Wednesday, August 30, 2017

விவேகம் - சறுக்கியது எங்கே?


Share/Bookmark
எதிர்மறை விமர்சனங்கள் ஒரு புறம் கொடிகட்டிப் பறந்தாலும் மறுபுறம் விவேகம் வசூல் சாதனை புரிந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்மறை விமர்சனங்கள் பெருநடிகர்களின் முதல் வார வசூலைப் பெரும்பாலும் பாதிப்பதில்லை. இது போன்ற முண்ணனி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது மட்டும் திரையரங்கிற்கு வரும் குடும்பங்கள், விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் விவேகம் இயக்குனர் சிவா-அஜித் கூட்டணியில் உருவான முந்தைய இரு படங்களின் அளவு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

விவேகம் படத்தில் கதை இருக்கிறதா இல்லையா என்பதையே நமது நெட்டிசன்கள் மிகத் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். அது ஒருபுறம் இருக்கட்டும். கதை  அவ்வளவு சிறப்பாக இல்லையென்றாலும் திரைக்கதையிலும், உருவாக்கத்திலும் எந்த ஒரு படத்தையும் ரசிக்க வைத்துவிடலாம். ”பையா” திரைப்படத்தில் கதை என்ற ஒண்றே இல்லை என்பது லிங்கு பாய் அவர் வாயாலேயே ஒப்புக்கொண்டது. ஆனாலும் கார்த்தியின் முக்கியமான வெற்றிப்படங்களில் இன்று பையாவும் ஒண்று.

விவேகத்தில் அவர்கள் காட்டிய கதையில் எந்தெந்த காரணங்களால் பார்வையாளர்களுக்கு  படத்தின் மீது ஒரு ஈர்ப்பு வரவில்லை? எதை எதை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்பதை நம் அறிவுக்கு எட்டிய கோணத்தில் காண்போம்.
படத்தின் முக்கியமான குறைகளில் ஒண்று படத்தின் கதை ஓட்டத்தில் நம்மை பொறுத்திக்கொள்ள முடியாமை. படத்தில் அஜித்திடம் காணப்படும் அதே பரபரப்பு நம்மிடமும் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே பார்வையாளர்களான நமக்கு ஏற்படவில்லை.

வழக்கமாக நம் தமிழ் சினிமாக்களில் வில்லன் ஒரு இடத்தில் குண்டு வைத்திருப்பார். ஹீரோ அதனைத் தேடி அலைந்து  கடைசி நிமிடத்தில் கண்டுபிடிப்பார். அதில் ஓடிக்கொண்டிருக்கும் டைமர் சொற்ப நொடிகளே மிச்சமிருப்பதைக் காண்பிக்கும். சிவப்பு, நீலம் என்ற இரு ஒயர்களில் ஏதேனும் ஒன்றை நறுக்க வேண்டும். ”சிவப்பா நீலமா” என்ற குழப்பத்தில் ஹீரோவின் முகத்திலிருந்து வியர்வை வழிய, அவருக்கு இருக்கும் படபடப்பில் ஒருபகுதியாவது பார்க்கும் நமக்கும் இருக்கும். பார்க்கப்போனால் எந்தப் படத்திலுமே ஹீரோ ஒயரை நறுக்கும்போது குண்டு வெடித்ததாக சரித்திரம் இல்லை. அப்படியிருந்தும் நமக்கு லேசாக படபடக்கும். அந்த படபடப்புதான் நாம் கதைக்குள் இருக்கிறோம் என்பதற்கான ஆதாரம்.

விவேகம் திரைப்படத்தில் அப்படி எந்த இடத்திலுமே நம்மால் உணர முடியவில்லை. ஹீரோவின் அறிமுகக் காட்சிகள், பில்ட் அப் காட்சிகள் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளெல்லாம் முடிந்து கதைக்குள் நுழையும் காட்சி என்பது “செயற்கை பூகம்பம்” ஒண்று ஏற்பட்டதாகவும் அதனால் பலர் உயிரிழந்ததாகவும், அடுத்து ஒரு செயற்கை பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னர் அதைத் தடுக்க வேண்டும் எனவும் விவேக் ஓபராய் அஜித்திடம் விவரிக்கும் காட்சிதான்.

அந்த செயற்கை பூகம்பம் ஏற்படுவதையும், அதன் தாக்கத்தையும் தனிக் காட்சியாக படம் பிடித்துக் காட்டியிருக்க வேண்டும். அப்போதுதான் அது எவ்வளவு கொடூரமானது என்பதும் , அடுத்த பூகம்பம் நிகழாமல் தடுப்பது எவ்வளவு அவசியம் என்பதும் பார்வையாளர்களால் உணர முடியும். ஆனால் உண்மையில் நமக்கு காட்டப்படுவது என்ன? பூகம்பம் ஏற்பட்டதை அஜித்தும் விவேக் ஓபராயுமே திரையில்தான் பார்க்கிறார்கள். திரையில் காட்டப்படும் காட்சிகளுக்கே தாக்கம் குறைவாக இருக்கும்போது திரைக்குள் திரையில் காட்டினால் எப்படி தாக்கம் இருக்கும்? பார்வையாளர்கள் கதையுடன் ஒண்றாமல் போனதற்கு இது ஒரு மிக முக்கியக் காரணம்.

அதேபோல அஜித் மற்றும் விவேக் ஓபராய் இடைப்பட்ட நட்பு. ”நண்பா.. நா நம்புறேன் நண்பா… நீ கலக்கு நண்பா… தெறிக்கவிடு நண்பா” இதுபோன்ற உதட்டளவு வசனங்களைத் தவிற அஜித்தும் விவேக் ஓபராயும் நல்ல நண்பர்கள் என்பதைக் காட்டும் காட்சிகள் எதுவுமில்லை. சர்வைவா பாடலோடு பாடலாக ஒருசில காட்சிகள் கடந்து செல்கிறது. ஆனாலும் பயனில்லை. அவர்கள் நண்பர்களாக இருப்பதே நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தாத பொழுது நண்பன் எதிரியாக மாறும் பொழுது, அவர்கள் படத்தின் ட்விஸ்ட்டாக நினைத்த அந்த காட்சி நமக்கும் ட்விஸ்டாகத் தெரியவில்லை. அதே சமயம் அவர்கள் செய்தது துரோகமாகவும் நம்மால் உணரமுடியவில்லை.  

அடுத்ததாக படத்தில் நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஈடுபாட்டையும் தகர்த்ததுகதாப்பத்திரங்களின் தெரிவு எனலாம். முதலில் அஜித்தின் உதவியாளராக வரும் கருணாகரனின் தெரிவு. விவேக`ம் படத்தில் இருக்கும் அந்த கதாப்பாத்திரம் நிச்சயம் கருணாகரனுக்கானது அல்ல. உலகநாடுகள் அளவில் தேடப்படும் ஒரு பெண்ணை பிடிக்கும் உளவாளியின் உதவியாளன் வெறும் பயந்தாங்கோளியாக, காமெடி செய்ய முயற்சிக்கும் ஒருவர் மட்டும் போதாது.   காமெடிக்கென தனி ட்ராக்குகள் இல்லை. கதையின் ஒட்டத்திலேயே பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க வேண்டும். அதே சமயம் ஒரு போலீஸிற்கான கெத்தும் இருக்கவேண்டும் என்கிற பட்சத்தில் அந்த கதாப்பாத்திரத்திற்கு விவேக்கைத் தவிற வேறு எவரும் சிறப்பாகப் பொருந்தமுடியாது. ஏற்கனவே ஒரு படத்தில் அதே கூட்டணியில் நடித்ததால் விட்டுவிட்டார்களோ என்னவோ?  

அடுத்தது காஜல் அகர்வாலின் தெரிவு, முண்ணனி நடிகர் என்பதால் அவர்களுக்கு சமமான அந்தஸ்தில் உள்ள முன்ணனி கதாநாயகிகள் மட்டுமே நடிக்க வேண்டும் என்பது நான்கு பாடல்களுக்கு மட்டும் கதாநாயகிகளை அரைகுறை ஆடையில் ஆடவைக்கும் படங்களுக்குப் பொருந்தும். ஆனால் கதாநாயகியும் கதையின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும்பொழுது, அவரைச் சுற்றியும் கதை பின்னப்பட்டிருக்கும் போது முண்ணனி நடிகை என்பதைக் காட்டிலும் கதைக்கும், நாயகனுக்கும் பொருந்துகிறாரா என்பதையும் கவனித்திருக்க வேண்டும்.

சதிலீலாவதி திரைப்படத்தில் கமல் கோவை சரளாவை தனக்கு ஜோடியாக்கி நடித்திருப்பார். கோவை சரளா கமலுக்கான ஜோடியா? கதைக்குத் தேவைப்பட்டது. நம்மாளும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. டங்கல் திரைபடத்தில் சாக்‌ஷி தன்வார் எனப்படும் ஒரு சாதாரண நடிகைதான் இந்தியாவிலேயே முன்னணி நடிகரான அமீர்கானின் மனைவியாக நடித்திருந்தார். “இல்லை இல்லை.. நான் நம்பர் 1 நடிகன்.. இந்தப் படத்தில் எனக்கு கேத்ரினா கெய்ஃப் தான் மனைவியாக நடிக்க வேண்டும் என்று அமீர்கான் நினைத்திருந்தால், டங்கல் டொங்கல் ஆகியிருக்கும் அல்லவா?

அதுபோல் கதைக்குத் தேவையானவற்றையும் கருத்தில்கொண்டு கதாப்பாத்திரங்களைத் தெரிவு செய்யவேண்டும். விவேகத்தில் காஜல் அகர்வாலிற்குப் பதிலாக நயன்தாரா இதே கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பட்சத்தில் அதே காட்சிகள் இன்னும் சற்று வலுவாக இருந்திருக்கும். ஆனால் தற்பொழுது அவரின் ரேஞ்சுக்கு இதுபோன்ற டொம்மையான கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கமாட்டார் என்பது வேறு விஷயம். காஜல் எந்த விதத்திலும் அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவர் அல்ல. 

அடுத்ததாக ஆக்‌ஷனையும் செண்டிமெண்டையும் கலந்து கொடுப்பது தவறல்ல. ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் கலந்து விட்டு அடித்திருப்பதுதான் நகைப்பை வரவழைத்தது. படத்தில் உச்சகட்ட ஒரு பைக் சேசிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஃபோனைக் காதில் வைத்து குழந்தையின் இதயத் துடிப்பைக் கேட்பது, பத்துப் பதினைந்து குண்டுகள் உடலில் பாய்ந்து மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது ஃபோனை எடுத்து சிவாஜியின் “கைவீசம்மா… கைவீசு” பாணியில் “வர்றேம்ம்ம்மா” என்பது போன்ற காட்சிகளை முற்றிலுமாக தவிர்த்திருக்கலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக அந்த சால்ட் அண்ட் பெப்பர் சிகையழகை கொஞ்சம் மாற்றியிருக்கலாம். பெப்பர் எல்லாம் போய் தற்பொழுது வெறும் சால்ட் மட்டும் இருப்பது அஜித்தை தனியாகப் பார்க்கும்போது பெரிய விஷயமாகத் தெரியாவிட்டாலும் காஜலுடன் சேர்த்துப் பார்க்கும்போது.. சரி விடுங்க… அத ஏன் சொல்லிக்கிட்டு.. !!!

Friday, August 25, 2017

விவேகம் – ஆக மொத்தம் மூணு.. ச்சீயர்ஸ்!!!


Share/Bookmark
கொஞ்சநாள் முன்னால வரைக்கும் அஜித் விஜய் ரெண்டு பேர்ல  யார் நல்ல ஹிட்டு குடுத்து அவங்கவங்க ரசிகர்கள சந்தோஷப்படுத்துறதுங்குற போட்டி இருந்துட்டு வந்துச்சி. ஆனா இப்ப அது அப்டியே தலைகீழா மாறி, யாரு மொக்கை படம் குடுத்து மத்த ரசிகர்கள் குஷிபடுத்துறதுங்குற போட்டி போயிட்டு இருக்கும்போல. ஆறு மாசத்துக்கு முன்னால விஜய் பைரவான்னு ஒரு படத்த அஜித் ரசிகர்கள சந்தோஷப்படுத்த எடுத்தாப்ள. இப்ப அதுக்கு கைமாறா விஜய் ரசிகர்கள சந்தோஷப்படுத்த நம்ம அல்டிமேட்டு விவேகம் எடுத்துருக்காரு. 

வீரம், வேதாளம்னு இரண்டு வெற்றிப்படங்களைக் குடுத்தப்புறம் மூன்றாவதா சிவா அஜித் கூட்டணியில் அடுத்த படம். போஸ்டர், டீசர் ட்ரெயிலர் அத்தனையும் ரசிகர்களை குஷி படுத்தியிருக்க, படம் எப்டி இருக்குன்னு பாப்போம். தலை கெத்துடா, 1500 ஆப்ரேஷண்டா, ஒன் இயர் ஆப் ஹார்டு ஒர்க்குடா, சிக்ஸ் பேக்குடாஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.  அதெல்லாம் அந்தந்த சீசன்ல அவன் அவன் செய்யிறதுதான். ஒரு படமா விவேகம் எப்டி இருக்குன்னு பாக்கலாம்.

விவேகம் டீசர் வெளியான ஓரிரு தினங்கள்ல அந்த டீசர ஃப்ரேம், பை ஃப்ரேமா அலசி ஆராஞ்சி பாத்து ஒருத்தர் விவேகம் படத்துக் கதை இப்டித்தான் இருக்கும்னு ஒரு கதை சொல்லிருந்தாரு. அதாவது டீசர்ல வர்ற ஒரு அஜித் போலீஸ்னும், பேக் சாட்ல திரும்பி நிக்கிற அஜித் உலக நாடுகள் பலவற்றில் தேடப்படுற மிகப்பெரிய கிரிமினல்னும் அவர் தான் படத்தோட வில்லன்னும் சொல்லிருந்தாங்க.. இப்ப நா என்ன சொல்றேன்னா சிவாவும் அவரோட டீமும் இந்தக் கதை எழுதுனவர தேடிக் கண்டுபுடிச்சி அவர அவங்களோட அடுத்த படத்துக்கு கதை எழுத யூஸ் பன்னிக்குங்கன்னு சொல்றேன். ஏன்னா அந்தக் கதையே நல்லாருந்துச்சி.

இந்த ஹாலிவுட் படங்கள்லதான் டாம் க்ரூஸு, மேட் டாமன், டாம் ஹாங்க்ஸெல்லாம் குறுக்கயும் மறுக்கயும் ஓடி ஓடி சண்ட போட்டுக்கிட்டு இருப்பாய்ங்க. என்னடான்னு கேட்டா உலகத்தையே அழிக்கப்போற பெரிய திட்டம் எதையோ முறியடிக்க போராடிக்கிட்டு இருக்கேன்னுவானுங்க. அந்தத் திட்டம் உலகத்துலயே இவனுங்களுக்கு மட்டுதான் தெரியும். ஒட்டுமொத்த கவர்மெண்ட்டே இவய்ங்களுக்கு எதிரா இருக்கும். ஆனாலும் இவங்க தனி ஆளா நின்னு உலகத்த காப்பாத்திருவாங்க. மிஷன் இம்பாஸிபிள், Bourne,  ஜேம்ஸ் பாண்டு படங்கள்னு பல படங்கள்ல இதான் கதை.,  இப்ப அதே கதையிலதான் தல அஜித்தும் நடிச்சிருக்காரு. யப்பா.. தல ஹாலிவுட் கதையில நடிக்கப் போறாரு ஹாலிவுட் கதையில நடிக்கப்போறாருன்னு சொன்னீங்களே.. அது இதானாடா?

மாப்ளமுப்பதாயிரம் ரூவா முழுசா குடுத்ததுக்கு அந்த நேப்பாள் கார கூர்க்கா காலையிலதான் கரெக்டா சோலி பாத்தான்ன்னு கவுண்டர் புலம்புற மாதிரி மூணு படம் வரிசையா குடுத்ததுக்கு இந்தப் படத்துலதான் சிவா சிறப்பா வேலை பாத்துருக்காரு. ஆரம்பம் படத்து கதைய ((?) லைட்டா பட்டி டிங்கரின் பாத்து விவேகம் கதையாக்கிட்டாரு.

படத்துல மிகப்பெரிய ப்ரச்சனை கேமராவும், எடிட்டிங்கும். படம் பார்ப்பவர்கள் எதையுமே ஒழுங்காவோ தெளிவவோ பாத்துறக் கூடாதுங்குறதுல இவங்க ரெண்டு பேருமே ரொம்ப கவனமா இருந்துருக்காங்க. பெரும்பால காட்சிகள்ல கேமாராவை தோளில் வைச்சிகிட்டே ஷூட் பன்னிருக்காங்க. ஆட்டி ஆடிக்கிட்டு அதுவே எரிச்சல். ரெண்டு செகண்டுக்கு மேல எந்த ஷாட்டையுமே காமிக்கிறதில்லை. டக்கு டக்குன்னு காட்சிகள் மாறிக்கிட்டே இருக்கு. ஒருவேளை இந்த மாதிரி பன்னா படம் ஸ்பீடா இருக்க மாதிரி இருக்கும்னு யாரும் எவனோ ஐடியா குடுத்துருக்கான். 

ஒரு படத்துல எந்த கேரக்டரச் சுத்தி கதை நகருதோ மக்களும் அந்த கேரக்டரா இருந்துதான் படம் பாப்பாங்க. உதாரணமா ஹீரோவச் சுற்றி நடக்குற கதைன்னா, மக்களும் தங்களை அந்த ஹீரோ இடத்துல பொறுத்திக்கிட்டு கதையில பயணிப்பாங்க. இந்தப் படத்துல அந்த மாதிரி கதையோட நம்மால பயணிக்கவே முடியல. அஜித்திடம் இருக்கும் பரபரப்போ இல்லை பதற்றமோ படத்தோட எந்த சூழல்லயும் நமக்கு வரவே இல்ல.

படத்துல சூப்பரா இருக்கது விவேக் ஓபராய் மட்டும்தான். செம கெத்தா இருக்காரு. ஆனா பாருங்க கெத்தா வேஷம் போட்டு சிங்கம் படத்து விஜயகுமார் ரோல்ல நடிக்க வச்சிருக்கானுங்க. சிங்கத்துல விஜயகுமார் சரியா சொன்னீங்க தொரைசிங்கம்” “சபாஷ் தொரைசிங்கம்ன்னு சொல்லிக்கிட்டே இருக்க மாதிரி விவேக் ஓபராய் படம்  முழுக்க அஜித்துக்கு பில்டப் மட்டுமே குடுத்துக்கிட்டு இருக்காரு. அவன் யாருக்கும் பயப்பட மாட்டான் அவன் போரடாம போவ மாட்டான் ”அவன கொன்னாலும் சாகமாட்டான்”… நீ இப்புடியே பேசிகிட்டு இருந்தியன்னா ஒரு பய தியேட்டர்ல இருக்க  மாட்டான். 

அஜித்துக்கு பில்ட் அப் குடுக்கற வசங்கள் எழுதுன கேப்புல கொஞ்சம் மற்ற வசனங்களும் படத்துல இருக்குன்னு மைண்டுல வச்சிருந்துருக்கலாம். காஜல் அகர்வால் பேசுற வசனமெல்லாம் ஒண்ணாப்பு ரெண்டாப்பு புள்ளைங்க எழுதிக்குடுத்த மாதிரி இருக்கு. இந்த ஃபீனிக்ஸ் பறவை உதாரணம் ஒண்ணு கிடைச்சி போச்சு இவங்களுக்கு. இவய்ங்க தொல்லை தாங்காம “நா இனிமே எந்திரிக்கவே மாட்டேண்டா”ன்னு சொல்லிட்டு ஃபீனிக்ஸ் பறவையே தூக்கு போட்டு சாகுற வரைக்கும் விடமாட்டாய்ங்க போல..

கதைக்கும் கெட்டப்புக்கும்  வசனத்துக்கும் சம்பந்தமே இல்லாம காமெடி பன்ன முயற்சி பன்னிருக்காரு கருணாகரன். ட்ரெயிலர்ல ”எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல சார்” ன்னு கருணாகரன் சொன்னதும் “ஒரு டீ சொல்லுங்க”ன்னு தல சொல்லுவாரே. அதுதான் படத்துலயே செம்மையான காமெடி. அப்ப மத்ததெல்லாம் எப்டின்னு நீங்களே யோசிச்சுக்குங்க.  


அக்சரா ஹாசன் ஒரு சின்ன ரோல். அவங்க ஒரு ஹேக்கர். நானும் வட ஆப்ரிக்காவுலயும் பாத்துருக்கேன் தென் ஆப்ரிககவுலயும் பாத்துருக்கேன். இப்புடி ஒரு ஹேக்கரப் பாத்ததே இல்லை. ஒரு சின்ன ஃபோன மட்டும் வச்சிக்கிட்டு அவங்க போற இடங்கள்ல உள்ள சிசிடிவி கேமரா, டெலிஃபோனு, Road Block ன்னு கண்ணுல படுற அனைத்தையும் ஹேக் பன்றாங்க. அதும் போற வழியில சும்மா சூன்னுட்டுதான் போறாங்க. அத்தனையும் இவங்க கண்ட்ரோலுக்கு வந்துருது. யம்மா நீ ஹேக்கரா இல்ல மந்திரவாதியாம்மா? என்னதான் ஹாக்கரா இருந்தாலும் ஒரு நாயம் வேணாமாப்பா? ஹேக்கருக்கு உண்டான மரியாதை போச்சேடா உங்களால..

அஜித் ரெண்டு கடந்த ரெண்டு படத்துல கொஞ்சம் இம்ப்ரூவ் ஆன மாதிரி தெரிஞ்சாரு. இந்தப் படத்துல மறுபடி பழையபடி ஆயிட்டாரு. வசன உச்சரிப்பெல்லாம் சிலது கேக்க முடியல.. “You….. will….. see…….. my….. “ அப்டியே சொல்லிக்கிட்டே இருங்கதல.. அர்ஜெண்ட்டா வருது.. டாய்லெட் வரைக்கும் பொய்ட்டு வந்துடுறேன்னு எழுந்து போயிடலாம். நல்ல வேளை y… o…. u… w… ன்னு ஒத்த ஒத்த எழுத்தா சொல்லாம விட்டாரே. சர்வைவா பாட்டுல மட்டும் ஆளு செமை சூப்பரா இருக்காரு. இண்ட்ரோ சீன் நல்லாருக்கு. அதுலயும் பாலத்துலருந்து பல்டி அடிக்கிற சீன்ல லிங்கா க்ளைமாக்ஸ் கண்ணு முன்னால வந்து போச்சு.    

இண்டர்வல்ல வழக்கம்போல அஜித்த ஒரு பத்து பதினைஞ்சி புல்லட்ட்ல சுட்டு, ஒரு மலையிலருந்து தூக்கி வீசிடுறாய்ங்கநல்ல வேளை பங்கிமலை பாறை மேல விழுந்ததால தப்பிச்சாறு. இல்லைன்னா என்னாயிருக்கும்? கீழ விழுந்த உடனே கால்ல கையில குத்தியிருந்த குச்சியெல்லாம் புடுங்கி வீசிட்டு எக்ஸர்சைஸ் பன்ன ஆரம்பிச்சிடுறாரு. யோவ் தலஅந்த நாலஞ்சி புல்லட்டு உடம்புக்குள்ள பாய்ஞ்சத எடுக்க மறந்துட்டீயே…. நமக்கு ஞாபகம் இருக்கு கழுத அவரு மறந்துட்டாரு பாருங்க. இத்தனை புல்லட்டு, இத்தனை ஃப்ராக்சரையெல்லாம் ஹாஸ்பிட்டலுக்கு போகாம ”நடந்தே” குணப்படுத்திக்கிட்ட ஒரே ஆள் உலகத்துலயே நம்ம தலை ஒருத்தர்தான். இனிமே ”தல”க்கு Ultimate Star ங்குற மாத்திட்டு “Walking Star” ன்னு வச்சா பொறுத்தமா இருக்கும்.

நா எத வேணாலும் மன்னிச்சிருவேன்.. ஆனா அந்த சிக்ஸ் பேக்குக்கு நம்மாளுங்க சண்டை போட்டத மட்டும் நா மன்னிக்கவே மாட்டேன். ஒருத்தன் VFX ங்குறான். இன்னொருத்தன் இல்லடா அது ஒரிஜினல்டா. தலை கஷ்டப்பட்டு கொண்டு வந்துருக்காருடாங்குறான். தயவு செஞ்சி படத்துல பாருங்கப்பா.. இது சிக்ஸ் பேக்கா? இல்லை இதான் உங்க சிக்ஸ் பேக்கா?”ங்குற லெவலுக்கு ஆயிப்போச்சு. மோகன்லால் கொஞ்சம் வேகமா திரும்புனார்னா முகத்துல சதை அதிகமா இருக்கதால திரும்பும்போது கண்ணம் கொஞ்சம் ஆடும். உடனே நம்மாளுங்க பாருடா மோகன்லாலோட கண்ணம் கூட நடிக்கிதுன்னு ஆரம்பிச்சிருவானுங்க. அதே மாதிரி இந்தப் படத்துலயும் தல சட்டையக் கழட்டிட்டு திரும்பும்போது ஒவ்வொரு பகுதியும் தனித்தனியா ஆடுது. என்னென்ன சொல்லப்போறானுங்களோ….

சக்கரைப் பொங்கல் வடைகறி காம்பினேஷன விட கேவலாமான ஒரு காம்பினேஷன் இருக்குன்னா அது நம்ம அஜித் காஜல் அகர்வால் ஜோடிதான். கெமிஸ்ட்ரி, பயாலஜி, பிசிக்ஸ்னு எதுவுமே செட் ஆகல. அஜித் காஜல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரொம்பவும் செயற்கைத்தனம். அதும் க்ளைமாக்ஸ்ல அஜித் சண்டை போடும்போது காஜல் வெறியேறபாட்டுப் பாடுனதும் எனக்கு தூள் படத்துல விக்ரம் அடிக்கும்போது பறவை முனிம்மா சிங்கம்போலபாட்டு பாடுனது மாதிரி இருந்துச்சி. தியேட்டர்ல ஒருசிலர் வாய்விட்டு சிரிக்கவே ஆரம்பிச்சிட்டாங்க.

படத்துல நல்ல விஷயங்கள்னு சொல்லப்போனா இண்ட்ரோ சீன், சர்வைவா பாட்டு, ஒரு சில காட்சிகளில் கேமரா மற்றும் விவேக் ஓபராய். அஜித் ஒரு சில ஆங்கிள்ல செமையா இருக்காரு. மீசையில்லாம இந்த முழு வெள்ளைத் தலையோட பாக்க கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. அனிரூத் குறை சொல்ற அளவுக்கு இல்லை. திரைக்கதை மற்றும் மேக்கிங் மெகா சொதப்பல்.

மொத்தத்துல அஜித் இருக்கார் அப்டிங்குற ஒரே காரணத்துக்காக  பாக்கலாம். மத்தபடி சிறப்பா எதுவும் இல்லை. படம் பாக்க உள்ள போறப்போ “சர்வைவா… சர்வைவா” ன்னு சந்தோஷமா பாட்டு பாடிட்டு போனவனுங்கள வெளில வரும்போது “தம்பி நீ survive ah?” ன்னு கேக்குற அளவுக்கு ஆக்கி விட்டுட்டாய்ங்க..!!!


-Originally posted On oneindia



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...