Saturday, April 23, 2016

SARRAINODU – சரிப்பட்டு வரமாட்டான்!!!


Share/Bookmark
சில பேரு நல்ல கதைய நம்பி படம் எடுப்பாங்க. சில பேரு கருத்து சொல்லனும்னு படம் எடுப்பாங்க. சில பேரு கடுப்பேத்தனும்னு கூட படம் எடுப்பாங்க. ஆனா முதல் முறையா ரெண்டே ரெண்டு கைய மட்டுமே நம்பி ஒரு படம் எடுத்துருக்காய்ங்க. . இந்தப்படம் எப்புடி ஆரம்பிச்சிருப்பாய்ங்கன்னு யோசிச்சிப் பாத்தேன். அல்லு அர்ஜூன் போயப்பட்டி சீனுகிட்ட போய் (தலைநகரம் வடிவேலு ஸ்லான்ல படிங்க) “டேய்.. அண்ணனோட ஆர்ம்ஸ பாத்தியாடா?” ன்னுருக்காரு. அதுக்கு அவரு தொட்டுப்பாத்துட்டு “கல்லு மாதிரி இருக்கு அங்கிள்” ன்னுருக்காரு. “அப்ப இந்த ஆர்ம்ஸ்காக ஒரு படம் எடு” ன்னு சொல்லி இந்தப் படத்த ஆரம்பிச்சிருக்காய்ங்க. இது ஆடியன்ஸ்காக எடுக்கப்பட்ட படம் இல்லை. அல்லு அர்ஜுனோட ஆர்ம்ஸ காட்டுறதுக்காக மட்டுமே எடுத்த படம்.

இதுவரைக்கும் எந்த ஹீரோவுமே பன்னாத ஒரு புதுமையான கேரக்டரான “வெட்டிப்பய” ரோல்தான் நம்ம அல்லு அர்ஜூனுக்கு. வேலை வெட்டி எதுவும் இல்லாம தின்னுட்டு, அநியாயத்த கண்டா பொங்கி எழுந்து, ரவுடிங்கள தொம்சம் பன்றவர். இன்னொரு பக்கம் முதலமைச்சர் பையனான ஆதி இன்னொரு செம வித்யாசமான கேரக்டர் பன்னிருக்காரு. ஒரு பைப்லைன் ப்ராஜெக்ட்டுக்காக கிராமத்து மக்கள்கிட்டருந்து நிலத்த புடுங்க நினைக்கிற புதுமையான வில்லந்தான் ஆதி. இந்த ரெண்டு மிகப்பெரிய புதுமையப் பாத்தாலே உங்களுக்குத் தெரியும் படம் எவ்வளவு புதுமையா இருக்கும்னு. வக்காளி வந்துருக்க முக்கால்வாசி தெலுங்கு படத்துலயும் தமிழ்ப் படத்துலயும் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இந்த கேரக்டர்தான். இன்னும் விடமாட்டாய்ங்க போலருக்கு.  

அல்லுவோட அப்பாவா நம்ம JP. அவரோட ஃப்ரண்டு சாய்குமாரோட பொன்ன அல்லுவுக்கு கட்டி வச்சிட்டா சும்மா திரியிற நம்ம பையன் பொறுப்பானவனா மாறிருவான்னு நினைக்கிறாரு. இப்புடி எதாவது நல்லது வீட்டுல பன்னுவாய்ங்கன்னு எதிர்பாத்துதான் நம்மூர்ல நிறைய பேரு சும்மாவே திரியிறாய்ங்க. பொண்ணு பாக்கப் போற வழியில கேத்ரின் தெரெசாவ பாத்து மனச பறிகொடுத்து, சாய்குமார் பொண்ணான ராகுல் ப்ரீத் சிங்க ரிஜெக்ட் பன்னிடுறாரு.

கேத்ரின் தெரெசா யாருன்னு பாத்தா அந்த தொகுதி எம்.எல்.ஏ. நானும் வட அமெரிக்காவுலயும் பாத்துருக்கேன் தென் அமெரிக்கவுலயும் பாத்துருக்கேன். இப்புடி ஒரு எம்.எல்.ஏவப் பாத்ததில்லைப்பா. இந்த மாதிரி கேண்டிடேட்லாம் நம்ம தொகுதில நின்னா எதிர்த்து நிக்கிற ஒரு பயலுக்கும் டெபாசிட் கூட கெடைக்காதுன்னா பாத்துக்குங்களேன். வெளில சேலையில போற MLA தெரெசா வீட்டுக்குள்ள டைட் ஃபிட்டிங் மார்டன் ட்ரெஸ்ஸோட சுத்துது. அத சேலையில பாக்கும்போதே MLA ஃபீல் வரல. இதுல மார்டன் ட்ரஸ் வேற. கொடுமை என்னன்னா அடிக்கடி அதுவே “நா MLA… நா MLA” ன்னு சொல்லி ஞாபகப்படுத்திக்கிது.

அப்புறம் வழக்கம்போல ரெண்டு மூணு பாட்டு, ரெண்டு மூணு ஃபைட்ட போட்டு தெரெசாவ உசார் பன்னி எல்லாம் கைகூடுற நேரத்துல, நம்ம டார்லிங் நம்பர் 45 ராகுல் ப்ரீத் சிங்க வில்லன்கள் தொரத்திட்டு வர்றாங்க. அப்ப போடுறோம் ஒரு கும்மாங்குத்து ஃபைட்ட. முடிச்சிட்டு ஜேஜே மாதவன் மாதிரி “அந்தப்பொண்ணத் தொட்டா மட்டும் இல்லைடா இந்தப் பொண்ண தொட்டாக்கூட எனக்கு வலிக்கும்” ன்னு பஞ்ச் டயலாக் பேசி இண்டர்வல் விடுறாய்ங்க.

அப்புறம் ராகுல் ப்ரீத் சிங்குக்க்கு என்னாச்சி? ஏன் அத வில்லன்கள் தொறத்துறாய்ங்க. அல்லு பொண்ணு பாக்கப் போகும்போது என்ன நடந்துச்சுன்னு ஃப்ளாஷ்பேக் போட்டு கிளைமாக்ஸ்ல ஒரு பெரிய ஃபைட்ட போட்டு முடிச்சா, படம் ஓவர்.

படத்தோட இயக்குனர் போயப்பட்டி சீனு. “சிம்ஹா” லெஜண்ட்” “தம்மு” போன்ற படங்களை எடுத்தவர். வழக்கமா இயக்குனர்கள் ஸ்க்ரிப்ட எழுதிட்டு தேவையான இடத்துல ஃபைட்ட வப்பாங்க. ஆனா நம்மாளு ஒரு அஞ்சி ஃபைட்ட வச்சி, அதுக்கப்புறம் அதுக்கேத்தமாதிரிதான் ஸ்க்ரிப்ட் எழுதுவாரு. உண்மையிலயே சண்டைக்காட்சிகளை ரொம்ப ரசிச்சி எடுக்கக்கூடியவர். படங்கள் ஒரே ரத்தக் களரியாதான் இருக்கும். ஆனாலும் அதுல ஒரு க்வாலிட்டி இருக்கும்.


பொதுவாவே தெலுங்கு படங்கள்ல ஹீரோ பக்கத்துல இருந்தா எவ்வளவு கொடூரமான வில்லனா இருந்தாலும், எத்தனை வில்லன்கள் இருந்தாலும் பயப்படவே தேவையில்லை. அதுலயும் போயப்பட்டி சீனு படங்கள்ல இன்னும் அதிகம். சும்மா தெறிக்க விடுவாய்ங்க. ”சிம்ஹா” வுல பாலகிருஷ்ணா அசால்ட்டா ரெண்டு பேரத்தூக்கி நச்சின்னு ரோட்டுல போய்ட்டு இருக்க லாரில அடிப்பாரு.

இதுலயும் அதே தான். பாரபட்சம் பாக்காம அல்லு  அள்ளி வீசுறாப்புல. அதுவும் இண்ட்ரோ ஃபைட்டு விஷூவலி செம. கீழ இருக்க ட்ரெயிலர்ல கடைசில பாருங்க. ஒருத்தன அடிச்சி பறக்க விட்டுட்டு ஸ்டைலா நடந்து போயிட்டு இருக்கும்ப்போது பின்னால ஒரு குதிரை போயிட்டு இருக்கது செமையா இருக்கும். அது மட்டும் இல்லை அந்த ஃபைட்டு மொத்தமுமே செம. அடிக்கடி அல்லு கைய முறுக்குறாரு. முறுக்க முறுக்க “மட மட ன்னு முறுக்க உடைக்கிற மாதிரி ஏதோ சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு. அல்லு சீரியாஸா, கோவமா குடுக்குற சில ரியாக்‌ஷன் செம காமெடி.



பாடல்கள் தமன். தெலுங்கு படங்களுக்குன்னே அவர் வச்சிருக்க அதே ட்யூன்ஸ். ஆறு பாட்டு உள்ள படமெல்லாம் லெமூரியக்கண்டத்தோட வழக்கொழிஞ்சி போயிருச்சி. இன்னும் ஆறு பாட்டு வச்சி, ஆறயுமே படத்துலயும் போட்டுருக்காய்ங்க. அடிக்கடி பாட்டு வந்துக்கிட்டே இருக்கு. அஞ்சலி ஒரு பாட்டுக்கு. சும்மா அள்ளுது. அஞ்சலிக்கு எவ்ளோ ஃபேன்ஸு.. ஸாக் ஆயிட்டேன்.

தெலுங்கு படங்கள்ல முக்கால்வாசிப்படங்கள்ல ரெண்டு ஹீரோயின்கள் தான் இருக்கும். அதுவும் க்ளைமாக்ஸ்ல ஹீரோ ரெண்டு பேரையும் கல்யாணம் பன்னிக்கிற மாதிரி கூச்சப்படாம முடிச்சிருவாய்ங்க. ஆனா இங்க ராகுல் ப்ரீட் சிங் ஃப்ளாஷ்பேக்க கேட்ட தெரெசா, “உனக்கு அவதான் கரெக்ட்… உனக்கு எப்ப என்ன உதவி வேணாலும் என்கிட்ட கேளு… எம்.எல்.ஏ நா இருக்கேன்” ன்னு அல்லுக்கிட்ட சொல்லிட்டு கடைய மூடிருது. இதான் படத்துல நா கண்டுபுடிச்ச புதுமையான சீன்.

ப்ரம்மானந்தம் ஊருகா மாதிரி அப்பப்ப வர்றாரு. ஒண்ணு ரெண்டு சீன் சிரிக்க வைக்கிறாரு. அவரு ஒரு செட்டப் வச்சிருக்கத பாத்து அல்லு அர்ஜூன் “வீட்டுல அழகான wife இருக்கும்போது ஏன்யா வெளில இன்னொன்னு?” ன்னு கேக்குறப்போ ப்ரம்மி “ வீட்டுல இருக்க டிவிலதான் படம் வருதேன்னு நம்ம தியேட்டர் போகாம இருக்கோமா? என்ன இருந்தாலும் தியேட்டர்ல படம் பாக்குற சுகமே வேற” ன்னு சொல்லி எப்புடி வீட்டுல மனைவிய சாமாளிக்கிறாருன்னு சொல்றது செம.

படத்துல செம டம்மி பீஸு  யாருன்னா நம்ம மிருகம் ஆதி தான். இவருக்கு பேர எமோஷனல் ஏகாம்பரம்னு வச்சிருக்கலாம். எப்பப்பாத்தாலும் எமோஷன் ஆகி கருக்கருவா, கத்தி, துப்பாக்கின்னு வித்யாச வித்யாசமான ஆயுதங்கள்ல பாக்குறவிங்களயெல்லாம் கொல்றாரே தவற கேரக்டர்லயோ, நடிப்புலயோ எந்த ஒரு வித்யாசமும் இல்லை. காலங்காலமா தெலுங்கு படங்கள்ல ரவுடி அல்லக்கைகள் பன்ற வேலை தான் இது.

வழக்கமா போயப்பட்டி சீனு  படங்கள்ல வசனங்கள் நல்லாருக்கும். இதுல அப்டியும் பெருசா இல்லை. பாலைய்யான்னாதான் அவருக்கு வசனம் பொங்கி வரும்போல.


ட்ரெயிலர்ல எதோ போலீஸ் கதை மாதிரி காமிச்சி ஏமாத்திட்டாய்ங்க. இருந்தாலும் படம் ரொம்பல்லாம் அருக்கல. போரடிக்காமத்தான் போகுது. ஆனா புதுசா எதையும் எதிர்பாத்துராதீங்க. நல்ல குவாலிட்டியான ஃபைட் சீன்ஸ் பாக்கனும்னு ஆசைப்படுறவங்க இந்தப் படத்த பாக்கலாம். மத்தபடி பெருசா எதுவும் இல்லை. 


Friday, April 15, 2016

தெறி – ஜெயிச்சாத்ரி!!!


Share/Bookmark
ஒரு நடிகர் ரசிகர்களை சம்பாதிக்கிறத விட அவர் சம்பாதித்த ரசிகர்களை தக்க வச்சிக்கத்தான் ரொம்ப பாடுபடனும். ஒவ்வொரு படத்தை அந்த நடிகர் தெரிவு செய்யும்போதும் இது கண்ணு முன்னால வந்து போகனும். ரெண்டு படம் சூப்பர் ஹிட்டானும் அடுத்து என்ன எடுத்தாலும் பாப்பாங்குற நினைப்பு வரும்போது தான் சரிவு ஆரம்பிக்கும். மேலும் முதல் நாள் படம்பார்க்கும் ரசிகர்களால  மட்டும் ஒரு படத்தை வெற்றிப்படமாக்கிட முடியாது. பொதுமக்களுக்கு அந்தப் படம் என்ன தாக்கத்த உண்டுபன்னுதுங்குறதப் பொறுத்துதான் வெற்றி தோல்வி அமையும். நூறு கோடி பெஞ்ச் மார்க் இப்பல்லாம் ரொம்ப சாதாரணமா போயிருச்சி. தமிழ் முன்னனி ஹீரோக்களோட படங்கள் முதல் நான்கைந்து நாட்கள்லயே நூறு கோடி வசூலை எட்டிருது. அதனால நூறு கோடி வசூல் என்பதெல்லாம் அடுத்த நடிகரோட கம்பேர் பன்னும்போது defend பன்னிக்க மட்டுமே உதவுமே தவற, ஒரு ரசிகனை படத்தோட தரம் மட்டுமே மகிழ்ச்சிபடுத்த முடியும்.

எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் ன்னு தான் நாம மூணு தலைமுறையா கம்பேர் பன்றோம். இதுல எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி –கமல் ங்குற முதல் ரெண்டு காம்பினேஷனான எடுத்துக்கிட்டோம்னா இது வெறும் ரெண்டு நடிகர்களுக்கிடையே உள்ள கம்பேரிசன் மட்டும் இல்லாம, இரண்டு வேறுபட்ட ரசனையுடைய ரசிகர் கூட்டங்களுக்கிடையே உள்ள கம்பேரிசன். எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்கள் ஒரு வகை. சிவாஜி நடிக்கும் படங்கள் இன்னொரு வகை. ரெண்டும் மிக்ஸ் ஆகாது. அதே மாதிரி தான் ரஜினி- கமல் படங்களும். இருவரின் படங்களும் வேறு வேறு வகையானது. ஒரு ரஜினி ரசிகருக்கு ரஜினி படங்கள் எப்படி இருக்கும்ங்குற தெளிவும், ஒரு கமல் ரசிகருக்கு கமல் என்ன மாதிரியான படங்கள் குடுப்பாருங்குறதுலயும் நல்ல புரிதலும் இருந்துச்சி. வெற்றி தோல்விகளைப் பொறுத்துதான் இந்த ரெண்டு நடிகர்களை கம்பேர் பன்ன முடியுமே தவிற one to one அப்டியே கம்பேர் பன்ன முடியாது.

ஆனா இப்ப நாம கம்பேர் பன்ற அஜித், விஜய் இருவருமே ஒரே மாதிரியான படங்கள் நடிப்பவர்கள். ஒரே மாதிரியான ரசிகர்களைக் கொண்டவர்கள். எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி-கமல் வரிசையில இந்தத் தலைமுறையில அஜித் விஜய் ரெண்டு பேருமே ரஜினி இடத்துல தான் போட்டி போடுறாங்களே தவற, இந்த தலைமுறைக்கான கமலஹாசனோட இடம் காலியாவே இருக்கு.. எனவே அஜித்-விஜய்ங்குற கம்பேரிசன் இரண்டு நடிகர்களுக்கிடையேயான ஒப்பீடே தவிற இரண்டு ரசனைகளுக்கிடையே உள்ள ஒப்பீடு இல்லை. அதனாலதான் மாத்தி மாத்தி கொடூரமா கால வாறிக்கிறாய்ங்க.

முந்தாநேத்து அயல்நாடுகள்ல தெறி முதல் ஷோ ஆரம்பிச்சதுலருந்து பெரும்பாலும் வந்தது நெகடிவ் ரிவியூஸ் தான். படத்துக்கு பேரு வேற “தெறி” ன்னு நல்லா ஓட்டுறதுக்கு வசதியா வச்சிருக்கதால அவன் அவனும் “தெறிக்கவிட்டாய்ங்க…” “தெறிச்சி ஓடுறாய்ங்க” “த்தூத்தெறி” ன்னு ரைமிங்கா அடிச்சி விட்டுக்கிட்டு இருக்காய்ங்க. ஏன் நானே படம் பாக்குறதுக்கு முன்னால இது மாதிரி ஒரு மூணு நாலு போஸ்ட் ஷேர் பன்னி விட்டேன் நேத்து. ஏன்னா விஜய்ன்னாலே எல்லாரும் முதல்ல Trolling Mode க்கு போயிடுறாய்ங்க.

ஆனா உண்மையில படம் நல்லாதான் இருக்கு. அதுவும் இல்லாம படம் எடுத்துருட்டு இருக்கும்போதே படத்தோட கதை சத்ரியன் மாதிரியா இருக்குறதா பேசிக்கிட்டாங்க. இன்னும் சில பேரு சத்ரியனத்தான் official ah ரீமேக் பன்றாங்கன்னும் பேசிக்கிட்டாய்ங்க. உண்மைதான். படத்தோட கதைன்னு பாத்தா பாட்ஷாவையும் சத்ரியனையும் ஒண்ணா கலந்துவிட்டு அடிச்சது தான்.. ஆனா ஸ்க்ரீன் ப்ளே, விஜய் பர்ஃபார்மன்ஸ் படத்த காப்பாத்திருது.  

ட்ரெயிலரப் பாத்தாலே நமக்கு மொத்தக் கதையும் தெரிஞ்சிரும். ரெண்டு ஹீரோயின். விஜய் குழந்தையோட தனியா இருக்காரு. அப்டின்னா கதை என்ன, டுஸ்டு என்னன்னு எல்லாருக்குமே தெரியும். அதனால அந்தமாதிரி விஷயங்கள திரையில விளக்க ரொம்ப நேரம் எடுத்துக்காம காட்சிகள சுவாரஸ்யமாக்குறதுலயே ரொம்ப மெனக்கெட்டுருக்காங்க. கண்டிப்பா காட்சிகளும் நல்லா வந்துருக்கு.

மீனாவோட பொண்ணு நைனிகா நடிப்புல மீனாவ சாப்டுரும் போல. சூப்பரா பன்னிருக்கு. அந்தக் குழந்தைக்கு எழுதப்பட்டிருக்க “counter dialogues” அது வயசுக்கு கொஞ்சம் அதிகம்னு தோணுச்சி. ஆனாலும் ரசிக்கிற மாதிரி தான் இருக்கு.

குருவில்லா கேரக்டர்லயும் சரி, விஜய் குமார் கேரக்டர்லயும் சரி விஜய் பட்டையக் கெளப்பிருக்காரு. செம ஸ்க்ரீன் ப்ரசன்ஸ். அதோட ஆளும் செம ஃபிட். வழக்கமா பன்ற அதிகப்பிரசங்கித் தனங்கள் எதுவும் இல்லாம நீட்டா பன்னிருக்காரு. ஓவர் டோஸ் ஆகிடாமயும், அதே சமயம் மாஸ் சீன்ஸ் இருக்கமாதிரியும் தெளிவா பன்னிருக்காங்க.

குறிப்பா விஜய் இண்டர்வல் சீன்ல மகேந்திரன்கிட்ட அவர் பையன யார் யார் கொன்னுருக்கலாம்னு ஒரு லிஸ்டு சொல்லுறது செம. குழந்தைங்கள பிச்சையெடுக்க வைக்கிற ஒரு ரவுடிகூட சண்டை போடும்போது, அவன் பின்னால 5 பேர் நிக்கிறாங்கன்னு சொல்லிட்டூ அதுக்கு ஒரு விளக்கம் குடுப்பாரு. அதுவும் நல்லாருந்துச்சி.

எனக்கு படத்துல irritating ah இருந்தது ஒரு சில விஷயங்கள். ஒண்ணு பாட்ஷாவுல வர்ற போலீஸ் ஸ்டேஷன் பில்ட் அப் சீன மனசாட்சி இல்லாம அப்புடியே திரும்ப எடுத்துருந்தது. இன்னொன்னு மேனரிசம்ங்குற பேர்ல ரெண்டு bubble gum ah வாய்க்குள்ள போடுறமதிரி எடுத்து வச்சிருக்கது. அப்புறம் விஜய் மூஞ்சிக்கு கருப்பு கண்ணாடி ரொம்ப கேவலாம இருக்கு. அத நம்ம தலைவாவுலயே பாத்தோம். ஆனா திரும்ப இதுலயும் ரெண்டு மூணு சீன்ல அதே கண்ணாடிய போட்டுக்கிட்டு கண்றாவியா வர்றாரு. வரலன்னா விட்டுற வேண்டியது தான.

படத்துல விஜய்- எமிஜாக்சன் காம்போவுக்கு பெருசா ஒண்ணும் இடமில்லை. ஆனாலும் எமிஜாக்சனுக்கு பதிலா வேற ஒரு நல்ல டீச்சரா போட்டுருக்கலாம். அந்த விக்குக்கும் அதுக்கும் எமி ஜாக்சன் சற்று டொம்மை போல் இருக்கு. சமந்தா- விஜய் காதல் காட்சிகள் சூப்பர். குறிப்பா முதல் முதல்ல ரெண்டு பேரும் மீட் பன்ற சீன்ல சமந்தா பேசுற வசனமும், அதுக்கு விஜய் பதில் சொல்றதும் நல்லாருந்துச்சி.

“The departed” ங்குற படத்துல நம்ம டிக்காப்ரியோவும் ஒரு ஹீரோ. வில்லன் ஒருத்தன புடிச்சிக்கிட்டு லிஃப்டுல கீழ வந்துட்டு இருப்பாரு. கீழ லிஃப்ட் தொறந்து வெளில வந்த அடுத்த செகண்ட் வில்லனோட ஒரு ஆள் அவர் தலையில சுடுவான். ஒரு செகண்ட்ல ஸ்பாட்லயே மண்டை செதறி கீழ விழுந்து செத்துருவாரு. நமக்கு ஒரு மாதிரி ஆயிரும். டேய் அவரு ஹீரோடா..  ஹீரோன்னா சாகும்போது எதாவது சொல்லிட்டு தாண்டா சாகனும். இப்புடி பொசுக்குன்னு போட்டீங்களேடான்னு தோணும். அந்த மாதிரி இங்க சமந்தா சாகுற சீன் வச்சிருக்காய்ங்க. தியேட்டர்ல சத்தம் போட்டுக்கிட்டு இருந்தவியிங்க ஒரு செகண்ட் ஸ்டண் ஆயிட்டாய்ங்க.


முதல் பாதி வில்லன்கள் யாரும் பெருசா இல்லாததால எந்த குடிக்கிற சீனோ தம் அடிக்கிற சீனோ படத்துல இல்லை. செகண்ட் ஹாஃப்ல மட்டும் ஒண்ணு ரெண்டு சீன் வருது. வில்லன் மகேந்திரன் தாடியோட பாக்க ரவிச்சந்திரன் மாதிரி இருக்காரு. மகன கொன்னதுக்காக பொறுமையா பழிவாங்குற அப்பா. நல்லா பன்னிருக்காரு.

இப்ப இந்த தெறில கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பொண்ணுக்காக போராடும் போலீஸ் தான் விஜய்.  இது வெறும் ஆரம்பம் தான். அடுத்த ரெண்டு வருஷதுக்கு கற்பழிப்புக்காக பழிவாங்குற போலீஸ் கதைகளால தமிழ் சினிமா ரொம்பி வழியப்போகுது.  இப்ப ராகவா லாரன்ஸ் நடிக்கிற ”மொட்டை சிவா கெட்ட சிவா” படத்தோட மெயின் தீமும் அதுதான். அடுத்து “Temper” படத்த ரீமேக் பன்னப்போறாய்க்களாம். அந்தப் படத்தோட தீமும் இதுதான். உசார் மக்களே.

பாட்டு எல்லாமே ஓக்கே தான். ஜித்து ஜில்லாடி ஆரம்பிக்கும்போது பாக்க ரொம்ப சூப்பரா இருக்கு. ஆனா போக போக சற்று டொம்மை ஆயிருது. மத்த பாட்டுங்களும், picturization உம் ஓக்கே ரகம். தியேட்டருக்குள்ள விசில் சத்தம் ஓவரா இருந்ததால் நிறைய இடங்கள்ல BGM கேக்கல.

படம் ஆரம்பிச்சி கொஞ்ச நேரத்துல விஜய் நைனிகா காட்சிகள் வரும்போது அவங்க கூட ஒரு நாயும் கூட இருக்கும். என் பக்கத்துல உக்காந்திருந்த ரெண்டு பேரு பேசிக்கிட்டய்ங்க. “ டேய் இது துப்பாக்கில நடிச்ச நாயாடா?” னான் ஒருத்தன். அதுக்கு இன்னொருத்தன் “டேய் அந்த நாயி எப்பவோ செத்துட்டுருக்கும்டா” ன்னான். எனக்கு ஒரு டவுட் ஆகிப்போச்சி. இவனுங்க எந்த நாயப் பத்தி பேசிக்கிட்டு இருக்கானுங்கன்னு (படித்தவுடன் கிழித்து விடவும்).  சரி கேட்டா கும்மிருவானுங்கன்னு அந்தக் கேள்விய என் மனசுக்குள்ளயே போட்டு புதைச்சிட்டேன்.

படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாலயே இணையங்களில் கொடுக்கப்பட்ட பில்ட் அப்புகளால ராஜா ராணி படத்த இப்ப வரைக்கும் பாக்கனும்னே எனக்கு தோணல. அந்தப் படம் எப்டியோ. இந்தப்படத்துல அட்லீ ரொம்ப தெளிவா, விஜய்க்கு ஏத்த மாதிரி காட்சிகளும் வசங்களையும் வச்சிருக்காரு. “அட்லீ செஞ்சிட்டாரு” அள்ளி விடுறதெல்லாம் சும்மா.


முதல் நாள் “ஆ… ஊ” ன்னு கத்துற ரசிகர்களுக்கு வேணா படம் கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிற மாதிரி இருக்கலாம். ஆனா நிச்சயம் பொதுமக்களுக்கு பிடிச்ச மாதிரியான படமா இருக்கும். என்னைப் பொறுத்த வரைக்கும் தலைவா, கத்தி, ஜில்லா படங்களையெல்லாம் விட ”தெறி” பல மடங்கு நல்ல எண்டர்டெய்னர். 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...