Saturday, May 13, 2017

பாகுபலி – முதல் முறை கவனிக்கத் தவறவிட்ட சில விஷயங்கள்!!!


Share/Bookmark
முதல் முறை ரஜினி இல்லாத ஒரு படத்தை மூன்று முறை திரையரங்கில் பார்த்திருக்கிறேன். முதல் முறை பார்த்த பொழுது ப்ரம்மிப்பில்  வாய் பிளந்து இருந்துவிட்டு, கவனிக்காத சில விஷயங்களை அடுத்தடுத்த முறை  கவனித்தேன். நிறைய பேர் முதல் முறையே இவற்றைக் கவனித்திருக்கலாம்.

1. படம் முழுக்க ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், எந்த ஒரு காட்சியையும் ஆரம்பிக்கும் பொழுதும், அக்காட்சியின் தொடர்ச்சியில் என்னெவெல்லாம் உபயோகப்படப் போகிறதோ அத்தனையும் காண்பிக்கப்படுகிறது. உதாரணமாக குந்தல தேசத்தில் நடக்கும் சண்டைக்கு முன், டாப் ஆங்கிளில் குந்தல தேசம் முழுவதையும் ஒரு overview காண்பிக்கிறார்கள். அதில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், அந்த மிகப்பெரிய சுவர், சுவருக்கு வெளியே பள்ளமான ஒரு பாதை, சுவற்றின் அருகில் மிக உயரமான மரங்கள் என அத்தனையும் முன்னரே காண்பிக்கின்றனர்.

அதே போல் பாகுபலி கொல்லப்படுவதற்கு முன்னர், சத்யராஜூம், பாகுபலியும் பேசிக்கொல்லும் காட்சியின் பின் பகுதியில் பாராங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்ட ஒரு இரும்பு தொட்டி போல் ஒன்று காட்டப்படும். பின்னர் சண்டை நடக்கும்போது அந்த கற்களைக் கீழிறாக்கித்தான் கொன்றவர்களை மரத்தில் அடுக்கி அந்த மரத்தை மேலேற்றுவார்.

பனைமரத்தை வளைத்து உள்ளே செல்லும் காட்சிக்கு முன்னதாக, க்ளைமாக்ஸ் சண்டை நடக்கும்போதே அரண்மனைக்கு அருகே நிறைய பனைமரங்கள் இருப்பதுபோல ஒரு காட்சி காண்பிக்கப்படும்.

2. தேவசேனா ஷிவுவையும், குமாரவர்மனையும் அழைத்துக்கொண்டு வேட்டைக்கு செல்லும்போது நீல வண்ண அம்புகள் குமாரவர்மனுக்கும், ஊதா வர்ண அம்புகள் தேவ சேனாவுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும். அங்கு மட்டுமல்ல.. முதல் பாதியில் தேவசேனா அணிந்திருக்கும் ஆடைகள் அனைத்திலுமே ஊதா நிறம் கலந்திருக்கும்.

3. தேவசேனா கண்ணன் பூஜையில் பாடல் பாடும்போது, கண்ணனுக்கு என்னென்ன செய்கிறாரோ அத்தனையும் ப்ரபாஸூக்கு நடக்கும். தேவசேனா கண்ணன் தலையில் பூக்களைக் கொட்டும்போது, ஒரு செடியிலிருந்து ப்ரபாஸ் மேல் பூக்கள் உதிரும். கண்ணனுக்கு பன்னீர் தெளிக்கும்போது ஒரு புறா தண்ணீரை ப்ரபாஸ் மேல் தெளிக்கும். கண்ணனுக்கு தீபாராதனை காட்டும்போது அருகிலுள்ள தீப்பந்தத்திலிருந்து ப்ரபாஸூக்கு முகத்தில் அனல் அடிக்கும்.

4.அனுஷ்காவின் குந்தல தேசத்தின் சின்னம் அண்ணம். குந்தல தேசத்து அரண்மனையின் பெரும்பாலான இடங்களில் இந்த அண்ணப்பறவையின் சிலைகள் காண்பிக்கப்படும். அதனால்தான் அவர்கள் குந்தலதேசத்திலிருந்து பயணிக்கும் கப்பல் அண்ணப்பறவை போல்  இருக்கும். அதே கப்பலில் மகிழ்மதிக்குள் நுழையும்போது அந்தக் கப்பலில் இருக்கும் அண்ணப்பறவை சின்னக்கொடி யானைப் பாறையின் மேல் மோதி உடையும்.

5. இடைவேளையில் பாகுபலி படைத்தலைவாக பங்கேற்றதும், மக்கள் பாகு..பலி வாழ்க.. என்ற ஒலியை எலுப்ப, அத்தனை படை வீரர்களும் தரையிலும் கேடையத்திலும் ஒரே மாதிரி ஒலியை எழுப்ப கீழிருக்கும் கற்கள், பல்வாள் தேவனின் நிழற்குடை என அனைத்தும் அதிர்விற்குள்ளாகும். இதை நகைப்புள்ளாக்கிய ஒரு சில பதிவுகளைக் கண்டேன். உண்மையில் இது resonant frequency என்னும் கான்செப்ட். ஒரே அதிர்வலையில் ( frequency) ஒலிகள் எலுப்பப்படும்போது அதன்  ஆற்றல் மிக அதிகமாக இருக்கும். (விபரங்களுக்கு resonant frequency  பற்றி படிக்கவும். பாலங்களில் march fast செய்தால் விரிசல் விழும் என்பதற்கு இதுதான் காரணம். இதே கான்செப்ட்டைத்தான் ”கேமராமேன் கங்கதோ ராம்பாபு”வின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு உபயோகப்படுத்திருப்பார்கள். ஆனால் அது இன்னும் நகைப்புக்கு உள்ளானது. காஸி திரைப்படத்தில் நீர்மூழ்கிக் கப்பலுக்கு வெளியே இருக்கும் ஒரு பாமை வெடிக்க வைக்க அனைவரும் சேர்ந்து தேசிய கீதம் பாடுவதும் இதே கான்செப்ட் தான்.

6. பாகுபலி கொல்லப்பட்ட அதே இடத்தில் நடக்கும் சண்டையில் தான் கட்டப்பா அவர் மகன் மகேந்திர பாகுபலியைச் சந்திப்பார்.

7. அனுஷ்காவை கட்டி வைத்திருந்த சங்கிலியை கையில் எடுத்து இதில் தேவசேனா இல்லாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பல்வாள் தேவன் கூறுவார்கடைசியில் ப்ரபாஸ் கையில் தேவசேனாவைக் கட்டி வைத்திருந்த அதே சங்கிலியை சுற்றித்தான் பல்வாள் தேவனை அடித்துக் கொல்வார்.

8. அமரேந்திர பாகுபலி கட்டப்பாவை சிறைசேதம் செய்யக் கொண்டு செல்லும் செய்தி கேள்விப்பட்டு அவரைக் காப்பாற்றக் கிளம்பும்போது, தேவசேனா மகிழ்மதியின் சின்னம் பொறிக்கப்பட்ட பாகுபலியின் வாளை எடுத்துக் கொடுத்தனுப்புவார்… பாகுபலி கட்டப்பாவால்  குத்தப்பட்ட பிறகு சாகும் தருவாயில் அந்த வாளில் கைவைத்தபடியே உயிர் நீப்பார். ராணாவின் மகன் பத்ராவின் தலையை மகேந்திர பாகுபலி கட்டப்பா வைத்திருக்கும் அதே வாளால்தான் துண்டிப்பான். க்ளைமாக்ஸில் பல்வாள் தேவனை, தீயிலிடுவதற்கு முன் அதே வாளால்தான் காலில் குத்துவார். கீழே இருவருக்கும் இடையே இருப்பதுதான் அந்த வாள்.




9. முதல் காட்சியில் 26 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கூலி வழித்திருவிழாவில் மகிழ்மதியைத் தீமையிலிருந்து காக்க, அரசகுடும்ப மருமகள் தீச்சட்டையைத் சுமந்து சென்று காட்டில் இருக்கும் கூலிக் கோயிலுக்குச் என்று அரக்கனை அழிப்பது மரபு எனக் கூறப்படும். முதல் காட்சியில் அரச குடும்ப மருமகளான ரம்யா கிருஷ்ணன் தீச்சட்டி சுமந்து  அந்த நெருப்பில் ப்ரம்மாண்டமான அரக்கன் அழிக்கப்படுவான். அதே போல் அடுத்த இருபத்து ஆறு ஆண்டுகள் கழித்து அதே அரச குல மருமகளான தேவசேனா, பல்வாள் தேவன் என்னும் அரக்கனை அழிக்க தீச்சட்டி சுமந்து அவனை எரித்துக் கொள்வாள். 26 ஆண்டுகள் என்று குத்துமதிப்பாகவெல்லாம் கூறவில்லை. முதல் பாகத்தில் அனுஷ்கா 25 ஆண்டுகளாக சங்கிலியில் பிணைக்கப்பட்டிருப்பதாக கட்டப்பா கூறுவார். (verified)

10. படம் முடிந்த பிறகு உருட்டி விடப்படும் பல்வாள்தேவனின் தங்கத்திலான தலை முதல் பாகத்தில் ஷிவு அருவியில் கொண்டு வைக்கும் சிவலிங்கத்திடம் சென்று சேர்வதை கடைசிவரை திரையரங்கில் உட்கார்ந்து பார்த்தவர்கள் கவனித்திருக்கலாம். 

இன்னும் எத்தனையோ இருக்கலாம்.. அடுத்த முறை பார்த்த பிறகு புதிதாக எதாவது இருந்தால் பதிகிறேன் :-) 





பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Paranitharan.k said...

ஒரு திரைப்படத்திற்கு மூன்று பதிவுகள்....இதுவும் முதன் முறையாக தான் இருக்கும்..:-)

Hari said...

Semma analyse

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...