Saturday, July 29, 2017

நிபுணன்!!!


Share/Bookmark
நடிச்சா போலீஸ் சார்.. நா வெய்ட் பன்றேன் சார்” ன்னு சொல்ற நம்ம ஆக்சன் கிங்கோட நூத்தி ஐம்பதாவது படம். சும்மாவே போலீஸா நடிக்கிறவரு நூத்தம்பதாவது படம்னா சும்மா விடுவாறா? அவருக்காகவே ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி எழுதப்பட்ட ஒரு க்ரைம் இன்ஸ்வெஸ்டிகேஷன் கதை. 


நம்ம ஆக்‌ஷன் கிங் அமைதியா இருக்கமாதிரி இருந்துகிட்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்துல ஹாலிவுட், கொரியன்னு பல லாங்குவேஜ் படங்கள எடுத்து நமக்கு போட்டுக் காட்டிருவாரு. இந்த ட்ரெயிலர பாத்தாப்ப கூட எதோ அயல்நாட்டு படத்துலருந்து போட்டாரோன்னு நினைச்சேன். ஆனா அப்டியெல்லாம் இல்ல..








Wednesday, July 26, 2017

மறைந்திருக்கும் தங்க நகரமும் தேடிச்சென்று தொலைந்த நபர்களும்!!!- பகுதி 2


Share/Bookmark








இந்தப்பதிவின் முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும். 

காலம் காலமாகத் தொடர்ந்து வரும் புராணக்கதைகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கும் அக்கதைகளில் ஒரு திரிவு ஏற்படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொருவர் புராணங்களை எழுதும்போது அதில் தங்களது கற்பனைகளையும் சேர்த்துக்கொள்ள, பின்னால் வருபவர்கள் அதையே உண்மையெனவும் கொள்கிறார்கள். எழுத்துவடிவமே இப்படியென்றால் வாய்வழிச் செய்திகளைப் பற்றிக் கூறவே தேவையில்லை. ஒரு மனிதனிடம் நூறு சதவிகித செய்திகளைத் தெரிவித்து அதை மூன்றாவதாக ஒருவனிடம் தெரிவிக்கச் சொல்லும்போது அவனிடமிருந்து 60% செய்திகள் மட்டுமே மூன்றாவது ஆளைச் சென்றடையும் என ஒரு ஆய்வு கூறுகிறது. வடிவேலு சொம்பில் தண்ணீர் கேட்ட கதையை அனைவரும் அறிவோம். அதுபோலத்தான்.

சரி இப்பொழுது இந்த முன்னுரைக்கும் இந்தப் பதிவிற்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. மியூஸ்க்கா என்பது  கொலம்பியாவின் கிழக்குப் பகுதியில் வசித்து வந்த ஒரு பழங்குடியினமாகும். மியூஸ்கா பழங்குடியினர் தங்களூக்கான ஒரு புதிய தலைவனைத் தேர்ந்தெடுக்கும் பொழுது விசித்திரமான சடங்குகளை நடத்துவது வழக்கம். அந்த சடங்கின்படி மியூஸ்கா இன மக்கள் அனைவரும் கவுடவிடா எனும் ஏரியில் கூடி, தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் நிர்வாண உடலில் தங்கத் துகள்களால் பூசுவர். அப்படி வெற்று உடலில் அவர் மீது தங்கத் துகள்கள் படிந்திருக்கும்போது அவர் ஒரு தங்கத்தாலான மனிதன் போல காட்சியளிப்பார்.

பின்னர் அவரையும் அவருக்கான பணியாட்கள் சிலரையும் ஒரு அலங்கரிக்கப்பட்ட சிறிய படகில் ஏற்றி, ஏரியின் நடுப்பகுதிக்கு அனுப்புவார்கள். அந்த ஏரியின் நடுவில்  தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்  படகிலிருந்து ஏரியில் குதித்து தன் மேல் படிந்துள்ள  தங்கத் துகள்களைக் நீரில் கழுவ வேண்டும். அதே சமயத்தில் அவரின் பணியாட்கள் விலையுயர்ந்த, தங்கத்திலான கலன்களையும், விலைமதிப்பற்ற கற்களையும் நீருக்குள் எரிவார்கள். இந்த சடங்கு மியூஸ்கா இனக் கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கையாகக் கருதப்பட்டது.

இந்த சடங்குகள் நடப்பதைப் பார்த்த எவரோ ஒருவர் இந்த செய்தியைப் பரப்பிவிட, தேடுதல் வேட்டை ஆரம்பமானது. மேலும் இந்த மியூஸ்கா இன மக்களிடம் தங்கம் சரளமாகப் புழங்குவதையும் “ஒரு பிச்சக்காரன்கிட்ட இவ்வளவு பணமா” என்பது போலச் சிலர் கவனித்து வந்தனர். 1545 ம் வருடம் கவுடவிடா ஏரியில்தானே அத்தனை சடங்குகளும் நடக்கின்றன.. அதனால் அந்த ஏரிக்குள்தான் மொத்த தங்கமும் இருக்கவேண்டும் என முடிவு செய்து லஸாரோ ஃபாண்டே மற்றும் ஹெர்மென் பெரெஸ் என்ற இருவர் கவுடவிடா ஏரியை வற்ற வைத்து தங்கத்தை அள்ளிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

எண்ணூர் துறைமுகத்தில் எண்ணைக் கசிவு ஏற்பட்ட பொழுது அதை அதி நவீன இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தினார்கள் அல்லவா? அதே இயந்திரத்துரத்துடன் ஏரியை வற்ற வைக்கும் பணியில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த நவீன இயந்திரம் என்ன என்று புரியவில்லையா? நம்ம குளிக்க உபயோகிக்கும் வாளிதான் அந்த இயந்திரம்.

மனிதர்களை சங்கிலி போல வரிசையாக நிற்க வைத்து வாளியின் மூலம் ஏரியின்  நீரை அள்ளி வெளியே இறைத்து, ஏரியை வற்ற வைப்பதுதான் அவர்களது திட்டம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இடைவிடாமல் ஏரி நீரை இறைத்ததில் வெறும் மூன்று மீட்டர் மட்டுமே ஏரியின் நீர் மட்டம் குறைந்திருந்தது. இன்னும் எத்தனை மாதம், எத்தனை வருடம் இறைத்தால் ஏரி வற்றும் என்ற யோசித்து தலை கிறுகிறுத்ததால் அத்துடன் அந்த திட்டத்தை ஏரக்கட்டினார்கள். ஆனாலும் அவர்களின் முயற்சிக்கு கொஞ்சம் பலன் இருக்கத்தான் செய்தது. மூன்று மீட்டர் ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் ஏரிக் கரையோரங்களில் ஒதுங்கியிருந்த சில தங்கத்தாலான பொருட்களைக் கைப்பற்றினர். இன்றைய மதிப்பில் அவர்கள் கைப்பற்றிய தங்கத்தின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் டாலர்.

அத்துடன் நிற்காமல் 1580 இல் இன்னொரு தொழிலதிபர் ஆண்டனியோ என்பவர் தலைமையில் கவுட்டவிடா ஏரியை வற்றவைக்கும் பணி மீண்டும் தொடங்கிது. ஆம். அதே வாளி.. அதே வாடகை. சென்ற முறை மூண்று மீட்டர் வரை வற்றவைக்கப்பட்ட ஏரி இந்த முறை 20 மீட்டர் வரை வற்றவைக்கப்பட்டது. (ரெண்டு மூணு வாளி சேத்து எடுத்துட்டு போயிருப்பாய்ங்க போல) ஆனால் இந்த முறையும் ஏரியை முழுமையாக வற்றவைக்க முடியவில்லை.

மாறாக போன முயற்சியில் கிடைத்ததை விட கிட்டத்தட்ட மூண்று மடங்கு அதிகமான தங்க அணிகலன்கள், தங்கக் கவசம் போன்றவை கைப்பற்றப்பட்டன.  அதன் இன்றைய மதிப்பு தோராயமாக மூண்று லட்சம் டாலர் அந்த முயற்சியில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் ஒரு கணிசமான பகுதி அப்பொழுது ஸ்பெயினை ஆண்ட மன்னர் இரண்டாம் ஃபிலிப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தொழிலதிபர் ஆண்டொனியோ தனது கடைசி காலத்தில் ஒரு ஏழையாக வாழ்ந்து மடிந்தார்.

1801 இல் அலெக்ஸாண்டர் ஹம்போல்ட் என்கிற ஒரு ஜெர்மன் ஆய்வுப்பணியாளர் கவுடவிடாவிற்கு சென்று வந்து, அந்த ஏரியில் புதைந்து கிடக்கும் தங்கத்தின் மதிப்பு சுமார் 300 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாயில் சுமார் 2000 கோடிக்கு மேல் என ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.

1898 இல் ப்ரிட்டீஷ் இந்த கவுடவிடா ஏரியை ஆய்வு செய்து அதிலிருக்கும் தங்கத்தை எடுப்பதற்காகவே தனிக் குழுவை அமைத்து, லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் அந்தப் பணியை ஒப்படைத்தது. சிறப்பாக செயல்பட்ட அந்தக் குழு கவுட்டவிடா ஏரியின் நடுவில் இருந்த ஒரு குகை மூலமாக மொத்த நீரையும் வற்றச் செய்தது. ஏரி வெறும் நான்கடி ஆழத்திற்கு வந்தது. ஆனால் அந்த நான்கடியில் இருந்த்து நீர் அல்ல.. வெறும் சேரும் சகதியும்..

இந்த நிலையில் சேற்றுக்குள் இறங்கித் தேட இயலாது என முடிவு செய்தவர்கள் ஏரி உலர்வதற்காகக் காத்திருந்தார்கள். அங்கேதான் திருப்பம் நன்றாக உலர்ந்த பின்னர் அந்த சேறும் சகதியும் நிறைந்த பரப்பு கான்கிரீட் தரையைப் போல கெட்டியாக மாறிப்போனது. பழைய சோறு சட்டியோடு உடைந்த சோகத்தில், கிடைத்த ஒண்றிரண்டு பொருட்களை மியூசியத்திற்கும், சில பொருட்களை ஏலமிட்டும் கொஞ்சம் பணத்தைத் தேற்றிக்கொண்டு அந்த கம்பெனி கடையை மூடியது.

1965ம் ஆண்டு கொலம்பிய அரசு, கவுட்டவிடா ஏரியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, அந்த ஏரியில் தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற ஆய்வு நடத்துவதை தடை செய்த்து. குறிப்பாக ஏரியை வற்ற வைக்கும் செயல்களை தண்டனைக்குறிய குற்றமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது.

மியூஸ்கா இன மக்களின் தலைவன் குளித்த அந்த ஏரியிலேயே இத்தனை சோதனைகள் பலரால் நடத்தப்பட்டது எனும்போது அவர்கள் வாழ்ந்த தங்க நகரத்தை தேடாமல் இருந்திருப்பார்களா?


தொடர்வோம்..!!!


Tuesday, July 25, 2017

மறைந்திருக்கும் தங்க நகரமும் தேடிச்சென்று தொலைந்த நபர்களும்!!


Share/Bookmark
மற்ற உலோகங்களை விட தங்கத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்தங்கம் அரிதாகக் கிடைக்கும் உலோகம் என்பதாலா இல்லை மற்ற உலோகங்களைப் போல எளிதில் வேதி வினைகளில் ஈடுபட்டு தன் தனித்தன்மையை இழக்காமல் இருப்பதாலா அல்லது பார்க்க வசீகரமாக இருப்பதாலா அல்லது மேற்கூறிய அனைத்து பண்புகளும் ஒரு சேர இருப்பதாலா? யாராலும் கூற முடியாது.தங்கம் என்கிற உலோகம் எப்பொழுது மனிதர்களிடம் ஒரு மிகப்பெரிய மதிப்பைப் பெற்றது என்பதையும் உத்தேசமாகக் கூற இயலாதுகி.மு., கி.பி என்று நமக்கு வரலாறு தெரிந்த காலத்துலருந்து தங்கம் என்றாலே மனிதர்களை வசியம் செய்யும் ஒரு பொருள் 

அதுவும் கணக்கற்ற தங்கம் புதையல் வடிவில் குறைந்த உடல் உழைப்பில் கிடைக்கிறது என்றால் விடுவார்களா?முதலில் புதையல் என்பது என்னஅரச குடும்பத்தினர் மரணத்தின் போது அவர்களுடன் சேர்த்து புதைக்கப்படும் ஆபரணங்கள் நாணயங்கள் ஒருவகைசெல்வச் செழிப்புடம் இருக்கும் அரசாட்சிகள்,நகரங்கள் அழியும்போது மண்ணுக்குள் புதையும் செல்வங்கள் மற்றொரு வகை.

தான் வைத்திருக்கும் அதிகப்படியான செல்வத்தை எவராவது அபகரிக்கக்கூடும் என அஞ்சி எங்காவது ஒளித்து வைத்துவிட்டு எங்கே வைத்தோம் என எவரிடமும் கூறும் முன் காலன் அவரகளைக் கூட்டிச் செல்லும்போது பதுங்கும் செல்வங்கள் மற்றொரு வகை.. இவைகளுக்கு புதையல் குறிப்புகள் என்றெல்லாம் எதுவும் இருக்காதுஇந்த வகைப் புதையல்களை எதேச்சையாகக் கண்டுபுடித்தால்தான் உண்டு அல்லது இப்படி ஒரு இடம் இருக்கிறது இங்கே புதையல் இருக்கலாம் என எவராவது அனுமானத்தில் குறிப்பெழுதி வைத்திருந்தால்தான் உண்டு.

இப்படி எதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதையல்கள் ஏராளம். இங்கிலாந்தில் ஒரு விவசாயி (நமது சமுக வலைத்தளப் பதிவுகளில் வரும் அந்த ஏழை விவசாயி அல்ல) அவர் வேலை செய்ய உபயோகிக்கும் சுத்தியலை வயலில் தொலைத்துவிட்டார். வயலுக்குள் புதைந்த சுத்தியலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே நண்பர் உதவியுடன் மெடல் டிடெக்டர்ரை வைத்து வயலில் தேடியபோது சிக்கியது ஒரு புதையல். அதில் இருந்தது 570 தங்கக் காசுகளும், 14191 வெள்ளிக் காசுகளும். உடனே அரசாங்கத்திற்கு இந்த செய்தியைத் அவர்கள் தெரிவித்ததும், அவர்களுக்கு 2.7 மில்லியன் டாலரை பரிசாகக் கொடுக்கப்பட்டு அத்தனை நாணயங்களும் அரசாங்க அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

1974ல சீனாவின் ஸியான் மலைப்பகுதிகளில் ரெண்டு விவசாயிகள் கிணறு தோண்டிக் கொண்டிருக்க, உள்ளே எதோ தட்டுப்பட்டது. அதைத் தோண்டி எடுக்க, அது சுட்ட களிமண்ணாலான ஒரு போர் வீரனின் சிலை. அது போல் இரண்டு மூன்று கிடைக்க, அவர்கள் அதனைப் பெரும் பொருட்டாகக் கருதவில்லை. மாறாக கிடைத்த சிலைகளை வந்த விலைக்கு விற்றிருக்கின்றனர். இந்த செய்தி காற்று வாக்கில் தொல்பொருள் துறைக்குத் தெரியவர, அந்த இடத்தை வளைத்துப் போட்டு தோண்டியிருக்கின்றனர்.

கிடைத்தது ஒண்றல்ல இரண்டல்ல.. எட்டாயிரத்திற்கும் அதிகமான சுட்ட களிமண்ணாலான் போர் வீரர்களின் சிலைகள், 520 குதிரைகள் பூட்டப்பட்ட சுமார் 130 ரதங்கள் மற்றும் 150 போர் குதிரைகளின் சிலைகள். அனைத்து சிலைகளுமே கல்லரைகளில் வைக்கும் விதத்தில் வடிக்கப்பட்டிருந்தது.



பிறகுதான் அது சீனாவின் முதல் பேரரசன் க்வின் ஷி ஹூவாங்கின் கல்லறை என கண்டறிப்பட்டது. இவர் கிமு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மன்னரின் இறப்பிற்குப் பிறகும் அவரைப் பாதுக்காக்க அவரது கல்லரையைச் சுற்றி 8000 க்கும் மேற்பட்ட போர் வீரர்களின் சிலைகள் வைக்கப்பட்டதாம். இத்தனை சிலைகளையும் வடித்து அந்த இடத்தை உருவாக்க சுமார் ஒரு லட்சம் பணியாட்கள் வேலை செய்திருக்கக்கூடும் எனக் கணிக்கின்றனர் ஆய்வாளர்கள். இது போன்ற எதேச்சையாகக் கண்டறியப்பட்ட வரலாற்றுப் பொக்கிஷங்கள் ஏராளம்.

குறிப்பெழுதி வைக்கப்பட்டிருக்கும் புதையல்களும் உண்டு. நாம் திரைப்பட ஹீரோக்கள் கையில் ஒரு மேப்பை வைத்துக்கொண்டு புதையலைத் தேடி அலைவார்களே.. அதே வகைதான். கடற்கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடிக்கும் செல்வத்தினை ஏதாவது ஒரு இடத்தில் பதுக்கிவிட்டுபின்னர் அதனை வந்து எடுத்துக்கொள்வதற்காக அதற்கான குறிப்புகளையும் வரைபடமாகவோஅல்லது குறியீடுகளாகவோ ஒரு சிலருக்கு மட்டும் புரியும் வண்ணம் எழுதி வைத்துக்கொள்ளும் பழக்கமுடையவர்கள் .  அப்படி மறைத்து வைத்துவிட்டு வரைபடத்துடம்  செல்பவர்கள் மரணத்தைத் தழுவும்போது, அவர்கள் மறைத்து வைத்திருக்கும் பொருட்கள் புதையலாகிறது.

இன்னொரு விசித்திரமான வகையும் உண்டு.தன்னிடம் இருக்கும் செல்வம் தனக்குப் பிறகு மற்றவரிடம் போகட்டும் ஆனால் அதை அவன் தேடி கண்டுபுடித்துக் கொள்ளட்டும் என தன்னிடம் உள்ள செல்வங்கள் அனைத்தையும் ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு அதற்கான துப்புகளையும்,தடயங்களையும் எழுத்து வடிவிலோ குறியீடுகள் வடிவிலோ விட்டுச்செல்பவர்களும் இருக்கிறார்கள்.அக்காலத்தில் மட்டுமல்லநாம் வாழும் இந்த நூற்றாண்டில் கூட அப்படிப்பட்ட ஆட்கள் இருக்கின்றனர்.

உதாரணமாக   ஃபாரஸ்ட் ஃபென் (Forest Fenn)என்பவர் 1980 களில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட சமயத்தில் தன்னிடம் இருக்கும் தங்க நாணயங்களையும், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால மரகத மோதிரங்களையும்ஒரு பெட்டியில் அடைத்து அதை ஒரு இடத்தில் பதுக்கி வைத்து அதற்கான குறிப்புகளை விட்டுச் செல்லவேண்டுமென ஆசைப்பட்டார்.தன்னுடைய மரணத்துக்குப் பின்னரும் தன்னுடைய நினைவுகள் புவியில் இருக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் இந்த முடிவை எடுத்திருந்தார். ஆனா பயபுள்ளசாகல.

கடந்த 2010 ஆண்டு ஃபாரஸ்ட் ஃபென்னிற்கு80 வயது நிறைவு பெற, 30 வருடத்திற்கு முன் எடுத்த அந்த முடிவை 2010 இல் நிறைவேற்றினார்ஆம்அந்த தங்க நாணயங்களும் மரகத மோதிரங்களும் அடங்கிய அந்தப் பெட்டியை நியூ மெக்ஸிகோவின் மலைப் பகுதிகளில் மறைத்து வைத்து அதற்கான துப்புகளை ஒரு பாடல் வடிவில் கொடுத்துள்ளார்.

அந்தப் பாடல் வடிவிலான துப்புகள் மட்டுமல்லாமல் பின்குறிப்பாக சில வாசங்களையும் சேர்த்துள்ளார்.. அவை என்னவென்றால் என் பாடலில் உள்ள தகவல்களைத் தவிற வேறு எந்த தகவல்களையும் நம்ப வேண்டாம்ஏனென்றால் வெளியில் நிறைய தவறான தகவல்கள் பரவுகின்றதுநான் எனது புதையலை புதைத்து வைத்திருக்கிறேன் என்று கூறவில்லைமறைத்து வைத்திருக்கிறேன் என்றுதான் கூறியிருக்கிறேன்மறைத்து வைத்திருக்கிறேன் என்று கூறுவதால் அதனை புதைத்து வைக்கவில்லை என்று பொருளாகாது போயா யோவ் நீயும் உன் புதையலும் இதுக்கு நீ புதையல் இல்லைன்னே சொல்லிருக்கலாம்னு தோண்றுகிறதல்லவா?  இன்று வரை இந்தப் புதையல் கண்டெடுக்கப்படவில்லை. நீங்கள் ஆசைப்பட்டால் கூட கட்டுச் சோற்றைக் கட்டிக்கொண்டு நியூ மெக்ஸிகோ வரை சென்று முயற்சித்துப் பார்க்கலாம்.

இதுபோன்ற குறிப்புகள் விட்டுச் செல்லப்பட்ட புதையல்களை எடுப்பது ஒரு சுவாரஸ்யமான செயல். இப்படிப்பட்ட புதையல்களைத் தேடி எடுப்பதையே தொழிலாகக் கொண்ட குழுக்களெல்லாம் இருந்திருக்கிறார்கள். புதையலைத் தேடி எடுப்பது ஒரு மிகப்பெரிய செல்வத்தை அடையும் ஒரு பயணம் என்பதை விட அந்தத் தேடுதலில் கிடைக்கும்சுவாரஸ்யத்தை அனுபவிப்பதற்காகபுதையல் வேட்டையில் ஈடுபட்டவர்கள் ஏராளம்.

பதினைந்தாம் நூற்றாண்டில் சில புத்தகங்களில் எழுதப்பட்ட குறிப்புகள் மூலமும், அரசல் புரசாலாக மக்களிடத்தில் பரவிக்கிடந்த கதைகளை அடிப்படையாகக் கொண்டும் மறைந்திருந்த ஒரு தங்க நகரத்தைத் தேடி அலைந்தவரகளைப் பற்றியும் அது தொடர்பான மர்மங்களைப் பற்றியும் தான் இனி வரும் பதிவில் காண இருக்கிறோம்.

-    தொடரும்

Saturday, July 22, 2017

விக்ரம் வேதா – தாறுமாறு!!


Share/Bookmark
எந்த ஒரு இயக்குனர்கிட்டயுமே அவரோட ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை பார்க்குறது ரொம்பக் கஷ்டம். குறிப்பா காட்சிப்படுத்துதல். ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் மற்றும் ஒரு தரம் இருக்கும். அந்தத் தரத்துலதான் நமக்கு படம் குடுப்பாங்க. திருட்டுப் பயலே எடுத்த சுசி கணேசன் பெரிய பட்ஜெட்ல கந்தசாமி எடுத்தாலும் அது சுசி கணேசனோட தரத்துல தான் இருக்குமே தவிற ஷங்கரோட தரத்தில் இருக்காது. ஆனால் அந்தத் தரத்தைக் கொண்டு வர முடியும். அதற்கு மிகக் கடின உழைப்பும், சூரி சொல்ற டீ டிக்காஷனும் வேணும். அப்படி நாம் பார்ப்பது மிகச் சிலரைத்தான். அந்த மிகச் சிலர்ல இப்ப இந்த புஷ்கர்-காயத்ரி சேர்ந்திருக்காங்க.

இந்தப் படத்தோட இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரியப் பத்தி சொல்லனும்னா இதுக்கு முன்னால ரெண்டு படம் எடுத்துருக்காங்க. முதல் படம் ஆர்யா நடிச்ச ஓரம் போ. வழக்கமான தமிழ் சினிமாக்கள்லருந்து மேக்கிங்ல கொஞ்சம் வித்யாசமான படம். ஓரளவு ஓக்கேயான படம். அடுத்து மிர்ச்சி சிவாவ எடுத்து ’வ’ குவாட்டர் கட்டிங்ன்னு ஒரு படம் எடுத்தாங்க. அவன் அவன் ரத்த வாந்தி எடுத்து தியேட்டர விட்டு வெளிய ஓடிவந்தாங்க. அப்படி இருக்க சுமார் ஏழு வருசம் கழிச்சி விக்ரம் வேதா படத்தோட வந்துருக்காங்க.

தவசி படத்துல வடிவேலுக்கிட்ட ஒரு லூசு சொல்லுமே “சார் நா முன்ன மாதிரி இல்லை சார்… ரொம்ப திருந்திட்டேன்.. பாருங்க.. சட்டையெல்லாம் கிழியாம போட்டுருக்கேன்”ன்னு. அதே மாதிரிதான் இந்தப் படத்து ட்ரெயிலரப் பாக்கும்போது புஷ்கர்-காய்த்ரியும் அதே ஸ்லாங்குல நாங்க ரொம்ப ”திருந்திட்டோம் சார் பயப்படாம தியேட்டருக்கு வாங்க சார்”ன்னு சொல்ற மாதிரி இருந்துச்சி. என்ன இருந்தாலும் மாதவன் – விஜய் சேதுபதி காம்பினேஷனுக்காகவாது படம் பாத்தே ஆகனும்னு போனோம். எதிர்பார்த்தத விட படம் பல மடங்கு சூப்பர். 



ஜெயம் ”ராஜா”வப் பத்தி ஒரு பொதுவான கருத்து இருந்துச்சி. அதாவது அவர் ரீமேக் படங்களுக்கு மட்டும்தான் சரிப்பட்டு வருவாரு. அவருக்கு சொந்த ஸ்க்ரிப்டெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு. ஆனா திடீர்ன்னு யாருமே எதிர்பாக்காத மாதிரி தனி ஒருவன்னு ஒரு சூப்பர் படத்தக் குடுத்து அசத்துனாரு. அதே மாதிரிதான் இந்த புஷ்கர்-காயத்ரியும். இவங்க எடுத்தா ஓரளவு சுமாராத்தான் இருக்கும் அப்டிங்குற பிம்பத்த உடைச்சி ஒரு செமை எண்டர்டெய்னரக் குடுத்துருக்காங்க

வெறும் கேங்க்ஸ்டர்- போலீஸ் ஆடுபுலி ஆட்டம் மாதிரி இல்லாம அதுலயே கொஞ்சம் சஸ்பென்ஸ் கலந்து வச்சி, அங்கங்க சில நகைச்சுவைகளையும் தூவிவிட்டு ரொம்ப அருமையான ஒரு படத்த குடுத்துருக்காங்க.

படத்தோட மிகப்பெரிய ப்ளஸ் மாதவனும் விஜய்சேதுபதியும். மாதவன இறுதிச்சுற்று படத்துல பாத்தப்போ நானும் என் நண்பர் ஒருத்தரும் பேசிக்கிட்டு இருந்தோம். “மச்சி படத்துக்கு பேரு இறுதிச்சுற்று இல்லடா. மாதவனுக்குத்தான் இறுதிச்சுற்றுன்னு பேர் வச்சிருக்கானுங்க. இன்னும் ஒரு சுத்து பெருத்தா வெடிச்சிருவாரு போல”ன்னு கிண்டல் பன்னிட்டு இருந்தோம். ஆனா ஆளு அப்டியே உடம்பக் கம்மி பண்ணி போலீஸ் கெட்டப்புக்கு ஏத்த மாதிரி செம்ம ஃபிட்டா இருக்காரு.

மொத சீன்ல மாதவனப் பாத்தப்போ என்னடா இது ட்ரிம் பன்னிட்டு இருக்கும்போது பாதிலயே எந்திரிச்சி வந்துட்டாரான்னு டவுட்டாகிப்போச்சு. அப்புறம்தான் தெரிஞ்சிது அது இஸ்டைலுன்னு. இத்துணூண்டு மூஞ்சிக்குள்ள இருக்க கொஞ்சூண்டு மீசை தாடிய கெட்டப் சேஞ்சுங்குற பேர்ல எத்தனை விதமாத்தான் அவஙகளும் டிசைன் பன்ன முடியும்?

விஜய் சேதுபதி அதுக்கும் மேல. பட்டையக் கெளப்பிருக்காரு. அவருக்குண்ணே அளவெடுத்து செஞ்ச மாதிரியான கேரக்டர். வியாசர்பாடி ஸ்லாங்குல பூந்து விளையாடுறாரு. அவருக்கே உரித்தான ஸ்டைல்ல அந்த “அய்யோயோ.. அள்ளு இல்லை”ன்னு சொல்லும்போது தியேட்டரே குலுங்குது.  அதுவும் அந்த தீம் மியூசிக்கும் அதுக்கும் இண்ட்ரோவெல்லாம் தாறுமாறு.

வரலட்சுமி ஒரு கேரக்டர் பன்னிருக்காங்க. ஒரு சீன்ல விஜய் சேதுபதி, அவரோட தம்பி, வரலட்சுமி மூணு பேரும் பேசிக்கிட்டு இருக்காங்க.. தீடீர்னு விஜய் சேதுபதி வெளில போயிருவாரு. ஆனாலும் அவர் குரல் கேட்டுக்கிட்டே இருக்கு. என்னடான்னு பாத்தா வரலட்சுமி பேச ஆரம்பிச்சிருச்சி.. ஆத்தாடி.

ரொம்ப சிரத்தை எடுத்து, ரொம்ப கவனமா ஸ்க்ரிப்ட் பன்னிருக்காங்க. ஒவ்வொரு காட்சியும் படத்துக்கு தேவையான ஒரு தகவல தாங்கி நிக்கிது. ஆரம்பத்துல அந்தக் காட்சிகளை சும்மா நாம கடந்து பொய்ட்டாலும் கடைசில உண்மை விளக்கப்படும்போது எல்லா காட்சிக்கும் உள்ள தொடர்பு ரொம்ப ஆச்சர்யப்படுத்துது.

குறிப்பா வசனங்களும், மாதவன், சேதுபதியோட வசன உச்சரிப்புகளும் செம. ”சார் என் தங்கச்சிக்கு மாப்ள பாத்துருக்கேன்.. மாப்ள இஞ்சினியர்”ன்னு ஒருத்தர் சொன்னதும் “அதுல என்ன அவ்வளவு பெருமை?” என மாதவன் கேட்க தியேட்டரே கைதட்டல்ல அதிருது. ஒரே இஞ்ஜினியர்கள் சூழ் உலகு... “சார்… சார்.. ஒருத்தன் ஒரு பொருளை அங்க தொலைச்சிட்டு இங்க வந்து தேடிக்கிட்டு இருந்தானாம். ஏண்டா அங்க தொலைச்சிட்டு இங்க வந்து தேடுறன்னு கேட்டதுக்கு அங்க ஒரே இருட்டா இருக்கு இங்கதான் வெளிச்சமா தேடுறாதுக்கு நல்ல வாட்டமா இருக்குன்னு சொன்னானாம்”னு விஜய் சேதுபதி அவர் ஸ்லாங்குல சொன்ன ஒரு உதாரணத்தக் கேட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்.

சாம் என்பவரோட இசையில பாடல்கள் சுமார் ரகம். ஆனா பின்னணி இசை பட்டையக் கிளப்பிருக்கு. காட்சிகளைப் படமாக்கிய விதம், எடிட்டிங், காட்சிகளோட வரிசைன்னு எல்லாமே ரொம்ப நல்லா பன்னிருந்தாங்க. 

மொத்தத்துல எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய ஒரு சூப்பர் எண்ட்ர்டெய்னர். மிஸ் பன்னிடாதீங்க.



Sunday, July 16, 2017

WAR FOR THE PLANET OF THE APES!!!


Share/Bookmark
ஒரு கதாப்பாத்திரத்த கதாநாயகனா மக்கள் ஏத்துக்கனும்னா அந்தக் கதாப்பாத்திரம் அழகா இருக்கனும்னோ. நல்ல கலரா இருக்கனும்னோ, நல்ல உடல் கட்டுடன் இருக்கனும்னோ எந்த அவசியமும் இல்லை. அவர கதாநாயகனா மக்கள் ஏத்துக்கிறது அந்தப் படத்தோட கதையிலயும் அது சொல்லப்படுற விதத்துலயும்தான் இருக்கு. ஒரு இயக்குனர் நினைச்சா யார வேணானும் இன்னும் சொல்லப்போனா எத வேணாலும் மக்களுக்குப் புடிச்ச கதாநாயகனா மாத்திடலாம். ரஜினி, கமல், அஜித், விஜய்லாம் திரையில கெத்து காமிக்கும்போது எந்த அளவு உற்சாகத்தோட விசில் அடிச்சி பட்த்தப் பாத்தோமோ அதே அளவுக்கு உற்சாகத்தோடதான் நான் ஈ படத்துல ஒரு ”ஈ” செய்யிற சாகசங்களுக்கும் விசில் அடிச்சி பாத்தோம்.

ஒரு ஈய வச்சே இந்த அளவு நம்மாளுங்க கெத்து காமிக்கும்போது, ஒரு மனிதக் குரங்க வச்சி ஹாலிவுட்காரன் எவ்வளவு கெத்து காட்டுவான்? ப்ளானெட் ஆப் த ஏப்ஸ் தொடர் வரிசைப் படங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னாலருந்தே எடுக்கப்படுது. அதுல கடந்த 2011ம் ஆண்டு ஆரம்பிச்ச ரீபூட் சீரிஸ்ல மூணாவது மற்றும் கடைசிப் பகுதிதான் இப்ப வெளிவந்துருக்க வார் ஃபார் த ப்ளானட் ஆப் த ஏப்ஸ்.

வீடியோ விமர்சனம்



ஒரு ஆய்வுக்கூடத்துல வைத்து சோதனைக்குட்படுத்தப்படும் ஒரு குரங்குக்கு பிறக்குர சீசர் எனும் மனிதக்குரங்கு அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட மருந்தோட எஃபெக்ட்ல மனிதர்களைப் போன்ற அறிவோட வளருது. அடைச்சி வைக்கப்பட்டிருக்க பல மனிதக் குரங்குகளையும் தன்னோட புத்திசாலித்தனத்தால தப்பிக்க வச்சி காட்டுக்கு அழைச்சிட்டுப் போகுது. ”கோபா” அப்டிங்குற பேருள்ள ஒரு ஆர்வக்கோளாறு குரங்கால மனிதர்களுக்கும் மனிதக் குரங்குகளுக்கும் பெரிய சண்டை ஆரம்பிக்க, மனிதக் குரங்குகள் அனைத்தும் காடுகள்ல பதுங்கியிருக்கு. இதுதான் முதல் இரண்டு பாகங்கள்ல நடந்த கதை.


அதைத் தொடர்ந்து வந்திருக்கும் இந்த மூணாவது பகுதில, தன்னை நம்பியிருக்க குரங்குளை ஒரு பாதுகாப்பான இடத்துக்கு அழைச்சிட்டு போறதுக்கு சீசர் முயற்சி செஞ்சிட்டு இருக்க, சீசரோட மனைவியும் மகனும் ராணுவ வீரர்களால கொல்லப்படுறாங்க. கடும் கோபமடைஞ்ச சீசர், தன்னோட மனிதக் குரங்குப் படைகளை பாதுகாப்பான இடத்த நோக்கி இடம் பெயரச் சொல்லிட்டு மனைவி மகனைக் கொன்னவனை பழி வாங்க தனியா புறப்பட, சீசருக்கு பாதுகாப்பா இன்னும் மூண்று குரங்குகளும் சேர்ந்து கிளம்புறாங்க. போற வழியில வாய் பேச முடியாத ஒரு குழந்தையும் இவர்களோட சேர்ந்துக்குது.

துரதிஷ்டவசமா மொத்த குரங்குகளும் ராணுவத்தோட பிடியில மாட்டிக்கிட, அங்கிருந்து சீசர் தன்னோட குரங்குப் படைகளை எப்படி மீட்டு ஒரு பாதுகாப்பான இடத்துக்கு அழைச்சிட்டு போறார்ங்குறதுதான் இந்தப்  படத்தோட கதை. பல தமிழ்ப்படங்கள்ல பாத்து சலிச்ச அதே கதைதான். ஆனா மனுஷங்க மட்டும்தான் பழிவாங்குவீங்களா? மனிதக் குரங்குகளுக்கும் மானம் மாரியாத்தா வெக்கம் வேலாயுதம் சூடு சூளாயுதம் எல்லாம் இருக்குப்பான்னு சொல்ற படம்தான் இது.

மனைவி மகனைக் கொன்னவன பழிவாங்கத் துடிக்கிற அந்தக் கோவம்,, தன்னோட இனம் கஷ்டப்படும்போது அதைத் தாங்க முடியாம தவிக்கிற தவிப்பு, வில்லன் சொல்ற கதையை கேட்டு அவனுக்காக அழுகுற இறக்க குணம்னு ஹீரோ சீசர் குரங்கு முகத்துல காமிச்சிருக்க ஒவ்வொரு வேரியேஷனும்  அட்டகாசம். அத குரங்குன்னு சொல்லவே ஒரு மாதிரி இருக்கு. குரங்கு சார்ன்னு கூப்டாக்கூட தகும்.

ஒரு தலைவன்னா எப்படி இருக்கனும்.. தன்னை நேசிக்கிற மக்களுக்காக என்ன செய்யனும்.. அவன நேசிக்கிறவங்க எப்படி மரியாதை வச்சிருப்பாங்கன்னு அத்தனைக்கும் உதாரணம் இந்த சீசர் கேரக்டர்தான். கெத்து காமிக்குது. முதல் பாகத்துல முதல் முதலா சீசர் வாயத் திறந்து பேசுறது, மூணாவது மாடியிலருந்து கீழ போற கார் மேல ஈட்டிய எறிஞ்சிட்டு கெத்தா நிக்கிறது, குதிரை மேல ஏறி கெத்தா வர்றதுன்னு ஏராளமான காட்சிகள் புல்லரிக்க வைக்கும். இன்னும் சொல்லப்போனா இந்த சீசர் குதிரையில ஏறி வர்ற காட்சியத்தான் அப்படியே சுட்டு பவன் கல்யாணோட சர்தார் கப்பர் சிங் படத்துல அவருக்கு இண்ட்ரோ சீனா வச்சிருந்தாங்க.

பர்ஃபார்மன்ஸ் கேப்சரிங் முறையில படமாக்கப்படுற இந்த ப்ளாண்ட ஆப் த ஏப்ஸ் படங்கள்ல ஹீரோ சீசர் கேரக்டர்ல நடிக்கிறவரு ஆண்டி செர்கிஸ். லார்ட் ஆப் த ரிங்க்ஸ் படத்துல ஸ்மீகல் கேரக்டர்ல நடிச்சாரே அவரே தான்.

இப்ப வெளிவந்துருக்க இந்தப் பகுதில முதல் இரண்டு பகுதிகளைப் போல சண்டைக் காட்சிகள் அதிகம் வைக்காம, கொஞ்சம் செண்டிமெண்ட், கொஞ்சம் ஆக்சன், கொஞ்சம் காமெடின்னு எல்லாம் சரிபங்கா கலந்து எல்லா வித்துலயும் நல்ல படமா, எல்லாரும் ரசிக்கிற மாதிரி படமா குடுத்துருக்காங்க. அதுவும் “Bad Ape”ங்குற பேர்ல வர்ற ஒரு வயசான குரங்கு பன்ற லூட்டிகள் அதகளம். சில காட்சிகள் கண்கலங்கவும் விட்டுட்டாங்க.

மொத்ததுல அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில வந்திருக்க இந்த வார் ஃபார் த ப்ளானட் ஆப் த ஏப்ஸ் படத்த நிச்சயம் தவற விட்ராதீங்க.

இரண்டாவது பாதியில மொத்தக் குரங்குகளும் வில்லன்கிட்ட மாட்டிக்கிட்டு சித்ரவதைய அனுபவிக்கிறதப் பாக்கும்போது… கொஞ்சம் இருங்க.. இத எங்கயோ நாங்க முன்னாலயே பாத்துருக்கோமே… அடேய்.. இது எங்க செல்வராகவன் எடுத்த ஆயிரத்தில் ஒருவன் படம்ல? அடப்பாவிகளா.. கார்த்திக்குப் பதிலா குரங்கப் போட்டு அப்புடியே எடுத்து வச்சிருக்கீங்களே.. அதுவும் படம் முடியிறப்ப வர்ற மியூசிக் அப்டியே ஆயிரத்தில் ஒருவன். விர்ஜின் மியூசிக் டைரக்டர் சாபம் உங்கள சும்மா விடாதுசார்.


Monday, July 10, 2017

தியேட்டருக்கு மக்கள் வராததற்கு காரணம் டிக்கெட் வி மட்டுமா?


Share/Bookmark
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களை மூணே நாட்கள் மட்டும் ஓட்டிட்டு, அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் எக்கேடு கெட்டு வேண்டுமானாலும் போகட்டும்ன்னு நட்டாத்துல விட்டுட்டு அனைத்து திரையரங்கங்களும் வரி உயர்வைக் கண்டித்து திங்கட்கிழமை முதல் போராட்டத்தில் குதிச்சி, கலைஞர் இருந்த மூணு மணி நேர உண்ணாவிரதம் மாதிரி அடுத்த வெள்ளிக்கிழமைக்குள்ள போராட்ட்த்த வாபஸ் வாங்கியாச்சு. இது ஒருபக்கம் இருக்க திரையரங்க, டிக்கெட் விலையை ரூ.200க்கு உயர்த்திக்கொள்ள அனுமதி வேண்டி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பா தமிழக அரசிடம் அனுமதியும் கோரப்பட்டிருக்கு.

ரெண்டு நாள் முன்னால வெளியான ஒரு செய்திக்குறிப்புல திரையரங்க உரிமையாளர்கள் சார்பா ஒருவர் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கிறாரு. “நாங்க 200 ரூபாய்க்கு டிக்கெட் விலை விற்பனை செய்துகொள்ள தமிழக அரசிடம் அனுமதி வேண்டியிருக்கோம். எல்லா திரையரங்கங்கள்லயும் இனிமே கம்ப்யூட்டர் பில்லே குடுக்க ஏற்பாடு செய்யிறோம். எந்த ஹீரோ படம் வந்தாலும் அந்த 200 ரூவாய்க்கு மேல நாங்க டிக்கெட் விலைய ஏற்ற மாட்டோம்” அப்டின்னு பேட்டி குடுக்குறாரு.

அதாவது இதுக்கு முன்னால நாங்க டிக்கெட்டுல பத்து ரூவான்னு ப்ரிண்ட் பன்னி அத நூறு ரூவாய்க்கு வித்துகிட்டு இருந்தோம்.. அத இனிமே செய்ய மாட்டோம். பெரிய ஹீரோ படங்கள்லாம் வரும்போது நாங்க டிக்கெட் விலைய ஏத்தி விப்போம். அதயும் இனிமே செய்ய மாட்டோம்னு அவங்க வாயாலயே குடுத்த மறைமுக ஒப்புதல் வாக்குமூலம்தான் இது.

இதுக்கு முன்னால பத்து ரூபா பதினைஞ்சி ரூபாய் டிக்கெட்டுன்னு அரசாங்கத்துக்கு கணக்கு காமிச்சி கம்மியா வரி கட்டிக்கிட்டு இருந்த திரையரங்க உரிமையாளர்களுக்கு, இந்த GST யின் அதிரடி வரி உயர்வின் மூலமா அதை சமாளிக்க முடியாதுன்னு முடிவு செஞ்சி களத்துல குதிச்சிட்டாங்க.

சென்னையைப் பொறுத்த அளவு திரையரங்கங்களோட நிலையே வேற. டிக்கெட் விலை நூத்தி இருபதா இருந்தாலும் சரி, இருநூறா இருந்தாலும் சரி, ஐநூறா இருந்தாலும் சரி. பாக்குறதுக்கு ஆள் இருக்கு. கண்டிப்பா இருக்கும். ஆனா “சி” செண்டர் எனப்படும் சிறு நகர திரையரங்கள் ரொம்ப பரிதாபமான நிலையிலதான் இருக்கு.

சிறு நகரத் திரையரங்குகள்ல படம் பார்ப்பவர்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமான அளவுல குறைஞ்சிக்கிட்டே வருது. உதாரணமா கடந்த ரெண்டு மாசத்துல படம் ரிலீஸான முதல் வாரக் கடைசியில பட்டுக்கோட்டையிலுள்ள திரையரங்கங்கள்ல நான் பார்த்த படங்கள் குற்றம் 23, சிவலிங்கா மற்றும் போங்கு. இந்தப் படங்களுக்கு எங்களையும் சேத்து திரையரங்கத்துல இருந்தவர்களோட எண்ணிக்கை முறையே 18, 30, 15.

600 பேர் உட்காரக்கூடிய ஒரு திரையரங்கத்துல வெறும் 15 பேர உக்கார வச்சி ஒரு காட்சி ஓட்டுனா, ஒரு திரையரங்கத்துக்கு என்ன லாபம் கிடைக்கும்? அதுலயும் அந்தப் பதினைஞ்சி பேர்ல ஒருத்தன் ஏசி போடலன்னு வேற சலிச்சிக்குவாரு. ஏசிய விடுங்க… ஃபேன் போட்டுவிட்டா கூட பதினைஞ்சி பேர்கிட்டருந்து வர்ற கலெக்‌ஷன் அந்த கரண்ட் பில்லுக்கே கட்டாது. விஜய், அஜித் படங்களுக்கு மட்டும் நாம தியேட்டருக்குப் போய் “டேய்.. இவன் 6 ரூவான்னு டிக்கெட்டுல போட்டு நமக்கு 150 ரூவாய்க்கு வித்து லாபம் சம்பாதிக்கிறாண்டோய்”ன்னு ஆதங்கப்படுவோம். ஆனா மத்த படங்களுக்கும் போய் பாத்தாதான் தெரியிது அவங்க இன்னும் தியேட்டர் நடத்திக்கிட்டு இருக்கதே பெரிய விஷயம்னு.

உண்மைய சொல்லப்போனா ரஜினி, அஜித், விஜய் படங்கள் ரிலீஸாகும் முதல் இரண்டு மூண்று நாட்களத் தவற மற்ற எந்த நாள்லயும், எந்த ஹீரோவுக்கும் அரங்கு நிறைந்த காட்சிகள இப்பல்லாம் சி செண்டர்கள்ல பார்க்கவே முடியிறதில்லை. தமிழ்நாட்டுல எப்படா ரிலீஸாகும்னு எல்லாரும் ஆவலா காத்துக்கிட்டு இருந்த படம் விஸ்வரூபம். அந்தப் படத்தோட முதல் நாள் இரவு 10 மணி காட்சிக்கு கவுண்டர்ல நிக்கிறேன். ஒன்பதே முக்கால் வரைக்கும் என்னைத் தவற யாரயுமே காணும். அப்புறம் ஒவ்வொன்னா வந்து மொத்தம் ஒரு நாற்பது பேர் சேந்தாங்க. ரொம்ப சங்கடமா போச்சு அன்னிக்கு.

ஒரு காலத்துல தியேட்டருக்குப் போனா டிக்கெட் கிடைக்குமாங்குற கேள்வி இருக்கும். டிக்கெட் கிடைக்காம படம் பாக்காம திரும்பிப்போறவங்க எத்தனையோ பேர் இருப்பாங்க. சரத்குமார் படம், அர்ஜூன் படம், ப்ரபு படம், சத்யராஜ் படம்னு எல்லாரோட படமும் சூப்பரா ஓடுனது ஒரு காலம். ஆனா கடந்த 5 ஆண்டுகள்ல முண்ணனி நடிகர்கள் அல்லாத ஒரு நடிகரோட படம் சி செண்டர்ல சூப்பரா ஓடுனுச்சின்னு நம்மாள சொல்ல முடியுமா?

மற்ற மாநிலங்களோட ஒப்பிடும்போது தமிழ் நாட்டுலயும் ஆந்த்ராவுலயும்தான் சினிமாவ விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் அதிகம். அப்படி இருந்தும் ஏன் மக்கள் இப்ப திரையரங்கங்கள நாடுறதில்லை? அதுக்கு டிக்கெட் விலைதான் காரணம்னு நினைச்சா நிச்சயம் இல்லை. டிக்கெட் விலையும் காரணாமா இருக்கலாம். ஆனா அது கடைசிக் காரணமாத்தான் இருக்கும். அதுக்கு முன்னால பல காரணங்கள அடுக்கலாம்.

முதல்ல மக்கள திரையரங்குகள்லருந்து தனிமைப் படுத்த ஆரம்பிச்சது திருட்டு விசிடி. ஒருவருக்கு 70-80 ரூபா செலவு செஞ்சி தியேட்டர்ல பாக்குறதுக்கு வெறும் 30 ரூவாய்க்கு ஒரு டிவிடி வாங்குனா மொத்தக் குடும்பமும் பாத்துடலாம்ங்குற ஒரு மனப்பாங்க மக்கள்கிட்ட ஆரம்பிச்சி வச்சது இந்த திருட்டு விசிடிக்கள்.


அடுத்த காரணம் எலெக்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறையின் அபாரமான வளர்ச்சி. டிவிடிக்கள் பரவலாக உலா வர ஆரம்பிச்சாலும் எல்லோர் வீட்டிலும் டிவிடி ப்ளேயர்கள் அப்பல்லாம் இருக்கல. அப்படியே இருந்தாலும் ஒரு டிவிடிய வாங்கி அத ப்ளேயர்ல போட்டு ஸ்ட்ரக் ஆகாம ஒரு படத்த பாத்து முடிக்கிறது சாதாரண விஷயம் இல்லை. ஆனா அதயும் சரி செய்ய அடுத்து வந்துச்சி பென் ட்ரைவ் கலாச்சாரம். பென் ட்ரைவ்ல படத்த ஏத்திட்டா கொஞ்சம் கூட ஸ்ட்ரக் ஆகாம எத்தனை தடவ வேணாலும் பாக்கலாம். அடுத்து ஸ்மார்ட் ஃபோன் வந்துச்சி. Android la Share it அப்ளிகேஷன் வந்துச்சி. அவ்ளோதான். பென் ட்ரைவும் தேவைய்யில்ல.. டிவிடி ப்ளேயரும் தேவையில்லை. ஒரே ஒரு ஃபோன்ல டவுன்லோட் பன்னிக்கிட்டா ஊர்ல உள்ள அத்தனை பேருக்கும் படத்த சப்ளை பன்னிடலாம். இதுல ஜியோ வேற உள்ள புகுந்து இருந்த கொஞ்ச நஞ்ச வழியையும் அடைச்சிட்டான்.

அடுத்த மிக முக்கியமான காரணம் கேபிள் டிவி லோக்கல் சேனல்கள். திரையரங்குகள் அழிஞ்சதுக்கும், இன்னும் அழியப் போறதுக்கு மிக முக்கியப் பங்கு இந்த லோக்கல் சேனல்களுக்கு உண்டு. படம் ரிலீஸாகி ஒரே மாசத்துல சில சமயங்கள்ல அதுக்கு முன்னால கூட நல்ல குவாலிட்டியான பிரிண்ட்ட அவங்க சேனல்ல ஒளிபரப்பி ஒவ்வொரு வீட்டுக்குமே கொண்டு சேர்க்குறாங்க. ஸ்மார்ட் ஃபோனும் தேவையில்ல. இண்டர்நெட்டும் தேவையில்ல. 150 ரூவாய்க்கு கேபிள் கனெக்‌ஷன் இருந்தா போதும். எல்லா படங்களையும் வெளியான ஒரே மாசத்துல பாத்துடலாம். இவங்களுக்கெல்லாம் படத்த ஒளிபரப்ப யார் அனுமதி கொடுக்குறது? ஏன் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புற லோக்கல் சேனல்கள் மேல எந்த ஆக்‌ஷனும் எடுக்க மாட்டேங்குறாங்கங்குறது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். சென்னையில திரையரங்கள் ஒழுங்கா செயல்படுறதுக்கு முக்கியக் காரணம் இங்க லோக்கல் சேனல்கள் இல்லாததே.

அடுத்த காரணம் புதிய இயக்குனர்கள் வரவால தமிழ் சினிமாவின் பாதையில் ஏற்பட்ட மாற்றம். தமிழ்சினிமாவுக்குன்னு ஒரு பாணி இருக்கு. சினிமாத்தனம் அதிகம் கலந்த சினிமாதான் நம்ம ஊரு சினிமா. அவ்வப்போது ஒண்ணு ரெண்டு படங்கள் அந்த சினிமாத்தனத்திலிருந்து தப்பிச்சி வெளிவரும். அப்படிப்பட்ட படங்களும் மக்கள் கிட்ட நல்ல வரவேற்பை பெறத்தான் செஞ்சிது. ஆனா இப்ப இருக்க இளம் தலைமுறை இயக்குனர்கள் ஒரே அயல்நாட்டுப் படங்களா பாத்து பாத்து, அதே பாணி படங்களை நம்ம மக்களுக்கும் திணிக்க முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்காங்க. பெருநகர மக்களிடம் அதுமாதிரி படங்கள் வரவேற்பைப் பெற்றாலும், சிறு நகரங்கள்ல மக்கள் மேலை நாட்டு பாணி படங்களுக்கு ஆதரவு நிச்சயம் கிடைக்கிறதில்லை.

இந்தக் காரணங்களையெல்லாம் தாண்டி கடைசியா வேணும்னா டிக்கெட் விலைய ஒரு காரணமா எடுத்துக்கலாம். இப்ப ”டிக்கெட் விலைய ஏத்திட்டாங்கடா.. நா தியேட்டருக்கு போகமாட்டேண்டா”ன்னு கூவுறவங்கட்ட இதுக்கு முன்னால டிக்கெட் கம்மியா இருந்தப்போ தியேட்டர்ல எத்தனை படம் பாத்த?ன்னு கேளுங்க… சைலண்ட் ஆயிருவாங்க. ”நம்ம எப்பவுமே தியேட்டருக்கு போறதில்லை பாஸ்… எவன் டைம வேஸ்ட் பன்னிக்கிட்டு.. காசு செலவு பன்னிக்கிட்டு… நமக்கு தமிழ் ராக்கர்ஸ் இருக்கு” ன்னு சொல்ற சிலரோட முகத்துல ஒரு பெருமிதம் தெரியும் பாருங்க. அதாவது மத்தவன் வீணா செலவு பன்னிட்டு இருக்கப்போ தான் மட்டும் புத்திசாலித்தனமா காச மிச்சப்படுத்திட்ட ஒரு பெருமிதம்.


சினிமாங்குறது ஒரு கலை. அந்தக் கலையை முழுமையாக உணரவும் ரசிக்கவும் திரையரங்கங்கள் தேவைப்படுது. இன்னும் சிம்பிளா சொல்லனும்னா சாமிய வீட்டுல கும்புடுறதுக்குக்கும் கோயிலுக்குப் போய் கும்புடுறதுக்கும் உள்ள வித்யாசம்தான் சினிமாவ வீட்ல பாக்குறதுக்கும் திரையரங்கத்துல பாக்குறதுக்கும் உள்ள வித்யாசம். மேலும் சினிமாங்குறது ஒரு அத்யாவசியம் இல்லை. நம்மள ரிலாக்ஸ் பன்னிக்கிற ஒரு பொழுதுபோக்குன்னு உணரனும். ”பாகுபலிய நீங்க பாக்குறதுக்கு முன்னலயே டவுன்லோட் பண்ணி நா பாத்துட்டேன் பாஸ்” ன்னு பெருமையா சொன்ன ஆட்கள் இருக்காங்க. “2.0 ரிலீஸ் ஆகும் அன்றே தமிழ் ராக்கர்ஸில் பார்ப்போம்”ன்னு சவால் விடுறானுங்க சிலர். பாத்தா பாத்துக்க. அதுனால உனக்கு என்ன கெடைக்க போவுது?

இப்படி திரைப்படங்கள் ஓடாததுக்கும், திரையரங்கிற்கு மக்கள் செல்லாத்துக்கும் எத்தனையோ முதன்மைக் காரணங்கள் இருக்கு. அப்படியிருக்க டிக்கெட் விலை 500 ஆனாலும் சென்னையில கூட்டம் குறையாது. டிக்கெட் விலை 30 க்கு வித்தாலும் சிறு நகரங்கள்ல கூட்டம் கூடாது. எதனால திரையரங்குகள் நலிவடைஞ்சி வருதுன்னு முறையான காரணங்கள அலசாம, பர்மா பஸார்ல உள்ள கடையில 50 திருட்டு டிவிடிக்கள பறிமுதல் செஞ்சிட்டா தமிழ் சினிமா வீறு கொண்டு எழுந்துரும்னு திரைத்துறையிலயே நிறைய பேர் நம்பிக்கிட்டு இருக்காங்க.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...