Sunday, March 22, 2015

மனைவியிடம் அடி வாங்காமல் எஸ் ஆவது எப்படி?!!!


Share/Bookmark
இன்னிக்கு நாம பாக்கப்போறது ஒரு மிகப்பெரிய சமூக ப்ரச்சனை. ஒவ்வொரு வீட்டுலயும் இருக்க ப்ரச்சனை. பெண்கள் அடி வாங்கிய காலம் போயி இப்போ ஆண்கள் அடிவாங்கிக்கிட்டு இருக்க காலம். அண்டர்டேக்கருக்கே வீட்டுக்கு போனா மிரட்டல் அடி விழுகுதாம். அப்படி இருக்க சாதாரண மனிதர்கள் எப்படி இந்த ப்ரச்சனைய சமாளிக்கிறது? அடி வாங்கும்போது லைட்டா கோவம் வந்து, எதிர்த்து மனைவிய நோக்கி கைய தூக்கிட்டாலும், உங்க மேல பாய ஆயிரத்தியெட்டு சட்டம் ரெடியா இருக்கு.  ஒரு வேளை சட்டம் பாயலன்னாலும், கண்ண கசக்கிட்டு பொறந்த வீட்டுக்கு பொய்ட்டாங்கன்னா மச்சானுங்க வீசுற கத்தி உங்க மேல பாயும். இந்த மாதிரி ப்ரச்சனைகள்ல சிக்கி தவிக்கிறவங்களுக்காகவே, இந்த துறையில் பலவருடம் அனுபவம் மிக்க அறிஞர் பெருமக்களைக் கொண்டு ப்ரத்தியேகமா உருவாக்கப்பட்டதுதான்  இந்தப் பதிவு.


1.தப்பு நடக்குறத தடுக்குறது எப்படின்னு பாக்குறதுக்கு முன்னால ஒரு வேளை தப்பு நடந்துட்டா என்ன செய்யனும்ங்குறதுக்கு ஆயத்தமாயிக்கனும். முதல்ல கராத்தே, கும்ஃபூ, களரி ன்னு எதாவது ஒரு தற்காப்புக் கலை தெரிஞ்சி வச்சிக்கனும். இல்லை அதெல்லாம் ரொம்ப ஹைடெக்கா இருக்குன்னு ஃபீல் பண்ணீங்கன்னா, அட்லீஸ்ட் உங்களுக்கு க்ரிக்கெட்டுல டிஃபென்ஸ் ஷாட்டுங்களாவது ஆடத்தெரிஞ்சிருக்கனும். உங்க க்ரிக்கெட் டீம்ல ரொம்ப வேகமா போடக்கூடிய ஒரு பவுலர, ஃபுல் ஸ்பீடுல பந்து போடச்சொல்லி தினமும் கொஞ்ச நேரம் டிஃபென்ஸ் ஷாட் பழகுறது உசிதம். ஏன்னா, எந்த நேரத்துல, எந்த திசையிலருந்து பூரிக்கட்டையோ, இட்லி குண்டானோ, தோசைக் கரண்டியோ உங்க மேல பாயும்னு யாராலயுமே சொல்ல முடியாது. எந்த திசையிலருந்து வந்தாலும் அத தடுக்க உங்களுக்கு தெரிஞ்சிருக்கனும். அட்லீஸ்ட் உள் காயங்களோட தப்பிக்கவாவது தெரிஞ்சிருக்கனும்.

2. ”வாழ்க்கைன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்”, ”சண்டையில கிழியாத சட்டை எங்கருக்கு” ”அடிகுடுத்த கைப்புள்ளைக்கே இந்த அடின்னா..” போன்ற வசனங்களை மனப்பாடம் பன்னி வச்சிக்கனும். அப்பத்தான் மறுநாள் காலையில ”என்ன சார் மண்டையில லேசா பொடைச்சிருக்கு?”ன்னு எவனாவது கலாய்ச்சா, அந்த மாதிரி வசனங்களை சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம்.

சரி இனிமே வரும்முன் காக்கும் நடவடிக்கைகளுக்கு வருவோம்.

3. முதல்ல நம்ம சாப்புடுற சாப்பாடு. அதுல சுத்தமா உப்பு, காரம் சேத்துக்கவே கூடாது. தப்பித்தவறி கோவம், சூடு, சுரனை போன்ற விஷயங்கள் உங்களுக்கு வந்துடவே கூடாது. அடி விழுகுறதுக்கு முதல் காரணமே இந்த சூடு சுரணை போன்ற ஐட்டங்கள் தான். அதனான என்ன நடந்தாலும், எதுவுமே நடக்காதது போல “சுமைலிங்” ஃபேஸோட (smiling face) இருக்கனும்.

4. அப்புறம் மனைவிக்கு அப்பப்போ நம்மளால முடிஞ்ச, (சில நேரங்கள்ல முடியாத ) உதவிகளைச் செஞ்சி குடுக்கனும். அதாவது அவங்க சாதம் வச்சிட்டு இருக்கும்போது காய்கறி நறுக்கி குடுக்குறது, அவங்க துணி அலசும் போது, துணிங்களுக்கு சோப்பு போட்டு துவைக்கிறது, சில நேரங்கள்ல வீட்ட பெருக்குறது, அப்பப்போ சாப்பிட்ட பாத்திரங்களை கழுவுறது (சில நேரத்துல அவங்க சாப்பிட்ட பாத்திரத்தையும்), குழந்தைங்களுக்கு ஜட்டி சாக்ஸ் மாட்டி விடுறது, ஆய் கழுவி விடுறது ன்னு முடிஞ்ச உதவிகளை செய்யனும். அப்பதான், உக்கிரம் கொஞ்சம் குறையும்.

5. ஆனா ஒரு தடவ ஒண்ணு செய்ய ஆரம்பிச்சா, அத வாழ்க்கை ஃபுல்லா நீங்க தான் செய்யனும். ஒரு நாள் சமைப்போம்னு அவசரப்பட்டு சமைச்சிட்டு எஸ்ஸாயிடலாம்னு மட்டும் நினைக்காதீங்க. இன்னொரு நாள் “உங்க கையால அன்னிக்கு ஒரு ரசம் வச்சீங்களே.. அது தான் ரசம்.. “ ன்னு ஒரு பிட்ட போட்டு வாழ்க்கை ஃபுல்லா உங்களை ரசம் வைக்க வைத்துவிடும் வாய்ப்பு அதிகாமா இருக்கதால, அந்த மெல்லிய கோட்டுல பயணம் பன்றதுலதான் உங்க திறமையே அடங்கியிருக்கு.

6. என்னிக்காவது நீங்க ரொம்ப பசியோட வீட்டுக்கு வந்து, கிச்சனுக்கு போய் பாத்தா சாப்பிட எதுவுமே இல்லை. மனைவிகிட்ட கேட்டா, “ரொம்ப டயர்டா இருக்குங்க.. அதான் சமைக்கல” ன்னு சொல்றாங்கன்னு வைங்க. உடனே “அதுக்கென்ன நானே சமைக்கிறேன்” ன்னு, சமைக்க ஆரம்பிச்சி கொலைக்கேசுல உள்ள போயிறக்கூடாது. “ரொம்ப டயர்டா இருக்குங்க.. சமைக்கல…” ன்னு வீட்டுக்காரம்மா சொன்னா, “நாயே இன்னிக்கு வீட்டுல சாப்பாடு இல்லை. போய் எனக்கும் சேத்து ஹோட்டல்ல பார்சல் வாங்கிட்டு வா” ன்னு அர்த்தம்

7. கிரிக்கெட், ஃபுட் பால் மாதிரியான விளையாட்டுக்கள டிவில நீங்க அதிகம் விரும்பி பார்ப்பவரா? அப்படி எதாவது கெட்ட பழக்கம் இருந்தா அத அடியோட நிறுத்திக்கனும். “நாதஸ்வரம்” “கெட்டி மேளம்” “அக்கா” “சரவணன் காமாச்சி” போன்ற சீரியல்களப் பாக்க பழகிக்கனும். அப்ப தான் அடிதடி இல்லாம காலத்த ஓட்ட முடியும். இல்லை.. நா 20-20 மேட்ச் பாத்தே தீருவேன்னு ரிமோட்ட எடுத்தீங்க.. உங்களுக்கு பவர் ப்ளே ஸ்டார்ட் ஆயிரும்.

8. தேவையில்லாத விஷயங்கள்ல மூக்கை நுழைக்க கூடாது. அதாவது வீட்டுல எதாவது மாமியார் மருகள் சண்டை நடந்துகிட்டு இருக்கும்போது, சமாதானம் பன்றதா நினைச்சி referee வேலை பாக்க நினைச்சா, கண்டஸ்டண்டுகள விட ரெஃப்ரீக்கு தான் அதிக அடி விழும் அபாயம் இருக்கு. அதனால வெட்டுக்குத்து நடந்தா கூட, யாரோ பக்கத்து வீட்டு பொண்ணும் அவங்க மாமியாரும் சண்டை போட்டுக்குற மாதிரி நினைச்சி, அதுக்கும் நமக்கு எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி, chair la உக்காந்து ஸ்நாக்ஸ் சாப்பிட்டுகிட்டே அத வேடிக்கை பாக்குறது உசிதம்.



9. இன்னொரு ரொம்ப முக்கியமான விஷயம், ஆண்டனியப் பத்தி பாஷாகிட்டயோ, இல்லை பாஷாவப் பத்தி ஆண்டனிக்கிட்டயோ பேசிறவே கூடாது. ஏன்னா ஆண்டனியும் பாஷாவும் எதிரிகள். ஆண்டனிய தூக்குறதுதான் பாஷாவோட வேலை. பாஷாவ காலி பண்றது தான் ஆண்டனியோட வேலை. இன்னும் சொல்லப்போனா பாஷாகிட்ட தப்பு செஞ்சா கூட மன்னிப்பு உண்டு. ஆனா ஆண்டனிகிட்ட ம்ஹூம். “Baaad News” ன்னு சொல்லிட்டு துப்பக்கிய எடுத்து போட்டு தள்ளிருவாரு. அட ஆண்டனி யாரு பாஷா யாருன்னு இன்னும் உங்களுக்கு சொல்லவே இல்லையா? என்னங்க உங்க அம்மா தான் பாஷான்னா ஆண்டனி யாருன்னு சொல்லனுமா என்ன?

10.மனைவியோட சொந்தக்காரர்களைப் பத்தி தப்பா பேசவே கூடாது. குறிப்பா “இதக் கொண்டு வந்து என் தலையில கட்டி வச்சிட்டாய்ங்களே” “ இந்த கும்பல்ல என்ன கோர்த்து விட்டுட்டாய்ங்களே” மாதிரியான புலம்பல்கள் வெளியில இருந்தாலும், உங்க மனைவியோட காதுல “இப்புடி ஒரு பொண்ணு கிடைக்க நா குடுத்து வச்சிருக்கனும்” “என்னோட மச்சான் சாதாரன மச்சான் இல்லை.. தெய்வ மச்சான்” ங்குற மாதிரியான வசனங்கள் மட்டுமே கேக்குற மாதிரி பாத்துக்கனும்.

11. திடீர்னு ஒரு நாள் உங்க மனைவி அவங்களே செலக்ட் பன்ன ஒரு ட்ரஸ்ஸ போட்டுகிட்டு வந்து “ஏன்னுங்க மாமா இது எப்புடி இருக்கு?” ன்னு கேப்பாங்க. ”கலராடி இது? கண்ணு அவியிற மாதிரி. கண்றாவியா இருக்கு” ன்னு மனசுல இருக்கத ஓப்பனா சொல்லிரக்கூடாது. ”அம்முளுக்குட்டி இந்த ட்ரெஸ் உனக்குன்னே அளவெடுத்து தச்சா மாதிரி இருக்குடா கண்ணு”ன்னு சொல்லிடனும். இல்லைன்னா உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

12. உங்க மனைவிக்கு ஒரு செல்லப்பேரு வச்சுத்தான் கூப்புடனும். உங்க மனைவி தண்ணி ஊத்திவைக்கிற ட்ரம்மு மாதிரி இருந்தாலும் ”அம்மு”ன்னும், காஞ்சி போன பஜ்ஜி மாதிரி இருந்தா கூட “புஜ்ஜி”ன்னும் தான் கூப்புடனும். அப்புறம் “லட்டு” “பூந்தி” “மசால்வடை” ன்னு உங்க டேஸ்டுகேத்த மாதிரி எதாவது ஒரு பேர் வச்சித்தான் கூப்புடனும். அப்பதான், உங்களோட க்ரைம் ரேட் அதிகமாகும் போது, அந்த பேர ரெண்டு தடவ சொன்னா, உச்சகட்ட கோவத்துல இருக்க உங்க மனைவி “cool buddy” குமாரா மாறுவாங்க.


13. ஐஸ்வர்யாராயே மனைவியா வந்தாலும், ரோட்டுல நீங்க நடந்து போகும்போது எதிர்த்தாப்புல வர்ற டொம்மை ஃபிகர நீங்க பாத்து சைட் அடிக்கத்தான் செய்வீங்க. மனைவிகளோட கோர்ட்டுல இபிகோ 302 செக்‌ஷன தேர்ந்தெடுக்குற அளவுக்கு இது ஒரு மிகப்பெரிய குற்றம். அப்படி எசகுபிசகா எங்கயாவது பாத்து மாட்டும்போது, “இல்லைடா செல்லம் அந்த ட்ரெஸ்  மாதிரி தான் உனக்கு ஒண்ணு வாங்கனும்னு இருந்தேன்” ங்குற மாதிரி எதாவது சொல்லி எஸ் ஆயிடனும். குறிப்பு: ட்ரெஸ்ஸுன்னா வாங்கி குடுத்திடலாம். கொஞ்சம் அதிகமா கூவுறதா நெனைச்சி “அந்த நெக்லஸ் உனக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்மா” ன்னு வாய விட்டா வரும் பின் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

14. உங்கள் மனைவியை அடிக்கடி டூவீலர்ல அழைச்சிட்டு போகிறவரா நீங்க? அப்டின்னா நகைக்கடை, ஜவுளிக்கடைகள், ஷாப்பிங் மால்கள் இல்லாத ரூட்டை உபயோகிப்பது உசிதம். இல்லன்னா அந்தக் கடைகள் வரும்போது மின்னல் வேகத்துல வண்டியை ஓட்டுவது மிகஅவசியம். இல்லைன்னா என்ன, அவங்க எதாவது கேக்க, நாம வேணாம்னு தலைய உலுக்க, கடுப்பான அவங்க நம்மள தாக்க, வாங்குன அடியில நம்ம மூஞ்சி வீங்க.. அட விடுங்க.

15. அவசரப்பட்டு அரசியல்வாதிகள் மாதிரி வாக்குறுதிகள அள்ளி தெளிச்சிற கூடாது. மக்கள் வேணா வாக்குறுதிகள மறந்துடுவாங்க. ஆனா மனைவிகள் மறக்கமாட்டாங்க. ”அடுத்தவருசஷம் நாம கொடைக்காணல் போவோம்டா கண்ணு”ன்னு பேச்சுவாக்குல சொல்லிட்டு நீங்க அத தூங்கி எழுந்த உடனே மறந்துடுவீங்க. ஆனா அந்த அடுத்தவருஷம்ங்குறது 5 வருஷம் கழிச்சி வந்தாலும் அவங்க அத மறக்காம உங்ககிட்ட கேப்பாங்க.


16. தப்பு செஞ்சா கப்புன்னு கால்ல விழுக தெரிஞ்சிருக்கனும். குடிச்சிட்டு குடிக்காத மாதிரியே நடிச்சி வாங்கி கட்டிக்கிறத விட, “கன்னுகுட்டி இன்னிக்கு பார்ட்டில ஃப்ரண்ட்ஸ் கம்ப்பல் பண்ணதால லைடடா குடிச்சிட்டேன்” ன்னு உண்மைய ஒத்துக்குறது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையா குறைக்கும். 

நன்றி : நண்பன் கார்த்தி , 
              நண்பன் அனந்த நாராயணன் 

 குறிப்பு: இந்தப்பதிவு வெறும் நகைச்சுவைக்கே. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

ப.கந்தசாமி said...

அருமையான யோசனைகள். ஒவ்வொரு கணவனும் கண்டிப்பாகப் படித்து வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டும் எனக் கரிந்துரைக்கிறேன்.

ஆனா எனக்கு இவை தேவையில்லை. நான் ஏற்கெனவே இதை விட அருமையான யோசனைகளைக் கடைப்பிடித்துக்கொண்டு வருகிறேன். அவைகளை வெளியில் சொல்லக் கூடாது ஆகையால் தேவைப் படுகிறவர்கள் தனியாக வந்து என்னைச் சந்திக்கவும்.

மெக்னேஷ் திருமுருகன் said...

ஹி ஹி . அண்ணே . இவ்வளோ அட்டகாசமான ரூட்ட எழுதிட்டு இதெல்லாம் வெறும் காமெடி்ககுனு சொல்லி என் மனச புண்படுத்திட்டிங்க . இந்த 16 அம்ச திட்டத்த என் வருங்கால வாழ்க்கையில செயல்படுத்தலாமானு யோசிச்சிட்டு இருக்கேன் . எங்களைப்போன்ற கண்போன கபோதிகளுக்கு அறிவுக்கண்ணை திறந்ந தலைவர் வாழ்க ..

Unknown said...

As usual sema writing...
Anbubhavama annae :)

Regards,
A Yusuf

Anonymous said...

Super Ji, valkaila romba adi patirukinga Pola. But good lateral thinking.

Anonymous said...

Are you married ???? OMG

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...