Saturday, December 4, 2021

CHHORII (2021 )


Share/Bookmark

 கண்ணுக்கெட்டிய தூரம் வரை இரண்டு ஆள் மட்டத்திற்கு வளர்ந்த அடர்ந்த கரும்புக் காடு. அதற்கு நடுவில் இருக்கும் பாதி சேதமடைந்த ஒற்றை வீடு. அதில் இளம் மஞ்சள் நிறத்தைக் கக்கும் ஒருசில விளக்குகள்.  பட்டுப்போன ஒரு பிரம்மாண்டமான மரம். அதன் கீழே ஒரு பாழடைந்த கிணறு. அந்த வீட்டில் வெளியே செல்ல முடியாமல் மாட்டிக்கொள்ளும் ஒரு கர்பிணி. இவையனைத்தையும் ஒருசேரக் கற்பனை செய்தாலே அடிவயிற்றில் தானாகப் பயம் உண்டாகும்.

கடன் தொல்லையால் சிலநாட்கள் யார் கண்ணிலும் படாமலிருக்க, கற்பிணிப் பெண் ஒருவரும் அவரது கணவரும் மொத்தம் ஐந்தே வீடுகள் உள்ள ஒரு கிராமத்திற்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். அங்கு செல்வதால் ஏற்படும் விளைவுகளை திகிலுடன் கூறியிருப்பதுதான் இந்த CHHORII.

படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் ஆரம்பிக்கும் திகில் கலந்த சுவாரஸ்யம் படத்தின் இறுதிநிமிடம் வரை நம்மை அப்படியே உட்கார வைக்கிறது. இரவில் நடக்கும் காட்சிகளாகட்டும், பகலில் நடக்கும் காட்சிகளாகட்டும்.. எந்த வேறுபாடுமில்லாமல் பயத்தை விதைத்துக் கொண்டே இருக்கின்றன.

மொத்தமே நான்கைந்து கதாப்பத்திரங்கள் தான். ஒரே லொக்கேஷன். மொத்தப்படமும் செட் போட்டு ஸ்டூடியோவிற்குள் தான் எடுத்திருப்பார்கள் போல. மிரட்டுகிறது.

Tumbbad (2018) எப்படி நமக்கு ஒரு வித்யாசமான அனுபவத்தைக் கொடுத்ததோ அதே போல இந்தச் CHHORII  யும் ஒரு வித்யாசமான திகில் படம் பார்த்த அனுபவத்தைக் கொடுக்கும்.

ஹாரர் த்ரில்லர் விரும்பிகள் கட்டாயம் பார்க்கலாம். இரவில் பார்த்தால் எஃபெக்ட் பயங்கரமாக இருக்கும்.

Saturday, November 20, 2021

பொன் மாணிக்கவேல்!!


Share/Bookmark

 


Caution : மொரட்டு ஸ்பாய்லர்ஸ் ahead!!


வின்னர் திரைப்படத்தில் கிரண் வீட்டிற்குள் ஏறிக் குதிக்கும்போது வடிவேலு கயிற்றை வைத்துக்கொண்டு எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருப்பார். என்னடா செய்ற என்பதற்கு “நா என்னமோ பன்றேன் போடா” என்பார். கிட்டத்தட்ட பொன்மாணிக்கவேல் படத்து இயக்குனரும் இந்த வடிவேலுவின் மனநிலையில் தான் இருந்திருப்பார் போல. என்ன செய்கிறார் படம் எங்கே செல்கிறது என்பது கடைசி வரைக்குமே அவருக்கே வெளிச்சம்.


ஆரம்பக் காட்சியில் நீதிபதி ஒருவர் இரண்டு வெவ்வேறு துப்பாக்கியால் சுடப்பட்டு, தலை தனியாக வெட்டபட்டு இறந்துகிடக்கிறார். விவேக் சொல்லும் கொன்னு, கொலைபண்ணி, மர்டர் பன்னிருவேண்டா டோங்க்ரே என்பது இதுதான் போல. 


யார் கொலையாளி என்பதைக் கண்டறிய போலீஸ் திணற, துப்பாக்கி ஸ்பெசலிஸ்ட் பொன் மாணிக்கவேல் வரவழைக்கப்படுகிறார். அவர் எதையுமே வித்யாசமாகச் செய்பவர். அதாவது சீரியாக இன்வெஸ்டிகேஷன் செய்வதற்காக செல்லும் இடங்களில் கேஸைப் பற்றிப் பேசாமல் “டீ சாப்டுவோமா” வடை சாப்டுவோமா” என சம்மந்தம் இல்லாமல் பேசி தான் கேஷூவலாக இருப்பதை மற்றவர்களுக்கு காட்டுபவர். ஆரம்பக் காட்சிகளில் பொன்மாணிக்கவேலின் அதிகப் பிரசங்கித் தனம்  தாங்காமல் நமக்கே அவர் பொடனியில் பொளேர் என்று ஒன்று வைக்கவேண்டும் என்று தோன்றும் அளவுக்கு இருக்கிறது. 


நீதிபதி சுடப்பட்ட இடத்தில் புல்லட்டே கிடைக்கவில்லை என்கிறார்கள். ஆனால் ஃபோரன்ஸிக் ரிப்போர்ட்டில் சுடப்பட்டது என்ன துப்பாக்கி, எப்போது வாங்கிய துப்பாக்கி, யார் யாரிடம் அது இருக்கின்றது என்பது வரை டீட்டெய்ல் கொடுக்கிறார்கள். எப்படி என்றே தெரியவில்லை. 


இது ஒரு முறையான மர்டர் இன்வெஸ்டிகேஷன் கதையாகவும் செல்லவில்லை. ஒரு கமர்ஷியல் போலீஸ் கதையாகவும் செல்லவில்லை. ஒரு மாதிரியாகச் செல்கிறது.


பல இன்வெஸ்டிகேஷன்களுக்குப் பிறகு கொலையாளி முள்ளும் மலரும் மகேந்திரன் எனக் கண்டறிகிறார்கள். வயது முதிர்ந்த மகேந்திரனின் உடல்நிலையைப் பார்த்து நமக்கே பரிதாபமாக இருக்கிறது. ஆனால் போலீஸில் கமிஷ்னர் முதல் ஐஜி வரை அவர்தான் அந்த மூன்று கொலைகளை செய்தார் என்று நம்புக்கிறார்கள். ஹியூமன்ஸாடா நீங்கல்லாம்?


ஒரு தொழிலதிபரை இன்னும் சில மணி நேரத்தில் கொலை செய்து விடுவதாக கொலைகாரன் மிரட்டுகிறான். அந்த தொழிலதிபரின் வீட்டைச் சுற்றி நூற்றுக்கணக்கில் போலீஸ் குவிக்கப்பட,பொன் மாணிக்கவேலும் அதில் இருக்கிறார். 


ஆனால் கொலைகாரன் இவற்றையெல்லாம் தாண்டி தொழிலதிபரை கொன்றுவிட, போலீஸ் மொத்தப்படையும் அந்த இடத்திற்கு விரைகிறது. பொன்மாணிக்கவேல் துப்பாக்கியும் கையுமாக “சார் கொலைகாரன் தொழிலதிபரை சுட்டுட்டான். நான் அவனை சுட்டுட்டேன்” என்கிறார். உடனே அனைவரும் “வெல்டன் பொன்மாணிக்கவேல்” “வெல்டன் பொன்மாணிக்கவேல்”  என்கிறார்கள். ஏண்டா நீங்க யாரக் காப்பாத்தனும்னு வந்தீங்களோ அவன் பொனாமா கெடக்கான். இதுல என்ன வெல்டன்? எதுக்கு வந்தோம்னே தெரியாம சமயக்காரனாவே மாறிட்டீங்களேடா?


அதயெல்லாம் விட உச்சகட்ட காமெடி ஒன்று இருக்கிறது. மகேந்திரனை பொன்மாணிக்கவேல் ஒரு மார்ச்சுவரிக்கு அழைத்துச் சென்று, அங்கிருப்பவரிடம் மகேந்திரனைக் காட்டி “அண்ணே ‘ஓ’ பாசிடிவ் ப்ளட் குரூப்புல ஐயா மாதிரியே ஒரு பாடி வேணும்” என்று கேட்கிறார். 


டேய்… என்னடா துணிக்கடையில போய் ”அண்ணே 34 சைசுல ரெண்டு பேண்ட் குடுங்கண்ணேன்னு கேக்குற மாதிரி கேக்குறீங்க? பொணம்டா

இப்படி எக்கச்சக்கமாகப் போகும் படத்தின் படத்தின் ஒரே ஆறுதல் நிவேதா “பெத்த”ராஜ்  மட்டும்தான். இமானின் பின்னணி இசை ஓகே.  


மொத்தத்தில் பொன் மாணிக்கவேலின் முதல் அரைமணிநேரம் நம்மை பயங்கரமாக சோதிக்கும். அப்புறம் அதுவே பழகிரும். 

Saturday, November 6, 2021

"அண்ணாத்த" ரஜினியின் பாத்திரப் படைப்பு!!


Share/Bookmark


அண்ணாத்தயில் மிக அபத்தமாக நான் உணர்ந்தது தலைவரின் கதாப்பாத்திரம். ஆட்டோக்காரனாக, டாக்ஸி ட்ரைவராக, மூட்டை தூக்குபவராக, திருடனாக, ரவுடியாக அனைத்து வித அடித்தட்டுக் கதாப்பாத்திரங்களிலும் நடித்து நடித்து மக்களுடன் நெருக்கமானவர்.


ஆனால் இன்றைய சூழலுக்கு அவர் அப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கக் கூடாது. நடிக்கவும் முடியாது. அந்தக் காலகட்டத்தை அவர் எப்போதோ கடந்துவிட்டார்.


இன்றைய சூழலில் மக்களை வழிநடத்தும் ஒரு தலைவன்  அல்லது அதற்கு இணையான ஒரு கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடிக்கவேண்டும். அப்படிப்பட்ட கதாப்பாத்திரங்கள் மட்டுமே அவருடைய இமேஜூக்கு சரியாக இருக்கும். சொல்லப்போனால் விஜய், அஜித் கூட இனிமேல் அப்படிப்பட்ட கதாப்பாதிரங்களில் நடிக்க மாட்டார்கள்.


தலைவர் அந்த ஊரில் பிரெசிடெண்ட் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர் செய்துகொண்டிருப்பது தேவையற்ற வம்புகளை வளர்த்து கேஸ் வாங்கிக்கொண்டு காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுக்கொண்டிருக்கிறார்.


அவர் எதற்காக அடித்தார் அல்லது எதற்காக அடிப்பார், அவர் போட்ட சண்டைகள் மக்கள் நலனுக்கான சண்டைகளா என்பது கூட விளக்கப்படவில்லை. மாறாக  வெங்காயம் வெட்டச் சொல்லும்,  ஓடிப்பிடித்து விளையாடும் அப்பாவி மாப்பிள்ளைகளை தூக்கிப் போட்டு பந்தாடுவதாக காண்பிக்கிறார்கள். 


அதுமட்டுமல்லாமல் தங்கைக்கு வெளியூர், வெளிநாட்டு மாப்பிள்ளைகளை பார்க்கச் சொல்லும் தன்னைவிட வயதான உறவினர்களின் கன்னங்களை பழுக்க வைக்கிறார். இவையெல்லாம் அந்தக் கதாப்பாத்திரத்தின் மதிப்பை வெகுவாகக் குறைக்கிறது.


அடுத்து பிரகாஷ்ராஜின்  கெட்டப் பார்ப்பதற்கு ஒரு வயதான, மதிப்பான ஒரு பெரியவராகக் காண்பிக்கிறார்கள். அவர் செய்யும் வில்லத்தனம் கூட ரொம்பப் பெரிய அளவில் இல்லை. சட்டப்படி பிரகாஷ்ராஜ் பக்கமே நியாயம் இருக்கிறது எனும்போது பார்க்கும் நமக்கு அவர் மீது எந்த வெறுப்பும் வரவில்லை.


ஆனால் அவரை ஊர்த்திருவிழாவில் காளையன் அனைவருக்கும் முன்னர் போட்டு அடிக்கிறார். அந்தக் காட்சியில் "நீதான் உங்க குடும்பத்துக்கு ஹீரோ" என்று வசனம் பேசி சமாளித்தாலும் பிரகாஷ் ராஜ் கதாப்பாத்திரத்துன் மீது பரிதாபமும் காளையன் கதாப்பாத்திரத்தின் மீது வெறுப்புமே எஞ்சுகிறது. 


அடுத்து குஷ்பூ, மீனா சம்பந்தப்பட்ட காட்சிகள். "எங்கக்காவ நீ கரும்புக் காட்டுக்குள்ள கூட்டிட்டு போனல்ல, எங்கக்காவ நீ சினிமாவுக்கு கூட்டிட்டு போனல்ல" என்பன போன்ற வசனங்களும் அதற்கு காளையன் வெட்கப்பட்டு எதோ சொல்லி சமாளிப்பதும் காளையன் கதாப்பாத்திரத்தை அதள பாதாளத்தில் தள்ளுகிறது. 


இரண்டாம் பாதியில் வில்லனைப் பழிவாங்கப் புறப்படுகிறார். கல்கத்தாவுக்கே செல்லாத ஒருவர் கல்கத்தாவில் காலூன்றியிருக்கும் ஒரு மிகப்பெரிய வில்லனை அழிக்கவேண்டும் எனும்போது அதற்கு திரைக்கதையில் படிப்படியான முன்னேற்றம் இருந்திருக்கவேண்டும்.


ஆனால் காளையன் செய்வதோ நேராக வில்லன் அலுவலகத்திற்குச் சென்று, சூரி, ஜார்ஜ் மரியான் போன்றவர்களின் உதவியோடு லாரிகளை பாம் வைத்து வெடிக்கிறார். அடுத்து வில்லனின் காரில் பெட்ரோல் ஊத்திக் கொளுத்துகிறார். வில்லனின் ஆட்களையே மிரட்டி வில்லனைக் கொல்லச்சொல்லி பயமுறுத்துகிறார். இதற்கு முதல்காட்சியிலேயே லாரியில் போட்ட பாமை அந்த பில்டிங்கின் பேஸ்மெண்டில் போட்டு விட்டிருந்தால் வில்லனின் சோலி அப்போதே முடிந்திருக்குமே. 


தங்கை மீது பாசம் கொண்டவர் என்கிற ஒரு விஷயத்தை பெரிதுபடுத்த காளையனை எக்கச்சக்கமாக சேதப் படுத்தியிருக்கிறார்கள். அதுவும் போகிற வருகிறவர்களை அடித்து அளப்பறை செய்கிறாரே தவிற அண்ணன் தங்கை பாசத்தை விளக்கும் உணர்ச்சிகரமான ஒரு காட்சி கூட இல்லை. 


எழுபது வயதில் ஒருவர் இதை செய்வதே பெரிது என்கிற வரிகளை நிறைய இடங்களில் பார்க்கமுடிகிறது. எழுபது வயதுக்காரர் ஒழுங்காக நடிக்கவில்லை, ஆட முடியவில்லை, ஓடமுயவில்லை அதனால் படம் சரியில்லை என்கிற பொழுது அந்த வாதம் சரியானது.


ஆனால் எழுபது வயதில் அவரால் மூன்று பாடல்களுக்கு நடனம் ஆட முடிகிறது. ஐந்து ஆறு சண்டைக் காட்சிகளை செய்ய முடிகிறது. முன்பு இருந்த படங்கள் அனைத்தையும் விட சுறுசுறுப்பாக இந்தத் திரைப்படத்தில் இருக்கமுடிகிறது எனும்போது அது ஏன் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதே கேள்வி.


மோகன்லாலின் லூசிஃபர் திரைப்படத்தைப் பார்க்கும்போது பொறாமையாக இருந்தது. மோகன்லால் பாடல்களுக்கு ஆடிக் கஷ்டப்படவில்லை. சண்டைக் காட்சிகளுக்கு மெனக்கெடவில்லை. ஆனால் அந்தக் கதாப்பாத்திரம் காண்பிக்கப்பட்ட விதம், அந்தக் கதாப்பாதிரத்தின் மதிப்பை எங்கோ கொண்டு சென்றது.


நடிகர் மகேஷ்பாபு கடந்த சில படங்களில் நடித்த கதாப்பாத்திரங்கள் ஒரு ஊரைத் தத்தெடுத்து முன்னேற்றும் செல்வந்தனின் மகன், நாட்டைத் திருத்தும் முதலமைச்சர், மக்களுக்காகப் போராடும் ஒரு மிகப்பெரிய கம்பெனியின் CEO, சக வீரனின் குடும்பத்துக்காகப் போராடும் ஒரு ஆர்மி ஆஃபீசர்.  


நாற்பதுகளில் இருக்கும் ஒரு நபரே இப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களைத் தெரிவு செய்யும்போது எழுபதுகளில் இருக்கும் நம்முடைய கதாப்பாத்திரங்கள் எப்படி இருக்க வேண்டும்?


அண்ணாத்தயின் காளையன் கதாப்பாத்திரம் ரஜினியின் இமேஜிற்கு இம்மியளவாவது உதவுகிறதா என்பதை உங்கள் யூகத்திற்கே விடுகிறேன்.


இதில் சோகம் என்னவென்றால், இந்தத் திரைப்படத்திற்குப் பிறகுதான் ரஜினி அரசியல் பிரவேசம் செய்யவிருந்தார். 

Wednesday, November 3, 2021

ஒரு இனிய தீபாவளிப் பயணம்!!


Share/Bookmark





வழக்கமாக தீபாவளி பொங்கலுக்கு பேருந்தில் தான் ஊருக்குச் செல்வது வழக்கம். என்னுடைய ஆஸ்தான ராஹத் ட்ராவல்ஸ் சென்ற மாதம் எதோ சிக்கலில் சிக்கியதால் மொத்த பேருந்து சேவையும் முடங்கியிருக்கிறது. இந்த முறை வித்யாசமாக இருக்கட்டுமே என்று இரண்டு வாரம் முன்பு ரயிலில் முன்பதிவு செய்து வைத்திருந்தேன்.வேறு பேருந்துகளில் முன்பதிவு செய்யவில்லை.

வெய்டிங் லிஸ்ட் 50 க்கு மேல் இருந்தது. சரி எதற்கும் நம்முடைய அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது எனப் பார்க்கலாம் என்று காத்திருந்தேன். 


நமக்குத்தான் அதிர்ஷ்டம் கிளு கிளுன்னு இருக்குமே. சார்ட் வந்த பிறகு வெய்ட்டிங் லிஸ்ட் 33 இல் வந்து நின்று "வெளியே போங்கடா அயோக்ய ராஸ்கல்களா" என்றது IRCTC.


சரி ரெட் பஸ்ஸில் பேருந்துகளை தேடினேன். வழக்கமாக 500 ரூபாய் டிக்கெட் 1300, 1600, 1900 என ஒவ்வொரு ட்ராவல்ஸூம் அவரவர்களுக்கு ராசியான எண்களை டிக்கெட் தொகையாக நிர்ணயித்திருந்தனர். அதுவும் அனைத்து பேருந்துகளிலும் மீதமிருந்தது கடைசி வரிசையில் நடுவில் இருந்த சீட் மட்டுமே.


அந்த சீட்டில் பிரச்சனை என்னவென்றால் சாயவும் முடியாது முன்னால் கால் வைக்கவும் முடியாது. அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது ஓட்டுனர் கொஞ்சம் அழுத்தி பிரேக்கை மிதித்தால் மாயி வடிவேலுவைப் போல் முன்னால் போய் விழுந்து மூக்கட்டை பெயர்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதனாலேயே அந்த சீட்டை பெரும்பாலும் தெரிவு செய்வதில்லை.


ஒரு சில SETC சிறப்புப் பேருந்துகளும் ரெட் பஸ்ஸில் காண்பித்தது. ஆனால் அத்தனையும் ஊர்ப்பக்கம் ஓடும் (3+2) சீட்டர்கள். அதில் செல்லலாம். ஆனால் பத்து மணி நேரம் பயணித்து சென்றால் மறுநால் முதுகை கம்பி கட்டித்தான் நிமிர்த்த வேண்டியிருக்கும் என்பதால் அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.


மேலும் தேடியபோது கண்ணில் பட்டது "ஜோதி லட்சுமி ட்ராவல்ஸ்"


"எலே.. என்னது ஜோதி லச்சுமியா... யாரு இவா.. இப்டி ஒரு பஸ்ஸ நாம பாத்ததே இல்லையே" என எனக்குள் இருந்த GP முத்து ஒரு நிமிடம் வெளிப்பட்டார்.


டிக்கெட் விலை 900 ரூபாய். நடுவில் கூட காலி சீட்டுகள் இருந்தது. அதைவிட முக்கியமாக இந்தப் பேருந்தில் சென்றால் வேறு பேருந்திற்கு மாறாமல் வீட்டிற்கு அருகிலேயே இறங்கிக்கொள்ளலாம். ஆனால் 10:15 க்குத்தான் கோயம்பேடில் பேருந்து கிளம்புகிறது.


10:15 க்கு கிளம்பி எப்போ வீட்டுக்குப் போறது. சரி இந்த மழையில் வேறு ஆப்ஷன் இல்லை. ஒரு மணி நேரம் முன் பின் இருந்தாலும் தொல்லையில்லாமல் வீடு போய்ச் சேரலாம் என்று டிக்கெட்டை புக் செய்தேன். போர்டிங் பாய்ண்டாக ஆலந்தூர் மெட்ரோ ஸ்டேஷனை தெரிவு செய்திருந்தேன். 10.40 க்கு ஆல்ந்தூரில் பேருந்து.


இன்னும் மூன்று மணி நேரத்திற்கு மேல் இருந்தது. ஆசுவாசமாகக் ஒன்பது மணிக்கு மேல் கிளம்பி, இரவு உணவை முடித்துவிட்டு மெட்ரோவில் ஏறினேன். சுமார் 50 நிமிடப் பயணத்தில் ஆலந்தூர் வந்தடைந்தேன்.


ஸ்டேஷனுக்கு வெளியில் வந்து மெயின் ரோட்டில் பேருந்துக்காகக் காத்திருந்தேன். "ஈஸ் திஸ் சென்னை? தீபாவளியும் அதுவுமா ரோடு கொஞ்சம் கூட கூட்டமே இல்லாம இவ்வளவு ஃப்ரீயா இருக்கு.. ரிமார்க்கபிள் சேஞ்ச்" என சிவாஜி வசனத்தை நினைத்துக் கொண்டு நின்றிருந்தேன்.


பத்து நிமிடத்திற்கு மேல் ஆனது. எதோ பிசிறு தட்டியது. எனக்கு அருகில் முதுகில் ஆமை ஓடு போல் பையை மாட்டிக்கொண்டு சிலர் நின்றிருந்தாலும் அந்த பத்து நிமிடத்தில் வெளியூர் செல்லும் ஒரு பேருந்து கூட அந்த வழியாக வரவில்லை. 


"ரைட்டு.. இன்னிக்கு நம்மை அலைக்கழிக்கப் போகிறார்கள் " என்பதை போதி தர்மன் உணர்கிறார்.


அந்த ட்ராவல்ஸை தொடர்பு கொள்ளவும் ஓட்டுனர் நம்பர் எதுவும் SMS வரவில்லை. அடுத்த 5 நிமிடத்தில் ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. 


"அண்ணே எங்கியன்ணே இருக்கிய?"


"ஆலந்தூர் மெட்ரோவுக்கு வெளில நம்ம பஸ்ஸூக்காகத்தான் காத்துட்டு இருக்கேன்ணே" என்றேன்.


"அண்ணே ஒரு பிரச்சனை ஆயிப்போச்சு.. பஸ்ஸ மடக்கிட்டாங்க. சிட்டிக்குள்ள போகக்கூடாதம். கோச்சிக்கிடாம கொஞ்சம் கோயம்பேடுக்கு வந்தர்ரியலா?" என்றார்.


"கோயம்பேடா.. என்னண்ணே?!! இப்பதான் இங்க வந்தேன்..."


"அப்ப இன்னொன்னு பன்னுங்க.. வண்டலூருக்கு அடுத்து உள்ள ஊரப்பாக்கத்துக்கு வந்துருங்க"


"டேய் ஊரப்பாக்கத்துக்கு அங்குட்டு பத்து நிமிஷம் நடந்தா எங்க ஊரே வந்துரும்டா.." என நினைத்துக்கொண்டு பரவால்லண்ணே நா கோயம்பேடுகே வந்துடுறேன். விட்டுட்டு மட்டும் போயிடாதீங்க என்றேன்.


"நீங்க வந்தா தாண்ணே பஸ்ஸ எடுப்போம். மெதுவா வாங்க" என்றார்.


"எது மெதுவா வாங்கவா? இன்னிக்கு பஸ் எடுக்கிற ஐடியா இருக்கா இல்லையா இவனுங்களுக்கு" என நினைத்துக் கொண்டே மறுபடி மெட்ரோ ஸ்டேஷனுக்குள்ளே சென்றேன்.


"இறங்குன ட்ரெயின்லயே மறுக்கா எத்தி விடுறீங்களேடா" என் மறுபடி கோயம்பேடை நோக்கி புறப்பட்டு 10:50 க்கு அங்கு சென்று சேர்ந்தேன். 


மெட்ரோ ஸ்டேஷனுக்கு வெளியே ஜோதி லட்சுமி ரெடியாக நின்றது. அங்கு வரவேண்டிய கடைசி ஆள் நானும் வந்துவிட்டதால் உடனே ஜோதி லட்சுமின்புறப்பட்டது.


சரியாக 11:40 க்கெல்லாம் வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம் சிறப்பு பேருந்து நிலையத்தை அடைந்தது. தீபாவளி நேரத்தில் பன்னிரெண்டு மணிக்குள் சிட்டியைத் தாண்டுவது என்பதே நல்ல அச்சீவ்மெண்ட் தான். மோசமில்லை. எப்படியும் காலை எழு மணிக்குள் வீட்டில் இருக்கலாம் என்கிற நினைபுடன் மொபைலை பாக்கெட்டில் வைத்துவிட்டு, கர்ச்சீப்பை எடுத்து கண்ணில் கட்டிக்கொண்டு நித்திரையில் ஆழ்ந்தேன்.


பஸ் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தது அரை தூக்கத்தில் தெரிந்தது. எங்கும் சூசூ போவதற்கு நிறுத்தினார்களா என்று தெரியவில்லை. நான் தூக்கத்திலேயே இருந்தேன். வழக்கமாக காலை ஆறுமணிக்கு அடிக்கும் அலாரம் வைப்ரேனுடன் அலற ஆரம்பித்தது.


கன்ணில் கட்டியிருக்கும் கர்ச்சீப்பை அவிழ்க்காமலேயே கையால் ஃபோனை அழுத்தி விட்டுவிட்டு, "மணி ஆறாகிவிட்டது.. எப்படியும் வண்டி கும்பகோணத்தைத் தாண்டி மன்னார்குடியை நெருங்கியிருக்க வேண்டும்" நினைத்துக்கொண்டேன்


எனக்கு பின் சீட்டில் இருந்தவதுக்கு ஃபோன் வந்தது. 


"ஆமா வந்துட்டுருக்கேன்.. இப்பதான் விருத்தாச்சலம் வரப்போகுது என்றார்"


 "எதேய்ய்ய்ய்? விருத்தாச்சலமே இப்பதான் வரப்போகுதா?"


அரைகுறைத் தூக்கம் முழுவதும் கலைந்தது. இருந்தாலும் மனதைத் தேற்றிக்கொண்டு, கண் மூடியபடியே இருந்தேன்.


அடுத்த அரைமணி நிமிடத்தில் பஸ்ஸின் டயர்களில் எதோ கட முட சத்தம். பஸ் இஞ்சின் நிறுத்தப்பட்டது. அப்போதுதான் பலரும் கண்ணை லேசக விழித்துப் பார்க்க ஆரம்பித்திருந்தனர். விடிந்தும் விடியாத மசண்டை இருட்டு. மழை கொட்டிக்கொண்டிருக்கிறது.


இரண்டு மூன்று நிமிடம் ஏன் பேருந்து நின்றத்உ யாருக்கும் எதுவும் தெரியவில்லை. சரி ட்ரைவரிடம் சென்று கேட்கலாம் என முன்னிருந்த ஒருவர் எழுந்து செல்ல, ட்ரைவர் இருக்கையில் ஆள் இல்லை.


மாறாக ட்ரைவரும், அட்டெண்டரும் பஸ்ஸை அம்போவென விட்டுவிட்டு வேறு திசையில் ஓடிக்கொண்டு இருந்தனர்.


ஆம். சைக்கிளில் வந்த் முதியவர் ஒருவர் ஜோதி லட்சுமியில் அடிபட்டு தூக்கியெறியப்பட்டிருக்கிறார் என்பது அப்போதுதான் அனைவருக்கும் புரிந்தது.


சாலையில் மறுபுறம் கொட்டும் மழையில் புற்களுக்கு நடுவே அந்தப் பெரியவர் அசைவுகளின்றிக் கிடந்தார். சம்பவத்தைப் பார்த்த இரண்டு பேர் பெரியவர் அருகே சென்றனர்.  அவரைத் தொடவில்லை. 


அடுத்த மூண்று நிமிடத்தில் ஒரு பெண் ஓடிவந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு "அப்பா.. அப்பா.."என அழ ஆரம்பித்தார். அவர்களுக்கு இன்றைய பொழுது இப்படி விடிந்திருக்கக் கூடாது.


இருபது முப்பது பேர் கொண்ட கூட்டம் கூடியது. ஆம்புலன்ஸிற்கு அழைக்க வேண்டும் என பேசிக்கொண்டிருந்தார்கள். 


பேருந்திலிருந்த அனைவரும் பைகளை

எடுத்துக்கொண்டு கீழே இறங்கினோம்.


அதுவரையும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒருவர் "ஏங்க பஸ்ஸ எடுக்கமாட்டாங்களா இப்ப?" எனப் பரிதாபமாக் கேட்டுக்கொண்டிருந்தார்.


"ஜாக்கிங் போன ட்ரைவர் வந்தோன எடுத்துருவாங்க" 


சாலையில் பெரியவரைச் சுற்றி நின்ற கூட்டத்துற்கு கொஞ்சம் தள்ளி கொட்டும் மழையில் நின்றுகொண்டிருந்தோம்.


இது எந்த ஊர் என்று தெரியவில்லை. எதாவது பேருந்து வருகிறதா எனப் பார்த்தபடி நின்றிருந்தோம். நின்ற பொழுது ஒருசிலர் அவரவர்களுக்குள் அறிமுகம் செய்துகொண்டிருந்தனர். 


" நீங்க எங்க போறீங்க?"


"பட்டுக்கோட்டை"


"அய்யோ நானும் பட்டுக்கோட்டைதாங்க போறேன்"


ஆமா.. ஜெர்மெனி ஏர்போர்ட்ல ஊர்காரங்க ரெண்டு பேரு தற்செயலா மீட் பன்னதுல எக்ஸைட் ஆயிட்டாங்க. ஏண்டா பட்டுக்கோட்டை போற பஸ்ல பட்டுக்கோட்டைகாரனுக தானடா போவானுக.. உசுற வாங்காம நில்லுங்கடா   எனத் தோன்றியது.


அடுத்த சில நிமிடங்களில் கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று வரவும் அனைவரும் ஏறிப் புறப்பட்டோம்


பஸ்ஸில் ஏறிய பின்னர் அடிபட்ட பெரியவரை தான் பார்த்ததாகவும், லேசாக அசைவு இருந்ததாகவும் ஒருவர் கூறினார். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.


நடத்துனர் வந்தார்.


"அண்ணே கும்பகோணம் இங்கருந்து எவ்வளவு தூரம்ணே..?"


"எப்புடியும் 45 கிலோமீட்டருக்கு மேல வரும்"


வெளங்கும்... எட்டு பதினைந்துக்கு கும்பகோணம். அங்கிருந்து மறுபடி மன்னார்குடி ஒரு மணி நேரம். அங்கிருந்து மறுபடி பட்டுக்கோட்டை ஒன்னே கால் மணி நேரம். 


இன்னும் பஸ்ஸில் சென்றுகொண்டு தான் இருக்கிறேன். மதிய சாப்பாட்டிற்குள் வீட்டிற்குச் சென்றுவிடுவேன் என்று நினைக்கிறேன்.


வாழ்த்துங்க ஃப்ரண்ட்ஸ்!!

Sunday, September 19, 2021

அனெபெல் சேதுபதி!!


Share/Bookmark



ஒரு நடிகனுக்கான மதிப்பு, அவரது திறமை, நடிப்பு இவையனைத்தையும் தாண்டி, மக்களிடத்தில் அவர் தன்னை எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறார் என்பதிலும் அடங்கியிருக்கிறது. ரஜினி, அஜித், விஜய் படங்களைக் காண ரசிகர்கள் காட்டும் ஆர்வத்திற்கும், திரையில் அவர்கள் தோன்றும்போது ஏற்படுத்தப்படும் ஆரவாத்திற்கும் முக்கியக் காரணம் அவர்களைத் திரைப்படங்களைத் தவிற  விளம்பரங்களிலோ, தொலைக்காட்சிப் பேட்டிகளிலோ, அடிக்கடி பொது நிகழ்ச்சிகளிலோ காண முடியாது. தங்களை காண்பதற்கரிய, நெருங்குவதற்கரிய ஒருவராக உருவாக்கிக் கொள்கிறார்கள். எங்கும் கிடைக்கும் பொருட்களை விட, எங்காவது எப்போதாவது அரிதாக் கிடைக்கும் பொருளுக்குத்தானே நாம் மதிப்பளிப்போம். இதுவும் ஒரு வியாபார யுக்தியே.

விஜய் சேதுபதியைப் பார்த்தால் மக்களுக்கு ஒரு அலுப்பு வரக் காரணமும் இதுவே. முன்பு ஒப்புக்கொண்ட, தேங்கி நின்ற படங்கள் அனைத்தும்
ஒட்டுமொத்தமாக வாரம் ஒன்று இரண்டு என வெளியாக ஆரம்பிக்க, ஒவ்வொரு படத்திற்கும் ப்ரோமோஷனுக்காக ஒவ்வொரு சேனலுக்கு பேட்டி கொடுக்க, அதே சமயத்தில் ஒரு தொலைக்காட்சி சமயல் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாய்ப்பும் கிடைக்க, கடந்த சில வாரங்களாக எங்கும் விஜய் சேதுபதி, எதிலும் விஜய் சேதுபதி. அவர் படங்கள் அதிகமாக விமர்சிக்கப்பட காரணமும் இந்த சலிப்புணர்வே. லாபம் இன்னும் பார்க்கவில்லை. துக்ளக் தர்பார் இன்றுதான் பார்த்தேன். கொடூர மொக்கையெல்லாம் கிடையாது. ஓக்கே ரகம் தான். ஆனால் படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அனபெல் சேதுபதிக்கும் கிட்டத்தட்ட அதே நிலமை தான். அரண்மனைக்குள் பேய் என்கிற அருதப் பழசான கான்செப்ட். காஸ்டிங்கெல்லாம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மூன்றையும் கவர் செய்வது போலத்தான் போட்டிருக்கிறார்கள். ஆனால் கான்செப்ட் தான் இல்லை.

முதல் பாதியில் அக்மார்க் சுந்தர்.சி ஃபார்முலா காட்சிகள். சிரிப்பை வரவழைக்க நல்ல ஸ்கோப் இருந்தது. ஆனால் மிகவும் அமெச்சூரான இயக்கத்தில் அனைத்தும் சின்னா பின்னமாகிறது.

நகைச்சுவையை  வரவழைக்க வேண்டுமெனில் வடிவேலுவெல்லாம் தன்னை எந்த அளவு தாழ்த்திக்கொள்வார் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் யோகிபாபு என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் தெரியவில்லை. பிச்சைக்காரன் கெட்டப் போட்டாலும் கெத்தாக இருப்பது போல் சத்தம் போட்டு, எதாவது பேசினால் காமெடியாகிவிடும் என்ற நினைப்பு போல. கவுண்டரே அதயெல்லாம் ஒரு அளவுக்குத்தான் செய்வார். யோகிபாபு வரவர அருக்கிறார். வெகு சில கவுண்ட்டருக்கே சிரிப்பு வருகிறது

அடுத்தது டாப்ஸி. இரண்டாம் பாதியில் வரும் வெளிநாட்டு கேரக்டருக்காக டாப்ஸி தெரிவு செய்யப்பட்டாரா எனத் தெரியவில்லை. படம் கடுப்பேற்றுவதற்கு அடுத்த காரணம் டாப்ஸி. ராதிகா, ராஜேந்திர பிரசாத், வென்னெலா கிஷோர் அனைவரும் வீணடிக்கப் பட்டிருக்கிறார்கள்.

அதுவரை சுமார் மொக்கையாகச் செல்லும் படம் இரண்டாம் பாதியில் சேதுணா எண்ட்ரி கொடுத்த பின்னர் சூர மொக்கையாகிறது. சேதுபதியிடம் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு விஷயம் தான். இன்னிக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு என்றெல்லாம் கிடையாது. ராஜா கெட்டப் போட்டாலும் ரவுடி கெட்டப் போட்டாலும் ஒரே பேச்சு தான். இதில் ராஜா கெட்டப்பில் உட்கார்ந்து கொண்டு “மொழி வேற அறிவு வேற… அறிவு இருக்கவனுக்கு மொழி புரியும்” என்று எதோ அட்வைஸ் செய்துகொண்டிருந்தார். அய்யா… சமுத்திரக்கனி அய்யா….

ஒரு வழியாக படம் முடிவுக்கு வந்து ”சரி கழுதை போய்த் தொலை” என்று நினைக்கும் போது ”செகண்ட் பார்ட் கம்மிங் சூன்” என்று ஒரு ஸ்லைடு போடுகிறார்கள்.

”எடுத்து விடுண்ணே.. ச்சாகட்டும் அம்புட்டு பயலும்”


Wednesday, September 15, 2021

MALIGNANT(2021)


Share/Bookmark

 


ஹாரர் படங்களின் தலைவன் ஜேம்ஸ் வானின் அடுத்த படைப்பு. ஹாரர் படங்களில் முத்திரை பதித்துவிட்டு அடுத்து  Fast & Furious, Aqua Man என  அடுத்த லெவலிற்குச் சென்று மறுபடியும் தாய்க்கழகமான ஹாரருக்கு திரும்பியிருக்கிறார்.

இவரின் ஹாரர்கள் எப்பொழுதுமே ஒரு ட்ரெண்ட் செட்டர்களாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தின் முதல் அல்லது முதல் இரண்டு பாகங்களை மட்டும் இவர் கதை, திரைக்கதையில் இயக்கி அதை பெரிய வெற்றி பெற வைத்து அந்தப் படங்களின் அடுத்தடுத்த பகுதிகளுக்கான கதையை மட்டும் எழுதி, வேறு ஒரு இயக்குனரை வைத்து தயாரித்து வெளியிடுவது ஜேம்ஸ் வானின் வழக்கம். SAW, Insidious, The conjuring என அனைத்தும் இதே பேட்டர்ன் தான். மேற்கண்ட படங்களின் இவர் இயக்காத பாகங்கள் சற்று டொம்மையாக இருப்பதை நன்றாகவே உணரலாம்.

ஜேம்ஸ் வான் கதை, இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது Malignant.  Insidious, Conjuring படங்களில் கொடுத்த அதே பீதியை ஆரம்பத்திலிருந்தே கொடுத்திருக்கிறார். காட்சிப் பதிவுகள், கேமரா ஆங்கிள்களில் நிறைய புதுமையைக் காண முடிகிறது. ஆனாலும் காட்சிகள் அனைத்தும் நமக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட நாடா. அதுமட்டுமல்லாமல் படம் கொஞ்சம் கொஞ்சமாக நீள, என்ன இது நம்ம ஷங்கர் வழக்கமா எடுக்குற ”மூணு கொலை” கதை மாதிரிப் போகுதே என்று ஒரு சலிப்பும் வர ஆரம்பித்தது.

ஆனால் க்ளைக்மாக்ஸில் இருந்த ஒரு சர்ப்ரைஸ் எலெமெண்ட் சலிப்பை அப்படியே போக்கி ஒரு நிமிடம் உறைய வைத்தது.

இந்த Malignant அவரின் முந்தைய படங்களைப் போல அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கும் அளவு ஒர்த்தா எனக் கேட்டால் இல்லை. ஆனால் நிச்சயம் ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும்.

த்ரில்லர், ஹாரர் விரும்பிகள் நிச்சயம் பார்க்கலாம்.

Friday, July 2, 2021

COLD CASE (2021)


Share/Bookmark

   




வழக்கமான ஒரு மர்டர் மிஸ்ட்ரி திரில்லர். ஆனால் கர்நாடகத்தையும் ஹிந்துஸ்தானியையும் கலந்து கர்நாடகஸ்தானி என்ற ஒன்றை வெண்ணிற ஆடை மூர்த்தி உருவாக்குவதைப் போல, மர்டர் மிஸ்ட்ரியுடன் ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரரை கலந்து விட்டு அடித்து புது ஐட்டமாக ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒரு ஏரியில் கிடைக்கும் மண்டை ஒட்டுடன் ஆரம்பிக்கிறது திரைப்படம். தொடர்ந்து அந்த மண்டை ஓடு யாருடையது, அந்த மண்டையை யார் மண்டை ஓடாக மாற்றியது என்பதைக் கண்டறியும் ஒரு சுவாரஸ்யமான இவெண்டிகேஷன். எந்த இடத்திலும் போரடிக்காமல் நல்ல விறுவிருப்பாகவே செல்கிறது.

சமீப காலங்களில் வந்த இன்வெஸ்டிகேஷன் படங்களிலெல்லாம் சிசிடிவி ஃபுட்டேஜை எடுத்து வைத்துக்கொண்டு, இந்த இடத்துல ஃப்ரீஸ் பன்னுங்க.. இப்ப ஸூம் போங்க.. வண்டி நம்பர நோட் பன்னுங்க என்றவாரே ஓப்பியடித்துக் கொண்டிருப்பார்கள். அதுபோன்ற சிசிடிவி காட்சிகள் படத்தில் இல்லாதது ஆறுதலளித்தது.

நிச்சயம் முறை பார்க்கலாம்.

Sunday, June 20, 2021

ஜகமே தந்திரம் – ஒரு விரிவன அலசல்!!


Share/Bookmark

 


தனுஷ் நான் வியந்து பார்க்கும் ஒரு நடிகன். அவர் எப்படி திரைத்துறைக்குள் வந்திருந்தாலும், அதன்பிறகு அவர் தன்னை மெருகேற்றிக்கொண்ட விதம் அபாரம். அதே போல கார்த்திக் சுப்பராஜூம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவர். அவர் இதற்கு முன்னர் எடுத்திருந்த ஐந்து படங்களுமே எதோ ஒருவிதத்தில் எனக்கு பிடித்திருந்தது.  இந்த இருவரும் சேரும் படம் நிச்சயம் ஒரு சாதாரண திரைப்படமாக இருக்காது என்பது என்னுடையது மட்டுமல்ல. பலருடைய நம்பிக்கையும்.

ஆனால் ஜகமே தந்திரம் அத்தனையையும் சுக்கு சுக்காக நொறுக்குகிறது.. டீசர், ட்ரெயிலர், பாடல்கள் என அனைத்துமே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜூன் 18ம் தேதி வெளியான ஜகமே தந்திரம் அது ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது நிஜம். வலுவில்லாத கதை, விறுவிறுப்பில்லாத திரைக்கதை, எந்த உணர்வுகளையும் ஏற்படுத்தாத மிகச் சாதாரணமான வசனங்கள் என அதற்கான காரணங்கள் ஏராளம். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

முதலில் ஒரு படத்திற்குத் தேவை ஒரு தெளிவான கதை. அந்த கதையைப் பொறுத்து கதை நடக்கும் கதைக்களம். லண்டனில் இருக்கும் இரண்டு தரப்புகளுக்கு இடையே நடைபெறும் கேங் வாரில் கதாநாயகன் கொண்டு வரப்படுக்கிறார். பிறகு தான் செய்த தவறிற்கு பிராயச்சித்தமாக மனம் திருந்தி இலங்கை அகதிகளுக்கு உதவுகிறார்.  இங்கு கதை மதுரையில் ஆரம்பிக்கிறது பிறகு லண்டனிற்கு பயணித்து அங்கேயே முடிகிறது. அவர்கள் கூறியிருக்கும் கதைக்கு மதுரை வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. படத்தை லண்டனிலேயே ஆரம்பித்து லண்டனிலேயே முடித்திருக்கலாம்.

அடுத்து இந்த திரைப்படம் எந்த வகையைச் சேர்ந்தது? ஒரு சீரியஸான கேங்கஸ்டர் படமா? அல்லது ஒரு லைட் ஹார்ட்டர்டாக பார்க்கும் ஜாலியான நகைச்சுவை கலந்த கேங்ஸ்டர் படமா? அல்லது ஈழத் தமிழர்கள் ப்ரச்சனையை பேசும் ஒரு புரட்சிப் படமா? அதில் இயக்குனருக்கே மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது. ஒரு திரைப்படம் பயணிப்பதற்கு எதாவது ஒரு பாதையை (Genre) தெரிவு செய்து, அதில் மாறாமல் பயணித்தால் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர முடியும். அல்லாமல் எல்லா பாதையும் சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருந்தால் ஒரே இடத்தில் நிற்க வேண்டியது தான்.

அடுத்து  கதாநாயகன் சுருளியின் கதாப்பாத்திர அமைப்பு.  பரோட்டா கடையில் வேலை செய்பவர். 35 கொலைகள் செய்திருப்பவர் என்பதைத் தாண்டி அந்த கதாப்பாத்திரத்துக்கு வேறு எந்த பிண்ணனியும் கொடுக்கப்படவில்லை.

அத்தனை கொலைகள் எதற்காக செய்தார்? தன்னுடைய எதிரிகளைக் கொன்றாரா அல்லது யாருக்காவும் கொன்றாரா? காசு கொடுத்தால் கொலை செய்வாரா? ஆரம்பத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலை மறித்து ஏறி உள்ளே சிவனேன்னு சென்றுகொண்டிருக்கும் சேட்டு தம்பியைக் ரொம்ப காமெடியாக, ஜாலியாக கொலை செய்கிறார். இவர் உண்மையில் இது போல டம்மி பீஸ்களைத்தான் கொலை செய்வாரா அல்லது டெரர் பீஸ்களையும் கொலை செய்வாரா? எந்த ஒரு க்ளாரிட்டியும் இல்லை.

வழக்கமாக குத்துப் பாடலின் கடைசியில் ஒரு காட்சியில் டான்ஸ் மாஸ்டர் வந்து சல்யூட் அடித்து விட்டு போவது வழக்கம். அதேபோலத்தான் வருகிறார் பாபா பாஸ்கர். சரி டான்ஸுக்கு தானே வந்துட்டு போகட்டும் என விட்டால் அவரே பெரிய தாதா போல “சுருளி அவன போடனும்.. இவன போடனும்” என்று பேசிக்கொண்டிருக்கிறார். சார்.. உங்க ஃபேஸ்கட்டுக்கு இதெல்லாம் செட் ஆகல சார்.

சுருளியைக் காண லண்டனிலிருந்து ஒரு வெள்ளைக்காரர் வருகிறார். அவர் எப்படி வருகிறார் என்றால் சுருளியைப் பற்றி அப்ரைசல் மீட்டிங்கில் ஒரு பணியாளர் பேசுவதைக் கேட்டு, சுருளி மாதிரி ஒரு ஆள் தான் வேண்டும்  என மெனக்கெட்டு இங்கே வருகிறார். இதுவே படத்தின் ஆகப்பெரிய அபத்தம்.

அதைவிட பெரிய அபத்தம் அப்ரைசல் மீட்டிங்கில் கேங்க்ஸ்டரைப் பற்றி பேசச் சொன்னார்களாம். அப்ரைசல் மீட்டிங்கில் செய்த வேலையைப் பற்றித்தான் பேசச் சொல்லுவார்கள். இது போன்ற குரூப் டிஸ்கஷன்களெலாம் வேலை தேடிப்போகும் போது தான் நடக்கும். எதுனா அடிச்சி விடுவோம் என்கிற ரீதியில் எடுக்கப்பட்ட காட்சி. அந்த ஒரு  காட்சியே படத்தின் மீதான பிடிப்பை பாதியாகக் குறைக்கிறது.

லண்டனிற்கு அதற்கு முன்னர் சுருளி சென்றதில்லை. பவுண்ட் என்றால் என்ன? பவுண்டின் மதிப்பு எவ்வளவு என்று கூட தெரியாமல் இருப்பவர் லண்டனிற்கு சென்ற இரண்டு நாட்களில் சிவதாசின் முழு டீட்டெய்லை கண்டறிந்து வில்லன் குரூப்பிற்கு ஒப்பிப்பது அபத்ததிலும் அபத்தம். ஏண்டா இது கூட தெரியாமலா இவ்வளவு நாள் கேங்க்ஸ்டர் தொழில் பண்ணிகிட்டுருக்கீங்க எனத் தோன்றியது.

அடுத்து சிவதாஸாக வரும் ஜோஜூ ஜார்ஜின் கதாப்பாத்திரம். ”டானுன்னா நாலு இடத்துக்கு போகனும் வரனும்” என்கிற பாணியிலேயே அவரை இங்கும் அங்குமாக நடக்க விட்டு தூரத்திலிருந்து நமக்கு காண்பிக்கிறார்கள். மற்றபடி அவர் மட்டை ஆவதற்கு முன் வரும் இரண்டு காட்சிகளில் கூட அவர் நல்லவரா கெட்டவரா என்கிற எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆளை போட்டுத்தள்ளி விட்டு கடைசியில் “பாவம்baa… அவர் எங்களுக்கெல்லாம் எவ்ளோ ஹெல்ப் பண்ணாரு தெர்மா?” என்கிறார்கள். ”ஏண்டா இத கொஞ்சம் முன்னாலயே சொல்லிருந்தா அவன் சாகும்போது கொஞ்சம் ஃபீல் பண்ணிருப்போமேடா” என தோன்றுகிறது.

சரி ரெண்டாவது பாதியில் ஹீரோயின் ”சிவதாஸ் யாருன்னு தெரியுமா?” என கத்திக்கொண்டே ஒரு ஃப்ளாஷ்பேக்கை சொல்ல ஆரம்பிக்கிறார்.

படம் ஏற்கனாவே செத்து சுண்ணாம்பான பிறகு, படம் பார்க்க ஆரம்பித்த பாதிபேர் தூங்கிய பிறகு ஈழம் சம்பந்தப்பட்ட ஒரு ஃப்ளாஷ்பேக் வருகிறது.  சரி சிவராஜைப் பற்றி எதோ பயங்கரமான ஃப்ளாஷ்பேக்கை சொல்லப்போகிறார்கள் எனப் பார்த்தால் இல்லை. அவர்கள் எப்படி கஷ்டப்பட்டார்கள். எப்படி நாடு நாடாக சென்றார்கள். கடைசியில் எப்படி லண்டன் வந்து சேர்ந்தார்கள் என அனைத்தையும் சொல்லிவிட்டு கடைசியில் ”இப்படி இங்கே வர்ற எங்களுகெல்லாம் உதவுபவர்தான் சிவதாஸ்” என்கிறார்.

ஒரு உதாரணம் சொல்லுவார்களே.. ஒரு சிறுவன் தென்னைமரத்தின் பயன்களை படித்துவிட்டு தேர்விற்குச் சென்றான். ஆனால் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி மாட்டின் பயன்பாடுகளை கூறுக என்று. ஆனால் அவனுக்குத் தெரிந்ததோ தென்னை மரத்தின் பயன்பாடுகள்.  தென்னை மரம் தேங்காய் கொடுக்கும், மட்டை கொடுக்கும், கீற்று கொடுக்குமா, கயிறு கொடுக்கும் என அதை அப்படியே எழுதினான். எழுதிவிட்டு கடைசியில் மாட்டை கட்டுவதற்கும் தென்னை மரம் பயன்படுகிறது என கடைசியில் ஒரு சொருகு சொருகி விட்டான். ஹீரோயின் கூறிய ஃப்ளாஷ்பேக்கில் அந்த மாடுதான் சிவதாஸ்.

அதைவிடுங்கள். எனக்குத் தெரிந்து நிறைய பேர் சிலாகிக்கும் ஒரு காட்சி சிவதாஸ் சாவதற்கு முன்னர் கூறும்

“துரோகம்.. தமிழ் இனத்தோட சாபம்” என்பது.

அப்டியாண்ணே.. ரொம்ப நல்லாருந்துச்சி.. நல்ல டயலாக்.

”சரிங்க சிவதாஸ்ணே…. நீங்க என்ன பண்ண ட்ரை பண்ணீங்க?”

”பீட்டருக்குத் தெரியாம தனுஷ தனியா செட்டிங் போட்டு பீட்டர்கிட்ட வேலைபாக்குற தனுஷ வச்சே பீட்டரக் கொல்ல ப்ளான் பன்னேன்”

“அப்ப அதுக்கு பேரு என்ன?”

“அதுக்கு பேரு ராச தந்திரம்”

“எடு செருப்ப”

சரி திரைக்கதைதான் கொஞ்சம் விறுவிறுப்பாக, சுவாரஸ்யமாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு கேங்க்ஸ்டர் படம்… பரபரப்பாக சில நல்ல ஆக்‌ஷன் காட்சிகளை இடையில் சொருகிவிட்டு அதை வைத்து சில குறைகளை மறக்கச் செய்திருக்கலாம். அதுவும் இல்லை. பேசுகிறார்கள்.. பேசுகிறார்கள்.. பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.  சரி வசனமாவது கொஞ்சம் நன்றாக எழுதியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.

லண்டனுக்கு சும்மா போகக்கூடாது என்று இந்த சுந்தரபாண்டியன் சவுந்தர்ராஜாவையும் வேறு கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அவர் அங்கேயும் போய் ”என்ன மாப்ள இவன் கட்டைய போட்டுக்கிட்டுருக்கியான்… ஓவரா பண்றியான் மாப்ள..” என்கிறார். என்னடா இது லண்டன்ல சுந்தரபாண்டியன் ஓடிகிட்டுருக்கு. லண்டன்ற பேருக்காச்சும் கொஞ்சம் மரியாதை குடுங்கடா என்பது போல இருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஈரான் ஈராக் பார்டரில் வில்லனை கொண்டு போய் விட்டு, அவரிடம் ரிபப்ளிக் ஆப் மாட்டுத்தாவணி என்கிற ஒரு பாஸ்போர்ட்டைக் கொடுத்து ஒரு கொடுமையான தண்டனை கொடுக்கிறார்கள் பாருங்கள்… யப்பா அத்திப்பட்டி சிட்டிசன் தோற்றார்.

James cosmo நடித்திருந்த பீட்டர் கதாப்பாத்திரத்திற்கு அல்பாச்சினோவை முதலில் கேட்டதாக கூறினார்கள். ஒருவேளை அல்பாச்சீனோ அந்த கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தால் அந்த ரோல் இன்னும் தாறுமாறாக இருந்திருக்கும். ஆனால் அதை மட்டும் வைத்துக்கோண்டு என்ன செய்வது.

ஒட்டுமொத்தமாக ஒன்றாக சேர்ந்து படம் என்கிற பெயரில் கொத்துக்கறி போட்டு வைத்திருக்கிறார்கள் என்பதே நிஜம்.

 

Wednesday, May 26, 2021

ஹரித்வார் டைரிஸ் - பகுதி 1


Share/Bookmark

 


அனுபவப் பதிவுகள் எழுதி நாளாகிவிட்டது. கல்லூரிப் பதிவுகள் எழுதியதும் மறந்தே போய் விட்டது. பழைய நினைவுகளை ஞாபகப் படுத்த எதோ ஒரு விஷயம் தேவைப்படுகிறது. மற்றவர்களைப் பற்றி தெரியவில்லை. ஆனால் நான் என்னுடைய நினைவுகளை பாடல்களில் தான் சேமித்து வைத்திருக்கிறேன்.

அந்தந்த தருணங்களில், அந்தந்த காலகட்டங்களில் கேட்கும் பாடல்களில் அந்த சம்பவங்களைப் பற்றிய நினைவுகள் சேகரமாகிறது. இப்பொழுதும் “இளங்காத்து வீசுதே” பாடலைக்  கேட்டால் என்னை அறியாமல் உள்ளுக்குள் ஒரு பயம் தோன்றும். கல்லூரியில் சேர்ந்து முதல் செமஸ்டர், முதல் முதலாக முழுவதும் ஆங்கிலத்தில் தேர்வை எதிர்கொள்ளவிருந்த, பள்ளி வரை முதல் மூன்று இடங்களுக்குள் வந்து , கல்லூரியில் முதல் முறை ஒரு சராசரி மாணவனாக எதிர்கொள்ளவிருந்த தேர்விற்கான பயம் அது.

அதே போல “அ ஆ” திரைப்படத்தின் மயிலிரகே பாடலைக் கேட்டால் கல்லூரியின் சுற்றுலா ஞாபகம். Emcee Jesz இன் ”பச்சைக்கிளி முத்துச்சரம்” பாடலைக் கேட்டால் என்னுடைய முதல் ஆன் சைட் ஞாபகம், அல்லு அர்ஜூனின் ரேஸ் குர்ரம் பாரலைக் கேட்டால் நாஸிக்கில் சுற்றிய ஞாபகம் என ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு இடம், ஒரு நினைவு. அப்படி எதேச்சையாக இரண்டு நாட்களுக்கு முன்னர் கேட்ட பாடல் “ஜெய் கங்கே மாதா”. ஹரித்வாரில் கங்கையில் மாலையில் ஆரத்தி காண்பிக்கும் போது ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் ஹரித்வார் நினைவுகளை கிளரி விட்டது.

வேலைக்கு சேர்ந்து முதல் ஏழரை வருடம் தமிழ்நாட்டில் இருந்ததை விட வெளியூர்களில் தான் அதிகம் இருந்திருக்கிறேன். அதன் பிறகு எனக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டதால், பணியிட மாற்றமாகி தமிழ்நாட்டு எல்லையையே இப்பொழுதெல்லாம் தாண்ட முடிவதில்லை. சர்வீஸ் எஞ்ஜினியராக இருந்து சுற்றிய சில இடங்களில் எனக்கு மிகவும் பிடித்த இடம் ஹரித்வார்.

ஹரித்வார் நகரிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்த பிர்லா டயர்ஸ் கம்பெனிதான் எங்கள் கஸ்டமர். கம்பெனி அமைந்திருந்த இடத்தில் தங்கும் வசதி பெரிதாக இல்லாததால், ஹரித்வாரில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். எங்களுக்கென்று தனியாக ஒரு சுமோ. காலையில் சுமார் 9 லிருந்து 9:15 க்குள் கிளம்பி 10 மணிக்கு கம்பெனியை அடைவோம். மாலையில் 4:30 லிருந்து 5 ற்குள் புறப்பட்டு 5:45 க்குள் ஹரித்வாரை அடைந்து விடுவோம்.

கம்பெனிக்கு செல்லும் வழியில் பெரிய பெரிய மாந்தோப்புக்கள் அதிகம். திரும்பி வரும் பொழுது மாந்தோப்பில் கொட்டும் பழங்கள் சாலை ஓரத்திலேயே விற்பனைக்கு இருக்கும். பத்து ரூபாய், இருபது ரூபாய்க்கே 20, 30 சிறிய, இயற்கையாகப் பழுத்த மாம்பழங்கள் கிடைகும். தோப்பிற்கு வெளியே சாலை ஓரத்திலே ஒரு அடி பைப்பு ஒன்றும் எங்களுக்காகவே போடப்பட்டது போல இருக்கும். மாம்பழங்களை வயிறு முட்ட தின்று விட்டு, மூஞ்சு கால் கையெல்லாம் கழுவி விட்டு கிளம்ப ஏதுவாக இருக்கும்.

வெயில் காலம் என்பதால், ஹரித்வாருக்கு வரும்பொழுதே நல்ல வெளிச்சமாக மாலை வெய்யிலோடுதான் இருக்கும். நேராக ஹோட்டலுக்குச் செல்லாமல், வழியில் குறுக்கிடும் கங்கை ஆற்றிலேயே இறங்கிக் கொள்வோம். ட்ரைவரிடம் எங்கள் பொருட்களையெல்லாம் ஹோட்டலில் வைத்துவிட்டு வரும்பொழுது துண்டுகளை எடுத்துவரச் சொல்வோம். “உங்களுக்கெல்லாம் ட்ரைவர் வேலை பாக்குறேன்லடா.. எனக்கு வேணும்டா” என நினைத்துக் கொண்டே சென்று எடுத்து வருவார்.

40 டிகிரி வெய்யிலில் வேலை செய்து விட்டு வந்து, எப்பொழுதும் ஜீரோ டிகிரியிலேயே இருக்கும் கங்கை நீரில் இறங்குவதே ஒரு ஆனந்தம் தான். குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆசை தீர குளிப்போம். நாங்கள் குளிப்பது கங்கயிலிருந்து பிரித்து விடப்பட்ட நீரோட்டத்தின் ஒரு பகுதி. நீரின் வேகம் மிக அதிகமாக இருக்கும். நீச்சல் தெரிந்தவர்கள் மட்டும் சங்கிலித் தடுப்புகளைத் தாண்டி உள்ளே செல்லலாம். அதுவும் நடு ஆற்றிற்கெல்லாம் செல்ல முடியாது. ஆற்றின் நடுவிற்கு சென்றுவிட்டால், கரையை தொடுவதற்குள் நாம் குறைந்த பட்சம் ஒரு 50 மீட்டராவது படித்துறையிலிருந்து இழுத்துச் செல்லப்படுவோம்.

அதனால் படித்துறைக்கு முன்னர் ஒரு நூறு மீட்டர் தொலைவில் ஒரு சில பாலக்கட்டை இருக்கும். அதில் ஏறி குதித்து நீந்தினால் படித்துறைக்கு வருவதற்கு சரியாக இருக்கும். கண்கள் சிவந்த பின்னர்தான் கரையேறுவோம். கரையேற மனது வராது என்பதே உண்மை. இது ஒரு நாள் அல்ல.. ஒவ்வொரு நாளும். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்.

பெரும்பாலும் எங்கள் வேலை ”போனமா வந்தமா” என்று இருக்காது. அதானாலேயே இடங்களை சுற்றிப்பார்ப்பதற்கு உடனடியாக ஆர்வம் காட்டுவதில்லை. ”அதான் இங்க தானே இருப்போம்.. பாப்போம்.. பாப்போம்” என்றே தள்ளிக்கொண்டு போகும். ஆனால் ஒருநாள் இரண்டு நாள் விசிட்டிற்கு வரும் டிசைனரோ, சேல்ஸ் பர்சனோ அதே வேகத்தில் அங்கிருக்கும் மொத்த இடத்தையும் ஒரே நாளில் சுற்றி விட்டுத்தான் கிளம்புவார்கள்.

ஹரித்வார் பிர்லா டயர்ஸ் அப்பொழுத்தான் முதன் முதலாக தொடங்கப்பட்டிருந்தது. அனைத்து டயர் க்யூரிங் மெஷின்களும் எங்களுடைய கம்பெனியிலிருந்தே அனுப்பப்பட்டிருந்ததால் அத்தனை மெஷின்களூம் நிறுவப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டுவரும் வரை எங்கள் வேலை. கிட்டதட்ட இரண்டு வருடங்கள் தொடர்ந்து வேலை இருந்தது.  

மூன்று மாதத்திற்கு ஒரு முறை எங்களுக்கு மாற்று ஆட்கள் அனுப்பபடுவார்கள். அதுவும் சைட்டுக்கு போன ரெண்டவது வாரத்திலிருந்து கெஞ்சினால் தான் மூன்றாவது மாதத்தில் மாற்று ஆட்கள் வருவார்கள்

“சார் ஊருக்கு கிளம்பலாமா சார்?”

”தம்பி அவங்க ஒக்கே சொன்னா கெளம்புங்கப்பா” என்பார் எங்கள் பாஸ்

உடனே Minutes of Meeting ஐ தயார் செய்து, பிர்லா டயர்ஸ் மேனேஜரிடம் செல்வோம். நாங்க கைல பேப்பரோடா போனாலே அவரு உசாராயிருவாரு. ”ஆஹா கெளம்புறதுக்கு திட்டம் போட்டானுக.. இவனுகள விடக்கூடாதுடா கைப்புள்ள” என்று அப்போதுதான் பயங்கர பிஸியை காண்பிப்பார்.

நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டு ராட்வெல்லர் முகத்துடன் உள்ளே அனுமதிப்பார்கள். உள்ளே சென்றால் அதுவரை நமக்குத் தெரியாத, இல்லாத பிரச்சனைக்களெல்லாம் சொல்லி, ”

”இவ்ளோ பிரச்சனை இருக்கு நீங்க ஊருக்கு கெளம்புவீங்களா? இப்பவே உங்க பாஸூக்கு ஃபோன் பன்னிருவேண்டா” என ஃபோனை கையில் தூக்குவார்.

“எப்புடியும் அவங்க சொல்லி விடப்போறீங்க… அதுக்கு நீங்களா விட்டதா இருக்கட்டும் சார்” என எதோ ஒரு படத்தில் சொல்வது போல ”எப்டியோ எங்க சுத்தியும் நம்மள இங்க தங்க வைச்சிருவானுக… அதுக்கு நாமளா இருக்க மாதிரி இருக்கட்டும்” என முடிவு செய்து அதை உடனேயும் ஒத்துக் கொள்ளாமல் அவர் ஆயிரம் பிரச்சனை சொல்லும் போது பதிலுக்கு நாமும் “எங்களுக்கு இந்த சப்போர்ட் இல்ல.. அந்த சப்போர்ட் இல்ல…” என ஆரம்பித்தால் கொஞ்சம் கூல் ஆகி

 “அதெல்லாம் இருக்கட்டும்பா.. நாளைக்கு கார் தர்றேன்.. எல்லாரும் போய் முசொரிக்கு போய் நல்லா சுத்திப் பாருங்க… ரெண்டு நாள் கழிச்சி வாங்க. நீங்க கேக்குறதெல்லாம் ரெடியா இருக்கும்” என்பார்

பட் அந்த டீலிங் எங்களுக்கு ரொம்ப புடிக்கும். அதனால ஒத்துக்குவோம்.

ஹரித்வாரைப் பொறுத்த வரை தொடர்ந்து அங்கு தங்குவதற்கு இரண்டு ப்ரச்சனைகள் இருக்கும். ஒன்று உணவு. சுத்தமாக நமக்கு செட் ஆகாது. நான் வெஜ் ஹரித்வாருக்குள் அனுமதி இல்லை. இன்னொன்று ஹிந்தி.

வேலை பார்க்கும் இடத்தில் பேசும் இண்டஸ்ரியல் ஹிந்தி மிகவும் எளிது. என்னுடைய சீனியர் அண்ணன் ஒருவர் சொல்லிக் கொடுத்தார். டைட் கரோ, லூஸ் கரோ, கனெக்ட் கரோ, உல்டா கரோ என நாம் உபயோகிக்கும் ஆங்கில வார்த்தைகளில் கரோவை சேர்த்துக்கொள்வது. அது பெரும்பாலும் ஒர்க் அவுட் ஆகிவிடும்.  மற்ற படி பொது வெளியில் மற்றவர்களுடன் பேசும் ஹிந்திதான் கொஞ்சம் கடினம்.

ஹரித்வாருக்குச் சென்ற சில நாட்களுக்குப் பின்னர்தான் நண்பன் அசால்ட்டு அசார்  ஹரித்வாருக்கு அருகிலுள்ள ரூர்க்கி IIT படித்து வந்தது தெரிந்தது. அசாரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நார்த் இண்டியனுக்கு நார்த் இண்டியன். சவுத் இண்டியனுக்கு சவுத் இண்டியன். ஹிந்தி வாலாக்களைப் பார்த்தாலேயே “அரே பாய்… ஏ கிதர் ஹே.. ஓ கிதர் ஹே?” என ஹிந்தியில் பிரித்து மேய்வான்.  எனக்கு ஹிந்தி சுத்தமாகத் தெரியாத வரை அப்படித்தான் நினைத்திருந்தேன். ஓரளவு ஹிந்தி தெரிந்த பின்னர்தான் புரிந்தது, அவன் நாலு வார்த்தைய மட்டும் வச்சிகிட்டு எங்கள ஏமாத்திட்டு இருந்துருக்கான்னு.

ஹரித்வாரில் ஆர்த்தி காட்டும் கங்கை நதி, சண்டி தேவி மலை , மன்சா தேவி மலைகளைத் தவற அருகில் வேறு இடங்களைச் சுற்றிப்பார்க்கலாம் என நானும் அசாரும் கிளம்பினோம். அங்காங்கு வைக்கப்பட்டிருந்த அத்தனை சிவன் சிலைகளுடனும் ஃபோட்டோ எடுத்துக்கொண்டு சென்று கொண்டுருந்தோம்.

சுற்றிப்பார்க்க வேண்டும். ஆனால் எதைப் பார்ப்பதென்று தெரியவில்லை.

“மச்சி.. உன் ஹிந்தி நாலெட்ஜ வச்சி பக்கத்துல என்னென்ன இடம் இருக்கு பாக்கன்னு அவர்கிட்ட போய் கேளு மச்சி” என்றதும் அசார் அருகிலிருந்த ஒருவரிம் போய் இரண்டு நிமிடம் கேட்டுவிட்டு  திரும்பி என்னிடம் வந்து

“மச்சி அங்க ஒரு மந்திர் இருக்காம் மச்சி.. வா போவோம்” என்றான்

“அப்டியா வழி சரியா கேட்டுட்டல்ல.. “

“கேட்டுட்டேண்டா… வா போவோம்” என ஹரித்வாரின் சில சந்து பொந்துகளுக்குள் அழைத்துச் சென்றான்.

கிராமப் புறங்களிலிருக்கும் சிறு விநாயகர் கோவில் போல ஒரு சிறிய கோவில் ஒன்று வந்தது.

“மச்சி கும்புட்டுக்கடா… “ என்றதும் சாமியை கும்பிட்டேன்.

உடனே வந்த வழியே திரும்ப அழைத்துச் சென்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“மச்சி.. இங்க எதோ மந்திர் இருக்குன்னு சொன்னியேடா… காட்டாமயே அழசிச்சிட்டு போற” என்றேன்

“இப்பதான் கும்புட்டியே அதான் மந்திர். கோவிலுக்கு ஹிந்தில மந்திர்னு அர்த்தம்”ன்னான்

”அடப்பாவிகளா… புளியஞ்சாதத்துல முட்டைய வச்சி பிரியாணின்னு ஏமாத்துற மாதிரி இப்டி ஏமாத்திட்டீங்களேடா.. மந்திர்னா கோயில்னு ஏண்டா முன்னாலயே சொல்லல? நானும் மந்திர்ன்னதும் எதோ புதுமையான இடம் போலன்னு கூடவே வந்தா சந்து சந்தா அழைச்சிட்டு வந்து மரத்தடி புள்ளையார காமிக்கிற நீ? என்ன விட நாலு வார்த்தை ஹிந்தி அதிகமா தெரிஞ்சி வச்சிகிட்டு படுவா நீ ஓவரா ஆடுற”

மீண்டும் சந்து சந்தாக அழைத்துச் சென்றான். கடைசியில்  எப்பவும் செல்லும் கங்கைக் கரையே வந்து சேர்ந்தது.  ”நல்லா சுத்தி காமிச்ச போ” என கங்கையில் கால் நனைத்துவிட்டு, ஒரு கை தண்ணீரை அள்ளி தலையில் தெளித்துக் கொண்டு மீண்டும் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்.


- தொடரும்

Monday, May 17, 2021

JATHI RATNALU!!


Share/Bookmark




இது ஒரு லைட் காமெடி படம்”

”படம் பாத்து சிரிக்கிற சிரிப்புல ஹார்ட் லைட் ஆயிருமா?”

“இல்ல.. படத்துல காமெடியே லைட்டாதான் இருக்கும்”

காமெடியைத் தவிற ஒரு காமெடி படத்திற்குத் தேவையான அனைத்துமே உள்ள ஒரு திரைப்படம்..

”எலெக்டீஷியன் வேஷத்துல இருக்க நா டைமண்ட்ட சுத்தி இருக்க லேசர கட் பண்ணுவேன். ஹவுஸ் கீப்பிங் வேஷத்துல இருக்க நா ரூம் ஃபுல்லா புகை போட்டுருவேன். ட்ரைவர் வேஷத்துல இருக்க நா வெளில காரோட வெய்ட் பன்னுவேன்”

”அப்ப டைமண்ட்ட யார்ரா எடுக்குறது?”

“அய்யய்யோ அத மறந்துட்டோமேப்பா”

அதே  மாதிரி தான். ஒரு நல்ல காமெடி படத்திற்கான கதைக்களம் இருக்கு. நல்ல திரைகதை இருக்கு.. நல்ல காமெடி நடிகர்கள் இருக்காங்க.. ஆனா காமெடி எழுதுறதுக்கு நல்ல ரைட்டர கூப்ட மட்டும் மறந்துட்டாங்க.

கிராமத்து வாழ்க்கை போரடித்து, சிட்டில வேலை பாத்தாதான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்னு நம்பி ஹைதராபாத்துக்கு போய் சிக்கி சின்னாபின்னமாகுற மூணு இளைஞர்களைப் பத்துன கதை தான் ஐந்த ஜாதி ரத்னாலு.

காமெடிக்கு நிறைய ஸ்கோப் இருந்தும் பெரிய அளவுல காமெடி ஒர்க் அவுட் ஆகல.  முரளி ஷர்மா, ப்ராம்ஜி, வென்னெலா க்‌ஷோர், ப்ரம்மானந்தம் இவங்களயெல்லாம் வச்சிகிட்டு இந்த கதையில Krishnagadi Veera Prema katha அளவுக்கு காமெடில தெறிக்க விட்டுக்கலாம்.  ஆனால் வெகு சில இடங்களிலேயே சிரிப்பு வருது.

கடைசில கோர்ட்ல வர்ற ஒரு சீன் மட்டும் தான் கொஞ்சம் ஒகே ரகம். ஹீரோயின் கொஞ்சம் நல்ல புள்ளையா இருக்கு.

மத்தபடி படம் எந்த அளவு பெருசா இம்ப்ரஸ் பன்னலயோ அதே அளவு பெருசா அருக்கவும் இல்ல. சீரியஸான கண்டெண்ட் எதும் இல்லாததால ஓரளவுக்கு டீசண்டா போகுது.

ரொம்ப எதிர்பார்க்காம பாத்தா சுமாரா இருக்கும்.


Sunday, April 25, 2021

THE PRIEST (2021) - Malayalam


Share/Bookmark

தொடர் தற்கொலைகளை துப்பறியும் ஒரு கதையாக ஆரம்பிக்கிறது இந்த Priest. பாதிரியார் கம் இன்வெஸ்டிகேஷன் ஆஃபீசராக மம்முட்டி. தலையில் ஒரு வட்ட தொப்பி, இடுப்பில் முடிச்சு போடப்பட்ட நீள அங்கி, வளர்ந்த தாடி, கையில் ஒரு குச்சி என ஃபாதர் பெனடிக்ட்டாக வலம் வருகிறார் மம்முட்டி

முழுப்படமும் அந்தத் தற்கொலைகளை துப்பறிவதிலேயே செல்லப்போகிறது என நினைக்கும் போது, கதை இடைவேளையின் போது வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறது.

Exorcism வகைப் படங்கள் நம்மை பயமுறுத்துமே தவிற பெரிய சுவாரஸ்யங்கள் இருக்காது. ஆனால் இங்கு அப்படி  இல்லாமல் இரண்டரை மணி நேரப் படத்தையும் வெறும் ஹாரராக மட்டும் கொடுக்காமல் கடைசி வரை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராகக் கொடுத்து சுவாரஸ்யத்தைக் கூட்ட முயன்றிருக்கிறார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

படத்தின் சில திருப்பங்கள் Talaash, The Invisible Guest திரைப்படங்களை ஞாபகப் படுத்துகின்றன. இருப்பினும் கட்டாயம் ஒரு முறை பார்க்கலாம்.

Sunday, March 7, 2021

நெஞ்சம் மறப்பதில்லை (2021)


Share/Bookmark

 


( கொஞ்சம் ஸ்பாய்லர்ஸ்)

ஒரு கதையைப் படமாக்குவதில் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு பாணி இருக்கிறது. செல்வா சார் பாணியில் ஒரு ஹாரர் படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்பதே இந்த நெஞ்சம் மரப்பதில்லை.

செல்வா சாரின் கடைசி இரண்டு படங்கள் ஹாரர் வகையை சேர்ந்தது இல்லை என்றாலும்,  படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே நமக்கு அருகில் அமர்ந்திருப்பவர்கள்  வாயில் நுரை தள்ளியும், மூக்கில் ரத்தம் வழிந்தும் ஒவ்வொருவராகச் சாய்ந்தது நமக்கு ஒரு ஹாரர் ஃபீலைத்தான் கொடுத்தது.

இதேபோல சில வருடங்களுக்கு முன் மிஷ்கின் சாருக்கும் ஹாரர் படம் எடுக்க வேண்டும் என்கிற ஆசை வந்து ஒன்றை எடுத்தார். அதில் யார் பேய் என்று கண்டுபிடிப்பதே பெரும்பாடாகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் முகம் முழுக்க முடியால் மூடிக்கொண்டு ஒரே ஒரு கண்ணுடன் வரும் அந்த ஹீரோதான் பேய் என நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம் தான் வேறு ஒரு பேய் வந்தது.

சரி நெஞ்சம் மறப்பதில்லைக்கு வருவோம். முதலில் பத்துக்கும் குறைவான கதாப்பாத்திரங்களை வைத்து, பெரிய பொருட் செலவுகள், நிறைய லொக்கேஷன்கள் என எல்லாம் இல்லாமல் ரொம்ப சிம்பிளாக ஒரு திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் செல்வா சார். படத்தைப் பார்க்கும்போது அதிகபட்சம் 15 லிருந்து 20 நாட்களுக்குள் இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கலாம் போலிருக்கிறது. ஆனால் செல்வா சார் எத்தனை நாள் எடுத்தார் என தெரியவில்லை. ஒரு வேளை நமக்குத் தெரிந்த ஒரு லேயருக்கு 20 நாட்கள் ஆகியிருக்கலாம். ஆனால் நமக்குத் தெரியாமல் அவர் படத்தில் வைத்திருக்கும் hidden layers களுக்கு இன்னும் நேரம் ஆகியிருக்கலாம்.

வழக்கமாக ஹாரர் படங்கள் முதலில் ஜாலியாக ஆரம்பிக்கும். ஏதோ ஒரு சம்பவம் நடந்து, பேய் எண்ட்ரி ஆன பின்னர் படத்தின் மூட் மாறும். ஆனால் இது செல்வாசார் படமாச்சே. அதனால் படத்தில் பேய் வருவதற்கு முன்னரே பேய் படம் போலத்தான் ஆரம்பிக்கிறது.

எஸ்.ஜே. சூர்யாவின் வீடு,  வீட்டுக்கு அருகில் போடப்பட்டிருக்கும் கீற்று கொட்டகை, அவர் ஆஃபீஸ் செட்டப் என அனைத்திலும் ஒரு பிண எஃபெக்ட் தெரிகிறது..

எஸ்.ஜே. சூர்யா தனக்கென ஒரு தனி பானி வசன உச்சரிப்பை நியூ, அன்பே ஆருயிரே படங்களில் உருவாக்கியிருந்தார். அது அவருக்கு ப்ளஸ்ஸாகவும் அமைந்தது. ஆனால் இந்தப் படத்தில் அதே ஸ்லாங்கை கொண்டு வர முயன்று சற்று ஓவர் டோஸாகி எதோ கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சிவாஜி வாய்ஸ் ட்ரை பன்னுபவர் போல இருந்தது முதல் அரை மணி நேரத்தில்.

ஆனால போகப் போக டோஸை குறைத்துக்கொண்டு பட்டையைக் கிளப்பியிருந்தார். என்ன எஸ்.ஜே.சூர்யா ஒரு சைக்கோ மாதிரி இருக்காரு என நாம் நினைக்கும்போது, இரண்டாம் பாதியில் நந்திதாவின் பர்ஃபார்மென்ஸை பார்த்த பிறகு நாம் நினைத்தது தவறு என்பது புரிகிறது

பெரிய அளவில் டமால் டுமீல் என்று சவுண்ட்  எஃபெக்டில் பயமுறுத்தாமல், பேய்க்கு கிழிந்து போன முகமே வேண்டும் என்று மேக்கப்பிற்கு மெனக்கெடாமால், வெறும் ஹேர் ஸ்டைலில் மட்டுமே மிரட்டியிருக்கிறார்கள். அதாவது உயிருடன் இருக்கும்வரை ரெஜினாவிற்கு தலையை பின்னி விட்டிருக்கிறார்கள். செத்துப்போய் பேயான பிறகு பின்னாமல் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். A பேய் by செல்வராகவன் சார்.  

வேலைக்காரர்கள் அனைவரையும் தனது பவரை உபயோகித்து மாயாஜாலங்கள் செய்து பழிவாங்கிய பேய், எஸ்.ஜே. சூர்யா என்று வரும்போது “உன்னைக் கொல்ல எனக்கு துப்பாக்கியா?” என துப்பாக்கியை தூக்கி போட்டுவிட்டு ஹீரோவிடம் அடி வாங்கி சாகும் வில்லன் போல மேட்ரிக்ஸ் லெவலில் ஒரு சண்டை போடுறது. கர்நாடக சங்கீதத்தையும், ஹிந்துஸ்தானியையும் கலந்து கர்நாடகஸ்தானின்னு ஒரு புதுசா ஒண்ணு பண்ணிருக்கேன்னு வெந்நிற ஆடை மூர்த்து சொல்வது போல காஞ்சனாவையும் மேட்ரிக்ஸையும் கலந்து விட்டு எதோ புதிதாக முயற்சித்திருக்கிறார் செல்வா சார்.

படத்தில் நிறைய இடங்களில் செல்வா சாரின் பழைய ஃபார்மை உணர முடிந்தது. குறிப்பாக “கண்ணுங்களா செல்லங்களா” பாடல் சிட்சுவேஷனும் அது படமாக்கப்பட்ட விதமும் தாறு மாறு.

ரொம்ப சாதாரணக் கதையை செல்வா சார் தனது வித்யாசமான மேக்கிங்கினாலும், எஸ்.ஜே. சூர்யாவின் பர்ஃபார்மன்ஸினாலும் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் பெரும்பான்மையான பகுதி எனக்குப் பிடித்திருந்தது. நீச்சல் குள கிராஃபிக்ஸ் காட்சி, க்ளைமாக்ஸ் மேட்ரிக்ஸ் ஃபைட் என ஒரு சில விஷயங்களை தவிர்த்திருந்தால் இன்னும் கூட படம் நன்றாக இருந்திருக்கும்.

 

-அதிரடிக்காரன்

Saturday, February 20, 2021

Drishyam 2 - ஒரு சிறந்த படைப்பா?!!!!


Share/Bookmark


ஜீத்து ஜோசப் எடுத்த த்ரிஷ்யம் முதல் பாகம் ”கபிம்குபாம்” என வைத்துக்கொண்டால் அடுத்து அவர் எடுத்த தம்பி ”குபாம்கபிம்”. இப்போது வந்திருக்கும் த்ரிஷ்யம்-2  ”கம்பிகும்பா” அவ்வளவு தான். 


முதலில் லாஜிக் பார்க்க வேண்டிய படங்கள், லாஜிக் பார்க்கத் தேவையில்லாத படங்கள் என இரு வகையில் த்ரிஷ்யம் லாஜிக் பார்க்க வேண்டிய படங்களில் தான் சேருகிறது. இதனை படத்தின் கதைக் களமே முடிவு செய்கிறது.


த்ரிஷ்யம் முதலாவது பாகம் ஒரு ட்ரெண்ட் செட்டர். ஒருவன் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு நாளின் சம்பவங்களை



வேறொருநாளில் நடந்ததாக மாற்றி உருவாக்குகிறான் எனும் புதியதொரு கான்செப்டுடன் வந்து அனைவரையும் ஈர்த்த திரைப்படம்.  


இப்பொழுது முதல் பாகத்தில் காவல் நிலையத்தில் புதைக்கப்பட்ட உடலும் போலீஸின் கைக்கு சிக்கினால் அதிலிருந்து ஜார்ஜ்குட்டி எவ்வாறு தப்பிக்கலாம் என ஒரு சிறிய சிந்தனையை ஓடவிட்டு கிடைத்த ஒரு ஐடியாவை வைத்து இரண்டரை மணி நேரத்திற்கு இழுத்திருக்கிறார் ஜீத்து ஜோசஃப்.


லாஜிக் என்னென்ன இடிக்கிறது என பிறகு பார்ப்போம். அதற்கும் முன்னதாக நேரத்தை  நிரப்புவதற்காக நிறைய வழ வழவென்று காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.


அதிலும் முதல் ஒரு மணி நேரம் பாக்கியலட்சுமி சீரியல் ரேஞ்சிற்கு செல்கிறது. சொன்ன விஷயத்தையே திரும்பத்திரும்ப சொல்கிறார்கள். முதல் பாகத்தை ரீகால் செய்வது தவறில்லை. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் ரீகால் செய்யும் அளவிற்கு அது அவ்வளவு complicated ஆன கதையும் இல்லை, பார்வையாளர்கள் அவ்வளவு சுலபமாக மறக்கும் கதையும் இல்லை.

ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் அன்னிக்கு ராத்திரி என்ன நடந்தது என ஒவ்வொருவரையாக விசாரிப்பது அபத்தமாக இருக்கிறது. விசாரிப்பவர்களிலிம் ஒரு சிலர் ஆமா சார் ஆறு வருசத்துக்கு முன்னால அன்னிக்கு ராத்திரி ஜார்ஜ் குட்டி வண்டி இப்டிக்கா போச்சு சார் என்கிறார்கள்.


ஒரு வேளை உண்மையிலேயே இதுமாதிரி இவெஸ்டிகேஷன்கள் நடந்தால் என்ன நடக்கும்..? வடிவேலு ஒரு படத்தில் கிளியாக நடிப்பாரே அதை ஞாபகப் படுத்திக்கொள்ளுங்கள்.

Police: 2013 ஆகஸ்டு 3 ம் தேதி ஞாபகம் இருக்கா?


Neighbors  : கீ.. கீ.. கீ..


Police :அன்னிக்கு நைட்டு இந்த பக்கமா நடந்து வந்தீங்களா?


Neighbors :  கீ.. கீ.. கீ..


Police :அப்போ ஜார்ஜ் குட்டிய வழில பாத்தீங்களா?


Neighbors   : "ஏண்டா கொன்னப்பயலே.. கொன்னப்பயலே... முந்தாநாளு நடந்ததே ஞாபகத்துக்கு வரமாட்டுது.. ஆறு வருசத்து முன்னாடி ஜார்ஜ் குட்டிய பாத்தியா கன்னுக்குட்டிய பாத்தியான்னுட்டு..


அடுத்து ஒரு திரைப்படத்தின் அத்தனை காட்சிகளும், கதாப்பத்திரங்களும் எதோ ஒரு வகையில் முக்கியக் கதைக்கு சப்போர்ட் செய்வதாக இருக்க வேண்டும். சில கதாப்பாத்திரங்கள், சில காட்சிகள் கதைக்கு ஒட்டாமல் துண்டாக நிற்கின்றன. குறிப்பாக த்ரில்லர் கதை சொல்லும் ஒரு பையனும் அவன் சார்ந்த ஒருசில காட்சிகளும் ஏன் வருகிறது என்று தெரியவில்லை.  ஜார்ஜ் குட்டி வீட்டில் நடக்கும் get together காட்சிகள் எல்லாம் எந்தப் பயனும் இல்லாமல் வெறும் நேரத்தைக் கடத்த மட்டுமே உதவுகிறது. 


திறந்த ஜன்னலைப் பார்த்தால் மூத்த பெண்ணிற்கு அங்கு யாரோ நிற்பது போலவே தெரிகிறது.. வலிப்பு மாதிரி எதோ வருகிறது.. 


”அதான் தெரியிதுல்ல.. கழுதை அந்த ஜன்னல மூடித்தான் வைங்களேண்டா… எனி டைம் தொறந்தே தான் இருக்கு.  பேய் வருதுன்னு தெரிஞ்சும் பச்சப் புள்ளைய பக்கத்து ரூம்ல தனியா தூங்க வைக்கிற ஹாலிவுட் பட parents  மாதிரி”


ஒரு திரைப்படத்தில் சில விஷயங்களை கண்டிப்பாக காட்சிப்படுத்த வேண்டும். சில விஷயங்களை வாயால் சொன்னால் மட்டும் போதும். அப்படி சொன்னால் மட்டும் போதுமான சில விஷயங்களை நேரத்தை இழுக்க காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். ஜார்ஜ் குட்டியை போலீஸ் ஸ்டேஷனுக்குள் பார்க்கும் ஒரு குற்றவாளி ரிலீஸ் ஆன பின்பு அவருடைய குடும்பம், அவருடைய மனைவியை சமாதானப்படுத்துவது என ஒரு நான்கு காட்சிகள் அவருக்காக எடுத்திருக்கிறார்கள். 


அல்டிமேட்டாக அவருக்கு பணம் தேவைப்படுவதால், போலீஸில் துப்புக்கொடுக்கப் போகிறார். பணத்திற்காக துப்புக் கொடுக்கப் போகிறார் என்பதை நியாபபடுத்த பெரிய பிண்ணனி எதுவும் தேவையில்லையே… மனிதர்களின் சுபாவமே அது தானே. 


இன்னொரு மரணக் காமெடி ஜார்ஜ் குட்டி வீட்டுக்கருகில் வசிக்கும் ஷாடோ போலீஸ் குடும்பம். அவர்களை போலீஸ் என ரிவீல் செய்வது தான் படத்தின் முதல் ட்விஸ்ட். அது படம் ஆரம்பித்து சுமார் ஒருமணி நேரம் கழித்துத்தான் வருகிறது. அந்த ஒரு ட்விஸ்டுக்காக படம் சுமார் அரை மணி நேரம் இழுக்கப்பட்டிருக்கிறது. 


ஒரு கொலை கேஸுக்காக, இரண்டு போலீஸ் இரண்டு வருடங்கள் வேலை செய்கிறார்கள் என்கிற அபத்தம் ஒருபக்கம் இருந்தாலும், கடைசியில் இரண்டு வருடங்களாக அவர்கள் கண்டுபிடித்தது எதுவுமே உபயோகமானது இல்லை என்பது நமக்குத் தெரியும் போது இன்னும் பரிதாபம். கதை ஓட்டத்தில் இதை பலர் இதை கவனிக்காமல் கூட இருந்திருக்கலாம். 


ஜெயிலிலிருந்து வெளிவந்தவர் ஜார்ஜ் குட்டியை அன்று இரவு தான் பார்த்தாகச் சொல்லும் காட்சி அதற்கு முன்னதாக இவர்கள் கடத்திய ஒண்ணரை மணி நேரத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்குகிறது.


முதல் காட்சியில் அந்த குற்றவாளி ஜெயிலுக்கு போகும் காட்சிக்கு பிறகு, நேரடியாக அவர் ஜெயிலிலிருந்து வெளிவந்து போலீஸிற்கு துப்புகொடுக்கும் காட்சிக்கு தாவி அதிலிருந்து நாம் படம் பார்த்தாலும் படம் நிறைவாகவே இருக்கும். 


அடுத்து படம் எடுப்பதாக கூறி, ஒரு எழுத்தாளரைப் பிடித்து கதை எழுதி காமெடி செய்வது அடுத்தது. அந்தப் புத்தகத்தாலும் ஜார்ஜ்குட்டிக்கு படத்தில் எந்த பிரயோஜனமும் இல்லை. கடைசியில் அவர் விடுதலையாவது கூட கிடைத்த எலும்புக்கூடு வருணுடையது அல்ல என்பதால் மட்டுமே.


அந்த கதை எழுதியதால் ஜார்ஜ்குட்டி அடைந்த லாபம் என்ன எனப் பார்த்தால், எலும்புக்கூட்டை தோண்டி எடுத்ததும் அடுத்து அதை என்ன செய்வார்கள் எங்கு கொண்டு செல்வார்கள் என்கிற தகவலைப் பெற்று அங்கு வேலை செய்யும் செக்யூரிட்டியை கரெக்ட் செய்கிறார். இந்தத் தகவலைப் பெறவா இத்தனை லட்சம் செலவு செய்து, கதாசிரியரைப் பிடித்து கதை எழுதினார்? ஒரு வேளை கதாசிரியர் மூலம் கதைக்கு புது ஐடியா எதாவது கிடைத்திருந்தாலும் பரவாயில்லை. அந்த மாற்று க்ளைமக்ஸை கூறுவது கூட ஜார்ஜ்குட்டிதான். 


இந்த முறை போலீஸ் ஜார்ஜ் குட்டியிடம் தோற்றால் அதன் பிறகு வெளியில் தலைகாட்டவே முடியாது எனும் சூழலில் மிக கவனமாக கையாளும் போலீஸ் அந்த எவெடென்ஸை ஜார்ஜ் குட்டி வந்து லவுட்டிக்கொண்டு போக வசதியாக அனாமத்தாக ஒரு குடிகார செக்யூரிட்டையை மட்டும் நம்பி விட்டு விட்டுப் போவது அபத்ததிலும் அபத்தம்.


பாடல்கள் இல்லாத ஒரு திரைப்படம் இரண்டு மணி நேரம் எடுக்கப்பட்டாலே அது மிகப்பெரியதாகத் தோன்றும். இங்கு இரண்டரை மணி நேரம். 

படம் ஒரு கட்டத்தை தாண்டி சுவாரஸ்யமகவே செல்கிறது. நிறைய லாஜிக் குறைகள் படத்தின் ஓட்டத்தில் தெரிவதில்லை. ஆனால் இதை ஒரு மாஸ்டர் பீஸ் என்றோ, இதுபோல ஒரு சீக்குவல் வந்ததே இல்லை என்பது போலோ பில்ட்டப்புகளையும், ரைட்டப்புகளையும் பார்க்கும்போது அதன் மறுபக்கத்தையும் பற்றி பேச வேண்டியிருக்கிறது. 

Tuesday, January 12, 2021

KRACK - Movie Review!!


Share/Bookmark

 



கொரோனாவிற்குப் பிறகு திரையரங்கில் வெளியாகியிருக்கும் ஒரு பெரிய பட்ஜெட் திரைப்படம்.

ரவிதேஜாவைப் பொறுத்த வரையில் சென்ற பத்து வருடங்கள் சுமாரிலும் சுமாரானவை. மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் என எதுவும் இல்லை. ஒரு சில படங்கள் மட்டும் சுமாரான ஹிட் அடித்திருந்தன. அதற்கு முக்கியக் காரணம் கதைக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் ஒரே மாதிரிப் படங்களாக நடித்துத் தள்ளியது.

முதல் பாதி காமெடி இடைவேளையின் போது கட்டாயமாக ஒரு ட்விஸ்ட் பின் இரண்டாம் பாதியில் ஒரு ஃப்ளாஷ்பேக் இதுதான் கடந்த தசாப்த்தில் ரவிதேஜா நடித்து வெளியான படங்களின் பேட்டர்ன். பெரும்பாலான தெலுங்குப் படங்களின் பேட்டர்ன் இதுதான் என்றாலும் ரவிதேஜா படங்களில் அந்த பேட்டர்னில் கடுகளவு மாற்றம் கூட நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் ரொம்பவும் கராராக இருப்பார்.

ரவிதேஜாவை வைத்து டான் சீனு, Balupu என இரண்டு திரைப்படங்களை இயக்கிய கோபிசந்த் மூன்றாவது முறையாக ரவிதேஜாவுடன் இணைந்திருக்கிறார்.

முதலில் இந்தத் திரைப்படம் ஆரம்பித்த பொழுது இது தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “சேதுபதி” படத்தின் ரீமேக் என செய்திகள் பரவ, திரைப்படக் குழு உறுதியாக இல்லை என மறுத்தது.

ஆனால் க்ராக் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளிவந்த பொழுது சேதுபதியின் சாயல் நிறைய இடங்களில் தெரிந்தது. “சேதுபதி”யா இருந்தா போகத்தேவையில்ல.. இல்லைன்னா போகலாம் என இரண்டு மனநிலையிலிருந்து கடையில் ஒரு வழியாக தியேட்டருக்குப் போனால்… நல்ல வேளை சேதுபதி ரீமேக் இல்லை.. அதுவே மிகப்பெரிய நிம்மதியாக இருந்தது.

ட்ரெயிலரில் எதோ இன்ஸ்வெஸ்டிகேசன் த்ரில்லர் மாதிரியான ஒரு பில்ட் அப் கொடுத்திருந்தார்கள். ஆனால் படம் அப்படியெல்லாம் ஒண்றும் இல்லை. ஒரு போலீஸிடம் சிக்கி சின்னாபின்னமாகும் மூண்று தாதாக்களின் சோகக் கதைதன் இந்த க்ராக்.

ஆஹா ஓஹோ டைப் திரைக்கதை இல்லாவிட்டாலும் அருக்காத  action packed screenplay. வழக்கம் போல ஸ்டண்ட்ஸ் அருமை. மெயின் வில்லனாக சமுத்திரக்கனி அவருடன் வரலக்‌ஷ்மி. கருத்து  கந்தசாமி சமுத்திரக்கனி தெலுங்கில் வில்லனாக ஒரு ரவுண்ட் வருவார் போலிருக்கிறது.

மூன்று வில்லன்களில் மூண்றாவது குட்டி வில்ல்னாக சாய் ரவி நடித்திருக்கிறார். தெலுங்கு திரைப்படங்களில் ஒரே திரைப்படத்தில் மூண்று முக்கியமான கதாப்பாத்திரங்களுக்கு டப்பிங் கொடுப்பவர் சாய் ரவி. இந்தப்படத்தில் சமுத்திரக்கனிக்கும்  அவரே டப்பிங்.. அவருக்கும் அவரே டப்பிங்.. சமுத்திரக்கனியும் சாய் ரவியும் பேசிக்கொள்ளும் காட்சிகளில் காதல் கொண்டேன் தனுஷ் போல அவரே கேள்வி கேட்டு அவரே பதில் சொல்வது போல இருந்தது.

ரவிதேஜா போலீஸ் கெட்டப்பில் கெத்தாக, ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார். ஆங்காங்கு ஒருசில ஒன்லைனர்ஸ் தவிற பெரிதாக நகைச்சுவை காட்சிகள் இல்லை. தமன் இசையில் பிண்ணனி இசை தரம். பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்.

மொத்தததில் சலிப்பை ஏற்படுத்தாத ஒரு நல்ல ஆக்‌ஷன் எண்டர்டெய்னர். 2021 ரவிதேஜாவிற்கு நன்றாக ஆரம்பித்திருக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...