Wednesday, April 29, 2020

தடயவியல் – Case 1 மாயமான பெண்!!


Share/Bookmark



எந்த ஒரு குற்றாவாளியும் அவனுக்கே தெரியாமல் எதாவது ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்பது காவல்துறை வழக்கமாகச் சொல்லும் ஒரு வாக்கியம். கிட்டத்தட்ட அது உண்மையும் கூட.  ஆனால் குற்றவாளிகள் விட்டுச்செல்லும் தடயங்களை காவல் துறையால் மட்டுமே முழுவதும் கண்டுபிடித்து விட முடிவதில்லை. அவர்களுக்கு தடயவியல் துறையின் உதவி தேவைப்படுகிறது.

தமிழ் மட்டும் தெரிந்த ஒருவனிடம் வேறு மொழியில் பேசும்போது நாம் நினைப்பதை அவனுக்குப் புரிய வைக்க முடியாது. அவன் கூற நினைப்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.  ஒரு இடத்தில்  தகவல் பரிமாற்றம்  நடைபெற வேண்டுமென்றால் இருவரும் ஒரே தகவல் பரிமாற்ற முறையை பயன்படுத்த வேண்டும். மனிதர்களுக்குள்ளான தகவல் பரிமாற்ற முறை என்பது எதேனும் ஒரு மொழியாக இருக்கலாம் அல்லது இருவருக்கும் தெரிந்த சைகையாகக் கூட இருக்கலாம். அதே  போல மனிதன் எதேனும் இயந்திரத்துடன் தகவல் தொடர்பு செய்வதற்கோ, அல்லது இரண்டு இயந்திரங்குள்ளான தொடர்புக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட தகவல் தொடர்பு முறையை பின்பற்ற வேண்டும். அதை Communication protocol என்பார்கள்

ஒரு குற்றம் நடக்கும் போது, அந்த இடத்திலுள்ள உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் அத்தனையுமே சாட்சிகள் தான். அந்த உயிருள்ள பொருள் மனிதனாயின் வாய்வழியே அவனிடம் கேட்டு நடந்ததை தெரிந்து கொள்ள முடியும். ஒரு வேளை அவை வேறு உயிரோ அல்லது  உயிரற்ற பொருட்களாகவோ இருப்பின் அவர்களிடமிருந்து செய்திகளைப் பெற பிரத்தியேகமான தகவல் தொடர்பை கையாள வேண்டியிருக்கிறது. அந்த மொழி அனைவருக்கும் தெரிவதில்லை. அதைப் பேசத் தெரிந்தவர்கள்தான் இந்த தடயவியல் துறையினர்.

தடயவியல் துறையினரின் உதவியுடன்  கண்டுபிடிக்கப்பட்ட குற்றங்களின் வரிசையத்தான் இந்த தொடர் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்க்கப்போகிறோம். இதில் கூறப்போகும் அனைத்துமே என்பது, தொண்ணூறுகளில் நடந்த உண்மைச் சம்பவங்கள்.  Forensic Files என்கிற பெயரில் ஒரு ஆங்கில டாக்குமெண்டரி வெளிவந்திருக்கிறது. அதில் நிறைய குற்றங்களையும், அவை எவ்வாறு துப்பறிப்பட்டன என்பதையும் இருபது இருபது நிமிட தொகுப்புகளாக வெளியிட்டிருக்கின்றனர். அவற்றின் தமிழாக்கமே வரப்போகும் இந்த தொடர் பதிவுகள்.  

முதலில் மாயமான பெண்ணைப் பற்றிய ஒரு வழக்கைப் பார்ப்போம்.  1986 இல் ஹெல்லே க்ராஃப்ட்ஸ் எனும் பெண் தன் கணவன் மேல் ஏற்பட்ட சந்தேகத்தால் ஒரு தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியைத் தொடர்புகொண்டு கணவனின் நடத்தையைக் கண்காணிக்கச் சொல்கிறாள். சில நாட்களுக்குப்பின் மழை பெய்யும் ஒரு மாலை வேளையில் அந்த தனியார் டிடெக்டிவ்,  ஹெல்லாவை  சந்தித்து அவனுடைய ரிப்போர்ட்டைக் கொடுக்கிறான்.  அதிலிருக்கும் சில புகைப்படங்களைப் பார்த்து ஹெல்லா அதிர்ச்சியடைகிறாள். ஆம். அவளது கணவனுக்கும் மற்றுமொரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தான் அந்த புகைப்படங்கள். சில நிமிடங்கள் காருக்குள்ளேயே அழுது தீர்த்துவிட்டு பின் இறங்கிச்செல்கிறாள். இந்த சந்திப்பிற்றுப் பிறகு ஹெல்லா காணாமல் போகிறாள்.  



ஹெல்லாவுக்கும், அவளது கணவன் ரிச்சர்ட்டுக்கும் மூண்று குழந்தைகள். இருவருமே ஒரே ஏர்லைன்ஸில் வேறு வேறு துறையில் பணிபுரிந்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் ஹெல்லாவின் கணவன் ரிச்சர்ட் பகுதி நேர காவல்துறை அதிகாரியாகவும் இருந்து வந்திருக்கிறார்.

திருமணமாகி பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து ஹெல்லாவிற்கு ரிச்சர்ட்டின் மேல் சந்தேகம் வர அது பல சமயம் சண்டையாக மாறி ரிச்சர்ட் ஹெல்லாவை தாக்கும் அளவிற்கு சென்றிருக்கிறது. ஒரு கட்டத்தில் ஹெல்லா விவாகரத்திற்கு விண்ணப்பித்திருக்கிறாள். அதுமட்டுமல்லாமல் ஹெல்லா தன்னுடைய விவாகரத்து வழக்கை நடத்தும் வக்கீலிடம் ,  ஒரு வேளை தனக்கு எதாவது நேர்ந்தால் அது இயற்கையானது அல்ல என ஒரு குறிப்பையும் கொடுத்திருக்கிறார்.

நவம்பர் 18 , 1989ம் தேதி ஹெல்லா பணியை முடித்து வரும்பொது அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் கொண்டு வந்து இறக்கி விட்டுருக்கிறார். அதுதான் வெளியுலகம் ஹெல்லாவை கடைசியாகப் பார்த்த தருணம். அதன் பிறகு ஹெல்லா எங்கு சென்றாள் என்பது எவருக்கும் தெரியவில்லை.
 
இரண்டு நாட்கள் கழித்து ஹெல்லா பணிக்கு வராத காரணத்தல் ஹெல்லா பணிபுரியும் ஏர்லைன்ஸில் இருந்து வீட்டில் தொடர்பு கொண்டு கேட்கும்போது ஹெல்லா டென்மார்க்கிற்கு அவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பதாக ரிச்சர்ட் தெரிவித்திருக்கிறார். மேலும் சிலரிடம் ஹெல்லா விடுப்பில் இருப்பதாகவும் முன்னுக்கு பின் முரணான பதிலைக் கொடுத்திருக்கிறார்.

ஹெல்லாவிடமிருந்து சில நாட்கள் எந்த தகவல் தொடர்பும் இல்லை என்பதால் ஹெல்லாவின் வழக்கறிஞர் காவல்துறைக்குச் செல்ல, விசாரணை தொடங்கியது.

ஹெல்லாவின் கணவன் ரிச்சர்ட் தொடர்ந்து ஹெல்லா எங்கு சென்றார் என்பதைப் பற்றி தனக்குத் தெரியாது என்கிற பதிலையே கூறி வந்தார்.
காவல்துறையினர் ஹெல்லாவின் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பணிப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். நவம்பர் 18ம் தேதி தனக்கு விடுப்பு எனவும் , அன்று இரவு இரண்டு மணிக்குத்தான் ஹெல்லாவின் வீட்டுக்கு வந்ததாகவும், வந்தவுடன் நேரடியாக உறங்கச் சென்றதாகவும் கூறினாள். ஆனால் அவள் கூறிய மற்றொரு தகவல்தான் ஹெல்லா பற்றிய விசாரணையை துரிதப்படுத்த, சரியான பாதையில் செல்ல உதவியது.

அதாவது மறுநாள் காலை ஹெல்லா வீட்டின் தரை விரிப்புகளில் கருப்பு வண்ணத்தில் புதிதாக சில கறைகள் இருந்ததாகவும், ரிச்சர்ட்டிடம் அதைப் பற்றி கேட்ட பொழுது சரியான பதில் எதுவும் இல்லை எனவும் மறுநாளே அந்த தரை விரிப்புகளை ரிச்சர்ட் அகற்றி விட்டதாகவும் பணிப்பெண் கூறினாள்.  காவல்துறை ஒருசில மாதிரி ரத்தக் கறைகளை அந்தப் பணிப்பெண்ணிடம் காண்பித்து, அவள் அந்த தரை விரிப்புகளில் பார்த்தது ரத்தக் கறைதான் என்பதை உறுதி செய்துகொண்டனர்.

மேலும் ஹெல்லா அறையின் மெத்தை விரிப்பு மாற்றப்பட்டிருப்பதாகவும், வீட்டிலிருந்த ஒரு மிகப்பெரிய ஃப்ரீசர் (Freezer) காணாமல் போயிருப்பதையும் பணிப்பெண் காவல்துறைக்கு தெரிவிக்க, காவல்துறையின் கவனம் முழுவதும் இப்பொழுது ரிச்சர்ட்டின் மேல் திரும்பியது.

ஆனால் ரிச்சர்ட்டோ தனக்கு எதுவும் தெரியாது என்கிற பதிலையே மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருந்தார். காவல்துறை ரிச்சர்ட் தொடர்பான தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தது. அப்போது அவர்களுக்கு கிடைத்த ஒரு தகவல் அதிர்ச்சியூட்டும் விதமாக இருந்தது. ஹெல்லா காணாமல் போன இரண்டாவது நாள் ரிச்சர்ட் தனது க்ரெடிட் கார்டை பயன்படுத்தி, ஒரு கமர்ஷியல் Wood Chipper ஐ வாடகைக்கு எடுத்திருக்கிறார். Wood chipper எனப்படுவது மரத்துண்டுகளை சிறு தூள்களாக மாற்றும் ஒரு  இயந்திரமாகும்.

கிடைத்த தகவல்களைக் கொண்டு, ரிச்சர்ட்டிற்கும் ஹெல்லா காணாமல் போனதற்கும் நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த காவல்துறை ரிச்சர்ட்-ஹெல்லாவின் வீட்டை சோதனையிட முடிவு செய்தது.
இப்பொழுதுதான் தடயவியலின் உதவி தேவைப்படுகிறது காவல்துறைக்கு. டாக்டர் ஹென்றி இந்த வழக்கிற்காக அழைக்கப்படுகிறார். டாக்டர் ஹென்றி ஹெல்லாவின் அறையை அங்குலம் அங்குலமாக அலசுகிறார். கடைசியில் ஒரு தடயம் கிடைக்கிறது.  அந்த அறையில் இருந்த மெத்தையில், வெற்றுக்கண்களால் அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியாத அளவு மிகச்சிறிய சிவப்புப் புள்ளிகளை ஹென்றி கண்டறிகிறார்.



ஆய்விற்கு உட்படுத்தும்போது அவை ரத்தப்புள்ளிகள் என்பது தெரிகிறது. வெறும் ரத்தம் என்பது மட்டும் நமக்கு விடை கொடுக்காது. அது மனித ரத்தமா அல்லது எதேனும் ஒரு விலங்கு அல்லது பூச்சிகளின் ரத்தமா? ஒருவேளை மனிதரத்தமாக இருந்தால், ஒரு வேளை பெண்களின் மாதவிடாயின் போது வெளிப்படும் ரத்தமாகக் கூட இருக்கலாம்.  இந்த ரத்தப்புள்ளிகள் புதிதா அல்லது சில வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டதா என பல கேள்விகளை கேட்க வேண்டியிருந்தது.

ஒவ்வொன்றையும் உறுதிப்படுத்த ஒவ்வொரு சோதனைகள். இறுதியின் அது ஓ பாசிடிவ் வகையைச் சேர்ந்த மனித ரத்தம் தான் என்பதையும், அது மாதவிடாய் ரத்தம் இல்லை , ரத்த நாளங்களில் பாயும் ரத்தம் என்பதையும் டாக்டர் ஹென்றி உறுதிப்படுத்தினார். ஹெல்லாவின் ரத்தமும் ஓ பாசிடிவ் வகையைச் சேர்ந்ததாகும்.

அது புதிய ரத்தமா அல்லது நீண்ட நாள் முன்பிலிருந்து இருக்கும் ரத்தமா என்பதை அறிய PGM எனப்படும் ஒரு சோதனையை செய்தனர். இந்த PGM மூலக்கூறு எனப்படுவது, உறைந்த ரத்தத்தில் கூட 12- 13 வாரங்கள் உயிர்ப்புடன் இருக்கும். மெத்தையிலிருக்கும் ரத்தக் கறைகளை PGM மூலக்கூறு சோதனைக்கு உட்படுத்திய பொழுது , அந்த ரத்தக்கறைகளில் PGM மூலக்கூறு உயிர்ப்புடம் இருப்பது தெரிந்தது. எனவே இந்த ரத்தக் கறை சமீபத்தில் ஏற்பட்டது தான்.

டாக்டர் ஹென்றி அந்த ரத்தப்புள்ளிகளின் அடர்த்தி, அவை மெத்தையில் தெறித்த விதம் இவற்றை வைத்து, அந்த ரத்தப்புள்ளிகள் 10 டிகிரி கோணத்தில், மிதமான வேகத்தில் வந்து விழுந்திருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தினார். மேலும் அந்த மெத்தையின் பக்கவாட்டில் சுமார் ஆறு அங்குலம் அளவிற்கு ஒரு ரத்தக் கோடு இருப்பதையும் ஹென்றி கண்டறிந்தார். இவற்றையெல்லாம் ஆராய்ந்து அந்த ரத்தப்புள்ளிகளும் இந்த ரத்தக்க்கோடும் மெதைக்கும் அருகில் ஒருவர் மண்டியிட்டு விழும் போது ஏற்பட்டதாக இருக்கவேண்டும் எனபதை உறுதிசெய்தார்.

அதுமட்டுமல்லாமல் ரிச்சர்ட்டின் வீட்டின் குளியளறையில் இருந்த துண்டுகள் அனைத்தும் சமீபத்தில் துவைக்கப்பட்டவையாக இருந்தது..  ஆர்த்தோடாலடின்  கரைசலில் சோதனையிட்ட பொழுது அந்த துண்டுகளின் பெரும்பாலான பகுதிகள் நீல நிறமாக மாறியது. அப்படியென்றால் அந்தத் துண்டுகள் ரத்தத்தை துடைக்க உபயோகப்பட்டிருப்பது தெரிந்தது.
காவல்துறைக்கு ரிச்சர்ட்டின் மீதான சந்தேகம் வலுக்கிறது. ஆனால் அவரை கைது செய்யவோ அவர் மீது குற்றம் சாட்டவோ போதுமான ஆதாரங்கள் இல்லை. ஹெல்லா காணாமல் போயிருக்கிறாரே தவிற,  அவருக்கு எதேனும் நிகழ்ந்தது என்பதை காவல்துறையால் நிரூபிக்க முடியவில்லை. இந்த சூழலில் ரிச்சர்ட்டை Lie Detector Test ற்கு உட்படுத்த முடிவெடுக்கிறது காவல்துறை.

PolyGraph சோதனை எனப்படும் Lie detector test எனப்படுவது, நிறைய திரைப்படங்களில் காண்பிப்பது போல, சோதனைக்குட்படுத்தப் படுபவரின் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, மூச்சு, தோலில் ஏற்படும் ஒருவித மின் மாற்றங்கள்  போன்றவை கண்காணிக்கப்படும். கேள்விகளுக்கு பதில் அளிக்கும்பொழுது இவற்றில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் பட்சத்தில் அவர் கூறுவது உண்மை இல்லை என்பது நிரூபணம் ஆகும்.

ரிச்சர்ட்டின் சம்மதத்துடன், ஹெல்லாவைப் பற்றி தெரிந்துகொள்ள அவருக்கு பாலிகிராஃப் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் 

“ஹெல்லா எங்கிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?”

”ஹெல்லாவை நீங்கள் தாக்கினீர்களா?”

”ஹெல்லாவை நீங்கள் மறைத்து வைத்திருக்கிறீர்கள?” என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

அனைத்திற்கும் ரிச்சர்ட் ”தெரியாது”, ”இல்லை” என்றே பதிலளித்தார்.

பாலிகிராஃப் சோதனையின் முடிவு காவல்துறைக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது.  பாலிகிராஃப் சோதனை முடிவில் ரிச்சர்ட் பொய் எதுவும் கூறவில்லை என நிரூபனமானது.  ரிச்சர்ட் விடுவிக்கப்பட்டார்.

காவல்துறை அடுத்து எந்தக் கோணத்தில் விசாரணையைத் துவக்கலாம் என்று தயங்கி நின்ற பொழுது, அவர்களுக்குத் தீணி போடும் விதமாக கிடைத்தது ஒரு தகவல்..

அடுத்த பதிவில் …



அடுத்த பதிவைப் படிக்க இங்கே க்ளிக்கவும்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

ganesh said...

Almost same story of MIRAGE

முத்துசிவா said...

ஆரம்பம் ஒன்றாக இருந்தாலும் MIRAGE இன் கான்செப்ட் வேறு. MIRAGE உம் ஆங்கிலத்தில் வந்த Frequency யும் ஒரே கதை & கான்செப்ட்.

Anonymous said...

Nice. These type of writings we expect from you. Pls write regularly

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...