Sunday, March 7, 2021

நெஞ்சம் மறப்பதில்லை (2021)


Share/Bookmark

 


( கொஞ்சம் ஸ்பாய்லர்ஸ்)

ஒரு கதையைப் படமாக்குவதில் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு பாணி இருக்கிறது. செல்வா சார் பாணியில் ஒரு ஹாரர் படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்பதே இந்த நெஞ்சம் மரப்பதில்லை.

செல்வா சாரின் கடைசி இரண்டு படங்கள் ஹாரர் வகையை சேர்ந்தது இல்லை என்றாலும்,  படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே நமக்கு அருகில் அமர்ந்திருப்பவர்கள்  வாயில் நுரை தள்ளியும், மூக்கில் ரத்தம் வழிந்தும் ஒவ்வொருவராகச் சாய்ந்தது நமக்கு ஒரு ஹாரர் ஃபீலைத்தான் கொடுத்தது.

இதேபோல சில வருடங்களுக்கு முன் மிஷ்கின் சாருக்கும் ஹாரர் படம் எடுக்க வேண்டும் என்கிற ஆசை வந்து ஒன்றை எடுத்தார். அதில் யார் பேய் என்று கண்டுபிடிப்பதே பெரும்பாடாகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் முகம் முழுக்க முடியால் மூடிக்கொண்டு ஒரே ஒரு கண்ணுடன் வரும் அந்த ஹீரோதான் பேய் என நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம் தான் வேறு ஒரு பேய் வந்தது.

சரி நெஞ்சம் மறப்பதில்லைக்கு வருவோம். முதலில் பத்துக்கும் குறைவான கதாப்பாத்திரங்களை வைத்து, பெரிய பொருட் செலவுகள், நிறைய லொக்கேஷன்கள் என எல்லாம் இல்லாமல் ரொம்ப சிம்பிளாக ஒரு திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் செல்வா சார். படத்தைப் பார்க்கும்போது அதிகபட்சம் 15 லிருந்து 20 நாட்களுக்குள் இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கலாம் போலிருக்கிறது. ஆனால் செல்வா சார் எத்தனை நாள் எடுத்தார் என தெரியவில்லை. ஒரு வேளை நமக்குத் தெரிந்த ஒரு லேயருக்கு 20 நாட்கள் ஆகியிருக்கலாம். ஆனால் நமக்குத் தெரியாமல் அவர் படத்தில் வைத்திருக்கும் hidden layers களுக்கு இன்னும் நேரம் ஆகியிருக்கலாம்.

வழக்கமாக ஹாரர் படங்கள் முதலில் ஜாலியாக ஆரம்பிக்கும். ஏதோ ஒரு சம்பவம் நடந்து, பேய் எண்ட்ரி ஆன பின்னர் படத்தின் மூட் மாறும். ஆனால் இது செல்வாசார் படமாச்சே. அதனால் படத்தில் பேய் வருவதற்கு முன்னரே பேய் படம் போலத்தான் ஆரம்பிக்கிறது.

எஸ்.ஜே. சூர்யாவின் வீடு,  வீட்டுக்கு அருகில் போடப்பட்டிருக்கும் கீற்று கொட்டகை, அவர் ஆஃபீஸ் செட்டப் என அனைத்திலும் ஒரு பிண எஃபெக்ட் தெரிகிறது..

எஸ்.ஜே. சூர்யா தனக்கென ஒரு தனி பானி வசன உச்சரிப்பை நியூ, அன்பே ஆருயிரே படங்களில் உருவாக்கியிருந்தார். அது அவருக்கு ப்ளஸ்ஸாகவும் அமைந்தது. ஆனால் இந்தப் படத்தில் அதே ஸ்லாங்கை கொண்டு வர முயன்று சற்று ஓவர் டோஸாகி எதோ கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சிவாஜி வாய்ஸ் ட்ரை பன்னுபவர் போல இருந்தது முதல் அரை மணி நேரத்தில்.

ஆனால போகப் போக டோஸை குறைத்துக்கொண்டு பட்டையைக் கிளப்பியிருந்தார். என்ன எஸ்.ஜே.சூர்யா ஒரு சைக்கோ மாதிரி இருக்காரு என நாம் நினைக்கும்போது, இரண்டாம் பாதியில் நந்திதாவின் பர்ஃபார்மென்ஸை பார்த்த பிறகு நாம் நினைத்தது தவறு என்பது புரிகிறது

பெரிய அளவில் டமால் டுமீல் என்று சவுண்ட்  எஃபெக்டில் பயமுறுத்தாமல், பேய்க்கு கிழிந்து போன முகமே வேண்டும் என்று மேக்கப்பிற்கு மெனக்கெடாமால், வெறும் ஹேர் ஸ்டைலில் மட்டுமே மிரட்டியிருக்கிறார்கள். அதாவது உயிருடன் இருக்கும்வரை ரெஜினாவிற்கு தலையை பின்னி விட்டிருக்கிறார்கள். செத்துப்போய் பேயான பிறகு பின்னாமல் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். A பேய் by செல்வராகவன் சார்.  

வேலைக்காரர்கள் அனைவரையும் தனது பவரை உபயோகித்து மாயாஜாலங்கள் செய்து பழிவாங்கிய பேய், எஸ்.ஜே. சூர்யா என்று வரும்போது “உன்னைக் கொல்ல எனக்கு துப்பாக்கியா?” என துப்பாக்கியை தூக்கி போட்டுவிட்டு ஹீரோவிடம் அடி வாங்கி சாகும் வில்லன் போல மேட்ரிக்ஸ் லெவலில் ஒரு சண்டை போடுறது. கர்நாடக சங்கீதத்தையும், ஹிந்துஸ்தானியையும் கலந்து கர்நாடகஸ்தானின்னு ஒரு புதுசா ஒண்ணு பண்ணிருக்கேன்னு வெந்நிற ஆடை மூர்த்து சொல்வது போல காஞ்சனாவையும் மேட்ரிக்ஸையும் கலந்து விட்டு எதோ புதிதாக முயற்சித்திருக்கிறார் செல்வா சார்.

படத்தில் நிறைய இடங்களில் செல்வா சாரின் பழைய ஃபார்மை உணர முடிந்தது. குறிப்பாக “கண்ணுங்களா செல்லங்களா” பாடல் சிட்சுவேஷனும் அது படமாக்கப்பட்ட விதமும் தாறு மாறு.

ரொம்ப சாதாரணக் கதையை செல்வா சார் தனது வித்யாசமான மேக்கிங்கினாலும், எஸ்.ஜே. சூர்யாவின் பர்ஃபார்மன்ஸினாலும் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் பெரும்பான்மையான பகுதி எனக்குப் பிடித்திருந்தது. நீச்சல் குள கிராஃபிக்ஸ் காட்சி, க்ளைமாக்ஸ் மேட்ரிக்ஸ் ஃபைட் என ஒரு சில விஷயங்களை தவிர்த்திருந்தால் இன்னும் கூட படம் நன்றாக இருந்திருக்கும்.

 

-அதிரடிக்காரன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...