சில பேரு மட்டும் வெளிநடப்பு செய்ய, கேப் விழுந்த இடத்த நம்ம பயலுகள வச்சி ஃபில் பண்ணியாச்சு. தலைக்கு வந்தது, தக்காளிச்சட்னியோட போச்சிங்குற மாதிரி அன்னிக்கு வச்ச கட்லட்டும் தக்காளி சாஸூம் நடக்க இருந்த பெரும் கலவரத்த தடுத்து நிறுத்துச்சி.

அந்த செகண்ட் இயர் பசங்கள பாக்கும்போது அப்டியே ரெண்டு வருஷத்துக்கு முன்னால எங்க பசங்கள பாக்குற மாதிரி இருந்துச்சி. காவாளிப்பயலுகளா.. நாங்க தான் இப்டி ஆயிட்டோம்னா நீங்களும் ஏண்டா. போய் படிங்கடா.. நாங்க நடத்துன அந்த  கல்ச்சுரல்லருந்து, ஒரே ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சிக்கிட்டோம். 

“கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவு… ஆனா கட்லட் இருந்தா தப்பிச்சிடலாம்” ங்குறதான் அது. 

தொடர்புடைய இன்னும் சில வரலாற்றுப் பக்கங்கள்

என்னது செமஸ்டர் ரிசல்ட் வந்துடுச்சா!!!

தம்பி ப்ரச்சனை பண்ணாதீங்கப்பா- காரைக்குடி கலவரம்!!!






Monday, February 16, 2015

TEMPER – NTR’s BEST!!!


Share/Bookmark
ஆசைப்பட்டு ஒரு தமிழ் படத்துக்குப் போய் அடி வாங்கிட்டு வரும்போது, ச்ச இப்டி ஒரு படத்துக்கு போய் இப்டி நேரத்தையும், காசையும் வீணாக்கிட்டோமேன்னு தோணும். ஆனா தெலுங்கு படங்களுக்கு போகும்போது படம் நல்லா இல்லைன்னாலும் அந்த மாதிரி ஃபீலிங் எனக்கு வந்ததே இல்லை. இதுவரைக்கும் நா ஒரு 15 தெலுங்கு படங்களை தியேட்டர்ல பாத்துருக்கேன். அதுல 12 படங்களோட கதை ஒரே மாதிரி தான் இருந்துருக்கு. இருந்தாலும் காமெடி, ஃபைட்டு, பாட்டு, விஷுவல்ன்னு எதாவது ஒரு விஷயம் ஆறுதல் படுத்துற மாதிரி இருக்கும். தெலுங்கு படங்கள பாக்க ஆரம்பிச்சதுலருந்து, NTR, ரவிதேஜா படங்கள் மட்டும் தியேட்டர்ல மிஸ் பண்ணாம பாத்துகிட்டு வர்றேன்.

நம்ம விஜய்னாவுக்கு ஒரு சூப்பர் ஹிட்ட குடுத்த போக்கிரியோட ஒரிஜினல் வெர்ஷன் எடுத்த பூரி ஜகன்நாத் தான் இந்த டெம்பர் படத்தோட டைரக்டர். போக்கிரியோட ஒரிஜினல் வெர்ஷன எடுத்தது SP.முத்துராமன்ங்குறது வேற விஷயம். பூரி ஜகன்நாத்த பத்தி ஒரு விஷயம் சொல்லியே ஆகனும். ஒரு ஹீரோ ஒரு வருஷத்துக்கு 3 படம் ரிலீஸ் பண்றாருன்னா அது பெரிய விஷயம் இல்லை. ஆனா ஒரு டைரக்டர் ஒரு வருஷத்துக்கு மூணு படம் ரிலீஸ் பண்றாருன்னா ரொம்ப பெரிய விஷயம்.

அப்படித்தான் இந்த பூரி ஜகன்நாத்தும். குறைந்த பட்சம் வருசத்துக்கு ரெண்டு முதல் மூணு படங்களை ரிலீஸ் பன்றவரு.  நானும் என்னோட நண்பர் ஒருத்தரும் என்னடா ஆடு புழுக்கை போடுறமாதிரி எடுத்து தள்ளிக்கிட்டே இருக்காருன்னு கிண்டல் பண்ணி கூட சிரிச்சிருக்கோம். ஆனா அவர் எடுக்குற அந்த மூணு படத்துல ஒண்ணு மெகா ஹிட்டாகவும், இன்னொன்னு ஆவரேஜாகவும், இன்னொன்னு தரை ரேட்டுக்கும் இருக்கும்ங்குறது வேற விஷயம். இப்டித்தான் அவர் ரவிதேஜாவ வச்சி எடுத்த ”தேவுடு ச்சேசின மனுஷுலு” படத்துக்கு நம்பி போய் ரப்படி வாங்கிட்டு வந்தேன்.

சரி இந்தத் தடவ NTR ah என்ன செய்யப்போறாரோன்னு பயந்துகிட்டே போனதுக்கு, ஒரு செம சர்ப்ரைஸ். NTR ரோட பெஸ்டே இந்தப் படம்தான். அவர யாரும் இப்டி யூஸ் பண்ணதும் இல்லை இதுக்கு முன்னால NTR இவ்ளோ சூப்பரா நடிச்சதும் இல்லை.

ஒரு பழைய படத்துல நம்ம சத்யராஜ் ரொம்ப கெட்ட போலீஸா நடிச்சிருப்பாரு. படம் பேரு வீரப்பதக்கம்னு நினைக்கிறேன். எல்லார்கிட்டயும் லஞ்சம் வாங்குவாறு. எல்லாரையும் தப்பு செய்ய விடுவாறு. கடைசி வரைக்கும் திருந்தாமயே இருக்கும்போது, ஒரு சீன்ல கூட இருக்க ஒரு ஏட்டு ரவுடிங்களால அடிபட்டு சாக கிடக்கும்போது “நீ ஒரு நாளாவது நல்ல போலீஸா இருந்துட்டு சாகு”ன்னு எதோ வரு பஞ்ச் வசனம் சொல்ல அப்புறம் க்ளைமாக்ஸ்ல நம்ம சத்யராஜ் நல்ல போலீஸா மாறுவாறு.

டெம்பர்ரோட கதையும் கிட்டத்தட்ட இதுதான். ரொம்ப மோசமான ஒரு போலீஸ் நம்ம தலைவர் NTR. யூனிஃபார்ம் போடாத போலீஸ். பூரி ஜகன்நாத் பட போலீஸ்கள் யாருமே யூனிஃபார்ம் போடமாட்டாங்கங்குறது வேற விஷயம். கெட்ட போலீஸ்னா இந்த நம்மூர் படங்கள் எடுக்குறதுக்கு முன்னால ”இந்தப் படத்துல ஹீரோ ரொம்ப கெட்டவன்”ன்னு பில்ட் அப் குடுப்பாய்ங்களே அந்த மாதிரி இல்லை. உண்மையிலேயே ரொம்ப மோசமான கேரக்டராத்தான் உருவாக்கிருக்காங்க.


ஸ்மக்லிங்க் பண்ற வழக்கமான வில்லனான ப்ரகாஷ்ராஜ் “என்னை விட கெட்டவனா ஒருத்தன போஸ்டிங்” போடுங்கன்னு சொன்னதும் ”தயா”வ (NTR) அந்த ஏரியாவுக்கு போஸ்டிங்க் போடுறாங்க. ப்ரகாஷ்ராஜோட சேந்துகிட்டு அவரோட எல்லா கெட்ட காரியங்களுக்கும் சப்போர்ட் பண்றார். இடையில காஜல பாத்து (ஹலோ அந்த இடை இல்லப்பா) அந்தப்புள்ளை நமக்குத்தான்னு ஃபிக்ஸ் ஆயிருறாரு. அவரோட குறி எப்பவுமே பணம் பணம் பணம்.

”நா பணம் வாங்குறதால யாரும் சாகலை. யாரும் கற்பழிக்கப்படல. நா எதுக்கு காசு வாங்குறத நிறுத்தனும்”ன்னு தனக்கே ஒரு ஜஸ்டிஃபிகேஷன் வச்சிட்டு சுத்திட்டு இருக்க NTR, அவரால எது நடக்கலன்னு கெட்டவரா இருந்தாரோ அது நடந்துடவே, ஃபீல் ஆயி திருந்திடுறாரு.

NTR கூட இருக்க கான்ஸ்டபிள் கேரக்டர் செம்ம. அவர் NTR கெட்டவர்னு தெரிஞ்சதும் அவருக்கு சல்யூட்டே அடிக்க மாட்டாரு. அதே கடைசில NTR திருந்தி வில்லன்கள அடிச்சி பறக்க விடும்போது, NTR அடிக்கிற ஒவ்வொரு அடிக்கும் அந்த கான்ஸ்டபிள் ஒவ்வொரு சல்யூட் அடிக்கிற சீன் தாறுமாறு. அதுவும் க்ளைமாக்ஸ்ல வர்ற கோர்ட் சீன் கொடூரம். யாருமே எதிர்பார்த்துருக்க மாட்டாய்ங்க.

NTRக்குள்ள இப்டி ஒரு நடிகர் ஒளிஞ்சிட்டு இருக்கதே இப்பதான் தெரியிது. ஒவ்வொரு சீனும் சும்மா பின்னி பெடல் எடுத்துருக்காரு. மொத்த படத்தையும் carry பண்ணிட்டு போறதே அவர் ஒருத்தர்தான். என்னைப் பொறுத்த அளவு அவரோட பெஸ்ட் இது தான்.

படத்துல ப்ரம்மானந்தம் இல்லாத குறைய  தீத்து வைக்கிறது வில்லன் ப்ரகாஷ்ராஜ்தான். நாய குளிப்பாட்டி நடுவீட்டுக்குள்ள வச்சாலும் அது திரும்ப நடுரோட்டுக்கு ஓடிரும்னு சொல்ற மாதிரி பழைய தாதா கேரக்டர விட்டுட்டு கொஞ்ச நாளா நல்ல நல்ல ரோலா பன்னிட்டு இருந்த்வர, திரும்ப பூரி ஜகன்நாத் தரை லோக்கல் வில்லனா ஆக்கிவிட்டாரு. அதுவும் அவரோட கெட்டப்ப பாக்கனுமே. சாக்கடையில அடைப்பெருக்க போறவங்க மாதிரி பேண்ட்ட போட்டு அத முக்கால மடிச்சி விட்டுக்கிட்டு பாக்கவே கண்றாவிகா உந்தி.

பஞ்ச் டயலாக் எழுதுறதுல மட்டும் தெலுங்கு படங்களை அடிச்சிக்க முடியாது. ப்ரகாஷ்ராஜ் : உள்ள என்னோட ஈகோ ஹர்ட் ஆவுதுடா.. NTR : உனக்கு ஈகோ உள்ள தான் இருக்கு. எனக்கு ஈகோ சுத்தி wifi ல இருக்கும்பாரு. அப்புறம் ஒரு சீன்ல அவர் ரவுடிங்கள அடிக்கும்போது அவர் உடம்புலருந்து wifi signal வர்ற மாதிரி காமிக்கிறாய்ங்க. ஆத்தாடி.

அனூப் ரூபன்ஸ்ங்குறவர் மியூசிக்ல அஞ்சி பாட்டுமே சூப்பர். லெமூரியா கண்டத்தோட வழக்கொழிஞ்சி போன மணி ஷர்மா மீண்டும் இந்தப்படத்துக்கு BGM மட்டும் போட்டிருக்காரு. பூரி ஜகன்நாத் ஃபுல் பார்ம். ஸ்க்ரீன்ப்ளே, டயலாக் எல்லாமே தாறுமாறு. அவரோட கவுண்ட்ல  வருஷத்தோட சூப்பர்ஹிட் படத்த குடுத்துட்டாரு. அடுத்து ஒரு ஆவரேஜ், ஒரு தரைமொக்கை கண்டிப்பா உண்டு. உசாரைய்யா உசாரு.

மொத்தத்துல டெம்பர் NTRரும் சரி, பூரி ஜகன்நாத்துக்கும் சரி அவங்களோட பெஸ்ட்ட குடுத்துருக்காங்கன்னு சொல்லலாம். 


Saturday, February 14, 2015

அனேகன் – ஆப்பொனென்ட்டா ஆளே இல்ல சோலோவாயிட்டான்!!!


Share/Bookmark
மற்றான் அவ்வளவு சிறப்பாக போகாத நிலையில் இயக்குனர் கே.வி.ஆனந்த் தனுஷை வைத்து எடுத்திருக்கும் அடுத்த படம் இந்த அனேகன். கே.வி.ஆனந்த் படம் என்றாலே விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே உடல் முழுக்க விறுவிறு என்று இருந்தது. பிறகுதான் கவனித்தேன். தெரியாத்தனமாக தியேட்டர் ஃப்ளோர் லைட்டில் கால்வைத்ததால் கரண்ட் ஷாக் அடித்து விறுவிறு என்று இருந்ததை. தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்று அனைவருக்கும் தெரியும். அருமையாக நடித்திருக்கிறார்.

கே.வி.ஆனந்த் படம் என்றாலே ஹாரிஸ் ஜெயராஜ் தான் மீசிக் போடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நன்றாக மீசிக் போட்டிருக்கிறார். ஹீரோயினும் அழகாக இருக்கிறார். நன்றாக நடித்திருக்கிறார். வில்லனும் நன்றாக இருக்கிறார். நன்றாக நடித்திருக்கிறார். எல்லாமே நன்றாகவே இருக்கிறது. கதையும் அருமையாக இருக்கிறது. கேவி ஆனந்தின் இந்தப் படம் தமிழ் திரைப்படங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சி என்று சொன்னால் அது மிகையாகாது.

திரைக்கதையில் ஒருசில குழப்பங்களை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மொத்தத்தில் அனேகன் நல்லாருக்குன்னும் சொல்லமுடியாது நல்லா இல்லைன்னும் சொல்ல முடியாது. நீங்க பாக்கலாம்னும் சொல்ல முடியாது நீங்க பாக்கக் கூடாதுன்னும் சொல்ல முடியாது. நீங்க படத்துக்கு போனாலும் போங்க. போகலன்னாலும் இருங்க. ரேட்டிங்க் அஞ்சுக்கு மூணே கால். நன்றி வணக்கம்.

நேத்து வரைக்கும் நல்லாத்தானய்யா இருந்தான். திடீர்னு மெண்டல் ஆயிட்டானேய்யான்னு தானே வெறிக்கிறீங்க. அட ஒண்ணுமில்லையப்பா. சும்மா ஒரு நடுநிலை விமர்சனம்னு சொல்லுவாங்கல்ல. அதத்தான் எழுதிப்பாத்தேன். அதுக்கெல்லாம் நாம சரிப்பட்டு வரமாட்டோம்னு நல்லா புரிஞ்சிக்கிட்டேன். சரி வாங்க டங்காமாறியப் பத்தி பாப்போம்.

சமீபத்திய பெரிய பெரிய ஏமாற்றங்களால கடுப்பாயிருக்க நம்மூர் ரசிகர்களை ஓரளவுக்கு ஆறுதல் படுத்துற மாதிரி வந்துருக்க படம் தான் நம்ம அனேகன். ரொம்பவே வித்யாசமான கதைக்களம். ரெண்டு மூணு வித்யாசமான காலகட்டத்துல நடக்குற கதைகள். ரொம்ப நாளா படப்பிடிப்புல இருந்தாலும் அதற்கேத்த பலன் கண்டிப்பா கிடைச்சிருக்குன்னு சொல்லலாம்.

வழக்கமா இந்த த்ரில்லர் படங்களைப் பத்தி சொல்லும்போது “இந்த சீட்டு நுனியில உக்கார வச்ச படம்” அப்டின்னு குறிப்பிட்டு சொல்லுவாங்க. அந்த சீட்டு நுனி மொமெண்ட்ட இதுவரைக்கும் நா ஒரே ஒரு படத்துலதான் முழுமையா உணர்ந்திருக்கேன். அது ரத்தச் சரித்திரம்-2 வோட க்ளைமாக்ஸ். எத்தனை பேரு அந்தப் படத்த தியேட்டர்ல பாத்தப்போ ஃபீல் பண்ணீங்கன்னு தெரியல. ஆனா என்ன நடக்கப்போவுது, எவனோ எவனையோ கொல்லப்போறான். ஆனா அது யார்னு தெரியாது. ஒவ்வொருத்தனை நோக்கியும் கேமரா ஸ்லோமோஷன்ல போகவும், அதுக்கேத்த மியூசிக்கும் சேந்து யப்பா.. அந்த ஃபீல் கிட்டத்தட்ட அதுக்கப்புறம் எந்த படத்துலயுமே எனக்கு கிடைச்சதில்லை.

ஆனா அனேகனோட முதல் சீன்ல அந்த எஃபெக்ட ஒரு பாதியையாவது ஃபீல் பண்ணேன். முதல் இருபது நிமிஷமே எதோ க்ளைமாக்ஸ் பாக்குற மாதிரி எல்லாரையும் படத்துக்குள்ள இழுத்து கட்டிப்போட்டுருது.  என்னதான் ஹாரிஸ் ஜெயராஜ திட்டுனாலும் சில இடங்கள்ல பாராட்டத்தான் வேண்டியிருக்கு. அந்த முதல் சீன்ல கேமரா, மீயூசிக்கு, ஸ்பெஷல் எஃபெக்ட்டுன்னு எல்லாமே பூந்து விளையாடுருக்காய்ங்க.

மூணா ரூனாவாக வரும் தனுஷ் கொஞ்ச நேரத்தில் அஷ்விங்குற சாஃப்ட்வேர் பையனாக மாறுறாரு. கே.வி.ஆனந்தும் “அஷ்வின்”ங்குற பேர் செண்டிமெண்ட புதுசா புடிச்சிருக்காப்ள போல. முதல் பாதி முழுக்க படம் இண்ட்ரஸ்டிங்கா போயிகிட்டு இருந்தாலும் நம்ம மனசு வேற எதையோ எதிர்பாத்துக்கிட்டே இருக்கு. என்னன்னு பாத்தா வேறொன்னும் இல்லை. டங்காமாறியத்தான்.

எப்படா போடுவாய்ங்க. எப்படா அந்த தனுஷ் வருவான்னு எதிர்பார்க்க வைச்சே படத்த நகர்த்திருக்காங்க. ஏழாம் அறிவு படத்துல முருகதாஸ் பன்ன தப்ப இங்க கேவி ஆனந்த் பன்னல. ஏழாம் அறிவுல போதிதர்மன் செக்மெண்ட்ட இண்டர்வல் ப்ளாக்குல மட்டும் வச்சிருந்தா அந்தப் படத்தோட ரேஞ்சே வேற. போர் அடிக்கிறதே தெரிஞ்சிருக்காது.

டங்காமாறிய பதுக்கி வச்சி, பின்னால காளிங்குற தனுஷ் கேரக்டர் எண்ட்ரிய பாக்கும்போது என்னையும் அறியாம புல்லரிச்சிருச்சி. படத்துக்கு வந்த பாதிபேர் அந்தப் பாட்டுக்காகத் தான் வந்துருப்பாய்ங்க போல. செம சவுண்டு. தனுஷ் எல்லா கேரக்டருக்குமே செமையா செட்டாயிருக்காரு. குறிப்பா காளிங்குற கேரக்டர்.

பொதுவா நம்ம படங்கள்ல கதை மொத்தமும் ஹீரோவ மையமா வச்சே நகரும். ஆனா இங்க கொஞ்சம் வித்யாசம். மொத்தக் கதையும் ஹீரோயின மையமா வச்சி நகருது. செம்ம அழகு. அதுவும் அந்தப் புள்ள உம்மா குடுக்குற அழகே தனி.  அப்டிப்பட்ட அழகு தேவதைக்கு அவங்க அப்பா இடுப்புல அயன் பாக்ஸான சூடு வைக்கும்போது, எதோ நமக்கே சூடு வச்சா மாதிரி ஒரு ஃபீல்.

மாஞ்சா வேலுவுக்கு அப்புறம் மறுபடியும் நவரச நாயகன். நவரசத்துல ரெண்டு மூணு ரசத்த தான் கேவி ஆனந்த் யூஸ் பண்ணிருக்காரு. முதல் பாதி முழுக்க டம்மியா வந்துட்டு போனாலும் கடைசில ஒரே சீன்ல கார்த்திக் மொத்தமா தனுஷ தூக்கி சாப்டுறாரு. கார்த்திக் இங்க்லீஷ் பின்னி பெடல் எடுக்குறாப்ள.

படத்தோட வில்லன் கேரக்டரும் நல்லாருக்கு. வழக்கமா ஹீரோவும் வில்லனும் சண்டை போட்டா, வில்லன் ஹீரோவ அடிக்கும்போது நமக்கு வில்லன் மேல செம வெறி வரும். ஹீரோதான் ஜெயிக்கனும்னு நம்ம மனசுக்கு தோணும். ஆனா இந்தப் படத்து க்ளைமாக்ஸ்ல ஹீரோவும் வில்லனும் சண்டை போடுறாங்க. ஆனா வில்லன் ஹீரோவ அடிக்கும்போது வில்லன் மேல நமக்கு கோவம் வராது.  வில்லன் ஜெயிச்சா நல்லாருக்கும்னு உள்ளுக்குள்ள கொஞ்சமாவது தோணும். எனக்கு அப்டிதான் தோணுச்சி. வேற யாருக்காவது தோணுச்சின்னா சொல்லுங்க J

ஆனா படத்தோட க்ளைமாக்ஸ், மஹதீரா படத்து க்ளைமாக்ஸ ஏழாம் அறிவு க்ளைமாக்ஸ் எடுத்த லொக்கேஷன்ல எடுத்தா மாதிரி இருக்கு. படத்துல நெகடிவ்னா ஒரு சில விஷயங்களை சொல்லலாம். தனுஷ் அஷ்வின் கேரக்டரா வரும்போது, ஒருசில காட்சிகள் லேசா போரடிக்கிது. ”தொடுவானம் தொலைகிற நேரம்”ன்னு ஷங்கர் மஹா தேவன் பாடுன ஒரு பாட்டை விஷுவல்ல கெடுத்து வச்சிருக்காய்ங்க. தனுஷ் கெட்டப் அந்த பாட்டுல செம்ம காமெடி. அஷ்வின் கேரக்டர்ல வர்ற தனுஷுக்கு காஸ்ட்யூம் சற்று டொம்மை போல இருக்கு. அதப்பாக்க தனுஷ் மாதிரியே இல்லை. கோ  படத்து ஜீவா மாதிரி, எதோ துணிக்கடை பொம்மை மாதிரி இருக்காரு. அப்புறம் நிறைய விஷயங்களுக்கு படத்துல explanation eh குடுக்காம படத்த படக்குன்னு முடிச்சிடுறாங்க.


இந்தப்படம் கண்டிப்பா கேவி ஆனந்தோட கம்பேக் படம் தான். கதையிலயும், சரி திரைக்கதையிலயும் ரொம்ப கவனமாவே இருந்துருக்காரு. இடையில திடீர்ன்னு இன்ஸ்பெக்டர் கோபிநாத்ன்னு ராஜேஷ்குமார் நாவல்ல வர்ற மாதிரி க்ரைம் இன்வெஸ்டிகேஷன்லாம் வருது. எவனும் கேஸ் போடாம இருந்தா சரி. மொத்தத்தில் அனேகன்,  கண்டிப்பா பாக்கலாம். 

Friday, February 6, 2015

என்னை அறிந்தால்- அதாரு உதாரு!!!


Share/Bookmark
மொத நாள் மொத ஷோ படம் பாக்குற ரசிகர்கள்கிட்ட படம் எப்டி இருக்குன்னு கேட்டா, அவிங்க சொல்ற பதில வச்சே அந்தப் படம் எவ்வளவு மொக்கைன்னு கண்டுபுடிச்சிடலாம். உதாரணமா படம் எப்டிப்பா இருக்குன்னு கேட்டா, நல்லாருக்கு நல்லா இல்லைன்னு ஒரு வார்த்தையில சொல்லாம ”கேமரா நல்லாருக்கு, BGM சூப்பரா இருக்கு, ஸ்டண்ட் பட்டைய கிளப்புது, பயங்கர ஸ்டைலிஷா இருக்கு” ன்னு பிரிச்சி பிரிச்சி சொன்னான்னா தியேட்டருக்குள்ள அவன் விட்டு பிரி பிரின்னு பிரிச்சிருக்காய்ங்கன்னு அர்த்தம்.

அப்டித்தான் இன்னிக்கு காலையில என்னை அறிந்தால் முதல் ஷோ போன தம்பி ஒருத்தன்கிட்ட “படம் எப்டிடா இருக்கு”ன்னு கேட்டேன். அவன் வழக்கம்போல “BGM சூப்பர்…” ன்னு ஆரம்பிச்சான். ஆஹா செத்தாண்டா சேகரு. இந்த தடவையும் வெடி வச்சிட்டாய்ங்களோன்னு நினைச்சேன். ஆனா அந்த மாதிரி அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாம மயிரிழையில இந்தப் படம் உயிர் பிழைச்சிருச்சின்னு சொல்லலாம்.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடுன்னு ரெண்டு தோசைங்கள சுட்ட அதே மாவுல சுடப்பட்ட அடுத்த தோசைதான் இந்த என்னை அறிந்தால். எழுபது சதவீத காட்சிகள் ஏற்கனவே மேல சொன்ன ரெண்டு படங்கள்லயும் பார்த்தது. காட்சிகள் மட்டும் இல்லை. கதாப்பாத்திரங்கள் உட்பட அனைத்தும்.

முதல் பாதிய கடந்து வர்றதே படம் பாக்கப்போற ஒவ்வொருத்தருக்கும் ரொம்ப பெரிய சவால். அறு அறுன்னு அருக்குறாய்ங்க. அதுலயும் கவுதம் மேனன் டயலாக்கு… பிரமாதம். நல்லா இருக்கவேண்டிய சில சீன்கள வசனங்கள வச்சி தரை மொக்கையாக்குறதுக்கு சிறந்த உதாரணம் இந்தப் படம் தான். சம்பந்தம் சம்பந்தம் இல்லாம என்னென்னமோ பேசுறாய்ங்க.

ஒரு சீன்ல த்ரிஷாவோட டான்ஸ பாத்துட்டு அஜித், திரிஷாகிட்ட போய் “உங்க டான்ஸ் எனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லலாமா?” ங்குறாரு. அதாவது ”உங்க டான்ஸ் எனக்கு புடிச்சிருக்கு” ன்னு நேரடியா வசனம் வச்சா டைரக்டர் டச்சு போயிருமாம்.  வீட்டுல பொண்டாட்டிகிட்ட “இன்னிக்கு நம்ம வீட்டு சாம்பார் நல்லாருக்குன்னு நா உன்கிட்ட சொல்லலாமா?” ன்னு தான் கவுதம் கேப்பாரு போல. முதல் பாதில அஜித்தும் அனுஷ்காவும் பேசுற ஒவ்வொரு வசனமும் ரொம்ப ரொம்ப அருவையாவும், ஆர்டிஃபீஷியலாவும் இருக்கு.

சினிமோட்டோ கிராஃபிக்கு அயல்நாட்டுலருந்து ஒருத்தனை புடிச்சிட்டு வந்துருக்காய்ங்க. முதல் முக்கால் மணி நேரம் ஒன்லி க்ளோஸ் அப் ஷாட் தான். அதுவும் அஜித்துக்கும், அனுஷ்காவுக்கு ஸ்பெஷலா ஜும் போயிருக்காங்க ஜூம். அனுஷ்காவ கூட அசிங்கமா காமிக்க முடியும்னு இந்தப் படத்த பாத்தா தெரியும். சீக்கிரமா நீயும் ஒரு தொழிலதிபர பாரு ஆத்தா. நாங்களும் எவ்வளவு நாளுதான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது. 

முதல் பாதில சில காட்சிகள் ரொம்ப ஆர்டிஃபீஷியலா இருக்கு. உதாரணத்துக்கு முதல் தடவ அஜித்த அனுஷ்கா ஃப்ளைட்டுல பாக்குறாங்க. அஜித் சுண்ணாம்பு சட்டிக்குள்ள தலைய விட்டா மாதிரி.. ஓ சாரி சாரி.. இந்த சால்ட் & பெப்பர் ஸ்டைல் மண்டையோட உக்கார்ந்துருக்காரு. அந்த கெட்டப்புல அஜித்த முதல் முதலா பாக்குற பொண்ணுங்க பெரிப்பான்னு கூப்டாம இருந்தாலே பெரிய விஷயம். ஆன அனுஷ்கா “நீ அழகண்டா.. என்ன கொல்லுறடா.. சுசுமார்ட்டு டா” ன்னு வழியிது. சரி அதுகூட பரவால்ல. ஆனா இன்னொரு ரியாக்சன் விடும் பாருங்க “உனக்கு கல்யாணம் ஆயிருச்சின்னு மட்டும் சொல்லிடாதடா”ன்னு மனசுக்குள்ள பேசிக்கும். ஏன் பாட்டிக்கா.. அந்த மண்டைய புதுசா யாராவது பாத்தா, உன் பையன் எந்த காலேஜ்ல படிக்கிறான்னு தான் கேள்வி கேப்பாங்க.. ஆனா இது கல்யாணம் ஆயிருக்க கூடாதுன்னு வேண்டிக்குது. அடுத்த படத்துலயாவது இந்த சால்ட் அன் பெப்பர கொஞ்சம் தார ஊத்தி கருப்பாக்குங்கப்பா.. 


தத்தி தள்ளாடுற படம், அஜித் போலீஸா மாறுற சீன்லருந்து ஓரளவு கம்பிகிம்பிய புடிச்சிக்கிட்டு தவழ ஆரம்பிக்கிது. பெரும்பாலான போலீஸ் கெட்டப்புல அஜித் அப்படியே ராகவனை ஞாபகப்படுத்துறாரு. யோவ் யாருப்பா அது கல்ல பொறுக்குறது? ஞாபகப்படுத்துறாருன்னு மட்டும் தானே சொன்னேன்.

இந்த ஆதவன் படத்துல ரமேஷ் கன்னா ,” இளையராஜாகிட்டருந்து இலைய பரிச்சி, A.R.ரஹ்மான்கிட்டருந்து மான ஓட்டிக்கிட்டு வந்து என் பேர இளையமான்ன்னு வச்சிக்கிட்டேன்னு சொல்லுவாரு. அதே மாதிரி தான் வேட்டையாடு விளையாடு கமலினி கேரக்டர கூப்டு வந்து, அதே வேட்டையாடு விளையாடு ஜோதிகாகிட்டருந்து குழந்தைய புடுங்கி அந்த புள்ளைகிட்ட குடுத்தா, அது தான் என்னை அறிந்தால் திரிசா கேரக்டர்.

கிட்டத்தட்ட ஒண்ணரை மணி நேரம் படம் எத நோக்கி பயணம் பண்ணுதுன்னே தெரியாம போயிட்டு இருக்க, கடைசி முக்கால் மணி நேரம் தான்  மொத்த படத்தையும் காப்பாத்துது. முதல் பாதில பாத்த மொக்கையெல்லாம் மறைச்சி, நம்மள கொஞ்சம் ஆறுதல் படுத்தி வீட்டுக்கு அனுப்பி விடுறது படத்தோட ரெண்டாவது பாதி தான்.

எப்பவுமே ஒரு ஹீரோ எவ்வளவு பவர்ஃபுல்லானவர்னு முடிவு பண்றது வில்லன் கேரக்டர் தான். வில்லன் கேரக்டர் எவ்வளவுக்கு எவ்வளவு பவர்ஃபுல்லா இருக்கோ அதப் பொறுத்து தான் ஹீரோ கேரக்டர் இருக்கும். மார்க் ஆண்டனி இல்லைன்னா பாஷா பாய் ரொம்ப சாதாரணமானவராத் தான் இருந்துருப்பாரு. நீலாம்பரி இல்லாம படையப்பா கேரக்டர் இவ்வளவு கெத்தா இருந்துருக்காது. மதுரை முத்துப்பாண்டி இல்லைன்னா கில்லி வேலு சாதா தங்கவேலாத்தான் இருந்துருப்பாரு. அதே மாதிரிதான் இங்க அஜித்த பவர்ஃபுல்லா மாத்துறவரு வில்லன் அருண் விஜய். ரொம்ப நல்ல சாய்ஸ். செம்மைய பண்ணிருக்காரு. பாடி லாங்வேஜூம் சரி, டயலாக் டெலிவரியும் சரி, சூப்பர். முதல் பாதில இன்னும் கொஞ்சம் இவர யூஸ் பண்ணிருந்தா முதல் பாதி கூட நல்லா இருந்துருக்குமோ என்னவோ.

அஜித் மறுபடியும் தி நகர் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி “மிக ப்ரம்மாண்டமாய்” மாறிட்டாரு. XXL டீ ஷர்ட் கூட அவருக்கு ரொம்ப டைட்டா இருக்கும் போல. நிறைய காட்சிகள்ல அவரோட உடம்பு கேரக்டருக்கு ஒட்டாம தனியாத் தெரியிது. ஆனா முன்னால இருந்தத விட, இந்த படத்துல அஜித் நிறைய காட்சிகள்ல நல்லாவே நடிச்சிருக்காரு. அதாரு உதாரு பாட்ட ரொம்ப என்ஜாய் பண்ணி ஆடிருக்காரு. அந்த பாட்டுல அவர் face reaction பாத்தாலே நல்லா தெரியும்.

படத்தோட ரெண்டாவது பாதில நிறைய காட்சிகள் நல்லாவே இருந்துச்சி. குறிப்பா அருண் விஜய்யும், அஜித்தும் ஃபோன்ல பேசுற ஒரு சீன் செம சூப்பர். அப்புறம் அஜித்துக்கு மறுபடியும் காக்கி ஷூவ அவர் பொண்ணு எடுத்து குடுக்குறதும் அப்போ அந்த தீம் மியூசிக் வர்றதும் சூப்பர். படத்துக்கு இன்னொரு பெரிய ப்ளஸ் ஆரிய ஜெயராஜ். டைட்டில் மியூசிக்கே தெறிக்குது. எல்லா பாட்டுமே நல்லா எடுத்துருக்காங்க.  BGM மும் நல்லாருக்கு. அங்கங்க கொஞ்ச கொஞ்சம் கைவுட்டு உருவி இங்க போட்டுருக்காரு. ஆனா நல்லா தான் இருக்கு.

கெளதம் வாசுதேவ உன்னி மேனன் கதை திரைக்கதையோட நிறுத்திக்கலாம். வசனம் எழுதி ஆளுங்கள கொல்ல வேண்டாம். அதுவும் ஆளாளுக்கு ஒரு செண்டிமெண்டு மாதிரி இந்தாளுக்கு கெட்ட வார்த்தை செண்டிமெண்டு போலருக்கு. தேவையில்லாத இடத்துலயெல்லாம் கெட்ட வார்த்தை. இதுல கேவலமான ஒரு விஷயம் என்னன்னா படத்துல அந்த கெட்ட வார்த்தைகள் வரும்போது தான் நம்மாளுங்க கைதட்டி ரசிக்கிறாய்ங்க. கண்றாவி. அப்புறம் இனிமே போலீஸ் கதை எடுக்குறதா இருந்தா கொஞ்சம் வேற மாதிரி ட்ரை பண்ணுங்க. அதே மாவு இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்குன்னு இன்னொரு தோசைய சுட்டுடாதீங்க.  We are பாவம்.

மொத்ததுல என்னை அறிந்தால் படம் முடிஞ்சி வரும் போது, ஒரு சூப்பர் படத்தை பாத்துட்டு வந்தோம்ங்குற ஃபீல கண்டிப்பா குடுக்கல. ஆனா அதே மாதிரி, ஒரு மொக்கை ரகமும் இல்லை. சூப்பர் படம், மொக்கை படத்துக்கும் இடையில உள்ள ஒரு மெல்லிசான கோட்டுல மாட்டிக்கிட்ட ஒரு சுமாரான படம் தான் என்னை அறிந்தால். அஜித் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக்கிற அளவு இந்தப் படத்துல ஒண்ணும் சிறப்பா இல்லாததால இன்னும் கொஞ்ச நாளைக்கு “மங்காத்தாடா”வையே continue பண்ணலாம்.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...