Tuesday, August 21, 2012

துவாரமலை இரவுகள் - இறுதிப் பகுதி


Share/Bookmark
முதல் பகுதி

இரண்டாவது பகுதி

மூன்றாவது பகுதி

ஆறுமுகத்திற்கு ஒரு நிமிடம் அடிவயிற்றையே புரட்டிப்போட்டது அவன் கண்ட காட்சி. இதுவரை இவ்வளவு கோரமான ஒரு நிகழ்வை அவன் கண்டதில்லை... கால்கள் உடலை தாங்கிப்பிடிக்க மறுத்து  நடுக்க ஆரம்பிக்கவே, மெதுவாக ஒரு மரத்தை தாங்கிப் பிடித்துக்கொண்டு மெல்ல கீழே உட்கார்ந்தான். திருச்சாமி பலிகொடுக்கப்பட்டது ஒரு வகையில் அதிர்ச்சியை கொடுத்தாலும் தன் மகன் இல்லையே என்ற ஒரு சிறு ஆறுதல் மனதில் இருந்தது. என்ன செய்வது? விடிந்து இந்த விஷயம் ஊரில் எவருக்கேனும் தெரிந்தால் நம் நிலமை என்ன ஆவது? பஞ்சவர்ணமும் மகன்களும் எங்கே என்னும் பல கேள்விகள் மனதை குடைய ஆரம்பித்திருந்தன. திடீரென ஒரு யோசனை. பலனிருக்குமா என்று தெரியாவிட்டாலும், முயற்சி செய்து பார்க்கலாம் என முடிவு செய்தான். முகத்தில் வழிந்த வியர்வையை கையால் சுற்றி துடைத்துக்கொண்டு அரிக்கன்  விளக்கோடு எழுது நடக்க ஆரம்பித்தான்.

மலையம்மன் அருகில் சென்று மனதிற்குள்ளேயே தன் நிலமையை கொட்டித்தீர்த்து, காலைத்தொட்டு வணங்கி அங்கிருந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு நடக்கலானான். 10 நிமிடம் நடைப்பயணத்தில் அந்த வீடு வந்தது. குளிர் உடம்பின் வெப்பநிலையை கணிசமாக குறைத்துக் கொண்டிருக்க, வரிசையாக அமைந்திந்த 5 வீடுகளில் 3 வது வீட்டின் கதவைத் தட்டினான்.

"டொக்...டொக்...டொக்"

எந்த பதிலுமில்லை. சிறு இடைவெளிக்கப்புறம் மீண்டும் கதவைத் தட்ட உள்ளிருந்து ஒரு  ஆண்குரல்

"ஆருப்பா இந்த நேரத்துல"

"நா... நாந்தான் ஆறுமுகம்" என்று தொண்டை அடைத்த குரலில் கூற கதவு திறக்கப்பட்டது. உள்ளே சிறு சிமினி விளக்கை கையில் பிடித்துக்கொண்டு வைத்தியர் குழந்தை சாமி நின்றிருந்தார். ஆறுமுகத்தை கண்டதும் முகத்தில் சிறு பதட்டத்துடன்

"ஆறுமுகம்... என்னப்பா இந்த நேரத்துல... உடம்புக்கு எதாவது சரி இல்லையா.. ஏன் இப்புடி முகமெல்லாம் வேர்த்திருக்கு... உள்ள வா" என்றார்.


உள்ளே சென்று பேச வாயெடுத்த ஆறுமுகம், பேசமுடியாமல் தொண்டை அடைத்து அழ ஆரம்பிட்த்தான்..

"அய்யோ.... என்னப்பா ஆறுமுகம்.. என்னாச்சி.. வீட்ல கொழந்தை மனைவியெல்லாம் நல்லா இருக்காங்கல்ல.. ஏன்பா அழற.. விஷயத்த சொல்லு... "

"அவங்களுக்கெல்லாம் ஒண்ணும் இல்லையா" என்று ஆரம்பித்து இரண்டு நிமிடத்தில் கடந்த மூன்று நாட்களாக நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்.

கேட்டு முடித்தவுடன் வைத்தியரின் முகம் ஒரு பயமும் வியப்பும் கலந்த பார்வையில் ஆறுமுகத்தை பார்த்து "என்னப்பா... இந்த காலத்துல இப்புடியெல்லாம் நடக்குமா.. என்னோட காலத்துல கூட நா நரபலிங்கறதையே பாத்ததில்லை.. அதெல்லாம் எங்க அய்யன் காலத்துலயே முடிஞ்சி போச்சின்னு நெனைச்சிட்டு இருந்தேன்.... நீ சொல்றது என்னால நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியலப்பா.."

"அய்யா நீங்க கண்டிப்பா இத நம்பித்தான் ஆகனும்... அன்னிக்கு நீங்க ராத்திரி வீட்டுக்கு பின்னால எதோ வெளிச்சம் பாத்தேன்னு சொன்னீங்கல்ல... அதுகூட இத பண்ண யாரோதான். நா அன்னிக்கு வெளிய வந்து ஒரு நிமிஷம் கூட இல்ல... உடனே உள்ள பொய்ட்டேன்.. சரி அன்னிக்கே உங்ககிட்ட இத சொல்லி பெரிய விஷயம் ஆக்க வேணாம்னு விட்டுட்டேன்.... எனக்கு இப்ப நீங்க ஒரு உதவி செய்யனும்... அன்னிக்கு நீங்க மலையம்மன் கோயிலுக்கு வரும்போது வேறு யாரையாவது வழியில எதேச்சையா பாத்தீங்களா... கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க... "

சிறிது நேரம் தலையை குணிந்து தரையை பார்த்து யோசித்த வைத்தியர்.... "ஆமாப்பா... நம்ம கோவிந்தன வழியில பாத்தேன்... "

"எந்த கோவிந்தன் அய்யா?"

"உன் எஸ்டேட் ஓனர் திருச்சாமியோட வேலைக்காரன் கோவிந்தன்ப்பா...என்கிட்ட கூட எங்க இந்த நேரத்துல போறீங்கன்னு கேட்டான்... நா பச்சலை பறிக்கபோறேன்னு சொல்லிட்டு வந்தேன்"

உடனே புருவத்தை சுருக்கிய ஆறுமுகம் "நீங்க அவன இந்த நேரத்துல எங்க போறன்னு கேக்கலையா?"

"அவன எப்புடிப்பா கேக்குறது... திருச்சாமிக்கிட்ட வேலைபாக்குறது மட்டும் இல்லாம இங்க நெறைய எஸ்டேட்டுக்கு காவ காக்குறதே அவன் தான்.. ராத்திரி அப்பப்ப எழுந்து ஒரு சுத்து சுத்திட்டு வருவான் நானே நிறைய தடவ அவன நடுராத்திரில பாத்துருக்கேன்.. அதான் எதும் கேக்கல..."

சிறிது மனதிற்குள் தைரியம் வந்தவனாய் "எனக்கென்னவோ அவன் மேல தான்யா சந்தேகமா இருக்கு கோவிந்தன் இல்லாம திருச்சாமி வெளில எங்கயுமே போகமாட்டார். அவர் ஒரு நாள் கூட எஸ்டேட்டுக்கு  தனியா வந்ததில்லை.. நா உடனே அவன் வீட்டுக்கு போறேன்" என்று ஆறுமுகம் புறப்பட

"இருப்பா... தனியா போகாதே... எனக்கென்னவோ ப்ரச்சனை பெருசா இருக்கமாதிரி இருக்கு... வா நானும் உன் கூட வர்றேன்" என்ற வைத்தியர் வீட்டுக்கதவை இழுத்து வெளியில் கயிறால் கட்டிவிட்டு ஆறுமுகத்துடன் கோவிந்தன் வீட்டை நோக்கி புறப்பட்டார்.

கோவிந்தனின் வீடு துவாரமலை கிராமத்தின் எல்லையில் அமைந்த தனி வீடு... கோவிந்தன் அதிகமாக ஊர்மக்களுடன் ஒட்டுவதில்லை... இரண்டு வருடங்களுக்கு முன் கோவிந்தன் மனைவி குளிர்ஜுரத்தால் பாதிக்கப்பட்டு சரியான கவனிப்பில்லாததால் இறந்துபோயிருந்தால். தற்போது கோவிந்தன் மட்டுமே அந்த வீட்டில் வசித்துக்கொண்டிருந்தான். கிட்டத்தட்ட 15 நிமிட நடைபயண்த்திற்கு பின் கோவிந்தனின் வீடு கண்ணுக்கு புலப்பட்டது. குளிர்காற்றை தாங்குவதற்காக வைத்தியர் ஒரு பழைய கிழிந்த சால்வையை போர்த்தியிருக்க, ஆறுமுகத்திற்கு இன்னும் வியர்வை நிற்காமல் ஊற்றிக்கொண்டு இருந்தது.

நள்ளிரவு 2 மணிக்கு கூட கோவிந்தனின் வீட்டில் தெரிந்த விளக்கு வெளிச்சம், இருவருக்கும் வியப்பை அளித்தது.

"ஆறுமுகம்... வீட்டுல இன்னும் கோவிந்தன் முழிச்சிட்டு தான் இருக்கான் போல... நாம கையில  வெளிச்சத்தோட போனா கண்டுபுடிச்சிருவான்... முதல்ல அந்த அரிக்கனை அணைச்சிடு" என்று வைத்தியர் சொன்னவுடன் ஆறிக்கனை ஒளியை மெல்ல குறைத்து அணைதான் ஆறுமுகம்.  இருப்பினும் பாதிமேகத்தால் சூழப்பட்ட பெளர்ணமி நிலவு சிறிது வெளிச்சத்தை கொடுக்க அதன் உதவியில் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து நடந்து வீட்டின் வாயிலுக்கு செல்லும் பாதையை விட்டு விலகி சற்று ஒதுங்கி ஒதுங்கி கோவிந்தன் வீட்டின் வலது பக்கம் சென்றிருந்தனர். கோவிந்தன் வசிப்பதும் மரத்தாலான சிறு குடி என்பதால் மரச் சட்டங்களுக்கிடையே சிறிய இடைவெளிகள் வழியே உள்ளிருந்து வரும் விளக்கொளி கசிந்து கொண்டிருந்தது. சத்தமில்லாமல் அந்த சுவற்றருகே அமர்ந்திருந்த ஆறுமுகமும் வைத்தியரும் மெல்ல தலையை நிமிர்த்தி அந்த இடைவெளிகள் வழியே வீட்டின் உள்ளே பார்வையை ஊடுறுவ விட, இருவரின் முகமும் ஒரு வித்யாசத்திற்குட்பட்டது.

வீட்டின் நடுவில் ஒரு சிறிய செங்கற்கல்லால் சூழப்பட்ட சதுர பகுதியில் சிறு நெருப்பு எரிந்திருக்க அதன் ஒரு புறம் சட்டையில்லாத ஒருவர் எதோ வாயால் முனங்கிகொண்டிருக்க  மறுபுறம்  கழுத்தில் மாலைகளுடன் சந்தனமும் குங்குமமும் நிறைந்த நெற்றியுடன்   அக்னியை வணங்கியபடி ஒரு வயதான ஆணும் அவனருகில் விட்டத்தை வெறித்து பார்த்தபடி பருமனான தோற்றத்துடன் மாலைகள் அணிவிக்கப்பட்ட ஒரு பெண்ணும் உட்கார்ந்து இருந்தனர். அவரின் பின்னால் கோவிந்தன் நின்று கொண்டிருந்தான். உட்கார்ந்து இருப்பது யார் என சரியாக தெரியாத நிலையில் வேறு சில மரச்சட்டங்களின் இடைவெளியில் மாறி மாறி பார்க்க அவர்களின் முகமும் காணக்கிடைத்ததும் வைத்தியரும், ஆறுமுகமும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

மாலைகளுடன் உட்கார்ந்திருந்தது ஆறுமுகம் வசிக்கும் எஸ்டேட்டை முன்பு வைத்திருந்த  தட்சிணாமூர்த்தியும் அவரது மனைவியும்.

உள்ளே அவர்கள் எதோ பேச ஆரம்பிக்க, ஆறுமுகமும் வைத்தியரும் காதுகளை கூர்மையாக்கி கேட்க ஆரம்பித்தனர்.

"சாமி.. நீங்க சொன்ன மாதிரியே ஒரு பறவை, ஒரு கால்நடை, நீங்க சொன்ன அதே நட்சத்திரத்துல பிறந்த ஒரு நரன் எல்லாரையும், நீங்க சொன்ன அதே பெளர்ணமில, நீங்க சொன்ன அதே இடத்துல பலி கொடுத்தாச்சி... இப்பவாவது ஆண்டவன் கண்திறந்து எனக்கு மனைவிய பழையமாதிரி எனக்கு திரும்ப தருவாரா.. இதோட முழுசா நாலு  வருஷம் ஆச்சி இவளுக்கு ப்ரம்மைபிடிச்சது மாதிரி ஆகி.. குழந்தையில்லைங்குற குறையே தெரியாதமாதிரி என்னை வச்சிருந்த அவள இப்புடிபாக்குறதுக்கு எனக்கு சக்தி இல்லை" என்றார் 50 வயதான தட்சிணாமூர்த்தி

"இதில் ஆண்டவன் மனதுவைக்க எதுவுமே இல்லை... நாம் கொடுத்த பலிகள் அனைத்தும் உன்னுடைய முன்னோர்களின் ஆன்மாக்களை சாந்தியடைய செய்வதே... நமக்கு நடைபெறும் அனைத்து செயல்களும் அவர்களின் ஆசியுடனேயே நடைபெறுகிறது. நமக்கு காவல்தெய்வங்களும் அவர்களே... நமக்கு தீங்கு விளைவிக்கு கர்ம சாத்தான்களும் அவர்களே. இதுபோன பலிகள் மூலம் அவர்களின் ஆன்மாக்களை திருப்திப்படுத்துவதால், நாம எந்த நோக்கத்தை மனசுல வச்சி பலிகொடுக்குறோமோ அந்த செயல்கள் ஈடேற வழிபிறக்கும் என்பது சித்தர்களார் எழுதிவைக்கப்பட்ட உண்மை. கூடிய
விரைவில் நீ விரும்பியபடி உன் மனைவி பழையபடி மாறுவாள்"

"இதுகண்டிப்பா நடக்கனும்... அவளுக்காக தான் இத்தனை கஷ்டமும்... போனவருஷம் நீங்க என்கிட்ட இந்த பரிகாரத்த சொன்னதும், நீங்க சொன்ன நட்சத்திரத்துல உள்ள ஒருத்தனை தேடித் திரிஞ்சோம் அப்பதான் திருச்சாமிக்கு அந்த நட்சத்திரம்னு தெரிஞ்சிது. உடனே அவன என்னோட எஸ்டேட்ல வச்சி எதாவது செஞ்சா எங்க மேல சந்தேகம் வந்துரும்னு தான் நானும் கோவிந்தனும் திட்டம் போட்டு எனக்கு பணக்கஷ்டம் இருக்கமாதிரி காண்பிச்சி அவன்கிட்ட குறைஞ்ச விலையில அந்த எஸ்டேட்ட வாங்கவச்சிட்டு நா தலை மறைவாயிட்டேன். சிலபேரு நா இறந்துட்டேன்னு கூட நம்பிட்டாங்க. எல்லாம் நல்ல அமைஞ்சி வந்தவுடன் இன்னிக்கு ராத்திரி எஸ்டேட்ல பெரிய ப்ரச்சனைன்னு சொன்னதும் உடனே கெளம்பி வந்துட்டான் திருச்சாமி... நெனைச்சமாதிரியே அவன் கதையையும்
முடிச்சாச்சி... சாமி எனக்கு ஒண்ணுதான் புரியல.. பலிகள ஏன் என்னோட எஸ்டேட்ல குடுக்க சொன்னீங்க? அதனாலதான் இவ்வளவு யாருக்கும் தெரியாத ஒரு எடத்துல குடுத்துருந்தா இவ்வளவு  கஷ்டம் வந்திருக்காது.

"ம்ம்ம்ம்...ஒரு உயிர் பிரிஞ்ச அப்புறம் அந்த ஆத்மா எங்க சுத்திகிட்டு இருக்கும் தெரியுமா?"

"தெரியாது சாமி"

"உயிர் பிரிஞ்ச இடத்துல உடம்புலருந்து பிரியிற ஆத்மா அந்த உயிரற்ற உடலயே சுத்தி வந்துகிட்டு இருக்கும். சரீரத்த நாம இடுகாட்டுக்கு எடுத்துட்டு போகிறவரைக்கும் அதை தொடர்ந்தெ வர்ற ஆத்மா இடுகாட்டில் உடல் அழிக்கப்பட்டதும் அதன் பிறகு எங்கே செலவது என்று தெரியாமல் அந்த இடுகாட்டிலேயே தனது சரீரத்தை தேடி அலைந்து கொண்டிருக்கும்.... நீ வைத்திருந்த அந்த  எஸ்டேட் தான் நம் முந்தைய சந்ததியினரின் இடுகாடு என்பதை மறந்துவிடாதே.. இப்ப  தெரிந்திருக்கும் நான் ஏன் அங்கு பலியிடச் சொன்னேன்னு" என்று சொல்லிவிட்டு திரும்பிய சடைய்ப்ப சாமியின் முகத்தை கண்டதும் ஆறுமுகத்திற்கு அடுத்த அதிர்ச்சி...

"ரொம்ப நன்றிசாமி... எதோ என் மனைவி எனக்கு திரும்ப கெடைச்சிட்டா போதும்..." என்று சொல்லிவிட்டு கோந்தனை நோக்கி "கோவிந்தா... திருச்சாமி மலையிலருந்து தவறி விழுந்து இறந்துட்டதா ஊர நம்ப வச்சிரு..."

"அய்யா..." என கோவிந்தன் இழுக்க

"என்னயே செத்தவன்னு ஊர நம்பவச்ச உனக்கு இது ஒரு பெரியவிஷயமில்லை... திருச்சாமிக்கும்  வேற யாரும் இல்லை... ஊரப்பொறுத்த அளவு இனிமே நீதான் அந்த எஸ்டேட்டுக்கு முதலாளி.."

லேசான புன்னகையுடன் "சரிங்கையா.. ஆனா அங்க திருச்சாமி ஆறுமுகம்ங்கறவன் குடும்பத்த குடி வச்சிருக்காரே.. அவன என்ன பண்றது..."

"இப்ப நடந்த விஷயம் எதாவது அவனுக்கு தெரியுமா?"

"நம்ம மூணுபேர தவற ஒரு ஈ காக்காவுக்கு கூட தெரியாது மொதலாளி... காதும் காதும் வச்சமாதிரி செஞ்சி முடிச்சிருக்கேன்... ஆனா முந்தாநேத்து விடியகாலை 4.30 க்கு அந்த கோழித்தலைய  எடுத்து அப்புறப்படுத்த போகும் போது மட்டும் அத காணல... எதாவது பூனை சாடிருக்கும்... நேத்து அந்த ஆட்டை தடம் தெரியாம அப்புறப்படுத்திட்டேன்... இன்னும் கொஞ்ச நேரத்துல திருச்சாமியையும் இருந்த எடம் தெரியாம பண்ணிடுறேன்..."

"அப்புறம் என்னடா... ஆறுமுகம் புள்ளை குட்டிக்காரன்.... நிம்மதியா இருந்துட்டு போகட்டும்.... அவன எதும் தொந்தரவு பண்ணாத " என்ற தட்சிணாமுர்த்தியிடம்

"சரிங்கையா...."  என தலையாட்ட ஆறுமுகமும் வைத்தியரும் அந்த இடத்தை விட்டு மெல்ல நகர ஆரம்பித்தனர்.

10 நிமிட மெளனமான நடைபயணத்திற்கு பிறகு "ஆறுமுகம் உன்கிட்ட ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் பஞ்சவர்ணமும் உன் பசங்களும் பொழுதுசாய நம்ம மாரியப்பன் வீட்டுல உக்காந்து பேசிகிட்டு இருந்தாக... அநேகமா நீ வர நேரம் ஆனதால அங்கயே தூங்கியிருப்பாங்கன்னு நெனைக்கிறேன்" என்றார்...

நம்பமுடியாத பல சம்பவங்கள் நடந்தேறியிருந்தாலும், தன் குழந்தைகள் பாதுகாப்பக இருப்பது மனதிற்கு நம்பிக்கையை அளித்தது... வைத்தியரிடம் பதில் ஏதும் சொல்லாமல் கூடிய விரைவில்  வேறு இடத்திற்கு குடிபெயர வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஓட்டிக்கொண்டு நடந்துவந்தான். சிறிது நேரத்தில் மலையம்மன் கோவில் வர வைத்தியர் வீட்டுக்கு பிரியும் வழியில்

"ஆறுமுகம் நாம இன்னிக்கு பாத்தது நமக்குள்ளையே இருக்கட்டும்யா... அதுதான் எல்லாருக்கும் நல்லது..." என்று கூறிவிட்டு அவர்வீட்டுக்கு நடந்து செல்ல, மறுநாள் கோவிந்தன் நடத்தவிருக்கும்  நாடகத்தை கண்முன்னே ஓட்டியவாறு தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தான் ஆறுமுகம்.

முற்றும்






Thursday, August 16, 2012

துவாரமலை இரவுகள் - 3


Share/Bookmark
குறிப்பு: இந்த கதையில் வரும் சம்பவங்கள் கதாப்பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. 

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

காலை 7 மணி.. சூரியன் லேசாக முகம் காட்ட துவங்கியிருந்தது. கதவிடுக்கு வழியே உள்நுழைந்த சூரிய ஒளி ஆறுமுகத்தின் முகத்தில் தட்டி எழுப்பியது. மெல்ல கண் திறந்து சுற்றி பார்க்க, இரண்டு மகன்களும் இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். இரவு அந்த சம்பவத்தை பார்த்த பஞ்சவர்ணம் இன்னும் காப்பி வைக்க கூட எழுந்திராமல் படுத்திருந்தாள். மெல்ல அவள் அருகில் சென்று  "பஞ்சவர்ணம்... எழுந்திரு.. நேரம் ஆச்சு பாரு.."என கையை தொட, உடல் நெருப்பாக கொதித்தது. "ஏய் பஞ்சவர்ணம் எழுந்திரு வைத்தியர்ட்ட பொய்ட்டு வந்துடலாம்.." என ஆறுமுகம் கூற :"இல்லைங்க கொஞ்சம் கசாயம் வச்சி சாப்டா சரியா போயிடும் என்று கூறியவாறே படுக்கையிலிருந்து எழுந்தாள். எழுந்து உட்கார்ந்து அவள் ஆறுமுகத்தை பார்த்த பார்வை ஆயிரம் கேள்விகளை உள்வைத்திருந்தது. "ராத்திரி நடந்தது கனவா இல்ல நிஜமா... யார் இப்படி செய்தது... எதுக்கு இங்க அத செய்தாங்க" என இன்னும் நீண்டு கொண்டே சென்றது.

ஆறுமுகம் எழுந்து வீட்டு கதவை திறந்து வெளியேவர பஞ்சவர்ணமும் பின் தொடர்ந்தாள். மரவள்ளி செடிகளை கடந்து அந்த புதர் அருகில் செல்ல செல்ல இருவருக்கும் எதோ ஒரு பயம் கலந்த படபடப்பு நெஞ்சுக்குள். புதருக்கு அருகில் கிடந்த அந்த நீளமான குச்சியை எடுத்து செடியை விலக்கிப் பார்க்க நேற்று இரவு கண்ட ஏதும் கண்ணுக்கு தென்படவில்லை. வேகவேகமாக மற்ற பகுதிகளையும் விலக்கி பார்த்த ஆறுமுகத்திற்கு ஏமாற்றம் கலந்த ஆச்சர்யமே மிஞ்சியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இன்னும் சற்று முன் செல்ல நேற்று இரவு நடந்து கனவல்ல என்று அருகில் கிடந்த காய்ந்த சருகுகள் மீது உறைந்து போயிருந்த ரத்தம் சொன்னது. மரங்களுக்குள் முழுவதும் தேடியும் ஆட்டின் தலையோ உடலோ கிடைக்கவில்லை. இருவரும் வெளிவந்து வீட்டிற்கு பக்கவாட்டில் உள்ள காய்ந்த தரையில் உட்கார்ந்தனர்.

"என்னங்க...என்ன நடக்குது இங்க? எனக்கு ஒண்ணுமே புரியலைங்க?"

"பஞ்சவர்ணம்..நா உன்கிட்ட இன்னொன்னையும் மறைச்சிட்டேன்.. முந்தாநாளு நடுச்சாமத்துல வயிறு முட்டுச்சின்னு ஒண்ணுக்கு போகலாம்னு வந்தேன்... அப்ப கால்ல எதோ மிதி பட்டுச்சி.. என்னன்னு பாத்தா ஒரு சேவலோட தலைமட்டும் தனியா கெடந்துச்சி.. எங்க உன்கிட்ட  சொன்ன பயப்படுவியேன்னுதான் அத எடுத்து சரிவுல வீசிட்டேன் புள்ள.."

"என்னங்க சொல்றீங்க... எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.. இங்க எதோ நமக்கு தெரியாம நடக்குதுங்க.. நீங்க இன்னிக்கே போய் சடையப்ப சாமிய  பாத்துட்டு வாங்க .. அவருதான் இதுக்கெல்லாம் ஒரு முடிவு
சொல்ல முடியும்..."

"நானும் அதான் நெனைச்சேன் புள்ள... நீ கொஞ்சம் சாப்பாடு மட்டும் செஞ்சி குடு... நா மதிய வாக்குல பொய்ட்டு பாத்துட்டு வந்துடுறேன்... "

"ம்ம் சரிங்க" என்றவள் மதியம் பதினொருமணிவாக்கில் சமைத்து இலைபொட்டலமாக ஒருவேளை உணவை கட்டி கொடுக்க, அதனை ஒரு சாயம் போன ஒரு துணிப்பையில் எடுத்துக்கொண்டு, துவாரமலையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மலை அடிவாரத்திலுள்ள சடையப்பரை காண புறப்பட்டான்,

"இந்தா புள்ளை நா வந்து சேர எப்புடியும் பொழுதாயிரும்... வீட்ட நல்ல சாத்திகிட்டு பத்தரமா இருங்க.." என்று பஞ்சவர்ணத்திடம் கூறிவிட்டு கிளம்பினான். மலையடிவாரத்தை அடையவே கிட்டத்தட்ட பொழுது சாய்ந்திருந்தது. மலையிலிருது கொட்டும் ஒரு காட்டருவி தரையை அடையும் ஓரிடத்திலேயே சாமி எப்போதும் காணப்படுவார். அங்கிருக்கும் சிறு குகை ஒன்றிலேயே தங்கியிருப்பவர். கிட்டத்தட்ட ஆள் அரவமற்ற ஒரு பகுதி. எப்படி  சாப்பிடுகிறார் எப்போது தூங்குகிறார் என்பதெல்லாம் எவருக்கும் தெரியாயாதது. பத்து பதினைந்து நாட்களுக்கு மாதம் முறையே ஊருக்குள் வந்து செல்பவர். அதுவும் பெளர்ணமியன்று ஊருக்குள் இருக்கும் அம்மனை வழிபடுவதற்காக.

எப்போதாவது ப்ரச்சனை நேரும் போது இவரை தேடி வரும் சிலரிடம், நல்வாக்கு கூறி அனுப்பி  வைப்பார். சிலர் இவரை சக்தியுள்ள சாமி என்று கருதினாலும் சிலர் இவரை ஒரு சாதாரண  மனிதனாகத்தான் பார்க்கின்றனர். ஆறுமுகம் அந்த அடசலான காட்டுப்பகுதியை நெருங்கும்போது  கிட்டத்தட்ட சூரியன் முகத்தை முழுவதும் மூடியிருந்தது. லேசான அரைவெளிச்சத்தில் சென்று அங்கு சுற்றித்தேட அங்குள்ள ஒரு பெரிய மரத்தின் கீழ் குத்துக்காலிட்டு கண்கள் மூடியிருந்த நிலையில், ஒரு கையில் மூங்கில் குச்சியுடன் உட்கார்ந்திருந்தார் சாமி. ஆண்டுகளாக வளர்ந்த நரைதாடியும், மாதங்களுக்கு முன்னர் துவைத்தது போலான ஒரு அழுக்கு காவி வேஷ்டியுடன் காணப்பட்டார் சடையப்பர். ஆறுமுகம் மெல்ல நடந்து சென்று அவருக்கு பத்தடி தொலைவில் அமர்ந்து

"சாமி" என்றான்.. மெல்ல கண்களை திறந்தவர் "சொல்லுப்பா யார் நீ"

"சாமி என் பேரு ஆறுமுகம்... நா ஆறுமாசத்துக்கு முன்னாடி உங்களை ஒருதடவ வந்து பாத்தேன்.. நீங்கதான் இனிமே நல்லது நடக்கும்...உனக்குன்னு ஒரு இடம் அமையும்னு சொல்லி அனுப்சீங்க..அதே மாதிரி ஆறுமாசமா நிம்மதியா ஒரு எஸ்டேட்ட்ல வேல பாத்துகிட்டு இருந்தேன்.. ஆனா இப்ப ரெண்டுநாளா ஒரு ப்ரச்சனை சாமி."

"என்ன ப்ரச்சனை?"

இரண்டு நிமிடங்களை எடுத்துக்கொண்டு நடந்தவற்றை விளக்கமாக கூறினான் ஆறுமுகம்.. அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர் "நீ அந்த ஊர்ல யாரோடவாது கடுமையான பகைய வளத்துருக்கியா?" என்றார்

"புரியலையே சாமி... எந்த மாதிரி கேக்குறீங்க"

"அதாவது உன்மேல பில்லி சூன்யம் ஏவல்னு எந்த சக்தியவாது அவங்க ப்ரயோகிக்கிற அளவுக்கு யாரோடவாது நீயோ இல்லை உன் மனைவியோ பகைய வளத்துருக்கீங்களான்னு கேட்டேன்"

"அய்யயோ அதெல்லாம் இல்லை சாமி.. நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னு இருக்கோம். பகைன்னு சொல்லிக்க எங்களுக்கு யாரும் இல்லை. அதோட நாங்க இன்னும் கூலி வேலைதான் பாத்துகிட்டு இருக்கோம் எங்கமேல மத்தவங்க பொறமை படுற அளவு வாழ்க்கை கூட நாங்க வாழ ஆரம்பிக்கல.. நிம்மதியா ரெண்டு வேலை கஞ்சி குடிச்சிட்டு இருக்கோம் அவளவுதான்... இன்னும் சொல்லப்போனா எனக்கு  இந்த பில்லி சூன்யம் மேலல்லாம் சுத்தமா நம்பிக்கை கிடையாதுய்யா..."

"உனக்கு நம்பிக்கையில்லை சரிப்பா... ஆனா மத்தவங்களுக்கு இருக்கே.. அடுத்தவன் நாசமா போகனும் நெனைக்கிறவன் எத்தனை பேரு இருக்காங்க.. சரி விடு நீ சொல்றத பாத்தா உனக்கு பில்லி சூன்யம்  ஏவல் வைக்கிற மாதிரி யாரையும் நீ சம்பாதிக்கலை... அப்படின்னா இதெல்லாம் நடந்ததுக்கு ஒரே காரணம் தான் இருக்கமுடியும்.."

"என்ன சாமி அது?"

"தீராத பாவங்களால சில காரியங்கள் நடக்கவிடாம துர்தேவதைகள் தடுத்து வைச்சிருக்கும்.. அப்படி இருக்க சமயத்துல அதுங்களுக்கு சில பலிகளை கொடுத்தா அதுங்க சாந்தி அடைஞ்சி தடைபட்ட செயல்கள நடக்க வழிவிடும்.. உதாரணமா ஒருவனுக்கு தீராத திருமண தோஷம் இருந்துச்சின்னா எந்த காலத்துலயும் திருமணம் நடக்கவிடவே விடாது.. அந்த மாதிரி சமயங்கள்ல இந்த மாதிரி பலி கொடுக்கும் வழக்கம் இருக்கு..."

இதைக்கேட்ட உடன் ஆறுமுகத்தின் மூளையில் எதோ பொறி தட்டியது.

சாமி தொடர்ந்தார்... அதே மாதிரி இன்னொரு சாத்தியமும் இருக்கு... ஒரு இடத்துல பழங்கால  பொக்கிஷங்கள் புதைஞ்சி கிடந்தா அதை சில காவல் பூதங்கள் காத்துகிடக்கும். அந்த புதையலை எடுக்க எவரேனும் முயற்சி செய்தால் அந்த காவல் பூதங்களை திருப்திப் படுத்த இந்த மாதிரி பலிகள் கொடுப்பதுண்டு..  ஆனா இந்த காலத்துல இப்படி யாரும் நடந்துக்கிறதா எனக்கு புலப்படல..."

"சாமி.. எனக்கும் இதெல்லாம் ஏன் நடக்குதுண்ணு வெளங்கல சாமி... சரி நா கெளம்புறேன்..பொழுதாகிப் போச்சி..."என்று புறப்பட்டவனை ஒரு முறை தீர்க்கமாக பார்த்துவிட்டு தலையை  குனிந்துகொண்டே சொல்ல ஆரம்பித்தார்

"உங்கிட்ட ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்.. நா கடைசியா சொன்ன அந்த துர்தேவதைகளுக்கு கொடுக்கிற பலியோ இல்ல காவல் பூதங்களூக்கு கொடுக்கிற பலியோ இறுதியில் ஒரு நரபலியிலேயே முடியும். ஒரு பறவை, ஒரு கால்நடையை தொடர்ந்து குறிப்பிட்ட நாள் நட்சத்திரத்தில் பிறந்த ஒரு நரனை ஒரு பெளர்ணமி பின்னிரவில் பலி கொடுத்தே இந்த பூஜைகள் முழுமையடையும்... இன்று  பெளர்ணமி.. கடந்த இரண்டு பின்னரவுகளில் ஒரு உன்னுடைய வீட்டில் ஒரு பறவையும் ஒரு  கால்நடையும் பலி கொடுக்கப்பட்டு விட்டன. என்னுடைய யூகம் சரியானால் இன்று பின்னிரவில் விழப்போவது ஒரு நரபலியாகவே இருக்கவேண்டும்... ஜாக்கிரதை..." என்று கூறி முடிக்க ஆறுமுகத்தின் கால்கள் லேசான நடுக்கத்திற்கு உட்பட தொண்டை வறண்டு போனது...  சாமியிடம் விடைபெற்றுவிட்டு வேகமான நடையில் வீடுநோக்கி புறப்படலானான்.

இப்பொழுதே இரவு முழுமையாக ஆக்ரமித்திருந்தது. பெளரணமி நிலவு இன்னும் வெளிச்சத்தை உமிழ காத்திருக்க நடுக்கத்திற்குட்ட கால்களுடன் துவாரமலை நோக்கி நடக்கலானான் ஆறுமுகம். சடையப்பர் கூறியதையும் நடந்தவற்றையும் ஒப்பிட்டு பார்க்கையிலேயே மனம் எதோ செய்தது... ஆறுமுகத்தின் மனதில் ஓடியவை "எஸ்டேட் ஓனர் திருச்சாமி அய்யாவுக்கு 40 வயதாகியும் இன்னும் திருமணம்  ஆகவில்லை... ஒரு வேளை சடையப்பர் சொன்னதுபோல இந்த பூஜை அவருக்காக நடத்தப் பட்டிருக்குமோ?அப்படி யென்றால் அவர் இன்று பலிகொடுக்கப்போகும் அந்த நரன் யார்? என்ற கேள்வி ஓடிக்கொண்டிருக்கும்போதே திருச்சாமி அடிக்கடி உன் மகன்களுக்காக தான் நான் உன்னை இங்கு வைத்திருக்கிறேன் என்று சொன்னதும் முதல்முறை தன் இளைய மகனை பார்த்த பொழுது அவர் ராசி நட்சத்திரங்களை விசாரித்து மகிழ்ந்தது கண் முன்னே வந்து சென்றது. அதுபோக அவர் ஒவ்வொருமுறையும் வெறும் கூலிக்காரனான என் மகன்களுக்கு பல பொருட்களை அவர் வாங்கித்தந்ததும் மனதுக்குள் நெருடலை அதிகப்படுத்தின. அதுபோக முந்தினம் அதிகாலையிலேயே வந்து வீட்டு பின்புறத்தை தேவையில்லாமல் பார்த்துவிட்டு சென்றதும் அடிவயிற்றில் கிலியை அதிக்ப்படுத்த,...ஒரு வேளை சடையப்பர் சொல்வது உண்மையானால் இன்று பலியாகப் போவது என் இளைய மகனா...." என்று நினைக்க நினைக்க கால்கள் வேகம் பிடித்தது...

வழியிலேயே மேகங்கள் மழைத்தூரலை பொழிய, மலையேறுவது இன்னும் கடினமானது ஆறுமுகத்திற்கு. ஆனால் அவன் கண்முன்னே தெரிந்தது திருச்சாமியும், அவனது இளைய மகனுமே... துவாரமலையை அடைவதற்குள் நடுச்சாமத்தை தாண்டியிருக்க ஓட்டமும் நடையுமாக மூச்சிறைக்க வீட்டை அடைந்த ஆறுமுகம் கதைவை திறக்க முயற்சிக்க... முடியவில்லை... கதவு நாரால் இழுத்து வெளிப்புறமாக கட்டப்பட்டிருந்தது. ஆறுமுகத்திற்கு அழுகையே முட்டிக்கொண்டு வந்தது... அந்த நாரை பிய்த்து எறிந்து விட்டு வீட்டுக்குள் செல்ல, எவரும் இல்லை.. அறிக்கனை தேடி ஏற்றிக்கொண்டு ஆத்திரம் கலந்த அழுகையுடன் வீட்டின் பின்புற மரங்களுக்குள் ஓரிடம் விடாமல் அலசிச்சென்றான்...

புதர்களுக்குள் சென்று "பஞ்சவர்ணம்... பஞ்சவர்ணம்..." என்று சத்தம் போட்டுக்கொண்டே அறிக்கனை மேலாக தூக்கி தூரத்தில் தேடிக் கொண்டிருக்க... காலில் எதோ தட்டுப்பட்டது.. குணிந்து அறிக்கன் ஒளியில் தட்டுப்பட்ட பொருள் என்னவென்று பார்க்க... ஓனர் திருச்சாமியின்  துண்டிக்கப்பட்ட தலை தனியாக கிடந்தது.. கண்ணை திறந்திருந்த படியே உயிர் நீத்திருந்தார் திருச்சாமி.


அடுத்த பதிவில் முற்றும்


Wednesday, August 15, 2012

தேவுடு ச்சேசின மனுஷுலு- Devudu Chesina Manusulu


Share/Bookmark
டேபுளு... chairருலு..வாஸ்துலு... சாஷ்த்ரலு,,,, சம்ப்ரதாயலு...  வாய மூடுலு.. தெரியுதுலு பல்லு... நா எப்ப தெலுங்கு படம் பாத்தாலும் என் நண்பன் இந்த டயலாக்க தான் சொல்லி தான் கலாய்ப்பான். அதுவும் ரவிதேஜாவ பாத்தாலே யார்ரா இவன் செம்ம காமெடியா இருக்கான்னு சிரிக்க ஆரம்பிச்சிருவாய்ங்க...  "போங்கடா டேய்... கழுதைக்கு  தெரியுமா கருவாட்டு  வாசனை" ன்னு நெனைச்சிக்குவேன். போன மாசம் தம்முக்கு அழைச்சிட்டு போன கடுப்பே இன்னும் தீரல... இந்த நெலமையில ரவிதேஜா படத்துக்கு நண்பன்  எங்க வரப்போறான்னு நெனைச்சிட்டு சிங்கம் சிங்கிளா ஆப்ரேஷன்ல எறங்குச்சி...

வக்காளி ஒரு தியேட்டர்லயும் டிக்கெட் இல்ல.. அப்புறம் தேவுடு மனசு வச்சதால நேத்து எஸ்கேப்ல எக்ஸ்ராவ ஒரு தியேட்டர் புக்கிங் ஓபன் பண்ணதால டிக்கெட் கெடைச்சுது. தாம்பரத்துலருந்து  எஸ்கேப் போயி படம் பாக்குறது என்னவோ நாடு விட்டு நாடு போயி படம் பாக்குறமாதிரி இருக்குப்பா. எத்தனை சிக்கல்..எத்தனை சிக்னல்.. எத்தனை டென்ஷன்.. எத்தனை போலீஸ்.. எத்தனை ஸ்பீட் ப்ரேக்கர்...  எத்தனை டேக் டைவர்ஷன்னு போயி பாக்குறவனுக்கு தான் கஷ்டம் தெரியும்..

 கஷ்டப்பட்டு தியேட்டர் உள்ள போனா என் சீட்டுல வேற ஒருத்தன் உக்காந்துருக்கான். என்னாடான்னு கேட்டா "if you don mind can you please sit in B3" ன்னான். சரி தனியா உக்காந்து பாக்கபோற நாயி எங்க உக்காந்தா என்னன்னு நானும் சரின்னு கெளம்புனா, அவன் உடனே பக்கத்துல உள்ளவன்ட்ட  "வீடு சிங்கிலே" ன்னான். ஆஆஆ.. உனக்கும் தெரிஞ்சி போச்சாடா.. மொகரைய பாத்தா உடனே  கண்டுபுடிச்சிடுராய்ங்க. தனியா இருந்தா என்னென்ன அவமானங்கள தாங்க வேண்டியிருக்கு.. சரி படத்துக்கு வருவோம்.

தெலுகுல போக்ரி, பிஸினஸ்மேன்னு பல ஹிட்டுகள குடுத்த பூரி ஜெகன்நாத் ரவி தேஜாவ வச்சி காமெடி பண்ணியிருக்கும் படம் தான் இந்த தேவுடு சேசின மனுஷுலு... ரவிதேஜாவுக்கு கடந்த மூணு நாலு படங்கள் மரண அடி வாங்குனதால இந்தாளு எடுக்குற படமாச்சும் கண்டிப்பா நல்லாருக்கும்னு நெனைச்சி போனதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். எதோ கடனுக்குன்னு  என்னென்னமோ எடுத்து வச்சிருக்காய்ங்க. வக்காளி எங்த தெலுங்கு படத்துலயுமே வில்லன் ஹைத்ராபாத்ல இருக்க மாட்டேங்குறான்பா. அதுவும் இந்த பூரி ஜெகன்நாத் படத்துல இருக்கவே மாட்டன் போலருக்கு. மலேசியா தான். பாங்காக் தான்.

படத்தோட 1st பாக்கும்போது கிட்டத்தட்ட நம்மூரு குருவிய திரும்ப பாக்குற மாதிரி இருந்துச்சி கருமம். ரவிதேஜாவ பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை. வழக்கமான பாணில நடிச்சிருக்காரு. ஆனா வழக்கத்தைவிட காமெடி வசனங்களும் ஆக்சன் ப்ளாக்ஸும் கொஞ்சம் கம்மி தான். இவருக்கு ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு டைட்டில்... மாஸ் ராஜா.. மாஸ் மஹாராஜான்னு வித விதமா போடுவாங்க. இந்த படத்துல என்ன போட போராய்ங்கன்னு எதிர் பாத்துட்டு இருந்தப்ப வெறுமன ரவிதேஜான்னு போட்டு ஆஃப் பண்ணிட்டாய்ங்க.

ப்ரகாஷ்ராஜ் வழக்கம்போல கலக்கல். முதல் பாதில மறக்குறா வியாதி உள்ள கேங்க்ஸ்டரா அவரு பண்ற லூட்டி செம. முதல் பாதி எதோ ஓடுறதே இவராலதான். அதே போல ரெண்டவது பாதில  இலியானாகிட்ட தங்கச்சி செண்ட்டிமெண்ட்ட பொழிஞ்சி அழுகுறதும் டாப்பு. க்ளைமாக்ஸ்ல ரவிதேஜா இலியானா ப்ரகாஷ்ராஜ் மூணுபேரும் சேந்து ஒரு காமெடி பண்ணுவாங்க பாருங்க. படத்துக்கு  தேவையே இல்லாதமாதிரி இருந்தாலும் மனசு விட்டு சிரிக்கிற மாதிரி இருந்துச்சி.

நாலு நல்லி எழும்பு... ஒரு முள்ளெலும்பு ஒரு அரைக்கிலோ கறி.. இதான்ங்க இந்த படத்தோட ஹீரோயின். அட இலியானாவதான் சொன்னேன். இது உடம்ப மெயிண்டெய்ண் பண்ற ரேஞ்ச பாத்தா கூடிய சீக்கிறம் பாடம் பண்ண மனுஷ உருவமா இத அப்புடியே மியூசியம்ல வச்சிறலாம் போல.... சில சீன்ஸ்ல ஃபாரின் ஃபிகர் ரேஞ்ல பட்டய கெளப்புனாலும் பல சீன்ல லோக்கல் பிச்சக்காரி மாதிரி செம கேவலாம இருக்கு.

பாட்டும் ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. நம்ம ஊரு "அக்கா மக அக்காம எனக்கொருத்தி இருந்தாடா" பாட்ட குத்துப்பாட்டா ரீமிக்ஸ் பண்ணிருக்காய்ங்க. ஒரு படம் நல்லாருந்தா எல்லாமே நல்லாருக்கு.. நல்லா இல்லைன்னா எதுமே நல்லா இருக்க மாட்டேங்குது. கருமம் காமெடியும் நல்லால்ல.. ஸ்கிரீன் ப்ளேயும் சரி இல்லை. ரவி தேஜாவுக்கு ஏழரை உச்சத்துல இருக்காரு போல. படம் பாத்து  முடியும் போது "ஆமா இது ஆக்சன் பிலிமா இல்லா காமெடி பிலிமா" ன்குற கன்பீசன் தான் மிஞ்சுது 

இதுதான் கடுப்புன்னா, படம் முடிஞ்சி வண்டிய எடுத்துட்டு வெளிய வந்தா பார்க்கிங்குக்கு "சார் 80 ரூவா குடுங்க"ன்னாய்ங்க. டேய் நா என்ன கார்லயாடா வந்தேன். ஏண்டா இப்டி கொல்றீங்க...இதுவரைக்கும் உங்ககிட்ட பார்க்கிங்க்கு குடுத்த காசுல ஒரு புது ஹோண்டா சிட்டியவே வாங்கிருக்கலாம்டா... வக்காளி இனிமே உங்க ஏரியாவுக்கு படம் பாக்க வந்தா பஸ்ல வர்றேன்... இல்லநடந்தே வர்றேன்.."ன்னு காச குடுத்துட்டு வயித்தெரிச்சலோட வீட்டுக்கு வந்தேன்.


Wednesday, August 8, 2012

துவாரமலை இரவுகள்-2


Share/Bookmark
குறிப்பு:  இந்த பதிவில் வரும் சம்பவங்கள் கதாப்பாத்திரங்கள் யாவும் கற்பனையே இதன் முந்தைய பகுதியை  படிக்க இங்கே கிளிக்கவும்.*******                                                        இரவு முழுவதும் சிந்தனையிலேயே எப்போது தூங்கினோம் என்பது தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகத்திற்கு காலை 6.30 க்கு மனைவி வரக்காப்பியுடன் எழுப்பும் போதுதான் விழிப்பு வந்தது. "என்னங்க... நேரமாகிப் போச்சு... எழுந்திரிங்க" என்று கையில் வைத்திருந்த டம்ளரை பக்கத்தில் வைத்தாள்.  உடம்பை சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்த ஆறுமுகத்திடம் "என்னங்க.. எப்பவும் நீங்க என்னை எழுப்பி விடுவீங்க.. இன்னிக்கு இப்புடி தூங்குறீங்க" என்று கேட்க "ராத்திரி சரியா நித்திரை இல்லடி"என்று பதில் சொல்லிக்கொண்டே எழுந்து சென்று கதவை திறந்தான். அதிகாலை குளிர் உடலில் சுளீர் என்று அடித்தாலும் லேசான வெளிச்சமும் சேர்ந்து ஒரு புத்துணர்வை தந்தது.

பத்து நிமிடத்தில் மற்ற வேலைகளை முடித்துவிட்டு, கொடியில் தொங்கிய ஒரு பழைய சாலைவையை எடுத்து போர்த்திக்கொண்டு வெளியில் கிளம்பினான். "எங்கங்க இவ்வளவு வெல்லனமா கெளம்பிட்டீங்க?" என்ற பஞ்சவர்னத்திடம், "அடுத்த பறிப்புக்கு நா போய் ஆள் சொல்லிட்டு வந்துடுறேன்" என கூறிவிட்டு மலையம்மன் கோவிலை நோக்கி நடந்தான்.  ஏதோ சரியில்லை என்று மட்டும் ஆழ்மனது சொல்லிக்கொண்டே இருந்தது. 5 நிமிட நடையில் பாதையை சுற்றி மலையம்மன் கோவிலை அடைந்தான்.

சூளாயுதத்தில் முற்றிலும் காய்ந்து சருக்கிப்போன பழைய மாலைகள் ஒரு ஐந்தாறு தொங்கிக்கொண்டு இருந்தது. மலையம்மன் பாதத்திலும் சரி, கழுத்திலும் சரி சமீபத்தில் சூடப்பட்ட மலர்களோ மாலைகளோ ஏதும் இல்லை. ஆறுமுகத்திற்கு மறுபடியும் மூளை குதற ஆரம்பித்தது. உடனே பலி பீடம் அருகில் சென்று  பார்க்க, சமீபத்தில் எந்த விதமான பலியும் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சமீபத்திய  ரத்தக்கரைகள் ஏதுமின்றி காணப்பட்டது. சுற்றி முற்றி மண் தரையை ஒரு முறை நோட்டமிட்டான். மலையம்மனை மலைமக்கள் கண்டுகொண்டே பல நாட்கள் ஆகிப் போயிருந்தது தெரிந்தது. வந்ததற்கு மலையம்மனை கையெடுத்து கும்பிட்டு விட்டு பாதத்திலிருந்த விபூதியை சிறிது நெற்றியில் இட்டுக் கொண்டு புறப்பட்டான்.

கோவிலிலிருந்து ஒரு 50 அடி நடந்திருப்பான். "என்ன ஆறுமுகம்... காலைலயே அம்மனை பாத்துட்டு போக வந்துருக்க... எதாவது விஷேசமா?" குரல் கேட்டு ஆறுமுகம் திரும்ப 58 வயதான் வைத்தியர் குழந்தை சாமி பின்புறம் வந்துகொண்டிருந்தார். உடனே நடையை நிறுத்தி சிறு புன்முறுவல் பூத்துவிட்டு  "அதெல்லாம் ஒண்ணுமில்லையா.. சும்மா இந்த பக்கம் வந்தேன்... அதான் அம்மனை தரிசிச்சிட்டு கெளம்புறேன்" என்றான்.

"ஆமா ராத்திரி என்ன ரொம்ப நேரம் அறிக்கன் விளக்க வச்சிகிட்டு உங்க வீட்டுக்கு வெளிய நின்னுகிட்டு இருந்த போலருக்கு" என்றார் குழந்தை சாமி...

"ஆ..ஆமாய்யா... . உங்களுக்கு எப்புடிய்யா தெரியும்"...

"அட அது ஒண்ணுமில்லைப்பா.. நேத்து ராத்திரி நடுச்சாமத்துக்கு மேல நம்ம ராமசாமி மயனுக்கு பயங்கர காதுவலி... அய்யோ அம்மான்னு கத்த ஆரம்பிச்சிட்டான்.. அதான் ரெண்டு பச்சலை புடுங்கிட்டு போலாம்னு இந்த பக்கம் வந்தேன்.. அம்மன் காட்டுக்கு பக்கத்துலதான் நெறைய செடி மண்டி கெடக்குதே...  வரும்போது பாத்தேன்.. யாரோ விளக்கோட நின்னாங்க... சரி நீயாதான் இருக்கும்னு நெனைச்சேன்... திரும்ப பச்சைல பற்றிச்சிட்டு பாத்தப்புறமும் வெளிச்சம் தெரிஞ்சிச்சி... அதான் ரொம்ப நேரம் நின்னியேனு கேட்டேன்... ஆமா என்ன விஷயம்"

"அது ஒண்ணும் இல்லையா... சின்னவன் நடுச்சாமத்துல  வெளிக்கு போகனும்னு சொன்னான்...  அதான் அவனை விட்டுட்டு பக்கதுல  நின்னுகிட்டு இருந்தேன்...."

"சரி சிரி... நடுச்சாமத்துல இப்புடி வெளியல்லாம் வந்து நிக்காதீங்கையா... ஒத்தை வீட வேற இருக்குது.. காத்து கருப்பு நடமாட்டம் எதுவும் இருக்கும்.."

ஆறுமுகம் சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு  " என்னையா நீங்களே இப்புடி காத்து கருப்புன்னு பேசிகிட்டு" என்றான்.

"ஆறுமுகம்... சொல்றனேன்னு தப்பா நெனைச்சிக்காதையா.... நீங்க இப்ப குடியிருக்க எடம்தேன் நாப்பது அம்பது வருஷத்துக்கு  முன்னால சுடுகாடா இருந்துச்சாம்... எங்க அய்யன் என்கிட்ட அடிக்கடி  சொல்லிருக்கு. ஏற்கனேவே இத வச்சிருந்த தட்சிணாமூர்த்தி கூட இந்த எடத்துல நிறைய ப்ரச்சனை இருக்கதால தான் வித்துட்டு எங்கயோ பொய்ட்டாருன்னு எல்லாரும் பேசிக்கிறாய்ங்க... உன் நல்லாதுக்காக சொல்றேன்... தப்பா நெனைச்சிக்காதையா..."

"ச்ச...ச்ச...அதுனால என்னையா... உங்கள போய் தப்ப நெனைப்பனா.. அடுத்தவுக நல்லருக்கனும்னு  நெனைக்கிறவுகல்ல நீங்களும் ஒருத்தரு.... இனிமே இதுமாரி நடக்காம பாத்துக்குறேன்யா" என்று சொல்லி வைத்தியரை கழட்டி விட்டுவிட்டு வீட்டுக்கு நடையை கட்டினான். கோழித்தலை கிடந்தது மனதிற்கு உறுத்தலாக இருந்தாலும் வைத்தியர் சொன்ன சுடுகாடு கதைகளை எண்ணி மனதுக்குள்  நகைத்துக்கொண்டே வீட்டை நோக்கி வந்தவனுக்கு சிறிய அதிர்ச்சி...

எஸ்டேட் ஓனர் திருச்சாமி அய்யாவின் குதிரை வண்டி வீட்டு முன் நின்று கொண்டிருந்தது. "என்ன போனவாரம் தானே எஸ்டேட்டை பாத்த்துட்டு போனார்... வழக்கமா மாசம் ஒருதடவ தான் வருவார். இப்போது உடனே இன்னிக்கு வந்துருக்கார்... என்ன  விஷயமா இருக்கும்?" என மனதுக்குள் நினைத்துக் கொண்டு லேசான ஓட்டத்துடன் வீட்டை அடைந்தான். பஞ்சவர்ணம் திருச்சாமி அய்யாவை உட்கார வைத்து வரக்காப்பியை கையில் கொடுத்திருந்தாள். ஆறுமுகத்தின் மகன்கள் இருவரும் திருச்சாமியின் அருகில் நின்று அவர் வாங்கி வந்த ரஸ்க் மற்றும் முருக்கு பாக்கெட்டுகளை கையில் வைத்திருந்தனர்.

குதிரைவண்டிக்கு அருகிலேயே திருச்சாமியிடம் வேலைசெய்யும் கோவிந்தன் நின்றிருந்தான். இவன்  ஏற்கனவே இந்த எஸ்டேட்டை வைத்திருந்த தட்சினாமூர்த்தியிடம் வேலை செய்தவன். திருச்சாமி  இவன் மூலமாகதான் குறைந்த விலைக்கு இந்த எஸ்டேட்டை வாங்கியதாக பரவலான பேச்சு.  எப்போதும் திருச்சாமியின் நிழல் போல கூடவே இருப்பவன்.

"வா ஆறுமுகம்...என்ன காலைலயே வெளிக்கெளம்பிட்ட போலருக்கு..." என்றார் திருச்சாமி..

"இல்லையா... இங்கதான் பக்கத்துல ஒரு சின்ன வேலையா பொய்ட்டு வந்தேன்.. நீங்க என்னையா இப்புடி திடீர்னு" என்றான்.

"ஏன் வரக்கூடாதா..."

"அய்யயோ... அதெல்லாம் இல்லையா... உங்க எடம் நீங்க எப்பவேணா வரலாம்..." என்றான் சிறிது பயத்துடன்

"ஹ்ம்ம்ம்.. ஒண்ணும் இல்ல ஆறுமுகம்... இங்க பக்கத்துல ஒரு சின்ன வேலை... அதான் அப்டியே  இந்த பக்கம் உன் குழந்தைங்களையும் பாத்துட்டு போலாம்னு வந்தேன்.." என்று சொல்லிக்கொண்டே எழுந்து வீட்டின் பின் பக்கம் நடந்து சென்று சுற்றி முற்றி பார்த்தார்.

"ஹ்ம்ம்ம்.... பரவால்லையே.. வீட்ட நல்லா சுத்தமாதான் வச்சிருக்கீங்க... இது என்ன மரவள்ளிக் கெழங்கா.... கெழங்கு புடுங்கும் போது எனக்கும் கொஞ்சம் குடுப்பா.... " என்றார் லேசாக  சிரித்துக் கொண்டே..

"என்னய்யா இது... உங்களுக்கு இல்லாததா... அது எதோ என் வீட்டுக்காரி ஊணி வச்சி பாத்துட்டு  இருக்கா..."

"ஹ்ம்ம்ம்... சரி சரி... நேரம் ஆயிருச்சி... நா கெளம்புறேன்... தேயிலை பறிக்கலாம் போல தெரியுதே.. ரெண்டு மூணு நாள்ல பறிச்சி அனுப்பி விடு..." என்று கூறிவிட்டு "கோவிந்தா... கெளம்பலாமா..." என கூறிக்கொண்டே வண்டிக்கு சென்றார். வண்டி புறப்பட்டு செல்லும் வரை வாசலில் நின்று கொண்டே இருந்த ஆறுமுகம் வண்டி மறைந்த பின்பு லேசான சோர்வுடன் ஸ்டூலில் உட்கார்ந்தன்...

"ஏங்க... இன்னொரு டம்ளர் காப்பி கொண்டு வரவா" என்ற பஞ்சவர்ணத்திடம் ஹ்ம்ம்ம்ம்.... " கொண்டு வா" என்று சொல்லிக்கொண்டே இரவு நின்ற இடத்தை லேசாக நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்...

பொழுது சாய்ந்தது... அன்றைய நாளும் ஏனைய நாட்களை போலவே மந்தமாகவே நகர்ந்திருந்தது.. டவுனுக்கு செல்லவேண்டும் என்ற யோசனை கடும் பனியால் தள்ளிபோடப்பட்டது. இரவு  ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கசென்றாலும் மகன்களுக்கு கதைகள் சொல்லி தூங்க வைப்பதற்குள் மணீ பத்தை தாண்டியிருந்தது...

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது திடீரென யாரோ எழுப்புவது போன்றதொரு உணர்வு... பஞ்சவர்ணம்  மிக லேசான குரலில் "என்னங்க... என்னங்க" என்றாள்...

"என்....னடி......"

"என்னங்க... நம்ம வீட்டு பின்னால எதோ சத்தம் கேக்குதுங்க... "

அரைத்தூக்கத்தில் இருந்தவனுக்கு முகத்தில் ஐஸை கொட்டியது போல தூக்கம் பறந்தோடியது.....

"என்னது... சத்தமா... அதெல்லாம் ஒண்ணும் இருக்காது... பேசாம படு"

"இல்லைங்க... ரொம்ப நேரமா கேக்குது... யாரோ நடக்குற மாதிரி சத்தம் கேக்குது" என்றவுடன் பேச்சை நிறுத்திவிட்டு காதை கூர்மையாக்கினான் ஆறுமுகம்..

............................நிசப்தம்....அவன் இதயம் துடிக்கும் சத்தமே அவனுக்கு அளவுக்கு...

இருபது நொடி...முப்பது நொடி..... எந்த சத்தமும் கேட்கவில்லை... பஞ்சவர்னத்தை எதாவது சொல்லி திட்டி விடலாம் என்று நினைக்கும் போது அந்த சத்தம் கேட்டது...

யாரோ பேப்பரில் காலை வைப்பது போல... இரண்டடி எடுத்து வைத்தது போல சத்தம் கேட்டுவிட்டு பிறகு நின்றது.. அதற்கேற்றார் போல வெளியில் கூண்டில் வைக்கப்பட்டிருந்த கோழிகள் "ப்க்...ப்க்... ப்க்..ப்க்" என்று ஒண்றாக சத்தத்தை எழுப்பி நிறுத்தின.. வழக்கமாக இரவு நேரத்தில் கோழிகள் பாம்புகளையோ பூனைகளையோ பார்க்கும் போது மட்டுமே ஒலி எழுப்பும்.

"கேட்டீங்களா... நா சொன்னேன்ல..." என்றாள் பஞ்சவர்ணம் மிக மெல்லிய குரலில்.

உடனே ஆறுமுகம் ஒலி எழுப்பாமல் மெல்ல எழுந்து கைகளால் தடவி தீப்பெட்டியை தேடி எடுத்து அறிக்கன் விளக்கை ஏற்றினான். எழுந்து வெளியில் செல்ல முயலும் போது "இருங்க நானும் வரேன்" என்றாள் பஞ்சவர்ணம்...

"நீ பேசாம இங்கயே இரு... நா பாத்துட்டு வர்றேன்... "என்று ஆறுமுகம் தடுக்க "தனியா போகவேணாம் இருங்க நானும் வர்றேன் என்று சொல்லிவிட்டு கூடவே எழுந்தாள்.

கதவை சத்தம் வராமல் மெல்ல திறக்க, குளிர் உறைய வைத்தது. மெதுவாக ஆறுமுகம் முன்னே  செல்ல பின் தொடர்ந்து சென்றாள் பஞ்சவர்ணம்...

அறிக்கனை நன்கு தலை உயரத்தில் தூக்கி நிறுத்தி மேலோட்டமாக ஒருமுறை சுற்றிப்பார்த்தான்... எவரும் இருப்பதாக தெரியவில்லை.. மெதுவாக அடிஎடுத்து வைத்து சென்று கோழிக்கூண்டை பார்த்தான்.. வெளிச்சத்தை பார்த்த அத்தனை கோழிகளும் கண்களை அகல விரித்து ஒடுங்கியபடி அறிக்கனை  வெறித்தன. மரவள்ளி கிழங்கு செடிகளுக்குள் எதாவது இருக்கின்றதா என ஒருமுறை நன்கு பார்த்து விட்டு திரும்பிய நேரம் பின்னால் இருந்த மரபுதருகுள் எதோ சல சல வென ஆடும் சத்தம் கேட்க, ஆறுமுகத்திற்கும் பஞ்சவர்ணத்திற்கும் உமிழ்நீர் இறங்க மறுத்தது.. அதுவரை தனியா நின்ற பஞ்சவர்ணம் சற்று அருகில் வந்து ஆறுமுகத்தின் கையை பற்றினாள்... "என்னங்க வாங்க போயிடலாம்...எதுவா இருந்தாலும் காலைல வந்து பாத்துக்கலாம்" என்றாள்..

"ஏ சும்மா இருடி.. எவனோ நம்மகிட்ட விளையாட்டு காமிச்சிட்டு இருக்கன்.. இரு பாப்போம்" என்று  அருகிலிருந்த ஒரு நீளமான தடியை கையில் எடுத்துக்கொண்டு ஒரு கையில் அரிக்கனையும் பிடித்துக் கொண்டு சத்தம் கேட்ட இடத்தை நோக்கி நகர்ந்தான். மரவள்ளி செடிகளை தாண்டி அந்த புதரை நெருங்க நெருங்க இருவருக்கும் நெஞ்சத்தில் பயம் அதிகரித்துக் கொண்டே சென்றது... அதுவரை லேசாக அசைந்து கொண்டிருந்த அந்த புதர்செடி ஆறுமுகம் நெருங்க நெருங்க மெல்ல மெல்ல அசைவை நிறுத்தியது...

புதருக்கு 5 அடி பக்கத்தில் இருவரும் நின்றபடி மேலும் முன்னேறலாமா வேண்டாமா என்ற யோசனையில் சிறிது நேரம் நின்றிருந்தனர். ஆறுமுகம் கையில் வைத்திருந்த அந்த தடியால் அந்த புதர்செடியை இரண்டு மூன்று தட்டு தட்டினான்.. எந்த அசைவும் இல்லை... தைரியமாக முன்னேறி  அந்த புதர்செடியை கையால் விளக்க... அரிக்கன் விளக்கிள் ஒளியில் அவன் பார்த்தது கண்களில் கலவரத்தை உண்டு பண்ணிது... கிடப்பது என்னவென்று கண்டுபிடிக்கவே சிறிது நேரம் ஆனது...

தலை துண்டிக்கப்பட்ட ஒரு ஆட்டின் உடல்... வெட்டப்பட்ட கழுத்திலிருந்து இன்னும் ரத்தம் சொட்டிக் கொண்டிருக்க அதன் கால்கள் வழியே லேசான அசைவில் மீதமிருந்த உயிர் வெளியேறிக் கொண்டிருந்தது.

ஆறுமுகம் அரிக்கனை இன்னும் சற்று தூக்கி பிடிக்க அந்த ஆட்டின் உடலுக்கு ஒரு முன்றடி தாண்டி வாய் முழுவதும் சணலால் கட்டப்பட்ட  நிலையில் துண்டிக்கப்பட்ட அதன் தலை விழியை திறந்தபடி உயிர் நீத்திருந்தது.

அடுத்த பதிவில் தொடரும்

Monday, August 6, 2012

துவாரமலை இரவுகள்


Share/Bookmark
1963, செப்டம்பர் மாதம் . குன்னூர் அருகே உள்ள துவாரமலை கிராமம்... பரப்பளவிலும், மனித எண்ணிக்கையிலும் மிக சிறியதொரு ஊர். தெருக்களோட அமைந்த வீடுகள் எதனையும் காண முடியாது.. சிறு சிறு எஸ்டேட்டுகளை ஒட்டி ஐந்தாரு வீடுகள் கொண்ட குழுக்களாகவே மக்கள் வாழ்ந்து வந்தனர்... மின்சாரம் என்னும்  வார்த்தையையே அறிந்திராதவர்கள். குளிர் என்பது புதிய விஷயமல்ல.. இருப்பினும் குளிர்காலங்களில் இரவில் வாழ்க்கையை ஓட்டுவதே பெரும் பாடுதான்.  துவாரமலையில் கல்வி கற்பதற்கான எந்த  வசதிகளும் இருப்பதாக தெரியவில்லை... கிராமத்தில் இருந்த அனைவருக்கும் அங்கிருந்த எஸ்டேட் வேலைகளே உணவளித்துக் கொண்டிந்தது... எந்த அளவு மக்கள் தொகையில் குறைந்திருந்தனரோ அதே அளவு ஒற்றுமையிலும் குறைந்தே காணப்பட்டனர்.

ஒன்று பட்டு இருப்பது வருடம் ஒருமுறை நடக்கும் குலதெய்வம் மலையம்மன் பூசைக்கு மட்டுமே.. காலம் காலமாக துவாரமலை கிராம மக்களின் குலதெய்வம் இந்த மலையம்மன்... ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு எஸ்டேட்டை ஒட்டி அமைந்திருக்கிறது இந்த குலதெய்வகோவில். பார்ப்பதற்கு மற்ற கோவில்களை போலல்லாமல் மலையமன் நிற்பது போலான ஒரு 12 அடி சிலைக்கு சிறு மேற்கூரை அமைத்திருந்தனர்..  எதிரே சில ஈட்டிகளும் சூளாயுதங்களும் தரையில் நட்டு வைக்கப்பட்டிருந்தன. எந்த அளவு கடவுள் நம்பிக்கை இருந்ததோ அந்த அளவு மூட நம்பிக்கைகளும் பில்லி சூன்யங்களும் மிகுந்திருந்த காலம் அது.

இதுபோன்ற மூடநம்பிக்கைகளில் சிறிதும் நம்பிக்கையில்லாத கடவுள் நம்பிக்கை கொண்ட ஒருவன்  ஆறுமுகம் . திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தகப்பன். நிலையான வாழ்க்கை வாழாமல் வேலை கண்ட இடம் வீடாக எண்ணி, அங்கங்கே வேலை செய்யும் இடங்களுக்கெல்லாம் குடும்பத்துடன் மாறிக்கொண்டிருந்த ஆறுமுகத்திற்கு  கடந்த ஆறு மாதங்களாக ஒரு நிலையான இடத்தில் வாழும்  வரத்தை அளித்தவர் திருச்சாமி அய்யா...

எஸ்டேட்பணிகளை கவனிப்பதற்காக ஆறுமுகத்தின் குடும்பத்திற்கு ஒரு சிறிய குடிலை ஏற்படுத்திக்கொடுத்து எஸ்ட்டேட்டில் தங்க வைத்திருப்பவர்.  பக்கத்து ஊர்காரான 40 வயது திருச்சாமி  6 மாதங்களுக்கு முன்னர்  இந்த எஸ்டேட்டை, இந்த எஸ்டேட்டை வைத்திருந்த தட்சிணா மூர்த்தியிடமிருந்து  குறைந்த விலைக்கு ஏமாற்றி வாங்கிக்கொண்டதாக ஊருக்குள் பரவலான பேச்சு. தட்சிணாமூர்த்தியும்  ஊரைவிட்டு சென்று விட்டதாக ஊருக்குள் செய்தி பரவியிருந்தது.

மலையம்மன் கோவிலுலிலிர்ந்து மிக அருகிலேயே அமைந்திருந்தது அந்த எஸ்டேட். பரப்பளவில் மிகப் பெரியது என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்கு பெரிய இடம் தான். அதன் ஒரு பகுதி சமதளமாகவும் எனைய பகுதிகள் மலைச்சரிவாகவும் இருந்தன.. சமதளப்பரப்பின் ஒரு சிறிய பகுதியில்  ஆறுமுகத்தின்  குடிசை. குளிர் தாங்குவதற்காக குடிசையின் பெரும்பகுதி தகரங்களாலும் மரங்களாலும்  உருவாக்கப்பட்டிருந்தது. குடிசைக்கு பின்புறம் 4 மாதங்களுக்கு முன் ஆறுமுகத்தின்  மனைவி பஞ்சவர்ணம்  நட்டு பராமரித்து வரும் மரவள்ளி கிழங்கு செடிகள் நன்கு அடந்து வளர்ந்திருந்தன. அவைகளுக்கு பின்னர் ஒரு 50 மீட்டர் நீளத்திற்கு நெடுநாட்களாக அழிக்காமல் வளரவிடப்பட்ட சில அடசலான காட்டு மரங்களை  தொடர்ந்து மலைச்சரிவு ஆரம்பிக்கிறது. வீட்டிற்கு பக்கவாட்டில் கோ வீட்டில்  வளர்க்கும்  கோழிகளை அடைக்க  சிறிய கோழி கூண்டு ஒன்று இருந்தது பகல் நேரங்களில் ஆறுமுகத்தின் மகன்களுக்கு அந்த கோழிகளை திறந்து விட்டு பார்த்துக்கொள்வதே வேலை. ஒவ்வொரு கோழிக்கும் அவர்களுக்கு pபிடித்தமான பெயர்களை இட்டு பார்த்துக் கொண்டிருந்தனர் 

ஆறுமுகத்தின்  குடும்பத்திற்கு வேலை அந்த சரிவுகளில் பயிரிடப்பட்டுள்ள தேயிலைகளை  பராமரிப்பது, தேவையான சமயங்களில் பணியாட்களை அழைத்து அவைகளை பறித்து குதிரை வண்டிகளில் ஏற்றி அனுப்பிவிடுவதே. திருச்சாமி மாதத்திற்கு ஒருமுறை எஸ்டேட்டுக்கு வந்து பார்த்தாலே பெரிய விஷயம். அவருக்கு இது மட்டுமே தொழில் அல்ல. ஆனால் எப்பொழுது வந்தாலும் ஆறுமுகத்தின்  மகன்களுக்காக எதேனும் வாங்கி வந்துவிடுவார். "உன் மகனுகளுக்காக  தான் உன்ன இங்க வச்சிருக்கேன் ஆறுமுகம் " என்று அவரே பலமுறை கூறியிருக்கிறார்.

அன்று மாலைவரை அனைத்தும் நன்றாகவே சென்று கொண்டிருந்தன. ஆறுமுகத்தின்  பெரிய மகனுக்கு வயது 9 இளைய மகனுக்கு வயது 6. வழக்கத்தை விட அன்று சூரியனை இருள் விரைவாகவே கவ்வி விட்டது. சாரலுடன் கலந்த பனி காற்று அடிக்கவே 6 மணிக்கெல்லாம் அனைவரும் வீட்டில் அடைந்தனர். ஆறுமுகம்  பராமரிக்கும் எஸ்டேட் மற்ற குடியிருப்பு பகுதிகளிலிருந்து தனித்தே இருந்தது. அடுத்த வீட்டை பார்க்க வேண்டுமானால் குறைந்தது 300 மீட்டர் தூரம் கடக்க வேண்டும். இரவு மனைவி  செய்திருந்த சோளக்கூழை குடித்துவிட்டு 9 மணிக்கெல்லாம் நால்வரும் நித்திரையில் ஆழ்ந்தனர்.

ஆழ்ந்த தூக்கத்திலிருந்த ஆறுமுகத்திற்கு  திடீரென விழிப்பு வந்தது. விழித்த கணத்திலேயே காரணத்தை உணர்ந்தான்.. இயற்கை அன்னை அடிவயிரை தட்டி எழுப்பியிருக்கிறாள். மெல்ல எழுந்து இடுப்பில்  இருந்த வேஷ்டியை ஒருமுறை அவிழ்த்து கட்டிக்கொண்டு இரண்டடி எடுத்து வைத்தான். வீட்டுக்குள் கும்மிருட்டு. மெல்ல கைகளை முன்னே வத்து தடவிச்சென்று கதவை மெல்ல திறக்க, பனிக்காற்று சுள்ளென உடம்புக்கு குளிரை கொடுத்தது, நிலவின் வெளிச்சம் போதுமானதாக இல்லை.

 மேகங்கள் நிலவொளியை தடுத்திருந்தன. நிலவின் இருப்பிடத்தை கண்டு மணி இரண்டை கடந்திருக்கலாம் என ஊகித்தான். மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து குடிலின் பின்பகுதியில் மரவள்ளி கிழங்கு செடிகளுக்கு சென்று  சிறுநீர் கழித்துவிட்டு திரும்புகையில் காலில் :"நறுக்" என்று ஏதோ மிதிபட்டது. உடனே முழுவதும் காலை கீழேபதிக்காமல் சட்டென எடுத்தான். "அய்யோ,,, ஏதோ தவளையை மிதித்துவிட்டோம் போலருக்கே" என்று நினைத்துக் கொண்டு மறுஅடியை சற்று தள்ளி வைத்தான்,

மெல்ல நடந்து மறுபடி குடில் கதவை அடைய, மனதில் ஏதோ உறுத்திக் கொண்டிருந்தது, எதை மிதித்தோம். தவளையா இல்லை வேறு எதுவுமா? எதும் பாம்பாக இருக்குமோ? என ஒரே குழப்பம். சரி எதற்கும் ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம் என முடிவு செய்து வீட்டுக்குள் சென்று அரிக்கன் விளக்கை தேடிப் பிடித்தான். மனைவி குழந்தைகளுக்கு தொந்தரவில்லாத வண்ணம் மறுபடி வெளியேறி அரிக்கன் திரியை சற்று மேலேற்றிவிட்டு, வீட்டின் பின் பகுதியை அடைந்தான், தரையில் வெளிச்சத்தை பாய்ச்சி அங்குலம் அங்குலமாக தான் முன்பு நின்ற இடத்தில் தேட சட்டென ஒரிடத்தில் பார்வை நிலைகொண்டது.  சற்று முன்னரே வெட்டப்பட்ட ஒரு சேவலின் தலை ரத்ததுடன் அங்கு கிடந்தது. சுற்றி சில மஞ்சள் நிற செவ்வந்தி பூக்கள்.

 ஆறுமுகத்திற்கு சிறிது நேரம்  உடலிலே ஒரு மாதிரியாக ஆனது. யார் இப்படி செய்தது? ஒரு வேளை கூண்டிலிருந்து ஏதேனும் கோழி வெளியில் வந்து அதனை பூனைகள் இவ்வாறு  கொன்றிருக்குமா? அப்படியாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டு அருகிலிருந்த கோழிக்கூண்டை நோக்கி சென்றான். விளக்கை சற்று கீழிறக்கி உள்ளே இருந்த கோழிகளை எண்ணிப் பார்க்க 7 கோழிகளும் சரியாக இருந்தன. மறுபடியும் யோசனையாக இருந்தது. சரி எதுவாக இருந்தாலும்  காலையில் பார்த்துக்கொள்ளலாம். இதனை மனைவி எதும் பார்த்துவிட்டால்  பெரிய அமர்க்களம்செய்து விடுவாள் என்று எண்ணி, அந்த சேவலின் தலையை கையால் எடுத்து தூரமாக மலைச்சரிவில்  எரிந்தான்.

குழப்பத்துடனே வீட்டுக்கதைவை திறக்க, அரிக்கன் ஒளி பட்டு ஆறுமுகத்தின்  மனைவிக்கு லேசாக விழிப்பு தட்டியது.... தூக்கக்க லக்கத்திலேயே  "ஏன்னா..ச்சிங்க" என்றவளுக்கு "ஒண்ணும் இல்லை.... சும்மா ஒண்ணுக்கு பொய்ட்டு வந்தேன்" என்று சொல்லிவிட்டு அரிக்கைனை அணைத்துவிட்டு படுத்தான். தூக்கம் வர மறுத்தது. மூளையில் பல யோசனைகள் ஓடிக்கொண்டிருந்தன.   இதனை அப்படியே விட்டுவிடலாம் என நினைத்தாலும் ஏன் இந்த தலை இங்கு கிடந்தது? என்ற கேள்வி முன் வந்து நின்றது. தலை எப்படியோ வந்திருந்தாலும் சுற்றிக்கிடந்த பூக்கள் எப்படி?

 பூக்கள் என்றவுடன் சட்டென மூளையில் உதித்தது, சிலர் வெளியூர் பயணங்கள் செல்லும் போது மலையம்மனுக்கு நள்ளிரவு  பூசைகள் செய்துவிட்டு சொல்வதுண்டு. அப்படி ஏதேனும் பலிகொடுக்கப்பட்ட சேவல் தலையை  பறவைகள் ஏதேனும் தூக்கி வந்து போட்டிருக்கவேண்டும்.. சுற்றியிருந்த பூக்கள் ஏதேனும் மாலை நாரில் ஒட்டிக்கொண்டு வந்திருக்கலாம் என ஊகித்தான், காலையில் முதல் வேலையாக மலையம்மன் கோவிலை சென்று பார்க்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டே தூக்கத்தில் ஆழ்ந்தான்,
 
அடுத்த பதிவில் தொடரும்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...