Tuesday, January 24, 2017

லாரன்ஸ் என்னும் கைக்கூலி.. RJ பாலாஜி என்னும் ஸ்லீப்பர் செல்!!!


Share/Bookmark

நம்மாட்களுக்கு எந்நேரமும் திட்டித் தீர்ப்பதற்கு யாராவது சிலர் இருந்துகொண்டே இருக்கவேண்டும். இந்த இரண்டு நாட்களாக சிக்கியிருப்பது ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் தமிழா மற்றும் RJ பாலாஜி.

இவர்கள் அரசுக்கு பணிந்துபோயும், அரசிடம் பல்க்காக ஒரு அமவுண்டை வாங்கிக் கொண்டு கூட்டத்தை கலைந்து போகச் சொன்னது போலவும், ”மறுநாள் காலையில் மெரினாவிலிருந்து கிளம்பாதவர்களை அடித்து துவைக்கப் போகிறோம். நீங்கள் மட்டும் முன்னரே கிளம்பி விடுங்கள்” என்று அரசு இவர்களுக்கு தெரிவித்ததால் இவர்கள் மட்டும் எஸ்கேப் ஆகிவிட்டது போலவும் வண்டை வண்டையாக திட்டுகின்றனர்.
.
அப்படியே வைத்துக் கொண்டால் கூட நீங்கள் அடி வாங்கக் கூடாது என்பதற்குத்தானே கலைந்து போக சொல்லியிருக்கிறார்கள். பிறகு அவரை எதற்காக திட்டுகிறீர்கள்? அரசு தடியடி நடத்தப்போகிறது என்று முடிவு செய்துவிட்ட பிறகு RJ பாலாஜியோ, ராகவா லாரன்ஸோ நினைத்திருந்தாலும் அதைத் தடுத்திருக்க முடியுமா?
.
போராட்டத்திற்கு நீங்கள் அழைக்காமல் உங்களுக்குத் தோள் கொடுக்க அவர்களாகத்தானே வந்தார்கள். உங்களின் செலவுக்கு அவராகத்தான் பணம் கொடுத்தார். இன்னும் கொடுப்பதாக அறிவித்தார். நீங்கள்தான் அவர்களை கூட்டத்தின் தலைவர்களாகவும் ஆக்கினீர்கள். 
.
மெரினா பக்கமே செல்லாமல், நியூஸ் 7 ஐயும், Facebook பதிவுகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கே போராட்டத்தை ஞாயிறு இரவே முடித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி அதனைப் பதிவும் செய்திருக்கின்றனர். அப்படியிருக்க உங்களுடன் போராடிய ஒருவர் அதே கருத்தை முன் வைக்கும்போது அவர் ஏன் குற்றவாளியாக்கப் படுகிறார்? 
.
அராஜகம் செய்து கூட்டத்தைக் கலைக்கும் முடிவுக்கு அரசைத் தள்ளியது ஒரு வகையில் போராட்டக்காரர்கள் தான். ஏழாம் நாள் நடத்திய தடியடியை இரண்டாம் நாள் ஒரிருவர் மீது பிரயோத்திருந்தால் கூட, கூட்டம் கூட்டமாக பிக்னிக் செல்வது போல மெரினா பீச்சிற்கு குடும்பங்கள் படையெடுத்திருக்காது. இவ்வளவு பெரிய கூட்டத்தையும் சேர்த்திருக்க முடியாது. முதல் இரண்டு நாள் போராட்டத்தில் மூலம் எந்த பாதிப்பும் இல்லை என்று உணர்ந்த பின்னரே சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை போராட்டத்தில் கலந்து கொண்டனர். 
.
இப்போது என்ன நடக்கும்? அடுத்த முறை போராட்டம் என்று ஒரு சிறு கும்பல் கூடும்போதே அரசு ஆட்டத்தை கலைத்து விடும். அல்லது ஒரு சிலரைத் தவிற மற்றவர்கள் என்ன நடக்குமோ என்ற பயத்தில் போராட வெளியிலேயே வர மாட்டார்கள். 
.
போராட்டத்தில் கலந்து கொண்ட முக்கால்வாசிப் பேரின் ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதில்லை. போராடியவர்களில் முக்கால்வாசிப் பேர் ஜல்லிக்கட்டை தொலைக்காட்சியைத் தவிற வேறு எதிலும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க ஒரு சாரரின் உணர்வுகளுக்காக ஒன்று பட்டு போராடினீர்களோ அதே போல்தான் அந்த லாரன்ஸூம், ஆதியும், பாலாஜியும்.
.
போலீஸ் தடியடியை ஆரம்பித்து கலவரமாக்கிய பொழுது, இங்கிருந்து ஒருவர் “டேய் லாரன்ஸ் எங்கடா போனா? டேய் ஆதி எங்கடா போன?” என்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுகிறார். மொதல்ல நீ எங்க நாயே இருக்க? எதோ லாரன்ஸ்தான் இந்தப் போராட்டத்டை துவக்கியது போலவும், ஹிப்ஹாப் தமிழா கூப்பிட்டதால்தான் இவர்கள் அனைவரும் போராடத் துவங்கியது போலவும். 
.
போராட்டம் நன்றாக சென்ற பொழுது அரசியல்வாதிகள் தேவையில்லை நடிகர்கள் தேவையில்லை என விரட்டியடித்துவிட்டு, கலவரமான பின்னர் மட்டும் ஏன் அவர்களைத் தேடுகிறோம்.
.
ஜல்லிக்கட்டு நடந்தாலும் நடக்காவிட்டலும் அவர்களுக்கு எந்த தாக்கமும் இருந்திருக்கப் போவதில்லை. இளைஞர்களின் இந்த போராட்டத்தை மதித்து, அவர்களுக்குத் தோள் கொடுக்க வந்தவர்களை இதைவிடக் கேவலப்படுத்த முடியாது.





Thursday, January 12, 2017

பைரவா – A Complete Package for Ajith Fans!!!


Share/Bookmark
சில வருடங்களுக்கு முன்னர் அஜித் மற்றும் விஜய்யின் படங்களை பார்க்கும் பொழுது, அஜித்தின் படங்கள் பெரும்பாலும் பார்வையாளர்களை எந்த வகையிலும் திருப்தி படுத்தாத திரைப்படங்களாக வரும். கதை, திரைக்கதை, காமெடி பாடல்கள் என எல்லாமே சுமார் ரகமாகவே அமையும்.நட்புக்காக படம் நடித்தேன், இளம் இயக்குனர்களை ஊக்கப்படுத்துவதற்காக படம் நடித்தேன் என அஜித் தரப்பில் ஏதேதோ காரணங்கள் இருக்கும். அதே நேரத்தில் வந்த விஜய் படங்களில் இவை அனைத்துமே நன்றாக அமைந்திருக்கும். வணிக ரீதியாகத் தோல்வியடைந்த படங்களில் கூட பாடல்களிலோ, சண்டைக்காட்சிகளிலோ அல்லது காமெடிக் காட்சிக்களிலோ எதோ ஒரு வகையில் பார்வையாளர்களை ஓரவிற்காவது திருப்திப் படுத்தும் படங்களாக விஜய் படங்கள் அமையும்.  

ஆனால் கடந்த ஓரிரு வருடங்களை பார்க்கும்போது அந்த சூழல் அப்படியே உல்டாவக நடந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. இப்போது அஜித் வருடத்திற்கு ஒரு படம் என்றாலும் கொஞ்சம் ரசிகர்களை மனதில் கொண்டு கதைகளையும் காட்சிகளையும் தெரிவு செய்து நடிக்கிறார்.இப்போது அஜித் படத்தில் பாடல்கள் கூட நன்றாக இருக்கிறது.  ஆனால் விஜய் இப்போது ரிவர்ஸில் போய்க் கொண்டிருக்கிறார்.

கடந்த சில வருடங்களில் வெளிவந்த விஜய் படங்களில் மிக மிக மோசமான, தரமில்லாத ஒரு படைப்பு என்றால் இந்த பைரவாதான். இது கொஞ்சம் மிகைப் படுத்தல் போலத்தோன்றினாலும் உண்மை இதுவே. பாடல்கள், காமெடி, ஆக்‌ஷன் எந்த வகையிலும் கொஞ்சம் கூட திருப்தியளிக்காத ஒரு படம். 

SPOILER ALERT : மேலும் படிச்சா படம் பாக்கலாம்னு இருந்தவங்க மூடு வேண ஸ்பாயில் ஆக வாய்ப்பு இருக்கு. மத்தபடி படம் பாக்குறப்போ இந்த விமர்சனத்தால எந்த பாதிப்பும் இல்லை 

மைம் கோபிக்கிட்ட பேங்கு மேனேஜரு Y.G.மகேந்திரன் 60 லட்ச ரூவா லோன் குடுத்துட்டு, திருப்பி வாங்க முடியாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காரு. கொஞ்ச நாள் கழிச்சி மைம் கோபி பணம் தர்றேன்னு சொன்னதும் லோன் document எல்லாம் எடுத்துக்கிட்டு மைம் கோபி இடத்துக்கு போறாரு. அவரு ஒரு பையில பணத்த காமிச்சதும், உடனே ஒய்.ஜி கையில வச்சிருந்த லோன் பத்தரத்துலயெல்லாம்ம் “loan closed” ன்னு சீல் போட்டு ஸ்பாட்டுலயே குடுக்குறாரு.அத வாங்கி வச்சிக்கிட்டு மைம் கோபி பணம் குடுக்காம ஏமாத்த,. அந்த ரவுடிங்ககிட்டருந்து பணத்த வசூல் பன்ற வசூல் மன்னன் நம்ம பைரவா வர்றாப்ள.


நியாயமா பாத்தா “உனக்கு யாரு நாயே பேங்க் மேனேஜர் வேலை குடுத்தது”ன்னு YG மகேந்திரனத்தான் நாலு சாத்து சாத்தனும்.லோன் டாக்குமெண்ட்ட எடுத்துக்கிட்டு, அதுவும் லோன் வாங்குனவன் இடத்துக்கே போயி, முக்கு கடையில ரெடி பன்ன ஒரு ரப்பர் ஸ்டாம்புல சீல் வச்சா loan closed ஆம். எந்த காலத்துல இருக்காய்ங்கன்னே தெரியல. லோன் வாங்கி அதுக்கு காச கட்டி க்ளோஸ் பன்னவனுக்குதான் தெரியும் அதுல எத்தனை சிக்கல், எத்தனை டென்ஷன், எத்தனை கையெழுத்து, எத்தனை No dueன்னு. 

கலெக்‌ஷன் ஏஜெண்டு வந்துட்டாப்ள. அவரு பாடிக்கும் கெட்டப்புக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத Royan Enfield. அண்ணாவ அப்டிப் பாத்தவுடனேயே பாதிபேரு “பைரவா... நாங்க அப்டியே எந்திரிச்சி போயிறவா?”ங்குற ரேஞ்சில ரியாக்‌ஷன் விட ஆரம்பிச்சிட்டாங்க. அஜித்து ஆளு பல்க்கா இருக்காரு. புல்லட்டுல உக்காந்தா பாக்க நல்லாருக்கும். ஸ்லிம்மா இருக்க விஜய்க்கு இதெல்லாம் தேவையா?ராஜா ராணி சத்யராஜ் சொல்றமாதிரி அடுத்தவன் ஓட்டுறாங்குறாதுக்காக நாமளும் அதயே ஓட்டனும்னு இல்லை. மூடிக்கிட்டு நமக்கு செட் ஆகுற வண்டிய வாங்கி ஓட்டலாம். ஆளு வந்துட்டாப்ள. ஆனா எதோ ஒண்ணு குறையிதேன்னு பாத்தா விஜய் வந்து ரெண்டு நிமிஷம் கழிச்சி அவரோட விக்கு பின்னால வந்துக்கிட்டு இருக்கு. அதுவும் ஸ்லோமோஷன் காட்சிகள்னா அஞ்சி நிமிஷம் கழிச்சிதான் வருது. 

வழக்கமா சவ சவன்னு போயிட்டு இருக்க வசனக் காட்சிகளுக்கு நடுவுல ஒரு fight வந்துச்சின்னா பாக்குறவங்களுக்கு ஒரு உற்சாகம் வரும். ஆனா ஒரு ஃபைட்டயே சீரியல் மாதிரி சவசவன்னு எடுத்துருக்கத நா முதல் தடவையா இப்பத்தான் பாக்குறேன். எப்படா அந்த கிரிக்கெட் ஃபைட்டு முடியும்னு ஆயிருச்சி.

இண்ட்ரோ சாங்கெல்லம் பாடி முடிச்சி கொஞ்ச நேரம் கழிச்சி வருது கீர்த்தி சுரேஷ். தொடரில வந்த மாதிரி கண்ட்ராவி ரியாக்‌ஷன்லாம் குடுக்காம இருக்கதால ஆளு சூப்பரா இருக்கு. திருநெல்வேலிலருந்து சென்னைக்கு கல்யாணத்துக்கு வந்த கீர்த்தி சுரேஷ விஜய் கரெக்ட் பன்ன முயற்சி பன்ன, இடையில ரவுடிங்க சில பேரு புகுந்து ஆட்டையக் கலைக்கிறாங்க.

விஜய்க்கு எதுவும் புரியாம, “நீ யாரு.. உனக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம்?”ன்னு கேக்குறாரு. அந்தப் புள்ள சொல்லமாட்டேன்னு சொல்லுது. அப்பவே விஜய் விட்டுருக்கலாம். அதெல்லாம் முடியாது நீ சொல்லித்தான் ஆகனும்னு விஜய் அடம் புடிக்க, “காலைல ஒரு ஆறு மணி இருக்கும்…. கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சி”ன்னு கீர்த்தி சுரேஷ் ஆரம்பிக்க, ப்ளாஷ்பேக் ஆரம்பம். அரை மணி நேரமா அந்தப் புள்ளையும் ”அந்த மரம் இல்ல.. அந்த மரம்னு” தெய்வத்திருமகள் விக்ரம் மாதிரி அதே ப்ளாஷ் பேக்க சொல்லிக்கிட்டு இருக்க நமக்கு “இஹ்ஹ்ஹ்ஹ்…அப்ப சொன்ன அதே மரமா ”ன்னு வெறுத்துருது. ஏன்யா ஃப்ளாஷ்பேக்குக்கு ஒரு வரைமுறை வேணாமா.. எவ்வளவு நேரம்? தியேட்டர்ல எல்லாரும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா பசுபதி மாதிரி “யப்ப்பா.. போதும்டா டேய்”ன்னு ஆயிட்டானுங்க. ஒரு வழியா முக்கா மணி நேரம் ஓடுன ஃப்ளாஷ்பேக் முடிஞ்சதும் படக்குன்னு இண்டர்வல் விட்டுட்டாய்ங்க. டேய் என்னடா 1st half ல பத்தே நிமிஷம் மட்டும் விஜய்ய காமிச்சிட்டு இண்டர்வல் போட்டுட்டீங்க?

செகண்ட் “ஆப்பு”ல கீர்த்தி சுரேஷோட பகைய தன்னோட பகையா நினைச்சி திருநெல்வேலிக்கு போயி வில்லனோட சவால்லாம் விட்டு, நிறைய காமெடிகள்லாம் பன்னி வில்லன ஜெயிக்கிறாரு. திருப்பாச்சில கிராமத்துல இருக்க விஜய் இண்டர்வலுக்கப்புறம் சென்னைக்கு வந்து வில்லன் கூட சண்டை போடுறாரு. பைரவாவுல சென்னைல இருக்க விஜய் இண்டர்வலுக்கப்புறம் கிராமத்துக்கு போயி வில்லன்கூட சண்டை போடுறாரு. யார்ரா அது விஜய் ஒரே மாதிரி கதையில நடிக்கிறாருனு சொன்னது? பாத்தியல்ல change ah. 

சதீஷ் மற்றும் தம்பி ராமைய்யா இருக்கிறார்கள். ரெண்டு பேருக்கும் சேத்தே ரெண்டு இடத்துல சிரிச்ச ஞாபகம். மருந்துக்கும் காமெடி இல்லை. தம்பி ராமைய்யா மூக்குல நைட்ரஸ் ஆக்ஸைட (N2O) வச்சி அவருக்கு சிரிப்பு காமிக்கிறாங்க. அதே நைட்ரஸ் ஆக்ஸைட தியேட்டர் ஏசிலயும் கொஞ்சம் கலந்து விட்டுருந்தா நாங்களும் கொஞ்ச நேரம் சிரிச்சிக்கிட்டு இருந்துருப்போம். 

சந்தோஷ் நாராயணன் இருக்க ஒரே பாட்ட அனைத்து ஃபைட்டுக்கும் போட்டு விட்டுருக்காப்ள. ”வேற ஸ்டாக் இல்லைய்யா.. வச்சிக்கிட்டா இல்லைங்குறாரு”. கமர்ஷியல் மசாலா படங்களுக்கு இசையமைக்க சந்தோஷ் நாராயணன் பொருத்தமான ஆள் இல்லை. இன்னும் பயிற்சி வேண்டும். குறிப்பா விஜய் படங்களுக்கு மியூசிக் போட. 

கத்தி படத்துல அந்த டைம்ல இருந்த issues ah படத்துல பேசியிருந்தாரு விஜய். அந்தப் படம் வசூல் ரீதியா வெற்றி பெற்றதனாலயா என்னனு தெரில இதுலயும் இப்ப மெடிகல் ஸ்டூடண்ஸுக்காக போராடுராப்ள. ஒரே கருத்து தான்.  கத்தி படத்துல விஜய்யும் ஒரு விவசாயியாக, அந்த சூழல்லயே வாழ்க்கை நடத்தும் கேரக்ட்ராக இருந்ததால் அவர் உருக்கமா பேசும்போது வசனங்கள்லயும், காட்சிகள்லயும் ஒரு உயிரோட்டம் இருக்கும். ஆனா இங்க அண்ணனுக்கே கீர்த்தி சுரேஷ்தான் ஃப்ளாஷ்பேக் சொல்லுது. அதக் கேட்டு ஃபீல் ஆகி இவர் கோர்ட்டுல பீல் பன்னி பேசுறதுக்கெல்லாம் எந்த ரியாக்‌ஷனுமே வரமாட்டேங்குது. ”அம்மாவை பார்த்தவர்களைப் பார்த்தேன்” காமெடிதான் ஞாபகத்துக்கு வந்துச்சி. 

விஜய் ஏதேதோ மாடுலேஷன்லாம் ட்ரை பண்ணி என்னவோ மாதிரி பேசுறாரு. காஸ்ட்யூம் இருக்கதுலயே ரொம்ப ஒர்ஸ்ட்டு. அதுவும் பட்டையக் கிளப்பு பாட்டு… அந்த கோட்டுக்கும், விக்குக்கும், ரிக்‌ஷாவுக்கும்… செம காம்பினேஷன். ஒரு சீன்ல “நாங்க பைரவ மூர்த்தி சாமிய கும்புடுறவங்க. உங்கள பாக்க அந்த பைரவ மூர்த்தி சாமியே நேர்ல வந்த மாதிரி இருக்குன்னு ஒரு வசனம் வருது. இது பைரவ மூர்த்தி சாமிக்கு தெரிஞ்சிதுன்னா “இஹ்ஹ்... நம்ம மூஞ்சி இப்புடியா இருக்கு... உடனே அடுப்புல வச்சி கருக்கிறனும்”ன்னு நினைச்சிருப்பாரு. 

பரதன் அவருக்கு கிடைச்ச ரெண்டாவது வாய்ப்பையும் சிறப்பா நழுவ விட்டுருக்காப்ள. Script எழுதுறது ஒரு பக்கம் இருந்தாலும் எழுதுற ஸ்க்ரிப்ட இண்ட்ரஸ்டிங்கா படமாக்க ஒரு தனித் திறமை வேணும். அது பரதன்கிட்ட ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கு. இவரு எடுத்த முழுப் படத்தையும் ஹிரிகிட்ட குடுத்தா அதுல உள்ள மேட்டர் எல்லாத்தையும் ஒரு 20 நிமிஷத்துல காமிச்சிருவாரு. ஆனா இவரு ராதிகாவோட போட்டி போட்டு வாணி ராணி சீரியல் மாதிரி எடுத்து வச்சிருக்காரு.

மொத்தத்தில் இது விஜய் ரசிகர்களுக்கான படமே அல்ல. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான திரைப்படம்.

படத்துக்கு ஒரு தீவிர விஜய் ரசிகரோட போயிருந்தேன். படம் முடிஞ்சி வெளில வரும்போது அடுத்த ஷோ பாக்க ஆவலா இருந்த ஒருத்தன் அவர்கிட்ட படம் எப்புடி இருக்குன்னான். அதுக்கு அவரு “படம் சூப்பர்”ன்னுட்டு வந்தாரு.

அந்தப் பக்கம் ஓரமா வந்தப்புறம் “என்னங்க… மனசாட்சியே இல்லாம இப்டி சொல்றீங்க? உண்மைய சொல்லுங்க படம் நல்லாவா இருந்துச்சி?” ன்னேன். 

“நல்லா இல்லைதான்… ஆனா கேக்குறவன் கிட்டல்லாம் நல்லாருக்குன்னுதான் சொல்லுவேன்” ன்னாரு.

“ஒரு வேளை நீங்க நல்லா இருக்குன்னு சொன்னவன் படம் பாத்துட்டு வந்து உங்க சட்டையப் புடிச்சான்னா?”

“அதுக்கும் ஒரு வழி இருக்கு… அப்புடி அவன் கேக்கும்போது எனக்கு படம் புடிச்சிருக்கு. உனக்கு புடிக்கலன்னா நா என்ன பன்றது. உன் டேஸ்ட்டு இவ்வளவு கேவலமா இருக்கும்னு நா நினைக்கவே இல்லை அப்டின்னு அவனப் பாத்து ஒரு கேவலாமான லுக்க விட்டோம்னா அவனும் சைலண்ட் ஆயிருவான். ஒருவேளை நம்ம டேஸ்ட்தான் சரியில்லையோன்னு அவனுக்கே சந்தேகம் வந்துரும். அதுமட்டும் இல்லாம அவனும் யாருகிட்டயும் படம் நல்லா இல்லைன்னு சொல்லமாட்டான்”ன்னு ஒரு பெரிய லாஜிக் சொல்லி முடிச்சார்.

“என்னஜி இதெல்லாம்” ன்னேன்

“Professional Ethics” ன்னு சொல்லிட்டு புன்னகையுடன் விடைபெற்றார் அந்த விஜய் ரசிகர்.. 



Wednesday, January 4, 2017

THE BODY, THE BOY AND THE BEST OFFER


Share/Bookmark
மாயக்கான்னு ஒரு லேடி.. காணாம போகுது அவங்க பாடி. இவளோதான் படத்தோட ஒன் லைன். அட காணாமப் போனா என்ன வேற வாங்கிக்க வேண்டியதுதானன்னு நமக்கு தோணும். ஆனா அந்த body eh மாயக்காதான். என்னடா மாயக்காங்குறீங்க.. பாடிங்குறீங்க.. ஒரு வேளை இது ஒரு மலையாள மாயக்கா மாதிரி அவ்வ் அவ்வ் படமா இருக்குமோன்னு எதும் குழம்ப வேண்டாம். படம் பக்கா சஸ்பென்ஸ் த்ரில்ல்லர்.

முதல் காட்சியிலேயே மார்ச்சுவரியில் வேலை செய்யிற ஒருத்தர் எதையோ பாத்து பீதியில பயந்து ஓடுறாரு. ”தெய்வமே புயல் வேகத்துல போயிட்டு இருக்கேன்…குறுக்க மணல் லாரி எதும் வந்துடாம பாத்துக்கன்னு வேண்டிக்கிட்டே காட்டுக்குள்ளயெல்லாம் புகுந்து ஓடுறாவர, ரோட்டுல போற ஒரு கார் ஒண்ணு அடிச்சி தூக்கிருது. உசேன் போல்ட் மாதிரி ஓடுனியேடா இப்டி வாயப் பொளக்குறதுக்கு தானா. அள்ளிப்போட்டு ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போனா, கோமாவுக்கு பொய்ட்டருன்னு சொல்லிடுறானுங்க. மேட்டர கேள்விப்பட்டு போலீஸ் அந்த மார்ச்சுவரிக்கு வந்து பாக்குறாங்க. அப்பதான் மார்ச்சுவரில வச்சிருந்த மாயக்காவோட பாடி மிஸ்ஸான விஷயம் தெரியிது. 

”ஒரு பாடி ஃப்ரஷ்ஷா இருக்ககூடாதே உடனே தூக்கிருவாய்ங்களே”ன்னு போலீஸ் கடுப்பாக்கி விசாரிக்க ஆரம்பிக்கிறானுங்க. மொத வேளையா மாயக்காவோட புருசன போலீஸ் ஸ்டேஷன்ல கூப்டு வச்சி பிதுக்கு பிதுக்குன்னு பிதுக்குறானுங்க. மாயக்கா பாடிய யாரு எடுத்ததுங்குற மேட்டரத் தவற மத்த சிலப் பல மேட்டர்கள்லாம் வெளில வருது. கடைசில ஒரு செம்ம ட்விஸ்ட் வச்சி  முடிச்சிருக்காங்க. 

படத்தின் பெரும்பகுதி மழை பெய்துகொண்டிருக்கும் இரவுல நடக்குது. அதுவே செமையா இருக்கு. ஸ்பானிஷ் படம் என்பதால் தவிர்த்து விட வேண்டாம். சஸ்பென்ஸ் த்ரில்லர் விரும்பிகள் கண்டிப்பா பாக்க வேண்டிய படம். 

(அந்த பாடி பேரு Mayka... கொஞ்சம் கிளுகிளுப்பா இருக்கட்டுமேன்னு மாயக்கான்னு மாத்திக்கிட்டேன்)

THE BOY



தவிர்க்க முடியாத சூழல்ல, ஒருத்தன்கிட்டருந்து எஸ்கேப் ஆகுறதுக்காக ஒரு பொண்ணு வேலை தேடுது. அப்ப லண்டன்ல இருக்க ஃபேமிலி அவங்க குழந்தைய பாத்துக்க ஆயா வேலைக்கு ஆள் வேணும்னு விளம்பரம் கொடுக்க, தூரமா இருந்தாலும் பரவால்லைன்னு இந்தப் புள்ள வேலைக்கு வந்துருது.

வந்து பாத்தா அந்த வீட்டுல நிறைய வித்யாசமான விஷயங்கள் நடக்குது. வழக்கம்போல, பத்து பதினைஞ்சி ஏக்கர் நிலத்த வளைச்சிப் போட்டு, அதுக்கு ஒரு கேட்டப் போட்டு நடுவுல கட்டப்பட்டு,  ஆங்கில த்ரில்லர் படங்களுக்கு வாடகைக்கு விடுறதுக்குன்னே ரெடியா வச்சிருக்க மாதிரி ஒரு வீடு. சுத்து வட்டாரத்துல ஒரு பய இருக்க மாட்டான்.

அந்தப் புள்ளை வேலைக்கு வந்துருது. வீட்டுல இருக்க அந்த தம்பதிகள் ரொம்ப வயசானவங்க. “இவங்களுக்கு குழந்தை இருந்தா அவன ஆயா பாத்துக்க முடியாதே.. அவந்தான் ஆயாவ பாத்துக்கனும். அப்புறம் எதுக்கு வேலைக்கு கூப்டுருக்காங்க?”ன்னு டவுட்டுல, சரி பையன காமிங்கன்னு சொல்லுது. அந்த வயசான தம்பதி ஒரு ரூமுக்குள்ள் இந்தப் பொண்ணை அழைச்சிட்டு போய் அது பாத்துக்க வேண்டிய பையன காமிக்கிராங்க.  பாத்தா நல்லா சீவி, ட்ரெஸ்ஸெல்லாம் மாட்டிவிடப்பட்ட ஒரு பொம்மை உக்காந்துருக்கு. இதப்பாத்த இந்தப் புள்ள கெக்க புக்கன்னு சிரிக்க ஆரம்பிக்க, “அவ்ளோ பெரிய காமெடி இல்ல இது” ங்குற மாதிரி அந்த தம்பதிகள் முறைக்கிறாங்க.

அந்த பொம்மைய, அதாவது அவங்க பையனா நினைச்சிட்டு இருக்க பொம்மைய எத்தனை மணிக்கு எழுப்பனும், எப்ப குழுப்பாட்டனும் எப்ப சாப்பாடு  குடுக்கனும்னுலாம் டைம் டேபிள் போட்டு குடுக்குறாங்க. இவளுக்கு அதெல்லாம் காமெடியா இருக்கு. ஒரு கட்டத்துல அந்த தம்பதிகள் வெளியூர் போறோம் ரெண்டு மூணு நாளுக்கு பையன பாத்துக்கன்னு சொல்லிட்டு வீட்ட விட்டு எஸ்கேப் ஆயிடுறாங்க. இப்ப பொம்மையும் நம்ம அம்மையும் தனியா வீட்டுக்குள்ள..

பொம்மைய ஒரு இடத்துல உக்கார வச்சிட்டுப் போய் திரும்ப வந்து பாத்தா வேற இடத்துல இருக்கு. தீடீர்னு பொம்மை கண்ணுலருந்து கண்ணீர் வருது. இப்படி பல பீதியைக் கிளப்பும் சம்வங்கள் நடந்து, கடைசில அது பொம்மையா இல்லை உயிர் இருக்கா? அப்டிங்குறதயெல்லாம் கொஞ்சம் த்ரில்லிங்கா சொல்லியிருக்க படம் தான் THE BOY. க்ளைமாக்ஸ் காட்சிகளைத் தவிற மற்றபடி இண்ட்ரஸ்டிங்காவே இருந்துச்சி. டைம் இருந்தா பாக்கலாம்.

THE BEST OFFER



யூரோப்ல அரிய வகை ஓவியங்களையும், பொருட்களையும் ஏலம் விடுற ஒரு கம்பெனில மேனேஜரா இருக்கவர் Virgil Oldman.  சின்ன வயசுல young man ah தான் இருந்தாரு. இப்ப வயசாயிட்டதால Oldman ன்னு பேர மாத்திக்கிட்டாப்ள. அட இப்ப அதுவா ப்ரச்சனை? எங்கயாவது எதாவது பழங்கால பொருள் கிடைச்சா அத ஏலம் விட்டுருவாரு. இவருக்கு புடிச்ச ஓவியங்களயெல்லாம் இவரே ஒரு அள்ளக்கைய வச்சி அவன ஏலம் கேக்கச் சொல்லி, அவனுக்கு டீல முடிச்சி விட்டு பின்னால வந்து அவனுக்கு 50 ரூவா கமிஷன குடுத்துட்டு ஓவியத்த வாங்கிட்டு போயிருவாரு. இப்டி செஞ்சே ஒரு ரூம் ஃபுல்லா அரிய ஓவியங்கள சேகரிச்சி வச்சிருக்காப்ள.

இப்படி போயிட்டு இருக்கும்போது, ஒரு பொண்ணுகிட்டருந்து நம்ம ஓல்டு மேனுக்கு கால் வருந்து. அதாவது அந்தப் பொண்ணோட பெற்றோர் இறந்துட்டாதாகவும், அவங்க பேலஸ்ல உள்ள பழைய காலத்து அரிய வகை ஓவியங்களையெல்லாம் ஏலம் விட்டுத் தரும்படியும் கேக்குது. ஓல்டு மேனும் அந்த பேலஸூக்கு போய் பாக்குறாரு. நிறைய அந்த காலத்து பொருட்கள். “நல்லா தொக்கா மாட்டிருக்குது”ன்னு பவர் ஸ்டார் மாதிரி வாய வச்சிக்கிட்டு அந்தப் பொண்ணை பாக்க முயற்சி பன்றாரு. ஆனா அந்தப் புள்ள நேர்ல பாக்காம ஃபோன்லயேதான் பேசுது.

போகப் போக அந்தப் பொண்ணுக்கு Agoraphobia ன்னு ஒரு வியாதி இருக்கது தெரியவருது. சிம்பிளா agoraphobia ன்னா என்னனு சொல்லனும்னா எதப் பாத்தாலும் பயம் மற்றும் நம்பிக்கையின்மை. “காலா வாடா உன்னைக் காலால் உதைப்பேன் என்றார் பாரதி.. ஆனால் காலனைக் காலால் உதைத்தால் எண்ட கால் அடிபடுமோ எண்ட பயமெனெக்கு” ன்னு எதப் பாத்தாலும் பயம்னு சொல்லுவாரே தெனாலி. அந்த மாதிரி. அதனால அந்தப் பொண்ணு யாரையும் நம்பாது. தனியா வெளில போகாது. யாரையும் நேர்ல சந்திகவும் சந்திக்காது. இப்படியே போயிகிட்டு இருக்க நம்ம ஓல்டு மேன் அந்த ஏலம் விடுற சாகுக்குல அந்தப் பேலஸுக்கு போக்கும் வரத்துமா இருக்காரு.


அந்தப் புள்ளை ஓல்டுமேன கொஞ்சம் கொஞ்சமா நம்ப ஆரம்பிச்சி அவர மட்டும் நம்புது. அவர மட்டும் நேர்ல பாத்து பேசுது. பேலஸூக்குள்ள மட்டும். இப்டியே போயிட்டு இருக்கயில “The Illusionist “ ல குடுக்குற மாதிரி ஒரு ட்விஸ்ட்ட குடுத்து படத்த முடிக்கிறாங்க. நேரமிருந்தா இதையும் கண்டிப்பா பாக்கலாம். 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...