நாட்டுல
பெண்களுக்கு ஒரு ப்ரச்சனைன்னா கூட்டம் கூட்டமா பொங்கி எழுறாங்க. மாட்ட வெட்டுனா ஒரு
குரூப்பு காப்பாத்த கிளம்புறாய்ங்க. ஜல்லிக்கட்ட தடுக்க ஒரு குரூப்பு கிளம்புனாய்ங்க.
சேவ் டைகருங்குறாய்ங்க. அட நாய கல்லக் கொண்டு
எறிஞ்சா கூட காப்பாத்த புளூ க்ராஸூ ரெட் கிராஸுன்னு என்னென்னமோ சொல்றாய்ங்க. ஆனா நாட்டுல
இந்த பேச்சிலர் பசங்களுக்கு நடக்குற கொடுமைய தட்டிக்கேக்க ஒரு சின்ன சங்கமாச்சும் இருக்காய்யா?
எத்தனை கஷ்டத்ததான் அவனும் தாங்குவான். படிச்சி
முடிச்சி அவன் அவனுக்கு வேலை கெடைக்கிறதே பெரும்பாடா இருக்கு. அப்டி வேலை கெடைச்சி
அவன் ஒரு ஊருக்கு வந்தா அவன் நிலமையப் பாருங்க.
1. சிங்கிள்னாலே நம்ம சமுதாயத்துல நம்மள ஒரு
ஆளாவே மதிக்க மாட்டாய்ங்க. “சார் தனியாவா படம் பாக்க வந்தீங்க” “சார் தனியாவா ட்ராவல்
பன்றீங்க” நாங்க ஃபேமிலியா வந்துருக்கோம். கொஞ்சம் ஷிஃப்ட் ஆயிக்கிறீங்களா? ஒரு பேச்சிலர உச்சகட்ட கடுப்புக்கு ஆளாக்குர வார்த்தைகள்னா
அது “சார் நாங்க ஃபேமிலியா வந்துருக்கோம்” ங்குறது தான். கவுண்டர் சொல்றமாதிரி அவனுங்களப்
பாத்து “இன்னிக்கு ஒரு நாள் உனக்கு ஃபேமிலி இல்லன்னு நினைச்சிக்கடா” ன்னு சொல்லத்தோணும்.
ஆனா கைக்கொழந்தையோட நிக்கிற அம்மாவுக்காக மாறி உக்காருவான்யா நம்ம பேச்சிலரு.
2. நல்ல ஏரியாவுல ஒரு வீடு குடுக்கமாட்டாய்ங்க.
வீட்டையெல்லாம் சுத்தி காமிச்சிட்டு ”அஞ்சி மாச வாடகைய அட்வான்ஸா குடுத்துருங்கோ…”
ன்னு எல்லாத்தையும் சொல்லி முடிச்சி கடைசியா ஒரு கேள்வி “நீங்க பேமிலியா பேச்சிலரா?”ம்பாய்ங்க.
”எத்தனை தடவடா இதே கேள்விய கேப்பீங்க?” ன்னு
சிவாஜி ரஜினி மாதிரி நம்ம நினைச்சிட்டு “பேச்சிலர்” தான்ம்போம். இங்க ஒரே ஃபேமிலியா
இருக்கா… அதனால பேச்சிலர்ஸ்க்கு வீடு குடுக்குறதில்லை” ன்னு பல்ப குடுத்து அனுப்பிருவாய்ங்க.
ஒருதடவ வீடுபாக்க போனப்ப இப்டி சொன்ன ஒரு மாமாகிட்ட “வீட்டுல வயசுப்பொண்ணுங்க எதாவது
இருக்காங்களா மாமா?” ன்னோம் “இருக்காங்களே.. ஏன் கேக்குறேள்?” ன்னாரு. “இல்ல பேச்சிலருக்கு
எதுவும் கட்டி வச்சிரப்போறேள். பாத்து நல்ல ஃபேமிலி மேனுக்கா கல்யாணம் பன்னிக் குடுங்கோ…”
ன்னதும் தூக்கி அடிக்கிறதுக்கு அவர் பஞ்ச பாத்திரத்த தேட நாங்க எஸ்கேப்பு.
3. ஆபீஸ்ல சனிக்கிழமை ஞாயித்து கிழமையில வேலைக்கு
வர வைக்கனும்னா மொதல்ல பேச்சிலரத்தான் தேடுவாய்ங்க. அதாவது ஃபேமிலி மேனுக்குதான் சனி
ஞாயிறுல வேலை இருக்க மாதிரியும் பேச்சிலர்லாம் சும்மா திரியிற மாதிரியும். ஏண்டா நீங்க
ஃபேமிலியாயிட்டீங்க. நாங்க ஆவ வேணாமா? லீவுகீவு குடுத்தாதான நம்மளும் ஃபேமிலியாவுறதுக்கு
எதாவது ஏற்பாடு பன்ன முடியும்.
4. சரி சனி ஞாயிறு எப்பவாச்சும் லீவாச்சேன்னு
ஃப்ரண்டு வீட்டுக்கு எதுவும் போனா சேகரு செத்தான். ”அப்புறம் தம்பி எப்ப கல்யாணம்?
உன் செட்டுல எல்லாருக்கும் ஆயிருச்சி… நீ எப்ப பன்னிக்க போற?” உடனே அதுக்கு நாம நமக்கு
லட்சிய வெறிதான் முக்கியம்னு மன்னன் கவுண்டர் மாதிரி “ தண்ணியிலே இருக்கும் மீன் கருவாடாகலாம்..
ஆனால் கருவாடு மீனாகாது.. எங்களுக்கு லட்சியம் தான் முக்கியம்.. என்ன உடமாட்டேங்குறாங்கம்மா…”
ன்னு எதாவது சொல்லி எஸ்கேப் ஆகி வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிரும்.
5. நம்ம வீட்டுல ஒரு ஃபங்ஷன்னா ஒரு இடத்துல
நிக்கவிடாமா நம்மளயேதான் வேலை சொல்லி கொல்லுவாய்ங்க. கல்யாணம் பன்னவிய்ங்க சேஃப்டியா
ஒரு ஓரமா நின்னு “வாங்க வாங்க… காப்பி சாப்டிங்களா.. டிபன் சாப்ட மறந்துடாதீங்க” ன்னு
போற வர்றவனுங்கள கேக்குற ரொம்ப கடினமான வேலைய பாத்துகிட்டு இருப்பாய்ங்க.
6. பேச்சிலரா இருக்கவன் நிம்மதியா ஒரு ஃபோன்கூட
பேச முடியாது. காச எடுத்துட்டாய்ங்கன்னு கஸ்டமர் கேருக்கு ஃபோன் போட்டு பேசிகிட்டு இருந்தா
கூட சைடுல போறவன் “என்ன மச்சி.. ஃபோன்ல ஆளா? நடத்து நடந்து” ம்பானுங்க. “கடுப்பேத்தாம போடா… ஆள் இருந்தா உன் கூடல்லாம் ஏண்டா
இன்னும் நா சகவாசம் வச்சிருக்கேன்”
7. போன மாசம் வரைக்கும் நம்மளோட ஒரே வீட்டுல
குப்பைக்கு நடுவுல பெரண்டுகிட்டு இருந்துருக்கும் நாயி. கல்யாணம் ஆயி ரெண்டு மாசத்துல
நம்ம வீட்டுக்கு வந்து “என்னடா.. வீட்ட பெருக்க மாட்டீங்களா.. இவ்ளோ குப்பையா இருக்கு?”
ன்னு ஒரு ரியாக்சன் விடுவான் பாருங்க. அவனுக்கு ஒரு பாயாசத்த போடனும்போல தோணும்.
8. அதுவும் இந்த ரூம் சுத்தம் பன்றதும், துணி
துவைக்கிறதும்தான் பேச்சிலர் வாழ்க்கையில மிகக் கடினமான ரெண்டு விஷயம். திடீர் திடீர்னு
ஊர்லருந்து எவனாவது நம்ம ரூமுக்கு விசிட் அடிப்பாய்ங்க. அதுவும் பஸ் ஏறுன அப்புறம்தான்
நமக்கு ஃபோன் பன்னுவாய்ங்க. அதுக்கப்புறம் அரக்க பறக்க அவிய்ங்களுக்காக சுத்தம் பன்னனும்.
இல்லைன்னா ஊர்ல போய் கண்டத வத்தி வச்சிருவாய்ங்க. எவன் எப்ப வீட்டுக்கு வருவானோன்னு
ஒரு பீதிலயே வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கும்.
9. வேற யாரும் அட்வைஸ் பன்றது கூட பரவால்லை.
ஆனா போனமாசம் கல்யாணம் ஆன நம்ம நண்பன் வந்து நம்மளப் பாத்து அக்கரையா “அப்புறம் மச்சி…
எப்படா கல்யாணம்… சீக்கிரம் பண்ணுடா… காலாகாலத்துல இதெல்லாம் பன்னிடனும்டா” ம்பான்
பாருங்க. ”கல்யாணம் ஆகலன்னு கூட கவல இல்ல மச்சான்.. நீயெல்லாம் அட்வைஸ் பன்ற பாத்தியா…”
நேரா செவத்துல போய் டமார் டமார்ன்னு மோதிக்கலாம்
போல இருக்கும்.
10. பல வருஷமா நம்ம கூட ஒண்ணா ஆபீஸ் கேண்டீன்ல
சாப்பிட்டுக்கிட்டு இருக்கவன் திடீர்னு ஒரு நாள் “மச்சி ஆபீஸ் சாப்பாட்டுல எதோ கலக்குறானுங்கடா..
வயித்துக்கு ஒத்துக்கமாட்டேங்குது” ன்னு ஆரம்பிச்சான்னா மறுநாள்லருந்து அவன் வீட்டு
சாப்பாடு கொண்டு வரப்போறான்னும் நம்ம அதுக்கு மேல அவன கேண்டீனுக்கு சாப்ட கூப்டக்கூடாதுன்னும்
நம்மளே புரிஞ்சிக்கனும். மீறி கூப்டா பங்கம் நமக்குத்தான்.
11. சரி கண்டவன்லாம் வீட்டு சாப்பாடு கொண்டு
வர்றானேன்னு நம்மளும் வீட்டுல சமைச்சி சாப்பாடு கொண்டு வருவோம்னு எங்காளு பேச்சிலரும்
ரெண்டு நாள் அரிசி பருப்பெல்லாம் வாங்கிட்டு போய் சமச்சி கொண்டு வருவான். சமைச்சத சாப்டப்ப
இருக்க ஜாலியா இருக்கும். ஆனா சமைச்ச பாத்திரத்த கழுவனுமேன்னு நினைக்கும்போது தான்
சோலி முடிஞ்சி போகும். அப்புறம் ரெண்டு நாள்ல “கேண்டீன் சாப்பாடு ஈஸ் த சீக்ரெட் ஆப்
மை எனர்ஜி” ன்னு திரும்ப பழைய நிலமைக்கே போயிடுவோம்.
12. எக்காரணம் கொண்டும் சமீபத்துல கல்யாணம் ஆன
நண்பய்ங்க கூட மட்டும் படத்துக்கு போக ப்ளான் மட்டும் போடவே கூடாது. “மச்சி நம்ம ரெண்டு
பேரும் படத்துக்குப் போய் ரொம்ப நாளாச்சில்லா.. புக் பன்னுடா போவோம்ப்யாங்க. புக் பண்ணிட்டு
தியேட்டருக்கு நம்ம போயிருவோம். அப்ப ஒரு ஃபோன் வரும். “மச்சி நா நம்ம படத்துக்கு வரத்தாண்டா
கெளம்பிட்டு இருந்தேன்… அந்த நேரம் பாத்து என் மாமனாரும் மாமியாரும் ஊர்லருந்து வந்துட்டாங்கடா..இப்ப
நா வந்தா “அவ கோச்சிக்குவா” (நோட் திஸ் பாய்ண்ட்) இன்னொரு நாள் பாக்கலாம்டா..” ன்னு
நம்மள டீல்ல விட்டுருவாய்ங்க. இதே மாதிரி கெளம்பும்போது பூனை குறுக்க போயிருச்சி…குழந்தை
சட்டையில ஆய் போயிருச்சின்னு ஒவ்வொரு காரணம் சொல்லி நம்மள காண்டேத்தி சாவடிப்பானுங்க.
13. அப்புறம் இன்னும் சில பேரு இருக்கானுங்க…
எதுக்கெடுத்தாலும் “உங்களுக்கென்ன ஜி.. நீங்க பேச்சிலர்… ஜாலி லைஃப்… எஞ்ஜாய் பன்றீங்க…
” ன்னே நம்மளப்பாத்து சொல்லிக்கிட்டு திரிவாய்ங்க. அப்புறம் என்ன நொன்னைக்கு நாயே நீ
கல்யாணம் பன்ன.. ஜாலியாவே இருக்கவேண்டியது தான…
14. எல்லாத்துக்கும் மேல பேச்சிலருக்கு இருக்க
மிகப்பெரிய குழப்பம் சண்டே மதியானம் என்ன சாப்பாடு சாப்புடுறதுங்குறது தான். பதினொரு
மணிக்கு எழுந்து “வீட்டுல சமைக்கலாமா.. இல்லை வழக்கம்போல பிரியாணியே திங்கலாமா இல்லை
ஆந்த்ரா மெஸ் பக்கம் ஒரு ரவுண்டு பொய்ட்டு வருவோமாங்குற கன்பீசன்லயே மூணு மணி ஆயிப்போயிரும்.
அதுக்கப்புறம் பக்கத்துல இருக்க பாய் கடைக்கு போய் மீதம் இருக்க குஸ்காவ மட்டும் வாங்கித்திண்ணுட்டு
நாளக் கழிப்போம்.
ஆகவே மக்கழே.. பேச்சிலரா இருக்கது ஒண்ணும் சாதாராண விஷயம் இல்ல. எத்தனை சிக்கல், எத்தனை டென்ஷன், எத்தனை கண்ணீர், எத்தனை நன்றி, இன்னும் எத்தனை எத்தனையோ...
யாருப்பா அது ஓரமா உக்காந்து அழுகுறது? ஓ கல்யாணமானவரா.. ந்தா இருங்க வர்றேன்.
நன்றி : நண்பன் அசால்டு அசார், நண்பன் பாலி, நண்பன் கார்த்தி
