Tuesday, August 21, 2012

துவாரமலை இரவுகள் - இறுதிப் பகுதி


Share/Bookmark
முதல் பகுதி

இரண்டாவது பகுதி

மூன்றாவது பகுதி

ஆறுமுகத்திற்கு ஒரு நிமிடம் அடிவயிற்றையே புரட்டிப்போட்டது அவன் கண்ட காட்சி. இதுவரை இவ்வளவு கோரமான ஒரு நிகழ்வை அவன் கண்டதில்லை... கால்கள் உடலை தாங்கிப்பிடிக்க மறுத்து  நடுக்க ஆரம்பிக்கவே, மெதுவாக ஒரு மரத்தை தாங்கிப் பிடித்துக்கொண்டு மெல்ல கீழே உட்கார்ந்தான். திருச்சாமி பலிகொடுக்கப்பட்டது ஒரு வகையில் அதிர்ச்சியை கொடுத்தாலும் தன் மகன் இல்லையே என்ற ஒரு சிறு ஆறுதல் மனதில் இருந்தது. என்ன செய்வது? விடிந்து இந்த விஷயம் ஊரில் எவருக்கேனும் தெரிந்தால் நம் நிலமை என்ன ஆவது? பஞ்சவர்ணமும் மகன்களும் எங்கே என்னும் பல கேள்விகள் மனதை குடைய ஆரம்பித்திருந்தன. திடீரென ஒரு யோசனை. பலனிருக்குமா என்று தெரியாவிட்டாலும், முயற்சி செய்து பார்க்கலாம் என முடிவு செய்தான். முகத்தில் வழிந்த வியர்வையை கையால் சுற்றி துடைத்துக்கொண்டு அரிக்கன்  விளக்கோடு எழுது நடக்க ஆரம்பித்தான்.

மலையம்மன் அருகில் சென்று மனதிற்குள்ளேயே தன் நிலமையை கொட்டித்தீர்த்து, காலைத்தொட்டு வணங்கி அங்கிருந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு நடக்கலானான். 10 நிமிடம் நடைப்பயணத்தில் அந்த வீடு வந்தது. குளிர் உடம்பின் வெப்பநிலையை கணிசமாக குறைத்துக் கொண்டிருக்க, வரிசையாக அமைந்திந்த 5 வீடுகளில் 3 வது வீட்டின் கதவைத் தட்டினான்.

"டொக்...டொக்...டொக்"

எந்த பதிலுமில்லை. சிறு இடைவெளிக்கப்புறம் மீண்டும் கதவைத் தட்ட உள்ளிருந்து ஒரு  ஆண்குரல்

"ஆருப்பா இந்த நேரத்துல"

"நா... நாந்தான் ஆறுமுகம்" என்று தொண்டை அடைத்த குரலில் கூற கதவு திறக்கப்பட்டது. உள்ளே சிறு சிமினி விளக்கை கையில் பிடித்துக்கொண்டு வைத்தியர் குழந்தை சாமி நின்றிருந்தார். ஆறுமுகத்தை கண்டதும் முகத்தில் சிறு பதட்டத்துடன்

"ஆறுமுகம்... என்னப்பா இந்த நேரத்துல... உடம்புக்கு எதாவது சரி இல்லையா.. ஏன் இப்புடி முகமெல்லாம் வேர்த்திருக்கு... உள்ள வா" என்றார்.


உள்ளே சென்று பேச வாயெடுத்த ஆறுமுகம், பேசமுடியாமல் தொண்டை அடைத்து அழ ஆரம்பிட்த்தான்..

"அய்யோ.... என்னப்பா ஆறுமுகம்.. என்னாச்சி.. வீட்ல கொழந்தை மனைவியெல்லாம் நல்லா இருக்காங்கல்ல.. ஏன்பா அழற.. விஷயத்த சொல்லு... "

"அவங்களுக்கெல்லாம் ஒண்ணும் இல்லையா" என்று ஆரம்பித்து இரண்டு நிமிடத்தில் கடந்த மூன்று நாட்களாக நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்.

கேட்டு முடித்தவுடன் வைத்தியரின் முகம் ஒரு பயமும் வியப்பும் கலந்த பார்வையில் ஆறுமுகத்தை பார்த்து "என்னப்பா... இந்த காலத்துல இப்புடியெல்லாம் நடக்குமா.. என்னோட காலத்துல கூட நா நரபலிங்கறதையே பாத்ததில்லை.. அதெல்லாம் எங்க அய்யன் காலத்துலயே முடிஞ்சி போச்சின்னு நெனைச்சிட்டு இருந்தேன்.... நீ சொல்றது என்னால நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியலப்பா.."

"அய்யா நீங்க கண்டிப்பா இத நம்பித்தான் ஆகனும்... அன்னிக்கு நீங்க ராத்திரி வீட்டுக்கு பின்னால எதோ வெளிச்சம் பாத்தேன்னு சொன்னீங்கல்ல... அதுகூட இத பண்ண யாரோதான். நா அன்னிக்கு வெளிய வந்து ஒரு நிமிஷம் கூட இல்ல... உடனே உள்ள பொய்ட்டேன்.. சரி அன்னிக்கே உங்ககிட்ட இத சொல்லி பெரிய விஷயம் ஆக்க வேணாம்னு விட்டுட்டேன்.... எனக்கு இப்ப நீங்க ஒரு உதவி செய்யனும்... அன்னிக்கு நீங்க மலையம்மன் கோயிலுக்கு வரும்போது வேறு யாரையாவது வழியில எதேச்சையா பாத்தீங்களா... கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க... "

சிறிது நேரம் தலையை குணிந்து தரையை பார்த்து யோசித்த வைத்தியர்.... "ஆமாப்பா... நம்ம கோவிந்தன வழியில பாத்தேன்... "

"எந்த கோவிந்தன் அய்யா?"

"உன் எஸ்டேட் ஓனர் திருச்சாமியோட வேலைக்காரன் கோவிந்தன்ப்பா...என்கிட்ட கூட எங்க இந்த நேரத்துல போறீங்கன்னு கேட்டான்... நா பச்சலை பறிக்கபோறேன்னு சொல்லிட்டு வந்தேன்"

உடனே புருவத்தை சுருக்கிய ஆறுமுகம் "நீங்க அவன இந்த நேரத்துல எங்க போறன்னு கேக்கலையா?"

"அவன எப்புடிப்பா கேக்குறது... திருச்சாமிக்கிட்ட வேலைபாக்குறது மட்டும் இல்லாம இங்க நெறைய எஸ்டேட்டுக்கு காவ காக்குறதே அவன் தான்.. ராத்திரி அப்பப்ப எழுந்து ஒரு சுத்து சுத்திட்டு வருவான் நானே நிறைய தடவ அவன நடுராத்திரில பாத்துருக்கேன்.. அதான் எதும் கேக்கல..."

சிறிது மனதிற்குள் தைரியம் வந்தவனாய் "எனக்கென்னவோ அவன் மேல தான்யா சந்தேகமா இருக்கு கோவிந்தன் இல்லாம திருச்சாமி வெளில எங்கயுமே போகமாட்டார். அவர் ஒரு நாள் கூட எஸ்டேட்டுக்கு  தனியா வந்ததில்லை.. நா உடனே அவன் வீட்டுக்கு போறேன்" என்று ஆறுமுகம் புறப்பட

"இருப்பா... தனியா போகாதே... எனக்கென்னவோ ப்ரச்சனை பெருசா இருக்கமாதிரி இருக்கு... வா நானும் உன் கூட வர்றேன்" என்ற வைத்தியர் வீட்டுக்கதவை இழுத்து வெளியில் கயிறால் கட்டிவிட்டு ஆறுமுகத்துடன் கோவிந்தன் வீட்டை நோக்கி புறப்பட்டார்.

கோவிந்தனின் வீடு துவாரமலை கிராமத்தின் எல்லையில் அமைந்த தனி வீடு... கோவிந்தன் அதிகமாக ஊர்மக்களுடன் ஒட்டுவதில்லை... இரண்டு வருடங்களுக்கு முன் கோவிந்தன் மனைவி குளிர்ஜுரத்தால் பாதிக்கப்பட்டு சரியான கவனிப்பில்லாததால் இறந்துபோயிருந்தால். தற்போது கோவிந்தன் மட்டுமே அந்த வீட்டில் வசித்துக்கொண்டிருந்தான். கிட்டத்தட்ட 15 நிமிட நடைபயண்த்திற்கு பின் கோவிந்தனின் வீடு கண்ணுக்கு புலப்பட்டது. குளிர்காற்றை தாங்குவதற்காக வைத்தியர் ஒரு பழைய கிழிந்த சால்வையை போர்த்தியிருக்க, ஆறுமுகத்திற்கு இன்னும் வியர்வை நிற்காமல் ஊற்றிக்கொண்டு இருந்தது.

நள்ளிரவு 2 மணிக்கு கூட கோவிந்தனின் வீட்டில் தெரிந்த விளக்கு வெளிச்சம், இருவருக்கும் வியப்பை அளித்தது.

"ஆறுமுகம்... வீட்டுல இன்னும் கோவிந்தன் முழிச்சிட்டு தான் இருக்கான் போல... நாம கையில  வெளிச்சத்தோட போனா கண்டுபுடிச்சிருவான்... முதல்ல அந்த அரிக்கனை அணைச்சிடு" என்று வைத்தியர் சொன்னவுடன் ஆறிக்கனை ஒளியை மெல்ல குறைத்து அணைதான் ஆறுமுகம்.  இருப்பினும் பாதிமேகத்தால் சூழப்பட்ட பெளர்ணமி நிலவு சிறிது வெளிச்சத்தை கொடுக்க அதன் உதவியில் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து நடந்து வீட்டின் வாயிலுக்கு செல்லும் பாதையை விட்டு விலகி சற்று ஒதுங்கி ஒதுங்கி கோவிந்தன் வீட்டின் வலது பக்கம் சென்றிருந்தனர். கோவிந்தன் வசிப்பதும் மரத்தாலான சிறு குடி என்பதால் மரச் சட்டங்களுக்கிடையே சிறிய இடைவெளிகள் வழியே உள்ளிருந்து வரும் விளக்கொளி கசிந்து கொண்டிருந்தது. சத்தமில்லாமல் அந்த சுவற்றருகே அமர்ந்திருந்த ஆறுமுகமும் வைத்தியரும் மெல்ல தலையை நிமிர்த்தி அந்த இடைவெளிகள் வழியே வீட்டின் உள்ளே பார்வையை ஊடுறுவ விட, இருவரின் முகமும் ஒரு வித்யாசத்திற்குட்பட்டது.

வீட்டின் நடுவில் ஒரு சிறிய செங்கற்கல்லால் சூழப்பட்ட சதுர பகுதியில் சிறு நெருப்பு எரிந்திருக்க அதன் ஒரு புறம் சட்டையில்லாத ஒருவர் எதோ வாயால் முனங்கிகொண்டிருக்க  மறுபுறம்  கழுத்தில் மாலைகளுடன் சந்தனமும் குங்குமமும் நிறைந்த நெற்றியுடன்   அக்னியை வணங்கியபடி ஒரு வயதான ஆணும் அவனருகில் விட்டத்தை வெறித்து பார்த்தபடி பருமனான தோற்றத்துடன் மாலைகள் அணிவிக்கப்பட்ட ஒரு பெண்ணும் உட்கார்ந்து இருந்தனர். அவரின் பின்னால் கோவிந்தன் நின்று கொண்டிருந்தான். உட்கார்ந்து இருப்பது யார் என சரியாக தெரியாத நிலையில் வேறு சில மரச்சட்டங்களின் இடைவெளியில் மாறி மாறி பார்க்க அவர்களின் முகமும் காணக்கிடைத்ததும் வைத்தியரும், ஆறுமுகமும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

மாலைகளுடன் உட்கார்ந்திருந்தது ஆறுமுகம் வசிக்கும் எஸ்டேட்டை முன்பு வைத்திருந்த  தட்சிணாமூர்த்தியும் அவரது மனைவியும்.

உள்ளே அவர்கள் எதோ பேச ஆரம்பிக்க, ஆறுமுகமும் வைத்தியரும் காதுகளை கூர்மையாக்கி கேட்க ஆரம்பித்தனர்.

"சாமி.. நீங்க சொன்ன மாதிரியே ஒரு பறவை, ஒரு கால்நடை, நீங்க சொன்ன அதே நட்சத்திரத்துல பிறந்த ஒரு நரன் எல்லாரையும், நீங்க சொன்ன அதே பெளர்ணமில, நீங்க சொன்ன அதே இடத்துல பலி கொடுத்தாச்சி... இப்பவாவது ஆண்டவன் கண்திறந்து எனக்கு மனைவிய பழையமாதிரி எனக்கு திரும்ப தருவாரா.. இதோட முழுசா நாலு  வருஷம் ஆச்சி இவளுக்கு ப்ரம்மைபிடிச்சது மாதிரி ஆகி.. குழந்தையில்லைங்குற குறையே தெரியாதமாதிரி என்னை வச்சிருந்த அவள இப்புடிபாக்குறதுக்கு எனக்கு சக்தி இல்லை" என்றார் 50 வயதான தட்சிணாமூர்த்தி

"இதில் ஆண்டவன் மனதுவைக்க எதுவுமே இல்லை... நாம் கொடுத்த பலிகள் அனைத்தும் உன்னுடைய முன்னோர்களின் ஆன்மாக்களை சாந்தியடைய செய்வதே... நமக்கு நடைபெறும் அனைத்து செயல்களும் அவர்களின் ஆசியுடனேயே நடைபெறுகிறது. நமக்கு காவல்தெய்வங்களும் அவர்களே... நமக்கு தீங்கு விளைவிக்கு கர்ம சாத்தான்களும் அவர்களே. இதுபோன பலிகள் மூலம் அவர்களின் ஆன்மாக்களை திருப்திப்படுத்துவதால், நாம எந்த நோக்கத்தை மனசுல வச்சி பலிகொடுக்குறோமோ அந்த செயல்கள் ஈடேற வழிபிறக்கும் என்பது சித்தர்களார் எழுதிவைக்கப்பட்ட உண்மை. கூடிய
விரைவில் நீ விரும்பியபடி உன் மனைவி பழையபடி மாறுவாள்"

"இதுகண்டிப்பா நடக்கனும்... அவளுக்காக தான் இத்தனை கஷ்டமும்... போனவருஷம் நீங்க என்கிட்ட இந்த பரிகாரத்த சொன்னதும், நீங்க சொன்ன நட்சத்திரத்துல உள்ள ஒருத்தனை தேடித் திரிஞ்சோம் அப்பதான் திருச்சாமிக்கு அந்த நட்சத்திரம்னு தெரிஞ்சிது. உடனே அவன என்னோட எஸ்டேட்ல வச்சி எதாவது செஞ்சா எங்க மேல சந்தேகம் வந்துரும்னு தான் நானும் கோவிந்தனும் திட்டம் போட்டு எனக்கு பணக்கஷ்டம் இருக்கமாதிரி காண்பிச்சி அவன்கிட்ட குறைஞ்ச விலையில அந்த எஸ்டேட்ட வாங்கவச்சிட்டு நா தலை மறைவாயிட்டேன். சிலபேரு நா இறந்துட்டேன்னு கூட நம்பிட்டாங்க. எல்லாம் நல்ல அமைஞ்சி வந்தவுடன் இன்னிக்கு ராத்திரி எஸ்டேட்ல பெரிய ப்ரச்சனைன்னு சொன்னதும் உடனே கெளம்பி வந்துட்டான் திருச்சாமி... நெனைச்சமாதிரியே அவன் கதையையும்
முடிச்சாச்சி... சாமி எனக்கு ஒண்ணுதான் புரியல.. பலிகள ஏன் என்னோட எஸ்டேட்ல குடுக்க சொன்னீங்க? அதனாலதான் இவ்வளவு யாருக்கும் தெரியாத ஒரு எடத்துல குடுத்துருந்தா இவ்வளவு  கஷ்டம் வந்திருக்காது.

"ம்ம்ம்ம்...ஒரு உயிர் பிரிஞ்ச அப்புறம் அந்த ஆத்மா எங்க சுத்திகிட்டு இருக்கும் தெரியுமா?"

"தெரியாது சாமி"

"உயிர் பிரிஞ்ச இடத்துல உடம்புலருந்து பிரியிற ஆத்மா அந்த உயிரற்ற உடலயே சுத்தி வந்துகிட்டு இருக்கும். சரீரத்த நாம இடுகாட்டுக்கு எடுத்துட்டு போகிறவரைக்கும் அதை தொடர்ந்தெ வர்ற ஆத்மா இடுகாட்டில் உடல் அழிக்கப்பட்டதும் அதன் பிறகு எங்கே செலவது என்று தெரியாமல் அந்த இடுகாட்டிலேயே தனது சரீரத்தை தேடி அலைந்து கொண்டிருக்கும்.... நீ வைத்திருந்த அந்த  எஸ்டேட் தான் நம் முந்தைய சந்ததியினரின் இடுகாடு என்பதை மறந்துவிடாதே.. இப்ப  தெரிந்திருக்கும் நான் ஏன் அங்கு பலியிடச் சொன்னேன்னு" என்று சொல்லிவிட்டு திரும்பிய சடைய்ப்ப சாமியின் முகத்தை கண்டதும் ஆறுமுகத்திற்கு அடுத்த அதிர்ச்சி...

"ரொம்ப நன்றிசாமி... எதோ என் மனைவி எனக்கு திரும்ப கெடைச்சிட்டா போதும்..." என்று சொல்லிவிட்டு கோந்தனை நோக்கி "கோவிந்தா... திருச்சாமி மலையிலருந்து தவறி விழுந்து இறந்துட்டதா ஊர நம்ப வச்சிரு..."

"அய்யா..." என கோவிந்தன் இழுக்க

"என்னயே செத்தவன்னு ஊர நம்பவச்ச உனக்கு இது ஒரு பெரியவிஷயமில்லை... திருச்சாமிக்கும்  வேற யாரும் இல்லை... ஊரப்பொறுத்த அளவு இனிமே நீதான் அந்த எஸ்டேட்டுக்கு முதலாளி.."

லேசான புன்னகையுடன் "சரிங்கையா.. ஆனா அங்க திருச்சாமி ஆறுமுகம்ங்கறவன் குடும்பத்த குடி வச்சிருக்காரே.. அவன என்ன பண்றது..."

"இப்ப நடந்த விஷயம் எதாவது அவனுக்கு தெரியுமா?"

"நம்ம மூணுபேர தவற ஒரு ஈ காக்காவுக்கு கூட தெரியாது மொதலாளி... காதும் காதும் வச்சமாதிரி செஞ்சி முடிச்சிருக்கேன்... ஆனா முந்தாநேத்து விடியகாலை 4.30 க்கு அந்த கோழித்தலைய  எடுத்து அப்புறப்படுத்த போகும் போது மட்டும் அத காணல... எதாவது பூனை சாடிருக்கும்... நேத்து அந்த ஆட்டை தடம் தெரியாம அப்புறப்படுத்திட்டேன்... இன்னும் கொஞ்ச நேரத்துல திருச்சாமியையும் இருந்த எடம் தெரியாம பண்ணிடுறேன்..."

"அப்புறம் என்னடா... ஆறுமுகம் புள்ளை குட்டிக்காரன்.... நிம்மதியா இருந்துட்டு போகட்டும்.... அவன எதும் தொந்தரவு பண்ணாத " என்ற தட்சிணாமுர்த்தியிடம்

"சரிங்கையா...."  என தலையாட்ட ஆறுமுகமும் வைத்தியரும் அந்த இடத்தை விட்டு மெல்ல நகர ஆரம்பித்தனர்.

10 நிமிட மெளனமான நடைபயணத்திற்கு பிறகு "ஆறுமுகம் உன்கிட்ட ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் பஞ்சவர்ணமும் உன் பசங்களும் பொழுதுசாய நம்ம மாரியப்பன் வீட்டுல உக்காந்து பேசிகிட்டு இருந்தாக... அநேகமா நீ வர நேரம் ஆனதால அங்கயே தூங்கியிருப்பாங்கன்னு நெனைக்கிறேன்" என்றார்...

நம்பமுடியாத பல சம்பவங்கள் நடந்தேறியிருந்தாலும், தன் குழந்தைகள் பாதுகாப்பக இருப்பது மனதிற்கு நம்பிக்கையை அளித்தது... வைத்தியரிடம் பதில் ஏதும் சொல்லாமல் கூடிய விரைவில்  வேறு இடத்திற்கு குடிபெயர வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஓட்டிக்கொண்டு நடந்துவந்தான். சிறிது நேரத்தில் மலையம்மன் கோவில் வர வைத்தியர் வீட்டுக்கு பிரியும் வழியில்

"ஆறுமுகம் நாம இன்னிக்கு பாத்தது நமக்குள்ளையே இருக்கட்டும்யா... அதுதான் எல்லாருக்கும் நல்லது..." என்று கூறிவிட்டு அவர்வீட்டுக்கு நடந்து செல்ல, மறுநாள் கோவிந்தன் நடத்தவிருக்கும்  நாடகத்தை கண்முன்னே ஓட்டியவாறு தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தான் ஆறுமுகம்.

முற்றும்






பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

A D Vishnu Prasad said...

Nice Twist !!!

திண்டுக்கல் தனபாலன் said...

நிறைவான முடிவு... (எதிர்பார்க்கவே இல்லை)

நன்றி...

வலைஇல்லம் said...

இறுதி பகுதியை மிகவும் ஆவலாக எதிர்பார்த்தேன் .இறுதி பகுதி இப்படி முடியும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை மிகவும் சுவாரசியமாக இருந்தது நன்றி சிவா

Hema said...

Kadhai romba nala irundhadhu:)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...