Wednesday, March 28, 2018

அரசியலில் ரஜினி - கமல் ஒப்பீடு சரியானதா?!!


Share/Bookmark



இன்று ரஜினி மற்றும் கமல் இருவரும் அரசியல் வருகையை அறிவித்த பின்னர், ஊடகங்கள் அனைத்தும் ரஜினி மற்றும் கமலை சமதளத்தில் வைத்து பார்த்து வருகின்றனர். ரஜினி - கமல் அரசியல் மாற்றம் வருமா? ரஜினி - கமல் வருகை தமிழக அரசியலை புரட்டி போடுமா? என்று பல கேள்விகள் இன்று ஊடகங்கள் மக்கள் முன் வைக்கின்றன . ஆனால் அடிப்படையில் ரஜினி கமல் சமமான ஒப்பீடு தவறானது. அதற்கு அடிப்படையாகவே பல காரணங்கள் உள்ளன. என்னவென்று பார்க்கலாம்.

1.அடிப்படைக் கட்டமைப்பு:

ரஜினி கமல் இருவருக்கும் இருக்கும் முதல் சுற்று தொண்டர்கள் அவர்களின் திரை உலக ரசிகர்கள். இதில் இருந்து பார்த்தால் அமைப்பு ரீதியாக ரஜினி அவர்களுக்கு உலக அளவில் (ஆம், ஜப்பான், இலங்கை,மலேஷியா போன்ற நாடுகளில் கூட இவருக்கு மன்றங்கள் உள்ளன) சுமார் 50,000 மன்றங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ரஜினி அவர்கள் நேரிடைய எந்த தொடர்பும் கிடையாது. இவைகளை நிர்வகிப்பது மட்டும் தான் சுதாகர் அவர்களுடைய வேலை. படங்கள் வெளியாகும் போதும், படம் சம்மந்தமாக எந்த அறிவிப்போ,ஆலோசனைகளோ இவர்களுக்கு பெரிய அளவில் இருக்காது. ஆயினும் இன்று அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன நொடி, இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விட்டனர்.


இன்று தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் சுமார் 55,000 வாக்கு சாவடிகள் உள்ளன. இவையனைத்திற்கும் தேர்தல் நேரத்தில், பூத் கமிட்டி என்று சொல்ல கூடியவர்கள் நியமிக்கவடுவார்கள். தமிழகம் முழுதுக்கும் பூத் கமிட்டி அமைக்கும் அளவுக்கு அமைப்பு ரீதியாக பலமாக உள்ள கட்சிகள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க மட்டுமே.இவை இரண்டையும் விட்டு சொல்லிக்கொள்ளும் படியாக மூன்றாவதாக தனி கட்சியாக இறங்கிய ஒரே கட்சி பா.மா.கா மட்டுமே.ஆனால் இவர்களுக்கு பூத் கமிட்டி விடுங்கள் வேட்பாளர் அறிவிப்பதே சிரமாக இருந்தது. நிலைமை இவ்வாறாக இருக்க எந்த வித அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் கட்சி அறிவித்த கமல், கட்சி அறிவித்த பின்னர் தொகுதி வாரியாக, அதாவது அவருக்கு திரை படங்கள் சரியாக போகாத B மற்றும் C சென்டர்களில் இன்று ஆட்களை தேடிக்கொண்டு இருக்கிறார். இந்த அமைப்பு தான் மிக மிக முக்கியம். நாளை தமிழ் நாட்டில் எந்த ஒரு மூலையில் பிரச்சனை என்றாலும் நமக்கு ஆட்கள் இருந்தால், தனிப்பட்ட முறையில் விசாரித்து தெளிவான முடிவு எடுக்க வசதியாக இருக்கும்.ஆனால் கமல் அவர்கள் ரஜினி போல் இதை முதலில் செய்யாமல் சற்று அவசரபட்டு கட்சி பெயர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மட்டுமே அறிவித்து உள்ளார்.ஆனால் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து வரும் செய்தியில்,மாவட்ட செயலாளர் முட்டும் இல்லாமல், நகர,ஒன்றிய செயலாளர் வரைக்கும் அறிவிக்கப்படுகிறது. இது அடிப்படை முதல் வித்தியாசம்..

2.விரைவு vs அவசரம் :

எல்லா விசயத்திலும் கமல் அவர்கள் சற்று அவசர படுகிறார் என்றே தெரிகிறது. இலக்கை அடைய வேகம் மற்றும் விரைவுத்தன்மை வேண்டும் ஆனால் அவசரம் கூடாது.எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் 
பதறிய காரியம் சிதறும். அவசரம் இல்லாமல் இருந்திருந்தால் அவர் கட்சியின் கொள்கை கூட அமைக்காமல் கட்சி பெயரை மட்டும் சொல்லுவேன், கொள்கைகளை 6 மாதத்திற்கு பிறகு சொல்லுவேன் என்று கூற வேண்டிய நிர்பந்தம் கமலுக்கு இருந்திருக்காது. இவ்வளவு அவசரமாக கட்சி பெயரை மட்டும் சொல்லிவிட்டு மீதியை பின்னால் சொல்லுவேன் என்பது கண்டிப்பாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த அவசரம் தான் கமலின் மகளிர் தின மாநாட்டில் வெளிப்பட்டது. அக்கட்சியின் மையப்புள்ளி கமல், ஆனால் அவர் பங்கேற்ற கூட்டத்திற்கு,5 இலக்கத்தில் கூட கூட்டம் வரவில்லை என்பது கண்கூடு. கூட்டம் சேர்த்தால் மட்டும் வெற்றி கிட்டுமா? கண்டிப்பாக இல்லை. வெற்றியும் வரலாம், தோல்வியும் வரலாம். ஆனால் கூட்டமே வரவில்லை என்றால் தோல்வி தான் வரும். 


மாறாக ரஜினி நிதானமாக, இருப்பினும் துரிதமாகவும் கட்சி வேலைகள் செய்து கொண்டு இருக்கிறார். கட்சி பெயர் மற்றும் சின்னம் அறிவிக்கும் பொது கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு. கொள்கைகள், தொலைநோக்கு திட்டங்கள் போன்றவைகளும் அறிவிப்பார் என்று அறியப்படுகிறது. அதற்கு அவர் எடுத்துக்கொள்ளும் நேரம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. இது ஏற்றுக்கொள்ளக்கூடிய இரண்டாவது வித்யாசம்.


3. உணர்ச்சிபூர்வமாக அனுகுதல்:

அரசியல் என்று வந்து விட்டால் நல்லது கெட்டது என அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கும். ஆனால் அதை உணர்வு பூர்வமாக அணுகாமல் பிரச்னையின் சாராம்சம் தெரிந்து அனுகுதல் தான் தேர்ந்த அரசியல்வாதியின் பண்பு.ஒரு சிறு எடுத்துக்காட்டு : நமது சகோதரி காவலர் எட்டி உதைத்ததால் இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்து அகால மரணம் அடைந்தார். மிக மிக துயரமான துக்கமான நிகழ்வு - மாற்று கருத்து இல்லை. கமல் அவர்கள் இதை பற்றி சொல்லும்பொது அனுதாபத்தை தெரிவித்ததோடு மட்டும் அல்லாமல் 10 லட்சம் ருபாய் நிவாரண நிதி அறிவித்தார். வரவேற்கத்தக்க ஒன்று. அப்படியே இரண்டு நாட்கள் கழித்து குரங்கனி காட்டுத்தீயில் சிக்கி 20 பேர் மரணம் அடைத்தார்கள். செய்தியாளர்கள் இப்பொழுது கேட்டது எவ்வளவு நிவாரணம் என்று ? கமல் கூறியது - எனக்கு அவ்வளவு வசதி இல்லை என்று. உண்மையில் இங்கு வசதியோ, மனமோ தவறு செய்யவில்லை மாறாக ஒரு நிகழ்வை உணர்வுபூர்வமாக மட்டும் அணுகும்போது ஏற்படும் தவறுகள் இவைகள். ரஜினி இதில் எந்த விஷயத்திலும் எப்பொழுதும் உணர்வு பூர்வமாக மட்டும் அணுகுவதில்லை.கடந்த கால நிகழ்வுகள் இதற்கு சாட்சி. இது உள்ளப்பூர்வமான மூன்றாவது வித்தியாசம்


4. வசீகர மேடை பேச்சு:

மேடை பேச்சு என்பது ஒரு கலை, ஓவியம்,நடனம் போன்றது. என்னதான் சிறப்பாக எழுதி வைத்து, எழுதிக்கொடுத்து பேசினாலும் சரியாக புரிதல் இல்லாமல் பேசினால் கேட்பவர்களுக்கும் நமக்கும் இடையே இடைவெளி இருக்கும். மறைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பேச்சு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அவர் மேடையில் பேசியது என்றுமே பெரிய ஸ்வாரஸ்யமாகவோ மக்களை கவர்ந்து இழுபவையாகவோ இருந்தது இல்லை. ஸ்டாலின் அவர்கள் பேச்சும் இதே ராகம் தான். ஆனால் ரஜினி பிறப்பால் தமிழர் இல்லை என்றாலும் தமிழ் வார்த்தை ஜாலத்தில் வல்லவர்.
தோராயமாக ஒரு ஆண்டு ஆகப்போகிறது "போர் வரும் போது பாத்துக்கலாம்" என்று கூறி.இன்று வரை அந்த வார்த்தைகள் அனைவராலும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் உள்ளது. இது தான் மேடைப் பேச்சு வசீகரம் என்பது. மேலும் "வரும் சட்டமன்ற தேர்தலில் நமது படையும் இருக்கும்" போன்ற பல உதாரணங்கள். MGR சிலை திறப்பு விழாவில் பேசிய காணொளி பதிவு 20 நாட்களில் 10 லட்சம் பார்வைகளை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இது போல் அவர் வரும் காலங்களில் பேசுவது மேலும் மேலும் மக்களிடத்தில் மிக அதிகமா சென்று சேரும். கமலுக்கு இருக்கும் மிகப்பெரிய குறை வசீகர மேடை பேச்சு இல்லாமை. அவர் செய்யுள் வடிவில் பேசுவதை நான் கூறவில்லை,உரைநடையில் பேசுவதே சென்றடைவதில்லை. கண்டிப்பாக வரும் காலங்களில் இது மாறும்\என்று நம்புவோம். இது முக்கியமான நான்காவது வித்தியாசம்




5.பெண்கள் செல்வாக்கு:

படங்களில் கமல் அவர்கள் எடுத்த அவதாரங்கள் அவரை எப்பொழுதும் பெண்களிடம் கொஞ்சம் தள்ளித்தான் வைத்தது. அவர் அதை பெருமையாக தான் சொல்லிவந்தார்.இப்பொழுது அரசியல் என்று வரும் பொழுது அந்த பெருமை அவருக்கு சிறுமையாக தான் உள்ளது. ஆனால் ரஜினி திரைப்படத்திற்கு எவ்வளவு பெண்கள் கூட்டம் கூடும் என்பது பொதுவாக சினிமா பார்க்கும் யாருக்குமே தெரியும்.இதுவும் ரஜினிக்கு இருக்கும் மிக பெரிய பலம். பெண்கள் வாக்குகள் தான் மறைந்த ஜெயலலிதா அவர்களுக்கு மிக பெரிய வாக்கு வாங்கிய இருந்தது என்பது உண்மை. இது ஓட்டிற்கான ஐந்தாவது வித்தியாசம்.


6.எதிப்பு தான் மூலதனம் :

இந்த வார்த்தையும் ரஜினி அவர்கள் மேடையில் பேசியதுதான். இது தான் இன்றைய மிகப்பெரிய எதார்த்தம். லெட்டர் பேட் கட்சிகள் முதல் உதயகுமார் மற்றும், வேல்முருகன் போன்ற சிறு குழுக்கள் வைத்து உள்ளவர்கள் வரை அனைவரின் தூக்கத்தையும் ரஜினி அவர்களின் அரசியல் வருகை கெடுத்து உள்ளது. கடந்த மே மாதம் முதல், இன்று வரை அவர் எத்தனை முறை பேசி உள்ளார் என்று எண்ணிவிடலாம். ஆனால் அவரை வைத்து பேசப்படுவது இன்று வரை தொடர்கிறது (ரஜினி பெயரை வைத்து தந்தி டிவி மக்கள் மன்றம் மட்டும் 4 முறை நடத்தி விட்டது). எதிர்ப்புகள் கொஞ்சம் என்றாலும் ஊடகங்களால் ஊதி பெரிதாக காண்பிக்கப்பட்டது. உங்கள் மேல் ஆயிரம் குற்றங்கள் இருக்கலாம் ஆனால் ரஜினியை எதிர்த்து பேசினால் ஊடகத்தின் நடுவீட்டில் உங்களுக்கு இடம் உண்டு.இது தான் இன்றைய நிலை.அவ்வாறு அவர்கள் பேசும்பொழுது எழும் எதிர்மறையான எண்ணங்கள் ரஜினிக்கு ஆதரவாக மாறுகிறது. மாய்ந்து மாய்ந்து அவர்கள் பேசுகிறார்கள் ரஜினி 30 நிமிட பேச்சில் அனைத்திற்கும் பதில் கூறிவிடுகிறார்.


இவர்கள் அனைவரும் அவரையே கேள்வி கேட்கின்றனரே? அவர் என்ன தவறு செய்தார்? என்று தான் பொது மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் கமலை யாரும் பெரிதாக எதிர்க்க வில்லை. இதுவே பின்னாளில் கமல் அவர்களுக்கு பாதகமாக முடியும். மேலும் கமல் அவர்களுக்கும் அவருடைய தவறை சுட்டிக்காட்ட யாரும் அதாவது எதிர்க்க யாரும் இல்லாததால் அவர் தவறுகளை திருத்த சந்தர்ப்பம் கொஞ்சம் குறைவு. இது எதார்த்தமான ஆறாவது வித்தியாசம்.


7.ரஜினி வெறியர்கள் Vs கமல் ஆதரவாளர்கள்:

ரஜினி ரசிகர்களை சந்திப்பது இல்லை, ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடுவது இல்லை. சுருக்கமாக சொன்னால் எந்த நேரடி தொடர்பும் வைத்து கொள்வது இல்லை.ஆனால் அவருக்கான ரசிகர் கூட்டம் என்பது ஐம்பதுகளை தாண்டி, முப்பத்தி ஜந்துக்களை தொட்டு, இருபதுகளை நெருங்கி உள்ளது. மேலும் அவரது மன்ற நிர்வாகிகள் பெயர் அறிவிக்கும் பொழுது பார்த்தால், மிக குறைவாக 2 பேராவது ''ரஜினி'' என்ற பெயரை தங்களது பெயரிற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ வைத்து உள்ளது தெரியும். அந்த அளவிற்கு தீவிர ரசிகர்கள் ரஜினியின் மிகப்பெரிய பலம். கமல் அவர்களுக்கு மன்றங்கள் உள்ளது,ரசிகர்கள் உள்ளார்கள்,ஆனால் ரஜினி போன்ற தீவிர ரசிகர்கள் உள்ளார்களா என்றால் கொஞ்சம் கம்மி தான். இது வெறித்தனமான ஏழாவது வித்தியாசம்.


8.வெகுஜன மக்கள் அங்கீகாரம்:

ரஜினிக்கும் கமலுக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசமாக இதை பார்க்கலாம். மேற்கூறிய அனைத்தும் சேர்ந்து ரஜினியை மக்களிடத்தில் மிக அருகில் கொண்டு போய் வைத்துஉள்ளது. அதற்கு அவருடைய கடந்த கால எளிமை முதல் காரணம். அதற்கு அடுத்த படியாக ரஜினியின் திரை உலக கடந்தகால மற்றும் தற்காலிக வெற்றிகள் இரண்டாவது காரணம். 25 ஆண்டுகளுக்கு முன்னரே ரஜினி - கமல் என்ற நேரடி போட்டி என்பது திரையுலகில் இருந்து மறைந்து விட்டது. கமல் படங்கள் இன்று விஜய்-அஜித் தாண்டி, தனுஷ் - சூர்யா கீழாக, சிவகார்த்திகேயன் அடைந்த வெற்றிகள் கூட பெறுவது கிடையாது (மிக சில படங்கள் தவிர). 


ஆனால் ரஜினியின் படங்கள் இன்றும் பட்டி தொட்டிகளில் வெற்றி கொடி கட்டி வருவது கண்கூடு. சினிமா மட்டும் இன்றி பல காரணங்களால் கமல் இன்னமும் வெகு ஜன மக்கள், அதாவது கடைநிலை மக்களிடத்தில் இருந்து இன்னமும் தொலைவில் தான் உள்ளார். இது அவருக்கு தேர்தல் நேரத்தில் சில தொகுதிகளில் அதாவது கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற பின்தங்கிய மற்றும் இரண்டாம் நிலை மாவட்டங்களில் குறைவான வாக்குகள் பெறவோ, இல்லை ஆதரவு இல்லாமல் போவதற்கோ காரணமாக அமையலாம். மேலும் ரஜினி தீவிர சுற்றுப்பயணம் செய்து தமிழகம் முழுக்க வலம் வரும்பொழுது இந்த தூரம் இன்னமும் அதிகம் ஆகலாம். இதனால் கமல் அவர்கள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கான முகமாக இல்லாமல் ஒரு சாரர்களுக்கான முகமாக மாறலாம். இது நிதர்சனமான எட்டாவது வித்தியாசம்.

எப்படி வித்தியாசங்கள் இருக்க, எப்படியும் கமலால் எடுத்த உடன் மாபெரும் வெற்றியை பெறமுடியாது என தெரிந்தும் ஏன் ரஜினியை கமலோடு ஒப்பீடு செய்யப்படுகிறது என்றால், ரஜினியின் ஓட்டுவங்கியை குறைக்க அல்லது வெற்றியை தள்ளிப்போட செய்யும் ஒரு வேலையாக இருக்கலாம். ஆயினும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

- ப்ரீத்தம் ஸ்ரீ கிருஷ்ண விக்னேஷ்

  


  

Monday, March 12, 2018

LKG க்கு ஃபீஸ் ரெண்டு லட்சமா? அடேய்!!!


Share/Bookmark

பெங்களூர்ல Bishop Cotton Boy’s School ல LKG பசங்கள சேர்க்குறதுக்கான ஒரு ஃபீஸ் ஸ்ட்ரக்கர் படம் வெளியாயிருக்கு. அதப் பாத்த மக்கள்லாம் மெரண்டு போயிருக்காங்க.. நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி எல்லத்துலயும் காசு பண்ணனும்ங்குற வெறி ஊரிப்போன ஒருத்தனாலயே இந்த மாதிரி ஒரு ஃபீ ஸ்ட்ரக்கர ரெடி பண்ண முடியும்னு பேசிக்கிறங்க. அந்த அளவுக்கு ஒரு கொடூரமா இருக்கு அந்த லிஸ்ட். எவ்வளவு ஃபீஸ்னு கேக்குறீங்களா? ரொம்ப அதிமெல்லாம் இல்ல..ஜஸ்ட் ரெண்டு லட்சத்தி ரெண்டாயிரம் ரூவாதான்.

LKG ன்னா என்ன? இந்த 3- 5 வயசுலதான் புள்ளைங்கள மேய்க்கிறதுக்கு ரொம்ப செரமமா இருக்கும். எது செய்யனும் எத செய்யக்கூடாதுன்னு தெரியாம புள்ளைங்க பெத்தவங்களப் போட்டு இம்சை பண்ணிட்டு இருக்கும். அதுங்களோட சேட்டையிலருந்து தப்பிக்கிறதுக்காக பெற்றோர்கள் முயற்சி செஞ்சிட்டு இருக்கப்போ உருவானதுதான் இந்த LKG , UKG எல்லாம். இதுல என்ன பண்ணுங்க புள்ளைங்க? சாப்பாட்ட கட்டி குடுத்து வேன்ல ஏத்தி அனுப்ச்சா, கொண்டு போன சாப்பாட பள்ளிக்கூட்த்துல வச்சி சாப்பிட்டு, கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து 3 மணிக்கு திரும்ப வீட்டுக்கு வந்துரும்ங்க. இவ்வளவுதான். ஆனா இவனுங்க அந்த LKG க்கு ராக்கெட் சைன்ஸ் ரேஞ்சுக்கு பில்ட் அப் குடுத்துட்டு இருக்கானுங்க.


அவனுங்க போட்டுருக்க ஃபீ ஸ்ட்ரக்சரப் பாத்து சிரிக்கிறதா அழுகுறதான்னே தெரியல. உதாரணமா ஒரு டீ கடைக்கு டீ குடிக்கப் போறோம். குடிச்சி முடிச்ச உடனே ஒரு 10 ரூவா கேட்டா குடுக்கலாம். இல்ல கடைய பயங்கரமா டெவலப் பண்ணி வச்சிருந்தானுங்கன்னா, ஒரு 15 ரூவா கேட்டாலும் குடுக்கலாம். ஆனா அதுக்கு பதிலா கடை முதலாளி உங்களக் கூப்டு “தம்பி… டீ போடுறதுக்கு பால் வாங்கிருக்கேன். அதுக்கொரு 5 ருவா குடுங்க.. சர்க்கரை வாங்கிருக்கேன்.. அதுக்கொரு 5 ரூவா குடுங்க. டீ த்தூள் வாங்கிருக்கேன். அதுக்கொரு அன்சி ரூவா குடுங்க. அப்புறம் அடுப்பு , கேஸ் கனெக்சன்லாம் வாங்கி வச்சிருக்கேன். அதுக்காக ஒரு 30 ரூவா குடுங்க. அப்புறம் டீ போட்டவனுக்கு சம்பளம் குடுக்கனும். அதுக்காக ஒரு 10 ரூவா குடுங்க. இந்த கடையெல்லாம் அங்கங்க ஒழுகுது தம்பி.. கூரைய மாத்தனும். அதுக்காக ஒரு 50 ரூவா குடுங்க. முன்னால  மாதிரி கையால பில் போட முடியல. ஒரு கம்ப்யூட்டர் வாங்கலாம்னு இருக்கேன். அதுக்கொரு 30 ரூவா குடுங்க.. கம்ப்யூட்டர் வாங்கி அத ஆப்ரேட் பண்ண ஒரு ஆள் போடனும். அவனுக்கு சம்பளம் குடுக்க ஒரு 25 ரூவா குடுங்க.. ஆக மொத்தம் ஒரு 250 ரூவா குடுங்க தம்பின்னா…

பதிவின் வீடியோ வடிவம்



ஏன்யா ஒரு டீ குடுக்க வந்தது ஒரு குத்தமாய்யா.. அப்டின்னு நினைச்சிட்டு, மனச கல்லாக்கிக்கிட்டு அந்த 250 ரூவாய எடுத்து குடுக்கப் போகும்போது , தம்பி நில்லுங்க.. நீங்க ஃபாரின்லயா வேல பாக்குறீங்க.. அய்யய்யோ அப்போ இந்த அமவுண்ட் வராதே.. நீங்க ஸ்பெசல் கேஸ். அதுலான ஒரு 500 ரூவா கட்டுங்க.. எதுக்கு ஒரு சிங்கிள் டீக்க்கா.. இப்டி ஒருத்தன் நம்மகிட்ட காசு கேட்ட கடனுக்காச்சும் அஞ்சி லிட்டர் பெட்ரோல் வாங்கி அந்தக் கடைய கொளுத்தனும்னு தோணுமா இல்லயா?

இந்த டீக்கடை உதாரணம் ரொம்ப அபத்தமா இருக்க மாதிரி தோணலாம். ஆனா அந்த ஸ்கூல் ஃபீ ஸ்ட்ரக்சருக்கு மிகச் சரியான உதாரணம்  இதுதான். இந்த மயில்சாமி ஒருபட்த்துல குடிக்கிறதுக்கு பாருக்கு போய் மொதல்ல க்ளாஸ் கடன் வாங்குவாரு.. அடுத்து “பாஸ் கொஞ்சம் கூல் ட்ரிங்க்ஸ் குடுங்க”ன்னு கூல்ட்ரிங்க்ஸ் வாங்குவாரு.. அடுத்து “கொஞ்சம் சரக்கு குடுங்க”ன்னு சரக்க வாங்கவும் ஏண்டா அப்ப நீ சும்மாதான் வந்தியா? எப்பவுமே நா சும்மாதான் வருவேன். அந்தக் கதைதான் இவனுங்களும். பாஸ் பில்டிங்க் கட்டுறதுக்கு காசு குடுங்க.. பாஸ் இன்ஃப்ரா டெவலப் பன்ன காசு குடுங்க.. பாஸ் சாஃப்ட்வேர் மெய்ண்டெய்ண் பன்ன காசு குடுங்க.. ஏண்யா அப்ப எத வச்சிதான் ஸ்கூல் ஆரம்பிச்சீங்க.


இந்த கோயில் திருவிழா முடிஞ்சப்புறம் செலவு கணக்கு எழுதும்போது பூ வாங்குனது புஷ்பம் வாங்குனதுன்னு தனித்தனியா பில்ல போடுவானுங்க. அது மாதிரிதான் இவங்களோடதும்.. பில்டிங் ஃபண்டுன்னு ஒண்ணூ.. இன்ஃப்ரா டெவலப்மெண்டுக்கு ஒண்ணு.. ஸ்போர்ட்ஸ்க்கு ஒண்ணு… எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்க்கு ஒண்ணு.. அதாவது நீ ஓடுறதுக்கு ஒரு வட்டி.. நீ ஓடும்போது நா தொரத்துவேன்ல… அதுக்கு ஒரு வட்டி.

Computer Fee ஆறாயிரம் ஓவா… ஏண்டா MSC  IT படிச்சவனே இன்னும் எக்ஸெல்லதான் வேலை பாத்துக்கிட்டு இருக்கான்.. இதுல பச்ச புள்ளைக்கு என்ன கம்ப்யூட்டர் எஜூகேஷன்..  அதுக்கு பேரு கம்ப்யூட்டர்ன்னு அந்த புள்ளைக்கு தெரியவே 5 வயசாயிரும்.. இத விட பெசல் ஐட்டம் ஒண்ணு இருக்கு…. ரொபாட்டிக்ஸ் எஜுகேஷன்... அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லயேன்னு  எனக்கு நெஞ்சு டபீர்னு வெடிச்சிருச்சி.. இவங்க LKG ல சொல்லிக்குடுக்கப் போறதா சொல்றதயெல்லாம் பாத்தா இந்த வருஷம் முடிச்சோன்னயே அந்தப் புள்ளைங்களுக்கு காம்பஸ் இண்டர்வியூ வச்சி வேலைக்கு எடுத்துடலாம் போல.

முன்னால அரசாங்கம் குடும்பக்கட்டுப்பாட மக்கள கடைபிடிக்க வைக்கிறதுக்கு ரொம்ப செரமப்பட்டாங்க.. இப்ப அதெல்லாம் தேவையில்ல.. இது மாதிரி நாலு ஃபீ ஸ்ட்ரக்சர காமிச்சா போதும்.. அந்த ஆசையே போயிரும்..

நா பொறியல் ஒரு அரசு கல்லூரில படிச்சேன். நாலு வருஷத்துக்கும் ஹாஸ்டல், மெஸ் பில் எல்லாம் சேர்த்து அந்த காலேஜோட Fee structure வெறும் 85400 ரூவா.. அதுலயும் வருஷத்துக்கு 7000 ஸ்காலர்ஷிப்புங்குற பேர்ல நமக்கு திரும்ப வந்துடும். அப்டி இருக்க LKG க்கு ரெண்டு லட்சம் வாங்குறானுங்க்கும்போது உண்மையிலயே கொடுமையா இருக்கு.

அட காசு இருக்கவன் சேர்க்கப்போறான்.. நமக்கென்னா அப்டின்னு ரொம்ப சாதாரணமா இத நாம ஒதுக்கிட முடியாது. இது மிகப்பெரிய ஒரு சமுதாய சீர்கேடு.. இப்போ மக்களுக்கு ரொம்பவும் அத்யாவசியமான மருத்துவம் இன்னிக்கு எவ்வளவு காஸ்ட்லியா இருக்கு? அரசு கல்லூரிகளத் தவற தனியார்ல மருத்துவம் படிக்க  ஒவ்வொருத்தனும் 25-30 லட்சம் குடுத்து சீட் வாங்கி படிச்சி வந்துருக்கான். அத  இன்னிக்கு நம்மகிட்டருந்து எடுக்கப்  பாக்குறான்.

இது அவனோட தப்பில்ல. இது ஒரு பிஸினஸ் மாதிரிதான். எந்த பிஸினஸ்லயுமே Return on Investment ன்னு ஒண்ணு பாப்போம்ல.. அதாவது நாம எவ்வளவு செலவு செஞ்சிருக்கோம். அதுலருந்து நமக்கு எவ்வளவு நமக்கு திரும்ப வருதுன்னு. இப்போ இந்த ஸ்கூல்ல LKG  க்கு ரெண்டு லட்சம் வாங்குறானுங்க… அதே ஸ்கூல்ல அவன் 12th வரைக்கும் படிச்சிட்டு வரதுக்குள்ள குறைச்சலா 50 லட்சத்த புடுங்கிருவானுங்க. இவனுங்க நாளைக்கு படிச்சிட்டு சமுதாயத்துல ஒவ்வொரு வேலைக்கு போகும்போது அங்கருந்து எப்டி போட்ட பணத்த எடுக்குறதுன்னு பாக்குற பணப் பேயாதான ஆகப்போறானுங்க. இன்னிக்கு இது நேரடியா நமக்கு பெரிய பாதிப்ப ஏற்படுத்தலன்னாலும் வரும்கால சமுதாயத்துக்கு இது மிகப்பெரிய பாதிப்ப எற்படுத்தும்.

இந்த மாதிரி பள்ளிகளை சொல்லி குத்தமே இல்ல. அதிக ஃபீஸ் வசூலிக்கிற இடத்துலதான் அதிக தரமான கல்வி இருக்கும்னு நம்புற மக்கள்தான் மாறனும்.

இதுனால ஒண்ணே ஒண்ணு மிச்சம்டா.. முன்னாடியெல்லாம் அரசாங்கம் குடும்பக்கட்டுப்பாட்ட வலியுறுத்த ரொம்ப சிரமப்பட்டுக்கிட்டு இருந்தாங்க. இனிமே அந்த்த் தொல்லையில்ல.. இந்த மாதிரி நாலு ஃபீ ஸ்ட்ரக்சர காமிச்சா போதும். ஜென்மத்துக்கும் குழந்த ஆச வராது.


  

Friday, March 9, 2018

ஊடகமும் நாடகமும்!!!


Share/Bookmark
செய்தி ஊடகங்களின் பணி, நடந்த செய்திகளை நடந்தவாறு மக்களுக்குத் தெரிவிப்பதே. ஆனால் தற்போது இருக்கும் செய்தி ஊடகங்கள் மக்கள் எதை விரும்புகிறார்களோ அந்த செய்திகளை, மக்கள் விரும்பும் அதே கோணத்தில் தந்து கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் பரவிக் கிடக்கும் செய்திகளில் 90 சதவீத செய்திகள் ஆதாரமற்றவையாகவே இருக்கின்றன. ஆனாலும் அந்த செய்தி நாம் விரும்பும் செய்தியாக, இப்படி நடந்தால் நன்றாக இருக்குமே என நாம் நினைக்கும் செய்தியாக இருப்பதால் அந்த செய்தியின் உண்மைத் தன்மையைப் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.

ஒரு செய்தியை உருவாக்க ஆகும் நேரம் கூட அந்த செய்தியைப் பரப்ப தேவைப்படுவதில்லை. “நீ தமிழனாக இருந்தால்என்ற வார்த்தை இருந்தாலே நரம்பு முறுக்கேற வாட்ஸாப் கணக்கில் இருக்கும் அத்தனை நண்பர்களுக்கும், குழுக்களுக்கும் அந்தச் செய்தியைப் பரப்பி விட்டுத்தான் மறுவேலை பார்க்கும் தமிழ்ப் பற்றாளர்கள் ஏராளம்.

ஆங்கிலத்தில் பாரடைம் (Paradigm) என்ற ஒரு சொல்லாடல் உண்டு. அதாவது நம் மனதில் பதிந்து போய் விட்ட சில எண்ணங்கள், இது இப்படித்தான் இருக்கும் என்ற நமது பார்வையைத்தான் பாரடைம் என்கிறார்கள். உதாரணமாக அவர் ஒரு நேர்மையான அரசியல்வாதிஎன்று ஒருவரைக் குறிப்பிடும் போது நம்மை அறியாமலும் நமக்குள் சிரிப்பு வந்துவிடும். காரணம் அரசியல்வாதிகள் என்றாலே அவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும் என்பது நமது எண்ணம். நாம் இதுவரை கண்ட அரசியல்வாதிகள் மூலம் நம் மனதுக்குள் பதிந்த paradigm அதுஆனால் உண்மையிலேயே  அவர் நேர்மையான அரசியல்வாதியாகக் கூட இருக்கலாம். ஆனால் நம்முடைய paradigm  அந்த உண்மையை கண்டுகொள்ளாது. நாம் மனதில் ஏற்கனவே பதிந்து வைத்திருக்கும் செய்தியைத்தான் உண்மை என நம்ப வைக்கிறது.

மக்கள் தங்கள் மனதில் பதிந்திருக்கும் சில வகை paradigm ங்கள் தான் இன்றைய ஊடகங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள் கூறுவதை அப்படியே நம்புகிறோம். உண்மைத் தன்மையை ஆராயாமல் கண்மூடித் தனமாக பகிர்கிறோம்.

ஒரு சிறிய உதாரணம். சென்ற வருடம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 250. உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒரு பதில் அளிக்கப்படுகிறது. அதாவது தமிழகத்தில் விவசாயிகள் வறட்சியின் காரணமாக தற்கொலை செய்துகொள்ளவில்லை. குடும்ப, மற்றும் சொந்த ப்ரச்சனைகளினால்தான் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்என்று.

தமிழக அரசின் இந்த பதிலிற்கு கோபப் படாதவர்களே இல்லை எனலாம்.  “எவ்வளவு மெத்தனப் போக்கு?” “இதெல்லாம் ஒரு அரசா?” என்றெல்லாம் கொதித்தெழுந்தனர். ஆனால் அரசின் அறிக்கையில் ஒரு சதவீத உண்மை இருக்குமா எனக் கூட யாரும் யோசிக்கவில்லை. காரணம் ஒரு பகுதி எதிர்க்கட்சியினருக்கு அரசைக் எதிர்க்க காரணம் வேண்டும். அவர்களுக்கு தேவையான காரணம் கிடைத்தாயிற்று. அதனால் அவர்கள் அந்த அறிக்கையின் உணமைத் தன்மையைப் பற்றி  கவலைப் படவில்லை. விவசாயிகள் சம்பந்தப்பட்ட செய்தி என்பதால் செண்டர் ஸ்டாண்டுகளும் நமக்கெதற்து வம்பு.. நாமும் கோபப்பட்டு வைப்போம் என்று ஒரு பொங்கு பொங்கி வைத்தனர்.

ஆனால் அந்த அரசின் அறிக்கை 90% உண்மையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். முதலில் விவசாயத் தற்கொலைகளுக்கும், விவசாயி தற்கொலைக்கும் நிறையவே வித்யாசம் இருக்கிறது.  நகர்புறங்களைத் தவிற சிறுநகர் மற்றும் கிராமப் புறங்களில் விஷமருந்தி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இறக்கும் நபர்களுக்கான முதல் தகவல் அறிக்கையில், இறந்தவர் என்ன தொழில் செய்து வந்தாலும் அவரை விவசாயி எனவே காவல்துறை பதிவுசெய்கிறது. அதே முதல் தகவல் அறிக்கையின்படி மறுநாள் செய்தித்தாள்களிலும் இறந்தவர் விவசாயி என்று அச்சிடப்படுகிறது.

இரண்டாவது சமூகவலைத்தளங்களில் விவசாயிகள் சாதாரண மனிதர்களுக்கு அப்பார்பட்டவர்களாக காண்பிக்கப்படுகிறார்கள். அதாவது விவசாயி என்பவர் அவரால் விவசாயம் செய்து உலகிற்கு சோறு போட முடியாமல்போகிற பொழுது, உயிரை மாய்த்துக்கொள்ளும் கதாப்பாத்திரமாக சித்தரிக்கப்படுகிறார்.

மக்கழேவிவசாயியும் உங்களைப்போல் என்னைப்போல் ஒரு சாதாரன மனிதரே. நீங்கள் எப்படி உங்கள் வாழ்வாதாரத்திற்காக ஒரு கம்ப்யூட்டரில் ப்ரோகிராம் எழுதி சம்பாதிக்கிறீர்களோ அதே போல் விவசாயி வாழ்வாதாரத்திற்காக விவசாயம் எனும் தொழில் செய்து வருகிறார். '

ஒரு வேளை உங்கள் அலுவலகத்தில் திடீரென்று உங்களை வேலை நீக்கம் செய்துவிட்டார்கள் என வைத்துக்கொள்வோம். உடனே நீங்கள்அய்யஹோ.. இந்த உலகத்திற்கு என்னால் ப்ரோக்ராம் எழுதிக் கொடுக்கமுடியாமல் போய்விட்டதேஎன வருந்தி உடனே தற்கொலை செய்துகொள்வீர்களா? சத்தியமாக இல்லையல்லவா? அந்த கம்பெனி இல்லையென்றால் இன்னொரு கம்பெனி.. ப்ரோக்ராம் எழுதும் வேலை இல்லையென்றால் வேறு ஒரு வேலை. எப்படியாவது உங்கள் வாழ்க்கையை நட்த்த வழிவகைகளைத் தேடுவீர்கள் அல்லவா? உங்கள் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும் கூலி வேலை செய்தாவது உயிருடன் இருக்க முயற்சிப்பீர்கள் அல்லவா? அப்படித்தான் விவசாயி என்ற மனிதரும்.

அதுமட்டுமல்லாமல் நீங்கள் குறிப்பிடும் ஏழை விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. விவசாயிகள் விவசாயம் செய்வதை விட்டு வேறு தொழிலிற்கு மாறி வருகின்றர். கிராமப் புறங்களைப் பொறுத்த அளவு விவசாயம்  என்பது தற்பொழுது பணக்காரர்கள் பொழுதுபோக்கிற்காக செய்துவரும் தொழிலாக மாறி வருகிறது.

நூற்றில் தொண்ணூற்று ஒன்பது விவசாயியின் தற்கொலைக்கு விவசாயம் நேரடிக்காரணமாக இருக்காது. ஒருவேளை why why அனாலிஸில் செய்தால் கடைசி why யிலோ அல்லது அதற்கு முந்தைய why யிலோ விவசாயம் என்னும் காரணம் வரலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அனைத்து தற்கொலைகளுக்குமே ஒன்றுதான். ஆனால் அரசு  தாக்கல் செய்த அந்த அறிக்கைக்கு கணக்கிலடங்கா கோபங்களே நம் பதிலாக இருந்தது.

எப்படிப்பட்ட செய்திகள் நமக்கு காண்பிக்கப்படுகின்றன? கடந்த ஒண்றிரண்டு ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரே மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து திரும்பத் திரும்ப நிகழ்வதை நம்மால் உணர முடிகிறதா? மாட்டிறைச்சித் தடையை எடுத்துக்கொள்வோம். அந்த சமயத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வட இந்தியாவில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றவர்கள் அடித்துக் கொலை என்ற செய்தியை ஒரு மாத காலத்திற்குள் எத்தனை முறை படித்தோம். ஏன் அதன்பிறகு அது மாதிரியான சம்பவங்கள் எதுவும் நிகழவே இல்லையா?

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் .பியில் குழந்தைகள் இறந்தன. தொடந்து ஒரு வார காலத்திற்குள் அதே மாதிரியான உயிரிழப்புகள் வெவ்வேறு மருத்துவமனைகளில். ஏன் அதற்கு முன்னரோ அல்லது பின்போ அந்த சம்பவங்கள் நடக்கவில்லையா? இவர்கள் காட்டுவதைப் பார்த்தால் விவசாயிகள் தற்கொலை கூட ஒரு சீசனில் மட்டுமல்லவா நடக்கிறது?

நடக்கும் சம்பவங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட சம்பவங்கள் மட்டும் நமக்கு மிகைபடுத்திக் காண்பிக்கப்படுகின்றனஎதைக் காண்பித்தால் மக்களை உணர்ச்சிவசப் பட வைக்க முடியுமோ, எதை காண்பித்தால் அதே ப்ரச்சனயை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி குளிர்காய முடியுமோ அதைத்தான் இன்றைய ஊடகங்கள் செய்து வருகின்றன.  மெரினா போரட்டத்தை ஒருவாரத்திற்கு  பின்னர் மாணவர்கள் முடித்துக்கொண்டாலும், ஊடகங்களுக்கு முடித்துக்கொள்ள மனதே இல்லையல்லவா?

சமீபத்திய அய்யக்கண்ணுவை பாஜக பெண்மணி கோவிலில் வைத்து அரைந்த சர்ச்சையை எடுத்துக்கொள்ளுங்கள்.. அய்யாக்கண்ணுவைத் தாக்கிய பாஜக பெண்மணி என தம்பட்டம் அடிக்கிறார்களே தவிற, அய்யாக்கண்ணு என்ன செய்து அடி வாங்கினார் என்பதை கூறவேயில்லை. பாஜக வை சேர்ந்தவர் என்பதற்காக, தகாத வார்த்தைகளால் பேசிய அய்யாக்கண்ணுவிற்கு ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்காமல், சமூக வலைத்தளங்களில் அந்தப் பெண்ணை மட்டுமே வசை பாடிக்கொண்டிருக்கின்றனர். இதுவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள Paradigm வகையே.

அரசியல் தலைவர்கள் கூறும் கருத்துக்களை இவர்கள் நமக்குத் தரும் விதம் எல்லாவற்றையும் விட ப்ரமாதம்.  அவர்கள் சொன்னது ஒண்றாகவும் இவர்கள் நமக்கு சொல்வது ஒண்றாகவும் உள்ளது.

சமூக வலைத் தளங்களில் ஏதாவது ஒரு செய்தித் தளத்தின் லோகோவுடன் ஒரு செய்தியைப் பார்த்தாலே, அதை அப்படியே உண்மையென வீறு கொண்டு எழும் வீரத் தமிழர்கள் மத்தியில், இவர்கள் செய்திகளை எவ்வளவு கவனமாக மக்களுக்குத் தரவேண்டும்? ஆனால் போட்டிக்காகவும், TRP க்காகவும் உண்மைக்கு புறம்பான, சில சமயங்களில் உண்மையை மறைத்துமே இன்று பல செய்தித் தளங்களில் செய்திகள் வெளியிடப்படுகிறது.  அனைவரும் சொல்வது போல என்றைக்கு இவர்கள் 24 மணி நேர செய்திகளை ஆரம்பித்தார்களோ அன்று ஆரம்பித்ததுதான் எல்லாம்.

ஒரு வேளை வரும் காலத்தில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கலவரங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கு முக்கிய மூலகாரணமாக இருக்கப்போவது நம் ஊடகங்கள் மட்டுமே.

  



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...