Sunday, October 4, 2015

49-ஓ - அரசியல் COUNTER!!!


Share/Bookmark
மற்ற நடிகர்களுக்கும் கவுண்டருக்கும் ஒரு வித்யாசம் இருக்கு. இந்த வசனத்த பேசுனா இவங்க தப்பா நினைப்பாங்களோ, அவங்க தப்ப நினைப்பாங்களோன்னு அவர் எப்புவுமே நினைக்கிறதுமில்லை. பயப்படுறதுமில்லை. பெரும்பாலும் எல்லா நடிகர்களும் ஸ்க்ரீன்ல வரும்போது மக்கள்தான் எல்லாம், அவங்க போட்ட பிச்சைதான் எல்லாம்னு என்னென்னவோ மக்களை உயர்த்தி சொல்வாங்க. ஆனா இவரு “மக்களா.. அட அவனுங்க கெடக்குறாங்கப்பா..” ன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாரு. அவரப் பொறுத்த அளவு ”நா நடிக்கிறேன். நீ பாக்குற.. அவ்வளவு தான் ரெண்டு பேருக்கும் உள்ள தொடர்பு”

அதுவும் எந்த ஒரு நடிகரையும் போறபோக்குல நேரடியா நக்கலடிக்க கவுண்டரால மட்டுமே முடியும். அதுவும் சத்யராஜ் கூட சேர்ந்துட்டா சொல்லவே தேவையில்லை. இவங்க காம்பினேஷல்ல வந்த பீக் காமெடிங்களெல்லாம் நா சொல்லித்தான் உங்களுக்கு தெரியனும்னு இல்லை. கடைசியா ரெண்டு பேரும் நடிச்சது தங்கம்னு ஒரு படம். அதுல கவுண்டர் அடிவாங்கிட்டு ஒரு ஓரமா உக்கார்ந்துருப்பாரு. உடனே அந்த வழியா திம்மு திம்முன்னு ஒரு நாலு பேரு அருவாளோட ஓடுவாய்ங்க. உடனே அதுல ஒருத்தன புடிச்சி “ஏம்பா நீங்கல்லாம் இந்த “வேல்” சினிமாவுல நடிசாவங்களாப்பா?”  “ஏன் கேக்குறீங்க?” “இல்லை அதுலதான் இவ்வளவு பெரிய அருவாள எடுத்துகிட்டு இங்குட்டும் அங்குட்டும் ஓடிக்கிட்டு இருப்பானுக.. அதான் கேட்டேன்”ம்பாறு. 

அப்போ சத்யராஜ் வந்து “மாம்ஸ் நா உங்கள காப்பாத்துறேன்…” “ஒண்ணும் வேணாம்பா…” “அப்ப நா இந்தியாவையாவது காப்பாத்துறேன்” ன்னு சத்யராஜ் கேக்க “அட அதுக்குத்தான் அர்ஜூன் இருக்கானே… இப்ப நீங்க எதையாவது காப்பாத்தியே ஆகனுமா” ன்னு அசால்ட்டா அடிச்சிட்டு போய்டே இருப்பாரு. ஒரு நடிகரை அவன் இவன்னு திரையில உரிமையா கூப்புடுற ஒரே காமெடியன் தலைவர் கவுண்டராத்தான் இருப்பாரு. நம்ம 49 ஓவுக்கு வருவோம்.

சில கதைகள் சில பேரை மட்டும் மனசுல வச்சி எழுதப்படும். சில கதைகள் சிலபேரு நடிச்சா மட்டும்தான் எடுபடும். இந்த படத்தோட இயக்குனர் இந்தக் கதைய யார மனசுல வச்சி எழுதுனாருன்னு தெரியல. ஆனா இந்த கதைக்கும், இதில் வர்ற வசனங்களைப் பேசுறதுக்கும் கரெக்டான ஆளத்தான் புடிச்சிருக்காங்க. அவர்தான் தலைவர் கவுண்டர்.

அஞ்சு வருஷத்துக்கு ஓருதடவ ஓட்டு கேட்க மட்டும் ஊருக்குள்ள வீடு வீடா வந்து கால்ல விழுகுற அரசியல்வாதிங்க ஜெயிச்சப்புறம், அடுத்த அஞ்சி வருஷத்துக்கு அவங்க வீட்டு வாசல்ல மக்கள் எதாவது நல்லது செய்ய மாட்டாங்களான்னு காத்துகிடக்க வேண்டியிருக்கு. மக்கள , மக்களாப் பாக்காம வெறும் ஓட்டுகளா பாக்குற போலி அரசியல்வாதிகளையும், ஓட்டுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் ஆக்டிங் அரசியல்வாதிகளையும்,  தேர்தல் சமயத்துல மக்களுக்கு ஐநூறு ,ஆயிரம்னு பணத்த குடுத்து ஓட்டுகள வாங்கி அப்புறம் ஐயாயிரம் கோடி, பத்தாயிரம் கோடின்னு ஆட்டையப் போடுற திருட்டு அரசியல் வாதிகளையும் வசனங்களால புரட்டி எடுக்குற படம்தான் இந்த 49-ஓ.

உங்களுக்கு திமுக  இல்லை அதிமுக என்ற கட்சி நிலைப்பாடுகள் எதுவும் இல்லாம, நம்மூர்ல நடக்குற அரசியல் நாடகங்களையும், ஆட்டைகளையும் பாத்து எதுவும் செய்யமுடியாம, உள்ளுக்குள்ளயே புழுங்கிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதர் நீங்கன்னா, நிச்சயமா இந்தப் படத்தோட ஒவ்வொரு வசனமும், காட்சியும் உங்களுக்கு ரொம்ப புடிக்கும். ஏன்னா நா ஏற்கனவே ஒரு பதிவில எழுதிருந்த மாதிரி, ஏதேனும் ஒரு கட்சியில தன்னை இணைச்சிக்கிட்டவங்களுக்கு அவங்க தப்பு பன்னா கூட ஒப்புக்குற மனப்பாங்கு சுத்தமா இல்லாம போச்சு. உயிரக்குடுத்தாவது அவங்க செஞ்சது ரைட்டுன்னு தான் சொல்றாங்க.

விவசாயத்த மட்டுமே நம்பியிருக்கிற ஒரு கிராமத்துல, விவசாயிகளோட வருமையப் பயன்படுத்தி அவங்களோட விளை நிலங்களையெல்லாம் வாங்கி ப்ளாட் போட்டு விக்கிறதுக்கு முயற்சிக்கிறாங்க ஒரு அரசியல் குரூப்பு. விவசாயம்தான் இந்த நாட்டோட முதுகெலும்புன்னு உணர்ந்த அந்த ஊரோட ஒரு விவசாயியான சவுரிமுத்து (கவுண்டர்), அந்த அரசியல்வாதிகள்கிட்டருந்து நிலத்த மீட்டு மீண்டும் அத விளைநிலங்களாக்க என்னென்ன முயற்சி எடுக்குறாருங்குறது அவர் பாஷையிலயே சொல்லனும்னா என்னென்ன டகால்டி வேலை பன்றாருங்குறதுதான் 49-ஓ.

நா சொல்றத கேக்கும்போது எதோ ரொம்ப போரடிக்கிற சப்ஜெக்ட் மாதிரி உங்களுக்கு தோணும். ஆனா, படத்துல ஒரு சீன் கூட போரடிக்காது. படம் முழுசும் கவுண்டரோட அளப்பறைகள அள்ளித் தெளிச்சிருக்காங்க. அவரோட வழக்கமான ஒன்லைனர்ஸ் அங்கங்க வந்து பட்டைய கெளப்புது. கவுண்டர் TVS Excel ல கிளம்பிட்டு இருப்பாரு.. உடனே அவர் மனைவி வீட்டுக்குள்ளருந்து வந்து “ஏங்க என்னையும் கொஞ்சம் ஏத்திட்டு போங்க” ங்கும். “வந்து அப்டி வண்டிக்கு முன்னால படு.. ஏத்திட்டு போறேன்…”ன்னு போய்ட்டே இருப்பாரு. பேரெண்ண? “நீலவேணி” “எவ்வளவு நீளம்” மொமெண்ட்.

திமுக, அதிமுகன்னு எல்லா கட்சிக்கும் சகட்டு மேனிக்கு ஏத்து விழுகுது.

அள்ளக்கை : என்னங்க உங்க அப்பா (MLA) இறந்துட்டாரு.. கொஞ்சம் கூட சோகமே இல்லாம இருக்கீங்க?
வில்லன் : டேய் எங்கப்பா என்னடா இருபது வயசுலயா செத்தாரு. என்பது வயசாகி செத்தாரு..
அள்ளக்கை : என்பது வயசா? சாகும்போது இளைஞர் அணித்தலைவரால்ல இருந்தாரு…. ???!!!!
வில்லன் : அப்பா இறந்துட்டாருல்ல.. இனி ஃபுல் பவரும் நம்ம கையிலதான்.
அள்ளக்கை : (மைண்டு வாய்ஸ்) உங்கப்பா கையில இருக்கும்போதே பாதி நேரம் இருட்டுதான். உன் கைக்கு வந்தா முழுநேர இருட்டு தான் போல…

அப்புறம் ஒரு காட்சில "நாட்டுல மண்ணெண்ணை வாங்குறது தான்டா கஷ்டம். எம்.எல்.ஏ ஆகுறது ரொம்ப ஈஸி” ங்குறாரு.  ஓட்டுக்கு அரசியல்வாதிங்ககிட்ட காசு கேக்கும்ப்போது “என்னப்பா மக்கள்லாம் இப்புடி காசு கேக்க ஆரம்பிச்சிட்டீங்க?”ன்னு அவன் கேக்க “ஓட்டுக்கு காசுகொடுத்து ஆரம்பிச்சி வச்சதே நீங்கதானே” ன்னு போட்டு தள்றாரு.


சுடுகாட்டை ப்ரமோட் பண்ண  ஜாவா சுந்தரேசனையும் இன்னொரு ஹீரோயினையும் கூட்டிட்டு வந்து, அவன் வசனம் பேச பேச கவுண்டர் அதுக்கு counter குடுத்துக்கிட்டே இருக்கது செம. “ராப்பிச்சை” ன்னு ஒரு பிச்சக்காரன வேட்பாளரா நிறுத்தி அத வச்சி கவுண்டர் அடிக்கிற நக்கல் எல்லாம் அவருக்கு மட்டுமே வரும்.



குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் ஒளிப்பதிவு மற்றும் காட்சியமைப்பு. ரொம்ப நல்லாருக்கு. பசுமையான வயல்கள படம்பிடிச்சதும் சரி, வறண்ட ஊர் தெருக்கள்ல வர்ற காட்சிகள படம் புடிச்சதும் சரி.. நல்ல குவாலிட்டி. ”அம்மா போல அள்ளித்தரும் மழைதான்” பாட்டும், படமாக்கியதும் சூப்பர். மற்ற இரண்டு பாடல்கள் சுமார் ரகம்.

இயக்குனர் ஆரோக்யதாஸின் முதல் படம். திரைக்கதையை விட வசனங்களே படத்த தூக்கி நிறுத்துது. எல்லா வசனஙளுமே ஊழல் அரசியல்வாதிகளுக்கான ஆணி.  குறிப்பாக க்ளைமாக்ஸ்ல தலைவர் 49-ஓ வ பத்தி பேசுற வசனங்கள். தேவையில்லாம போட்டு இழுக்காம சொல்ல வந்தத சொல்லிட்டு படத்த ஒண்ணே முக்கால் மணி நேரத்துல முடிச்சிட்டாரு. 

படத்துல மைனஸ்ஸுன்னு சில விஷயங்களச் சொல்லலாம். மைனஸுங்குறத விட சில லாஜிக் ஓட்டை மற்றும் க்ளீஷேக்கள். வழக்கமா எல்லா தமிழ் சினிமாவுலயும் ஒரு ஊர் பெரியவர உசார் பன்னிட்டா உடனே  MLA ஆயிடலாம்னே காமிக்கிறாங்க. இந்தப் படத்துலயும் அது விதிவிலக்கில்ல. முதல்ல நூறு தலைக்கட்டு உள்ள ஊராக காமிச்சிட்டு, கவுண்டர் சொன்னாருன்னு பத்தாயிரம் இருபதாயிரம் பேர் வேட்புமணு தாக்கல் பன்ன வரிசையில நிக்கிறது ஏத்துக்கிற மாதிரி இல்லை. மேலும் டிவில ஆட்டோ ஓட்டுறவரு, பூ விக்கிறவங்கன்னு ஒவ்வொருத்தரையா பேட்டி எடுக்குறது.  அவங்க “அவர் சொல்றதுதாங்க கரெக்டு” “வச்சாரு பாருங்க ஆப்பு” ன்னு சொல்றது போன்ற வழக்கமான ஷங்கர் பட டைப் காட்சிகள கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். வில்லனா வர்றவரு அந்த ரோலுக்கு சூட்டா இல்லை. சின்னப்பையனா இருக்காரு. ஒரு அரசியல்வாதிங்கிற பார்வையில அவர பாக்கவே முடியல. 

கவுண்டர் நடிப்புலயும், டயலாக் டெலிவரிலயும் அதே வேகம். கொஞ்சம் கூட மாற்றம் இல்லை. ஆனா ஒரு சில காட்சிகள்ல எவ்வளவு மேக்கப்பிலும் வயசை மறைக்க முடியல. அந்த தோற்றத்துல தலைவர பாக்க மனசு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. 




இந்தப்படத்தோட ஆடியோ ரிலீஸ்ல கவுண்டர் பேசுனத நிறைய பேர் பாத்துருப்பீங்க. எல்லாருக்குமே தெரியும் அவர் பெரும்பாலும் எந்த ஃபங்ஷன்லயும் கலந்துக்க மாட்டாரு. அதிகம் மேடையிலயும் பேசுனதில்லை. அன்னிக்கு பேசும்போது "49-ஓ is the best movie... இது ஒரு நல்ல படம்” ன்னு சொல்லுவாரு. கொஞ்ச நேரத்துல தெரியாம அதே sentence ah repeat பன்னிருவாரு. ஆனா அதயே சமாளிச்சி கடைசில அத வேற வேற tone la சொல்லி எல்லாரையும் சிரிக்க வச்சிருவாரு. அவரு சொன்ன மாதிரி “49-ஒ is a good movie.. இது ஒரு நல்ல படம்”

நா கவுண்டர் ஃபேன்ங்குறதால ஓவர் பில்ட் அப் குடுக்குறேன்னு நினைக்க வேண்டாம். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். ரொம்ப நாளா மிஸ்ஸான கவுண்டரோட counter சில இங்க கிடைக்கும். நல்லா ரீச் ஆயிருக்க வேண்டிய படம். அதிக அளவு தியேட்டர்கள்ல ரிலீஸ் செய்யப்படாததாலயும், சில மார்க்கெட்டிங் கோளாருகளாலயும் முடங்கிப் போனது வருத்தம்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

Unknown said...

I saw this movie 3 weeks b4 its so boring with old repeated dialogues and some watsup forwarded messages also came as scean. Plz review correctly

Mohan CP said...

Wonderful movie.. Please don't miss it.. Padathula konjam anga anga bore adichalum but overall super movie... Gounder back in action... Director has done a wonderful job for the provided opportunity...

Mohan CP said...

Wonderful movie.. Please don't miss it.. Padathula konjam anga anga bore adichalum but overall super movie... Gounder back in action... Director has done a wonderful job for the provided opportunity...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...