Friday, October 31, 2014

சிரிப்பும் மகிழ்ச்சியும்!!!


Share/Bookmark
நாம் குழந்தைகளாக இருந்து வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்குச் செல்லும் போதும் நிறைய விஷயங்களை புதிதாகப் பெறுகிறோம்,  சிலவற்றை இழக்கிறோம். சிலவற்றை மறக்கிறோம். அப்படி வயது ஏற ஏற, நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம் இந்த சிரிப்பு. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு நாளில் எத்தனை முறை சிரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் நமக்கு அமைகிறது?  ஒரு நாளுக்கு எத்தனை முறை நாம் சிரிக்கிறோம்?
மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு பெரிய விஷயமாகத் தெரிவதில்லை. அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பது போலவே நாம் உணர்கிறோம். ஆனால் எப்பொழுதாவது நம்முடைய பழைய கல்லூரி நண்பர்களையோ, இல்லை பள்ளி நண்பர்களையோ சந்திக்கும் போதே நமக்குப் புரியும், ஒவ்வொரு நாளும் நாம் சிரிப்பதை எவ்வளவு குறைத்திருக்கிறோம் என்று.
நம்மிடம் இருக்கும் சிரிப்பு ஏன் நாளாக நாளாக குறைந்து கொண்டே வருகிறது? பதில் அனைவருக்கும் தெரிந்ததே. சிறுவயதில் எந்தக் கவலைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாகச் சுற்றித் திரியும் நமக்கு வயது ஏற ஏற சில கடமைகளும், பொறுப்புகளும் வந்து சேர்கின்றன. அவற்றை நிறைவேற்ற காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கின்றது. ஒரு கட்டத்தில் நண்பர்களே உலகம் என்றிருக்கும் நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் போது குடும்பம் என்ற ஒன்றிலேயே கவனத்தைச் செலுத்தி, நண்பர்களுக்கான முக்கியத்துத்தை குறைத்து விடுகின்றோம். ஆனால் நாம் அதிகமாக சிரிப்பது நண்பர்களோடு இருக்கும் சமயத்தில் மட்டுமே.
நாம் சிரிப்பதைக் குறைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதைக் காட்டிலும் நம்முடைய கவலைகளும் பிரச்சனைகளும் மேலோங்கி நிற்கின்றன என்றே அர்த்தம். இதுபோன்ற பிரச்சனைகளை நாம் ஒருவரே கட்டிக்கொண்டு அழுவதை விட ஒரு முறை அவற்றை நண்பர்களிடம் பகிர்ந்து சிரியுங்கள். நம் கவலைகளும் குறையும் அவற்றை சரி செய்ய புது வழிகளும் பிறக்கும். மகிழ்ச்சியாக இருப்பது என்பது எந்த பிரச்சனைகளும் இல்லாமல் இருப்பது என்று பொருளல்ல. அவர்கள் சந்திக்கும் சவால்களை இலகுவாக எதிர்கொள்ளும் சக்தி அவர்களிடம் மிகுந்து காணப்படும்.
மேலே இருக்கும் படத்தில் இருப்பவரை நீங்கள் பெரும்பாலான கடைகளிலும் வீடுகளிலும் பார்த்திருக்கலாம். சிரிக்கும் புத்தர் (Laughing Budda or Bhu dhai)  என அழைக்கப்படும் இந்த துறவியைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை. இவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஒரு மூட்டையை சுமந்து செல்வார். அதில் குழந்தைகளுக்கான இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் நிறைந்து காணப்படும். ஒரு நகரத்தின் மையப் பகுதிக்கு சென்று அங்கு அந்த இனிப்புக்களை குழந்தைகளுக்கு வழங்கிவிட்டு, அவரைச் சுற்றி சிறு கூட்டம் கூடியதும் திடீரென வானத்தை நோக்கி சத்தம் போட்டு குலுங்க குலுங்க சிரிக்க ஆரம்பித்துவிடுவார். சுற்றி எவர் என்ன சொல்கிறார் என்றெல்லாம் மனதில் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே இருப்பாராம்.
சிறிது நேரத்தில் சுற்றி இருப்பவர்களும் இவருடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்து விடுவார்களாம். கொஞ்ச நேரம் அனைவருடனும் சிரித்து விட்டு பையை எடுத்துக் கொண்டு வேறு ஒரு நகரத்திற்குச் சென்று அங்கும் இதே போலச் செய்வாராம். வாழ்நாள் முழுவதையும் இந்த செயலை மட்டுமே செய்துகொண்டிருந்தவர் இந்த சிரிக்கும் புத்தர். அவருடைய இந்த செய்கையால் பலரும் தங்களுடைய மன பாரங்களிலிருந்தும் விடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஒருவருடைய மன பாரங்களையும் கவலைகளையும் போக்கும் சக்தி சிரிப்பிற்கு உண்டு என உணர்த்தும் வகையில் சிரிப்பு வைத்தியத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்துவந்தவர் இந்த சிரிக்கும் புத்தர்.
ஒரு முறை ஒருவர் அவரைப் பார்த்து “நீங்கள் ஏன் இதுபோல குழந்தைகளுக்கு பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்குகின்றீர்கள்?” எனக் கேட்டதற்கு அவர் “நாம் எந்த அளவு கொடுக்கிறோமோ அது இருமடங்காக நமக்கு வந்து சேரும்… அதுவும் குழந்தைகள் கள்ளங் கபடம் இல்லாதவர்கள். பொறாமை குணமற்றவர்கள். எந்நேரமும் சிரித்துக் கொண்டே இருப்பவர்கள். அவர்களுக்கு கொடுப்பது நேரடியாக இறைவனுக்கே கொடுப்பதாக உணர்கிறேன்.. மேலும் அவர் மனிதர்களிடையே காணப்படும் பிரச்சனைகளையே நான் மூட்டையாக தான் சுமக்கிறேன்” என்றும் கூறினார்.
நமக்கு ஒரு பிரச்சனை வரும்போது,  நம்மைத் தவிற அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது போலவும், கடவுள் நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகளைத் தருகிறார் எனவும் நினைக்கிறோம். ஆனால் இதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால் நமக்கு பிரச்சனை என நினைக்கும் ஒரு விஷயத்தை மற்றொருவர் நம்மிடம் கொண்டு வருவாரேயானால் அவருக்கு நாம் அதை சரி செய்ய நூறு யோசனைகள் சொல்வோம். ஆனால் அதே நமக்கு எனும் போது பிரச்சனையை எதிர்கொள்வதை விட்டுவிட்டு கவலையில் மூழ்கிவிடுகிறோம்.
3
கவலைகளோ பிரச்சனைகளோ நம்மை ஆட்கொள்ளும் போது அவற்றைக் கண்டு அச்சம் கொள்ளாமல் ஒரு முறை அவற்றை நோக்கி சிரித்துப் பாருங்கள். அடுத்த முறை நம்மை நெருங்கவே அவற்றுக்கு பயம் வந்துவிடும்.
சரி.. சிலருக்கு சிரிக்க வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் சிரித்துக் கொள்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படி இல்லையே. நீங்கள் கூறுவது போல் என்னால் சிரிக்க சூழ்நிலைகள் அமைவதில்லை என்று நீங்கள் கூறினால் அது உங்களுடைய தவறேயன்றி வேறில்லை.\


மகிழ்ச்சியான தருனங்களை அதிகப் படுத்துவதற்கு சில வழிகள்:
1)   பொதுவாக ஒரு மனிதன் அதிகம் சிரிப்பது என்பது குழுக்களாக இருக்கும் போது தான். அப்படி குழுக்களாக சேர்ந்து சிரிக்கும் சந்தர்ப்பம் சில சமயங்களிலேயே நமக்கு அமைகிறது. உதராணமாக நண்பர்களின் திருமணம். முடிந்த வரையில் அதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஏதேனும் காரணங்களைக் கூறி தட்டிக் கழிக்காமல் சென்று வாருங்கள். நாம் அலுவலகங்களில் சிடுமூஞ்சிகளாகவும், அரக்கர்களாகவும் பார்க்கும்  சிலரது உண்மையான நல்ல முகங்களை இதுபோன்ற விழாக்களிலேயே காணமுடியும்.
2)   உங்களது அலுவலக மேலாளர் உங்களை திட்டுகிறாரா? உங்கள் மேல் எரிந்து விழுகிறாரா? அதை உங்களுக்குள்ளேயே வைத்திருந்தால் தான் உங்களுக்குக் கவலை. அதைப்பற்றி நண்பர்களிடம் பகிர்ந்து சிரியுங்கள். அடுத்த முறை உங்களுக்கு அது போன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்கு கோபத்தை விட சிரிப்பே முதலில் வந்து நிற்கும். கோபப்படுவதாலோ அல்லது சிரிப்பதாலோ ஒரு விஷயம் மாறப் போவதில்லை எனும்போது எதற்கு நாம் கோபப் பட்டு நம் உடலைக் கெடுத்துக் கொள்ள வேண்டும். சிரித்துவிட்டுப் போவோமே.
4
3) அதே போல் சிரிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல் அவசியம். நாம் நண்பர்களுடன்  மகிழ்ச்சியாக இருப்போம் என்று நமக்கு நன்றாகத் தெரிந்தால் அவர்களை விழாக்களில் மட்டும் சந்திக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் அல்ல. வாரமொருமுறையோ அல்லது மாதமொருமுறையோ நமக்கு விருப்பமான நண்பர்களைச் சந்திக்க நாமே ஏற்பாடு செய்துகொள்ளலாம்.
4) நண்பர்களைத் தெரிவு செய்தல் என்பதும் மிக முக்கியமானது. சிரிப்பு என்ற ஒரு விஷயத்திற்கு மூலதனம் ரசனை. ஒருவரை முழுமையாக நமக்குப் பிடிக்காவிட்டால் அவர் செய்யும் எந்த விஷயமும் நமக்குப் பிடிப்பதில்லை. இதற்கு மனிதர்களுக்கிடையே காணப்படும் wavelength matching எனப்படும் அலைவரிசை ஒற்றுமை மிகவும் முக்கியமானது. எனவே நம்முடைய அலைவரிசையில் இருப்பவர்களை நட்பாக்கிக் கொள்ளுதல் நம்முடைய சிரிப்பின் அளவை அதிகப்படுத்தும்.
5) நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களில் இருக்கும் சிறு சிறு நகைச்சுவையைக் கூட உணர்ந்து சிரிக்க வேண்டும். சிறு குழந்தைகளை உற்று கவனித்து அவர்கள் சிறு சிறு விஷயங்களுக்கு கூட எப்படி ஆச்சர்யப்படுகின்றனர் எப்படி நகைச்சுவையாகப் பார்க்கின்றனர் என்பதை நாமும் உணர்ந்து ரசிக்க வேண்டும்.
6) தேநீர் இடைவேளையைப் போல தினமும் கொஞ்ச நேரம் நகைச்சுவை இடைவேளை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் அன்று நடந்த நகைச்சுவையான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். நம்மை சோகத்தில் ஆழ்த்தும் விஷயங்களை மற்றும் செய்திகளை விவாதிப்பதை கூடுமான வரை தவிர்க்கலாம்.
7) நாம் யாருடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்போமோ அவருடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். ஒருவர் நம் மகிழ்ச்சியை குலைத்துவிடுவார் எனத் தெரிந்தால் அவரிடமிருந்து முடிந்தவரை விலகியும் இருக்க வேண்டும்.
இயன்றவரை நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயல்வோம்

Friday, October 24, 2014

கத்தி - கர கர கர!!!


Share/Bookmark
டைரக்டர் முருகதாஸ் எவ்வளவு ப்ரில்லியண்ட்டுன்னு எனக்கு இன்னிக்கு தான் புரிஞ்சிது.  ஒரு படத்துல வடிவேலு எல்லாரயும் கடவுளைக் காமிக்கிறேன்னு சொல்லி ஒரு மலைக்கு அழைச்சிட்டு போயி “அங்க  பாருங்க கடவுள் தெரியிறாரு.. அங்க பாருங்க கடவுள் தெரியிறாரு”ன்னு சொன்ன உடனே எல்லாரும் திருதிருன்னு முழிப்பாய்ங்க. உடனே “அடப்பாவிகளா தப்பு பண்ணீட்டீங்கடா... யார் யார் மனைவியெல்லாம் பத்தினியோ அவங்க கண்ணுக்கு மட்டும்தாண்டா கடவுள் தெரிவாரு”ன்னு சொன்னதும் எங்க நம்ம  மனைவிகளையெல்லம் தப்பா பேசிருவாய்ங்களோன்னு எல்லாரும் “ஆ.. அதோ கடவுள் தெரியிறாரு”ன்னு கையெடுத்து கும்புடுவாய்ங்க. அந்த ஒரு ஃபார்முலாவத்தான் முருகதாஸ் ஸ்ட்ராங்க புடிச்சிருக்காரு. விவசாயிகளோட கஷ்டத்த படம் எடுத்துருக்காங்க.. எங்க இந்தப் படத்த நல்லா இல்லைன்னு சொன்னா நம்மள தேசத் துரோகிகள் லிஸ்டுல சேத்துருவாய்ங்களேன்னு அனைத்து பயலுகளும் அள்ளித் தெளிக்கிறாய்ங்க.

சில படங்களோட க்ளைமாக்ஸ் கொஞ்சம் ட்விஸ்டாவோ இல்லை ரொம்ப சஸ்பென்ஸாவோ இருக்கும் போது அவங்க டைட்டில் ஸ்லைடுலயே ஒண்ணு போடுவாய்ங்க... “இந்த படத்தின் க்ளைமாக்ஸை யாரிடமும் சொல்ல வேண்டாம்”ன்னு. அதே மாதிரி தான் நேத்தும் கத்தி படத்துல   “யார் கேட்டாலும் இந்தப் படம் சூப்பர்ன்னு சொல்லுங்க.. அடிச்சி கேப்பாய்ங்க அப்பவும் சூப்பர்ன்னே சொல்லுங்க”ன்னு ஸ்லைடு போட்டுருப்பாய்ங்க போல. ஏம்பா நீங்க குடுத்த பில்டப்புக்கும் அந்தப் படத்துக்கும் எதாவது சம்பந்தம் இருக்காடா? இதானாப்பா உங்க சூப்பரு டக்கரு குக்கரெல்லாம்? இதுல கொடுமை என்னனனா இத சொன்னது முக்காவாசிப் பேரு அஜித் ஃபேன்ஸூ.

படம் ஆரம்பித்த நாள்லருந்தே கலவரம். லைகா ராஜபக்சேவுடன் நெருங்கிய தொடர்புடைய கம்பெனி. அதனால் அவர்கள் ப்ரோடியூஸ் பண்ண நாங்க அனுமதிக்க மாட்டோம்னு எதோ தமிழினத்தோட எதிர்ப்ப காட்டுறதா நெனைச்சி போராட்டம் நடத்துன மாணவர் அமைப்புகள் தான் உண்மையிலேயே தமிழினத்துக்கு எதிராக செயல்பட்ட குழுக்கள். தெரியாமத்தான் கேக்குறேன். லைக்கா யார வச்சி படம் எடுக்குறாய்ங்க? நம்ம விஜய்ய வச்சி. இத விட லைக்காவ ஒழிக்கிறதுக்கு எதாவது வாய்ப்பு நமக்கு கிடைக்குமா? சன்பிக்சர்ஸயே அலற வச்சவரு நம்மாளு. ஒண்ணு என்னா ஒரு நாலஞ்சி படங்கள வேணாலும் எடுங்கன்னு லைக்காவுக்கு வாய்ப்பு குடுக்குறத விட்டுட்டு, படம் எடுக்கக்கூடாதுன்னு லைக்காவ காப்பாத்த போரட்டம் நடத்திய மாணவர்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்ப படத்துக்கு வருவோம். அஞ்சான் படத்த கதறக் கதற ஓட்டுன வாயால இந்தப் படத்த சூப்பர்ன்னு சொல்ல சிலருக்கு எப்புடி மனசு வருதுன்னே தெரியல. கிட்டத்தட்ட அஞ்சானுக்கு டஃப் ஃபைட் குடுக்குற அளவுக்கான படம் இது.  ஒரு மாஸ் ஹீரோவோட டபுள் ஆக்சன் படம் எப்புடி இருக்கனும்? நீங்க கருத்து சொல்றது விழிப்புணர்வ ஏற்படுத்துற தெல்லாம் இருக்கட்டும். ஆனா அத ஒரு படம் வழியா சொல்லும் போது அது படம்ங்குற ஒரு குறைஞ்ச பட்ச மரியாதையாவது கொடுத்து எடுக்கனும். அப்படி எந்த ஒரு மரியாதையும் குடுக்காம எடுக்கப்பட்ட ஒரு படமே இந்த கத்தி.

வழக்கமா தமிழ்சினிமாவுல சில காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆகனும். அதாவது ஹீரோவோட இண்ட்ரோ, இரண்டு ஹீரோக்கள்ன்னா அவங்க சந்திக்கிற சிட்சுவேஷன் அதுக்கு உண்டான பில்ட் அப் எல்லாமே நல்லா பன்னணும். இவையெல்லம் க்ளீஷே காட்சிகளாக இருந்தா கூட இந்த காட்சிகள் ரொம்ப முக்கியம். அப்படி அந்த காட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லைன்னா அதவிட பவர்ஃபுல்லான விஷயங்களை வரும் காட்சிகள்ல சொருகி அந்த முக்கியத்துவத்த கொண்டு வரனும். ரொம்ப சாதாரணமா ஆரம்பிக்கிற படம் எந்த இடத்திலுமே நம்மை கொஞ்சம் கூட உள்ள இழுக்கவே இல்லை.

அதுவும் கதிரேசனா வர்ற விஜய் காமெடிங்குற பேர்ல ஒரு பாடி லாங்குவேஜ் யூஸ் பண்றாரு பாருங்க... எழுந்து ஓடிரலாம் போல இருந்துச்சி. அதுவும் சமந்தா விஜய் காதல் காட்சிங்கள்ளாம் அப்பாப்பா.. அஞ்சான் பரவால்ல. சரி இன்னொரு விஜய் இருக்காரு.. எதாவது பண்ணுவாறுன்னு பாத்தா, அவரோட ஃப்ளாஷ்பேக்ல அத்திப்பட்டி கதையை லொக்கேசன் மட்டும் மாத்தி எடுத்துருக்காய்ங்க. அங்க சுப்ரமணி சுவர் கட்டிக்குடுக்க கிராம மக்களோட கலெக்டர் ஆஃபீஸுக்கு போய் நின்னா, இங்க ஜீவானந்தம் இடத்த காப்பாத்துறதுக்காக போய் நிக்கிறாரு. அவ்வளவு தான்.

விவசாயிகளோட ப்ரச்சனைங்குற சென்சிட்டிவான விஷயத்த கருவா வச்சிக்கிட்டு அத வச்சே மற்ற எல்லா குறைகளையும் மறைக்க பாத்துருக்காரு கிட்டத்தட்ட அதுல வெற்றியும் அடைஞ்சிட்டாரு. பாத்தீங்களா படம் பாத்த ஒருத்தன் கூட இதுவரைக்கும் இந்த மொக்கை படத்த சுமார்ன்னு கூட சொல்லாம சூப்பர்ன்னு மட்டுமே  சொல்றாங்கன்னா பாத்துக்குங்க. பூஜை படத்துல எதுக்குய்யா சத்யராஜ் இருக்காருன்னு கேட்ட பயலுக இதுல எதுக்குய்யா இன்னொரு விஜய்ன்னு கேளுங்க? ரெண்டு விஜய்ய போட்டு கல்கத்தா ஜெயிலு, அங்க ஒரு வில்லன்னு சம்பந்தமே இல்லாம அருத்ததுக்கு ஒரு விஜய்ய வச்சே இன்னும் நல்லா எதாவது யோசிச்சி எடுத்துருக்கலாம்.

அதுவும் கத்தி என்கிற கதிரேசன் ஒரு வில்லாதி வில்லன். ப்ளான் போட்டாருன்னா அப்ப்பப்பா... ஒரு பய கெடையாது. முதல் காட்சில ஜெயில்லருந்து தப்பிக்க 2D drawing ah டேபிள்ள வச்சி 3D la இமாஜின் பண்ணி எதோ பண்ணுவாரு ஓக்கே. ஆனா சென்னைக்கு தண்ணிய தடுக்க சென்னையோட blue print வாங்கி அத வச்சி பண்ணுவாரு பாருங்க ஒரு காமெடி. டேபிள் மேல சென்னையோட blue print ah அவச்சி டேபிளுக்கு கீழ குனிஞ்சி பாப்பாரு ஒரு  நாலஞ்சி பைப்பு தெரியும். அதாவது underground la பாக்குறாராம். டேபிள் மேல படத்த வச்சி டேபிளுக்கு கீழ குனிஞ்சி பாத்தவன் ஒலகத்துலயே நீ ஒருத்தன்தான்யா.

அதுகூட பரவால்ல. அந்த imagination முடிச்சிட்டு ஒரு ரிசல்ட் சொல்லுவாரு பாருங்க.  சென்னைக்கு மொத்தம் நாலு ஏரிலருந்து தண்ணி சப்ளை ஆகுது, புழல் ஏரி, சோழாவரம் ஏரி, அந்த ஏரி இந்த ஏரின்னு. டேய் மொன்னை சென்னைக்கு எந்த ஏரிலருந்து தண்ணி வருதுன்னு பக்கத்துல இருக்கவண்ட கேட்டலேதான் சொல்லிருப்பானேடா. இதுல blue print பாத்து அதுல இமேஜினேஷன் வேற பண்ணி, அதுக்கு ஒரு தனி BGM வேற போட்டு எந்த ஏரின்னு கண்டுபுடிக்கிறியாப்பா. அதுவும் ஒரு நாள் தண்ணி வரலன்னதும் ஆகும் பாருங்க ஒரு கலவரம். ஏம்பா குழாய் தண்ணிய தடுத்துட்டீங்க. போர் இருக்கவன் வீட்டு மோட்டர்லயெல்லாம் என்ன மண்ணை அள்ளியா போட்டீங்க. ஆனா இதக் கூட பரவால்ல அடுக்கு மாடி குடியிருப்புகளில்னு நியூஸ்ல சொல்லி கொஞ்சம் தப்பிச்சிருவாய்ங்க.

நா படம் பாக்குறதுக்கு முன்னால படம் பாத்த என் நண்பன் ஒருத்தன்கிட்ட படம் எப்டி மச்சி இருக்குன்னு கேட்டேன். படம் எப்டி இருக்குங்குறத தவற  ”காமெடி இல்லை மச்சி, ஸ்லோவா இருக்கு மச்சி, விழிப்புணர்வு படம் மச்சி”ன்னு மத்த விஷயங்கள் நிறையா சொன்னான். அதயும் விட அனைத்து வெப்சைட்டுலயும் 3.5, 4ன்னு மார்க்க அள்ளித் தெளிச்சிருந்தாய்ங்க. சரி படம் சூப்பர்தான் போலன்னு போய்தான் இந்த கதி. இண்டர்வல் முடிஞ்சப்புறம் அவனுக்கு msg பண்ணி “டேய் என்னடா இப்புடி இருக்கு”ன்னேன். அவன் சுனா பானா காமெடில வர்ற மாதிரி “விஷம் குடிச்சா அப்டித் தாண்ணே இருக்கும்” 
ன்னான். வக்காளி டேய்... நண்பர்களே அவன் பேரு கார்த்தி. அவன எங்க பாத்தாலும் ஸ்பாட்லயே காலி பண்ணுங்க. எவ்வளவு செலவானாலும் கேஸ நா நடத்துறேன்.

தூள் படத்துலருந்து இன்னொரு சின்ன காட்சியையும் உங்களுக்கு ஞாபாகப்படுத்த விரும்புறேன். அமைச்சர் காளைப்பாண்டியா வர்ற ஷாயாஜி ஷிண்டே அவரப் பதவிய விட்டுத் தூக்கப் போறாங்கன்ன உடனே மக்கள் ஆதரவ திரட்ட “நதி நீர் வேண்டி உண்ணாவிரதம்”ன்னு ஒரு டெண்ட போடுவாறு. இதப்பாத்த மற்ற தலைவரகள் “யோவ் என்னைய்யா இது இவன் இப்டி பண்றான். உண்ணாவிரதத்துக்கு போகலன்னா நம்ம பேர டேமேஜ் பண்ணிருவான் போல”ன்னு எல்லாரும் வந்து கலந்துக்குவாங்க. அதே மாதிரி தான் நம்ம பத்திரிக்கை ஊடகங்கள் இங்க பண்ணிருக்காங்க. விவசாயிங்க ப்ரச்சனைப்பா.. நாம எதாவது சொல்லி நம்மள பொளந்துட போறாய்ன்க்கன்னு “கத்தி பளபளக்குது” “கத்தி கூர்மையா இருக்கு” “கத்தி குறி தவறாம பாயும்”ன்னு அடிச்சி விடுறாங்க. ஆனா கத்தி கரகரவென உங்க கழுத்தை அறுக்கும் என்பது தான் நிஜமான உண்மை, உன்மையன truth.  

படத்தோட இரண்டாவது பாதியில விஜய்ட்ட வந்து நாலு பெரியவங்க “தம்பி மீடியா கவனத்த நம்ம பக்கம் இழுக்கு நாங்க வேனும்னா கழுத்த அறுத்து தற்கொலை பண்ணிக்கட்டுமா”ன்னு கேப்பாங்க. அப்போ உடனே எனக்கு “சார் நாங்க வேணும்னா ஒரு நாலு பேர் கழுத்த  கரகரன்னு அறுத்துக்குறோம்.. இனிமே இதுமாதிரியெல்லாம் பண்ணாம இருக்கீங்களா?”ன்னு விஜய்ய பாத்து  கேக்கனும்னு தோணுச்சி.

இந்தப் படத்த சூப்பர் ஹீரோ படமா எடுக்குறதா இல்லை சேரன் படங்களைப் போல ரியாலிட்டியான காட்சிகளை வச்சி சாதாரண படமா எடுக்குறதான்னு நிறைய கன்ஃபியூஷன் இருந்திருக்கும் போல. ரெண்டு மாதிரியாவும் எடுக்காம, நட்டக்க நடுவுல நிக்கிது. ஜீவானந்தம் வர்றப்போ எவ்வளவு ரியலா இருக்கோ, கதிரேசன் வரும்போது அப்படியே வேற மாதிரி இருக்கு. ஜீவானந்தத்தை சண்டை போடத்தெரியாதவராவும், கதிரேசன ஆக்சன் ஹீரோவாகவும் காமிக்கிறதுல தப்பில்லை. ஆனா எடுத்துக்கிட்ட தீம கரெக்டா எதாவது ஒரு ஸ்டைல்ல ரிலேட் பண்ணி அந்த ஸ்டைல்ல காட்சிகள் வச்சிருக்கனும். ஆனா இங்க அது இல்லவே இல்லை. அதோட நிறைய காட்சிகள் குவாலிட்டியா இல்லாம நேரடியா ஷூட்டிங் பாக்குற எஃபெக்ட் இருக்கு.

ஆனா படத்தில் அவர்கள் சொல்ல வந்த விஷயம் ரொம்ப நல்ல விஷயம். விவசாயிகளோட ப்ரச்சனை, நமக்குத்தெரியாம நம்ம நீர் நில வளங்கள் எவ்வளவு கொள்ளை அடிக்கப்படுதுங்குற விஷயங்கள் கண்டிப்பா மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டியவையே. கடைசியில் விஜய் பேசும் ஒரு 10 நிமிட வசனம் மட்டுமே படத்துல வந்த ஒரு நல்ல காட்சின்னு சொல்லலாம். முதல் பாதியில விவசாயிகள் மொத்தமாக தற்கொலை செய்து கொள்ளும் காட்சி டக்குன்னு நமக்குள்ள ஒரு பாதிப்ப ஏற்படுத்துது. நல்ல விஷயத்தை சொல்லியிருக்காங்க என்பது வேறு. நல்ல படம் என்பது வேறு. நிச்சயமாக கத்தியில் நல்ல விழிப்புணர்வு கருத்துக்களை சொல்லியிருக்காங்க. ஆனா அதைவிட நிச்சயம் கத்தி ஒரு நல்ல படமில்லை என்பதும்.

உங்களுக்கு விஜய்யை புடிக்காது. அதனால்தான் இப்டி சொல்றீங்க. வேணும்னே படம் நல்லா இல்லைன்னு சொல்றீங்கன்னு நண்பர்கள் சிலர் நிச்சயம் வருவீங்க. எனக்கு அஜித்தும் விஜய்யும் ஒண்ணுதான். யார் நல்ல படம் நடிச்சாலும் நல்லாருக்குன்னு சொல்றதுக்கும் நா தயங்குனதில்லை மொக்கை படங்களை நல்லா இல்லைன்னு சொல்றதுக்கும் தயங்கியதில்லை. படம் பார்த்த நீங்களே உங்களை கேட்டுப்பாருங்க உண்மை என்னன்னு புரியும்.

நல்ல விழிப்புணர்வு கருத்துக்களை தாங்கி வந்தாலும் ஒரு திரைப்படமாக கத்தி நம் கழுத்தை கரகரவென அறுப்பதே உண்மை.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...