Thursday, June 26, 2014

பேய்க்கிழவி!!!


Share/Bookmark
1985ம் வருடம்: மார்கழி: 23 வெள்ளிக்கிழமை. அந்தப் பழைய அரசுப் பேருந்திலிருந்து பாஸ்கர் இறங்கும் போது இரவு 10.45 மணி. எப்பொழுதும் 8 மணிக்கு வர வேண்டிய பேருந்து, வழியில் ஏற்பட்ட கோளாருகளால் இன்று 10.45க்கே வந்து சேர்ந்தது. 19 வயதான பாஸ்கரின் சொந்த ஊர் திருமலைக்காடு. அவன் இறங்கிய பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு ஊர். விவசாயமே முதன்மைத் தொழில். திருமலைக்காட்டிற்கு அருகில் கல்லூரிகள் எதுவும் இல்லாததால், 30 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அக்கா வீட்டில் தங்கி ஒரு கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டிருப்பவன் வாரமொருமுறை திருமலைக்காட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்தான். 


அந்த வெள்ளிக்கிழமையும் கல்லூரியை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு வந்து கொண்டிருக்கையில் தான் அந்தப் பேருந்து காலை வாரிவிட்டது. இறக்கிவிட்ட பேருந்து சென்ற பின், சுற்றி முற்றி ஒரு முறை பார்க்க, அவனுடன் சேர்ந்து நடக்க ஒருவருமில்லை. இறங்கிய இடத்தில் கண்ணாடி உடைக்கப்பட்ட ஒரு சாலை விளக்கு மட்டும் லேசான வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. ஒன்பது மணிக்குள் வந்திருந்தாலாவது யாராவது சைக்கிளில் வருபவருடனோ அல்லது எதேனும் மாட்டு வண்டியிலோ ஏறி ஊருக்குச் சென்றிருக்கலாம். இருப்பினும் நெல் அரைக்கச் சென்ற ஏதேனும் மாட்டுவண்டிகள் வந்தாலும் வரலாம்  என கொஞ்ச நேரம் அங்கேயே காத்திருந்தான். நேரம் வீணானது மட்டுமே மிச்சம். சரி நடப்போம் என கையிலிருந்த சிறிய துணிப்பையை தோளில் மாட்டிக்கொண்டு திருமலைக்காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

பேருந்து நிறுத்தத்தை விட்டு தூரம் செல்லச் செல்ல அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வீடுகளும் மறைந்து மரங்களும் வயல்வெளிகளும் வந்தன.  ஒரு மாட்டு வண்டி சென்றால் மறைந்துவிடும் அளவுக்கே இருந்தது அந்தச் சாலையின் அகலம். அதுவும் எப்பொழுது போடப்பட்டு நிறுத்தப்பட்ட சாலையோ தெரியவில்லை, நடக்கும் பொழுது கப்பிகள் காலை நன்றாக பதம் பார்த்தது. ஆனால் அடித்த குளிரில் பாஸ்கருக்கு அது ஒன்றும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. வழியிலிருக்கும் தென்னந் தோப்புகளிலிருந்து அடித்த தென்றல் கூட உறை குளிராயிருந்தது.

பெளர்ணமி முடிந்த மூன்றாம் என்பதால் நிலவு அப்பொழுதுதான் கிழக்கில் உதித்திருந்தது. இருப்பினும் வெளிச்சத்திற்கு பஞ்சமில்லை. குளிர் ஒண்றே பாஸ்கருக்கு எரிச்சலூட்டும் விஷயமாக இருந்தது. சரியாக இருபது நிமிட நடையில் கணிசமான தொலைவை கடந்திருந்தான். அப்பொழுது வந்தது அந்த குறுக்குப் பாதை. பெரும்பாலும் பகல் நேரங்களில் திருமலைக்காட்டிற்கு நடந்து செல்வோர் அந்தக் குறுக்குப் பாதையை தேர்ந்தெடுப்பதுண்டு. குறுக்குப் பாதை என்றால் ஒன்றுமில்லை. வயல் வரப்புகளினூடே நடந்து சென்றால் ஒரு 10 நிமிடம் முன்னதாக திருமலைக்காட்டை அடையலாம். இரவில் யாரும் குறுக்குப் பாதையை தெரிவு செய்வதில்லை.இரவில் வயல் வெளிகளில் சுற்றி திரியும் சாரைப்பாம்புகள் வரப்புகளில் படுத்து உரங்கி கொண்டிருக்கும் என்பதால் இரவில் இந்த குறுக்கு பாதையை பெரும்பாலானோர் தவிர்ப்பது வழக்கம். மேலும் சிலர் இரவில் அந்த வழியே செல்லும் போது விசித்திரமான சில சம்பவங்கள் நடந்ததாகவும் கதை கட்டி விட்டிருந்தனர்.

பாஸ்கர் பெரும்பாலும் இது போன்ற மூட நம்பிக்கைகளை நம்பியதில்லை. எதற்கும் பயந்ததும் இல்லை. எந்தப் பாதையில் போகலாம் என்ற அரை நிமிட யோசனை. நாம் பார்க்காத பாம்புகளா, நமக்குத் தெரியாத கதைகளா என மனதில் நினைத்துக் கொண்டு, விரைவாக வீட்டுக்குச் சென்றால் போதும் என குறுக்குப் பாதையையே தெரிவு செய்தான். சில நிமிட மண்பாதை பயணத்தை தொடர்ந்து, வயல் வரப்புகள் வந்தடைந்தன. நிலவின் புண்ணியத்தில் கிட்டதட்ட வரப்புகள் நன்றாகவே கண்ணுக்கு புலப்பட்டன. வயல்களின் நெற்பயிர்களையும் வரப்பின் புற்களையும் மார்கழிப்பனி குளிப்பாட்டிக் கொண்டு இருந்தது. 

மெதுவாக அடிமேல் அடிவைத்து நடந்து வரப்புகளை கடந்தான். நல்ல வேளை.பாம்புகள் எதுவும் கண்ணுக்கு அகப்படவில்லை. எவ்வளவு தான் கவனமாக அடி வைத்தாலும், வரப்பில் லேசாக கால் வழுக்கி வயலுக்குள் கால் வைக்க வேண்டியதாகிவிட, வலதுகால் வயலுக்குள் சேற்றில் சிக்கி, காலணியும் பாதமும் சேராகிப் போனது. சரி ஒன்றும் மோசமில்லை வழியிலேயே இருக்கிறது பாம்பன் குளம். அதில் இறங்கி காலை அலம்பிட்டு சென்றுவிடலாம் என நினைத்துக் கொண்டே வயல்களைக் கடக்க பாம்பன் குள மேடு வந்தது. மேட்டில் ஏறத்தொடங்கும் போதே 

"தட்... தட்... தட்" என ஒரு சத்தம் சீரான இடைவெளியில் கேட்கத்தொடங்கியது. பாஸ்கருக்கு மனதில் ஓரளவு சந்தோஷத்துடன் தைரியமும் சேர்ந்து கொண்டது. "அப்பா... வயலுக்கு தண்ணி கட்ட வந்தவங்க குளிச்சிட்டு இருக்காங்க போலருக்கு.. அவங்களோட பேசிகிட்டே வீட்டுக்கு போயிடலாம்" என்று நினைத்துக் கொண்டே மேலும் மேட்டில் ஏறி குளக்கரையை பார்த்த பாஸ்கர் முகத்தில் ஒரு சிறிய மாறுதல்.

குளத்தில் இருந்தது 75 வயது மதிக்கத்தக்க ஒரு வயாதான பாட்டி. தண்ணீருக்குள் உட்கார்ந்து கொண்டு, தான் கட்டிய சேலையின் முந்தானையை மட்டும் நீரில் கசக்கி  துணி துவைக்கும் கல்லில் "தட் தட் தட்" என அடித்துக் கொண்டிருந்தது.
முகம் தூரத்திலிருந்து சரியாக தெரியவில்லை.. மேலும் சில அடிகள் நடந்து சென்று குளத்தின் சரிவான பகுதியில் இறங்கினான். பாட்டியின் முகம் ஒரளவு நன்றாகவே தெரிந்தது. பார்த்த முகமில்லை. ஒரு வேளை வேறு ஊருக்கு செல்லும் வழியில் இங்கு குளிக்க வந்திருக்க வேண்டும். பாட்டி துணியை கல்லில் அடிப்பதால் நீர்த்துளிகள் லேசான தூரல் போல பாஸ்கர் மீது பட, அது மேலும் குளிரை ஏற்படுத்தியது.

"ஏன் பாட்டி... இந்த குளுருல குளிக்கிறியே.. கொஞ்சம் சீக்கிரமாவே வந்து குளிச்சிட்டு போயிருக்கலாம்ல"

"......"


பாட்டியிடம் பதில் எதுவும் இல்லை. 

"உன்ன தான் பாட்டி கேக்குறேன்"

"............"

துணியை கல்லில் அடிப்பதை நிறுத்தப்படவும் இல்லை.
"பாட்டி தண்ணி மேல தெறிக்குது கொஞ்சம் மெதுவாதான் அடியேன்"
இந்த முறை பாட்டி லேசாக நிமிர்ந்து பார்வையை கூராக்கி முறைத்தது. இது ஒரு வித பயத்தை உண்டு செய்ய, "நமக்கு ஏன் வம்பு" என நினைத்துக் கொண்டு , இரண்டு மூன்று அடிகள் மேலே சென்று நின்று கொண்டான். மேலும் சில நிமிடங்கள் துணியை துவைத்து கொண்டிருந்து விட்டு குளிப்பதற்காக சற்று ஆழத்திற்கு சென்று, பாஸ்கரை பார்த்த வாறு நீரில் முழுகியது.

அப்பாடா.. என்றவாரு பாஸ்கர் சர சரவென இறங்கி கால்களை அலம்ப ஆரம்பித்தான். முதலில் நீர் பட்டவுடன் உடம்பு உறைந்து விடுவது போன்ற ஒரு உணர்வு இருந்தாலும், சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்தது. நன்றாக முகம் கை கால்களை அலம்பிக் கொண்டிருந்தவனுக்கு சட்டென மூளை ஒரு அலாரம் அடித்தது. ஷாக் அடித்தது போல நீரை விட்டு விலகி இரண்டடி வெளியே சென்ற பின் தான் மூளை அலாரத்திற்கான காரணத்தை விளக்கியது...

"நீரில் மூழ்கிய கிழவி எங்கே?"


"எப்படியும் கால் அலம்ப ஆரம்பித்து மூன்று நிமிடம் இருக்கும். இவ்வளவு நேரமாகக் கிழவி தண்ணீருக்குள்ளா இருக்கும்? கிழவி மூழ்கிய  இடத்தில் எழும்பிய நீரலையும் அடங்கியிருந்தது. குளத்தை சுற்றி கோரைப்புற்கள்... வேறு வழியாக கரையேறியிருக்கவும் முடியாது. மேலும் சில நிமிடங்கள் யோசித்துக் கொண்டே குளத்தை பார்த்துக் கொண்டிருந்தான். 6 நிமிடம், 7 நிமிடம்... லேசாக வியர்வை எட்டிப்பார்த்தது... தாகம் எடுப்பது போல இருந்தது.... தன்னையும் அறியாமல் காலில் ஒருவித நடுக்கம்...


10 நிமிடம்... கிழவி வந்த பாடில்லை..... மூளையிடமிருந்து சிக்னல் வந்துவிட்டது.. கரையில் வைத்திருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஓட்டமெடுத்தான் பாஸ்கர்... குளத்திலிருந்து எவ்வளவு தூரம் ஓட முடியுமோ அவ்வளவு தூரம் ஓடினான். கால் சோர்ந்து விட்டது. குளத்தை தாண்டி வந்து விட்டோம் என நம்பிக்கையும் வந்தது. சற்று நேரம் குனிந்து இளைப்பாறினான். வழக்கதை இவிட இரண்டு மடங்கு அதிக ஆக்ஸிசனை நுரையீரல் கொள்முதல் செய்து கொண்டிருந்தது.

ஒரு முறை சுற்றி பார்த்தான்.. இப்பொழுதும் எவரும் இல்லை... சுற்றி வெறும் பனை மரங்கள்... மறுபடியும் நடக்க மனமில்லை. லேசான ஓட்டத்தை எடுத்த அவனுக்கு கலங்கரை விளக்கம் போல தூரத்தில் ஒரு ஒளிப்புள்ளி தெரிந்தது.. அதை நோக்கி வேகமாக முன்னேறினான். அருகில் செல்ல செல்ல அந்த ஒளிப்புள்ளி ஒருவர் கையில் இருக்கும்  அரிக்கன் விளக்கு என்பது தெரிந்தது (அரிக்கன் விளக்கு-பெட்டர்மாக்ஸ் லைட்டின் older version).விளக்குடன் நடந்து வருபவரை நோக்கி வேகமாக ஓடிய பாஸ்கரன் அவரருகில் நிற்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்து அவரது காலை பற்றினான்.

உடனே அவர் பாஸ்கரனை கையால் பற்றி மேலெலுப்ப, அவர் முகத்தை பார்த்த பாஸ்கரனுக்கு அப்போது தான் உயிரே வந்தது... வேறு யாருமல்ல. செல்லையன். திருமலைக்காட்டில் துணிகளை வெளுக்கும் தொழில் செய்து வருபவர். 

"என்னப்பா பாஸ்கர்... ஏன் இப்டி ஓடி வர்ற... என்னாச்சு" 

"அண்ணேன்.. அண்ணேன்... " முழுவதுமாக பேச்சு வரவில்லை... "எ... என்னை வீட்டுல விட்டுருங்கண்ணே"

"எதயாவது பாத்து பயந்துட்டியா... சரி சரி... பதட்டப்படாத... ஒண்ணும் இல்ல...ஒண்ணும் இல்லை" என்றவர்... கையில் இருந்த விளக்கை பாஸ்கரிடம் கொடுத்து "இந்தா... இத எடுத்துகிட்டு நீ வீட்டுக்கு போ... மேலவீட்டுக் காரரு வயலுக்கு தண்ணி பாயுதான்னு பாத்துட்டு வர சொன்னாரு.. நா பாத்துட்டு வந்துடுறேன்"


"அண்ணே நீங்களும் வாங்கண்ணே.."

"ஒண்ணும் இல்லப்பா... நா இங்கயே நின்னு பாத்துகிட்டு இருக்கேன்... நீ பயப்படாம போ" என்றவுடன் அரிக்கனை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக செல்லையனை பார்த்துக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தான். சரியாக 6 நிமிடம்... வீடு வந்தது... அய்யா இன்னுமும் தூங்காமல் திண்ணையில் உட்கார்ந்து சிமினி விளக்கில் எதோ ஒரு ஜாதகத்தை புரட்டிக் கொண்டிருந்தார். பாஸ்கரின் அப்பாவை ஊரில் அனைவரும்  அய்யா என்றழைப்பதே வழக்கம்.


பாஸ்கர் "அப்பா....." என்று அழைத்த தோரணையிலிருந்தே அவர் புரிந்துகொண்டார்.. முகம் முழுதும் வியர்த்தபடி இருக்க

"என்னப்பா ஆச்சு... ஏன் இவள நேரம் கழிச்சி வர்ற... ஏன் இப்புடி முகமெல்லாம் வேர்த்து இருக்கு" பதட்டத்துடன் அய்யா கேட்க

இரண்டு நிமிடத்தை எடுத்துக்கொண்டு நடந்தவற்றை பாஸ்கர் கூறினான்.
"நல்ல வேளை செல்லையன் அண்ணன் தான் வழில வந்து அரிக்கன குடுத்து அனுப்பிச்சாரு... "

இதனை கேட்டவுடன் அய்யா நெற்றியை சற்று சுருக்கத்திற்கு உட்படுத்தி

"செல்லனா... அவன் எதுக்கு அந்த நேரத்துல அங்க வந்தான்.... "

"மேலவீட்டு காரரு வயல்ல தண்ணி கட்டுறதுக்காக வந்தாராம்" 

அய்யா போட்டிருந்த கைவத்த உள்பனியன் மேல் அந்த வெள்ளை துண்டை எடுத்து போட்டுக்கொண்டு, பாஸ்கரையும் அழைத்துக் கொண்டு அதே அரிக்கனை கையில் எடுத்து வேகமாக நடந்தார். 20 வீடுகளை கடந்து அந்த கூரை வீடு வந்தது... வீட்டின் வாசலில் நின்று

"செல்லா... டேய் செல்லா.... "

"....."

"செல்லையா... டேய் செல்லையா...." 
வீட்டை சாத்தியிருந்த அந்த மரகேட்டை திறந்து கொண்டு ஒரு கையால் கண்ணை கசக்கிக்கொண்டே செல்லையன் வெளிப்பட்டார்... அய்யாவை பார்த்தது சற்று வேகமாக கதவை திறந்து

"அய்யா... என்ன இந்த நேரத்துல... எதாவது ப்ரச்சனையா... பாஸ்கரு... நீ எப்பப்பா ஊர்லருந்து வந்த " என செல்லையன் கூற  பாஸ்கர் அய்யாவின் கையை சற்று இருக பற்றிக்கொண்டான்.

"ஏன் செல்லையா... மேல வீட்டுகாரரு வயலுக்கு தண்ணிகட்ட இன்னிக்கு நீயா போனா?"


"இல்லையேய்யா... என் மூத்த மவ வீட்டுக்கு வந்துருக்குன்னு சந்தைக்கு பொயிட்டு 9 மணிக்கு தான் வந்தேன்... அசதில 10 மணிக்கெல்லாம் தூங்கிட்டேன்ய்யா... என்னாச்சுங்கையா"


"இல்லை இல்லை சும்மாதான் கேட்டேன்... நீ போயி படு... காலைல வீட்டுக்கு வா பேசிக்கலாம்" என்று சொல்லிவிட்டு சென்ற அய்யாவை ஒன்றும் புரியாமல் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த செல்லன் மறுபடியும் நித்திரையை தழுவ சென்றார்.


அய்யாவும் பாஸ்கரும் வீட்டுக்கு திரும்பும் வழியில்
"அய்யா... அப்ப நா பாத்தது யாரு" 

"விடுப்பா...அதெல்லாம் போட்டு மனசுல கொழப்பிக்காத... வந்து படுத்து தூங்கு... காலைல எழுந்து மொத வேலையா (செல்லையாவிடம் இருந்து பாஸ்கர் வாங்கி வந்த அரிக்கன் விளக்கை காட்டி) போன வருஷம் நம்ம குலசாமிக்கு நாம வாங்கி வச்ச இந்த அரிக்கன் லைட்ட அங்கயே கொண்டுபோய் வச்சிட்டு சாமி கும்புட்டு வா" என அய்யா கூறியவுடன் பாஸ்கருக்கு ஓரளவு உண்மை விளங்க  ஆரம்பித்தது...


Friday, June 13, 2014

மஞ்சப்பை - MUST WATCH!!!


Share/Bookmark
SPB மஞ்சப்பை படத்துல ஒரு பாட்டு பாடிருக்காருன்னு எதேச்சையா கேள்விப்பட்டது தான் இந்தப் படம் பாக்க முக்கியமான ஒரு காரணம். படம் பேர சொன்னா "இப்படி ஒரு படம் வந்துச்சா?"ன்னு நீங்க கேக்கக்குற  மாதிரியான படத்துல கூட SPB பாடுன பாடல்களை எடுத்து பல முறை கேட்டுருக்கேன். ஏன் மேதை படத்துல  அவர் பாடுன ரெண்டு பாட்டயும். J.K.ரித்திஸ் படத்துல வர்ற ஒரு பாட்டயும் கூட இப்ப வரைக்கும் அடிக்கடி கேட்டுக்கிட்டு இருக்கேன்.  அப்படி என்னதான் இருக்கோ அந்தக் குரல்ல... "ஆகாச நிலவு தான் அழகாத்  தெரியல" ன்னு அவர் ஆரம்பிக்கும் போதே  அப்டியே புல்லரிக்குது. படம் பாக்கும் போது புல்லரிக்கிறது  சகஜம். ஆனா பாட்டக் கேட்டாலே புல்லரிக்கிரது  SPB பாடுனா மட்டும் தான். 90s ல வந்த இளையராஜா  பாட்டு மாதிரி இருக்க 'ஆகாச நிலவுதான்" பாட்ட  கேக்கும் போது ரொம்ப நாளுக்கு முன்னால தொலைஞ்சி  போன ஏதோ ஒண்ணு திரும்ப கிடைச்ச மாதிரி ஓரு  சந்தோஷம்.  படம் பாத்து முடிச்சப்புறம் அதே மாதிரி  ரொம்ப நாளுக்கு முன்னால தொலைஞ்சி போன  இன்னொன்னும் திரும்ப கிடைச்ச மாதிரி ரொம்ப  சந்தோசஷம்.

ஒருத்தன சிரிக்க வைக்கிறது எவ்வளவு கஷ்டமோ அதே அளவு அழுக வைக்கிறதும் கஷ்டம். மக்கள ஃபீல்  பண்ண வைக்கனும் அடி மனச டச் பண்ணனும்னு நம்மாளுங்க இப்ப ஒரு கேவலமான ட்ரெண்ட்ட உருவாக்கி வச்சிருக்காய்ங்க. உதாரணத்துக்கு ஒரு குழந்தைக்கிட்ட இப்டி ஒரு கதை சொல்லுங்க. "ஒரு ஊர்ல  ஒருத்தன் நல்லா ஜாலியா இருந்தானாம். திடீர்னு ஒரு நாள் அவன் செத்து போயிட்டானாம்" அப்டின்னு.  அவ்வளவு தான் கதை. பொளிச்ன்னு அந்தக் குழந்தை காரி துப்பிட்டு போயிடும்.  அதாவது யாராது ஒருத்தர  கடைசில சாகடிச்சா மக்களுக்கு அப்டியே அழுக வந்துரும். அடிமனச டச் பண்ணிருவாங்களாம். 

இந்த  ட்ரெண்டோட உச்சக்கட்ட கொடூரத்துல வெளிய வந்தது "எங்கேயும் எப்போதும்"ங்குற ஒரு படம். ஒருத்தன் நல்லா லவ் பண்ணிட்டு ஜாலியா இருக்கான். திடீர்னு அடிபட்டு செத்து போயிடுறான். என்னய்யா இது? நிஜ  வாழ்க்கையில இது நடக்கலாம். ஆனா சினிமாவுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. க்ளைமாக்ஸ் டச்சிங்கா இருக்கனும் தான், அதுக்குன்னு இப்புடியா... இந்த மாதிரி கேவலமான் ட்ரெண்டுகளை உடைச்சி, ஒரு  அருமையான செண்டிமெண்ட் படத்த குடுத்ததுக்கு இயக்குனருக்கு முதல் நன்றி.

ஒரு 8 வருஷத்துக்கு முன்னால "தவமாய் தவமிருந்து" ன்னு ஒரு படத்துல "கதையின் நாயகனாக" ராஜ்கிரண் போட்டு ரிலீஸ் பண்ணாங்க. பேருக்கு மட்டும் இல்லாம உண்மையிலயே கதையோட நாயகனா ராஜ்கிரண்  தான் இருந்து படத்த தூக்கி நிறுத்துனாரு. இப்போ அதோட பல மடங்கு ஃபோர்ஸோட இன்னொரு கதை  நாயகனா இறங்கி நம்மள சிரிக்கவும் அழவும் வச்சிருக்காரு. வேற யாரயும்  இந்த கேரக்டர்ல நினைச்சிக் கூட பாக்க முடியல. ஏன்.. மகாநடிகன் ப்ரகாஷ்ராஜ் கூட இந்த கேரக்டர் பண்ணிருந்தா இவ்வளவு impact கொண்டு  வந்துருக்க முடியாது. 

அப்பா அம்மா இல்லாத குழந்தையான விமல்ல தாத்தா ராஜ்கிரன் வளர்த்து ஆளாக்குறாரு. அமெரிக்கா  போறதயே வாழ்க்கை லட்சியமா நினைச்சி வாழ்ந்துகிட்டு இருக்க software engineer விமல், அமெரிக்கா  போறதுக்கு முன்னால இருக்க மூணு மாசமும் தாத்தா ராஜ்கிரன் கூட சந்தோஷமா இருக்கனும்னு முடிவு  செஞ்சி முதல் முறையா அவர சென்னைக்கு அழைக்கிறாரு. ராஜ்கிரன் சென்னைக்கு வந்து  இறங்குனப்புறம்  நடக்குற விஷயங்கள் தான் படம்.

எப்பொழுதும் குழந்தை மாதிரி சிரிப்ப முகத்துல வச்சிகிட்டு அந்த அழுக்கு வேட்டி சட்டையோட அவர்  நடந்து வர்றத பாக்கும் போதே அவர் விமல் தாத்தா மட்டுமில்லாம நம்மோட தாத்தாவுமாயிடுறாரு. புதுசா  ஒருத்தன் சென்னைக்கு வந்தா, அவன் எத எதயெல்லாம் பாத்து குறை சொல்றானோ, அசிங்கம்னு  சொல்வானோ அத்தனை விஷயத்தையும் தாத்தா ராஜ்கிரன வச்சி சிரிக்க வச்சும் சில இடங்கள்ல சிந்திக்க  வச்சும் டைரக்டர் சொல்லிருக்காரு. குறிப்பா பீச்ல முக்காடு போட்டுகிட்டு இருக்க ரெண்டு பேர பாத்து  ராஜ்கிரன் ஆறுதல் சொல்றதயும்அனகோண்டா படத்த பாத்துட்டுஏன் காட்டுக்குள்ள போவானேன்.. பாம்புகிட்ட கடிவாங்குவானேன்ங்குறதும் அல்டிமேட்.

யார் முதல்ல இத ஆரம்பிச்சதுன்னு தெரியல.. சென்னையின்னா அது வேற மாதிரி... அங்க யாரும் யார்கிட்டயும் ஒழுங்கா முகம் குடுத்து பேச மாட்டாங்க.. சிட்டிகாரங்கன்னாலே இப்டித்தான்... அவங்களுக்கு  அடுத்தவங்க பழக்கமே புடிக்காது. ஆமா நா தெரியாமத்தான் கேக்குறேன்.. சென்னையிலயே இருக்கவங்க  எத்தனை சதவீதம்யா? இன்னிக்கு நிலமைக்கு கணக்கெடுத்தா 20% பேர்தான். மத்த ஆளுங்க எல்லாம் இந்த  மாதிரி கிராமத்துலருந்து போய் செட்டில் ஆனவங்கதானே.. நீ கிராமத்தான் தானே.. நீ அடுத்தவண்ட பேச  வேண்டியது தானே... அடுத்தடுத்து வர்றவியிங்களும் அதே மாதிரி இருந்தா அப்புறம் எப்புடிடா இருக்கும்.  இதுல சிட்டில இருக்கவங்கள குறை வேற சொல்றது. இவியிங்களா ஒரு வட்டத்த போட்டுகிட்டு அத விட்டு  வெளிய வராம அடுத்தவன குறை சொல்றது.

பொதுவா படங்கள்ல குறைகள் அப்பட்டமா தெரியும். ஆனா இங்க அத்தனையும் ராஜ்கிரனோட நடிப்புல  காணாம போயிடுது. குறிப்பா விமலோட நடிப்பு. என்ன நடந்தாலும் ஒரே ரியாக்சன மட்டுமே கொடுக்குற விமல் தான் படத்தோட மைனஸ். படத்துல ராஜ்கிரனுக்கு நடிப்ப வெளிப்படுத்த எந்த அளவு ஸ்கோப்  இருக்கோ அதே அளவு பேரன் விமலுக்கும் இருக்கு. ஆனா நம்மாளுக்கு அதெல்லாம் ஒண்ணும் வரல. ஆனா  எல்லாத்துக்கும் சேத்து ராஜ்கிரன் நடிச்சிதள்ளிட்டு பொய்ட்டாரு. தப்புன்னு பட்டா கொஞ்சம் கூட  யோசிக்காகம பேசுறதும், யாருன்னு கூட பாக்காம பொளிச்சின்னு அடிக்கிறதுமா அப்படியே கிராமத்துத்து தாத்தாவாக நடிச்சிருக்காருன்னு சொல்றத விட வாழ்ந்துருக்காருன்னு தான் சொல்லனும்.

தெரியாம அவர் செய்யிற விஷயங்கள், விமலுக்கு கஷ்டங்களக்குடுக்க, "தெரியாம செஞ்சிட்டேன்ய்யா"ன்னு  அந்த சோகமான முகத்த வச்சிகிட்டு சொல்றாரு பாருங்க.. கொடூரம்... குறிப்பா விமலோட லேப்டாப்ப உடைச்ச அப்புறம் "அய்யா அது நீ வேலை செய்யிற பொட்டியாம்ல.. எனக்கு தெரியலைய்யா... அதான் உன்  ஆத்தா தாலில செஞ்ச மோதரத்த வித்து இத வாங்கிட்டு வந்தேன்.. உங்க ஆத்தா இறந்தப்ப கூட அவ  என்கூட தான் இருக்கான்னு நெனைச்சி எனக்கு கஷ்டமா இல்லைய்யா... ஆனா நேத்து நீ செஞ்ச  வேலையெல்லாம் வீணாப்போச்சின்னு தலையில கை வச்சிட்டு நின்னப்போ என்னால தாங்க  முடியலைய்யான்னு " சொன்னோன்ன  background SPB பாட்ட போடுவாங்க.. பாருங்க.. அப்ப்பா...  சத்தியமா ரொம்ப நாள் ஆச்சி இந்த மாதிரி சீனெல்லாம் பாத்து.

கடைசியில தாத்தாவ காணும்னு எல்லாரும் தேடும்போது அவங்கள விட "தாத்தாவுக்கு எதுவும்  ஆயிடக்கூடாதுன்னு நம்ம மனது துடிக்குது. தாத்தா இறந்துபோயிடுற மாதிரி மட்டும் காட்சி  வச்சிடக்கூடாதுன்னு நினைச்சிகிட்டே இருக்க, கடைசில அதைவிட கொடூரமான ஒரு க்ளைமாக்ஸ் வச்சி அழ வச்சிட்டாங்க. அந்த ஒரு சீன்ல மட்டும் தான் விமல் நடிக்க கொஞ்சம் ட்ரை பண்ணிருக்காரு. வேற ஒரு
நல்ல ஹீரோவ போட்டுருந்தா இந்தப் படத்தோட ரேஞ்சே வேற. 

 இன்னொரு முக்கியமான விஷத்துக்காக டைரக்டர பாராட்டியே ஆகனும். படத்துல இருக்க கேரக்டர்கள்  ரொம்ப கம்மி. கதைக்கும் காட்சிகளுக்கும் தேவையான கேரகடர்களத் தவற வேற எந்த extra வும் படத்துல  இல்லை. அதே மாதிரி ஒரு காட்சி கூட தேவையில்லாத காட்சியே இல்லை. எல்லாமே கரெக்டாவும்,  யோசிச்சும் தெளிவா பண்ணிருக்காரு. சூப்பரான ஸ்க்ரீன் ப்ளே. மத்தப்படங்கள் மாதிரி வச்ச டைட்டிலுக்கு  justification  குடுக்குற மாதிரி ஒரு காட்சி 'வந்துட்டனுங்க மஞ்சப்பைய தூக்கிகிட்டு ஊர்லருந்து" ன்னு இவரும் வச்சிருவாரோன்னு பயந்தேன். நல்ல வேளை அந்த விஷயத்துலயும் டைரக்டர் தெளிவாவே இருக்காரு.

ரெண்டு பாட்டு சூப்பர். "பாத்து பாத்து"  பாட்டுக்கு cherography செம. முன்னாலயே சொன்னமாதிரி "ஆகாச  நிலவு தான்" அட்டகாசம்.. இப்போ என்னோட ரிங் டோன், ஹலோ டியூன் அத்தனையும் அது தான். லஷ்மி மேனன் ஓக்கே.. நிறைய காட்சிகள்ல அழகா காமிச்சிருக்காங்க.


மொத்ததுல மஞ்சப்பை ராஜ்கிரனோட one man show. கண்டிப்பா பாருங்க. நிச்சயாமா ஏமாத்தாது. நா  தொலைச்சது எனக்கு கெடைச்ச மாதிரி உங்களுக்கும் நீங்க தொலைச்ச சினிமா கண்டிப்பா இதுல கிடைக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...