Wednesday, February 25, 2015

நம்ம வீட்டுக் கல்யாணம்!!!


Share/Bookmark
குறிப்பு: இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்ககவே. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலயும் ஒரு குறிப்பிடத்தகுந்த ஏற்படுத்துற ஒரு முக்கியமான விஷயம்தான் இந்தக் கல்யாணம். ஆனா அந்த மாற்றம் எப்படி வேணாலும் இருக்கலாம். ”பாரு மச்சி.. கல்யாணத்துக்கு முன்னால கிருக்கன் மாதிரி திரிஞ்சிக்கிட்டு இருந்தான். இப்போ எவ்ளோ டீசண்டா ஆயிட்டான்.. எல்லாம் பொண்டாட்டி வந்த நேரம்” ம்ன்னு சில பேரப் பாத்து சொல்லுவோம். அதே இன்னும் சில பேரப் பாத்து “ச்ச.. கேக்க ஆளே இல்லாம, எப்புடி சிங்கம் மாதிரி இருந்த மனுசன்.. இப்புடி சீக்கு வந்த கோழி மாதிரி ஆயிட்டாரே.. ”ன்னு கூட சில பேர பாத்து சொல்லுவோம். எப்புடியோ மாற்றம் உறுதி.

அந்தக் கல்யாணத்துக்கு முன்னால நம்மாளுககிட்ட இருக்கும் பாருங்க மாற்றம். திண்டுக்கல் லியோனி சொல்ற மாதிரி, மொத வாரம்தான் அரைகிலோ மிச்சர யாருக்கும் குடுக்காம இவன் மட்டும் திண்டுகிட்டு இருந்துருப்பான். ஆனா பொன்னு பாக்கப்போறப்போ ஒரு சின்ன ப்ளேட்ல கொஞ்சம் மிச்சர வச்சா, அப்டியே பட்டும் படாம நுனி விரலால ரெண்டே ரெண்டு மிச்சர மட்டும் எடுத்து வாயில போட்டுகிட்டு போதும்னு சொல்லிருவாய்ங்க. அதாவது அவரு ஆய்லி ஐட்டமெல்லாம் அதிகம் எடுத்துக்கமாட்டாரம். அதோட அவரு எதையுமே ரொம்ப சாப்ட மாட்டாராம். ரொம்ப டிடர்ஜண்டு .. ச்ச. டீசண்டானவராம்.

இவிங்க ஒருவித அலும்புன்னா, இந்த புள்ளைங்க இன்னொரு விதமான அலும்பு. சும்மா நேரத்துல சனியன் யாரையுமே அண்ட விடாது. பக்கத்து வீட்டு சின்ன புள்ளை பூ கேட்டா கூட, மூஞ்சை காட்டி, தலையில கொட்டி அனுப்பி விட்டுடும்ங்க. ஆனா, அந்த கல்யாண நேரத்துல பாக்கனுமே, ”சின்னக் குழந்தைங்களைப் பாத்தா இந்தப் புள்ளைக்கு உசுரு போல” ன்னு எல்லாரும் ஆச்சர்யப்படுற மாதிரி, கொழந்தைங்க எங்க இங்க இருந்தாலும் கூப்டு ”ஹே இங்க வாடி.. என்னடா செல்லம் பன்ற… பூ வேணுமா.. “ அப்டின்னு அந்தக் கொழந்தையாவே மாறிருவாங்க.

சரி இப்போ நம்ம என்ன பண்ணப்போறோம்னா, திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, மத்த எல்லாரையும் யார்  யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத் தான் இப்போ  பாக்கப் போறோம்.

1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி.

2. கல்யான வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் பொண்ணும் மாப்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்த படியா, எல்லா ஃப்ரேம்லயும் ரெண்டு மூணு தங்க சங்கிலிகள் தெரியிறமாதிரி நிக்கிற ஒரு பொண்ணு இருக்கும். அது வேற யாரும் இல்லை. பையனோட அக்கா.

3. ஆளுக்கும் போட்டுருக்க ட்ரஸ்ஸுக்கும் சம்பந்தமே இல்லாம, ஆனா மாப்ளைக்கு ஈக்குவலா ஒருத்தன் கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு டம்மியா, ஸ்டேஜ்ல நின்னுகிட்டு இருப்பான். அது வேற யாரும் இல்லை. மாப்ளையோட அக்கா புருஷன். அந்தக் கோட்ட, அவர் கல்யாண ரிஷப்ஷனுக்கு அப்புறம் இப்பதான் போட்டுருப்பாரு.

4. இன்னொருத்தன் மாப்ள மாதிரியே வேஷ்டி சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு, ஸ்டேஜ்ல நிக்காம, டான் மாதிரி அங்க இங்க ஓடுறது உடியாருறது வர்றவங்கள கவனிக்கிறது, ஸ்டேஜ்ல ஏறுறது இறங்குறதுன்னு ரொம்ப ஆக்டிவா ரொம்ப சந்தோஷமா திரிஞ்சிட்டு இருப்பான். அவந்தான் மாப்ளையோட தம்பி. ரூட்டு கிளியரான சந்தோஷத்துல தலைகால் புரியாம சுத்திக்கிட்டு இருப்பான்.

5மாப்ளைக்கு லைட்டா வேர்த்தாலோ, வாழ்த்த வர்றவங்க கூட்டத்துல பொட்டுவைக்கும் போது லைட்டா அங்க இங்க அப்பிட்டாலோ, மின்னல் மாதிரி ஒருத்தன் ஒரு கர்ச்சீப்ப வச்சிக்கிட்டு மாப்ள மூஞ்ச தொடைச்சிட்டே இருப்பான். அவன் மாப்ளையோட ஸ்கூல் ஃப்ரண்டா இருக்கும். மொதநாள் நைட்டு பேச்சிலர் பார்ட்டில மூச்சுத் தெணறத் தெணறக் குடிச்சவனும் அவனாத்தான் இருக்கும்

6. கல்யாணம்5 முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் கழிச்சி, “இய்ய்ய்யாய்…எவண்டா அவன் நா வர்றதுக்கு முன்னால தாலியக் கட்டுனது..” ன்னு மண்டபத்தோட வாசல்ல ஒருத்தன் ஃபுல் போதையில கத்திக்கிட்டு இருப்பான். அவனை யாருமே மதிக்காம, ஆனா ஒரே ஒரு அம்மா மட்டும் போய் அவன உள்ள கூப்டாங்கன்னா அவன் தான் மாப்ளையோட தாய் மாமன். பத்து மணி கல்யானத்துக்கு பதினொன்னே முக்காலுக்கு வருவாரு. ஆனா கல்யாணம் அவர் வந்ததுக்கப்புறம் தான் நடக்கனும்னு வேற எதிர்பாப்பாறு. அப்போ அவனப் போய் கூப்டுறது யாருன்னு உங்களுக்கே தெரியும்.

7. கூட்டத்துல உக்காந்துருக்க எல்லாரும் “எப்பப்பா… கல்யாணம் முடியும்.. எப்பப்பா சோறு போடுவாய்ங்க” ன்னு ஒரே ஆவலோட உக்கார்ந்திருக்கும்போது, ஒரே ஒரு அம்மா மட்டும் வச்ச கண்ணு வாங்காம கல்யாணப் பொண்ணையே மொறைச்சி பாத்துகிட்டு இருக்கும். அப்டி இருந்தா. அது பொண்ணோட அப்பா வழி அத்தைன்னும், அவங்க பையனுக்கு இந்தப் பொண்ணை கேட்டு, பொண்ணு வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னும் நீங்களே கண்டுபுடிச்சிடலாம்.



8. மேமாசம், பீக் அவர்ல சென்னை சிட்டி பஸ்ல ட்ராவல் பண்ண மாதிரி ஒரு களைப்போட, ஒரு நிமிஷம் கூட உக்காராம, ஸ்டேஜ்ல கல்யாணம் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூட கவனிக்காம எல்லாரையும் போய், “வாங்க வாங்க.. சாப்டு போங்க” ன்னு ஒருத்தர் கூப்டுட்டு இருந்தா அவர்தான் பொண்ணோட அப்பா.


9. பொண்ணுக்கு எத்தனை சவரன் நகை போட்டுருக்காய்ங்க, யார் யார் என்ன செய்றாங்கங்குற விஷயத்த, பையனோட அம்மா அப்பாவ விட, இன்னொரு முக்கியமான கேரக்டர் ரொம்ப கூர்மையா, திருட்டுப்பய நகைய கவ்வ போறப்போ பாக்குற மாதிரி ஒண்ணு பாத்துக்கிட்டு இருக்கும். அதுவேற யாரும் இல்லை. பையனோட அண்ணி.. எங்க நம்மள விட அதிகமாகிதிகமா நகையப் போட்டுவிட்டு நம்மள டம்மி ஆக்கிறப்போறாய்ங்களோங்குற பீதியிலயே இருக்கும்.

10. அந்த கல்யாணக் கூட்டத்துலயே, ஒரே ஒரு குரூப்பு மட்டும், அந்த கல்யணத்துக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத மாதிரி, தனியா ஒரு மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கும். அதுதான் பொண்ணோட அப்பாவோட சொந்தக்காரய்ங்க.

11.கல்யாணமெல்லாம் முடிஞ்ச உடனே அரக்க பரக்க ஒரு கும்பல், வீங்கிப்போண மூஞ்சோட, ஒழுங்கா சீவாத தலையோட வேக வேகமா வந்து மாப்ளைக்கும் பொண்ணுக்கும் வெறும் கைய மட்டும் குடுப்பாய்ங்க. அவிங்க வேற யாரும் இல்லை. மாப்ளையோட ஆஃபீஸ் மேட்ஸோ இல்லை காலேஜ் மேட்ஸோ. ரூம்போட்டு விடியகாலம் வரைக்கும் குடிச்சிட்டு இப்பதான் எழுந்து வர்றாய்ங்கன்னு அர்த்தம். 

12. அதே கல்யாணத்துல, யாரு கூடவும் பேசாம, ஒரு young,  Husband & wife, அவங்க குழந்தைய விளையாட விட்டுட்டு, அதுக்கு ஐஸ்கிரீம் வாங்கி சாப்ட குடுத்துகிட்டு, கையில் ஒரு கேமராவ வச்சிகிட்டு சீட்டுல உக்காந்த படியே ஸூம் பண்ணி மாப்ளைய ஃபோட்டோ எடுக்குறதும், அப்பப்போ மாப்ளைய பாத்து கைகாட்டுறதுமா இருப்பாய்ங்க. அவனும் வேற யாரும் இல்லை. மாப்ளையோட காலேஜ் ஃப்ரண்டாத்தான் இருப்பான். அவசரப்பட்டு அவிய்ங்க பேட்ச்லயே மொதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை குட்டின்னு ஆயிட்டதால இப்டி பேச்சிலர் பார்ட்டில கலந்துக்க முடியாம சோகத்துல இருக்கவன்.

14. கடைசியா கல்யாணம் முடிஞ்சி, எல்லாரும் ஃபோட்டோ எடுக்க வரும்போது, பொண்ணோட ஃப்ரண்ட்ஸ பாத்து “இவ்வளவு நாளா நீங்கல்லாம் எங்கம்மா இருந்தீங்கன்னு” மைண்டுல நினைக்கிறான் பாருங்க. அவந்தான் நம்ம மாப்ள.




நன்றி : நண்பன் கார்த்தி & புயல் ரஹ்மான்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

மலரின் நினைவுகள் said...

செம...
அதுவும் அந்த அத்த மேட்டரும் அண்ணி மேட்டரும் கலக்கல்...

A Yusuf said...

Sema Boss...
Awesome writing...

Unknown said...

Total Damage.
Ponnoda thambi mattum varave illiye

Unknown said...

Total Damage.
Ponnoda thambi mattum varave illiye

Mohamed Faaique said...

சூப்பர் போஸ்ட்...
சிரிப்புக்கு உத்தரவாதம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...