Wednesday, April 29, 2020

தடயவியல் – Case 1 மாயமான பெண்!! – பகுதி 2


Share/Bookmark


முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும்!!

ஹெல்லா காணாமல் போன சம்பவத்தில் ஹெல்லாவின் கணவர் ரிச்சர்ட் Lie detector test இல் நிரபராதி என நிரூபனமானதும் காவல்துறை வேறு ஏதேனும் ஒரு துப்பிற்காக காத்திருந்தனர்.  அவர்கள்  எதிர்பார்த்ததும் விரைவிலேயே கிடைத்தது.

ஹெல்லா காணாமல் போன வாரத்தில் நல்ல பனிப்பொழிவு இருந்திருக்கிறது. சாலைகளில் பனியை அகற்றும் Snow Plow எனும் வாகன ஓட்டி ஒருவர், ஹெல்லா காணாமல் போன மறுநாள் அதிகாலை 3.30 க்கு சாலையின் ஒரு இடத்தில் Wood Chipper ஒன்று நின்றிருந்ததாகவும், ஆரஞ்சு வண்ண  மேலாடை உடுத்தியிருந்த ஒருவர் அதன் அருகில் இருந்ததாகவும், அதெ Wood chipper அடுத்த ஒரு மணி நேரத்தில் சற்று தொலைவிலுள்ள ஆற்றங்கரை ஓரமாக இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கிறார்.  உடனே காவல்துறை தகவல் தெரிவித்த ஓட்டுனரிடம், அந்த Wood chipper ஐ எந்த இடத்தில் பார்த்தாரோ அங்கு தங்களை அழைத்துச்செல்ல சொல்கின்றனர். ஓட்டுனரும் அழைத்துச் செல்கிறார். அவர் அழைத்துச் சென்ற இடம் ஹவுசடானிக் ( Housatanic River) எனும் நதியின் கரை.

காவல் துறையினர் அந்த நதிக்கரையினை அங்குலம் அங்குலமாகத் தேட ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் கண்ணுக்குக் கிடைத்ததெல்லாம் வெறும் மரத் துணுக்குகள் மட்டுமே. தேடுதல் வேட்டை நாட்கணக்கில் நீடித்தது. கடைசில் இத்தனை நாள் தேடுதலின் பலனாக அவர்களுக்குக் கிடைத்தது ஒரு லெட்டர் கவர். ஆம்.. அதன் பெறுநர் முகவரியில் இருந்தது  ஹெல்லாவின் பெயர்.

இன்னும் நதிக்கரையின் மரத்துணுக்குகளுக்கிடையே கூர்ந்து கவனித்து தேடும்பொழுது போலீஸாருக்கு கிடைத்தது, நீல நிற ஃபைபர் இழைகள் மற்றும் சிறிய வெண்மை நிற துணுக்குகள். அந்த வெண்மை நிற துணுக்குகளை ஆய்வுக்குட்படுத்திய பொழுது அவை மனித எழும்பின் பகுதிகள் என்பது தெரிந்தது. அதுமட்டுமல்லாமல் சிறிய உலோக குப்பி போன்ற ஒன்றும், நிறைய மயிரிழைகளும் நதிக்கரையோரம் மரத் துணுக்குகளுக்கிடையே கிடைத்தது. மேலும் Nail Polish போடப்பட்ட ஒரு கட்டை விரல் நகமும் போலீஸாருக்குக் கிடைத்தது.

எதோ ஒரு வகையில் ஹெல்லாவிற்கும் இந்த நதிக்கரைக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகிவிட, சோதனையை தீவிரப்படுத்தினர் காவல்துறை. நீரில் மூழ்கித் தேடும் diver கள் வரவழைக்கப்பட்டு, ஆற்றுக்குள் தேட ஆரம்பித்தனர். அந்த முயற்சியும் வீண் போகவில்லை.  சேதாரமடைந்த ஒரு Chain Saw ஆற்றுக்குள்ளிருந்து அவர்களுக்கு கிடைத்தது. சேதமடைந்த, அந்த Chain Saw வின் சீரியல் நம்பர் பகுதி வலுக்கட்டாயமாக சேதாரப் படுத்தப்பட்டிருந்தது போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை உண்டாக்கியது.


அந்த Chain Saw தடயவியல் துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மைக்ராஸ்கோப்பில் ஆய்வு செய்யப்படுகிறது. அதில் அவர்களுக்கு மேலும் சில தகவல்கள் கிடைக்கின்றன. அந்த Chain saw வின் பற்களுக்கிடையே மிக நுண்ணிய தசைத் துணுக்குகளும், ஒரு சில துண்டு துண்டான மயிரிழைகளும், நீல நிற ஃபைபர் இழைகளும் கிடைக்கின்றன. அந்த நீல நிற ஃபைபர் இழைகள் ஏற்கனவே கரையோரம் கிடைத்த நீல நிற ஃபைபர் இழைகளுடம் ஒத்துப்பொகிறது.

ஆனால் அந்த Chain Saw யாருடையது எனத் தெரியவில்லை. தெரியவேண்டுமெனில் அதன் சீரியல் நம்பர் தெரியவேண்டும். ஆனால் சீரியல் நம்பர் பகுதி சேதமடைந்திருக்கிறது. தடயவியல் துறையினர் விடுவதாக இல்லை. ஒரு குறிப்பிட்ட  ரசாயனக் கரைசல் மூலம் சேதாரமாக்கப்பட்ட மேல் பகுதியை நீக்குகிறார்கள். இப்போது அவர்களால் அச்சிடப்பட்டிருக்கும் சீரியல் நம்பரை ஓரளவு தெளிவாக க் காணமுடிகிறது. அந்த எண் 5921616. அந்த சீரியல் நம்பரை வைத்து விசாரிக்கும் போது , அது ஒருவரின் வாரண்டி கார்டுடன் ஒத்துப் போகிறது. அந்த ஒருவர் வேறு யாருமல்ல ஹெல்லாவின் கணவன் ரிச்சர்ட்டே தான்.

ஆனாலும் போலீசாரால் ரிச்சர்ட்டை நெருங்க முடியவில்லை. காரணம் ஹெல்லாவிற்கு என்ன ஆயிற்று என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஒரு வேளை ஹெல்லா இறந்திருந்தால் அவரது சடலம் எங்கே? சடலமில்லாமல் அவர் கொலையானார் என்பதை எப்படி நிரூபிப்பது? அதற்கு தடயவியல் துறையின் உதவி இன்னும் நிறையவே தேவைப்படுகிறது.

அடுத்து நதிக்கரையில் கிடைத்த நகத்தில் இருக்கும் நக பாலிஷின் ரசாயன கலவையும், ஹெல்லாவின் வீட்டிலிருந்த நக பாலிஷின் ரசயானக் கலவையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். இரண்டும் ஒத்துப்போகிறது. அந்த Chain Saw வில் கிடைத்த மயிரிழைகளையும், ஹெல்லாவின் சீப்பில் இருந்து எடுத்த மயிரிழைககளையும் ஒப்பிட்டுப் பார்த்து இரண்டும் ஒண்றுதான் என்பதைக் கண்டறிகின்றனர். மேலும் கிடைத்த மயிரிழைகள் முன் தலையில் இருந்திருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்துகின்றனர்.

நதிக்கரையில் கிடைத்த எலும்புத் துணுக்குகளை மேலும் ஆய்வு செய்ய டாக்டர் லீ என்பவர் அழைக்கப்படுகிறார். டாக்டர் லீ அந்த மிகச் சிறிய எலும்புத் துண்டுகளை பார்த்து, ஒரு வேளை அவை wood chipper இன் வழியே வந்திருக்கலாம் என முடிவுச்செய்கிறார்.

அதனை உறுதிப்படுத்திக்கொள்ள, ரிச்சர்ட் வாடகைக்கு எடுத்த அதே Wood chipper இல் டாக்டர் லீ  ஒரு சோதனை செய்கிறார். அந்த Wood chipper இன் உள்ளே ஒரு பன்றியை செலுத்துகின்றனர். காரணம் பன்றியின் தோல் மற்றும் எலும்பு அமைப்புகள் கிட்டத்தட்ட மனிதனை ஒத்து இருக்கும் என்கிற காரணத்தால். உள்ள சென்ற பன்றி Wood Chipper ஆல் சிறு சிறு துகள்களாக்கப்பட்டு வெளிவந்தது. வெளிவந்த எலும்புத் துகள்களை டாக்டர் லீ ஆய்வு செய்கிறார். அந்த Wood chipper ஆல் வெட்டப்பட்ட துணுக்குகளில் ஒரு தனித்தன்மையான கோடுகள் இருப்பதை கண்டறிகிறார். அந்த எலும்புத் துணுக்குகள் வெட்டப்பட்டிருக்கும் அதே முறையில் தான் நதிக்கரையில் கிடைத்த எலும்புத் துணுக்குகளும் வெட்டப்பட்டிருப்பது உறுதியாகிறது.

அதுமட்டுமல்லாமல் நதிக்கரையில் கிடைத்த மற்ற சில எலும்புத் துண்டுகளை மைராஸ்கோப்பில் ஆய்வு செய்யும் போது டாக்டர் லீ மற்றொரு விஷயத்தை கண்டறிகிறார். அவர் ஆய்வு செய்த அந்த எலும்புத் துணுக்கு மனித மண்டை ஓட்டின் நடு மண்டையின் உட்புறம் இருக்கும் எலும்பின் அமைப்பாகும். இது மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் ஒரு எலும்பின் அமைப்பு.

மேலும் சில எலும்புத் துணுக்குகளை ஆய்வு செய்து அவை மண்டை ஓட்டின் பக்கவாட்டில் இருக்கும் எலும்பு அமைப்பு என்பதையும்  உறுதிசெய்தார். ஆனால் இந்த எலும்புத் துணுக்குகள் ஒருவர் உயிரோடு இருந்த போது எடுக்கப்பட்டதா அல்லது இறந்த பின்னர் உருவாக்கப்பட்டதா என்பது தெளிவாகவில்லை. யாரோ ஒருவர் இறந்திருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. யார் ? யாரால்? என்பதுதான் இப்பொழுது கேள்வி!!



நதிக்கரையில் கிடைத்த சிறு சிறு எலும்புத் துணூக்குகளை திரவ நைட்ரஜனில் உறைய வைத்து அதனை பொடியாக்கி சோதனைக்கு உட்படுத்துகிறார் டாக்டர் ஹென்றி. அது ஓ பாசிடிவ் வைகையைச் சேர்ந்த ஒருவரின் எலும்பு என்பதைக் கண்டறிகிறார். அது ஹெல்லாவின் ரத்த வகையாகும்.

அடுத்து தேடுதலின் போது நதிக்கரையில் கிடைத்த அந்த சிறிய மெட்டர் குப்பியை பார்க்கிறார்கள். அது பற்களில் உபயோகிக்கப்பட்டதாக இருக்கலாம் என்கிற முடிவுக்கு வருகின்றனர். ஆனாலும் அந்த குப்பியில் மனித திசுக்கள் எதும் இல்லாததால் அது ஒரு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.  தடவியலுக்கு மேலும் ஆதாரங்கள் தேவைப்பட்டன.
டாக்டர் லீயால் நியமிக்கப்பட்ட ஒருவர் மறுபடியும் நதிக்கரைக்கு சென்று தேடுதலில் ஈடுபட்டார். முழுமையாக 5 நாட்கள் தேடிய பின்னர் தேடுதலின் பலனாக அவர் கண்ணில் பட்டது ஒரு மனிதப் பல்.

சோதனைக் கூடத்தில் அந்தப் பல் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. சில வருடங்கள் முன்பு ஹெல்லா பற்களை எடுத்த ஒரு X- Ray படத்தை அடிப்படையாக வைத்து தற்பொழுது  கிடைத்த பல் ஒப்பிடப்பட்டது. ஆய்வில் அந்தப் பல் ஹெல்லாவின் பல் என்பது நிரூபனமானது.

இறுதியாக கிடைத்த ஆதாரங்களை வைத்து ஹெல்லா இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறார். ஹெல்லாவின் கணவன் ரிச்சர்ட் ஹெல்லாவை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறான்.

காவல்துறையினரின் பார்வையில் உண்மையில் என்ன நடந்திருக்கும் என்கிற யூகம் இதோ:



நவம்பர் 18 அன்று இரவு ஹெல்லா வீட்டிற்கு வந்து அவளுக்கு பிடித்த நீல நிற இரவு உடைக்கு மாறுகிறாள். அப்போது தனக்கு வந்திருந்த லெட்டர் ஒன்றை எடுத்து பாக்கெட்டில் வைக்க, சற்று நேரத்தில் ரிச்சர்ட்டுக்கும் அவளுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. வாக்குவாதம் முற்றி ரிச்சர்ட் போலீஸ் வேலைக்கு உபயோகிக்கும் ப்ளாஷ் லைட்டை எடுத்து ஹெல்லாவின் தலையில் அடிக்கிறான். ஹெல்லா சரிந்து முட்டி போட்ட படி கீழே விழுகிறாள். இரண்டாவது முறையும் அடிக்க, ரத்தம் தெரிந்து மெத்தையில் படுகிறது.

சிறிது நேரத்தில் ஹெல்லா இறந்துவிட, அவளை ஒரு போர்வையில் சுற்றி, வீட்டிலிருந்த ஒரு பெரிய ஃபீரீசருக்குள் வைக்கிறான். மறுநாள் காலை குழந்தைகளிடம் அம்மா இன்று முன்னதாகவே வேலைக்கு கிளம்பியதாகச் சொல்லி அவர்களை உறவினர் வீட்டிற்கு அனுப்பிகிறான். ரத்தம் படிந்த கார்ப்பெட்டை கிழித்து அப்புறப்படுத்துகிறான்.

அன்றே ஒரு மிகப்பெரிய Wood chipper ஐ தன்னுடைய கிரெடிட் கார்டை உபயோகித்து வாடகைக்கு எடுக்கிறான். அன்று இரவு ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த ஹெல்லாவின் உடலையும், அவனுடைய Chain Saw வையும் எடுத்துக்கொண்டு Wood chipper உடன் நதிக்கரைக்கு செல்கிறான். அவ்வாறு செல்லும்போது தான் Snow plow ஓட்டுனர் ரிச்சர்ட்டை இரண்டு இடங்களில் பார்க்கிறான்.

நதிக்கரையில் Wood chipper ஐ பொறுத்தி, ஹெல்லாவின் உடலை Chain saw மூலம் துண்டு துண்டாக வெட்டி ஒருசில மரத்துண்டுகளுடன் Wood Chipper ற்க்குள் செலுத்த, அது சிறு சிறு துணுக்குகளாக வெளியேற்றுகிறது. பெரும்பாலான துணுக்குகள் நதியின் உள்ளே விழுந்து  அடித்துச் செல்லப்படுகின்றன. ஒருசில துண்டுக்கள் கரையில் விழுகிறது. ஹெல்லாவின் பாக்கெட்டில் இருந்த லெட்டர் மட்டும் மிகக் குறைந்த சேதாரத்துடன் அப்படியே வெளியில் வந்து விழுகிறது. அவைதான் சோதனையின் போது தடயவியல் துறைக்கு கிடைத்தவை.

ஒரு நாள் முழுவதும் ஹெல்லாவின் உடல் ஃப்ரீசருக்குள் இருந்ததால் Chain Saw வால் அறுக்கும் போது ரத்தம் எதுவும் வெளிப்படவில்லை.  பிறகு சீரியல் நம்பர் பகுதியை சேதப்படுத்தி அதனை ஆற்றுக்குள் வீசிவிட்டு வீட்டுக்குச் செல்கிறான் ரிச்சர்ட்.

ஹெல்லாவின் வழக்கில் தடயவியல் துறையின் பங்கு அளப்பறியது. 47 பேர் கொண்டு குழு, இந்த ஒரு வழக்கிற்காக மட்டும் செய்த சோதனைகள் 50,000 க்கும் மேல் என்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட ரிச்சர்ட் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து 50 வருட சிறை தண்டனை விதித்தது. இறந்தவரின் உடல் இல்லாமல் கொலையாளிக்கு தண்டனை அளிக்கப்பட்டது அந்த மாஹானத்தில் அதுவே முதல் முறை.

ஆனால் இன்று வரை ரிச்சர்ட் தான் ஹெல்லாவைக் கொன்றதாக ஒப்புக்கொள்ளவில்லை.

மற்றுமொரு சம்பவத்துடன் அடுத்த பதிவில் சந்திப்போம்!!

தடயவியல் – Case 1 மாயமான பெண்!!


Share/Bookmark



எந்த ஒரு குற்றாவாளியும் அவனுக்கே தெரியாமல் எதாவது ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்பது காவல்துறை வழக்கமாகச் சொல்லும் ஒரு வாக்கியம். கிட்டத்தட்ட அது உண்மையும் கூட.  ஆனால் குற்றவாளிகள் விட்டுச்செல்லும் தடயங்களை காவல் துறையால் மட்டுமே முழுவதும் கண்டுபிடித்து விட முடிவதில்லை. அவர்களுக்கு தடயவியல் துறையின் உதவி தேவைப்படுகிறது.

தமிழ் மட்டும் தெரிந்த ஒருவனிடம் வேறு மொழியில் பேசும்போது நாம் நினைப்பதை அவனுக்குப் புரிய வைக்க முடியாது. அவன் கூற நினைப்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.  ஒரு இடத்தில்  தகவல் பரிமாற்றம்  நடைபெற வேண்டுமென்றால் இருவரும் ஒரே தகவல் பரிமாற்ற முறையை பயன்படுத்த வேண்டும். மனிதர்களுக்குள்ளான தகவல் பரிமாற்ற முறை என்பது எதேனும் ஒரு மொழியாக இருக்கலாம் அல்லது இருவருக்கும் தெரிந்த சைகையாகக் கூட இருக்கலாம். அதே  போல மனிதன் எதேனும் இயந்திரத்துடன் தகவல் தொடர்பு செய்வதற்கோ, அல்லது இரண்டு இயந்திரங்குள்ளான தொடர்புக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட தகவல் தொடர்பு முறையை பின்பற்ற வேண்டும். அதை Communication protocol என்பார்கள்

ஒரு குற்றம் நடக்கும் போது, அந்த இடத்திலுள்ள உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் அத்தனையுமே சாட்சிகள் தான். அந்த உயிருள்ள பொருள் மனிதனாயின் வாய்வழியே அவனிடம் கேட்டு நடந்ததை தெரிந்து கொள்ள முடியும். ஒரு வேளை அவை வேறு உயிரோ அல்லது  உயிரற்ற பொருட்களாகவோ இருப்பின் அவர்களிடமிருந்து செய்திகளைப் பெற பிரத்தியேகமான தகவல் தொடர்பை கையாள வேண்டியிருக்கிறது. அந்த மொழி அனைவருக்கும் தெரிவதில்லை. அதைப் பேசத் தெரிந்தவர்கள்தான் இந்த தடயவியல் துறையினர்.

தடயவியல் துறையினரின் உதவியுடன்  கண்டுபிடிக்கப்பட்ட குற்றங்களின் வரிசையத்தான் இந்த தொடர் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்க்கப்போகிறோம். இதில் கூறப்போகும் அனைத்துமே என்பது, தொண்ணூறுகளில் நடந்த உண்மைச் சம்பவங்கள்.  Forensic Files என்கிற பெயரில் ஒரு ஆங்கில டாக்குமெண்டரி வெளிவந்திருக்கிறது. அதில் நிறைய குற்றங்களையும், அவை எவ்வாறு துப்பறிப்பட்டன என்பதையும் இருபது இருபது நிமிட தொகுப்புகளாக வெளியிட்டிருக்கின்றனர். அவற்றின் தமிழாக்கமே வரப்போகும் இந்த தொடர் பதிவுகள்.  

முதலில் மாயமான பெண்ணைப் பற்றிய ஒரு வழக்கைப் பார்ப்போம்.  1986 இல் ஹெல்லே க்ராஃப்ட்ஸ் எனும் பெண் தன் கணவன் மேல் ஏற்பட்ட சந்தேகத்தால் ஒரு தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியைத் தொடர்புகொண்டு கணவனின் நடத்தையைக் கண்காணிக்கச் சொல்கிறாள். சில நாட்களுக்குப்பின் மழை பெய்யும் ஒரு மாலை வேளையில் அந்த தனியார் டிடெக்டிவ்,  ஹெல்லாவை  சந்தித்து அவனுடைய ரிப்போர்ட்டைக் கொடுக்கிறான்.  அதிலிருக்கும் சில புகைப்படங்களைப் பார்த்து ஹெல்லா அதிர்ச்சியடைகிறாள். ஆம். அவளது கணவனுக்கும் மற்றுமொரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தான் அந்த புகைப்படங்கள். சில நிமிடங்கள் காருக்குள்ளேயே அழுது தீர்த்துவிட்டு பின் இறங்கிச்செல்கிறாள். இந்த சந்திப்பிற்றுப் பிறகு ஹெல்லா காணாமல் போகிறாள்.  



ஹெல்லாவுக்கும், அவளது கணவன் ரிச்சர்ட்டுக்கும் மூண்று குழந்தைகள். இருவருமே ஒரே ஏர்லைன்ஸில் வேறு வேறு துறையில் பணிபுரிந்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் ஹெல்லாவின் கணவன் ரிச்சர்ட் பகுதி நேர காவல்துறை அதிகாரியாகவும் இருந்து வந்திருக்கிறார்.

திருமணமாகி பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து ஹெல்லாவிற்கு ரிச்சர்ட்டின் மேல் சந்தேகம் வர அது பல சமயம் சண்டையாக மாறி ரிச்சர்ட் ஹெல்லாவை தாக்கும் அளவிற்கு சென்றிருக்கிறது. ஒரு கட்டத்தில் ஹெல்லா விவாகரத்திற்கு விண்ணப்பித்திருக்கிறாள். அதுமட்டுமல்லாமல் ஹெல்லா தன்னுடைய விவாகரத்து வழக்கை நடத்தும் வக்கீலிடம் ,  ஒரு வேளை தனக்கு எதாவது நேர்ந்தால் அது இயற்கையானது அல்ல என ஒரு குறிப்பையும் கொடுத்திருக்கிறார்.

நவம்பர் 18 , 1989ம் தேதி ஹெல்லா பணியை முடித்து வரும்பொது அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் கொண்டு வந்து இறக்கி விட்டுருக்கிறார். அதுதான் வெளியுலகம் ஹெல்லாவை கடைசியாகப் பார்த்த தருணம். அதன் பிறகு ஹெல்லா எங்கு சென்றாள் என்பது எவருக்கும் தெரியவில்லை.
 
இரண்டு நாட்கள் கழித்து ஹெல்லா பணிக்கு வராத காரணத்தல் ஹெல்லா பணிபுரியும் ஏர்லைன்ஸில் இருந்து வீட்டில் தொடர்பு கொண்டு கேட்கும்போது ஹெல்லா டென்மார்க்கிற்கு அவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பதாக ரிச்சர்ட் தெரிவித்திருக்கிறார். மேலும் சிலரிடம் ஹெல்லா விடுப்பில் இருப்பதாகவும் முன்னுக்கு பின் முரணான பதிலைக் கொடுத்திருக்கிறார்.

ஹெல்லாவிடமிருந்து சில நாட்கள் எந்த தகவல் தொடர்பும் இல்லை என்பதால் ஹெல்லாவின் வழக்கறிஞர் காவல்துறைக்குச் செல்ல, விசாரணை தொடங்கியது.

ஹெல்லாவின் கணவன் ரிச்சர்ட் தொடர்ந்து ஹெல்லா எங்கு சென்றார் என்பதைப் பற்றி தனக்குத் தெரியாது என்கிற பதிலையே கூறி வந்தார்.
காவல்துறையினர் ஹெல்லாவின் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பணிப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். நவம்பர் 18ம் தேதி தனக்கு விடுப்பு எனவும் , அன்று இரவு இரண்டு மணிக்குத்தான் ஹெல்லாவின் வீட்டுக்கு வந்ததாகவும், வந்தவுடன் நேரடியாக உறங்கச் சென்றதாகவும் கூறினாள். ஆனால் அவள் கூறிய மற்றொரு தகவல்தான் ஹெல்லா பற்றிய விசாரணையை துரிதப்படுத்த, சரியான பாதையில் செல்ல உதவியது.

அதாவது மறுநாள் காலை ஹெல்லா வீட்டின் தரை விரிப்புகளில் கருப்பு வண்ணத்தில் புதிதாக சில கறைகள் இருந்ததாகவும், ரிச்சர்ட்டிடம் அதைப் பற்றி கேட்ட பொழுது சரியான பதில் எதுவும் இல்லை எனவும் மறுநாளே அந்த தரை விரிப்புகளை ரிச்சர்ட் அகற்றி விட்டதாகவும் பணிப்பெண் கூறினாள்.  காவல்துறை ஒருசில மாதிரி ரத்தக் கறைகளை அந்தப் பணிப்பெண்ணிடம் காண்பித்து, அவள் அந்த தரை விரிப்புகளில் பார்த்தது ரத்தக் கறைதான் என்பதை உறுதி செய்துகொண்டனர்.

மேலும் ஹெல்லா அறையின் மெத்தை விரிப்பு மாற்றப்பட்டிருப்பதாகவும், வீட்டிலிருந்த ஒரு மிகப்பெரிய ஃப்ரீசர் (Freezer) காணாமல் போயிருப்பதையும் பணிப்பெண் காவல்துறைக்கு தெரிவிக்க, காவல்துறையின் கவனம் முழுவதும் இப்பொழுது ரிச்சர்ட்டின் மேல் திரும்பியது.

ஆனால் ரிச்சர்ட்டோ தனக்கு எதுவும் தெரியாது என்கிற பதிலையே மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருந்தார். காவல்துறை ரிச்சர்ட் தொடர்பான தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தது. அப்போது அவர்களுக்கு கிடைத்த ஒரு தகவல் அதிர்ச்சியூட்டும் விதமாக இருந்தது. ஹெல்லா காணாமல் போன இரண்டாவது நாள் ரிச்சர்ட் தனது க்ரெடிட் கார்டை பயன்படுத்தி, ஒரு கமர்ஷியல் Wood Chipper ஐ வாடகைக்கு எடுத்திருக்கிறார். Wood chipper எனப்படுவது மரத்துண்டுகளை சிறு தூள்களாக மாற்றும் ஒரு  இயந்திரமாகும்.

கிடைத்த தகவல்களைக் கொண்டு, ரிச்சர்ட்டிற்கும் ஹெல்லா காணாமல் போனதற்கும் நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த காவல்துறை ரிச்சர்ட்-ஹெல்லாவின் வீட்டை சோதனையிட முடிவு செய்தது.
இப்பொழுதுதான் தடயவியலின் உதவி தேவைப்படுகிறது காவல்துறைக்கு. டாக்டர் ஹென்றி இந்த வழக்கிற்காக அழைக்கப்படுகிறார். டாக்டர் ஹென்றி ஹெல்லாவின் அறையை அங்குலம் அங்குலமாக அலசுகிறார். கடைசியில் ஒரு தடயம் கிடைக்கிறது.  அந்த அறையில் இருந்த மெத்தையில், வெற்றுக்கண்களால் அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியாத அளவு மிகச்சிறிய சிவப்புப் புள்ளிகளை ஹென்றி கண்டறிகிறார்.



ஆய்விற்கு உட்படுத்தும்போது அவை ரத்தப்புள்ளிகள் என்பது தெரிகிறது. வெறும் ரத்தம் என்பது மட்டும் நமக்கு விடை கொடுக்காது. அது மனித ரத்தமா அல்லது எதேனும் ஒரு விலங்கு அல்லது பூச்சிகளின் ரத்தமா? ஒருவேளை மனிதரத்தமாக இருந்தால், ஒரு வேளை பெண்களின் மாதவிடாயின் போது வெளிப்படும் ரத்தமாகக் கூட இருக்கலாம்.  இந்த ரத்தப்புள்ளிகள் புதிதா அல்லது சில வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டதா என பல கேள்விகளை கேட்க வேண்டியிருந்தது.

ஒவ்வொன்றையும் உறுதிப்படுத்த ஒவ்வொரு சோதனைகள். இறுதியின் அது ஓ பாசிடிவ் வகையைச் சேர்ந்த மனித ரத்தம் தான் என்பதையும், அது மாதவிடாய் ரத்தம் இல்லை , ரத்த நாளங்களில் பாயும் ரத்தம் என்பதையும் டாக்டர் ஹென்றி உறுதிப்படுத்தினார். ஹெல்லாவின் ரத்தமும் ஓ பாசிடிவ் வகையைச் சேர்ந்ததாகும்.

அது புதிய ரத்தமா அல்லது நீண்ட நாள் முன்பிலிருந்து இருக்கும் ரத்தமா என்பதை அறிய PGM எனப்படும் ஒரு சோதனையை செய்தனர். இந்த PGM மூலக்கூறு எனப்படுவது, உறைந்த ரத்தத்தில் கூட 12- 13 வாரங்கள் உயிர்ப்புடன் இருக்கும். மெத்தையிலிருக்கும் ரத்தக் கறைகளை PGM மூலக்கூறு சோதனைக்கு உட்படுத்திய பொழுது , அந்த ரத்தக்கறைகளில் PGM மூலக்கூறு உயிர்ப்புடம் இருப்பது தெரிந்தது. எனவே இந்த ரத்தக் கறை சமீபத்தில் ஏற்பட்டது தான்.

டாக்டர் ஹென்றி அந்த ரத்தப்புள்ளிகளின் அடர்த்தி, அவை மெத்தையில் தெறித்த விதம் இவற்றை வைத்து, அந்த ரத்தப்புள்ளிகள் 10 டிகிரி கோணத்தில், மிதமான வேகத்தில் வந்து விழுந்திருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தினார். மேலும் அந்த மெத்தையின் பக்கவாட்டில் சுமார் ஆறு அங்குலம் அளவிற்கு ஒரு ரத்தக் கோடு இருப்பதையும் ஹென்றி கண்டறிந்தார். இவற்றையெல்லாம் ஆராய்ந்து அந்த ரத்தப்புள்ளிகளும் இந்த ரத்தக்க்கோடும் மெதைக்கும் அருகில் ஒருவர் மண்டியிட்டு விழும் போது ஏற்பட்டதாக இருக்கவேண்டும் எனபதை உறுதிசெய்தார்.

அதுமட்டுமல்லாமல் ரிச்சர்ட்டின் வீட்டின் குளியளறையில் இருந்த துண்டுகள் அனைத்தும் சமீபத்தில் துவைக்கப்பட்டவையாக இருந்தது..  ஆர்த்தோடாலடின்  கரைசலில் சோதனையிட்ட பொழுது அந்த துண்டுகளின் பெரும்பாலான பகுதிகள் நீல நிறமாக மாறியது. அப்படியென்றால் அந்தத் துண்டுகள் ரத்தத்தை துடைக்க உபயோகப்பட்டிருப்பது தெரிந்தது.
காவல்துறைக்கு ரிச்சர்ட்டின் மீதான சந்தேகம் வலுக்கிறது. ஆனால் அவரை கைது செய்யவோ அவர் மீது குற்றம் சாட்டவோ போதுமான ஆதாரங்கள் இல்லை. ஹெல்லா காணாமல் போயிருக்கிறாரே தவிற,  அவருக்கு எதேனும் நிகழ்ந்தது என்பதை காவல்துறையால் நிரூபிக்க முடியவில்லை. இந்த சூழலில் ரிச்சர்ட்டை Lie Detector Test ற்கு உட்படுத்த முடிவெடுக்கிறது காவல்துறை.

PolyGraph சோதனை எனப்படும் Lie detector test எனப்படுவது, நிறைய திரைப்படங்களில் காண்பிப்பது போல, சோதனைக்குட்படுத்தப் படுபவரின் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, மூச்சு, தோலில் ஏற்படும் ஒருவித மின் மாற்றங்கள்  போன்றவை கண்காணிக்கப்படும். கேள்விகளுக்கு பதில் அளிக்கும்பொழுது இவற்றில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் பட்சத்தில் அவர் கூறுவது உண்மை இல்லை என்பது நிரூபணம் ஆகும்.

ரிச்சர்ட்டின் சம்மதத்துடன், ஹெல்லாவைப் பற்றி தெரிந்துகொள்ள அவருக்கு பாலிகிராஃப் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் 

“ஹெல்லா எங்கிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?”

”ஹெல்லாவை நீங்கள் தாக்கினீர்களா?”

”ஹெல்லாவை நீங்கள் மறைத்து வைத்திருக்கிறீர்கள?” என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

அனைத்திற்கும் ரிச்சர்ட் ”தெரியாது”, ”இல்லை” என்றே பதிலளித்தார்.

பாலிகிராஃப் சோதனையின் முடிவு காவல்துறைக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது.  பாலிகிராஃப் சோதனை முடிவில் ரிச்சர்ட் பொய் எதுவும் கூறவில்லை என நிரூபனமானது.  ரிச்சர்ட் விடுவிக்கப்பட்டார்.

காவல்துறை அடுத்து எந்தக் கோணத்தில் விசாரணையைத் துவக்கலாம் என்று தயங்கி நின்ற பொழுது, அவர்களுக்குத் தீணி போடும் விதமாக கிடைத்தது ஒரு தகவல்..

அடுத்த பதிவில் …



அடுத்த பதிவைப் படிக்க இங்கே க்ளிக்கவும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...