Wednesday, April 20, 2022

KGF - Chapter 2


Share/Bookmark

 

KGF இன் பலமே அவர்கள் கதை சொல்லும் விதம் தான். படத்தில் பல டைம்லைன்களில் காட்சிகள் காட்டப்படும். ராக்கி பிறக்கும் பொழுது, ராக்கி சிறுவனாக அம்மாவுடன் இருந்த பொழுது, ராக்கி சிறுவனாக மும்பையில் இருந்த பொழுது, ராக்கி KGF ற்குள் நுழையும் பொழுது, ஆனந்த் இளவழகன் வயதான காலத்தில் கதை சொல்லும் பொழுது, ஆனந்த் இளவழகன் வாலிபப் பருவத்தில் ராக்கியைப் பற்றி விசாரிக்கும் பொழுது, ராக்கி எப்படிப்பட்டவன் என ஒரு பெரியவர் ஆனந்த் இளவழகனிடம் கூறும் இரு குட்டி ஃப்ளாஷ்பேக்குகள், கேஜிஎஃபில் நுழைவதற்கு முன்னர் மக்களின் வாழ்க்கை என படம் பல டைம் லைனில் பயணிக்கும்.


ஆனால் இவை அனைத்தையும் முறைப்படுத்தி ஒரு கோர்வையாக நமக்குக் கொடுத்ததுதான் KGF இன் வெற்றி. வேறு எந்தத் திரைப்படத்திலும் பார்த்திராத ஒரு புதிய அனுபவம்.


உதாரணத்திற்கு KGF இன் இரண்டாவது பாதியில் வீரனுடைய கதை ஒன்று சொல்லப்படும். அந்த ஒரு காட்சியில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்தாரு டைம் லைனில் நடக்கும் காட்சிகள் ஒன்றாக காட்டப்பட்டிருக்கும். 


மகிழ்ச்சியாக நடக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி, தொடர்ந்து அந்த பெண்ணும் அவரது கணவனும் KGF ற்குள் இழுத்து வரப்படுவது, ராக்கி பிறப்பது, ராக்கியின் தாய் பாடும் பாடல், வண்டியில் அரிசியை வைத்துவிட்டு யாரும் அருகில் வராதபடி ஆட்கள் சுடுவது, பின் ராக்கி மட்டும் அந்த வண்டியை துப்பாக்கி குண்டுகளுக்கு தனியே இழுத்து வருவது என மூன்று நிமிடங்களுக்குள் அவ்வளவு விஷயங்களைக் காட்டியிருப்பார்கள். 


KGF இன் பெரும்பாலான காட்சிகள் இப்படித்தான். குறைந்தது மூன்று நான்கு ஓவர்லேப்புகள் இருக்கும். எந்த ஒரு காட்சியையும் just like that எடுக்காமல் ஒரு  மெனக்கெடலை உணர முடியும்.


நான் நண்பர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு.  ஷங்கர் படத்தில் ஒரு பத்து நிமிடத்தையும், வேறு ஒரு  இயக்குனரின் படத்தில் ஒரு பத்து நிமிடத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தெரியும் ஷங்கரின் படங்கள் ஏன் பெரிதாகப் பேசப்படுகின்றன என்று. அந்தப் பத்து நிமிடத்தில் திரையில் அவர் காட்டும் விஷயங்கள், கொடுக்கும் தகவல்கள் மற்ற சாதாரணப் படங்களில் அரை மணி நேரத்தில் கூட இருக்காது.


KGF உம் கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு படம் தான். ஏனோதானோவென்று ஒரு காட்சி கூட இருக்காது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவர்களின் மெனக்கெடல் நன்றாகவே தெரியும்.


சரி KGF 2 விற்கு வரலாம். சகுனி திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். "முடிச்சை அழிப்பது ஒரு சுவாரஸ்யம் என்றால் அவிழ்க்க முடியாதபடி முடிச்சு போடுவது இன்னும் சுவாரஸ்யம்" என்று. அதைத்தான் ப்ரஷாந்த் நீலும் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட படத்தை நன்றாக இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாதபடியான ஒரு மேக்கிங்.


கதையைப் பொறுத்த வரை KGF முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாவது பாகம் சற்று சுமார் தான். முதல் பாகத்தில் ஒரு எமோஷனல் கனெக்ட் இருக்கும். மேலும் கருடனைக் கொல்ல வேண்டும் என்கிற தெளிவான இலக்குடன் படம் பயணிக்கும்.


இரண்டாவது பாகத்தில் இரண்டுமே மிஸ்ஸிங். நிறைய கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கவில்லை. ஈஸ்வரி ராவ் மற்றும் அவரது மகன் கதாப்பாத்திரங்கள் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. அம்மா செண்டிமெண்டும் முதல் பாகம் அளவிற்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. மூன்று அருமையான பாடல்களை ரொம்பவே சுமாராகப் படமாக்கியிருக்கிறார்கள். 


சஞ்சய் தத்தைப் பார்த்து அனைவரும் பயந்ததாகக் கூறுகிறார்கள். உண்மையில் வயதான தோற்றத்தில், அந்த கெட்டப்பில் அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. 


சார்பட்டா பரம்பரையில் இடைவேளைக்கு முன்னரே வேம்புலியுடம் ஒன் டூ ஒன் சண்டை வைத்ததால் க்ளைமாக்ஸில் எப்படி அது பெரிய தாக்கத்தைக் கொடுக்கவில்லையோ அதே போல ஆதிராவும் ராக்கி பாயும் ஆரம்பத்திலேயே சந்தித்துக்கொண்டு மாறி மாறி உயிர்ப்பிச்சை கொடுத்துக்கொள்கிறார்கள். 


ஒரு சில goosebumps காட்சிகளைத் தவிற படம் ரொம்பவே ஃப்ளாட்டாகச் செல்கிறது. 

ஆனால் எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை. விஷூவலி நம்மைக் கட்டிப்போடுகிறார்கள்.


ராக்கி பாய் படத்தில் சிங்கம் போல உலவுகிறார். அறிமுகக் காட்சி, போலீஸ் ஸ்டேஷன் காட்சி, ரெமிகாவை அவரது அலுவலகத்தில் சந்திக்கும் காட்சி, பார்லிமெண்டில் துப்பாக்கியுடன் நுழையும் காட்சிகளெல்லாம் அதகளம். 


என்னதான் படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு சில குறைகள் தெரிந்தாலும் படம் முடிந்து வெளியே வந்த பின்னரும் நீண்ட நேரம் ராக்கி பாய் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறார். அதுதான் படத்தின் வெற்றி. 


-அதிரடிக்காரன்


Saturday, April 9, 2022

டாணாக்காரன்!!


Share/Bookmark


ஒரு ஃப்ரெஷ்ஷான, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் ஒரு கதைக்களம். பயிற்சிப்பள்ளியில் காவலர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைத் திரைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். நேர்த்தியான உருவாக்கம்.

இரண்டு மூன்று கட்டிடங்கள், ஒரு மைதானம் இதை மட்டுமே வைத்து முழுப்படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார்கள். லொக்கேஷன்கள் அதிகம் இல்லை என்றாலும் படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் குறைந்தபட்சம் ஐம்பது பேர் இருக்கிறார்கள். அத்தனை பேரைச் சமாளித்து எடுத்ததற்கே பாராட்டவேண்டும்.

புதுமுகங்களாக இருந்தாலும் சில சிலர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். லால் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் தூண்கள் எனலாம். நன்றாக நடித்திருக்கிறார்கள்.

இந்த டாணாக்காரன் பேசுவது காவலர் பயிற்சிப்பள்ளியில் நடைபெறும் அரசியல் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள். ஆனால் அதில் பேசப்பட்டிருப்பது துறை பாகுபாடின்றி அனைத்து இடங்களிலும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு சவால். அத்தனை பேரும் தங்களை கனெக்ட் செய்துகொள்ள முடியும்.

நிச்சயம் பார்க்கலாம்.

 

Spoiler Alert:

ஒரு சில விஷயங்களை இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் என எனக்குத் தோன்றியவை.

படத்தின் ஆரம்பத்தில் ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்து இந்த பயிற்சிப்பள்ளிகள் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை விளக்கி நிறைய போட்டிகள் நடத்தப்படுவதாகக் கூறுகின்றனர். அதே போல கதை ஆரம்பிக்கும்போதும் எதோ போட்டி, மெடல் என்றெல்லாம் பேச, பயங்கரமான போட்டிகளெல்லாம் இருக்கப்போகிறது என்று ஒரு ஆர்வத்துடன் இருந்தால் கடைசியில் பெரேடு எடுப்பதுதான் போட்டி என்கிறார்கள். புஸ் என்று ஆகிவிட்டது.

அதுமட்டுமல்லாமல் படத்தில் அதற்கு முன் பெரேடு எடுப்பதைப் பற்றிய பயிற்சியோ அல்லது அதன் நுணுக்கங்களையோ பயிற்சியாளர்கள் சொல்லிக்கொடுப்பது போன்ற காட்சியமைப்புகள் கூட இல்லை. நேரடியாகத் திடீரென நாளைக்கு பெரேடு செலெக்‌ஷன் என்கிறார்கள்.

விக்ரம் பிரபுவின் உடல் வாகும், உடல் மொழியும் சுத்தமாக ஒட்டாதது போல் இருந்தது. நிஜத்தில் அப்படித்தான் இருப்பார்கள் என வைத்துக்கொண்டாலும் ஒரு கதையின் நாயகனாக உடலைப் பாராமரிப்பது அவசியம். எனக்கென்னவோ விக்ரம் பிரபுவைவிட விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு கச்சிதமாக பொறுந்தியிருப்பார் எனத் தோன்றுகிறது.

க்ளைமாக்ஸ் கொஞ்சம் ட்ரமாட்டிக்காக இருந்திருக்கலாம். அவர்கள் காட்டியிருப்பது தான் நிஜம். மறுப்பதற்கில்லை. நிஜத்தில் யாரும் ஓவர் நைட்டிலோ, சில நிமிடங்களிலோ நல்லவர்களாக மாறப்போவதில்லை. ஆனால் அப்படி எடுத்திருந்தால் ஒரு சினிமா என்கிற கோணத்தில் பார்வையாளர்களுக்கு ஒரு நிறைவைத் தந்திருக்கும்.

 

-அதிரடிக்காரன்

Friday, April 1, 2022

ஆடியன்ஸ திட்டாதீங்க ப்ரோ!!


Share/Bookmark

 


RRR புகழ்ச்சிப்பதிவுகள் ஒரு புறம் சென்றுக்கொண்டிருக்க, “அந்தப் படத்த ஏன் கொண்டாடல? இந்தப் படத்த ஏன் ஃப்ளாப் ஆக்குனீங்க?” என சில படங்களைத் தூக்கிக் கொண்டு ஒரு கும்பல் குறுக்கயும் மறுக்கையும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் குறிப்பாக அவர்கள் கையில் வைத்திருக்கும் படம் 2.0 அதைக் கொண்டாடாமல் ஒழித்துவிட்ட பாவம் தான் நமக்கு நல்ல படமே கிடைக்கவில்லையாம். ஏம்பா.. கொஞ்சம் மனதைத் தொட்டு சொல்லுங்கள்.. 2.0 அதற்குத் தகுதியான படமா? எந்திரனின் தரத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாத 2.0, ரஜினி படமாகவும் இல்லாமல் ஷங்கர் படமாகவும் இல்லாமல் ஹீரோ யார் வில்லன் யார் என்கிற தெளிவும் இல்லாமல் ஒரு மாதிரி எடுக்கப்பட்டது. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், 3D படம் என்பது மட்டும் வெற்றி பெற வைப்பதற்குப் போதுமானதா?

காலாவ ஏன் ஓட விடல? ஊடகங்கள் திட்டமிட்டு சதி செஞ்சிருச்சி. ஆமா… அது அவர் அரசியலில் ஈடுபடுவதாகச் சொன்னதற்கான எதிர்வினை. ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அதுதான் அரசியல். சொல்லப்போனால் திராவிடக் கூட்டங்கள் மாய்ந்து மாய்ந்து படத்தைப் பற்றி புகந்து தான் எழுதின. உண்மையில் படத்திற்கு பெரிய ஓப்பனிங் இல்லாததற்குக் காரணம் கபாலி எஃபெக்ட் தான்.

ஸ்டாலின் திரைப்படத்தில் சிரஞ்சீவி அனைவருக்கும் உதவுவார். அவர்கள் நன்றி சொல்லும்போது நன்றி வேண்டாம் மூன்று பேருக்கு உதவுங்கள் என்று சொல்லுவார். உடனே அவரது நண்பன் சுனில் ஒருவருக்கு உதவி செய்ய அவர் பதிலுக்கு நன்றி கூறமாட்டார். சுனில் ஏன் எனக்கு நன்றி சொல்லவில்லை என அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட  ”அவங்க உனக்கு நன்றி சொல்லலைன்னா, அவங்க நன்றி சொல்ற அளவுக்கு நீ இன்னும் உதவி செய்யலன்னு அர்த்தம்” என்பார்.

அதேபோலத்தான் ரசிகர்கள் ஒரு திரைப்படத்தைக் கொண்டாட வில்லையென்றால், அவர்கள் கொண்டாடும் அளவுக்கு நம்ம படம் இல்லை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஒரு ரசிகன் எதைக் கொண்டாட வேண்டும், எதை நிராகரிக்க வேண்டும் என்பது அவனுடைய ரசனை மற்றும் சூழல் தீர்மானிக்கும். இயக்குனர்கள் என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் ரசிகர்களுக்கு பிடித்தால் மட்டுமே அவர்கள் கொண்டாடுவார்கள்.

”புதுப்பேட்டையெல்லாம் எப்டி ஃப்ளாப் ஆச்சு.. இதெல்லாம் தியேட்டர்ல பாக்க எப்டி இருந்துருக்கும்?” என சிலாகிப்பவர்களைப் பார்க்க முடிகிறது. புதுப்பேட்டை முதல் காட்சி பார்த்துவிட்டு நொந்து போய் வந்த நண்பர்களின் முகம் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

ஆயிரத்தில் ஒருவன் எப்டி ஃப்ளாப் ஆச்சின்னு இன்னும் ஆர்டின் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். “என்ன நடந்துச்சி.. ஏன் இப்ப படம் முடிஞ்சிது” என கமலா திரையரங்கில் புலம்பிக்கொண்டே எழுந்து சென்றவர்களை இன்னும் ஞாபகம் இருக்கிறது. சில விஷயங்கள் அப்படித்தான். வீட்டில் சாவுகாசமாக உட்கார்ந்து கொண்டு தேவைப்பட்டால் பாஸ் செய்து விட்டு கொஞ்சம் ப்ரேக் எடுத்து பார்க்கும் பொழுது நிறைய திராபையான திரைப்படங்கள் கூட நன்றாகத்தான் இருக்கும்.  திரையரங்க அனுபவம் முற்றிலும் வேறு.

ஒரு திரைப்படம் வெற்றிபெற முதலில் நல்ல கதை எழுத வேண்டும். பின் அதை நல்ல தரத்தில் படமாக்க வேண்டும். பின் அதை முறையாக விளம்பரப்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் வெளியிட வேண்டும். இதில் எந்த இடத்தில் தவறு நடந்தாலும் ரிசல்ட் வேறு மாதிரி ஆகிவிடும். இதையெல்லாம் தாண்டி ஒரு திரைப்படம் வெற்றி பெற ஒரு மேஜிக் நடக்க வேண்டும் என ரஜினியே கூறியிருப்பார். அந்த மேஜிக் ஒரு சில படங்களுக்குத் தான் நடக்கும்.

ஒருவர் மாததிற்கு ஒரு படம் தான் பார்ப்பார். அதற்குத்தான் அவரிடம் காசு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நீங்கள் அதே மாதத்தில் இரண்டு “கொண்டாட வேண்டிய” படங்களை ரிலீஸ் செய்கிறீர்கள் என்றால் இரண்டு படங்களில் ஒன்றைத்தான் அவர் தெரிவு செய்து பார்ப்பார். அதற்காக அவரிடம் சண்டைக்கு போகக்கூடாது அல்லவா?

மழை காலத்திலும், குழந்தைகளுக்கு பரிட்சை இருக்கும் நேரத்திலும் படத்தை ரிலீஸ் செய்து விட்டு ஏன் நீங்க தியேட்டருக்கு கொண்டாட வரவில்லை என்றால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்.

நல்ல திரைப்படங்களை எப்பொழுதுமே மக்கள் ஆதரிக்கத் தவறுவதில்லை. ஆனால் அந்த ஆதரவு திரையரங்கிற்கு வந்து, வசூலாகத் தரவேண்டுமென்றால் அதற்கு நிறைய விஷயங்கள் ஒத்துவரவேண்டும்.

ஆடியன்ஸ திட்டாதீங்க ப்ரோ!!

OLD (2021)


Share/Bookmark


ஆறு வயதில் ஒரு மகன், பதினொரு வயதில் ஒரு மகள் என இரண்டு குழந்தைகளுடைய கணவன் மனைவி இருவரும் விவாகரத்து செய்யலாம் என முடிவெடுக்கிறார்கள். இந்த முடிவைக் குழந்தைகளிடம் சொல்வதற்கு முன் அவர்களை சில நாட்கள் மகிழ்ச்சியாக வைத்திருந்து, தாங்களும் விவாகரத்திற்கான முடிவுகளை எடுக்கலாம் என இருவரும் குழந்தைகள் சகிதம் ஒரு பீச் ரெசார்ட்டிற்குச் செல்கிறார்கள்.

அந்த இடம், அங்கு அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை, பணியாட்கள் நடந்துகொள்ளும் விதம் என அத்தனையும் வெகுவாகக் கவர்கிறது. மறுநாள் காலை வேளை உணவருந்திக் கொண்டிருக்கும் போது அந்த ரெசார்ட்டின் மேலாளர்  இவர்களிடம் லேசாகப் பேச்சுக்கொடுத்து,

“எனக்கு உங்கள் குடும்பத்தை மிகவும் பிடித்திருக்கிறது. எங்களுக்குச் சொந்தமான ப்ரைவேட் பீச் ஒன்று இருக்கிறது. அது பாறைகள் சூழ மிக அருமையாகவும், அதிக கூட்டமில்லாமல் பொழுதை இனிமையாகக் கழிப்பதற்கும் சிறந்த இடம். அந்தக் கடற்கரைக்கு நாங்கள் அனைவரையும் அனுப்புவதில்லை. எங்களுக்குப் பிடித்த வெகு சிலரை மட்டுமே அனுப்புவோம். உங்களுக்கு ஓக்கே என்றால் நீங்கள் அங்கு சென்று பொழுதைக் கழிப்பதற்கு வாகனம் ஏற்பாடு செய்கிறேன்” என்கிறார்.

அவர்களும் சரி என்கிறார்கள்.

“நீங்கள் அந்த ப்ரைவேட் பீச்சிற்கு செல்வதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்” எனவும் வேண்டுகோள் விடுத்து அந்தக் குடும்பம் அங்கு செல்ல ஒரு வாகனம் ஏற்பாடு செய்கிறார்.

வாகனத்தில் அவர்கள் குடும்பம் மட்டுமல்லாமல் மேலும் இரண்டு குடும்பங்களும் இருக்கின்றன.  அனைவரும் கடற்கரையை அடைகின்றனர்.

சுற்றிலும் பாறைகளால் சூழ்ந்து, அவ்வளவு சுத்தமாக, பார்ப்பதற்கு இனிமையாக இருக்கிறது அந்தக் கடற்கரை. அனைவருக்கும் மகிழ்ச்சி. குழந்தைகள் விளையாட ஆரம்பிக்கின்றனர். பெரியவர்கள் கரையில் படுத்து ஒய்வெடுக்க, ஒரு மணிநேரம் கழிகிறது.

அப்பொழுது தான், நம்ப முடியாத, எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கடற்கரையில் எதோ மர்மம் இருப்பதை அனைவரும் உணர்கின்றனர்.

அந்த மர்மத்தைக் கண்டறிந்து, அவர்களால் அந்தக் கடற்கரையிலிருந்து மீண்டு வர முடிந்ததா இல்லையா என்பதுதான் இந்த OLD.

மிஸ்ட்ரி, த்ரில்லர் நாயகன் மனோஜ் நைட் ஷாமலனின் அடுத்த படைப்பு. ஏற்கனவே நாவலாக வந்த இக்கதையை திரைவடியில் எழுதி இயக்கியிருக்கிறார் ஷாமலன். இவர் ஒரு ஹாலிவுட் கே.எஸ் ரவிக்குமார். அவருடைய அனைத்துப் படங்களிலும் ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸைக் கொடுத்துவிடுவார். இதிலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட முழுப்படமுமே கடற்கரையில் தான் நடக்கிறது. ஆனால் போரடிக்காமல் சுவாரஸ்யமாக எடுத்துச் சென்றிருக்கிறார்.

நிச்சயம் பார்க்கலாம்.

 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...